MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த
    பாட்டுக்கோட்டை பாடல்கள்

    01 அரசியல் அறம்
    1.1 கெட்டதை விடுங்கள்
    1.2 வாய்ச்சொல் வீரர்
    1.3 சூதாட்டம்
    1.4 போரைத் தடுப்போம்
    1.5 மனைவியே மந்திரி!
    1.6 படிப்பும் உழைப்பும்!
    1.7 ஏழைகளின் வேர்வை
    1.8 பகை நீங்கும்
    1.9 கரையேறும் பாதை
    1.10 நாடு கெட்டுப் போகுது
    1.11 ஒன்றுபட்ட வாழ்வு
    02 நாட்டு நலம்
    2.1 வீரன்
    2.2 போருக்கு
    2.3 பொது வாழ்வு!
    2.4 செயல் வீரர்!
    2.5 நாங்கள் பிறந்த நாடு
    2.6 நீதி தவிக்குது
    2.7 கண் தூங்குமோ?
    2.8 வள்ளல் வழி
    2.9 வீரச் செயல்
    2.10 குழி பறிக்குது வேரிலே!
    2.11 உழைத்து முன்னேறு
    2.12 ஆமாம் சாமி ஆசாமிகள்
    2.13 வம்பு வளர்க்கும் கும்பல்
    2.14 கலைந்து விடும் காலம்
    03 இயற்கை
    3.1 போட்டி வேண்டாம்
    3.2 இருள் விலகும் விளக்கு
    3.3 தட்டி எழுப்பிடும் சேவலே
    3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை
    3.5 ஆணவக் குரங்கு!
    3.6 நல்லதைக் கெடுப்பவர்
    3.7 ஓடும் நீரின் சங்கீதம்
    3.8 இதயத்தை திருடியவள்
    3.9 அனல் வீசும் நிலவு
    04 தெய்வம் தேடுதல்
    4.1 சேவை
    4.2 காதல் மாத்திரை
    4.3 விடுதலை
    4.4 கணவனுக்குச் சேவை
    4.5 உயிர்
    4.6 எங்கும் இன்பம்
    4.7 கடவுள் எங்கே
    4.8 ஆளை விழுங்கும் காலம்
    4.9 நீயே துணை!
    4.10 மாசற்ற அன்பு
    4.11 பெண் மனசு
    4.12 ஞானம்!
    4.13 நோட்டம்!
    4.14 ஒரே ரத்தம்
    4.15 ஏங்கும் ஏழை
    05 சிறுவர் சீர்திருத்தம்
    5.1 வீணர்களின் சொல்
    5.2 நாளை உலகம் நல்லவர் கையில்!
    5.3 காலம் மாறும்
    5.4 அடக்கம் வீரமும்!
    5.5 நாட்டைக் கெடுத்தவர்
    5.6 கொஞ்சும் குரல்!
    5.7 இதய ஒளி!
    5.8 உயர்ந்த நினைவு
    5.9 பெண்ணரசு!
    5.10 உன்னை நம்பு!
    5.11 நல்லவனாக
    5.12 சிறுவரிடம் திறமை
    5.13 துன்பம் வெல்லும் கல்வி!
    06 காதல் சுவை
    6.1 காதலின் இலக்கணம்
    6.2 காதல் பலன்
    6.3 கடல் கடப்பேன்
    6.4 ஆசைக்குப் பேதமில்லை
    6.5 நாணம் எதற்கு
    6.6 ஆசை வளருது
    6.7 விருந்துக்கு அழைக்குது
    6.8 சக்திக்குமேல் ஆசை
    6.9 வண்டைத்தேடும் மலர்
    6.10 இன்பம் காணலாம்
    6.11 மூடிவைத்த காதல்!
    6.12 தடைபோடும் நாணம்
    6.13 பெண் தெய்வம்
    6.14 பேசும் விழிகள்
    6.15 சிலைக்குள் தெய்வம்
    6.16 விருந்து!
    6.17 கண்ணும் கண்ணும் பேசுது
    6.18 பார்த்து ரசிப்பேன்!
    6.19 கலையான நிலை
    6.20 மாறும் மனம்
    6.21 பூமாலை போட்டவன்
    6.22 தாலி கட்டும் வீரன்
    6.23 சேவை
    6.24 பகைக்குரல் மாறுதே!
    6.25 நல்ல துணைவன்
    6.26 பெண் முகம் கண்ணாடி
    6.27 எண்ணக் கனவுகள்!
    6.28 பருவம்
    6.29 கதை சொல்லும் தீபாவளி!
    6.30 பொல்லாத காதல்
    6.31 பெண்ணென்ற கோயில்
    6.32 மாறாத ஆசை
    6.33 காதலர் நிலை
    6.34 கண் மலர்
    6.35 நடக்கும் மின்னல்!
    6.36 ஒன்றுபட்ட கணவனுக்கு
    6.37 காதல் தோல்வி
    6.38 அன்பு விதை
    6.39 இல்லறம்
    6.40 புது அழகு
    6.41 காதலை ஏற்கும் நிலவு!
    6.42 தடையில்லை!
    6.43 இல்லற ஓடம்
    6.44 கதை கட்டுவார்
    6.45 இன்ப வேகம்
    6.46 பெரும் சுகம்
    6.47 ஆசை மனம்!
    6.48 இன்பம் தேடுது
    6.49 பேசும் சிட்டு
    6.50 கண்ணால் அடக்குவேன்
    6.51 மயிலோ குயிலோ!
    6.52 வௌிவேசம்!
    6.53 கேள்வியும் பதிலும்
    6.54 வளைகாப்பு
    6.55 மங்கையின் மகிமை
    6.56 இன்ப கீதம்
    6.57 ஒரு விழிப் பார்வை
    6.58 முற்றிய காதல்
    6.59 அன்பு ஆசை
    6.60 பெண் உறவு!
    6.61 மணமகள்
    6.62 பொறுப்புள்ள பெண்
    6.63 நன்றி கூறும் தென்றல்
    6.64 பிரிக்க முடியுமா
    6.65 ஒற்றுமை கலைந்தால்..
    6.66 எண்ணத்தில் பொருத்தம்
    6.67 வழி தேடும் காதல்
    6.68 துணை தேடுதே!
    6.69 அன்பு வளருமா?
    6.70 வளையல் போடும் சண்டை
    6.71 அழகு வந்தது
    6.72 பருவம் வாடுது
    07 நகைச்சுவை
    7.1 குட்டு வௌியாகும்
    7.2 வீட்டுக்குள் வீரம்
    7.3 கடல் ஆழமும் பெண் மனமும்
    7.4 வேலையற்ற மச்சான்
    7.5 வெளுத்துக் கட்றாண்டி
    7.6 காக்காய் பிடித்து!
    7.7 கலை!
    7.8 நாடகம் பார்க்க
    7.9 சூடேற்றும் பார்வை!
    7.10 குடும்பத்தோடு பயணம்
    08 தத்துவம்
    8.1 எது சொந்தம்!
    8.2 மனக்குரங்கு
    8.3 போலிகளும் காலிகளும்
    8.4 வரவும் செலவும்
    8.5 உழைக்காமல் சேர்க்கும் பணம்
    8.6 இனிப்பும் கசப்பும்
    8.7 உண்மை
    8.8 வீண் அனுதாபம்!
    8.9 வெறும் பேச்சு!
    8.10 துணிச்சல்
    8.11 துன்பத்தை மிதி!
    8.12 பொறுமை பொங்கினால்!
    8.13 கற்பின் விலை
    8.14 வெற்றி எங்கள் கையிலே
    8.15 சோம்பல் ஒழிக
    8.16 ஒற்றுமை
    8.17 நிழலும் வெயிலும்
    8.18 ஆரம்பமும் முடிவும்!
    8.19 ஒன்றிருந்தால் ஒன்றில்லை
    8.20 தேன் கலசம்
    8.21 எது வேண்டும்?
    8.22 நிலையில்லா உலகம்!
    09தனிப்பாடல்
    9.1 புதிய ஒளி வீசுது பார்!
    9.2 நண்டு செய்த தொண்டு
    9.3 வெஞ்சிறை உடைந்தது
    9.4 பெண்
    9.5 மனித சக்தி
    9.6 சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி..
    9.7 தாமரை என்றோர் ஏடு மலர்ந்தது
    9.8 பாரதி
    9.9 என் விருப்பம்
    9.10 கொதிக்கும் தார்
    9.11 ஏற்றத்தாழ்வு மாற்றும் கொடி!
    9.12 நடுவில் இருக்கும் சாமி
    9.13 நாலு முழ வேட்டி
    9.14 படத் தொழில் வளர
    9.15 அகராதியைக் கிழிக்கும்
    9.16 நீ யார்
    9.17 சாதி மயக்கம்
    9.18 அடிமை விலங்கு ஒடிந்தது
    9.19 வாழவிடு
    9.20 பின்னாலே கண்ணு
    9.21 இருள் வர அஞ்சும்
    9.22 காலத்திலே செல்லு
    9.23 உன்னை நீ!
    9.24 இறைவனுக்கு நன்றி
    9.25 நல்லவரைப் போற்றுவோம்
    9.26 ஜீவா
    9.27 கவிஞரின் முதல் கவிதை
    9.28 கவிஞரின் இறுதிக் கவிதை

    1. அரசியல் அறம்


    1.1 கெட்டதை விடுங்கள்



    சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
    செய்யுறதைச் செஞ்சுடுங்க
    நல்லதுன்னா கேட்டுக்குங்க
    கெட்டதுன்னா விட்டுடுங்க

    முன்னாலே வந்தவங்க
    என்னென்னமோ சொன்னாங்க
    மூளையிலே ஏறுமுன்னு
    முயற்சியும் செஞ்சாங்க

    ஒண்ணுமே நடக்காம
    உள்ளம் நொந்து செத்தாங்க
    என்னாலும் ஆகாதுன்னு
    எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

    முடியிருந்தும் மொட்டைகளாய்
    மூச்சிருந்தும் கட்டைகளாய்
    விழியிருந்தும் பொட்டைகளாய்
    விழுந்துகிடக்கப் போறீங்களா?

    முறையைத் தெரிஞ்சு நடந்து
    பழைய நினைப்பை மறந்து
    உலகம் போற பாதையிலே
    உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

    சித்தர்களும் யோகிகளும்
    சிந்தனையில் ஞானிகளும்
    புத்தரோடு ஏசுவும்
    உத்தமர் காந்தியும்

    எத்தனையோ உண்மைகளை
    எழுதிஎழுதி வச்சாங்க
    எல்லாந்தான் படிச்சீங்க?
    என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

    [பாண்டித் தேவன்,1959]

    1.2 வாய்ச்சொல் வீரர்



    மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
    மாற்றமில்லேடா ராஜா-எம்
    மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
    வந்ததுவரட்டும் போடா-சில ( மனு )

    உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
    ஒலகம் இதுதாண்டா-ராஜா
    ஒலகம் இதுதாண்டா
    உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
    உல்லாச புரிதாண்டா-இது
    உல்லாச புரிதாண்டா.. ( மனு )

    வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
    வயிறுபசிக்கிறவன் விடமாட்டான் ( வசதி )

    வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
    வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான் (மனு)

    பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
    பயணம் போறேண்டா-நான்
    பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
    பயணம் போறேண்டா ( மனு )

    ஒரு சிறுவன்: அங்கே நானும் வாரேண்டா..
    வௌியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
    படிச்சிட்டு வாரேண்டா-சிலர்
    படிக்க மறந்தது நெறய இருக்கு
    படிச்சிட்டு வாரேண்டா.. ( மனு )

    எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
    உழுது ஒளச்சு சோறும் போடுறான்.
    எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
    நல்லா நாட்டைக் கூறு போடுகிறான்-இவன்
    சோறு போடுகிறான்-அவன்
    கூறு போடுறான்.

    [கண் திறந்தது,1959]

    1.3 சூதாட்டம்



    சூதாடி மாந்தர்களின்
    சுகவாழ்வும் ஒருநாளில்
    பாதாளம் போகுமெனல்
    பாரறிந்த உண்மையன்றோ?

    சொல்ல முடியாத துன்பக் கதை
    சூதாடி மனிதரின் சோகக் கதை
    நல்ல மனிதரும் வஞ்சகராகி
    கள்ள வேலைகள் செய்த கதை-சிலர்
    கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
    உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல )

    அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
    அரசு உரிமையை இழந்ததும்
    அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
    அனைவரும் காட்டில் அலைந்ததும்
    அன்பு மேலிடும் நளன் தமயந்தி
    அல்லல் சுமந்து வருந்தியதும்
    அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
    ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே ( சொல்ல )

    [உலகம் சிரிக்கிறது,1959]

    1.4 போரைத் தடுப்போம்



    மனிதரை மனிதர்
    சரிநிகர் சமமாய்
    மதிப்பது நம் கடமை
    வள்ளுவப் பெருமான்
    சொல்லிய வழியில்
    வாழ்வது அறிவுடைமை,

    உழைப்பை மதித்து
    பலனைக் கொடுத்து
    உலகில்போரைத் தடுத்திடுவோம்,
    அண்ணன் தம்பியாய்
    அனைவரும் வாழ்ந்து
    அருள்விளக் கேற்றிடுவோம்.

    [இரும்புத் திரை, 1960]

    1.5 மனைவியே மந்திரி!



    எல்லோரும் இந்நாட்டு மன்னரே-நாம்
    எல்லோரும் இந்நாட்டு மன்னரே
    நல்லாரும் பொல்லாரும்
    நல்வழி செல்லாரும்
    உள்ளாரும் காசுபணம்
    இல்லாமல் இருந்தோரும் (எல்லோரும்)

    முன்னேற்ற மில்லாமல்
    மூலையிலே கிடந்தவரும்
    கண்ணிலே நீர்பெருகக்
    கவலையிலே மிதந்தவரும்
    தண்ணீரும் காற்றுமுண்டு
    தள்ளாடி நடந்தவரும்
    தலைவிதியே நம்பிநம்பி
    சக்கைபோல் வாழ்ந்தவரும் (எல்லோரும்)

    மன்னன்: ராசாதிராசன் வந்தேனே-நான் வந்தேனே
    ராசாதிராசன் வந்தேனே
    எங்கும்புகழொடு இன்பம்பெருகிட
    பொங்கும் வளமோடு
    புவிதனை ஆண்டிடும் மகாராசா
    பக்கத்துச் சேரியிலே
    குறிப்பிட்ட தேதியிலே
    பள்ளிக்கூடம் தொறந்தாச்சா மந்திரி?
    மந்திரி!மந்திரி!!
    குழு: எங்கே? எங்கே? எங்கே?
    மந்திரி: அவரவர் மனைவிகளே
    அவர்களுக்கு மந்திரிகள்
    அன்புகொண்டு குடியரசு புரிந்திடணும்
    ஆவதெல்லாம் பொதுவாய்த்தான்
    நடந்திடணும் ( அவரவர் )
    மன்னன்: ஆகா! ஆகா!! சபாசு!!!
    ஆண்டி மடத்திலுள்ள
    அட்ரசை மாத்தியதில்
    ஆஸ்பத்திரி தொறந்தாச்சா மந்திரி?
    மந்திரி! மந்திரி!!
    மந்திரி: இப்போ-
    ஆரோக்கியம் கம்மியில்லே
    யாருக்கும் பிணியில்லே
    ஆஸ்பத்திரி தேவையில்லே மன்னரே
    குழு: ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
    மன்னன்: கட்டத் துணியும்-நம்ப
    கடன்கேட்ட கோதுமையும்
    கப்பலில் வந்தாச்சா மந்திரி?
    மந்திரி: இனி-
    எட்டாத சீமைகளை
    எதிர்பார்க்கத் தேவையில்லே
    இங்கேதும் பஞ்சமில்லை மன்னரே
    குழு: ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
    மன்னன்: பாயும் புலிபோன்ற
    பட்டாள வீரர்கையில்
    ஆயுதம் தந்தாச்சா மந்திரி?
    மந்திரி! மந்திரி!!
    மந்திரி: இப்போ-
    ஆயுதம் தேவையில்லே
    அடிதடி வம்புமில்லே
    அமைதிதான் நிலவுது மன்னரே
    குழு: எங்கும் அமைதிதான் நிலவுது மன்னரே
    ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!

    [ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு,1960]

    1.6 படிப்பும் உழைப்பும்!



    படிப்பு தேவை-அதோடு
    உழைப்பும் தேவை-முன்னேற
    படிப்புத் தேவை அதோடு
    உழைப்பும் தேவை!
    உண்மை தெரியும்
    உலகம் தெரியும்
    படிப்பாலே-நம்
    உடலும் வளரும்
    தொழிலும் வளரும்
    உழைப்பாலே-எதற்கும் ( படி )

    பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்
    பலப்பல உண்டு-மன
    பக்குவம் கொண்டு
    மக்கள் முன்னேறக்
    காரணம் ரெண்டு-அதுதான் ( படி )

    வீரத்தலைவன் நெப்போலியனும்
    வீடுகட்டும் தொழிலாளி!
    ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
    செருப்புத் தைக்கும் தொழிலாளி!
    விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
    காரு ஓட்டும் தொழிலாளி!
    விண்ணொளிக் கதிர் விவரம் கண்ட
    சர் சி.வி.ராமனும் தொழிலாளி!-எதற்கும் ( படி )

    ஜனத்தொகை மிகுந்தாலும்
    பசித்துயர் மலிந்தாலும்
    பணத்தொகை மிகுந்தோர்-மேலும்
    பணம் சேர்க்க முயல்வதாலும்
    உழைத்தால்தான் பற்றாக்குறையை
    ஒழிக்க முடியும்-மக்கள்
    ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை
    மோசமாக முடியும்-எதற்கும் ( படி )

    [சங்கிலித் தேவன், 1960]

    1.8 ஏழைகளின் வேர்வை



    ஆ.. விஷயம் ஒன்று சொல்லப் போறேன்
    கேளடி கேளு-உண்மை
    வௌியாகும் நேரம் வந்தது
    கேளடி கேளு

    ஓ.. நடந்தது எல்லாம் தேவையில்லை
    தள்ளடி தள்ளு-இனி
    நடக்கப் போற சங்கதியத்தான்
    சொல்லடி சொல்லு

    ஓ.. வறுமையில்லே வாட்டமில்லே
    வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே ஆ..
    வறுமையில்லே வாட்டமில்லே
    வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே

    ஆ.. கொடுமையெல்லாம் மாறி வருது
    கேளடி கேளு
    குடிசையத்தான்-இன்பம்
    குடிசையத்தான் நாடி வருது
    கேளடி கேளு ( விஷயம் )
    நல்லவர் போல உலகம்மீது
    நரியும் கழுகும் உலவும் போது

    ஆ..
    நல்லவர் போல உலகம்மீது
    நரியும் கழுகும் உலவும்போது
    நம்மை இன்பம் நாடிவருமா
    சொல்லடி சொல்லு

    நிம்மதியா-உலகம்
    நிம்மதியாக வாழ விடுமா
    சொல்லடி சொல்லு

    நடந்தது எல்லாந் தேவையில்லை
    தள்ளுடி தள்ளு-இனி
    நடக்கப் போற சங்கதியைத்தான்
    சொல்லடி சொல்லு

    ஏமாத்தும் போர்வையிலே
    ஏழைகளின் வேர்வையிலே
    எக்காளம் போடுற கூட்டம்-நாட்டில்
    எக்காளம் போடுற கூட்டம்-மக்கள்
    எதிர்த்துகிட்டா எடுக்கணும் ஓட்டம்
    ( விஷயம் )

    [எல்லோரும் இந்நாட்டு மன்னர், 1960]

    1.9 பகை நீங்கும்



    துணிந்தால் துன்பமில்லை
    சோர்ந்துவிட்டால் இன்பமில்லை! (துணிந்தால்)

    இனிமை கலந்துவரும் பாட்டிலே-மனம்
    எதையும் மறந்துவிடும் கேட்டாலே! (துணிந்தால்)

    கசக்கும் வாழ்விலே,கவலைவரும் போதிலே
    இனிக்கும் குரலெழுப்ப,பறவையுண்டு பாரிலே!
    துடிக்கும் இதயங்களே தாளம்-காற்றில்
    மிதக்கும் ஓசையெல்லாம் கானம் (துணிந்தால்)

    ஆராரோவென்று அன்னை பாடக் கண்டு
    அமைதியிலே குழந்தை தூங்குவதுமுண்டு
    வாடிடும் முல்லை ரீங்கார வண்டு
    வருவது கண்டு மனம் பொங்கும் மதுசிந்தும்
    பகைமை நீங்கிவிடும் பாட்டாலே-பெரும்
    பசியும் தீர்ந்துவிடும் கேட்டாலே! (துணிந்தால்)

    [ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, 1960]

    1.10 கரையேறும் பாதை



    தாயில்லை தந்தையில்லை
    தக்க துணை யாருமில்லை
    ஒய்வில்லாக் கவலையாலே
    ஒரு வழியும் தோன்றவில்லை
    இலை இல்லை மலரும் இல்லை
    கனி இல்லை காயும் இல்லை
    தலையில்லா உருவம்போலே
    வாழ்வும் ஆனதே ( இலையில்லை )
    விதியே உன்வேலையோ
    இதுதான் உன் ஆசையோ
    கதியில்லா ஏழை எங்கள்
    காலம் மாறுமோ? ( விதியே )
    நிலவில்லா வானம்போலே
    நீரில்லா ஆறுபோலே
    சிலையில்லா கோயில்போலே
    வீடும் ஆனதே ( நிலவில்லா )
    ஒருநாளில் ஓயுமா
    இருநாளில் தீருமோ
    பலநாளும் துன்பமானால்
    உள்ளம் தாங்குமோ?
    கரையேறும் பாதை காணோம்
    கண்ணீரில் ஓடமானோம்
    முடிவில்லா வேதனை ஒன்றே
    கண்ட லாபமோ? ( இலையில்லை )

    [ஆளுக்கொரு வீடு, 1960]

    1.11 நாடு கெட்டுப் போகுது



    பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
    கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
    கேடுகெட்ட கும்பலாலே.. ( பாடு )

    சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
    மூடர்களின் தலைகளிலே-பெரும்..சூடுபட்ட
    வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
    வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

    வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
    வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
    வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.. ( பாடு )
    சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
    மூடர்களின் தலைகளிலே..

    [விக்ரமாதித்தன், 1962]

    1.12 ஒன்றுபட்ட வாழ்வு



    ஆண்: கதிராடும் கழனியில்
    சதிராடும் பெண்மணி
    கலைமேவும் அழகாலே
    கவர்ந்தாள் கண்மணி
    முதிராத செடியே
    முல்லை மலர்க் கொடியே

    பெண்: அன்பே என் ஆருயிரே
    ஆணழகே என்னுடன்
    தென்பாங்கு பண்பாடும்
    தீராத இன்பமே!

    ஆண்: ஏரோட்டும் விவசாயி
    எருதுகளை ஏரியிலே

    பெண்: நீராட்டும் அழகைப்பாரு கண்ணாலே!

    ஆண்: பாராட்ட வேண்டியவள்
    பானைதனைத் தலையில் வைத்து
    பக்குவமா வாரா பாரு பின்னாலே!

    பெண்: தேனாறு பாயுது
    செங்கதிர் சாயுது
    ஆனாலும் மக்கள் வயிறு காயுது

    ஆண்: மானே இந்நாட்டிலே
    வகையான மாறுதல்
    வந்தாலன்றி ஏது சீருகள்?

    இருவரும்: உழவனும் ஓயாத
    உழைப்பும்போல் நாமே
    ஒன்றுபட்ட வாழ்க்கையில்
    என்று மிருப்போம்

    [கண்ணின் மணிகள் நாடகத்திற்கு எழுதிய பாடலில் மாற்றம்
    செய்து திரைப்படத்திற்கு எடுக்கப்பட்டது]

    * * * *

    நாட்டு நலம்


    2.1 வீரன்



    நாட்டுக்கு ஒரு வீரன்!-செஞ்சிக்
    கோட்டைக்கு அதிகாரன்
    அந்த நாளில் ஆற்காடு நவாபை
    எதிர்த்த ராஜா தேசிங்கு
    கதையை நாம் சொல்வோம் இங்கு:

    இந்தப்-
    பாட்டைக் கேட்டால் பரம்பரை நிலைமை
    பளிச்சுப் பளிச்சுன்னு தெரியும்,
    வேட்டு பீரங்கி கூட்டத்தில் பாய்ந்து
    வெட்டியவன் கதை விபரம் புரியும்..( நாட்டுக்கு )

    துள்ளிப் பாயும் குதிரை ஒன்று
    டில்லித் துரையிடம் இருந்தது,
    கொல்லிச் சாரல் கொங்கு பக்கிரி
    சொல்லிப் பரிசாய்த் தந்தது
    உள்ளத் துணிவாய் சவாரி செய்ய
    எல்லாப் படையும் பாய்ந்தது
    உறுதி கொண்டவர் வருக வருகவென
    ஓலை எங்குமே பறந்தது (நாட்டுக்கு)

    அந்தப் பேச்சைக் காதிலே கேட்டான்
    தேரணி மகாராஜா
    டில்லிக்குப் போனான் குதிரையைப் பார்த்தான்
    தேரணி மகாராஜா அவன்
    திகைத்துப் போனதால் சிறையில் தள்ளினான்
    டில்லிக்கு மகாராஜா
    தேரணி சிங்கை டில்லிச் சிறையில்
    தள்ளிய மறுவாரம்
    சிங்கக் குழந்தையை ஈன்றுவிட்டது
    செஞ்சித் திருநகரம், செஞ்சித் திருநகரம்
    சிங்கக் குழந்தையை ஈன்றுவிட்டது
    செஞ்சித் திருநகரம்..! (நாட்டுக்கு)

    உறையிலிருக்கும் போர்வாள் போலே
    அறையிலிருந்தான் தேசிங்கு!
    உலக வழக்கம் உணரும் வரைக்கும்
    மடியில் வளர்ந்தான் தேசிங்கு!-தாய்
    மடியில் வளர்ந்தான் தேசிங்கு!
    சிறையிலிருக்கும் தேரணி மன்னன்
    சேதியறிந்தான் தேசிங்கு!
    புரவியடக்கக் கருதி வடக்கே
    புலிபோல் பாய்ந்தான் தேசிங்கு!
    அப்பனை விரட்டிய அதிசயக் குதிரையை
    அங்கே கண்டானே!
    அஞ்சாமலேறி சவாரி செய்து
    அரும்புகழ் கொண்டானே..! (நாட்டுக்கு)

    வசனம்: தகப்பனை மீட்ட தேசிங்கு ராஜாவுக்கு திருமணம் நடந்தது.
    அப்போது டில்லி பாதுஷா ஆர்க்காடு நவாபை விட்டு கப்பம் கேட்கச் சொன்னான்.
    அதைக் கேட்டதும் தேசிங்கு ராஜன் என்ன சொன்னான் தெரியுமா?

    செப்புக் காசுக்கூட செஞ்சி நாட்டான்-வட
    சீமைக்கு கட்டிட மாட்டான்-டில்லி
    சேவடிக்குத் தினம் காவடி தூக்குவோன்-அவன்
    தெரிஞ்சும் எப்படிக் கேட்டான்
    இப்புவி மக்கள் இருப்பதெல்லாம்-அவன்
    அப்பன் வீட்டு நிலமோ?-இந்தக்
    குப்பைக் கூளங்களின் தப்புச் செயல்களை
    ஒப்புக் கொள்ள வேணுமோ-நான்
    கப்பம் கட்ட வேணுமோ? (நாட்டுக்கு)

    குன்று நிகர் தேசிங்கு
    கண்டபடி ஏசினான்
    தண்டலுக்கு வந்தவன்
    தலைதெறிக்க ஓடினான்,
    அன்று நவாபு சேனை
    அத்தனையும் கூட்டினான்,
    அழகு செஞ்சி நகரை நோக்கி
    ஆனை குதிரை ஓட்டினான்.

    அந்தக் காட்சியைக் கண்ணாலே கண்டான்
    ராஜா தேசிங்கு!
    அகமது பொங்கி முகமதுகானை
    அழைத்துவரச்சொன்னான்

    வசனம்: அப்போது முகமதுகான் என்ன செய்து கொண்டிருக்கிறான்.
    ஆருயிர்த் தோழன் முகமதுகான் கல்யாண கோலத்திலிருக்கிறான்.
    மண மகளிடம் முகமதுகான் விடை கேட்கும் கட்டம் காண்க.

    வந்தது வந்தது ஓலை
    வாளும் தலைகளும் சந்திக்கும் வேளை!
    வந்தது வந்தது ஓலை
    வாழ்க்கை தொடங்கிடும் வேளை-என்
    வார்த்தையைக் கேளுங்கள் போகலாம் நாளை
    வாழ்க்கை தொடங்கிடும் வேளை
    மானம் பெரிது உயிர் சிறிது-இது
    வழி வழி வந்த வழக்கமடி
    மானம் பெரிது உயிர் சிறிது-இது
    வழி வழி வந்த வழக்கமடி-இதில்
    மாற்றம் நடந்தால் என் மார்பின் உதிரம்-நம்
    மண்ணை மணப்பதும் உண்மையடி-என்
    வண்ணக்கிளியே விடை கொடடி(வந்தது)

    நாளை வெற்றியில் திருமணம் இன்றேல்
    நடப்பது வேறென்றே
    நீலவேணியில் ஏறிப்பாய்ந்தான்
    நெஞ்சில் உறுதி கொண்டே

    வீரன்வந்ததைக் கண்ணாலே கண்டான்
    ராஜாதேசிங்கு!
    வெற்றிவந்ததாய் எண்ணி மகிழ்ந்தான்
    ராஜாதேசிங்கு!

    பாராசாரிக் குதிரை நீல வேணிக் குதிரை
    பக்கம் பக்கம் வந்து நின்றன
    சிங்க ஏறுபோல் இருவர் ஏறியமர்ந்ததும்
    எதிரிப்படை நோக்கிச் சென்றன
    அணி வகுத்த படை அதிருது-அங்கு
    கனமிகுத்த யானை கதறுது!
    ஆர்க்காட்டான் நெஞ்சம் பதறுது-அவன்
    அழைத்து வந்தோர் தலை உதிருது
    ஓர் கூட்டம் பல கூறாய்ச் சிதறுது-சிலர்
    உடம்பும் காலும் சேர்ந்து ஒதறுது
    அடிபட்டு,ஒடிபட்டு,மிதிபட்டு,அறுபட்டு
    தரைமுட்ட லானவர்கள் எத்தனையோ-தலை
    உடைபட்டுக் குடல் கொட்டி
    படை விட்டுத் தெறிபட்டு நடைகட்டித்
    துணிந்தவர் எத்தனையோ!

    சிங்கம் முகமது சிங்கம் எங்கும்
    செந்நீர் ஆடி வருகையிலே
    செப்புச் சிலைநகர் தேசிங்கு கைவாள்
    தீப்பொறி கக்கிச் சுழலையிலே
    செக்கா வானமா பூமியா வென்று
    சிந்திக்க வைக்கும் வேளையிலே
    தீரன் முகமது குண்டடிபட்டு
    வீழ்ந்ததைத் தேசிங்கு கண்டானே

    வெற்றியினருகில் கையொடிந்தது போல்
    மேனி துடித்து நின்றானே
    தனித்தனி மதத்தில் பிறந்த நமது
    சரித்திரமே ஒரு புதுமையடா!
    இணைந்த நம்குரலின் ஒற்றுமை முழக்கம்
    என்றுமே அழியாத பெருமையடா!
    தங்கத் தூணொன்று குங்குமச் சேற்றில்
    சாய்ந்ததோ வென்று அழுதானே..!

    நம்குலப்பெயரை நாட்டி விரைவிலே
    நானும் வருகிறேன் என்றானே
    சுற்றிய சேனை அடங்கலும் வென்றான்
    சூரன் நவாபும் ஓடி ஒளிந்தான்
    கத்தி எடுத்தே நன்றி மொழிந்தான்
    வெற்றி வெற்றியென விண்ணிலெறிந்தான்!
    பெற்ற பூமியை வணங்கி நிமிர்த்தினான்
    பெரும் படைவாளை மார்பிலேந்தினான்
    வற்றாப் புகழோன் செஞ்சியின் தலைவன்
    மடிந்ததை யறிந்தாள் மாது ராணியும்

    திருமணமாகி ஒரு கணமாகிலும்
    திருமுகம் காணாதிருந்தீரே
    திரையில் மறைந்ததும் கரந்தனில் முத்தம்
    சிந்தியதோடு பிரிந்தீரே!
    பெரும்படை வென்று திரும்புவேனென்று
    இடும்தடை கடந்து சென்றீரே!
    திறம்பட நின்று வரும் பகைகொன்று
    களந்தனில் அமைதி கொண்டீரே-என்று
    சிரந்தனைமோதி அழுதாளே
    தியாக வீரனைத் தொழுதாளே
    நடந்த கதை இது மெய்யிலே-உடன்
    ராணியும் விழுந்தால் தீயிலே!
    (நாட்டுக்கு)

    [ரங்கோன் ராதா,1955]

    2.2 போருக்கு



    அடியார்கள் உள்ளத்தில் குடிகொள்ளும் தேவதையே!
    ஆதரிக்க வேணுமே-என் ஜக்கா தேவி
    அடங்காத பேர்களையும் ஆலைவாய்க் கரும்பு போல
    ஆட்டிவைக்கும் அம்பிகை நீயே-என் ஜக்கா தேவி
    ஆதரிக்க வேணுமே

    காகம் பறக்காத தேசமெல்லாம்
    கத்தியால் வெட்டுவேன் பாதர் வெள்ளை!-அய்யா
    கருவறுத்தவன் பாதர் வெள்ளை

    பாதர் வெள்ளையென்ற பேரைக் கேட்டால்
    பத்துமாத கர்ப்பம் பறந்துவிடும்!
    இலங்கை தேசத்திற்கு இந்திரஜித்து
    பாஞ்சால நாட்டிற்கு பாதர் வெள்ளை!
    பாஞ்சாலங் குறிச்சியின் பஞ்சவர்ணக்கிளி
    வந்தேனே நானும் வந்தேனே

    பஞ்சபாணன் துயர் மிஞ்சும் ரூபவதி
    வஞ்சியஞ்சிடும் கொஞ்சும் கிளிமொழி
    பாதச் சிலம்புக் கொஞ்சி
    பத்தினியால் வஞ்சி
    வந்தேனே- நானும்
    வந்தேனே!

    பாதர்: போருக்கு போறேண்டி பாதர் வெள்ளை
    போக விடைதாடி வெள்ளையம்மா!

    வெள்: போகாதே போகாதே என் கணவா
    பொல்லாத சொப்பனம் கண்டதினால்

    பாதர்: கண்ட கனவதைச் சொல்லாவிட்டால்
    கத்தியால் வெட்டிடுவேன் பாதர் வெள்ளை

    வெள்: பிஞ்சு மலருமே சோம்பக் கண்டேன்
    பிஞ்சிட்ட வாழையும் சாகக் கண்டேன்

    பாதர்: பிஞ்சிட்ட வாழையும் சாகக் கண்டால்
    பின்வாங்கேன் சண்டையில் பாதர் வெள்ளை!

    வெள்: ஊமத்துரை மாமா கட்டபொம்மு
    ஊரை விட்டோடக் கனவு கண்டேன்

    பாதர்: ஊரை விட்டோடக் கனவு கண்டால்
    ஊக்கத்துடன் சண்டை செய்வேனடி!

    ஏறியுட் கார்ந்தோர் குதிரையின் மேல்
    இழுத்துப் பிடித்தார் கடிவாளத்தை
    வையாளி யோடுதங் காட்டுவழி
    வாரி எறியுதாம் பேக்குதிரை!

    ஒட்ட ரங்காடு ஒடங்காடு
    ஓடிவருகுதாம் பேக்குதிரை!
    சில்லாடற்காடு செடிக்காடு
    சிட்டாப் பறக்குதாம் பேக்குதிரை!
    காலில் அகப்பட்ட கற்களெல்லாம்
    பிறண்டு ஓடுதாம் முன்னாலே!

    ஓட்டப் பிடாரத்து பாதை வழி
    ஓடி வருகுதாம் பஞ்சவர்ணம்
    கொக்குப் பறந்ததுபோல் குதிரை
    கோட்டையை விட்டுமே கண்டு கொண்டு
    குதிரையை விட்டுமே தானிறங்கினான்
    கோடையிடி போன்ற பாதர் வெள்ளை!

    [குலதெய்வம்,1956]

    2.3 பொது வாழ்வு!



    தூங்காது!கண் தூங்காது!
    இருள் சூழும் உலகில்
    பொதுவாழ்வு தோன்றும்வரை
    தூங்காது; கண் தூங்காது! (தூங்காது)

    வேங்கைவாட நரி மேன்மையாவதும்,
    வேங்கைவாட நரி மேன்மையாவதும்,
    வீரர்மரபு தாழ்வதும் நீங்கும்வரை
    தூங்காது; கண் தூங்காது!

    ஆதி நீதி முறை ஆட்சி செய்யவே
    அன்பு மழை பெய்யவே
    சோதி இறையருள் ஆறுபாயவே
    பேதம் மறைந்து உய்யவே, காணும்வரை
    தூங்காது; கண் தூங்காது

    இருள் சூழ்ந்த உலகில்
    பொதுவாழ்வு தோன்றும்வரை
    தூங்காது; கண் தூங்காது!

    [கற்புக்கரசி,1957]

    2.4 செயல் வீரர்!



    வரும் பகைவர் படைகண்டு
    மார்தட்டிக் களம் புகும்
    மக்களைப் பெற்றோர் வாழ்க!

    மணங்கொண்ட துணைவர்க்கு
    விடைதந்து வேல்தந்த
    மறக்குலப் பெண்கள் வாழ்க!

    உரங்கொண்டு போராடி
    உதிரத்தில் நீராடி
    அறங்காத்த உள்ளம் வாழ்க!

    திறமான புகழ்கொண்ட
    திடமான தோள்களும்
    செயல் வீரர் மரபு வாழ்க!

    [அம்பிகாபதி,1957]

    2.5 நாங்கள் பிறந்த நாடு



    ஆண்: துள்ளி வரப் போறேன்
    சுருள் சுருளாய் பாட்டுகளை
    அள்ளி விடப் போகிறேன்
    அய்யா எஞ்சாமிகளே-இந்தப்
    திரையைக் கொஞ்சம் தூக்கிடுங்கோ

    தமிழ்நாடு

    இருவர்: நாங்க பொறந்த தமிழ் நாடு-இது
    நாலு மொழிகளின் தாய் வீடு!
    ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
    தாங்கி வளரும் திருநாடு! (நாங்க)

    பெண்: மதுரத் தமிழ் வழிந்து
    உதிரத்தொடு கலந்து
    மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்-சக்தி
    வளரக்கலை பயின்று தேர்ந்தவர்

    ஆண்: அன்று-
    எதிரிப்படை யெழுந்து
    பதறிமிகச் சினந்து
    இமயச்சரிவில் வந்த போதிலே-வெற்றி
    எமக்கென்றே முழங்கிற்று காதிலே!-இது (நாங்க)

    ஆந்திர நாடு

    இருவர்: எங்கள் நாடுஆந்திர நாடு-விசால
    ஆந்திரநாடு
    எந்த நாடும் இதற்கில்லை ஈடு!

    பெண்: பொங்கும் கிருஷ்ணா நதி ஓடும் நாடு

    ஆண்: போகம் மூன்றும் தவறாத நாடு (எங்)

    பெண்: எங்கள் பொழிலும் தோன்றுவளர் கூடு

    ஆண்: என்றும் நீ இதைப் போற்றிக் கொண்டாடு (எங்)
    பெண்: கீர்த்தனை கவிதைகள் ஆயிரம் வளர் நாடு (எங்)
    ஆண்: இதை-நேர்த்தியுடன்
    இருகை கூப்பி வாழ்த்துவமே(எங்)

    கன்னட நாடு

    பெண்: தங்கம் விளையும் பூமி
    எங்கள் கன்னட பூமி
    காவேரி ஆறு பாயும்
    காட்டில் யானைகள் மேயும்
    சாமுண்டி சக்தி மேவும்
    தவறாத பக்தி வாழும் (தங்கம்)

    மலையாள நாடு

    இருவர்: எங்கள் மலையாளம் புகழ்வெகு நீளம்
    வற்றா வளங்கள் அதன் அடையாளம்

    பெண்: அலையாடும் கடல் விளையாடும்

    ஆண்: அக்கம் பக்கம் கொக்குகளும்
    வட்டமிட்டுப் பறக்கும் (எங்கள்)

    பெண்: பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்-பச்சை
    பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்

    ஆண்: தேக்கு மரங்கள்
    விண்ணை இடிக்கும்-இன்னும்
    சித்திரைச் சோலையெல்லாம்
    கண்ணைப்பறிக்கும்
    அழகுக் குயில்கள் வந்து
    பாடிக்கிடும்-தென்னையை
    மிளகுக்கொடி படர்ந்து
    மூடிக்கிடும்

    பெண்: சிலுசிலுக்கும் அருவி
    ஓடிக்கிடும்-மயில்
    சிறகை விரிச்சிகிட்டு
    ஆடிக்கிடும்

    ஆண்: தேனிருக்கும்

    பெண்: பூவிருக்கும்

    பெண்: மானிருக்கும்

    ஆண்: வனமிருக்கும்

    இருவர்: செங்கனிகளுமிருக்கும்
    தின்றால் மிகு இனிக்கும் (எங்கள்)

    [திருமணம்,1958]

    2.6 நீதி தவிக்குது



    ஒருவன்: மூளை நெறஞ்சவங்க
    காலம் தெரிஞ்சவங்க
    மூத்தவங்க படிச்சவங்க
    வாழ்கின்ற நாடு!-இது

    மற்றவன்: மூச்சுத் திணறுதுங்க
    முளியும் பிதுங்குதுங்க
    பாத்துக்குங்க கேட்டுக்குங்க
    ஜனங்கள் படும்பாடு!-இது

    ஒருவன்: நெலமை இப்படி இருக்குது
    நீதி கெடந்து தவிக்குது
    கொடுமை மேலே கொடுமை வளர்ந்து
    நெருக்குது - அது
    அருமையான பொறுமையைத்தான்
    கெடுக்குது - ஊர் (நெலமை)

    மற்றவன்: பாதை மாறி நடக்குது,
    பாஞ்சுபாஞ்சு மொறைக்குது
    பழமையான பெருமைகளைக்
    கொறைக்குது-நல்ல
    பழக்கமெல்லாம் பஞ்சு பஞ்சாப்
    பறக்குது - ஊர்ப் (நெலமை)

    ஒருவன்: என்ன இருந்தாலும் மனுசன்
    இப்படி ஆடக் கூடாது

    மற்றவன்: எதுக்கும் ஒரு முடிவிருக்குது
    அதிகநாளு ஆடாது

    ஒருவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
    எண்ணம் உடம்புக் காகாது

    மற்றவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
    கவனிக்காமெப் போகாது-ஊர் (நெலமை)
    ஒருவன்: அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே
    அகந்தை புகுந்து கலைக்குது

    மற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள்
    மக்கள் கழுத்தை நெரிக்குது

    ஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து
    வேட்டையாடிக் குவிக்குது

    மற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து
    வீட்டுகாரனைக் கடிக்குது-ஊர் (நெலமை)

    [உத்தம புத்திரன்,1958]

    2.7 கண் தூங்குமோ?



    எங்கே உண்மை என் நாடே
    ஏனோ மௌனம் சொல் நாடே
    மேலான செல்வம் வீணாகலாமோ?
    வீழாமல் மீளாயோ! (எங்கே)

    மீறிவரும் குரல் கேளாயோ
    வெற்றி வரும் வேகம் பாராயோ
    பாராளத் தகுந்தவள் உன் மகளோ
    பாதகம் புரிந்திடும் பொய் மகளோ
    தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
    தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ (எங்கே)

    காலமுன்னைக் குறை கூறாதோ
    காவியங்கள் யாவும் ஏசாதோ
    வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ
    போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ
    தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
    தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ..?

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    2.8 வள்ளல் வழி



    அடியார்க்கு அடியாராய்
    அத்தனையும் கற்றவராய்ப்
    பெரியவராய்ச் சின்னவராய்ப்
    பேசுகின்ற உத்தமரே!

    முடிகள் நரைத்தாலும் மூளை நரைக்காமல்
    முன்னேறி வந்தவரே-ஐயா-உங்கள்
    பொன்மேனி வாழியவே!

    அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச
    ஐயா வாழ்க!வாழ்க!
    அம்பது வருஷம் இவரைச் சுமந்த
    அன்னை பூமி வாழ்க! (அன்பும்)

    சின்னக் குழந்தையைப்போலே துள்ளி விளையாடும்
    குணம் வாழ்க!-ஐயா
    குணம் வாழ்க!-ஒரு
    தினை அளவுகூட சுயநலமில்லாத
    மனம் வாழ்க-ஐயா
    மனம் வாழ்க! (அன்பும்)

    காசு பணங்களை கைதிகளாக்கிய
    கை வாழ்க!-ஐயா
    கை வாழ்க!
    காலந் தெரிஞ்சு அதை விடுதலை செய்த
    பை வாழ்க!-ஐயா
    பை வாழ்க!
    அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால்
    ஆபத்து வருமென்றே
    அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர்
    வள்ளல் வழி நின்றே-இமய மலையும்
    இவரும் ஒன்றே! (அன்பும்)

    [ஆளுக்கொரு வீடு,1960]

    2.9 வீரச் செயல்



    தஞ்சமென்று வந்தவரைத்
    தாய்போல் ஆதரித்து
    வஞ்சகரின் செயல்களுக்கு
    வாள் முனையில் தீர்ப்பளித்து
    அஞ்சாத நெஞ்சில்
    அன்புக்கு இடம் கொடுத்து
    அறங் காக்கும் மக்களிடம்
    பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?

    அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-அது
    அப்படியே நிக்குது எங்கண்ணிலே-நான்
    அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-அது
    அப்படியே நிக்குது எங்கண்ணிலே

    மூணுபக்கமும் கடல் தாலாட்டுது-தன்
    மானமுள்ள மக்களைப் பாராட்டுது
    வானுயரும் மலையில் அருவி பெருகியே
    வந்துவந்து நிலத்தை நீராட்டுது-பல
    வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது (அதி)

    மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு-அதில்
    மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
    மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
    செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு (அதி)

    அங்கே-
    சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும்-தழுவி
    சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
    செந்தாழை மலர்தொட்டு மணம்சுமந்து வரும்

    இங்கே-
    தங்கிட நிழலுமில்லை
    பொங்கிடக் கடலுமில்லை-சற்று
    நேரங்கூட வெயில் மறைவதில்லை
    நம்மை தழுவிடத்
    தென்றலெதும் வருவதில்லை.

    [கலையரசி,1965]

    2.10 குழி பறிக்குது வேரிலே!



    ஒற்றுமையில் ஓங்கிநின்ற சக்தியாலே-மக்கள்
    உள்ளமெல்லாம் பொங்குதடா வெள்ளம்போலே
    வெற்றியெனும் மேடையிலே அன்புக்காளை..
    வீரநடை போடுதடா இந்தவேளை..
    அன்பிருக்குது அறிவிருக்குது
    பண்பிருக்குது பாரிலே..அதை
    அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
    குழிபறிக்குது வேரிலே..

    ஒருவர்: மாமறவர் வழியில் பிறந்து சிறந்து
    மகாவீரன் என விளங்குவேன்

    மற்றவர்: வாளும் திடமுடைய தோளும்
    துணையிருக்க யார்க்கும் உலகில்
    அஞ்சிடேன்

    இருவர்: எண் திசைகளும் கண்டு நடுங்க
    வென்று வாகை சூடுவோம்
    அறிவிலே கலைஞராய் திறனிலே
    தீரராய்
    நாடும் ஏடும் எமைப்பாட
    தொல்லுலகம் உள்ளவரை
    வளர்புகழ் அடைவோம்

    கூட்டம்: இது வீரர் பிறந்த மண்ணு -இதில்
    நாமெல்லாம் ஒண்ணு

    சக்க: அட ஆத்தே நீங்க பெரும்
    வீரர்கள்தான்-உங்களைப்
    பார்த்தே எதிரி ஓடிப்போயிடுவான்

    கூட்டம்: அன்பிருக்குது அறிவிருக்குது
    பண்பிருக்குது பாரிலே-அதை
    அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
    குழிபறிக்குது வேரிலே..

    ஒருவர்: வெட்டும்கூர் வாளினைக்
    காட்டிடுவேன்-நாட்டில்
    வேதனை செய்வோரை வாட்டிடுவேன்

    மற்றவர்: எந்தநாடும் இதற்கீடில்லை என்றே-என்
    சொந்த நாட்டைச் சொர்க்க
    மாக்கிடுவேன்
    இருவர்: கற்றவர் நெஞ்சக் கருத்தினிலே ஒன்றி
    ஒற்றுமை கொண்டுல காண்டிடுவோம்
    வெட்டும் கூர்வாளினைக்
    காட்டிடுவோம்-நாட்டில்
    வேதனை செய்வோரை வாட்டிடுவோம்

    கூட்டம்: இது வீரர் பிறந்த மண்ணு-இதில்
    நாமெல்லோரும் ஒண்ணு

    சக்க: அட ஆத்தே நீங்க பெரும்
    வீரர்கள்தான்-உங்களைப்
    பார்த்தே எதிரி ஓடிப்போயிடுவான்

    கூட்டம்: அன்பிருக்குது அறிவிருக்குது
    பண்பிருக்குது பாரிலே-அதை
    அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
    குழிபறிக்குது வேரிலே.

    [மர்மவீரன்,1958]

    2.11 உழைத்து முன்னேறு



    பையன்கள்: ஓரொண்ணு ஒண்ணு
    ஈரொண்ணு ரெண்டு
    மூவொண்ணு மூணு
    நாலொண்ணு நாலு

    வாத்தியார்: ஓரொண்ணு ஒண்ணு
    உள்ள தெய்வம் ஒண்ணு
    ஈரொண்ணு ரெண்டு
    ஆண் பெண் ஜாதி ரெண்டு
    மூவொண்ணு மூணு
    முத்துத் தமிழ் மூணு
    நாலொண்ணு நாலு
    நன்னிலம் நாலு
    உள்ள தெய்வம் ஒண்ணு
    ஆண் பெண் ஜாதி ரெண்டு
    முத்துத் தமிழ் மூணு
    நன்னிலம் நாலு

    பையன்: அஞ்சொண் அஞ்சு

    வாத்தியார்: அஞ்சுவதற்கு அஞ்சு

    பையன்: ஆறொண் ஆறு

    வாத்தியார்: நல்லறிவுகள் ஆறு

    பையன்: ஏழொண் ஏழு

    வாத்தியார்: இசைக்குலங்கள் ஏழு

    பெண் குழந்தை: ஸரிகமபதநிஸா

    பையன்: ஏழொண் ஏழு

    வாத்தியார்: இசைக் குலங்கள் ஏழு

    பையன்: எட்டொண் எட்டு

    வாத்தியார்: எட்டும் வரை எட்டு

    பையன்: ஒன்பதொண் ஒன்பது

    வாத்தியார்: உயர் மணிகள் ஒன்பது

    பையன்: பத்தொண் பத்து

    வாத்தியார்: பாடல்கள் பத்து
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

    வாத்தியார்: உன்னையெண்ணிப்பாரு
    உழைத்து முன்னேறு
    உண்மையைக் கூறு
    செம்மை வழி சேரு

    பெண் குழந்தை: உன்னை யெண்ணிப்பாரு
    உழைத்து முன்னேறு
    உண்மையைக் கூறு
    செம்மை வழி சேரு

    வாத்தியார்: அன்புக்கு வணங்கு
    அறிந்த பின் இணங்கு
    பண்புடன் விளங்கு
    பசித்தவர்க் கிரங்கு

    பையன்: அன்புக்கு வணங்கு
    அறிந்தபின் இணங்கு
    பண்புடன் விளங்கு
    பசித்தவர்க் கிரங்கு
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

    வாத்தியார்: பேதங்கள் தீர்த்து
    பெருமையை உயர்த்து
    நீதியைக் காத்து
    நேர்மையைக் காட்டு

    பெண் குழந்தை: நேர்மையைக் காட்டு
    பொன் மொழி கேட்டு
    பொய்மையை மாற்று
    பொறுப்புகள் ஏற்று
    பொதுப் பணியாற்று

    வாத்தியார்: திருக்குறள் நூலை
    சிறந்த முப்பாலை
    கருத்துடன் காலை
    படிப்பதுன் வேலை
    லாலல்ல லாலல்ல லாலலல்லா
    லாலல்ல லாலல்ல லாலலல்லா

    [மகனே கேள்,1965]

    2.12 ஆமாம் சாமி ஆசாமிகள்



    ஆண்: ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-சிலருக்கு
    ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-இருக்கும்
    ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
    அதுவுங்கூட டவுட்டு (ஆறறிவில்)
    அடக்கமில்லா பெண்கள் சிலர்
    நடக்கும் எடக்கும் நடையிலும்
    ஆதிகால பண்பைக் காட்டிப்
    பறக்க விடும் உடையிலும் (ஆறறிவில்)
    தன்ரேகை தெரியாத
    பொய்ரேகைக் காரரிடம்
    கைரேகைப் பார்க்கவரும் முறையிலும்
    அவன் கண்டது போல் சொல்லுவதை
    நம்பிவிடும் வகையிலும்
    ஏமாறும் மனத்திலும்
    ஆமாஞ்சாமி கருத்திலும்
    எந்த நாளும் திருந்தாத
    மூடத்தனத்திலும்
    சோம்பேறி சுகத்திலும்
    துடை நடுங்கும் குணத்திலும்
    சொந்த நிலையை மறந்து திரியும்
    ஈனப் பேச்சிலும்
    சிந்திக்காத இடங்களிலும்
    தெண்டச் சோத்து மடங்களிலும் (ஆறறிவில்)

    [மகனே கேள், 1965]

    2.13 வம்பு வளர்க்கும் கும்பல்



    பெண்: மட்டமான பேச்சு-தன்
    வாளைக் கெடுக்குதுங்க-அது
    வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
    காதையும் கெடுக்குதுங்க (மட்ட)
    ஆண்: மட்டமான பேச்சு..
    இருவரும்: மட்டமான பேச்சு..
    சந்திலும் பொந்திலும் வாதம்-அதால்
    தலைவலி மருந்துக்கு லாபம்-அந்த
    ஜாடையிலே சில கேடிகள் செய்வது
    சட்டையின் பைகளைக்
    கெடுக்குதுங்க
    கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து
    குடும்பத்தைக் கலக்குதுங்க-பெருங்
    குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி
    பொழப்பையும் கெடுக்குதுங்க
    புரளியும் வதந்தியும் மூட்டி-ஒரு
    பொய்யை நூறாகக் கட்டி-கரும்
    பூதமென்றும் சிறு
    பேய்களென்றும்-பல

    பாதையும் ஊரையும் கெடுக்குதுங்க (மட்ட)
    அறையில் வளர்ந்து வௌியில் பறந்து
    அவதிப் படுத்துதுங்க-ஊரை
    அவதிப் படுத்துதுங்க-அது
    அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே
    அமைதியைக் கெடுக்குதுங்க

    பாழும் பொய்யென்று காட்டி-உடல்
    மாயக் கூடென்று கூட்டி-உயர்
    வானத்திலே பரலோகத்தைப் பாரென்
    மனதையும் அறிவையும்
    கெடுக்குதுங்க (மட்ட)

    மட்டமான பேச்சு-தன்
    வாயைக் கெடுக்குதுங்க-அது
    வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
    காதையும் கெடுக்குதுங்க

    ஆண்: எது?

    பெண்: மட்டமான பேச்சு

    [மகனே கேள்,1965]

    2.15 கலைந்து விடும் காலம்



    ஆண் : மணவறையில் சேர்த்து வைத்து
    வாழ்த்துரைக்கும் ஓர் காலம்

    மக்களைப் பெற்று மகிழவைக்கும் ஓர் காலம்
    மனதிலே பாசங்கள் வளர்ந்து மறைந்தபின்னே
    கனவுகண்டு விழிப்பதுபோல் கலைத்துவிடும் ஓர் காலம்

    காலம்..காலம்
    சூதாட்டம் ஆடும் காலம்-பல
    மாறாட்டம் செய்து போகும்
    வாதாடி என்ன லாபம்-துயர்
    மலிந்தோர்க்கு எதுநியாயம் (சூதாட்டம்)

    பெண் : சூதாட்டம் ஆடும் காலம்-பல
    மாறாட்டம் செய்து போகும்
    வாதாடி என்ன லாபம்-துயர்
    மலிந்தோர்க்கு ஏது நியாயம் (சூதாட்டம்)
    பேராசை காட்டி மயக்கும்-இணை
    பிரியாத அன்பைப் பிரிக்கும்

    பெண் : மாறாத இன்பம் போலே-வந்து
    மறைந்தோடும் மண் மேலே

    ஆண் : இனி வாதாடி என்ன லாபம்-துயர்
    மலிந்தோர்க்கு ஏது நியாயம்
    சூதாட்டம் ஆடும் காலம்-பல
    மாறாட்டம் செய்து போகும்

    ஆண் : மக்கள் வேண்டும்; செல்வம் வேண்டும்-என
    மறவாமல் உள்ளம் தூண்டும்
    மக்கள் வேண்டும் செல்வம் வேண்டும்-என
    மறவாமல் உள்ளம் தூண்டும்

    மந்தையாக யாவும் கூடும்
    சந்தை மாடு போலே ஓடும்-இனி
    வாதாடி என்ன லாபம்-உந்தன்
    நிலை காண ஏது நேரம் (சூதாட்டம்)

    பெண் : வாதாடி என்ன லாபம்-துயர்
    மலிந்தோர்க்கு ஏது நியாயம்

    ஆண் : சூதாட்டம் ஆடும் காலம்-பல
    மாறாட்டம் செய்து போகும்.

    [மகனே கேள்,1965]


    3. இயற்கை


    3.1 போட்டி வேண்டாம்



    ரோஜா : ஓ..மல்லியக்கா

    மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா

    ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
    கொஞ்சம் சொல்லடியக்கா
    எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே?

    மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு
    வாசனையை அள்ளித் தௌிச்சு
    வாரவங்க எல்லோரையும்
    மயக்கப் போறேன்
    மணப்பொண்ணு கூந்தலிலே
    மணக்கப் போறேன்

    ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும்
    மணக்கப்போறே,
    நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
    தொங்கப் போறேன்
    நீ-வாசனையைக் கொடுத்துப்பிட்டு
    வதங்கப் போறே,
    நான் வாரவங்க கையில் எல்லாம்
    குலுங்கப் போறேன்-அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உடல் நெறத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    மல்லி : கள்ளமில்லா மனசுக் கென்னை உவமை
    சொல்வாங்க - பெரும்
    கவிஞரெல்லாம் காவியத்தில் இடம்
    கொடுப்பாங்க,
    காத்தடிச்சா போதும் என்னைக்
    காணத்துடிப்பாங்க - ஓன்னை
    கண்டாக்கூட முள்ளெ நெனச்சு
    முகஞ்சுளிப்பாங்க - அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    ரோஜா : நீ - மலருமுன்னே வந்து கடைக்கு
    மலிஞ்சு போறவ!

    மல்லி : நீ - உலருமுன்னே தொட்டாக்கூட
    உதிர்ந்து போறவ!

    ரோஜா : நீ - வளரும் போதே கொம்பைத்
    தேடிப்புடிச்சவ!

    மல்லி : அதுக்கு வகையில்லாமெ
    தனிச்சு நின்னு!-அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    (தாமரை வருதல்)

    தங்கச்சி தங்கச்சி
    தாமரைத் தங்கச்சி
    எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
    எடுத்துச் சொல்லு தங்கச்சி?

    தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
    மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! - சில
    மனிதரைப் போல வம்புகள் பேசி
    பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!

    தாமரை : உலகில் சிறந்தது என்ன?

    மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

    தாமரை : அந்த தானத்தில் சிறந்தது என்ன?

    ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

    தாமரை : அதிலும் சிறந்தது என்ன?

    மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள்
    ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!

    தாமரை : அதை நாம் உணர்ந்து
    நடக்க வேணும் எல்லோரும்-ஒன்றாய்
    இருக்கவேணும்!-அப்போதுதான்
    உலவும் சமாதானம்-எங்கும்
    நிலவும் சமாதானம்!

    மூவரும் : அதை நாம் உணர்ந்து
    நடந்திடுவோம்
    எல்லோரும் ஒன்றாய்
    இருந்திடுவோம்!

    [மக்களைப் பெற்ற மகராசி,1957]

    3.2 இருள் விலகும் விளக்கு



    வா வா வெண்ணிலவே-வா இருள்
    மறைந்தோடப் பிறந்தாயென் விருந்தாளியே!
    மங்கை மனதிலே மலிந்திடும் கனவில்
    பங்கு கொண்டுதவும் பாற்குடமே! (வா வா)

    குமுதம் வாய் திறந்து குலுங்கும் வேளை
    குலவியுடன் ஒளிதனில் குளிக்கும் வேளை
    அமுதான நிலகண்டு கருமேகம் புகுந்தால்
    அதைநானும் சகியேனே! கலை வெள்ளமே!
    கலைவெள்ளமே! (வா வா)

    நாளை என் கண்கள் விழித்திருந்தாலுந்தன்
    நகை முகம் மகிழ்ந்திட நற்செய்தி சொல்லுவேனே
    நம்பினேன் உனதன்பையே நலம் பொங்க வா
    (வா வா)

    [சௌபாக்கியவதி,1957]

    3.3 தட்டி எழுப்பிடும் சேவலே



    பெண் : கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
    கொந்தளிக்கும் நெஞ்சிலே,
    கொண்டிருக்கும் அன்பிலே,
    அக்கறை காட்டினாத் தேவலே

    ஆண் : குப்பையைக் கிளறிவிடும் கோழியே
    கொண்டிருக்கும் அன்பிலே,
    ரெண்டும் உண்டு என்று நீ
    கண்டதும் இல்லையோ வாழ்விலே!
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!

    பெண் : காலம் நேரம் அறிந்து உலகை
    தட்டி எழுப்பிடும் சேவலே!
    காத்திருப்பவரைக் கொத்தி விரட்டிடும்
    காரணம் என்ன சேவலே?

    ஆண் : கொத்தவுமில்லை விரட்டவுமில்லை
    குற்றம் ஏதும் நடந்திடவில்லை
    கொண்ட நினைவுகள் குலைந்து போனபின்
    இன்பம் ஏது கோழியே?-அந்த
    எண்ணம் தவறு கோழியே
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!

    பெண் : நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி
    நம்பிய பெண்ணின் நிலையை அறியா
    ஞானியை நீயும் பாரு-இது
    ஞாயந்தானா கேளு?

    ஆண் : நம்பியிருப்பதும் நட்பை வளர்ப்பதும்
    அன்பு-மெய் அன்பு! அந்த
    அன்பின் கருத்தை விதவிதமாக
    அர்த்தம் செய்வது வம்பு
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!

    [பதிபக்தி,1958]

    3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை



    பெண்கள் : காக்காய்க்கும் காக்காய்க்கும்
    கல்யாணமாம்
    கானக் கருங்குயிலு
    கச்சேரியாம்!

    ஆண்கள் : கண்ட கண்ட பக்கமெல்லாம்
    அழைப்புகளாம்
    காலம் தெரிஞ்சுக்கிட
    குறிப்புகளாம் (காக்)

    பெண்கள் : வீட்டுக்கு வீடு
    விருந்துகளாம்
    வில்லு வண்டிக் கூண்டுமேலே
    ஊர்வலமாம்

    ஆண்கள் : பழங்களும் விதைகளும்
    பரிசுகளாம்-அதன்
    பரம்பரை மொழியிலே
    வாழ்த்துகளாம்!

    எல்லோரும்: காக்காய்க்கும் காக்காய்க்கும்
    கல்யாணமாம்
    கானக் கருங்குயிலு கச்சேரியாம்!

    பெண்கள் : ஒற்றுமையில்லாத
    மனிதரைப்போல்-அது
    ஒண்ணைஒண்ணு கொத்திகிட்டு ஓடலையாம்!

    ஆண்கள் : உயர்வு தாழ்வு என்று பேதம் பேசிக்கிட்டு
    ஒதுங்கி வாழ இடம் தேடலையாம்
    ஒதுக்கி வாழ இடம் தேடலையாம்! (காக்)

    பெண்கள் : அதிகமாகச் சேத்துகிட்டு
    அல்லும் பகலும் பாத்துக்கிட்டு
    இருப்பவங்க போலே நடக்கலையாம்!

    ஆண்கள் : நல்ல இதயத்தை மாத்திகிட்டு
    ஈயாதவன் போல
    கதவைத்தான் சாத்திகிட்டுச்
    சாப்பிடலையாம்!

    பெண்கள் : வரிசை தவறாமே
    குந்திக்கிட்டுதாம்
    வந்ததுக்கெல்லாம் இடம்
    தந்திக்கிட்டு தாம்!

    ஆண்கள் : மனிதனைக் கேலி
    பண்ணிக் கிட்டுதாம்-அவன்
    வாழ்க்கையில் கோணலை
    எண்ணிக்கிட்டுதாம்!

    எல்லோரும்: காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்!
    கானக் கருங்குயிலு
    கச்சேரியாம்

    [பிள்ளைக்கனியமுது,1958]

    3.5 ஆணவக் குரங்கு!



    ஆடு மயிலே நீ ஆடு மயிலே
    ஆனந்த நடனம் ஆடுமயிலே! (ஆடு மயிலே)

    பாடு குயிலே இசை பாடு குயிலே
    அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
    அமைதி பெருகி நிலைபெறவே! (ஆடு மயிலே)

    ஆடாதே நீயும் ஆடாதே-வீண்
    ஆணவக் குரங்கே ஆடாதே
    போடாதே சத்தம் போடாதே-கொடும்
    பார்வை ஆந்தையே போடாதே!
    வாடாதே முகம் வாடாதே
    வண்ண மலரே வாடாதே!
    வழக்கமான பூசை முடியுமுன்னே
    மறந்தும் இதழை மூடாதே! (வாடாதே)

    ஓடாதே மானே ஓடாதே-நீ
    ஓடும் வழி தவறி ஓடாதே!
    வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
    விருந்தாய் விழுந்து விடாதே! (ஓடாதே)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    3.6 நல்லதைக் கெடுப்பவர்



    வா வா சூரியனே
    மனிதர் நிலையை தெரிஞ்சுக்க
    வஞ்சகர் அதிகம் உண்டு
    நோக்கம் பாத்து நடந்துக்க! (வா வா)

    தூங்கிக்கிடந்த உயிர்களெல்லாம்
    துள்ளி எழுந்திடும் காலையிலே
    சோர்ந்து கிடந்த கைகளெல்லாம்
    துணிந்திடும் பல வேளையிலே
    உலகத்தை நினைச்சாலே
    உடம்பு நடுங்குது
    ஊருகெட்ட கேட்டைப் பார்த்து
    நீதி பதுங்குது!
    உருவங்கள் மனிதர்போல
    ஓடி அலையுது
    உள்ளத்திலே எண்ணமெல்லாம்
    நஞ்சா விளையுது (வா வா)

    நாடு முன்னேற பலர்
    நல்லதொண்டு செய்வதுண்டு
    நல்லதைக் கெடுக்கச் சிலர்
    நாச வேலையும் செய்வதுண்டு
    ஓடெடுத்தாலும் சிலர்
    ஒற்றுமையாய் இருப்பதில்லை-இந்த
    உண்மையை தெரிந்தும்-நீ
    ஒருவரையும் வெறுப்பதில்லை! (வா வா)

    [பாண்டித்தேவன்,1959]

    3.7 ஓடும் நீரின் சங்கீதம்



    சலசல ராகத்திலே
    டம்மு டும்மு தாளத்திலே
    சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா..நீ
    சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?
    (சலசல)

    ஆத்துக்குள்ளே நானிருக்க
    அக்கரையில் மனமிருக்க
    அலைமேலே அவை எழுந்து
    ஆளை வந்து தள்ளிடுதே
    நேரத்திலே போகணும்
    நீண்ட கதை பேசணும்
    ஆழத்தையும் தாண்டியே
    அன்பு முகத்தைப் பார்க்கணும் (சல சல)

    பச்சை மலைச் சாரலிலே
    பனியுறங்கும் பாறையிலே
    படை போலே பறவையெல்லாம்
    பறந்துவந்து கூடுதே!
    மீனும் மீனும் மேயுதே
    வேடிக்கையாய்ப் பாயுதே
    ஆனந்தமாய்க் கண்களும்
    அவரை நாடிப் போகுதே (சல சல)

    [ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,1960]

    3.8 இதயத்தை திருடியவள்



    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)

    கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
    காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)

    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
    காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)

    கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு
    கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த
    வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை
    வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்)

    கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே..
    கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ
    கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே-இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே-இது (அவள்)

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே!

    [எல்லோரும் இந்நாட்டு மன்னர்,1960]

    3.9 அனல் வீசும் நிலவு



    ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்றபோது
    ஆடாத சிலைகளும் ஆடாதோ?
    ஆனந்த கீதங்கள் பாடாதோ?

    ஆடலுக்கும் பாடலுக்கும்
    ஊதும்குழல் யாழினுக்கும்
    ஆதாரமானது கானம்
    ஊடலுக்கும் காதலுக்கும்
    உண்மைஅன்புக் கூடலுக்கும்
    உகந்தது வாலிப காலம்

    வண்டுலாவும்மலர்ச் சோலையிலே-தென்றல்
    வந்துலாவுகின்ற வேளையிலே-காளைக்
    கன்றுபோல் உருவம் கொண்டஆள் ஒருவன்
    நின்று போட்ட ஒரு பார்வையிலே-என்னைக்
    கொன்று விட்டானடி மாமயிலே!

    இதையும் அதையும் கண்டு
    மதியும் மயக்கங் கொண்டு
    இதயக்கதவை வந்து தட்டுதே-எண்ணம்
    இமயச் சிகரம் தன்னை எட்டுதே!
    அதிகத் துணிவு கொண்டு
    ஆசை கரைபுரண்டு
    அதிரத் தலை சுழன்று சுற்றுதே-நிலவு
    அனலை வாரிக் கொட்டுதே

    [இரும்புத்திரை,1960]


    4. தெய்வம் தேடுதல்


    4.1 சேவை



    ஆண் : அறம் காத்த தேவியே!
    குலம் காத்த தேவியே!
    அறிவின் உருவமான ஜோதியே
    கண் பார்த்தருள்வாயே!
    அன்னையே!அன்னையே! (அறம்)

    பெண் : ஹே மாதா! என் தாயே!
    உன் பாதம் நம்பினேன் அம்மா!
    சத்தியம் லட்சியமாய்ச்
    சேவை செய்யவே
    பராசக்தியே நீ வரம் தா!

    ஆண் : துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம்
    ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்
    நம் மனதில் உறுதியாகவே
    மலிந்த கொடுமை நீங்கவே-இம்
    மனித வாழ்வில் உயர்வு காணவே
    நீ வாழ்த்திடுவாயே தேவியே! தேவியே!

    பெண் : ஹே!பவானி லோகமாதா!
    ஏழைகளின் வாழ்வில் சுகம்தா
    சத்தியமே லட்சியமாய்ச்
    சேவை செய்யவே
    பராசக்தியே நீ வரம் தா!

    [மஹேஸ்வரி,1955]

    4.2 காதல் மாத்திரை



    சிங்கார வேலவனே! சிவகாமி தன் மகனே!
    தினைப்புனத்தில் குறவர் வீட்டிலே
    திருட்டுத்தனமா புகுந்தவனே சண்முகனே - ரொம்ப
    சிறுசிலே வெண்ணெய் திருடித் தின்னவன் மருமகனே!

    பச்சை மயில் வாகனனே
    பாடுங்குறி சொல்லிடவா?
    உச்சிமலை விட்டிறங்கி
    உலகத்தைக் கண்டிடவா?

    காசியாத்திரை போகையிலே-ஒரு
    காதல் மாத்திரை தின்னதுண்டா?
    சோசியர் மகன் சொக்கலிங்கம் - ஒங்க
    சொப்பனத்தில் வந்து சொன்னதுண்டா?

    ஆசை வீட்டிலே விளக்கு வைக்கற
    அழகுக் கன்னியைக் கண்டதுண்டா?
    பேச நினைச்சு ராவும் பகலா
    பித்த மயக்கம் கொண்டதுண்டா? - ஐயாவே அந்த
    உத்தமி உனக்குப் பத்தினியாவா மெய்யாவே
    ஒருத்தர் நிலைமை இப்படியிருக்க
    ஒங்க நிலைமையும் ஒண்ணுதானா?..ஒரு
    கருத்த கன்னியின் பெருத்த மேனியில்
    கண்ணைப் பதிச்சதும் உண்மைதானா?
    அருத்தம் புரிஞ்சு-அவளும் - வாழைக்
    குருத்துபோல வாடிப்போனா
    தரத்துக்கேத்த தங்கரதம் - அவ
    சம்மதிப்பா நீங்க தேடிப்போனா

    சரிதானா? - ஒரு
    ஜாடைக்கு என்னைப்போல்
    தடிச்ச உடம்பு
    அதுதானா?

    [சௌபாக்கியவதி,1957]

    4.3 விடுதலை



    உள்ளும் புறமாகி
    ஒளியாகி-ஞான
    வௌியாகி நின்ற உமையே!

    துள்ளும் கலைகளாகித்
    துளியாகிக் கடலாகித்
    தௌிவாகி நின்ற திருவே!

    அல்லும் பகலுமாகி
    அறமாகித் தரமாகி
    வளமாகி வந்த வடிவே!
    அனுதினமும் உனது மலரடி
    இணையில் இணையுமெனை
    ஆண்டருள்வாய் அம்மையே..!

    கையிலே சூலமும்
    கண்ணிலே கருணையும்
    கனிவாயில் அன்பு நகையும்

    கொய்யாத மலர்முகமும்
    குலுங்கு நவமணி அழகுங்
    கொண்ட தாயே!

    மை போன்ற இருட்டிலே
    வையகமும் மாந்தரும்
    மயங்கும் வேளை

    மெய்யிலே அறிவெனும்
    விளக்கேற்றி வைத்து நீ
    விடுதலை வழங்குவாயே..!

    [சௌபாக்கியவதி,1957]

    4.4 கணவனுக்குச் சேவை



    ஓ..மாதா!பவானி!
    மனம் நிறை சங்கரி!
    உனை நம்பிய பேதைக்கு
    அமங்கலமா அம்மா..தேவி..

    சகலமும் நீயெனத் துவங்கிய வாழ்வினில்
    சகுன பேதமா?.இதுதான் உனது வேதமா? மங்கல
    இசை இன்னும் ஓயவுமில்லை
    மணவறை ஆடை மாற்றவுமில்லை
    மஞ்சள் அரிசி மண்ணில் சிந்தவுமில்லை
    வந்த பேரின்பம் வைகைச் சுழல்தானோ?
    வஞ்சம் ஏனோ..ஓ-மாதா (சகலமும்)

    கணவன் துணையே நிலையான செல்வம்!
    கணவன் உயிரே மனையாளின் தெய்வம்!
    கணவன் சேவையைப் பறிப்பதிலும் எனைப்
    பலிகொள்ளலாமே..மாதா.தேவி..மாதா!

    [சௌபாக்கியவதி,1957]

    4.5 உயிர்



    கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா
    கழுகுமலை பழனிமலை
    கால்நடையாய்ப் போக வேணும்
    எங்கந்தா, எம்முருகா-என்வேலா
    எங்குமரா-ஆ-ஆ
    சுப்பிரமணியா-ஆறுமுகா-நீ
    கண்திறந்து பார்த்திடய்யா
    எட்டுஜாண் குச்சிக்குள்ளே..கந்தையா
    எத்தனை நாளிருப்பேன்

    எட்டுஜாண் குச்சிக்குள்ளே-கந்தையா
    எத்தனை நாளிருப்பேன்-ஒரு
    மச்சுவீடு கட்டித் தாருங்காணும்-உச்சி
    மலையின் மேலோனே-ஒரு (மச்சு வீடு)

    சட்டியில் சேர்ந்ததெல்லாம்-கந்தா உன்
    சன்னதி சேர்த்திடுவேன் (சட்டியில்)

    மொட்டை ஆண்டி ஒன்னை
    முழுசாவே நம்புறேன்
    மோட்சம் தந்திடப்பா-அட (மொட்டை)

    தீராத வினைகளெல்லாம்
    தீர்த்து வைப்பார் கோவிந்தம்
    மாறாத மனசையெல்லாம்
    மாத்தி வைப்பார் கோவிந்தம்!
    பட்டை நாமம் கண்டால்
    பசி தீர்ப்பார் கோவிந்தம்-உன்
    கட்டை கடைந்தேறக்
    கைகொடுப்பார் கோவிந்தம்!

    கோவிந்தம் கோவிந்தம்
    கொடுத்தா புண்ணியம் கோவிந்தம்!
    ரகுராமா ரகுராமா
    நடுத்தெருவிலே என்னை விடலாமா?

    அடப்பாவிகளே பாவிகளே
    பார்த்துட்டு சும்மா போறீங்களே!
    கோவிந்தம் கோவிந்தம்
    கோவப்படாத கோவிந்தம்!

    மானாகி,மயிலாகி,மானாகி,மயிலாகி
    நானாகி,நீயாகி,வடிவாகி வந்த வடிவே-ஏ-ஏ
    பெண்ணாகி,ஆணாகி,பேச்சாகி
    மூச்சாகி-அடேயப்பா
    பெண்ணாகி ,ஆணாகி,பேச்சாகி,மூச்சாகி
    கண்ணாலே கொல்லும் கண்ணே-கண்ணே கண்ணே
    கண்ணே கண்ணே கண்ணே
    உடம்பை நம்பாதே-கண்ணே
    உடம்பை நம்பாதே (உடம்பை)

    உயிர் பிரிந்த பின்னே-இது
    ஒன்றுக்கும் உதவாத மண்ணே
    உடம்பை நம்பாதே-கண்ணே
    உடம்பை நம்பாதே

    [அரசிளங்குமரி,1957]

    4.6 எங்கும் இன்பம்



    கங்கை அணிந்தவா!
    கண்டோர் தொழும் விலாசா!
    சதங்கை ஆடும் பாதவினோதா
    லிங்கேஸ்வரா-நின்தாள் துணை நீதா
    தில்லையம்பல நடராஜா!
    செழுமைநாதனே பரமேசா!
    அல்லல் தீர்த்தாண்டவா-வாவா
    அமிழ்தானவா..(தில்லை)

    எங்கும் இன்பம் விளங்கவே
    அருள் உமாபதி
    எளிமை அகல வரந்தா-வாவா
    வளம்-பொங்கவா(தில்லை)

    பலவித நாடும் கலை ஏடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்
    கலையலங்கார பாண்டிய ராணி நேசா
    மலையின் வாசா
    மங்கா மதியானவா..(தில்லை)

    [சௌபாக்கியவதி,1957]

    4.7 கடவுள் எங்கே



    பார்த்தாயா மானிடனின் லீலையை-தேவா
    பார்த்தாயா மானிடனின் லீலையை-தேவா
    நிலையான உலகத்தையும்
    நேரான பழக்கத்தையும்
    தலைகீழாய்ப் புரட்டிவிடும்
    தாறுமாறு வேலையை (பார்த்தாயா)
    பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
    தினமும் கிடைக்கும் சுண்டலிலே..ஹா..ஹா (பக்த)

    பசியும் சுண்டல் ருசியும் போனால்
    பக்தியில்லை பஜனையில்லை
    சுத்தமான போலிகளின்
    சோம்பேறி வேஷத்திலே! (சுத்த)

    தொடர்ந்து உந்தன் கண்ணெதெரில்
    நடந்து வரும் மோசங்களை
    ஆட்டம் போட்டுப் புரள்வதுதான்
    ஆண்டவனின் சேவையா?
    ஆலயத்தைத் தரிசிக்க
    அலங்காரம் தேவையா?
    ஆளை ஆளு இடிக்கறதும்
    அடிதடியும் ஏனையா?

    அன்பர்கண்ணு அங்கே மொறைக்குது
    கும்பிடு மட்டும் இங்கே நடக்குது (பார்)
    விண்ணும் மண்ணும் நீயானாய்
    வெயிலும் மழையும் நீயானாய்
    விளங்கும் அகில உலகமிது
    நீயில்லாத இடம் ஏது? ஹா..ஹா..ஹா..(விண்)

    காசு தந்தால்தான் உன்னைக்
    காணும்வழி காட்டுவதாய்
    கதவு போட்டு பூட்டி வைத்துக்
    கட்டாயம் பண்ணுவதைப் (பார்)

    [நான் வளர்த்த தங்கை,1958]

    4.8 ஆளை விழுங்கும் காலம்



    ஓங்கார ரூபிநீ
    ஆங்கார மோகினி
    உக்ரமா காளி நீயே
    ரீங்கார நாதம்
    நீஸ்ருங்கார மாதுநீ என்
    நெஞ்சூரில் வாழும் தாயே!

    அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை
    நம்பி வந்தோம் ஒரு காரியமா! (அம்)

    ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா
    ஏழை எங்கள் நிலைமையைத்தான்
    எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா!(அம்)

    சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி
    கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி
    குறைகள் தீரக் கொடுமைகள் மாற
    கருணைக்கண்ணால் பாருமம்மா!
    கும்பிடுபோடும் ஏழை எங்கள்
    குடும்பம் வாழ வேணுமம்மா! (அம்)

    இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது
    எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?
    பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
    பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது
    துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது
    சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது
    சூதுக்காரர் தொட்டிலிலே
    காதும் கண்ணும் கெட்டு-நல்ல
    நீதியது குழந்தை போல உறங்குதம்மா-அதை
    நினைக்கையிலே மக்கள்மனது கலங்குதம்மா-காசி விசலாட்சி

    கன்யா குறிச்சி,வடிவழகி,பேச்சி,
    சடச்சி,பெரியாட்சி
    காட்சி கொடுக்கும் மீனாட்சி!
    தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு உண்மை
    ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா-இன்று
    பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்
    பசியும் பிணியும் பந்தயம் போடுது!
    கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது
    தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா
    தேவைக்கேற்ற வகையில் உன்னை
    போற்றுகிறோம் தூற்றுகிறோம்!
    தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா-உன்
    திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!

    அக்கினிக்காளி பத்திரக்காளி அந்தரக்காளி
    உதிரக்காளி
    நடனக்காளி சுடலைக்காளீ!
    குறைகள் தீரக் கொடுமைகள் மாற
    கருணைக் கண்ணால் பாருமம்மா!
    கும்பிடுபோடும் ஏழை மக்கள்
    குடும்பம் வாழ வேணுமம்மா!
    நெடியசூலி பெரும்பிடாரீ (அம்பிகையே)

    [பதிபக்தி,1958]

    4.9 நீயே துணை!


    அம்மா துளசி உண்மையின் அரசி
    அனைத்தும் உனதருளம்மா (அம்மா)

    அகிலமும் நீயே ஆதியும் நீயே
    ஆண்டருள்வாயே அன்பெனும் தாயே
    நிதமுமென் வாழ்வில் நிலையான தாயே
    நினைவிலும் கனவிலும் நீயே துணை (அம்மா)

    மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க
    தேன் மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச
    (மானமும்)

    மங்கல நாணும் மஞ்சளும் வாழ
    மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ
    வழிபுரிவாய் ஜோதி நீயே துணை! (அம்மா)

    [நான் வளர்த்த தங்கை,1958]

    4.10 மாசற்ற அன்பு



    பாசத்தால் எனையீன்ற
    அன்னை தந்தை
    பதை பதைத்து நிற்கின்றார்
    மகனைக் காண

    பேசத்தான் வார்த்தையில்லாக்
    கற்பு மங்கை
    பிடியென்றால் தன்னுயிரைக்
    கணவன் வாழ

    மாசற்ற அன்புக்கு
    மரணம் உண்டோ?
    மதிகெட்டு வந்தாயோ
    வஞ்சகப் பாம்பே!

    வாழத்தான் வேண்டும்
    நான் கடமைக்காக
    மனமிருந்தால் ஓடிவிடு
    மாயப் பாம்பே! மாயப் பாம்பே!

    [அமுதவல்லி,1959]

    4.11 பெண் மனசு



    ஜிலுஜிலுக்கும் பச்சைமலை,
    தென்றல் பொறந்தமலை
    தென்பொதிகை எங்கள்மலை சாமியோ சாமி
    தேக்கு மரம்,பாக்கு மரம்-எங்கள்
    தென்னை மரம்,புன்னை மரம்-எங்க
    வாழ்க்கை யெல்லாம் காட்டுக்குள்ளே
    ஏஞ்சாமி யோசாமி!-நாங்க
    வந்ததில்லே நாட்டுக்குள்ளே

    சிட்டுக் குருவியிவ,சிங்கினிக் குறத்திமவ,
    சித்திரைப் பதுமை தானுங்க-பொண்ணு மனசு
    முத்திரைப் பசும் பொன்னுங்க
    தையன்னத் தையன்னத்தானா
    தையான தயன்னத்தான
    தங்தோம் தன்னானக் கந்தையா

    உன்பேரைப் பாடிவந்தோம் சிங்காரக் கந்தையா
    வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
    வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா
    மீறி வரும் புலியை வீரத்தினால் அடக்கி
    ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா
    தையத் தையத் தையத் தந்தின்னத்
    தம்தின்னத் தைய
    திக்கெல்லாம் சுத்தி வருவா-மச்சானைத்தேடி
    தென்றலைத்தூது விடுவா
    தையன்னத் தையன்னத்தான்
    தையான தயன்னத் தானத்
    தந்தோம் தன்னானக் கந்தையா!

    உன்பேரைப் பாடிவந்தோம் சிங்காரக் கந்தையா
    மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி
    மயங்கியோட வச்சு மயில் பிடிப்பா!
    மதுரக் கவிபோலக் கோவை யிதழ் காட்டி
    வண்ணம் பாட வைச்சுக் குயில் பிடிப்பா!

    பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம்
    பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்!
    ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம்
    அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!
    (சிட்டுக்)

    சிங்கினி சிங்கினி சிங்கினி
    திறமையுள்ளவன் எடுத்துக்கோ
    டங்கினி மங்கினி டங்கினி மங்கினி
    ரகசியத்தைப் புரிஞ்சுக்க! (சிட்டுக்)

    [அமுதவல்லி,1959]

    4.12 ஞானம்!



    தேவி மனம் போலே
    சேவை புரிந்தாலே
    தேவை நிறைவேறும்! (தேவிமனம்)

    பாவ வினை தீரும்
    யோக நிலையாலே
    தேவ மொழியாலே
    மாயா வழிகாணும்
    ஞான மருள்வாயே! (தேவிமனம்)

    வானில் உலாவும் வண்ண நிலாவும்
    நாணம் கொள்ளும் நங்கையாள்
    ஆடல் விநோத ஆனந்த கீத
    பாடம் சொல்லும் மங்கையாள்!
    அழகு வரும் நேரம்
    அன்னை அதிகாரம்
    முழுதும் அவள் பாரம்
    மோகம் வெகு தூரம் (தேவி மனம்)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    4.13 நோட்டம்!



    ஆண் : ஆனைமுகனே ஆதி முதலானவனே
    பானை வயிற்றோனை பக்தர்களைக் காப்பவனே
    மோனைப் பொருளே
    மூத்தவனே கணேசா கணேசா!
    ஏனென்று கேளுமையா-இந்த
    ஏழை முகம் பாருமையா

    குழு : புள்ளையொரு கோவிலுக்குப்
    பொழுதிருக்க வந்திருக்கும்
    புள்ளை யாரு-இந்தப்
    பிள்ளை யாரு?

    பெண் : புள்ளையாருக்கு கோவிலுக்குப்
    பொழுதிருக்க வந்திருக்கும்
    புள்ளை யாரு-இந்தப்
    பிள்ளை யாரு?

    பெண் : புள்ளையாரு கோவிலுக்குப்
    பொழுதிருக்க வந்திருக்கும்
    புள்ளை யாரு-இந்தப்
    பிள்ளை யாரு?
    வள்ளியம்மை நேசத்திலே
    வனவேடன் வேஷத்திலே
    வாட்டங்கொண்ட வேலனுக்கு
    உதவி செஞ்சாரு-யானை
    உருவில் வந்தாரு-இந்தப்
    வாதங் கொண்ட மாப்பிளைக்கு
    என்னடி செய்வாரு? பெண்ணுக்கு
    எங்கடி போவாரு?

    ஆண் : ஆஹா..குலுக்கி மினுக்கிக்கிட்டு
    குடங்களையும் தூக்கிக்கிட்டு
    தளுக்கு நடை போட்டுகிட்டு
    ஜாடையிலே பார்த்துக்கிட்டு
    கொளத்தங்கரை ஓரத்திலே-அட
    எங்கப்பா கணேசா!
    மயக்கம் வரும் நேரத்திலே
    கூட்டமா வந்திருக்கும் இவங்க
    நோட்டமென்ன சொல்லுமப்பா?-இவங்க
    நோட்டமென்ன சொல்லுமப்பா?

    குழு : ஓகோ!

    பெண் : தனக்கொருத்தி யில்லாமே
    தனிச்சிருக்கும் சாமியிடம்
    எனக்கொருத்தி வேணுமின்னு
    கேக்க வந்தாரோ?
    ஏங்கி ஏங்கி எதைப்
    பார்க்க வந்தாரோ?

    ஆண் : ஏய்.போக்கிரிக் குட்டிகளா
    தண்ணி தூக்கப் போறதுபோல்
    கண்ணிபோட வந்திருக்கும்
    பொண்ணு யாரு?-இவ
    புருஷன் யாரு?-அந்தக்
    கள்ளி யாரு?
    வேப்பெண்ணையைப் பூசிகிட்டு
    வெறுங்கையாலே கிண்டி விட்டு
    வேடுகட்டும் கூந்தலிலே செங்கமலம்-காக்கா
    கூடுகட்டப் பார்க்குதுடி ருக்குமணி ருக்குமணி!

    குழு : ஓஹோ

    பெண் : கட்டழகைப் பாருங்கடி
    காலைப் புடிச்சு வாருங்கடி!

    குழு : (கட்டழகை)

    ஆண் : ஏய்..ஒய்யாரப் பெண்டுகளா
    ஒடம்பைத் துளைக்கும் வண்டுகளா!

    குழு : நொண்டிக்கை நொண்டிக்கை
    ஊளை மூக்கு ஊளை மூக்கு

    ஆண் : கோண மூஞ்சி கோண மூஞ்சி
    பூனைமுழி பூனைமுழி!

    குழு : முட்டிக் காலு சட்டித் தலை!

    ஆண் : சொத்தப் பல்லு பட்டி வாயி!

    குழு : நீதான்

    ஆண் : நீங்கதான்

    குழு : புடிங்கடி

    ஆண் : நில்லுங்கடி..டூர்..

    [பாகப் பிரிவினை,1959]

    4.14 ஒரே ரத்தம்



    ஊருக்கெல்லாம் ஒரே சாமி
    ஒரே சாமி ஒரே நீதி
    ஒரே நீதி ஒரே ஜாதி
    கேளடி கண்ணாத்தா!

    மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து
    ஒரேகாத்து ஒரே தண்ணி
    ஒரே வானம் ஒரே பூமி
    ஆமடி பொன்னாத்தா! (ஊருக்)

    எல்லோருக்கும் உலகம் ஒண்ணு
    இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
    இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு
    நானும் ஒண்ணே தானே
    யாரு மேலே கீறினாலும்
    ரத்தம் ஒண்ணு தானே
    ஆகமொத்தம் பிறந்ததெல்லாம்
    பத்தாம் மாதம் தானே (ஆக)

    உயிருகெல்லாம் ஒரேபாதை
    ஒரேபாதை ஒரே வாசல்
    ஒரே கூடு ஒரே ஆவி
    பாரடி கண்ணாத்தா! (உயிருக்)

    பாடுபட்டோர் கொஞ்சமில்லை
    பலன் வெளைஞ்சா பஞ்சமில்லே
    ஆடும் மாடும் நாமும் வாழ
    அருள் புரிவாளே-அம்மா
    அருள் புரிவாளே
    அங்காளம்மன் கோவிலுக்குப்
    பொங்க வைக்க வேணும்
    அன்னையவள் எங்களையும்
    பொங்க வைக்க வேணும் (அங்கா)

    ஆளுக் கெல்லாம் ஒரே கோயில்
    ஒரே கோயில் ஒரே பூசை
    ஒரே ஞாயம் ஒரே தீர்ப்பு!
    கேளடி கண்ணாத்தா! (ஊருக்)

    [ஆளுக்கொரு வீடு,1960]

    4.15 ஏங்கும் ஏழை



    கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
    காசு போன இடம் தெரியல்லே-என்
    காதலி பாப்பா காரணம் கேப்பா
    ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
    ஏழைக்குக் காலம் சரியில்லே

    மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
    வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
    காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
    கணக்கு நோட்டோட நிக்குறான்-வந்து
    எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே)

    சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
    பட்டினியால் பாடுபட்டா
    கட்டுக் கட்டா நோட்டுச் சேருது
    கெட்டிக்காரன் பொட்டியிலே-அது
    குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே)

    விதவிதமாய்த் துணிகள் இருக்கு
    விலையைக் கேட்டா நடுக்கம் வருது
    வகைவகையா நகைகள் இருக்கு
    மடியைப் பார்த்தா மயக்கம் வருது
    எதைஎதையோ வாங்கணுமின்னு
    எண்ணமிருக்கு வழியில்லே-இதை
    எண்ணாமலிருக்கவும் முடியல்லே (கையிலே)

    கண்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்
    பொண்ணுக்கு துணையா ஆணைப் படைச்சான்
    ஒண்ணுக்கு பத்தா செல்வத்தைப் படைச்சான்
    உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
    என்னைப் போலே பலரையும் படைச்சு-அண்ணே
    என்னைப் போலே பலரையும் படைச்சு
    இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
    ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே)

    [இரும்புத்திரை,1960]


    5. சிறுவர் சீர்திருத்தம்


    5.1 வீணர்களின் சொல்



    சின்னப்பயலே சின்னப்பயலே
    சேதி கேளடா (சின்னப்)
    நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
    எண்ணிப் பாரடா-நீ
    எண்ணிப் பாரடா சின்னப்

    ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
    அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
    ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
    தரும் மகிழ்ச்சி (ஆசை)

    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
    காலம் தரும் பயிற்சி-உன்
    நரம்போடுதான் பின்னி வளரணும்
    தன்மான உணர்ச்சி-உன் (நரம்) சின்னப்

    மனிதனாக வாழ்ந்திட வேணும்
    மனதில் வையடா-தம்பி
    மனதில் வையடா (மனிதனாக)
    வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
    வலது கையடா-நீ
    வலது கையடா (வளர்ந்து)

    தனியுடமைக் கொடுமைகள் தீரத்
    தொண்டு செய்யடா-நீ
    தொண்டு செய்யடா! (தனி)
    தானா எல்லாம் மாறும் என்பது
    பழைய பொய்யடா-எல்லாம்
    பழைய பொய்யடா!

    வேப்பமர உச்சியில் நின்னு
    பேயொன்னு ஆடுதுன்னு
    விளையாடப் போதும்போது
    சொல்லி வைப்பாங்க-உன்
    வீரத்தைக் கொழுந்திலேயே
    கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின்
    மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட
    நம்பி விடாதே-நீ
    வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
    வெம்பி விடாதே-நீ
    வெம்பி விடாதே!-சின்னப்

    [அரசிளங்குமரி,1957]

    5.2 நாளை உலகம் நல்லவர் கையில்!



    சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
    சிந்திடும் மலரே ஆராரோ!
    வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே!
    ஆரிரரோ..அன்பே ஆராரோ!

    ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ?
    எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ?
    நாளை உலகம் நல்லோரின் கையில்,
    நாமும் அதில் உய்வோம் உண்மையில்,
    மாடி மனை வேண்டாம் கோடி செல்வம் வேண்டாம்
    வளரும் பிறையே நீ போதும் (வண்ண)

    பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ?
    பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால்தான் தூக்கமோ?
    தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
    தாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
    குப்பைதனில் வாழும் குண்டுமணிச் சரமே!
    குங்குமச் சிமிழே ஆராரோ.. (வண்ண)

    [பதிபக்தி,1958]

    5.3 காலம் மாறும்



    அழாதே பாப்பா அழாதே!
    அழாதே பாப்பா அழாதே!
    அம்மா இருந்தால் பால் தருவாங்க!
    அனாதை அழுதா யார் வருவாங்க? (அழாதே)

    என் தாயுமில்லை உன் தாயுமில்லை
    என் செய்வேன் கண்ணே ஆராரோ!-உன்னை
    அணைப்பாருமில்லை மதிப்பாருமில்லை
    அன்பை என் கண்ணே ஆராரோ!

    என்ன நினைந்தே நீ ஏங்கி அழுதாயோ
    இன்பத்தேனே ஆராரோ!
    பேசாத நீதி நமக்காகப் பேசும்
    கலங்காதே செல்லப் பாப்பா! (அழாதே)

    மாறாத காலம் உனக்காக மாறும்
    வருந்தாதே செல்லப் பாப்பா!
    தாலாட்டும் மாதா தலைசாய்த்த பின்னே
    துணையேது சின்னப் பாப்பா
    தாங்காத துன்பம் தனில்வாடும் தந்தை
    மனம்நோகும் முன்னே தூங்கம்மா-அவர்
    பெருந்தூக்கம் தூங்கும் வேதாவைப் பார்த்தே
    வருவார் என்கண்ணே தூங்கம்மா!

    [பெற்ற மகனை விற்ற அன்னை,1958]

    5.4 அடக்கம் வீரமும்!



    பெண்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா

    சிறுவர்கள்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
    ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா

    பெண்: ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
    பேரென்ன?..சொல்லு!

    சிறுவர்கள்: வள்ளுவன்!

    பெண்: ஈனா ஈயன்னா எதையும் வெல்லும்
    பொருளென்ன?..

    சிறுவர்கள்: அன்பு!

    பெண்: ஊனா ஊவன்னா உலக உத்தமன்
    பெயரென்ன?..சொல்லு!

    சிறுவர்கள்: காந்தித் தாத்தா!

    பெண்: ஏனா ஏயன்னா எழுத்தறிவித்தவன்
    இறைவனாகும்

    சிறுவர்கள்: ஆனா ஆவன்னா

    பெண்: அன்பாய்ப் பழகும்
    கொம்பை அசைக்கும்
    அம்மான்னு கத்தும் அது என்ன?..

    சிறுவர்கள்: மாடு!

    பெண்: சொன்னதைச் சொல்லும்
    கனிகளைத் தின்னும்
    சோலையிலே வாழும் அது என்ன?..

    சிறுவர்கள்: கிளி!..

    பெண்: கருப்பாய் இருக்கும்
    குரல்தான் இனிக்கும்
    பறக்கும் பறவை அது என்ன?..

    சிறுவன்: காக்கா!..

    சிறுமி: இல்லை,குயில்!..

    சிறுவர்கள்: ஆனா ஆவன்னா..

    பெண்: அன்பும் அறமும்
    அடக்கமும் பொறுமையும்
    பண்பும் கொண்டவர் பெண்கள்! (அன்பும்)

    பெண்: ஆளும் திறமையும்
    வீரமும் கடமையும்
    பெருமையும் கொண்டவர் ஆண்கள்!
    (ஆனா ஆவன்னா)

    [அன்பு எங்கே,1958]

    5.5 நாட்டைக் கெடுத்தவர்



    தூங்காதே தம்பி
    தூங்காதே-நீயும்
    சோம்பேறி என்ற பெயர்
    வாங்காதே! (தூங்)

    நீ-தாங்கிய உடையும்
    ஆயுதமும்-பல
    சரித்திரக் கதை சொல்லும்
    சிறைக்கதவும்,
    சக்தியிருந்தால்
    உன்னைக்கண்டு சிரிக்கும்
    சத்திரந்தான் உனக்கு
    இடம் கொடுக்கும் (தூங்)

    நல்ல பொழுதையெல்லாம்
    தூங்கிக் கெடுத்தவர்கள்
    நாட்டைக் கெடுத்ததுடன்
    தானுங்கெட்டார்; சிலர்
    அல்லும் பகலும்
    தெருக்கல்லா யிருந்துவிட்டு
    அதிர்ஷடமில்லையென்று
    அலட்டிக் கொண்டார்
    விழித்துக் கொண்டோரெல்லாம்
    பிழைத்துக்கொண்டார்-உன்போல்
    குறட்டை விட்டோரெல்லாம்
    கோட்டைவிட்டார்! (தூங்)

    போர்ப் படைதனில் தூங்கியவன்
    வெற்றியிழந்தான்-உயர்
    பள்ளியில் தூங்கியவன்
    கல்வியழந்தான்!
    கடைதனில் தூங்கியவன்
    முதல் இழந்தான்-கொண்ட
    கடமையில் தூங்கியவன்
    புகழ் இழந்தான்-இன்னும்
    பொறுப்புள்ள மனிதரின்
    தூக்கத்தினால்-பல
    பொன்னான வேலையெல்லாம்
    தூங்குதப்பா! (தூங்)

    [நாடோடி மன்னன்,1958]

    5.6 கொஞ்சும் குரல்!



    குழந்தை வளர்வது அன்பிலே-நல்ல
    குணங்கள் அமைவது பண்பிலே(குழந்தை)

    ஆடிகடந்திடும் ஆசையிலே-அது
    ஓடித் தவழ்வது மண்ணிலே!
    ஆகாயநிலவின் அசைந்தாடும் மலரின்
    அழகையும் காண்பது கண்ணிலே-பெரும்
    ஆனந்தம் அடைவது பண்ணிலே! (குழந்தை)

    கொஞ்சும் குரலும்,பிஞ்சு விரலும்
    குளறிப் பேசும் நிலையும் மாறி
    அஞ்சும் மனமும் நாணமும் வந்து
    ஆடையணிந்திடும் அறிவும் வந்து
    நாளும் நகர்ந்ததுமே ஓடவே-கல்வி
    ஏடும் நகர்ந்திடும் கூடவே! (குழந்தை)
    காலத் தாமரை போலத் தோன்றும்
    நிறமாகியே
    வானத் தாரகை நாணத் தோன்றும்
    முகமாகியே
    வஞ்சிக் கொடிதனை மிஞ்சித் திகழும்
    வடிவாகியே
    வண்ணத் தங்கம் மங்கத் திகழும்
    வயதாகியே
    அறிவாகியே ஒளியாகியே தௌிவாகியே! (குழந்தை)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    5.7 இதய ஒளி!



    அன்புத் திருமணியே
    அகமலரே!அருள் மணமே!
    அறமே போற்றி!

    புண்பட்டு உழலுகின்ற
    புவிதிருத்த அவதரித்த
    பொருளே போற்றி!

    கண்பெற்றும் பார்வை பெறா
    வம்பர்க்கும் வாழ்வளித்த
    வாழ்வே போற்றி!

    இன்புற்றிட மாந்தர்
    இதயம் ஒளியாக எழுந்த
    புத்தமுதே போற்றி!

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    5.8 உயர்ந்த நினைவு



    அமுதமே என் அருமைக் கனியே
    ஆசை பொங்கும் கண்ணே
    அன்பு தவழும் பொன்னே
    தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)

    கொடியிலாடும் மலரும் நாணும்
    கலையின் வெள்ளமே..ஓ..
    மடியிலாடி மழலைபேசி மணக்கும்
    மதுரத் தேனே
    மனதைக் கவரும் பொன்னே
    தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)

    அழகு வானின் நிலவை ஓடித்
    தழுவ வேண்டுமோ..ஓ..
    உலகம் தூங்கும் இரவில் நீ
    உறங்கிடாததும் ஏனோ?
    உயரும் நினைவு தானோ?
    தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)

    [உலகம் சிரிக்கிறது,1959]

    5.9 பெண்ணரசு!



    செங்கோல் நிலைக்கவே
    செல்வம் செழிக்கவே
    சிந்தையெல்லாம் மகிழவே,
    மங்கையர் குலக்கொடி
    வந்தே பிறந்தனள்
    வளர்நீதி தழைத் தோங்கவே!

    மகுடம் காக்கவந்த
    மகள் வாழி-குல
    மகள் வாழி-ஒளி
    மங்காத வெண்குடைப்
    புகழ் வாழி!-அன்பு
    நிழல் வாழி! (மகுடம்)

    அகிலம் போற்றும்
    தமிழறம் வாழி!
    அள்ளி வழங்கும்
    மணிக்கரம் வாழி!
    அன்பு நிறைந்திடும்
    மனம் வாழி!-கதிர்
    ஆடி விளைந்திடும்
    நிலம் வாழி!-நீர்
    வளம் வாழி!

    ஆளப் பிறந்தது பெண்ணரசு-அது
    வாழ நினைத்துக் கொண்டாடுவோம்!
    காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்-நன்றி
    கலந்திட கும்மி பாடிடுவோம்!

    துள்ளித் திரியுது உள்ளமெல்லாம்-அதைக்
    சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்!
    செல்லக் குமாரி தெரிசனம் காணவே
    தேடித் திரியுது கண்களெல்லாம்!

    கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த
    சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில்
    சிந்துகின்றாளிவள் விழியாலே!
    எத்தனை நாள் பொறுத்து பத்தினியீன்றெடுத்த
    முத்திரைத் தங்கம் இனி முறைபோலே-நலம்
    பெற்றிடவளர்வாள் பிறைபோலே!

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    5.10. உன்னை நம்பு!



    இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
    உந்தன்-வாழ்க்கைதனை உணர்வாய் மகனே-இளம்
    மனதில் வலிமைதனை ஏற்றடா-முக
    வாட்டமதை உழைப்பால் மாற்றடா! (இந்த மாநில)

    துயர்தனைக் கண்டே பயந்து விடாதே
    சோர்வை வென்றாலே துன்பமில்லை
    உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்
    உதவி செய்வார் யாருமில்லை (இந்த மாநில)
    பேதத்தைப் பேசி நேரத்தை விழுங்கும்

    பித்தருமுண்டு-அவர்
    பக்தருமுண்டு
    லாபத்தை வேண்டி ஆபத்தில் வீழும்
    நண்பருமுண்டு-வெறும்
    வம்பருமுண்டு (இந்த மாநில)

    [கல்யாணிக்குக் கல்யாணம்,1959]

    5.11 நல்லவனாக



    உன்னைக்கண்டு நானாட
    என்னைக்கண்டு நீயாட
    உல்லாசம் பொங்கும்
    இன்பத் தீபாவளி
    ஊரெங்கும் மகிழ்ந்து
    ஒன்றாக கலந்து
    உறவாடும் நேரமடா-ஆ..
    உறவாடும் நேரமடா

    கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
    கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
    எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
    எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?
    வல்லமை சேர, நல்லவனாக,
    வளர்ந்தால் போதுமடா - ஆ..
    வளர்ந்தாலே போதுமடா

    சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பு
    தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு!
    முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்த சிரிப்பு?
    முகமோ மலரோ இது என்ன ரசிப்பு!
    மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
    வேறென்ன வேணுமடா-ஆ..
    வேறென்ன வேணுமடா (உன்னைக்)

    [கல்யாணப் பரிசு,1959]

    5.12 சிறுவரிடம் திறமை



    திருடாதே! பாப்பா திருடாதே!
    வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே

    சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
    சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
    தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
    திரும்பவும் வராமே பார்த்துக்கோ (திரு)

    திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
    திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
    சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
    தடுத்துக் கொண்டே இருக்குது
    திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது (திரு)

    கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி
    எடுக்கிற அவசியம் இருக்காது
    இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
    பதுக்கிற வேலையும் இருக்காது
    ஒதுக்கிற வேலையும் இருக்காது
    உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
    கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
    கீழும் மேலும் புரளாது! (திரு)

    [திருடாதே,1961]

    5.13 துன்பம் வெல்லும் கல்வி!



    ஏட்டில் படித்ததோடு
    இருந்து விடாதே!-நீ
    ஏன்படித்தோம் என்பதையும்
    மறந்துவிடாதே (ஏட்டில்)

    நாட்டின் நெறிதவறி
    நடந்துவிடாதே-நம் (நாட்டின்)
    நல்லவர்கள் தூற்றும்படி
    வளர்ந்துவிடாதே! நீ (ஏட்டில்)

    மூத்தோர்சொல் வார்த்தைகளை
    மீறக்கூடாது-பண்பு
    முறைகளிலும் மொழிதனிலும்
    மாறக்கூடாது
    மாற்றார் கைப்பொருளை நம்பி
    வாழக்கூடாது-தன்
    மானமில்லாக் கோழையுடன்
    சேரக்கூடாது! நீ
    துன்பத்தை வெல்லும் கல்வி
    கற்றிடவேணும்
    சோம்பலைக் கொல்லும் திறன்
    பெற்றிடவேணும்
    வம்புசெய்யும் குணமிருந்தால்
    விட்டிடவேணும்-அறிவு
    வளர்ச்சியிலே வான்முகட்டைத்
    தொட்டிடவேணும்! நீ (ஏட்டில்)

    வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்
    பெருமைவர
    மேதைகள் சொன்னதுபோல்
    விளங்கிடவேணும்
    பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
    மண்ணின் புகழும்
    வற்றாமல் உன்னோடு
    வளர்ந்திடவேணும்! நீ (ஏட்டில்)

    [குமார ராஜா,1961]


    6. காதல் சுவை


    6.1 காதலின் இலக்கணம்



    ஊரடங்கும் வேளையிலே
    உள்ளம் கவரும் சோலையிலே-இவ
    யாருக்காகத் காத்திருந்தா
    ஏரிக்கரையிலே?-அதுதான்
    எனக்கும் புரியலே! (ஊரடங்கும்)

    ஆரணங்கின் மையலிலே
    அந்தியிளம் வெய்யிலிலே
    அங்கொருவர் வருவதுண்டு
    அதையும் சொல்லிவிட முடியலே,
    இங்கிருக்கும் இவமனசு
    எங்கே இருக்குதோ தெரியலே? (ஊரடங்கும்)

    உளறாதே பொன்னம்மா
    உள்ளதைச் சொன்னா என்னம்மா?
    கலங்காதே குப்பமா
    நலுங்கு வைப்பது எப்பம்மா?
    பழங்காலப் பைத்தியம் உங்கள்
    இளங்காதல் ஏற்குமா? (ஊரடங்கும்)

    காரணம் விளங்கியும் கதையேண்டி
    காதலின் இலக்கணம் இதுதாண்டி
    வீணர்கள் இட்ட சாதி வேலிதாண்டி
    விந்தைகள் புரிவதும் அதுதாண்டி!
    ஊரடங்கும் வேளையிலே
    உள்ளம் கவரும் சோலையிலே-அவர்
    வாரேனென்று வாக்களித்தார்;
    வந்து சேரவே-அதனால்
    மனமும் சரியில்லே (ஊரடங்கும்)

    [ரங்கோன் ராதா,1956]

    6.2 காதல் பலன்



    பெண் : வாடாத சோலை
    மலர் பூத்த வேளை
    வளர் காதலாலே
    மனம் பொங்குதே! (வாடாத)

    ஆண் : தாமரைப் பூ மேலே
    தாவிடும் மீன் போலே
    காமினி நீயென்
    கருத்தினில் பாய்ந்தாயே

    பெண் : என் காதல் ராஜா,
    எழில் மேவும் நேசா
    மங்காத நிலவே இம்
    மாநிலம்..நாணிடும்..
    மாரனே..வாடாத

    ஆண் : குறும்பும் நியாயமே
    அரும்பே மாரனே!
    கரும்பே ஆசைக் காவியமே!..கரும்
    மாந்தளிர் மேனி
    வாய்த்த என் ராணி!

    பெண் : புகழ்ந்தினிக் கவிபாட
    போதாது நேரம்

    ஆண் : புது மடமயிலே வா
    போவோம் ஆற்றோரம்..

    பெண் : வாழ்வெனும் ஓடம்
    புதுப் பள்ளிக்கூடம்

    ஆண் : மாண்புயர் பாடம் கூறுது
    நேர்வழி சேருது..

    பெண் : ஆற்றோரம் மேவும்
    அடர்சோலை போல
    படர் காதலாலே
    பலன் காணுவோம்;
    சுடர் வீசி வாழ்வில்
    சுகம் காணுவோம் (ஆற்றோரம் மேவும்)

    [படித்த பெண்,1956]

    6.3 கடல் கடப்பேன்



    உனக்காக எல்லாம் உனக்காக-இந்த
    உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
    எதுக்காக கண்ணே எதுக்காக?-நீ
    எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?

    கண்ணுக்குள்ளே வந்து
    கலகம் செய்வதும் எதுக்காக?-மெள்ளக்
    காதுக்குள்ளே உந்தன்
    கருத்தைச் சொல்லிடு முடிவாக (உனக்)

    பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா?-இல்லே
    பயித்தியமாய்ப் பாடி யாடி நடிக்கணுமா?
    துள்ளிவரும் காவேரியில் குளிக்கணுமா?-சொல்லு
    சோறுதண்ணி வேறுஏதுமே இல்லாமெ
    கெடக்கணுமா (உனக்)

    இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
    இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்;
    மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் இடி
    மின்னல் மழைபுயலானாலும் துணிஞ்சு
    இறங்கிடுவேன் (உனக்)

    [புதையல்,1957]

    6.4 ஆசைக்குப் பேதமில்லை



    கண்ணுக்கு நேரிலே, கலை என்ற தேரிலே
    கைகொட்டி ஆடிவந்த காதலே.
    இன்னும் சந்தேகமோ?
    ஏனிந்த வேகமோ?

    மின்னலின் தோழி எந்தன் மீதிலே
    எண்ணங்கள் யாவும் அங்கே
    எழிலன்னம் நானும் இங்கே
    இனிவிட்டுப் போவதெங்கே?

    இனிவிட்டுப் போவதெங்கே
    முடிவைக் காணாமலே..
    சொல்லக் கூடாததெல்லாம்
    தோன்றும் இந்த நாழிகை

    பல்லக்கு போன்ற மங்கை
    பக்கம் வந்தால் வெட்கம் மீறாதோ?
    ஆசைக்குப் பேதமில்லை
    அதில் மட்டும் வேதமில்லை

    அறிவுக்கே வேலையில்லை
    குறிவைக்கும் போதிலே
    கொஞ்சம் பெண் மோகம் வெல்லும்
    நெஞ்சம் ஏது பாரிலே?

    கொம்புத் தேனான என்னைக்
    கொள்ளை கொண்டீர் வெள்ளையன்பாலே!

    [அல்லாவுதீனும் அற்புதவிளக்கும்,1957]

    6.5 நாணம் எதற்கு



    ஏதுக்கோ?....
    இருவிழி மருளும் நாணங்கள் ஏதுக்கோ? (ஏதுக்கோ)

    என்ன நினைவோ? இளமைத் துணிவோ?
    சின்ன வாயில் புன்னகை ஏதுக்கோ? ஏதுக்கோ?

    புன்னைக் கொம்பிலே புரளும் பூங்கொடி
    மண்ணில் சிந்திடும் வாச மலரும்,
    விண்ணோடு குலவும் கண்ணாடி நிலவும்
    வீணாகும் மௌனம் ஏதுக்கோ?
    வீசும் வேல்பார்வை ஏதுக்கோ?... (ஏதுக்கோ)

    ஓடைத் தாமரை ஏடுபோல்-முக
    சாடை காட்டிடும் தங்கக் கலசமே!
    ஒய்யார நிலையே உண்டாக்கும் சிலையே
    ஓயாத குறும்பும் ஏதுக்கோ?
    உல்லாச மயக்கம் ஏதுக்கோ? (ஏதுக்கோ)

    [சௌபாக்கியவதி,1957]

    6.6 ஆசை வளருது



    இல்லாத அதிசயமா
    இருக்குதடி ரகசியமா
    எதைநெனச்சி இவமனசு
    இப்படி யாச்சுதோ? (எதை)

    கண்ணுக்குள்ளே புகுந்திருந்த
    காதலனைப் பிரிஞ்சிருந்தா
    கவலைப்பட்டு மெலிவதுண்டு -அப்படியிருக்குமா?-இல்லை

    முன்னும் பின்னும் பழக்க மின்றி
    மொதன் மொதலாப் பாத்திருந்தா
    என்னென்னமோ பண்ணிடுமாம்-இப்படியிருக்குமா?

    சின்னஞ்சிறு பருவத்திலே
    ரொம்ப ரொம்ப ஆழத்திலே
    சிந்தனைகள்
    செல்வதுண்டு-அதாயிருக்குமோ?-இல்லை

    கன்னியரின் கனவினிலே
    காணுகின்ற கடலுக்குள்ளே
    எண்ணமீன்கள் மேய்வதுண்டு -இதாயிருக்குமோ?

    மன்னன் மேலே வெச்ச
    ஆசை வளருது-மனசு
    வண்டிச் சக்கரம் போலே
    சும்மா சுழலுது

    வேலையாய்ப் போனவரு
    வெற்றியுடன் வருவாரு
    மாலயிட்டு மணமுடித்து
    வாழ்விலின்பம் தருவாரு

    வாழைத் தோட்டம் போல தழைத்து
    மங்கலமாய் வாழ்வாரு
    மஞ்சுளா முகத்தினிலே
    மஞ்சளாகத் திகழ்வாரு

    வௌக்கி எடுத்த
    வெங்கலத் தவலை-உனக்கு
    என்னடி கவலை

    அந்த ராசாமகன் ராசாவுக்கு
    ராசாத்தியாய் ஆவதற்கு
    நல்ல நாளும் வந்து இருக்கு ஆனாலும்
    இந்த ராணிக்குத் தான்கொஞ்சம் கிறுக்கு (இல்லா)

    [கற்புக்கரசி,1957]

    6.7 விருந்துக்கு அழைக்குது



    ஓ....
    சின்ன மாமா!-ரொம்ப நேரமா-உன்னைத்
    தேடி மனசு வாடுறேன் குடிசையோரமா
    பொன்னுச்சரம் போட்டுகிட்டு-
    பூத்தமுகம் காட்டிக்கிட்டு
    வண்ணக்கிளி வந்திருக்கேன் வாசப்பக்கமா
    பொண்ணாளாம் என்னையே கண்ணாலம் பண்ணியே
    எந்நாளும் வாழவே ஏந்தான் தயக்கமோ? (சின்ன)

    ஆசை வீரா-மீசைக்காரா-பேசறீர் ஜோரா-மாறா
    நேசம் மறந்தீரா?
    வீசுங்காத்து விருந்துக் கழைக்குது
    வித்தாரக்குருவி முத்தாரங்கேக்குது (சின்ன)

    கண்ணாலே வெல்லும் மாது-நானே அது
    சொன்னாலே விளங்காது
    என்ன வேணும் ஏது வேணும்
    என்னைப் பார்த்துக் கேளுங்காணும்
    சொந்தக்காரி வேணுமா?
    சூழ்ச்சிக்காரி வேணுமா? (சின்ன)

    [சௌபாக்கியவதி,1957]

    6.8 சக்திக்குமேல் ஆசை



    ஓ கோ கோ மச்சான் நீங்களா?-இங்கே
    உள்ளே நுழைய வந்தீங்களா?
    கேக்காத கதையைக் கேட்டிங்களா?-அதை
    கேட்டிருந்தும் கேள்விகளைப் போட்டீங்களா!

    வண்ணமுக வெட்டழகி
    வட்டவிழிக் கட்டழகி
    சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா?-அவ
    அன்னநடை மின்னலிடை
    அத்தனையும் சேர்ந்து ஒரு
    பொண்ணாவந்து பொறந்திருக்கா புரியுமா?
    முத்தத்திலே மோடிகளிருக்கு
    கட்டிப்போடும்-கையை
    கட்டிப்போடும்-நித்தம்
    ரத்தத்திலே நீஞ்சிற சாத்தான்
    சத்தம் போடும்-மச்சான்
    சத்தம் போடும்
    சக்திக்கு மேல் ஆசையிருக்கு
    தடவிப்பார்க்க மீசையிருக்கு
    முத்திப்போன காதல் கிறுக்கு
    முளிச்சுக்ிட்டே குருடாயிருக்கு
    அவலை நினைச்சு உரலை உருட்டும்
    அயித்தை மவனைப் பாருங்கடி

    கவலை புடிச்சிக் கலங்குறாரு
    காலைப் புடிச்சி வாருங்கடி
    தவளை தத்துற நடை நடக்குற
    சங்கதி என்ன கூறுங்கடி
    கொவளை நிறைய தண்ணி வச்சு அதில்
    இவரைப் புடிச்சி போடுங்கடி
    குதிச்சு ஆடுங்கடி-வந்து
    கூட்டமாப் பாடுங்கடி
    மதிச்சு நடங்கடி-வடை
    மாலையப் போடுங்கடி

    போட்டிக்கு வந்தவரு
    மாட்டிக் கிட்டாராம்
    பொண்ணுக்குக் கிண்ணி வச்சு
    கோட்டை விட்டாராம்
    பூட்டிய வீட்டில்
    புகுந்து கிட்டாராம்
    பொட்டியைத் தேடி
    ஆளை மிதிச்சாராம்

    கத்தியைக் கண்டொருத்தர்
    காதல் கொண்டாராம்
    கையில் கொடுத்தவுடன்
    கண்ணீர் விட்டாராம்
    எத்தனை பேரோ
    ஏமாந்துட்டாராம்
    சத்திரவீரர் வித்தை
    காட்டுராறாம் (போட்டி)

    சந்தர்ப்பம் பாத்து ஒரு
    சாமி வந்தாராம்
    சக்தி நிறைஞ்சுதுண்ணு
    சாம்பல் தந்தாராம்
    மந்திரம் பண்ணி
    மயக்கப் பார்த்தாராம்
    மயங்காத கன்னி
    விலங்கைப் பூட்டினாளாம் (போட்டிக்கு)

    வாடி வாடி கட்டப்பொண்ணெ வாடி
    வந்திருச்சு ஜோடி மந்திரத்தை மீறி
    வாசலுக்கு முன்னாடி-ஹேய்
    கருப்போ சிவப்போ மச்சான்
    விரும்புறது பெண்தானடி
    கசப்போ இனிப்போ மச்சான்
    ஒம்மேலே ஒரு கண்தானடி
    பாரு பாரு பக்கம் வந்து பாரு
    ஊரு பேரு ஒனக்குச் சொல்லுவாரு
    ஒண்ணுமில்லே தகராறு-ஹேய் (கருப்போ)

    ஏது ஏது இது தெரியாது
    இருக்குது - காது
    எதுவும் கேட்காது
    எடத்தை விட்டு நகராது - ஹேய் (கருப்போ)

    வீரா-வீராதி வீரரான சூரா!
    மாறாத மோகங் கொண்டீரா?
    மாணோடுறவாட வந்தீரா?

    ஏறாத மாமலையில் ஏறி வேங்கையோடு
    போர் புரிந்து பெரும் பேறடைந்தோமென
    ஊர் திரும்பி விடுவீரா...?
    பாரினில் அதிகாரமுடைய
    நாரியரிடம் உமது சக்தி
    நீரினில் விழும் தீ!

    வேருடன் எல்லா விதிகளும்
    மாறிடும் ஒரு மங்கை சொல்லில்
    அதை மறந்தீரோ?-இத்தனை கேட்டும்
    அறிவிழந்தீரோ?

    ஓரக் கடலில் ஈரமிருந்தும்
    ஊன்றும் விதையதில் உயிர் பெறாது;
    உணர்ந்து திரிந்து ஓடினாலே
    உங்கள் உயிர் இனி உடலில் வாழும்
    அதை மறந்தீரோ-இத்தனை கேட்டும்
    அறிவிழந்தீரோ?

    [சௌபாக்கியவதி,1957]

    6.9 வண்டைத்தேடும் மலர்



    சிங்காரப் பூங்காவில்
    ஆடுவோமே
    தேனூறும் தென்பாங்கு
    பாடுவோமே!

    கன்னிப்பொண்ணு
    கலங்குது நின்னு
    என்னமோ எண்ணி
    சுழலுது கண்ணு

    அன்னந்தனைக் கண்டொருத்தன்
    ஆசைகொள்ளுறான்
    கன்னம் வச்சுக் கொண்டுபோக
    கனவு காணுறான்

    என்னைக் கொண்டு செல்லும்
    அந்தக் கள்ளன் யாரடி?
    எங்களுக்கென்ன தெரியும்
    சொன்னாத்தானடி

    வண்ண மலரடி முகம்
    வாடுவது ஏனடி?
    வண்டு வரவில்லை என்ற
    வருத்தந்தானடி (கன்னி)

    கையும் கையுந்தான் மேளம்-இந்தக்
    கணக்குக்குள் இருக்குது தாளம்;
    சதங்கைகட்டி -தாளத்தை ஒட்டிக்
    கும்மியுங்கொட்டிக்-கண்ணையும் வெட்டிப்
    பலபல கலைகளை அபிநயங்காட்டிப்
    பம்பரப் பெண்களின் நாட்டியப்போட்டி (கையும்)

    ஒன்னத்தானே,ஒன்னத்தானே,
    ஓ சின்ன மானே
    ஊமையானதேனடி?
    ஒண்ணுமில்லை போங்கடி
    கன்னத்திலே ரோஜா நிறம்
    காணுவதும் ஏனோ?
    காலம் செய்யும் வேடிக்கைக்கு
    காரணந்தான் நானோ?
    காணாத காட்சியை எல்லாம்
    கற்பனை பண்ணுதல் ஞாயமா?
    காணாம எப்படியம்மா
    கற்பனை வந்திடும் மாயமா?
    ஒன்னத்தானே- ஒன்னத்தானே (சிங்கார)

    [சௌபாக்கியவதி,1957]

    6.10 இன்பம் காணலாம்



    பெண்:

    சின்னப்பெண்ணான போதிலே
    அன்னையிடம் நான்ஒரு நாளிலே
    எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா?-அம்மா
    நீசொல் என்றேன்! (சின்ன)

    வெண்ணிலா! நிலா!-என்
    கண்ணல்லவா கலா!-உன்
    எண்ணம்போல் வாழ்விலே!
    இன்பம்தான் என்றாள்! (வெண்)

    கன்னிஎன் ஆசைக்காதலே!
    கண்டேன் மணாளன் நேரிலே!
    என்னாசை காதல் இன்பம் உண்டோ?-தோழி
    நீ சொல் என்றேன் (வெண்)

    கண்ஜாடை பேசும் வெண்ணிலா!
    கண்ணாளன் எங்கே சொல்நிலா!-என்
    கண்கள்தேடும் உண்மைதனை
    சொல்நிலவே என்றேன்!

    ஆண்:

    வெண்ணிலா! நிலா!-என்
    கண்ணல்லவா கலா!-உன்
    எண்ணம்போல் வாழ்விலே
    இன்பம் காணலாம்!

    [ஆரவல்லி,1957]

    6.11 மூடிவைத்த காதல்!



    ஆண் : மஞ்சப்பூசி, பூ முடிச்சி
    மங்கலக் குங்குமம் வச்சு
    கொஞ்சும் கிளி போலவந்த அஞ்சலே-ஒன்ன
    கோயிலுகட்டிக் கும்பிடப்போறேன்
    நெஞ்சிலே!

    பெண் : அக்கம்பக்கம் பார்க்காம,
    அனுமதியும் கேக்காம
    தெக்குச் சீமை ஆடுபோல கத்துறே-சும்மா
    சொக்குப்பொடி போட்டு என்னைச் சுத்துறே

    ஆண் : சங்கம் பழக் கொத்துபோல
    பொங்குகடல் முத்துபோல
    மங்கையே நீ சிரிச்ச-என்
    மனதைத் தட்டிப் பறிச்சு
    கண் கட்டி வித்தை காட்டிக்
    கையைக் கட்டிப் போடுறே
    கருப்பட்டிப் பேச்சுக்குள்ளே
    காதலைவச்சு மூடுறே (மஞ்ச)

    பெண் : சொல்லித்தான் தெரியணுமா?
    சும்மா கம்மா கிளறணுமா?
    கிறுக்குப்போல உளறணுமா?
    உள்ளத்திலே கள்ளத்தனம்
    கூடாதே மச்சான்;
    கோமாளி வேஷங்கள் போடாதே-வெறுங்
    கோணங்கி ஆட்டங்கள் ஆடாதே

    ஆண்: நீ பொல்லாத பொம்புளே,

    பெண் : என்னைப் புரிஞ்சிக்காத ஆண்பிள்ளே,

    ஆண் : அட
    எல்லாம் எனக்குத் தெரியும் பொண்ணே
    எதுக்கு இப்படி நீ தயங்குற-ஒன்னை
    ஏமாத்திட்டுப் போறாப்போல
    ஏக்கம்புடிச்சி மயங்குற

    பெண் : அடி ஆத்தே யாரும்
    பர்த்துகிட்டாக்கா பொல்லாப்பு!

    ஆண் : அட
    அதுக்கெல்லாம் நீ அஞ்சாதே-என்
    ஆத்தங்கரைத் தாழம்பூ! (மஞ்ச)

    [சௌபாக்கியவதி,1957]

    6.12 தடைபோடும் நாணம்



    இன்ப முகம் ஒன்று
    கண்டேன்-கண்டு
    எதுவும் விளங்காமல்
    நின்றேன்-அதை
    இரவே உன்னிடம் சொல்ல
    வந்தேன் (இன்ப)

    தேடாமல் அலையாமல்
    நேரிலே-சுகம்
    ஓடோடி வந்தது
    வாழ்விலே
    மனம் ஆனந்தம்
    பாடுவதேனோ-இது
    ஆரம்ப ஜாடைகள்
    தானோ-இன்று (இன்ப)

    தோன்றாத நினைவெல்லாம்
    தோன்றுதே-கண்கள்
    தூங்காமல் ஆசையைத்
    தூண்டுதே-அது
    ஏனென்று கேட்கவும்
    ஓடுதே-புது
    நாணம் வந்தே தடை
    போடுதே-பொங்கும் (இன்ப)

    [நான் வளர்த்த தங்கை,1958]

    6.13 பெண் தெய்வம்



    கற்பின் இலக்கணமே
    களங்கமில்லாத திலகமே!
    தீபமே பெண் தெய்வம்-உன்
    கண்ணிலே நீர்பெருகக்
    கவலையிலே மனம் உருகக்
    கடும் பயணம் போவதெங்கே?
    கடும் பயணம் போவதெங்கே?

    பெரும் பாசமே இழந்து-மனம்
    பாதியிலே ஒடிந்து
    உனதாசைக் கலசமே நொறுங்கியதா? (பெரும்)

    சொந்தமும் பந்தமும்
    சுகங்களும் அன்பும்
    சூழ்ந்து கொண்டே தினம் பாராட்டும்.. (சொந்த)

    இன்பமென் றுனை நம்பவைத்துமே
    இடையினில் ஏமாற்றும்-இதில்
    எத்தனை மாறாட்டம்? (பெரும்)

    காலத்தின் கைகளில்
    வண்டியும் மாடும்
    கண்ட திசையில்-அதன்
    மனம்போல் ஓடும்.. (கால)

    எங்கு சேருமோ
    என்ன ஆகுமோ
    இங்கில்லையோ கவனம்-எதுவரை
    உன் பயணம்? (பெரும்)

    [நான் வளர்த்த தங்கை,1958]

    6.14 பேசும் விழிகள்



    துடிக்கும் வாலிபமே
    நொடிக்குள் போய்விடுமே
    அதற்குள் காண்பதெல்லாம்
    ஆனந்தமே!ஆனந்தமே!

    வளையலின் நாதம்
    வாளோடு சிநேகம்
    வாழ்வின் உல்லாசம்
    மாமணம் வீசும்!

    எனதாசை போலே
    நடந்தால் மண்மேலே
    நாடாளும் ராஜா நீயே-அதனால்
    காண்பதெல்லாம் ஆனந்தமே!

    இனித்திடும் காலம்
    இளமையில் ஜாலம்
    மனத்தினில் புதுமையை
    வளர்க்குது மேலும்

    விழியாலே பேசும்
    அழியா நேசம்
    நிலம் மீதில் நீங்காததே!-அதனால்
    காண்பதெல்லாம் ஆனந்தமே! ஆனந்தமே!

    [மர்மவீரன்,1958]

    6.15 சிலைக்குள் தெய்வம்



    பறித்த கண்ணைப் பதித்துவிட்டேன்
    பத்தினியே நீ எந்தன் கணவன் கண்ணே
    எடுத்த கையால் கொடுத்து விடு
    ஏழைக்கு வாழ்வு கொடு!

    இதயக் கோயில் அடுத்தவளே! அருள்மணியே!
    அறங்காத்த தமிழ் மகளே! அம்மா உன்மேல்
    ஆணையிட்டுக் கேட்கிறேன்
    அன்பிருந்தால் பண்பிருந்தால் கண்கொடம்மா!

    ஏழைக்கு உன் அருள் எட்டாத சிகரமோ?
    இன்னமும் கண்கள் குருடோ?
    இரு செவியும் மந்தமோ-நான்
    அழுதகுரல் கொஞ்சமோ?
    இதயமும் கல்லானதோ?
    இரக்கம் பிறக்கவில்லையோ?

    வாய் திறந்து சொல்லம்மா?-உன்
    மகளின் கதையைக் கேளம்மா-துன்பம்
    வரை கடந்து போனபின்பும் மௌனமா?-நீதி
    முறை கடந்த நீயும் பெண்கள் தெய்வமா?

    பெற்றுதா வென்று வேண்டும்
    மதுரைத் திருநகரமதிர
    சிகரத்தோடு குரலும் உயர
    மறைகற்றவர் பதறப்
    பொறி சிதறிய நாவெங்கே?
    மகரக் கொடியும் கொற்றவன்
    மணி பொன் முடியும் கட்டொடு
    மண்ணில் வீழப்பொங்கிய மனமெங்கே? (வாய்திறந்து)

    கண்ணிலுதிரும் மலரெடுத்து
    கற்புநாரில் சரம்தொடுத்து
    அன்னையே உன் காலடியில் சாற்றினேன்-தினம்
    ஆலயத்தில் அன்பு விளக்கேற்றினேன்;
    உன்னை நம்பிநம்பி என்றும் போற்றினேன்-இன்று
    ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்;

    செம்பும் கல்லும் தெய்வமென்று
    நம்புவோர்கள் பித்தரென்று
    சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ?
    சிற்பிகள் செதுக்கி வைத்த
    சித்திரச் சிலைகளுக்குள்
    தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ?

    தனிச் சிலம்பெடுத்து
    ஊர்தழற்படச் சினத்தெரிந்த
    சக்தியுண்டெனப் படைத்த கர்வமோ?
    மனைச்சுகம் கெடுத்துகண்
    மணிச் சுடர்தனைப் பறித்து
    வாட வைத்தல் நீ வளர்த்த தர்மமோ?
    அம்மா..அம்மா..அம்மா...!

    [தங்கப் பதுமை,1958]

    6.16 விருந்து!



    மருந்து விக்கிற மாப்பிள்ளைக்கு
    விருந்து வைக்கணும் வாருங்கடி
    பறந்து பறந்து ஆடுங்கடி-நம்ப
    பழைய பாட்டைப் பாடுங்கடி

    மிரண்டு மிரண்டு முளிக்கிறாரு
    விவரம் என்ன கேளுங்கடி
    விஷயம் புரிஞ்சு போகும்-அவர்
    பொட்டியைத் தொறந்து பாருங்கடி (மரு)

    சூரணமா மாத்திரையா
    வேரைப் புடுங்கி அரைச்சதா
    பூரணமா குணந்தருமா
    பொதிகை முனிவர் லேகியமா

    என்னங்காணும் வைத்தியரே
    இப்படிநின்னா நடக்கும்
    சின்னப்பிள்ளை நடிக்கிறீங்க
    சிரிப்பில்கூட சிக்கனமா? (மரு)

    பொல்லாத மயக்கமுங்க
    சொல்லாமல்தான் வருதுங்க
    எல்லாமே கசக்குதுங்க
    ஈரமலரும் சுடுதுங்க
    என்னடி காசியம்மா
    இவருக்கு அது புரியுமா?
    சொல்லடியம்மா வியாதிகளை
    வெல்ல இவரால் முடியுமா? (மரு)

    அந்தப் புரத்திலே வைத்தியம் பார்த்து
    அனுபவம் இருக்கா இல்லையா?-அவள்
    தங்கக் கரத்திலே நாடி பார்க்கவும்
    தைரிய மிருக்கா சொல்லையா?

    இன்பக் குளத்திலே ஏக மலராக
    இருப்பவள் எங்கள் எஜமானி-தினம்
    இளமை குலுங்க வரும் எழில்ராணி-அவள்
    அன்பு மனதிலே என்ன இருக்குதோ
    அறிந்து கொண்டால் நீர் பெரும் ஞானி

    யாருக்கும் விளங்காதவள் பாவி..ஓய்ஓய்ஓய்ஓய்
    கொஞ்சுவா கெஞ்சுவா அஞ்சினா மிஞ்சுவா
    மிஞ்சினா அஞ்சுவா கெஞ்சுவா கொஞ்சுவா
    தெரியுமா?

    ஆண் : சரியம்மா
    பெண் : மருந்து..பாடுங்கடி!

    [தங்கப் பதுமை,1958]

    6.17 கண்ணும் கண்ணும் பேசுது



    கண்ணோட கண்ணு கலந்தாச்சு
    காணாத இன்பம் கண்டாச்சு
    ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
    உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு (கண்ணோட)

    பொன்னான பொண்ணு தனியா நின்ன
    பொல்லாத காலம் கடந்தாச்சு
    கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
    பொன்னான நேரம் பொறாந்தாச்சு (கண்ணோட)

    சின்னஞ் சிறிசிலே அஞ்சு வயசிலே
    நெஞ்சிலே கொண்ட அன்பு-இளம்
    பிஞ்சிலே கொண்ட அன்பு-இப்போ
    என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
    பாராமலே வந்த வம்பு..எதிர்
    பாராமலே வந்த வம்பு (கண்ணோட)

    கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
    அன்னைக்கு வந்த அன்பு..அதில்
    என்னைக்கும் இல்லே வம்பு..அது
    என்னையும் உன்னையும் கேக்காமே
    இணைக்கப் போவுதே வம்பு..ஆஹா
    வேண்டாமே இந்த வம்பு (கண்ணோட)
    எங்கே
    என் இன்பம் எங்கே? என் இதயம் எங்கே?
    பகைவர் நடுங்கும் நடை எங்கே?-என்
    பக்கம் இருந்த பலம் எங்கே? (எங்கே)

    வீரமாமுகம் தெரியுதே-அது
    வெற்றிப் புன்னகை புரியுதே
    விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
    மேலும் மேலும் என் ஆசை பெருகுதே
    காதல் வளருதே! வாழ்வு மலருதே!

    [நாடோடி மன்னன்,1958]

    6.18 பார்த்து ரசிப்பேன்!



    ஆண் : பக்கத்தில் இருப்பே-நான்
    பாத்துப் பாத்து ரசிப்பேன்
    வெக்கத்திலே முழிப்பே-நான்
    விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன் (பக்கத்திலே)

    செக்கச் சிவந்திருக்கும்
    சிங்காரக் கன்னத்திலே
    செல்லமாக் கிள்ளிடுவேன்-நான்
    உள்ளதெல்லாம் சொல்லிடுவேன்
    (பக்கத்திலே)

    பக்குவம் தவறாத
    பரவக் கொண்டை மீன் போல
    பளிச்சிண்ணு துள்ளிடுவே
    பாஞ்சி மனசை அள்ளிடுவே (பக்கத்திலே)

    காவேரி ஓரத்திலே
    கால் பதுங்கும் ஈரத்திலே
    காலையிலே நான் நடப்பேன்
    கலப்பை கொண்டுகிட்டு,
    கட்டழகி நீ வருவே
    விதையைக் கொண்டுகிட்டு-நெல்லு
    விதையைக் கொண்டுகிட்டு (பக்கத்திலே)

    வாய்க்கா வெட்டின களைப்பிலே-நான்
    வந்து குந்துவேன் வரப்பிலே-புது
    மஞ்சள் நிறத்திலே, கொஞ்சும் முகத்திலே
    நெஞ்சைப் பறித்திடும் வஞ்சிக் கொடிநீ
    கஞ்சிக் கொண்டு வருவே-இன்பம்
    கலையத்திலே தருவே (பக்கத்திலே)

    பெண் : அப்புறம்?

    ஆண் : ஒரு வீர மகனைப் பெத்திடுவே..!

    பெண் : ஆளைப் பாருங்க!..

    ஆண் : நீ தாலாட்டத் தெரியாமே
    தவிச்சிடுவே-நான்
    தந்தானத்தாம் தாளம் போட்டுப் பாடுவேன்

    பெண் : எங்கே பாடுங்க..?

    ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
    அப்பா அம்மா சொன்னதைக் கேளு
    அறிவு வந்ததும் சிந்திச்சுப்பாரு
    அலட்சியமா இருந்திடாதே சின்னத் தம்பி
    அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி-நாட்டில்
    அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி

    பெண் : அப்புறம்..?

    ஆண் : நீ
    பக்கத்திலே இருப்பே-நான்
    பாத்துப் பாத்து ரசிப்பேன்

    [தேடி வந்த செல்வம்.1958]

    6.19 கலையான நிலை



    பெண் : கழனி எங்கும் கதிராடும்
    அழகு மங்கை சதிராடும்
    கலையான நிலைகாண வா..நீ வா வா
    கலையான நிலைகாண வா
    ஆண் : கலையத்திலே கஞ்சி கொண்டு
    கரையிலே வரும் பெண்ணைக் கண்டு-அங்கே
    கலப்பை தனை மறந்து உழவன்
    கலங்குகின்றானே!- நின்று
    மயங்குகின்றானே!
    பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் - ஒரு
    நொடிக்குள் அவனை இழுக்குதே..(கழனி)
    ஆடிவரும் நதியோரம்,
    ஆணும் பெண்ணும் வெகுநேரம்
    அழுக்கு நீங்கத் துணி துவைக்கும்
    வேகத்தினாலே - அவர்கள் நேசத்தினாலே
    ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும்
    அணைகளையும் தாண்டிவிடும்
    அரிய பெரிய ரகசியத்தை
    அறிந்திடலாமே - நாம்
    அறிந்திடலாமே!
    பெண் : எந்தன் மயிலே..மழை முகிலே
    ஆண் : இளங்குயிலே..அதன் குரலே
    இருவரும் : எழில் குலுங்கும்
    உலகை உணர்ந்திடுவோம்

    [திருமணம்,1958]

    6.20 மாறும் மனம்



    பெண் : ஆண்கள் மனமே அப்படிதான் - அது
    அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்)
    திருமணமாகிடும் முன்னே ஒன்றும்
    தெரியாதவர்போல் இருப்பாங்க
    திருமணமாகி மனைவியைக் கண்டால்,
    வெடுக்கின்னு முறைப்பாங்க

    ஆண் : ஹா! ஹா!

    பெண் : ஆண்கள் மனமே அப்படித்தான் - அது
    அடிக்கடி மாறும் இப்படித்தான்

    ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
    பேச்சும் போக்கும் இப்படித்தான் - இந்த (பெண்)
    மணமாகு முன்னே வாயும் பேசாமல்
    மதிப்பு மரியாதை தருவாங்க - திரு
    மணமானபின்னே வரிந்துகட்டிக் கொண்டு
    குஸ்திக்கும் வருவாங்க

    பெண் : ஓஹோ ஹோ ஹோ!

    ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
    பேச்சும் போக்கும் இப்படித்தான்

    பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
    அருகினில் வாருங்க

    ஆண் : ஓஹோ!

    பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
    எட்டியும் போவாங்க (ஆண்)

    ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
    பொறாமை யடைவாங்க

    பெண் : ஆமா!

    ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
    பொறுமையைக் குடைவாங்க (பெண்)
    பெண் : மானே தேனே என்பதெல்லாம் - ஒரு
    மாதம் சென்றதும் மாறிடுதே

    ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும் - ஒரு
    வாரம் சென்றதும் ஓடிடுதே

    பெண் : ஹா..ஹா..ஹா..
    ஆமைகளென்ற பெண்களை எண்ணி
    ஆட்டம் போடுவாங்க
    அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
    அடிக்கவும் துணிவாங்க! (ஆண்)

    ஆண் : இந்தப்
    பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
    பேச்சும் போக்கும் இப்படித்தான்

    [நான் வளர்த்த தங்கை,1958]

    6.21 பூமாலை போட்டவன்



    ஆண் : எழுந்தென்னுடன் வாராய்..சொக்கம்மா
    எழுந்தென்னுடன் வாராய்!

    பெண் : எங்கு என்னை அழைக்கிறாய்
    என் மம்முத ராஜா?

    ஆண் : என்னோட நீ வர
    ஏனடி தாமதம்?

    பெண் : ஏனென்று கேக்காதே
    கால்ரெண்டும் நோகுது

    ஆண் : நோகாமல் சுகமெல்லாம்
    தானாகப் பிறக்குமா!

    பெண் : போகாத ஊரெல்லாம்
    போனாத்தான் பொறக்குமா?

    ஆண் : (வசனம்) பெண்ணே,என் பொறுமையை
    சோதிக்காதே; ஆத்திரம் வந்தால் உன்னை
    என்ன செய்வேன் தெரியுமா?

    பெண் : (வசனம்) என்ன செஞ்சிடுவே..ஹூக்கும்

    ஆண் : கத்தியை உருவிக் குத்திடுவேன் - உன்னை
    கண்டதுண்டாக வெட்டிடுவேன்

    பெண் : நிறுத்தய்யா.. நிறுத்தய்யா
    நேரங்கெட்ட நேரத்திலே
    ஊரை விட்டு ஓடுவது எதுக்கய்யா?

    ஆண் : வாண்ணா வந்திடடி...
    மரியாதை யில்லாதவளே
    ஏண்ணு கேக்காதே
    எதிர்த்துப் பேசாதே
    எட்டி விரட்டிடுவேன் - உன்னை
    விட்டுப் பிரிந்திடுவேன்

    பெண் : நீயே சகாயமென நினையாமல்..நாதா
    வாயால் மோசமே போனேன்-
    மதியாமல் பேதை
    மாயம் எதுவும் இல்லை
    வருத்தம் கொள்ளாதே என்னை
    மன்னித்தருள வேண்டும்
    வந்தனம் செய்தேன் ஸ்வாமி!

    ஆண் : பத்தினி ரத்தினமே
    பறந்துவந்த சீதனமே - என்
    உத்தரவு போல உத்தமி - நீயொரு
    உதவிதான் செய்யவேண்டும்

    பெண் : (வசனம்) என்ன உதவி செய்யணும்
    அப்படியே ஆகட்டும் ஸ்வாமி
    பூமாலை போட்டுப்போன
    மாமா வருவதற்குள்
    காமலை வந்ததய்யா வைத்தியரே
    மாமியார் வைத்துப்போன
    சாமானை வித்துத்தரேன்
    மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே

    ஆண் : கண்ணையிழந்தவளே
    கட்டழகுப் பெண்மயிலே - இந்தக்
    கைகண்ட மருந்தை - என்
    கை கொண்டு பூசினால்
    கண்கண்ட குணம் பெறலாம்

    பெண் : களிம்போ களிம்பு களிம்போ களிம்பு
    காயத்திலே பெருங்காய மிருந்தாலும்
    மாயமாய் மறைக்கும் களிம்பு
    வெள்ளைக் களிம்பு,கருங்களிம்பு,
    வீரக்களிம்பு
    சொல்ல முடியாத நோய்களுக்கும் - ஒரு
    சூரணமிருக்கு வாங்கிடுங்கோ - அதை
    பல்லில் படாமலே
    உள்ளுக்குப் போடணும்
    பாஷாணம் சேர்ந்தது பார்த்துக்குங்கோ
    (களிம்போ)

    [தங்கப்பதுமை,1958]

    6.22 தாலி கட்டும் வீரன்



    தோழிகள் : மானைத்தேடி மச்சான்
    வரப்போறான் - ஓ
    வரப்போறான்
    தாளத்தோட தாலி
    கட்டப்போறான் - ஏ
    காட்டப்போறான் (மானை)

    தலைவி : தாலிகட்டும் வீரனவன்
    யாரு? - ஏ
    எந்த ஊரு?
    மாலை கட்டவேணும்
    கொஞ்சம் கூறு - ஏ
    என்னபேரு? (மானை)

    தோழி : போதும் போதும் கேலி சும்மா போடி-ஏ
    பொடிவச்சுப் பேசும் வம்புக்காரி
    சின்னஞ்சிறு அன்னம் - நீ
    எண்ணும் பல எண்ணம்!

    தலைவி : முன்னும் பின்னுமாக வந்த பின்னும்

    1.தோழி : பிறகு என்ன பண்ணும்..
    2.தோழி : உறவு வந்த பின்னும்... (மானை)

    தலைவி : அழகிலே நடையிலே
    சுகமெல்லாம் நிறைந்து விடுமோ?

    தோழி : ஆசை பொங்கும் தோற்றம்
    அமுதூட்டும் பழத்தோட்டம்!

    தலைவி : என்னென்னமோ சொல்லி
    என் மனசைக் கிள்ளி
    இங்குமங்கும் ஓடவைக்கும் கள்ளி

    1.தோழி : பருவம் வந்து துள்ளி

    2.தோழி : உருகுறாளே வல்லி.. (மானை)

    [நாடோடி மன்னன்,1958]

    6.23 சேவை



    வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
    நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே
    தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு
    சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

    அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
    அருமையான பருவம் கொண்டு
    அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்
    ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்
    தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்
    நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
    பல..விந்தையான வார்த்தை வீழும் காதிலே
    விட்டுப்போனபோது அழுதவள்ளி
    புதுமையான நிலையில் - அல்லி
    பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்

    தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்
    சேற்றை வாரி வீசினாலும் வீசலாம் (வீடு)

    [பதிபக்தி,1958]

    6.24 பகைக்குரல் மாறுதே!



    வம்பு மொழி மாறி மாறி
    அன்பு மொழியானதே
    இன்பவழி நாடும் விழி
    என்னை மீறுதே (வம்புமொழி)

    மடை தாண்டும் மீனைப்போல
    மனம் தாண்டி ஓடுதே..ஆ..
    மழை கண்ட பயிர்போல
    மகிழ்ச்சி கொண்டாடுதே..
    இளந்தென்றல் வீசுதே
    என்னென்னமோ பேசுதே
    என்மேல் மணம் தன்னைப் பூசிடுதே..ஆ..ஆ
    அன்புக்கடல் ஓரத்திலே
    ஆசை அலை மோதுதே
    இன்பத்திலும் இன்பம்வந்து என்னைமீறுதே (வம்புமொழி)

    வீம்பு செய்த பேதமெல்லாம்
    கூன்விழுந்து போகுதே
    பாம்பிருந்த காட்டில் இன்று
    மான் புகுந்து ஆடுதே
    பகைக்குரல் மாறுதே!
    பண்புக்குரல் பாடுதே! - புதுப்
    பாடங்கள் கூறிடுதே!..ஆ..ஆ
    மூடிவைத்த உண்மையெல்லாம்
    நேரில் வௌியானதே!
    நீதியிடம் நேர்மைவந்து நேசமானதே!

    [பண்டித்தேவன்,1959]

    6.25 நல்ல துணைவன்



    துள்ளாத மனமும் துள்ளும்
    சொல்லாத கதைகள் சொல்லும்
    இல்லாத ஆசையைக் கிள்ளும்
    இன்பத் தேனையும் வெல்லும் - இசை
    இன்பத் தேனையும் வெல்லும்

    துன்பக் கடலைத் தாண்டும்போது
    தோணியாவது கீதம்;
    அன்புக் குரலில் அமுதம் கலந்தே
    அருந்தத் தருவது கீதம்

    எங்கும் சிதறும் எண்ணங்களையும்
    இழுத்து வருவதும் கீதம்
    இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
    இருளை மறைப்பதும் கீதம் (துள்ளாத)

    சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
    தோகை விரித்தே வளர்ந்திடும்
    சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
    தாவியணைத்தே படர்ந்திடும்

    மங்கை இதயம் நல்ல துணைவன்
    வரவு கண்டே மகிழ்ந்திடும்,
    உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
    உண்மை இன்பம் விளைந்திடும் (துள்ளாத)

    [கல்யாணப் பரிசு,1959]

    6.26 பெண் முகம் கண்ணாடி



    முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
    நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்! (முக)

    வகுத்த கருங்குழலை மழைமுகி லெனச் சொன்னால்
    மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என்முன்
    வளைந்து இளந்தென்றலில் மிதந்து வரும் - கைகளில்
    வளையல் இன்னிசை கேட்கலாம் - மானே உன் (முக)

    இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
    இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
    அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
    அகத்தினிலே அலைமோதும் ஆசையிலே இன்பம்
    ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
    இளமை பொங்கும் அங்கம் சிந்தும் அழகில்
    தங்கம் மங்கும் நிலையில் நின்று
    தன்னை மறந்து எண்ணம் கலந்து
    வண்ணத் தோகை மயிலெனச் சோலைதனில்
    பொழுதெல்லாம் மகிழலாம்;
    கலையெலாம் பழகலாம் - சதங்கையது
    குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும்
    குறும்பு படர்ந்திடும்

    [தங்கப்பதுமை , 1959]

    6.27 எண்ணக் கனவுகள்!



    உன்னைக் நினைக்கையில் கண்ணே
    எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி! (உன்னை)

    பொன்னை உருக்கிய வார்ப்படமே - அன்பு
    பொங்கிடும் காதல் தேன்குடமே!
    தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
    சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே
    சந்தனக் காட்டுப் புதுமலரே! (உன்னை)

    வட்டக் கருவிழி மங்கையே- ஒளி
    கொட்டும் நிலவுக்குத் தங்கையே!
    கட்டுக் குலையாத பட்டுத் தளிர் - மேனி
    கண்ணில் அபிநயம் காட்டுதே - இன்பக்
    காவியத் தேனள்ளி ஊட்டுதே! (உன்னை)

    [கல்யாணிக்குக் கல்யாணம்,1959]

    6.28 பருவம்



    சுகம் வருவது பாஸ்ட்டு - நம்ம
    சும்மாயிருந்திட்டா வேஸ்ட்டு
    மனம்தனில் நினைத்துபார்
    உணர்ந்து நடந்துபார் (சுகம்)

    பொலிவைத் தருவது பருவம் - முகப்
    பொலிவைத் தருவது பருவம் - அது
    போனால் மாறிடும் உருவம் - அது
    போனால் மாறிடும் உருவம்
    அழகைத் தருவது காலம் - உடல்
    அழகைத் தருவது காலம் - அதில்
    அடைந்த வரைக்கும் லாபம் (சுகம்)

    முகமும் முகமும் சந்திக்கும்போது
    முதலில் வருவது தயக்கம்,
    மோகம் வளர்ந்து சிந்திக்கும்போது
    மூளைக்குத் தருவது மயக்கம்
    முழுதும் தெரிந்து இதயம் கலந்து
    முடிவில் வருவது இணக்கம் - அதற்
    கிடையில் வருவது பிணக்கம் (சுகம்)

    [அவள் யார்?, 1959]

    6.29 கதை சொல்லும் தீபாவளி!



    உன்னைக்கண்டு நான்வாட,
    என்னைக்கண்டு நீவாட
    கண்ணீரும் கதைசொல்லும் தீபாவளி
    ஊரெங்கும் மணக்கும்
    ஆனந்தம் நமக்கு
    காணாத தூரமடா..காணாத தூரமடா

    நெஞ்சமும் கனலாகி
    நீராகும் போது
    நிம்மதி என்வாழ்வில்
    இனி ஏது?
    கொஞ்சிடும் மொழிகேட்டு
    மகிழ்ந்தவளெங்கே?
    குலத்தின் விளக்காய்த்
    திகழ்ந்தவளெங்கே?
    கண்ணுக்குள் நடந்த
    காட்சிகளெல்லாம்
    கனவாகிப் போனதடா..கனவாகிப் போனதடா..

    ஆசைக்கு அணைபோட்ட
    அறிவான நங்கை
    அன்புக்குப் பொருள் சொன்ன
    அருள் மங்கை!
    பாசத்தின் சுமையோடு
    பறந்து சென்றாளே
    பழகும் உனையும்
    மறந்து சென்றாளே
    கண்டதும் நினைவில்
    கொண்டதும் முடிவில்
    கதையாகிப் போனதடா..கதையாகிப் போனதடா...

    [கல்யாணப் பரிசு,1959]

    6.30 பொல்லாத காதல்



    கன்னித் தீவின்
    அழகு ராணி நான்
    கண்ணைக் கவரும்
    வண்ணமேனி தான்
    என்னைக் கொண்டால்
    இன்பம் காணலாமே- (கன்னித்தீவு)

    உல்லாசமான
    நேரம் வந்து
    பொல்லாத காதல்
    போதை தந்து
    உன்னோடு பேசும்
    மோகம் கொண்டு
    உள்ளம் வாடுதே (உல்லாசமான)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    6.31 பெண்ணென்ற கோயில்



    நானாடும் நாடகம்
    ரகசியந்தான் - போடும்
    நடையெல்லாம் நடனந்தான்
    சிங்காரந்தான் - இதை
    ரசிக்காத ஆளிருந்தால்
    அதிசயந்தான்! (ஐயா)

    என்னைக் கண்டாலே ஆனந்த லோகம் - உங்கள்
    கண் முன்னே தான்வந்து மோதும் - ரெண்டு
    கண்ணாலே யோகந்தான் முன்னாலே மோகந்தான்
    பெண்ணாலே தானின்ப வாழ்வே! (ஐயா)

    ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்
    அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில் - கண்டு
    ஆடாத ஆளில்லை பேசாத வாயில்லை
    பாடாத ஏடில்லை பாரில்!

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    6.32 மாறாத ஆசை



    மாந்தோப்பு வீட்டுக்காரி
    மானோடும் நாட்டுக்காரி
    ஏமச்சான் - வா மச்சான்
    ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன் (மாந்தோப்பு)

    பொல்லாத அத்தை மவன்
    புலியோட சண்டை போட்டான்
    இல்லாத ஆசைகாட்டி
    எம்மேலே கண்ணே போட்டான்

    வில்லை எடுத்து மச்சான்
    வேட்டைக்கு பயணம் வச்சான்
    சொல்லாமே ஒடி வந்தேன் - என்
    ஷோக்கு மச்சான்
    ஏ மச்சான் - வா மச்சான்
    ஒன்னைத்தான் தேடி மனம் வாடி வந்தேன் (மாந்தோப்பு)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    6.33 காதலர் நிலை



    பார் முழுதுமே நமது பேர் புகழுமே - நம்
    பேரழகில் இதயம் மகிழுமே!
    காவினில் விளையாடும்
    காதலர் நிலையாவும்
    காணப் பெரு மோகந் தரும் ஆனந்தமே
    சேல் விழியாலே - இனி
    தேன்மொழியாலே - நமது
    யாழ் ஒலியாலே - விளையும் பேரின்பமே!
    (பார் முழுதுமே)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    6.34 கண் மலர்



    அன்பு அரும்பாகி
    ஆசை மலராகி
    இன்பம் கனியாகி
    எதிர்பார்க்கும் வேளையிலே
    பண்பே என்வாழ்வில்
    பங்குகொண்ட மாமணியே - உங்கள்
    செம்பவழ வாய்திறந்து தேவையென்றால்
    என்ன அது? அத்தான்?

    தேன் வேண்டுமா? - இல்லை
    நான் வேண்டுமா?
    தேடிவந்த யோகமே
    தென்றலே என் இன்பமே! (தேன்)

    நாணம் உண்டு வீரம் உண்டு
    நல்ல குறள் பாடம் உண்டு
    கானம் பாடும் ஞானம் உண்டு
    அது வேண்டுமா?-இல்லை
    காதல் முத்தம் உண்டு
    அது வேண்டுமா? (தேன்)

    காதில் வந்து பேசிடவா?
    கண் மலரை வீசிடவா?
    கைகலந்த சந்தனம் உண்டு
    மெய்மறந்து பூசிடவா..?
    காதல் ரோஜா தந்து
    ஆனந்தம் கொண்டு ஆடிடவா..?
    ஊம்..(தேன்)

    [தலை கொடுத்தான் தம்பி,1959]

    6.35 நடக்கும் மின்னல்!



    கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
    கன்னம் ரோஜாச் செண்டு நிறம்!
    கலையே வடிவாய் வருவாள்
    அவளங்கம் தங்க நிறம்! (கண்)

    விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி
    மண்ணில் நடந்து வந்ததுபோல்,
    வண்ண மலர் மாலை கொண்டு
    வாழ்வினிலே ஆசை கொண்டு,
    வந்திடுவாள் நாணம் கொண்டு
    மணமகளும் நானே யென்று
    வாலிபரை அழகில் வென்று
    வாட்டிடுவாள் சபையில் நின்று (கண்)

    மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
    மேகத்தோடு சிநேகம் - குறி
    யாகப் பாய்ந்திடும் நாணப் பார்வைகள்
    வீரன் கணையிலும் வேகம்

    நளினநடை அன்னம் போலே
    நௌியும் இடை மின்னல் போலே
    ஆடை கொடி பின்னல் போலே
    அன்பு மொழி கன்னல் போலே
    நெஞ்சினிலே நேசத்தாலே
    நீந்திடுவேன் மீனைப் போலே!
    அங்கம் யாவும் தங்க நிறம்
    ஆசை உள்ளம் சங்கு நிறம்
    அழகே..வடிவாய் வரும்
    மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்

    அழகு விருந்தெனை அடைய நினைத்திடும்
    ஆண்மகனும் எவரோ..?
    அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும்
    அளவு தெரிந்தவரோ?

    பகைவரிடம் பல்லைக்காட்டித்
    தளபதியாய் வந்தவர் வேண்டாம்
    பாவையரை அருகில் வைத்து
    பார்த்து ருசி கண்டவர் வேண்டாம்

    கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட
    கண்கள் விரைந்திடுதே;
    இளமை குலுங்கிடும் இவரை மணந்திட
    இதயம் விரும்பிடுதே (அங்கம்)

    [அமுதவல்லி,1959]

    6.36 ஒன்றுபட்ட கணவனுக்கு



    ஒன்றுபட்ட கணவனுக்கு
    தொண்டு செய்து வாழ்வதற்கு
    உரிமை கிடைத்திடுமா சொல்? - வண்ணக்
    கிளியே - அன்பின்
    பெருமை நிலைத்திடுமா சொல்?

    கன்று நட்டு நீரிரைத்து
    கண் விழித்து காத்திருந்து
    பிஞ்சுவிட்டுக் கனியாகும் போதிலே - கிளையில்
    துண்டுபட்டால் என்ன பலன் வாழ்விலே? (ஒன்று)

    [தங்கப் பதுமை,1959]

    6.37 காதல் தோல்வி



    காதலிலே தோல்வியுற்றான்
    காளையொருவன்
    கடந்தபின்னே அமைதி
    எங்கு பெறுவான்? - காலம்
    கடந்த பின்னே அமைதி
    எங்கு பெறுவான்?

    அன்புமயில் ஆடலுக்கு
    மேடையமைத்தான்
    துன்பமெனும் நாடகத்தைக்
    கண்டு ரசித்தான் (அன்பு)

    இன்பத்தினை விதிக்கு
    இரை கொடுத்தான்
    இருந்தும் இல்லாத
    உருவெடுத்தான்

    [கல்யாணப் பரிசு,1959]

    6.38 அன்பு விதை



    காதலிலே தோல்வியுற்றாள்
    கன்னியொருத்தி
    கலங்குகின்றாள் அவனை
    நெஞ்சில் நிறுத்தி

    ஆசையிலே பாத்திகட்டி
    அன்பை விதைத்தாள்
    அல்லும்பகல் காத்திருந்து
    பயிர்வளர்த்தாள் (ஆசை)

    பாசத்திலே பலனைப்
    பறிகொடுத்தாள்
    கனிந்தும் கனியாத
    உருவெடுத்தாள் (காதலிலே)

    [கல்யாணப் பரிசு,1959]

    6.39 இல்லறம்



    ஆனந்தம் இன்று ஆரம்பம் - மனம்
    அன்பில் பிணைந்தால் - பின்
    அதுவே பேரின்பம் (ஆனந்தம்)

    ஆடும் கடலும் பொன்னி
    ஆறும் கலந்தது போல்
    கூடும் இவர்களிரு
    பேரும் தேடும் உயர் (ஆனந்தம்)

    மீனுடன் மானும் மங்கை
    விழிகளிலே துள்ளுதே
    விந்தை மிகும் மௌனம்
    வீரத்தை வெல்லுதே
    தேனைச் சுமந்த மலர்
    மாலைச் சுமந்த அவள்
    நாணிக் குனிந்த முகம்
    நல்ல பண்பைச் சொல்லுதே! (ஆனந்தம்)

    நல்ல குடும்பம் ஒரு
    பல்கலைக் கழகம் என்று
    தெள்ளு தமிழ்க் கவிஞன்
    தௌிவுரை சொன்ன துண்டு;
    இல்லறம் ஏற்பவர்கள்
    இதனை மனதில் கொண்டு
    இன்பமுடன் நடந்தால்
    வாழ்வுக்கு மிக நன்று (ஆனந்தம்)

    [கல்யாணிக்கு கல்யாணம்,1959]

    6.40 புது அழகு



    பெண் : புது அழகை ரசிக்கவரும்
    மனசுக் கெல்லாம் பெரும்
    ஆசை பொங்கும் நேரம் - இதில்
    ஆணும் பொண்ணும்
    கூட்டுச் சேர்ந்தா
    ஆட்டத்துக் கென்ன பஞ்சமா?
    (ஆணும் பெண்ணும்)

    காலையில் மலர்ந்த மலர்
    மாலையிலே உலர்ந்து விடும்
    மனிதர் வாலிபமும் அப்படியே
    வந்தது போல் சென்றுவிடும் - இதை
    இன்பமென்பார் சிலநாளிலே - கொடும்
    துன்பமென்பார் பலநாளில் - ஓ
    இன்பமில்லை துன்பமில்லை
    இயற்கையென்பார் ஒரு நாளில்
    ஆண் : வாழ்க்கையிலே பாதியை நாம்
    தூக்கதிலே கழிக்கலாமா! - ஆ!
    வந்தபோது கோட்டைவிட்டு
    போனபின் விழிக்கலாமா?
    பெண் : பல கவலை ஒழிந்திட இதயம் மகிழ்ந்திடக்
    கலையை விரும்பிட வேணுமே
    அமுத விருந்ததில் தோணுமே
    பெண்கள் உறவு கலந்திடுமே!
    ஆண் : கனிந்திடுமே
    பெண் : உறவு கலந்திடுமே
    வளர்ந்திடுமே கனிந்திடுமே!

    [அவள் யார்?,1959]

    6.41 காதலை ஏற்கும் நிலவு!



    ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும்
    பருவ மென்ற காவியம்!
    பார்க்க பார்க்க வளருமே
    காதலின்ப ஓவியம்! (படிக்க)
    பெண் : ஆ..ஆ..காதல் இன்ப ஓவியம்
    ஆண் : அடுக்கடுக்காய் எண்ணம் வரும்
    கண்கள் மட்டும் பேசும்
    பெண் : ஆ.ஆ.பேசும்
    ஆண் : அன்பு மனம் பொங்கி விட்டால்
    அங்கமெல்லாம் பேசும்! (படிக்க)
    தடுத்தவர்கள் வென்றதில்லை
    சரித்திரமே சொல்லும் - காதல்
    அடுத்தவர்கள் அறியாமல்
    ரகசியமாய்ச் செல்லும்! (படிக்க)
    பெண் : கள்ளமில்லாக் காதலரை
    வெண்ணிலவும் ஏற்கும்!
    காட்டில் வாழும் பறவைகளும்
    கானம்பாடி வாழ்த்தும்!
    பெண் : ஆ..ஆ.. கானம்பாடி வாழ்த்தும்!
    ஆண் : தொல்லை தரும் மனித குலம்
    சொல்லிச் சொல்லித் தூற்றும்;
    தூய்மையான உள்ளங்கைச்
    சூழ்ந்து நின்று வாட்டும்! (படிக்க)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

    6.42 தடையில்லை!



    ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
    காதல் படகும் விளையாடுதம்மா,
    ஆடும் படகினில் மருவிய கண்கள்
    பேசுவதும் பெருங்கதையம்மா!
    கதையம்மா! கதையம்மா!
    காதல் என்றொரு கதையம்மா! (காலம்)
    பெண்: காலம் என்றொரு ஆழக் கடலினில்
    காதல் படகும் விளையாடி வர,
    ஆடும் படகினில் மருவிய கண்கள்
    பேசுவதும் ஒரு கதை தானோ?
    கதை தானோ? கதை தானோ?
    காதல் என்பது கதை தானோ? (காலம்)
    ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே - மானே
    காயான வாழ்வு கொண்டேன்
    என் செய்வேன் நானே
    பெண் : பொருந்தாத நேசம் இல்லை
    பொய் ஏதும் இல்லை
    இருந்தாலும் இன்பமில்லை!
    ஏன் இன்பம் இல்லை!
    ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி
    உறவினில் ஒன்றும் குறைவில்லை
    உண்மையில் அடி பெண்மயிலே - உன்
    உரிமையில் என்றும் தடையில்லை (காலம்)

    [அமுதவல்லி,1959]

    6.43 இல்லற ஓடம்



    பெண் : இன்று நமதுள்ளமே - பொங்கும்
    புது வெள்ளமே
    இல்லற ஓடமிதே - இனி இன்பம்
    ஏந்திச் செல்லுமே!

    ஆண் : மங்கையர் குலமணியே
    மஞ்சள் முகந்தனிலே
    மகிழ்ச்சிகள் துள்ளுமே
    வந்தென்னை அள்ளுமே!

    பெண் : நேற்று நம்மைக் கண்ட நிலா
    நெஞ்சுருகிச் சென்ற நிலா
    வாழ்த்துகள் சொல்லுமே
    மனந்தனைக் கிள்ளுமே!

    ஆண் : வள்ளுவன் வழியினிலே - இனி
    வாழ்க்கை ரதம் செல்லுமே

    பெண் : கண்களில் ஊறும் நீரும் - இனி
    நம் நிலைகாண நாணும் - சுகம்
    கவிதை பாடிவரும்

    [தங்கப்பதுமை,1959]

    6.44 கதை கட்டுவார்



    ஆண் : நீயாடினால் ஊராடிடும்
    நானாடினால் யாராடுவார்?
    நீயாடினால் ஊராடிடும்
    நானாடினால் யாராடுவார்?
    மேல்நாடும் கீழ்நாடும் பார்த்தேன்
    ஆண்பாடப் பெண்பாடக் கேட்டேன்
    ஆனாலுன் போலெங்கும் காணேன்
    (நீயாடினால்)

    பெண் : சீமான்கள் கொண்டாடும் மேடை
    செண்டாலே காற்றெல்லாம் வாடை
    சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை
    கண் காட்டினால் கை தட்டுவார்
    கை காட்டினால் கதை கட்டுவார்

    ஆண் : கண்ட தெல்லாம் உண்மை
    காத்திருக்கு நன்மை
    காரியத்தில் கொஞ்சம் - கவனம்
    வையம்மா - கருணை
    வையம்மா

    பெண் : காரணம் இல்லாமலே
    கானமயிலாடுமா?
    கருத்தொண்ணும் புரியாமல் - அன்ன
    நடை போடுமா? - அன்ன
    நடை போடுமா?

    ஆண் : நீ பாடினால் நானோடுவேன்
    நானாடினால் ஊராடிடும்
    நீயாடினால் ஊராடிடும்
    நானாடினால் யாராடுவார்?

    [பாண்டித் தேவன்,1959]

    6.45 இன்ப வேகம்



    ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? - என்னை
    வாட்டிட ஆசை தானோ - பல
    கோடி மலரழகை மூடி வைத்து மனதை
    கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

    பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? - என்னை
    வாட்டிடும் கேள்விகள் ஏனோ? - புது
    மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
    மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

    ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
    அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
    அமுத விருந்தும் மறந்து போனால்
    உலகம் வாழ்வதும் ஏது? - பல
    உயிர்கள் மகிழ்வதும் ஏது? - நெஞ்சில்
    இனித்திடும் உறவை இன்பமெனும் உணவைத்
    தனித்துப் பெறமுடியாது

    பெண் : அந்தி நேரம் போனதால்
    ஆசை மறந்தே போகுமா?
    அன்புக் கரங்கள் சேரும்போது
    வம்பு வார்த்தைகள் ஏனோ?
    இன்ப வேகம் தானோ.? (வாடிக்கை)

    ஆண் : காந்தமோ இது கண்ணொளிதானோ?
    காதல் நதியில் நீந்திடும் மீனோ?
    கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ.?

    பெண் : பொறுமை இழந்திடலாமோ? - பெரும்
    புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
    கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
    வரம்பு மீறுதல் முறையோ.?

    ஆண் : சைக்கிளும் ஓட மண் மேலே - இரு
    சக்கரம் சுழல்வது போலே - அணை
    தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
    சேர்ந்ததே உறவாலே..

    [கல்யாணப் பரிசு,1959]

    6.46 பெரும் சுகம்



    குழு : வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி
    மகிழ்ச்சிக்குரிய நாளு இந்த தீபாவளி
    மனைவியும் கணவரும்
    மக்களோடு யாவரும்
    மங்களமாய்க் கொண்டாடும் தீபாவளி (வருஷத்திலே)

    மனசுக்குள்ளிருக்கிற கவலைகளெல்லாம்
    மறைந்திட வரும் நாளு!
    வாடிக்கையாகப் பட்டினி கிடந்தோர்
    வயிறு நெறையும் நாளு!
    நெனைக்க முடியாத காட்சிகளெல்லாம்
    நேரில் தெரியும் நாளு!
    நீண்ட காலமாய் ஆண்டுகள் தோறும்
    நிகழ்ந்திடும் பெரு நாளு (வருஷத்திலே)

    ஆண் : கண்ணே கண்ணுக்குள் நாடகமாடிடும்
    பெண்ணே இன்னமும் நாணமா?

    பெண் : எண்ணம் கலந்த பின் என்னைப் பிரிந்ததும்
    இன்பம் மறந்ததும் ஞாயமா?

    ஆண் : உன்னைப் பிரிந்து நான்,உன்னால் மெலிந்திடும்
    உண்மை மறந்ததும் ஏனம்மா?

    பெண் : இன்னல் தொடர்ந்தகதை, எல்லாம் மறந்தினி
    என்றும் பெரும் சுகம் காணலாம்

    இருவரும் : பொன்னும் வைரமும்போலே இணைந்துள்ளோம்
    பொங்கும் மகிழ்ச்சியில் ஆடலாம்

    பையன் : அக்கா...அக்கா...
    பட்டாசு வெடிக்கிற வேளையிலே..நீ
    படுத்துத் தூங்குறே மூலையிலே
    கட்டோடு வெடிக்கும்,கண்ணையும் பறிக்கும்
    கம்முன்னு அடைக்கும் காதுக்குள்ளே;
    தொட்டாலே போதும், கர்ருன்னும் சீறும்
    சுட்டாலே நோகும் சொல்லாமலே வேகும்
    எட்டாத ஊருக்கும் இதாலே பேரு
    விட்டாலே ஜோரு வேடிக்கை பாரு! (வருஷத்திலே)

    [கல்யாணிக்குக் கல்யாணம்,1959]

    6.47 ஆசை மனம்!



    பெண் : ஆசையினாலே மனம்

    ஆண் : ஓஹோ..

    பெண் : அஞ்சுது கெஞ்சுது தினம்

    ஆண் : ஊஹூம்

    பெண் : அன்பு மீறிப் போனதாலே
    அபிநயம் புரியுது முகம்

    ஆண் : ஐ..ஸீ..

    பெண் : ஆசையினாலே மனம்
    அஞ்சுது கெஞ்சுது தினம்
    அன்புமீறிப் போனதாலே
    அபிநயம் புரியுது முகம்!

    பெண் : நாணம் கொண்டு ஓடும் கண்கள்
    தாளம் போடுதே - அதைக்
    காணும் தென்றல் காதில் வந்து
    கானம் பாடுதே..
    வேரில்லாத கொடிதனில்-

    ஆண் : ஓஹோ...ஹோ..

    பெண் : வாலில்லாத ஒரு அணில்

    ஆண் : ஆஹஹா..

    பெண் : ஆளில்லாத நேரம் பார்த்து
    தாவிப் பிடிக்குது கையில்

    ஆண் : ஸாரி..

    பெண் : மாலை என்ற நேரம் வந்து
    ஆளை மீறுதே..இளம்
    காளையொன்று காதல் என்று
    கண்ணால் கூறுதே,
    தேடிவந்த ஒரு துணை

    ஆண் : ஓஹோ..ஹோ

    பெண் : சிரிக்குது மயக்குது எனை

    ஆண் : ஆஹஹா..

    பெண் : மூடிமூடி வைத்த எண்ணம்
    நாடுதே சுகம் தன்னை

    ஆண் : ரியலி.. (ஆசையினாலே)

    [கல்யாணப் பரிசு,1959]

    6.48 இன்பம் தேடுது



    பெண் : துள்ளித் துள்ளி அலைகளெல்லாம்
    என்ன சொல்லுது? - பல
    துண்டு துண்டாய் எழுந்து - அது
    எங்கே செல்லுது..? (துள்ளி)

    ஆண் : கள்ள விழிப் பார்வைதனைக்
    கண்டு கொள்ளுது - கோபங்
    கன்னத்தில் கிள்ளிவிட்டுச்
    சிரிக்கச் சொல்லுது! (கள்ள)

    பெண் : தென் கடலின் ஓரத்திலே
    ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
    சின்ன சின்ன நண்டு வந்து
    என்ன பண்ணுது?

    ஆண் : அது நில்லாத வேகத்திலே
    அல்லும் பகல் மோகத்திலே
    நீண்ட வளை தோண்டிக்கிட்டு
    குடும்பம் பண்ணுது!

    இருவர் : இத்தனையும் நம்மைப்போல
    இன்பம் தேடுது - இதை
    எண்ணும்போது நமது மனம்
    எங்கோ போகுது!

    பெண் : கண்டதும் மலரில் வண்டு
    காதல் கொள்வதேன் - அது
    வந்து வந்து மெய்மறந்து
    மயங்கிப் போவதேன்?

    ஆண் : கண்டவுடன் காதல் கொள்ளும்
    காரணமும் ஏன்?
    சிங்கார மலர்த் தேன் - நான்
    கன்னிமலர் நாடியதும்
    வண்டு போலத்தான்..

    பெண் : பாக்குமரச் சோலையிலே
    பளபளக்கும் பாளையிலே
    பறந்து பறந்து குருவியெல்லாம்
    என்ன பின்னுது?

    ஆண் : அது வாழ்க்கைதனை உணர்ந்துகிட்டு
    மனசும் மனசும் கலந்துக்கிட்டு
    மூக்கினாலே கொத்திக் கொத்தி
    கூடு பின்னுது!

    பெண் : இத்தனையும் நம்மைப் போல
    இன்பம் தேடுது - இதை
    எண்ணும் போது நமது மனம்
    எங்கோ போகுது!

    [தலைகொடுத்தான் தம்பி,1959]

    6.49 பேசும் சிட்டு



    பெண் : கன்னியூர் சாலையிலே - பொண்ணு
    களைபறிக்கப் போகையிலே - அந்த
    சின்னமச்சான் சிவத்தகண்ணு - அவ
    பின்னாலே எதுக்கு வந்தான்?

    ஆண் : எதுக்கு வந்தான்..?
    சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
    ஒரு ஜாடையிலே
    உள்ளம் ரெண்டும் ஒன்னாச்சி - புது
    உல்லாசந்தான் கண்டாச்சு (சொல்)

    பெண் : சும்மா கிடந்த முல்லைக் கொடி
    துள்ளி எதுக்கு வாடுது?

    ஆண் : அது
    சுத்திப்படரக் கொம்பைத் தேடித்
    துடிச்சி துடிச்சி வாடுது

    பெண் : தூங்காம சிட்டு ரெண்டும்
    தொடர்ந்து என்ன பேசுது?

    ஆண் : அது
    ஜோடியான மகிழ்ச்சியிலே
    சொந்தக் கதையைப் பேசுது
    சொதந்திரமான கூடுகட்டி
    ஒரு மனமா வாழுது

    பெண் : அந்த நிலையும், இந்த நிலையும்

    இருவர் : சொந்த நிலையைக் கிளறுது

    பெண் : பொல்லாத ஆடு ஒன்று
    உள்ளே என்ன பாக்குது?

    ஆண் : புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்
    பொருத்தமான்னு பாக்குது?

    பெண் : பூங்குயிலும் யாருக்காக
    ஏங்கிக் ஏங்கிக் கூவுது?

    ஆண் : ஆண் குயிலைக் காணாமல்தான்
    அவசரமாக் கூவுது
    அன்பு மீறி மயக்கத்திலே
    அங்குமிங்கும் பாயுது

    பெண் : அந்த நிலையும்...

    ஆண் : இந்த நிலையும்...

    இருவர் : சொந்த நிலையைக் கிளறுது

    [பொன் விளையும் பூமி,1959]

    6.50 கண்ணால் அடக்குவேன்



    பெண் : அடக்கிடுவேன் - ஓய்
    அடக்கிடுவேன் - ஓய்
    அடங்காத காளையையும்
    அடக்கிடுவேன் கண்ணாலே
    ஆட்டம் போடாதே - ஓய்..
    சாட்டையிருக்கும் பின்னாலே

    ஆண் : மிரட்டிடுவேன் - ஏய்
    மிரட்டிடுவேன் - ஏய்
    மிரளாத உருவத்தையும்
    மிரட்டிடுவேன் கொம்பாலே
    வீணாத்துள்ளாதே - ஏய்
    வளைச்சிடுவேன் வாலாலே

    பெண் : துணிஞ்சி நின்னாப் புரிஞ்சிடுமே

    ஆண் : புரியல்லையே

    பெண் : துணிஞ்சி நினாப் புரிஞ்சிடுமே - உன்
    சுறுசுறுப்பும் துடிதுடிப்பும்
    குறைந்து போகுமே

    ஆண் : நெருங்கி வந்தா விளங்கிடுமே - உன்
    விறுவிறுப்பும் பரபரப்பும்
    விழுந்து போகுமே

    பெண் : பிடிச்சேன்னா விடமாட்டேன் - நான்
    புண்ணாக்கும் தவிடும் வச்சு
    தண்ணியும் காட்டிடுவேன்

    ஆண் : வெறிச்சேன்னா ஆபத்துத்தான் - நான்
    மேயாத பயிரையெல்லாம்
    மேஞ்சு காட்டிடுவேன்

    [அவள் யார்,1959]

    6.51 மயிலோ குயிலோ!



    ஆண் : ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
    மேடைகட்டி ஆடும் எழிலோ - இவள்
    ஆடைகட்டி வந்த நிலவோ - குளிர்
    ஓடையிலே மிதக்கும் மலர்
    ஜாடையில் சிரிக்கும் இவள்
    காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
    கூடுகட்டி வாழும் குயிலோ? (ஆடை)

    பெண் : துள்ளித் துள்ளி ஆடுமின் பலோக மங்கை
    சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை
    எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள்
    தள்ளிவிட்டுப் போனபின்னும் தேடிவந்தாள்
    கிளைதானிருந்தும் கனியே சுமந்து
    தனியே கிடந்த கொடிதானே..
    கண்ணாளனுடன் கலந்தானந்தமே - பெறக்
    காவினில் ஆடும் கிளிதானே

    ஆண் : ஓ..ஓ..
    அந்தி வெயில் பெற்ற மகளோ - குலுங்கும்
    அல்லிமலர் இனத்தவளோ - குன்றில்
    உந்தி விழும் நீரலையில்
    ஓடி விளையாடி மனம்
    சிந்தி வரும் தென்றல் தானோ?-இன்பம்
    தந்து மகிழ்கின்ற மானோ?

    பெண் : அன்பு மனம் கூடுவதில்
    துன்பம் இல்லை

    ஆண் : அஞ்சி அஞ்சி ஓடுவதில்
    இன்பமில்லை

    பெண் : வீணைமட்டு மிருந்தால்
    நாதமில்லை

    ஆண் : மீட்டும் விரல்கள் பிரிந்தால்
    கானமில்லை

    இருவரும்: இதயம் கனிந்து
    எதையும் மறந்து
    இருவர் மகிழ்ந்து உறவாட
    நன்நேர மிதே
    மனம் மீறிடுதே
    வனமாளிகை யோரம் ஆடிடுவோம்
    (துள்ளி)

    [அமுதவல்லி,1959]

    6.52 வௌிவேசம்!



    ஆம்பளைக் கூட்டம் - ஆடுற ஆட்டம்!
    அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் - அதை
    ஆரம்பிச்சாத் தெரியும் திண்டாட்டம் (ஆம்பளை)

    அடங்கிக் கிடக்கிறதும் பணிஞ்சு நடக்கிறதும்
    ஆக்கறதும் காக்கறதும் நாங்க - உண்
    டாக்கறதும் காக்கறதும் நாங்க - அதை
    அடிச்சுப் பறிக்கிறதும், அடுத்துக் கெடுக்கிறதும்
    அட்டகாசம் பண்ணுறதும் நீங்க (ஆம்பளை)

    ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
    யாரோ எழுதி வைச்சாங்க - அன்று
    யாரோ எழுதி வைச்சாங்க - அதை
    அமுக்கிப் பிடிச்சுகிட்டு விடமாட்டேன்னு
    ஆண்கள் ஒசந்து கிட்டாங்க - பெண்கள்
    ஆமை போல ஒடுங்கிப் போனாங்க (ஆம்பளை)

    மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
    மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு - இளம்
    மங்கையை முடிப்பதுண்டு, மண்டை
    வறண்டு - தன்
    கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
    கடைசியில் சாக மட்டும் உரிமையுண்டு - இதில்
    கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு
    (ஆம்பளை)

    கற்பின் பலமென்றும் கண்ணகி குலமென்றும்
    கச்சிதமா திட்டுவாங்க - அதை
    அச்சடிச்சும் காட்டுவாங்க - சொன்ன
    கருத்துக்கு மாறாகக் கற்பைக் களவாடக்
    கன்னக் கோலைத் தீட்டுவாங்க - அவுங்கக்
    கணக்கைப் புரட்டிப் பாருங்க..என்னங்க
    (ஆம்பளை)

    [புதுமைப் பெண்,1959]

    6.53 கேள்வியும் பதிலும்



    காசி : சவால் சவாலென்று
    சதிராடும் பொண்ணாளே - நெஞ்சில்
    தன்மானத் துணிவிருந்தால்
    தாண்டிவா, முன்னாலே!

    ஹரி : அடி சக்கேன்னானாம்!
    வாய்யா வா! பொண்ணு, ஆடட்டும்

    மாலா: பார்த்தாலே கண்ணடிமை - என்
    பக்கம் வந்தால் நெஞ்சடிமை - என்னைப்
    போட்டியில் வென்றவர்கள் - இந்தப்
    புவிதனிலே யாருமில்லை! - அய்யா!
    சரியாத் தெரிஞ்சா சவால் விடு!
    சரக்கு இல்லாட்டா சலாம் கொடு!

    ஹரி : இந்தாய்யா! முதல்லே நீ போடு
    கேள்வியை
    பதிலை பிச்சுபிச்சு வைக்கிறோம்

    காசி : காடும் வளமுடைய நாடும் - பல
    காத தூரமும் கடந்து ஓடும்,
    வளைந்து கலைந்து
    பிரிந்து பின்னும் கூடும்,
    நினைந்தபடி கண்ட பக்கம்
    சுற்றிவரும் - அது என்ன?

    ஹரி : இவ்வளவுதானா நாயி!

    சிவன்: சும்மா இருடா,முந்திரிக்கொட்டை!

    மாலா : மேட்டிலே நிற்காது
    வேற்றுமை பார்க்காது
    காட்டுப் பயிர்களைத்
    காணாவிட்டால் வாழாது,
    நாடெல்லாம் சுற்றி வரும்
    நன்மைதரும் அதன்பேரு
    நதியய்யா எந்தன் பதிலய்யா!

    ஒருவன் : காட்டம்மா உன் கைவரிசையை

    மாலா : ஆளைக்கண்டு மருண்டோடும்
    மானுமில்லை - ரொம்ப
    ஆழத்திலே நீந்திவரும்
    மீனுமில்லை
    அங்கெல்லாம் பாய்ந்துவிடும்
    அம்புமில்லை
    மலரில் அல்லும் பகலும் வட்டமிடும்
    வண்டுமில்லை.

    சிவன் : என்ன சாமி அது?

    ஹரி : முழிக்கறியே இப்போ ஒத்துக்கிறியா?

    காசி : தூர இருந்து கொண்டே
    தொடாமல் திருடுவதும்,
    சுற்றிவிட்ட பம்பரம் போல
    சுழன்றுவிட்ட பம்பரம் போல
    சுழன்று வட்டம் போடுவதும்,
    வீரர்களும் மயங்க..மோக
    வலை வீசுவதும்..காதல்
    விளையாடுவதும் கண்களம்மா!

    சிவன் : கண்கள்

    ஹரி : கண்கள்..சொல்லிப்பிட்டாரே

    காசி : ஏனம்மா!
    நான் கேட்கும் கேள்விகளுக்கும்
    பதில் சொல்?

    ஹரி : ஓ!

    காசி : பாம்புத் தலையில் தகதகதிமி
    பார்த்தன் தேரில் ஜகண ஜண ஜண
    பானை கடகட உரலும் தட தட
    பார்வை திருதிரு, மேனி கருகரு
    பொருளும் என்ன?..உன்
    பதிலும் என்ன?

    மாலா : பாம்புத்தலையில் நடனமாடி
    பார்த்தன் தேரில் சங்கு முழக்கி,
    பானை உடைய வெண்ணெய் திருடி
    உரலிலே கட்டுண்டு கிடந்தவன்
    கமலக் கண்ணன்!
    கார்மேக வண்ணன்!

    காசி : விபரமறியாத கன்னிப் பெண்ணுக்கு
    வெட்கம் வருவது எப்போது?

    குழு : அது எப்போது?

    மாலா : விளையாட்டாய் அவள் திருமணம் பற்றி
    உரிய தோழிகள் பேசும்போது

    காசி : ஓயாமல் பேசும் மங்கையர் கூட
    ஊமையாவது எப்போது?

    குழு : எப்போது?

    மாலா : காயாத வண்ணக் கமலக் கையை
    காதலன் வந்து தொடும்போது

    காசி : தகதகவெனக் கண்ணைப் பறிக்கும்
    தண்ணீர் பட்ட உடனே கருக்கும்
    சகல பேருக்கும் பொதுவாயிருக்கும்
    சாதி வேற்றுமை தன்னை ஒழிக்கும்
    சடசடவெனத் தாவி யணைக்கும்
    சருகைப் பிடித்து உணவாகப் புசிக்கும்
    அது என்ன?

    சொல்லட்டுமா? நானே சொல்லட்டுமா?
    தகதகவென கண்ணைப் பறிப்பதும்
    தண்ணீர் பட்ட உடனே கருப்பதும்
    சருகை விறகை உணவாகப் புசிப்பதும்
    அனலம்மா..நீ
    உணரம்மா!

    [கலைவாணன்,1959]

    6.54 வளைகாப்பு



    பெண் : மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
    மஞ்சள் நிற வளையல் இதுவாழ்வுதரும் வளையல்!
    மங்கலப் பெண்குலம் போட்டு வைத்தே மகிழும்
    குங்கும நிறத்தோடு குலுங்கும் திருவளையல்!
    வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
    மங்காத பச்சைநிறம் விளங்கும் எழில்
    வளையல் - தும்பை
    மலர் போன்று இரு மனமும்
    மாசின்றி வாழ்கவென
    வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்!

    குழு : அக்காளுக்கு வளைகாப்பு - அத்தான்
    முகத்திலே புன்சிரிப்பு
    அக்கம் பக்கம் கலகலப்பு - ஆரைப்
    பார்த்தாலும் சுறுசுறுப்பு
    தந்தானே தனத்தானே தான
    தானானே தையத்தானே

    பெண் : முத்துப்போலே பவழக்
    கொத்து போலே - இன்னும்
    மூணுமாசம் போனா மகன் பொறப்பான்!

    1-பெண் : பட்டுப்போலே தங்கத்
    தட்டுப்போலே - கரும்பு
    கட்டுப்போலே கெடந்து கண்ணைப் பறிப்பான்!

    பெண் : ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளைப்போலே
    உக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான்! அவர்
    கண்ணை முளிக்கிறாரு சும்மா கனைக்கறாரு
    என்னான்னு கேளுங்கடி சங்கதியைத்தான்!

    2-பெண் : அடி எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது
    என்னென்னமோ பேசுறாங்க ரெண்டு பேரும்,
    அதை வௌக்க முடியாது வெவரம் புரியாது
    வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம்!

    குழு : ஆ அடி ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்

    பெண் : தாலாட்டுப்பாடி இவ தாயாகி மகனுக்குப்
    பாலூட்ட நெருங்குது நாளு - அவன்
    காலாட்டி கையாட்டித்
    துள்ளுறதைப் பார்த்துப்புட்டா
    கீழே விடமாட்டாரு ஆளு - மகனைக்
    கீழே விடமாட்டாரு ஆளு! (அக்கா)

    [கல்யாணப் பரிசு,1959]

    6.55 மங்கையின் மகிமை



    வேல் வெல்லுமா - என்
    விழி வெல்லுமா
    வேல் வந்து விழி போலக்
    கதை சொல்லுமா? (வேல்)

    கதை சொல்லுமா - வாழும்
    வகை சொல்லுமா
    கடல்போல எழுந்தின்பக்
    கரை துள்ளுமா? (வேல்)

    கோழைக்கும் வீரத்தைக்
    கொடுப்பவள் மங்கை
    கொய்யாக் கனியாய்
    இருப்பவள் மங்கை

    வாழ்வினில் மோகத்தை
    வளர்ப்பவள் மங்கை - ஆண்
    மனதில் வீடுகட்டி
    வசிப்பவள் மங்கை

    மங்கைஎன் பார்வையில்
    மலையரையும் - பகை
    வாளும் ஈட்டியும்
    என்ன செய்யும்? (வேல்)

    கண்ணகி போல் நாளைக்
    கழிக்கவும் தெரியும்
    காதலை மாதவி போல்
    ரசிக்கவும் தெரியும்

    மன்னனைச் சகுந்தலைபோல்
    மதிக்கவும் தெரியும்
    மணிமேகலை போல
    வெறுக்கவும் முடியும்! (வேல்)

    [மஹாலட்சுமி,1960]

    6.56 இன்ப கீதம்



    ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே
    அச்சம் தேவையா?
    அன்னமே நீ இன்னும்
    அறியாத பாவையா? (அன்பு)

    பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால்
    அச்ச மாகுமா?
    அன்பு மனம் கனிந்தும்
    புரியாமல் போகுமா? (அஞ்சு)
    மாலை வெயில் மயக்கத்திலே
    மறந்திடலாமோ?
    மனைவி என்று ஆகுமுன்னே
    நெருங்கிடலாமோ?

    ஆண் : உறவானது மனதில்
    பணமானது நினைவில்
    இதை மாற்றுவதார் மானே
    வையக மீதில்? (உறவானது)
    காதலுக்கே உலகம் என்று
    கனவு கண்டேனே (காத)

    பெண் : நான்
    கனவில் கண்ட காட்சியெல்லாம்
    கண்ணில் கண்டேனே

    ஆண் : இது காவியக் கனவு

    பெண் : இல்லை காரியக் கனவு

    இருவரும் : புது வாழ்வினிலே தோன்றும்
    மங்கலக் கனவு
    அன்பு மனம் துணிந்து விட்டால்
    அச்சம் தோணுமா
    ஆவலை வௌியிட வெகு
    நேரம் வேணுமா?
    இருகுரல் கலந்து விட்டால்
    இன்ப கீதமே
    இன்னமுத வீணையும்
    அறியாத நாதமே! (இருகுரல்)

    [ ஆளுக்கொரு வீடு,1960]

    6.57 ஒரு விழிப் பார்வை



    பெண் : நெஞ்சில் குடியிருக்கும்
    அன்பருக்கு நானிருக்கும்
    நிலைமை என்னவென்று தெரியுமா?
    நினைவைப் புரிந்துகொள்ள முடியுமா? - என்

    ஆண் : கண்ணில் குடியிருக்கும்
    காதலிக்கு நானிருக்கும்
    கவனம் என்னவென்று தெரியுமா?
    கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? - என்
    கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமா?

    பெண் : என்றும் பேசாத தென்றல்
    இன்றும் மட்டும் காதில் வந்து
    இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

    ஆண் : ஓரவிழிப் பார்வையிலே
    உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
    ஒன்றும் தெரியாததுபோல் கேட்பதுமேனோ?

    பெண் : மலர்க்கொடி தலையாட்ட
    மரக்கிளையும் கைநீட்டக்
    கிளையில் கொடி இணையும்படி ஆனதுமேனோ?

    ஆண் : இயற்கையின் வளர்ச்சிமுறை
    இளமை செய்யும் கிளர்ச்சி முறை
    ஏனென்று நீ கேட்டால் யானறிவேனா?

    [ இரும்புத்திரை,1960]

    6.58 முற்றிய காதல்



    ஆண் : பெண்ணில்லே நீ பெண்ணில்லே
    காதல்நடிப்புத் தெரியாவிட்டால்
    பெண்ணில்லே
    ஆணில்லே நான் ஆணில்லே - அதைத்
    கற்றுக்கொடுக்க முடியாவிட்டால்
    ஆணில்லே

    பெண் : காதல் - ஆஹாஹா! காதல்

    ஆண் : ஆமாம் காதல்

    பெண் : காதலோ காதல்
    அது எங்கே கிடைக்கும், எப்படிக்
    கிடைக்கும்?
    இனிப்பா,புளிப்பா,கசப்பா, காதல்
    கசப்பா? (அது)

    ஆண் : ஆஹா!
    ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து
    உண்பதுதான் மெய்க் காதல் - இந்த
    உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும்
    உறவுக்குப் பேர்தான் காதல்!

    பெண் : கண்ணிரண்டும் மூடாமல்
    காத்திருந்தேன் -இரவில்
    காத்திருந்தேன்
    கதவைத் திறந்து வைத்துப்
    பார்த்திருந்தேன் - எதிர்
    பார்த்தேன்

    ஆண் : ஆஹா ஹோ காதல் வந்ததா?

    பெண் : இல்லை பூனை வந்தது

    ஆண் : என்னைப் பார் - கண்ணைப் பார்
    ஏக்கம் கலந்தது பார் (என்னைப்)
    இடுப்பை வளைத்து வெட்டிப்பார்
    இதயம் சுடுதா தொட்டுப்பார்
    பின்னே போ, முன்னே வா, பேசு, பாடு, ஆடு
    நேசம் வை, நீ நேசம் வை
    நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை

    பெண் : நேசந்தான் உன் நேசந்தான்
    நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்

    [ஆளுக்கொரு வீடு, 1960]

    6.59 அன்பு ஆசை



    பெண் : போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
    சேர்ந்து போட்டுக்கணும் - ஒலகம்
    புதுசா மாறும்போது பழைய
    மொறையை மாத்திக்கணும்

    ஆண் : போட்டுக்கிட்டா - ஆமா
    போட்டுக்கிட்டா - தாலி (போட்டுக்)

    பெண் : போட்டுக்கிடும் முன்னே நல்லா
    பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்,
    புடிக்குதான்னு கேட்டுக்கணும்

    ஆண் : புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
    ஆபத்திலே மாட்டிக்கணும் (போட்டுக்)

    பெண் : கழுத்திலே தாலி கெடந்தா
    காலிகூட மதிப்பான் - கொஞ்சம்
    கண்ணியமா நடப்பான் - இந்த
    கயிறு மட்டும் இல்லையின்னா
    கழுைபோல இடிப்பான்

    ஆண் : ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
    அடுத்த பொண்ணு மதிப்பா - கொஞ்சம்
    அடங்கி ஒடுங்கி நடப்பா - இந்த
    அடையாளம் இல்லையின்னா
    அசட்டுத்தனமா மொறைப்பா (போட்டுக்)
    இதுலே மட்டும் போடுற முடிச்சே
    இறுக்கிப் போட்டுக்கணும் - நல்லா
    இழுத்துப் பாத்துக்கணும் - அது (இதுலே)

    பெண் : எடையிலே பிரிஞ்சுக்காமே
    முறுக்கிப் போட்டுக்கணும்

    ஆண் : அதுலே ஒண்ணும் கொறைச்சலில்லே
    அழுத்திப் போட்டிருக்கு - உண்மை
    அன்பு ஆசை ரெண்டும் சேத்து
    முறுக்கிப் போட்டிருக்கு - மூணு
    முடிச்சாப் போட்டிருக்கு (போட்டுக்)

    பெண் : பொறப்பு வளப்புச் சட்டம்

    ஆண் : நாம - சேந்து போட்டுக்கணும்

    பெண் : பொழப்பு இருப்பு நோட்டம்

    ஆண் : அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்

    பெண் : அட - வரவு செலவுத் திட்டம்

    ஆண் : ஒண்ணா சேந்து போட்டுக்கணும்

    பெண் : நம்ம வழக்கமான ஆட்டம்

    ஆண் : ஹா..ஹா..ஹா.. (போட்டுக்)

    [வீரக்கனல்,1960]

    6.60 பெண் உறவு!



    பெண் : மங்கையரின்றித் தனியாக
    வந்தவர் கிடையாது
    பெண்கள் : தந்ததும் பெண்ணையா
    கொண்டதும் பெண்ணையா
    சந்தேகம் என்னையா?
    சம்மதம் என்ற மொழி கேட்டாலே
    பெண் : சஞ்சலம் தீர்ந்துவிடும் கூட்டாலே
    பெண்கள் : சந்திப்பு ஓயாது
    பெண் : சிந்திக்கத் தோணாது
    பெண்கள் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா
    பெண் : சிந்தனைக் காரரோ, யோகியோ
    செய்வதேதும் அறியாத ஞானியோ?
    காதல் உறவினில்
    பெண்கள் : பேதமில்லை
    பெண் : பாசம் இணைந்தபின்
    பெண்கள் : பாவமில்லை
    பெண் : சந்திப்பு ஓயாது
    பெண்கள் : சிந்திக்கத் தோணாது
    பெண் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா
    (மங்கையரின்றி)

    [குமார ராஜா, 1961]

    6.61 மணமகள்



    மணமகளாக வரும்
    மங்கை எவளோ - என்
    மருமகளாயிருக்கத்
    தகுந்தவளோ? (மணமகளாக)

    குணமகளாய் விளங்கும் குலமகளோ - இனிய
    குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ (மணமக)
    மஞ்சள் குங்குமம் அணியும்
    வழக்கமுண்டோ? - நல்ல
    மனைவிக்குத் தேவையுள்ள
    அடக்கமுண்டோ? - நெஞ்சில்
    இரக்கம் உண்டோ?
    நேர்மை யுண்டோ? - அவள்
    நேசனுக்கதிக யோசனைபுகலும் நிலைக்கு நடக்கும்
    இணக்கம் உடையவளோ? (மணமகளாக)

    பொறுக்கி எடுத்த
    முத்துக் கருத்தைக்
    தொகுத்து வைத்த
    திருக்குறள் முப்பாலும் படிப்பவளோ..ஆ..கனல்
    தெறிக்கக் கொதித்து மணிச்
    சிலம்பையுடைத்து நீதி
    தெரிவித்த கண்ணகியைத் துதிப்பவளோ..ஆ
    அன்புக்கணை தொடுத்துத்
    துன்பத்தினை விரட்டும்
    ஆற்றல் மிகுந்தவளோ..இசை

    [குமார ராஜா,1961]

    6.62 பொறுப்புள்ள பெண்



    நான் வந்து சேர்ந்த இடம்
    நல்லயிடந்தான் - இதை
    நம்பவைக்கும் பொறுப்பு
    அன்பிடந்தான் (நான்)

    ஏனென்று தோன்றவில்லை
    எதிர்பார்த்து வந்ததில்லை
    இல்லாத அதிசயந்தான்
    இது ஒரு ரகசியந்தான் (நான்)
    அருமையுடன் வளர்த்து
    அறிவுள்ள பெண்ணாக
    ஆக்கித்தரும் பொறுப்பு அன்னையிடந்தான் - குலப்
    பெருமைதனைக் காத்து
    பெற்றவர் மனம் நாடும்
    பேரைப் பெறும் பொறுப்பு பெண்ணினிடந்தான்
    (நான்)
    எனக்கும் புரியாமல்
    அவர்க்கும் புரியாமல்
    இடையில் துணிவுவந்த விந்தையாலே
    எப்படியாகுமென்றும்
    எங்குபோய் நிற்குமென்றும்
    எண்ணவும் முடியவில்லை சிந்தையாலே - இன்று
    (நான்)

    [குமார ராஜா,1961]

    6.63 நன்றி கூறும் தென்றல்



    பெண் : உள்ளங்கள் ஒன்றாகித்
    துள்ளும் போதிலே
    கொள்ளும் இன்பமே
    சொர்க்கம் வாழ்விலே (உள்ளங்கள்)
    ஆண் : எல்லை மீறும் அன்பே
    செல்வம் ஆகுமே
    இளமை நேசமே
    மண்மேல் சுகமே! (எல்லை)
    பெண் : சிந்தும் செந்தேனும்
    சொல்லில் ஊறுமே
    தென்றல் வீசியே
    நன்றி கூறுமே
    இருவரும் : உள்ளங்கள்
    பெண் : கொஞ்சும் சோலைக்குருவி
    சொந்தம் பேசுமே
    குறைவில்லாமே
    எல்லாம் தருமே (கொஞ்சும்)
    ஆண் : பொங்கும் நீரோடை
    சந்தம் பாடவே
    கண்கள் ஆடுமே
    காதல் நாடகம்!
    இருவரும் : உள்ளங்கள்

    [புனர் ஜென்மம்,1961]

    6.64 பிரிக்க முடியுமா



    பெண் : என்னைப் பார்த்த கண்ணு வேற
    பெண்ணைப் பார்க்குமா?
    எண்ணம் கலந்த பின்னே இனி
    சொன்னாலும் கேட்குமா? (என்னைப்)
    பின்னிக் கிடக்கும் முல்லைக் கொடியைப்
    பிரிக்க முடியுமா - அன்பை
    பிரிக்க முடியுமா?
    கண்ணும் கண்ணும் கட்டின கூட்டை
    கலைக்க முடியுமா?
    பனியை நம்பி வெதை வெதைச்சா
    பலன் விளையாது
    பருவமழை நானி ருந்தால்
    பழுது வராது - அத்தான்
    வழியில் பார்த்து சிரிச்ச தெல்லாம்
    மனைவி யாகுமா?
    மலையைப் போல் வளர்ந்த காதல்
    மறந்து போகுமா? - சொன்ன
    வார்த்தை மாறுமா? (என்னைப்)
    ஆண் : உன்னை நினைக்க நினைக்கக் கண்கள் மலருது
    காணும் நினைவுமீறி உள்ளம் மயங்குது;
    உன்னைப் பார்த்த கண்ணு வேற
    பெண்ணைப் பார்க்குமா?
    உள்ளம் கலந்த பின்னே - இனி
    கொஞ்சினாலும் கேட்குமா? (உன்னைப்)

    [குமார ராஜா,1961]

    6.65 ஒற்றுமை கலைந்தால்..



    கனியிருக்கு விருந்து வைக்க
    காடிருக்குக் கூடுகட்ட
    கலந்துபேச நானிருக்கேன் வாங்க - சும்மா
    காத்திருக்க நேரமில்லே வந்திடுங்க
    ஓ..ஓ..ஓ.. (கனியிருக்கு)

    சின்னஞ்சிறு சிட்டுகளே
    சிங்காரப் பறவைகளே!
    தெம்மாங்குக் குயில்களே
    சிவந்த மூக்குக் கிளிகளே!
    தேனெடுக்கும் வண்டுகளே ஓடிவாங்க - நான்
    சேதியொண்ணு சொல்லப்போறேன் சீக்கிரம் வந்திடுங்க
    ஓ..ஓ..ஓ.. (கனியிருக்கு)

    ஓங்கிவரும் மூங்கில் மரம்
    ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு,
    ஒழுங்காக் குருத்துவிட்டு
    கெளை கெளையா வெடிச்சிருக்கு,
    ஒட்டாமெ ஒதுங்கிநின்னா ஒயர முடியுமா? - எதிலும்
    ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?
    ஓ..ஓ..ஓ.. (கனியிருக்கு)

    [எதையும் தாங்கும் இதயம்,1962]

    6.66 எண்ணத்தில் பொருத்தம்



    மொகத்தைப் பார்த்து
    முறைக்காதீங்க - சும்மா
    மொகத்தைப் பார்த்து
    முறைக்காதீங்க - பல்லை
    மூடிக்கிட்டுச் சிரிக்காதீங்க (மொகத்)

    பொண்ணிருக்கும் வீட்டுக்குள்ளே
    புகுந்திருக்கும் மாப்பிளே,
    போட்டியிலே ஜெயிச்ச நீங்க
    புதுமையான ஆம்பளே!

    என்னத்தான் புடிச்சிருக்கா
    இல்லையான்னு மனசுலே
    இருக்கும் ரகசியத்தை
    இழுத்துப்போடுங்க வௌியிலே (மொகத்)

    முன்னும் பின்னும் பழக்கம் வேணுங்க
    இங்கே வர்ரதுன்னா
    முறையிலேதும் நெருக்கம் வேணுங்க - எண்ணத்தில்
    பொருத்தம் வேணுங்க

    அது இல்லேன்னா இரண்டு பக்கமும்
    இன்பம் ஏதுங்க?
    அன்னம்போல நடக்குமுங்க
    ஆளைக்கண்டா பறக்குமுங்க
    என்னமோன்னு நினைக்காதீங்க - நான்
    சொல்லிப்புட்டேன்.. (மொகத்)

    [ விக்ரமாதித்தன், 1962 }

    6.67 வழி தேடும் காதல்



    என்றும் இல்லாமல்
    ஒன்றும் சொல்லாமல்
    இன்பம் உண்டாவதேனோ?

    எண்ணங்கள் பண்பாடுது
    கண்களும் எங்கோ வழிதேடுது - எது
    வேண்டியோ வாடுது ஆடுது

    மனம் என்னோடும் நில்லாமல்
    முன்னால் ஓடுது - என்
    வீசும் தென்றல் காதோடு
    பேசிடும் பாஷை நானறியனே

    வெறும் போதையோ
    ஆசையோ மாயமோ - இது
    விளங்காமல் வரும்
    காதல் விந்தைதானோ - என்

    [கலை அரசி, 1963]

    6.68 துணை தேடுதே!



    நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
    துடிப்பது ஏனோ?
    நிறைந்த உறவில் கனிந்த காதல்
    நிலையிதுதானோ?
    அணையை மீறும் ஆசை வெள்ளம்
    அறிவை மீறுதே
    அதையும் மீறி பருவகாலம்
    துணையைத் தேடுதே!..(நினை)

    சுவரில்லாத வீடுமில்லை
    உயிரில்லாத உடலுமில்லை
    அவரில்லாமல் நானுமில்லை
    அன்பு சாட்சியே!
    உனக்கு நானும் எனக்கு நீயும்
    உரிமைத்தேனேன்று
    கணக்கில்லாத கதைகள் பேசிக்
    கலந்ததை இன்று...(நினை)

    [கலை அரசி,1963]

    6.69 அன்பு வளருமா?



    பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும்
    மறந்து விடாதே
    அதுக்குமேலே வார்த்தையில்லே
    வருத்தப்படாதே
    மாமோய்..மாமா..மாமா..
    வம்புபண்ணி சண்டைக்கு நின்னா
    அன்பு வளருமா? - அது
    வளர்ந்தாலும் நீ நினைக்கிற
    இன்பம் மலருமா? (ஆசை)
    ஆண் : நீ திரும்பிப் பார்க்கும்போது மனசு
    திருட்டுப் போகுது - கண்ணே
    திருட்டுப் போகுது
    சம்மதத்தைச் சொல்லப் போறியா? - இல்லே
    என்னைச்
    சமயம் பார்த்துக் கொல்லப் போறியா?
    பெண் : ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
    காதல் எப்படி மொளைக்கும்? - ஒங்
    கனவு எப்படிப் பலிக்கும்?
    கையைத் தொடாதே
    கையைத் தொடாதே - மானம்
    காற்றிலே பறக்கும்
    மாமோய்..மாமா..மாமா..
    ஆண் : கணக்கு மீறி காடு இருக்குது
    அடுக்கு மாடி வீடு இருக்குது
    அதுக்கு மேலே பணம் இருக்குது
    மானே உனக்கு!
    அத்தனையும் பாதுகாக்கும்
    கவலை எனக்கு - நீ
    கல்யாண தேதி வைக்கிறியா? - இல்லே
    இப்போ
    காவிக்கடைக்கு ஆள் அனுப்பறியா?
    கண்ணே..கண்ணே..கண்ணே..
    பெண் : என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா?
    சும்மா இளிக்கிறியே
    சொன்னதெல்லாம் விளங்கலியா?
    உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா?
    வந்தாலும் ஒட்டாது
    கசந்துபோகும் வேப்பிலையா?
    மாமோய்..மாமா..மாமா..(ஆசை)

    [கலையரசி,1963]

    6.70 வளையல் போடும் சண்டை



    ஆண் : கலைமங்கை உருவம் கண்டு
    காதல்கொண்டு
    தணியாத மனைத உள்ளம் எங்கே உண்டு
    கண்ணே (கலை)
    கமல மலரை வென்று
    திகழும் முகத்தில் ரெண்டு
    கருவண்டு விளையாடும்
    காட்சி வேறெதில் உண்டு (கலை)

    பெண் : எழில் சிந்தும் இளமைகொண்டு நேரில்
    நின்று
    அலைமோதும் இன்பம் வேறெதிலே உண்டு
    வளம் பொங்கும் உருவம் கண்டு போதை
    கொண்டு
    மயங்காத மங்கையுள்ளம்
    எங்கேயுண்டு - அன்பே
    வளம் பொங்கும் உருவம் கண்டு..

    ஆண் : கைவளையல் போடும் சண்டை- எங்கும்
    கன்னலிசை பாடும் தண்டை - சுழலும்
    மை விழியில் மேவும் கெண்டை - வந்து
    மெய்யுருகப் பாயும் ஒன்றை

    பெண் : உள்ளம் இரண்டும் கனிந்து
    ஒன்றையொன்று கலந்தால்
    கொள்ளை கொள்ளும் இந்த
    வெள்ளம் போறாதோ
    துள்ளிவந்து ஆண்களை
    துணைதேடும்போது
    தூரநின்றே ஆட என்றும் வெண்கொடியே நீ

    ஆண் : எண்ணச் சோலையில் நின்று
    இருகரமும் இணைந்து படர்ந்து மகிழ
    எழில்வளர சுகம்விளைய மனம் மலரும்
    படர்ந்து நிரைந்து குலுங்க
    துணையென்னும் உறவினில் துணிந்திடும்
    நினைவினில்
    சுவைதரும் சுபதின நிலைபெறவே
    ஒருபுறமாட சிறுமயிலாட குளிரும்
    முகமே அருகினில் நெருங்க
    புதுநிறமே பெரும் தளிர்விரல் தரும்குறி
    அபிநயங்கள் விளங்க

    பெண் : அலைகடல்மேல் நிலவெனவே அனுதினமே
    தழுவி இனிய மலர் குலுங்க

    ஆண் : பனிமலரிதழ் அமுதினை அருந்த

    பெண் : பல கதைகளும் கவிதையும் முழங்க

    ஆண் : சுகம் வழங்க

    பெண் : மதி மயங்க

    இருவரும் : விரைந்து தனைமறந்து அணைகடந்து
    வரும்
    கலைபொங்கும் உருவம் கண்டு
    காதல்கொண்டு தணியாத மனிதவுள்ளம்
    எங்கேவுண்டு
    கலைபொங்கும் உருவம் கண்டு காதல்
    கொண்டு.

    [மகனே கேள்,1965]

    6.71 அழகு வந்தது



    பெண் : ஆட்டம் பொறந்தது உன்னாலே - அதில்
    அழகு வந்தது என்னாலே
    காட்சி நிறைஞ்சது பொன்னாலே - அந்தக்
    கலை வளர்ந்ததும் என்னாலே
    சத்தம் பொறந்தது தன்னாலே - அது
    சங்கீதமானது என்னாலே
    ஜாடை பொறந்தது கண்ணாலே - அது
    மேடைக்கு வந்தது என்னாலே
    ஆட்டம் ஐயா ஆட்டம்..(ஆட்டம்)
    நடை பொறந்தது தன்னாலே - அது
    நடனமானது என்னாலே
    நாடகம் சினிமா நளினம் கிளினம்
    எல்லாம் இதுக்குப் பின்னாலே
    ஆட்டம் ஐயா ஆட்டம் (ஆட்டம்)
    புதுபுதுஸா கலரைக் காட்டி
    பூ மலர்ந்ததும் பந்தலிலே
    மதிப்பும் மகுகும் மணமும் அதுக்கு
    மலிஞ்சிருக்குது கூந்தலிலே
    பளபளக்கிற பட்டுப் புடவைகள்
    ஒளிஞ்சிருக்குது கடையிலே - இப்ப
    மினுமினுக்கிற ஜரிகையோட
    சலசலக்குது இடையிலே
    ஆட்டம் ஐயா ஆட்டம் (ஆட்டம்)

    [மகனே கேள்,1965]

    6.72 பருவம் வாடுது



    லால லால லால
    பருவம் வாடுது இங்கே - உன்
    பார்வை எங்கே
    பாசம் தேடுது அங்கே - உன்
    பார்வை எங்கே
    கண் சுழலும் காதல் தொடரும்போது
    ஜோடியில்லாத மாடு நீ ஓடுவதேனோ
    வீணோ (பரு)
    பாடங்கள் சேர்ந்து மூளையிலே
    நாடகமாடும் வேளையிலே
    காதலை நாடிட நேரமில்லை
    சுகம் காணும் வழியில்லை
    உன் யோசனையும் என் வேதனையும்
    பெரும் சோதனைதான் போடீ
    கல்வியும் வந்து காதலும் வந்தால்
    கருத்தில் இடமேது
    உருவம் வாடுது இங்கே - என்
    உள்ளம் அங்கே
    இளமை மீறுது இங்கே - என்
    இன்பம் அங்கே
    வாலிபம் வரும் போதினிலே
    வாழ்விலே வரும் மோகம் - அதை
    மறந்தால் பறந்தே போகும் - நீ
    உணர்ந்தால் ஆனந்த மாகும்
    அன்பு மிகுந்து ஆசை வளர்ந்து
    அழகு குலுங்கும் வயதிலே
    அமைதியுமில்லை மனதிலே - உன்
    போதனையும் - என் காதலும் - ஒரு
    தேதியில் வௌியாகும்
    நான் துணிந்திடும்போது
    தொல்லைகள் ஏது சுகந்தான் புவிமீது
    உருவம் வாடுது இங்கே - என்
    உள்ளம் அங்கே
    இளமை மீறுது இங்கே - என்
    இன்பம் அங்கே
    உருவம் வாடுது இங்கே

    [ மகனே கேள்,1965 ]


    7. நகைச்சுவை



    7.1 குட்டு வௌியாகும்



    காப்பி ஒண்ணு எட்டணா,
    கார்டு சைசு பத்தணா!
    காணவெகு ஜோராயிருக்கும்
    காமிராவைத் தட்டினா!

    பிள்ளைக்குட்டி கூட நின்னு
    பெரிதாகவும் எடுக்கலாம் (பிள்ளை)
    பிரியம்போல காசு பணம்
    சலிசாகவும் கொடுக்கலாம்

    மல்லுக்கட்டி அழைக்கவில்லை,
    மனமிருந்தால் வந்திடலாம்,
    வயிறெரிந்த பேர்வழிங்க
    வந்தவழி சென்றிடலாம்

    தண்டவாளம் விட்டிறங்கி
    தத்தளிக்கும் எஞ்சினைப்போல்
    கொண்டவன் தனைமறந்து
    திண்டாடும் மங்கையரின்
    குட்டு வௌியாக்கிவிடும் ஸ்டில்லுங்க - கையில்
    துட்டுயிருந்தா ஸ்டெடியா நில்லுங்க,
    எந்தப் போஸில் வேணுமென்னாலும்
    எடுத்துத் தரேனுங்க - ஆனா
    எல்லோருக்கும் ஸ்டில்லை மட்டும்
    காட்டிடாதீங்க
    தனியா வந்தாலும்,
    கூட்டமா வந்தாலும்,
    சார்ஜ் ஒண்ணுதான் வாங்க - ஒரு
    சான்ஸ் அடிச்சுப்பாக்க வாருங்க (காப்பி)

    [படித்த பெண்,1956]

    7.2 வீட்டுக்குள் வீரம்



    கோபமா? - என்மேல்
    கோபமா?
    கோட்டுப் போட்ட சின்ன மச்சானே
    கோபமா? - பனங்
    காட்டுநரி சலசலப்புக்கு
    அஞ்சுமா?
    வீட்டுக்குள்ளே காட்டாதிங்க
    வீரமே! - கர்ணம்
    போட்டாலும் செல்லாது
    அதிகாரமே - குட்டிக் கர்ணம்
    போட்டாலும் செல்லாது
    அதிகாரமே! (கோட்டு)

    பந்தியில் முந்தும்
    வீரரே! - வெற்றி
    வீரரே! - வீராதி
    வீரரே!
    பந்தியில் முந்தும்
    வீரரே! - நீங்க
    படையிலே பிந்தும்
    சூரரே!
    பச்சோந்தி போல்மாறும்
    பண்பாளரே!

    ஏமாந்த ஆளிடம்
    வாலாட்டும் தீரரே!
    ஏனிந்த மௌனமோ
    சொல்வீரே!
    சாயாத ஜம்பம்
    சாயாது! (கோட்டு)

    நல்லபிள்ளை போலவே
    தன்னந் தனியாகவே
    கள்ளத்தனமாய் நாவல்
    படிப்பாரே!
    பள்ளிக்கூடம் சென்ற உடன்
    தூங்குவாரே!
    பகுத்தறிவைப் பறக்கவிட்டு
    ஏங்குவாரே! (கோட்டு)

    [குலதெய்வம்,1956]

    7.3 கடல் ஆழமும் பெண் மனமும்



    கையாலே கண்ணைக் கசக்கிவிட்டு
    இரண்டு சொட்டுக் கண்ணீராலே
    குற்றங்களைக் கரைத்துவிடக் கற்றவர்கள்
    வையாமல் திட்டாமல் மர்மமாய்
    உள்ளிருந்து செய்யாக் கொடுமையெல்லாம் செய்து
    பெயர் பெற்ற பெண்களை,
    நம்ப முடியாது நம்ப முடியாது; பெண்கள்
    பிடிவாதம் தீர்க்க முடியாது
    கடிகார முள்ளின் நடைபோல உள்ளம்
    கணமோரிடம் செல்லும் புவிமீது,
    கடலாழங்கண்ட பெரியோரும் பெண்கள்
    மனத்தாழங்காண முடியாது (முடியாது)

    பிள்ளைப் பூச்சியை மடியில் கட்டிக் கொண்டு
    புராணம் கேட்டவன் தன்னிலையும்,
    அல்லும் பகலும் நம்மைப் பொம்மைபோல்
    ஆட்டி வைக்கும் பெண்ணை
    அடைந்தவன் கதையும் ஒன்றாகுமே - அதனால்
    (முடியாது)

    வஞ்சகம் மூணவுன்சு,வம்புத்தனம் ஏழு அவுன்சு
    வறட்டுக் கவுரவமும் அரட்டைகளும் பத்தவுன்சு
    எஞ்சியுள்ள தங்கம்,வைரம்,புஷ்பம் தளுக்கும்
    குலுக்கும் மயக்கும் இனிப்பும் கசப்பும்
    எண்ணாயிரம் அவுன்சு கலந்ததொரு பெண்ணடா!
    அதை நம்பிக் கெட்டவர்கள் பல பேர்களடா!
    அந்த ஸ்டோரி ரொம்ப நீட்டமடா!
    அதை ஆராய்ந்து சொல்பவன் பாடு
    பெரும் திண்டாட்டமடா! - அதனால் (முடியாது)

    [குல தெய்வம்,1956]

    7.4 வேலையற்ற மச்சான்



    கோழியெல்லாம் கூவையிலே
    குறட்டை விட்டார் - வாய்
    கொப்பளிக்கும் முன்னே கொஞ்சம் காப்பியையும்
    குடித்துவிட்டார்
    குளிக்காமல் சாப்பிட்டு
    ஏப்பம் விட்டார் - தன்னைக்
    குழந்தைப் போல்
    எண்ணிவிட்டார் - எங்க
    சின்ன மச்சான் - இப்போ
    பட்டம்விடப் புறப்பட்டு
    விட்டாரய்யா - பட்டம்
    விட்டாரய்யா

    எட்டாத உயரத்திலே
    விட்டாரய்யா - பட்டம்
    விட்டாரய்யா - பறக்க
    விட்டாரய்யா

    வெட்டவௌி வானத்திலே
    விட்டாரய்யா
    வட்டமிடும் பறவைபோலே
    விட்டாரய்யா - பட்டம்
    விட்டாரய்யா

    ஆராரோ பட்டம் விட்டு
    பேராசை வட்டமிட்டு
    ஆடி ஓடி போனதைப் போலே
    விட்டாரய்யா - அணை
    கட்டாத ஏரி தண்ணி
    கடலொடு போனதுபோல
    கற்றதெல்லாம் காற்றோடு
    விட்டாரய்யா (விட்டா)

    டா பட்டம் டீ பட்டம்
    ஜமீன் பட்டம் சாமி பட்டம்
    ஜாதி பட்டம்! பஹதூர் பட்டம்
    லேடி பட்டம்! கேடி பட்டம்
    வாலறுந்து நூலறுந்து
    போன இடம் தெரியலை - இந்த
    வேலையத்த மச்சான் வெறும்
    காகிதப் பட்டம் கட்டி
    விட்டாரய்யா - ஓட
    விட்டாரய்யா

    [ குலதெய்வம்,1956]

    7.5 வெளுத்துக் கட்றாண்டி



    நந்தவனத்திலோர் ஆண்டி..அவன்
    வந்த இடத்தில் மங்கையை வேண்டி
    (நந்தவனத்தில்)

    வார்த்தையைக் கொடுத்துப்புட்டாண்டி..இவன்
    வம்பாக மாட்டிக்கிட்டு தொங்கப் போறாண்டி
    (நந்தவனத்தில்)

    காஷாயம் கட்டிக்கிட்டாண்டி..கொஞ்சம்
    காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டாண்டி (காஷாயம்)

    வேஷத்தை மாத்திக்கிட்டாண்டி...இப்போ
    வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றாண்டி
    (நந்தவனத்தில்)

    [ அரசிளங்குமரி,1957 ]

    7.6 காக்காய் பிடித்து!



    இருவர் : காயமேயிது மெய்யடா! - இதில்
    கண்ணும் கருத்தையும் வையடா!

    ஒருவன் : நோயும் நொடியும் வராமல் காத்து
    நுட்பமாக உய்யடா! (காயமே)

    மற்றொருவன்: ஆயுள் காலம் மனிதர்களுக்கு
    அமைப்பிலே யொரு நூறடா
    அரையும் குறையாய்ப் போவதவனவன்
    அறிவும் செயலும் ஆமடா!

    ஒருவன் : மாயமெனும் குயவன் செய்த
    மண்ணுபாண்டம் தானடா - இது
    மத்தியில் உடையாதபடி நீ
    மருந்து மாயம் தின்னடா (காயமே)

    மற்றொருவன்: வாயக்கெடுத்தது பசியடா

    ஒருவன் : அந்தப் பசியை கொடுத்தது குடலடா!

    மற்றொருவன்: இந்தக் குடலைச் சுத்தம் செய்திடாவிடில்
    உடலுக்கே சுகம் ஏதடா?

    ஒருவன் : சாயம் மாறி ரத்தம் வெளுத்தால்
    சக்தி கெட்டுப் போமடா!

    மற்றொருவன்: சக்தி கெட்ட மக்களுக்கு
    தரணி வாழ்வும் ஏதடா? (காயமே)

    ஒருவண் : கன்னப்புத்து,கண்டமாலை - மஞ்சக்
    காமாலைகளுக்கெல்லாம் மருந்துண்டு

    மற்றொருவன்: காசுமாலைபோடாமே கழுத்துச் சுளுக்குதுன்னு
    கண்ணீர்விடும் பொண்ணுக்கு மருந்துண்டோ?

    ஒருவன் : இல்லே

    மற்றொருவன்: இருக்கு

    ஒருவன் : அப்ப சொல்லு?

    மற்றொருவன்: மூசைத் தங்கத்தை கம்பி நீட்டி சூடுகாட்டி
    முதுகிலே ரெண்டு வாங்கினா! குணங்கிடைக்கும்

    ஒருவன் : ஜீவ சிந்தாமணி மருந்து

    மற்றொருவன்: சித்த வைத்திய மருந்து

    இருவர் : மருந்தோ மருந்து

    இருவர் : நாட்டு வைத்தியர்,காட்டு மூலிகை
    மருந்தோ மருந்து - நம்ம
    நாட்டு வைத்தியக் காட்டு மூலிகை
    மருந்தோ மருந்து - உடல்
    நன்மை காணவே
    உண்மையோடு - பலர்
    உண்டது - கை கண்டது (நாட்டு)

    ஒருவன் : ஏட்டு மூலமாய்ப் பதினெண்சித்தர்
    பாட்டாய்த் திருவாய் மலர்ந்தது (ஏட்டு)

    மற்றொருவன் : சிரேஷ்டமான
    இம்மருந்துகள் - ஒவ்வொருவீட்டிலும்
    இருப்பது நல்லது

    இருவர் : நாட்டு வைத்தியர் காட்டு மூலிகை
    மருந்தோ மருந்து,

    ஒருவன் : கரப்பான் சொறிபடை சிரங்குகளுக்குக்
    களிம்புகள் தருவோம் தடவிக்கலாம் (கரப்)

    மற்றொருவன் : காமசுரத்தால் கவலைப்படுவோர்
    கலியாண குளிகை சாப்பிடலாம் (காம)

    ஒருவன் : கஷ்டப்படாமல் சுகமாய் வாழ
    காயகல்பம் உண்டிடலாம் (கஷ்ட)

    மற்றொருவன் : அது கைவசமில்லை தற்கால சாந்திக்கு
    காக்காய்பிடித்து புசிக்கலாம் (நாட்டு)

    பாட்டுப்பாடும்
    தொண்டைகளெல்லாம்
    பாறைபோல கட்டிக்கிட்டா
    காட்டுக்குயில் சூப்புப் போட்டுச்
    சாப்பிடச் சொல்லுங்க!

    ஆட்டம் வராக் கால்களுக்கு
    மயில்காலுத் தைலம் போட்டு
    அரைமண்டலம் அழுத்தியழுத்தத்
    தேய்க்கச் சொல்லுங்க!

    பொறுக்காத பல்லுவலிக்கு
    சுருக்கத்திலே மருந்திருக்கு
    போக்கிரிகிட்டே வாயைக்குடுத்துப்
    பார்க்கச் சொல்லுங்கோ!

    கருப்பான தலைமுடியும்
    வெளுக்காமே இருப்பதற்குக்
    காக்காவை உயிரோடு
    முழுங்கச் சொல்லுங்கோ! - அண்டங்
    காக்காவை உயிரோடு
    முழுங்கச் சொல்லுங்கோ!
    மருந்தோ மருந்து மருந்தோ மருந்து
    மருந்தோ மருந்து (நாட்டு)

    [கற்புக்கரசி,1957]

    7.7 கலை!



    1 வது ஆள் : ஒன்...அண்ட் டூ...அண்ட் த்ரீ..அண்ட் ஃபோர்

    2 வது ஆள் : தை தை தை தை..தை..தை..தை

    1 வது ஆள் : ராக் ராக் ராக் ராக அண்ட்ரோல்
    ராக ராக் ராக் அண்ட்ரோல்
    ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட்ரோல் (ராக் ராக்)
    இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
    இண்டியன் டேன்ஸ்
    தை.தை.தை
    சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
    பர்மா டான்ஸ் டிங் டாங் டிங் டாங்
    லேடி டான்ஸ் ஜோடி டான்ஸ்
    பாடி பியூட்டிகள் பப்ளிசிட்டிகள்
    பாடி ஆடிடும் டான்ஸ்!

    2 வது ஆள் : ஆடினார் அன்றே ஆடினார்
    தில்லை அம்பலத்தே நின்று
    அரகரனாம் திரு நடன சபேசன்
    ஆடினார் அன்றே!
    அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
    நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
    அரங்கினில் ஆடினார் (அன்றே)

    1 வது ஆள் : ஸார்..ஸார்..ஸார்.. டோண்டு ஒரி ஸார்
    பார்.பார்.பார்.வேலைகளைப் பார்
    பாய்.பாய்.பாய்.படேபடே பாய்
    ரார்.டீடி.ரார்டி.டா
    கொம்பிலே பழம்பழுத்துத்
    தொங்குறதும் கலை!
    லவ்வுலே மனம் மயங்கி
    பொங்குறதும் கலை!
    வீதியிலே கர்ணம் போட்டு
    ஆடுறதும் கலை!
    மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்..
    கலை.கலை.கலை!

    2 வது ஆள் : கோபியர் கூடவே காவினி லாடிடும்
    குறும்புக்காரன் கோபாலன் நந்தபாலன்
    குழலோசை கேட்காத குறை செய்த காது
    குறைந்தென்ன வளர்ந்தென்ன
    ஒன்றுக்கும் உதவாது!
    ஆடினார் அன்றே

    [பதிபக்தி,1958]

    7.8 நாடகம் பார்க்க



    பெண் : சீவி முடிச்சிக்கிட்டு
    சிங்காரம் பண்ணிக்கிட்டுத்
    தேரோட்டம் பார்க்கப் போறேன்
    வாறியா? - மச்சான்
    தேரோட்டம் பாக்கப் போறேன் வாறியா?

    ஆண் : ஆடுதுறை தங்கமணி
    அல்லிவேஷம் போடுறாளாம்
    நாடகம் பார்க்கப் போறேன் வாறியா? - பொண்ணே
    நாளைக்குத் திரும்பிடலாம் ஜாலியா

    பெண் : கோபுரமாம் கும்பங்களாம்
    கொடிகட்டிப் பறக்கிற கம்பங்களாம்

    ஆண் : ஊஹூம்

    பெண் : கூட்டங்களாம் நாட்டங்களாம் - மேளம்
    கொட்டிக்கிட்டு ஆடுற ஆட்டங்களாம் - மச்சான்
    சித்திரைத் திருநாளு மருதையிலே - நம்ம
    சுத்திச் சுத்தி பாத்திடலாம் குருதையிலே!

    ஆண் : ஓஹோ!
    பத்துக்குரல் முத்துக் கண்ணு பாடுறாளாம்!
    பவளக்கொடி வேஷத்திலே ஆடுறாளாம்!
    சீனுகளாம் ஜிமிக்கிகளாம் - நீ
    சிரிக்கிற மாதிரியா வௌிச்சங்களாம் - பொண்ணே
    ஓசியிலே நாடகம் திருச்சியிலே - நம்ப
    ஒண்ணாக் கிளம்பிடலாம் வா மயிலே!
    வா மயிலே! வா மயிலே!

    [பிள்ளைக்கனியமுது,1958]

    7.9 சூடேற்றும் பார்வை!



    ஆண் : சலோ டில்லி கமான் லிலி - இனி

    பெண் : வாட்

    ஆண் : இந்தியாவின் ராஜதானி - இனி
    என்றும் என் இதயராணி லில்லி!
    இன்பலோகசிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி - நீ
    பந்துபோல எகிறிப்பாயும் வல்லி! - உன்
    அன்பு வார்த்தைதான் எனக்கு மியூசிக்கு - உன்
    அழகுமுகம் செய்வதெல்லாம் மேஜிக்கு (உன்)

    பெண் : உன்பார்வை பாடிக்கு
    வெரிஹீட்டு - தெரிஞ்சுக்கோ
    மீறிப்போனா எரிஞ்சுபோகும் புஷ்கோட்டு
    இங்கிலாண்டுக்கு ராஜதானி லண்டன் - என்
    இதயத்துக்கு உன் அன்பு எம்டன்!
    எதுக்கு இப்படி ஆடுறே என்ன நெனச்சு வாடுறே
    நெருங்கிவந்தா ரெண்டு மனசும் தனாதன்!
    கண்களுக்கு இமயமலை வெரி ஹைட்டு - மெய்க்
    காதலுக்கு நீயும் நானும் சரிவெய்ட்டு!

    ஆண் : அப்படியே வாழ்ந்திடலாம் ஆல்ரைட்டு - நீ
    அன்புமீறிச் சொன்னசொல்லு ஹைலைட்டு - அவர்
    இந்தியாவின் ராஜதானி டில்லி - இனி
    என்றும் என் இதயராணி லில்லி!

    பெண் : யூ சில்லி!

    ஆண் : இன்பலோகசிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி - நீ
    பந்துபோல எகிறிப்பாயும் வல்லி!
    ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்பு - இனி
    பல்பு அண்டு சுச்சு நம்ப லைப்பு! (ஹெல்பு)

    பெண் : சிங்கார ரிங்கு நான்,ரங்கூனு வைரம் நீ - நம்
    ஜோடி உலகில் புது டைப்பு!

    இருவர் : ஆ! காஷ்மீருக்கு ராஜதானி ஸரீ நகர்ர்ர் - நம்
    காதல்வாழ்வின் ராஜதானி அன்புநகர்ர்ர்ர்
    கலகலவென சிரித்துநாம் மனசுபோல நடக்கலாம்
    கலந்தேபின்னே வளரும் ஹேப்பி பார் எவர்ர்ர்ர்!

    [ நான் வளர்த்த தங்கை,1958]

    7.10 குடும்பத்தோடு பயணம்



    சின்னக் குட்டி நாத்துனா
    சில்லறைய மாத்துனா
    குன்னக்குடி போறவண்டியில்
    குடும்பம் பூரா ஏத்துனா!

    குளிரடிக்கிற குழந்தைமேலே
    துணியப் போட்டு போத்துனா
    குவாகுவானு கத்துனதாலே
    முதுகில ரெண்டு சாத்துனா
    கிலுகிலுப்பயக் கையில் கொடுத்து
    அழுதப்பிள்ளையத் தேத்துனா (சின்னக்குட்டி)

    பன்னப்பட்டி கிராமத்திலே
    பழைய சோறு தின்னுக்கிட்டா
    பங்காளி வீட்டுச் சிங்காரத்தோட
    பழைய கதையும் பேசிக்கிட்டா (சின்னக்குட்டி)

    கன்னுக்குட்டிய மல்லுக்கட்டியே
    கயித்தைப் போட்டுப் புடிச்சுக்கிட்டு
    மண்ணுக் கட்டியால் மாங்கா அடிச்சு
    வாயில் போட்டுக் கடிச்சுக்கிட்டா (சின்னக்குட்டி)

    [ ஆரவல்லி ]


    8. தத்துவம்


    8.1 எது சொந்தம்!



    குட்டி ஆடு தப்பிவந்தால்
    குள்ளநரிக்குச் சொந்தம்!
    குள்ளநரி மாட்டிகிட்டா
    கொறவனுக்குச் சொந்தம்!

    தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில்
    பட்டதெல்லாம் சொந்தம்!
    சட்டப்படி பார்க்கப்போனால்
    எட்டடிதான் சொந்தம்!

    உனக்கெது சொந்தம்
    எனக்கெது சொந்தம்!
    உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு)
    மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
    வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு)

    கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
    குருவியின் சொந்தம் தீருமடா!
    ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
    அதோட சொந்தம் மாறுமடா! - காலை
    நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
    நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
    காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
    கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா (உனக்கு)

    பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
    பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
    ஆபத்திலே சிக்கி அழிந்தார்களானாலும்
    அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
    அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில்
    எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில்
    இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

    செவரு வச்சுக் காத்தாலும்
    செல்வமெல்லாம் சேர்த்தாலும்
    செத்தபின்னே அத்தனைக்கும்
    சொந்தக்காரன் யாரு? - நீ
    துணிவிருந்தா கூறு!

    ரொம்ப-

    எளியவரும் பெரியவரும்
    எங்கே போனார் பாரு! - அவரு
    எங்கே போனார் பாரு!

    பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
    பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
    வம்பிலே மாட்டிப் போன தெத்தனை
    மானக் கேடாய் ஆன தெத்தனை?
    மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
    எத்தனை எத்தனை ஆனந்தம்! (உனக்கு)

    [ பாசவலை,1956 ]

    8.2 மனக்குரங்கு



    இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் - பெருங்
    கூட்டிருக்குது கோனாரே! - இதை
    ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
    ஒரு முடிவுங் காணாரே!
    தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
    எல்லாம் இப்படிப் போகுது
    நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
    நரிகள் கூட்டம் வாழுது
    தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
    தில்லாலங்கிடி தில்லாலே (இந்த)

    கணக்கு மீறித் தின்றதாலே
    கனத்த ஆடு சாயுதே - அதைக்
    கண்ட பின்னும் மந்தையெல்லாம்
    அதுக்கு மேலே மேயுது
    பணக்கிறுக்குத் தலையிலேறிப்
    பகுத்தறிவுந் தேயுது - இந்த
    பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
    தானாய் விழுந்து மாயுது (இந்த)

    ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
    பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங் கண்டு
    நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
    நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு

    இதைப்-
    படித்திருந்தும் மனக்குரங்கு
    பழைய கிளையைப் பிடிக்குது,
    பாசவலையில் மாட்டிக்கிட்டு
    வௌவால்போலத் துடிக்குது

    நடக்கும் பாதை புரிந்திடாமல்
    குறுக்கே புகுந்து தவிக்குது;
    அடுக்குப் பானை போன்ற வாழ்வைத்
    துடுக்குப்பூனை ஒடைக்குது (இந்த)

    [ பாசவலை,1956 ]

    8.3 போலிகளும் காலிகளும்



    உறங்கையிலே பானைகளை
    உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
    உருப்படியாய் இருப்பதையும்
    கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
    இறங்குவோரைக் கொன்று
    இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
    இத்தனையும் மனிதனிடம்
    மொத்தமாய் வாழுதடா

    பொறக்கும்போது - மனிதன்
    பொறக்கும்போது பொறந்த குணம்
    போகப் போகப் மாறுது - எல்லாம்
    இருக்கும்போது பிரிந்த குணம்
    இறக்கும்போது சேருது (பொறக்)

    பட்டப்பகல் திருடர்களைப்
    பட்டாடைகள் மறைக்குது - ஒரு
    பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
    திருடனென்றே உதைக்குது (பொறக்)

    காலநிலையெ மறந்து சிலது
    கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
    கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
    வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின் (பொறக்)

    கணக்குப் புரியாம ஒண்ணு
    காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
    காதோரம் நரைச்ச முடி
    கதை முடிவைக் காட்டுது (பொறக்)

    புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
    புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
    போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
    ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
    உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
    ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
    உளறி என்ன,கதறி என்ன?
    ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா (பொறக்)

    [ சக்ரவர்த்திக் திருமகள்,1957 ]

    8.4 வரவும் செலவும்



    கருவுலகில் உருவாகி
    மறுவுலகில் வரும் நாளைக்
    கண்டறிந்து சொல்வாருண்டு - இந்தக்
    திருவுடலில் குடியிருக்கும்
    சீவன் பிரியும் நாளைத்
    தெரிந்தொருவர் சொன்னதுண்டோ?

    வருவனவும் போவனவும்
    விதியென்று வைத்தவன்
    வாழ்வினை விதைத்த உழவன் - அவன்
    அறுவடைக்காலத்தில்
    அழுதாலும் தொழுதாலும்
    அனுதாபங் காட்டுவானோ?..

    [ சௌபாக்கியவதி,1957 ]

    8.5 உழைக்காமல் சேர்க்கும் பணம்



    சூழ்ச்சியிலே சுவரமைத்து
    சுயநலத்தால் கோட்டைகட்டிச்
    சுடர்விட்ட நீதிதனைத்
    தூக்கி எறிந்துவிட்டுச்
    சாட்சிகள் வேண்டாம்
    சகலமும் நானென்று
    சதிராடும் வீணர்களின்
    அதிகார உலகமடா

    புதிரான உலகமடா - உண்மைக்கு
    எதிரான உலகமடா - இதில்
    பொறுமையைக் கிண்டிவிடும்
    போக்கிரிகள் அதிகமடா

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா - இது
    கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
    திருட்டு உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

    இருக்கும் அறிவை மடமை மூடிய
    இருட்டு உலகமடா - வாழ்வின்
    எந்த நேரமும் சண்டை ஓயாத
    முரட்டு உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

    விளையும் பயிரை வளரும் கொடியை
    வேருடன் அறுத்துவிளையாடும் -மனம்
    வெந்திடும் தோட்டக்காரனிடம்
    மிரட்டல் வார்த்தைகளாடும் - பல
    வரட்டு கீதமும் பாடும் - விதவிதமான
    பொய்களை வைத்துப்
    புரட்டும் உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

    அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
    அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
    அழகைக் குலைக்க மேவும்
    கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
    குணமும் இதுபோல் குறுகிப்போகும்
    கிறுக்கு உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

    தாயித்தோ..தாயித்து - பலர்
    சந்தேகம் தீர்ந்துவிட
    சந்தோஷமான ஒரு
    சங்கதியைக் சொல்லவரும் தாயித்து - சில
    சண்டாளர் வேலைகளை
    ஜனங்களின் மத்தியிலே
    தண்டோரா போடவரும் தாயித்து - அய்யா
    தாயித்தோ..தாயித்து - அம்மா
    தாயித்தோ..தாயித்து

    தில்லில்லா மனுஷன்
    பல்லெல்லாம் நெல்லாரிக்க
    சொல்லெல்லாம் வெஷமிரிக்கி கேளுங்கோ - இதர்
    நெல்லார்க்கி பொல்லார்க்கி அல்லா நடுவேரிக்கு
    எல்லாம் வௌக்கிப் போடும் பாருங்கோ லேலோ-
    தாயித்தோ..தாயித்து - ஆவோ தாயித்தோ..தாயித்து
    பொம்பளைங்க பித்துக்கொண்ட
    பொடவைப் பக்தர்களுக்குப்
    புத்தியைப் புகட்ட வந்த தாயித்து - செம்பு
    தகட்டைப் பிரிஞ்சா
    திரையில் மறஞ்சிருக்கும்
    சேதிகளைச் சொல்லும் இந்தத் தாயித்து
    ஒருவன் : அய்யா! இதிலே வசியம் பண்ற
    வேலையிருக்கா!
    மந்திரம் வசியமில்லை
    மாயாஜால வேலையில்லை
    வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் - இதில்
    மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம் (தாயித்தோ)
    மற்றவன் : ஏம்பா!பணம் வருமானத்துக்கு
    ஏதாவது (வழி)யிருக்கா இதிலே?
    ஒடம்பை வளைச்சு நல்லா ஒழைச்சுப்பாரு - அதில்
    உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
    உக்காந்துகிட்டு சேக்கிற பணத்துக்கு
    ஆபத்திருக்கு அது உனக்கெதுக்கு? (தாயித்தோ)
    மற்றொருவன் : ஏய்யா! இதால
    பொம்பளைகளே மயக்க முடியுமா?
    கண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும்
    காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
    கண்ட கண்ட பக்கம் திரிஞ்சா
    கையும் காலும் வாழ்வும்
    துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்

    (வசனம்)
    தம்பி,அதெல்லாம் செய்யாது இது வேறே?
    (தாயித்தோ)

    [ மகாதேவி,1957 ]

    8.6 இனிப்பும் கசப்பும்



    வீடு நோக்கி ஓடிவந்த என்னையே
    நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே (வீடு)

    இனி-
    காடு மேடு சொந்தம்
    காணும் யாவும் சொந்தம்
    கூடுமில்லை குஞ்சுமில்லை
    என்ன ஆனந்தம்!
    இரு காலிருந்தும் கையிருந்தும்
    பாரிலே
    ஒரு வாலுமில்லை தலையுமில்லை
    வாழ்விலே (வீடு)

    இனிக் காற்று மழையிலின்பம்
    கல்லு முள்ளிலின்பம்
    பூட்டுமில்லை கதவுமில்லை
    எந்தன் வீட்டுக்கே
    நான் எண்ணிஎண்ணி கதறியென்ன
    உலகிலே
    ஒரு இனிப்புமில்லை கசப்புமில்லை
    முடிவிலே! (வீடு)

    [ பதிபக்தி,1958 ]

    8.7 உண்மை



    ஒருத்தி : உருளுது பெரளுது உலகம் சுழலுது
    ஓடுது ஆடுது கூடுது குறையுது
    உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க - அய்யா
    உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க

    மற்றவன் : இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது
    ஏறுது இறங்குது இடையிலும் மாறுது
    எடங்கண்டு நடந்துக்கிங்க - சாமி
    எடங்கண்டு நடந்துக்கிங்க

    ஒருத்தி : பாயுது சாயுது ஞாயத்தைத் தாண்டி
    மேயுது மனம்போலே!

    மற்றவள் : பல-ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி
    அலையுது வெறியாலே!

    ஒருத்தி : ஆசைகள் அதிகம் அறிவுக்குப் பஞ்சம்
    அதிசயம் இதுதாங்க

    மற்றவள் : வெறும்-வேஷமும் மோசமும்
    வெடச்சுப்பாக்குது
    வேதனை அதுதாங்க! (உருளுது)

    ஒருத்தி : கூடுவிட்டுக் கூடு பாஞ்சு
    கூறுகெட்டு நின்னதெல்லாம்
    நூறுதிட்டம் போடுதுங்க - வாய்
    வீரம் பேசுதுங்க!

    மற்றவள் : நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும்
    ரகசியம் இதுதாங்க - ஒங்க
    கண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம்
    கடைசியில் இருக்குதுங்க

    ஒருவன் : நாணயமில்லை நன்றியுமில்லை
    நம்பவும் வழியில்லை

    மற்றவள் : இதில்-
    உண்மையன்புக்கு உடல் நலமில்லை!

    ஒருத்தி : அது உயிரை இழந்தால்
    நாட்டுக்குத் தொல்லை!

    மற்றவள் : இதால்-
    ஒவ்வொரு நாழியும்
    நீதியின் மனசு உருகுதுங்க

    ஒருத்தி : நேரமும் காலமும் மாறி வருதுங்க
    நெலமையைக் கேளுங்க

    மற்றவள் : ரொம்ப -
    நீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது
    நேருலே பாருங்க (அய்யா)

    [ பெற்ற மகனை விற்ற அன்னை,1958 ]

    8.8 வீண் அனுதாபம்!



    இரைபோடும் மனிதருக்கே
    இரையாகும் வெள்ளாடே
    இதுதான் உலகம், வீண்
    அனுதாபம் கொண்டு நீ
    ஒரு நாளும் நம்பிடாதே
    டேயண்ணா-டேயண்ணா-டேயண்ணா ட்ரியோ டேயண்ணா

    முறையோடு உழைத்துண்ண
    முடியாத சோம்பேறி
    நரிபோலத் திரிவார் புவிமேலே - நல்ல
    வழியோடு போகின்ற
    வாய்பேசா உயிர்களை
    வதச்சுவதச்சு தின்பார் வெறியாலே (இரை)

    காலொடிந்த ஆட்டுகாகக்
    கண்ணீர் விட்ட புத்தரும்
    கடல்போல உள்ளங்கொண்ட
    காந்தி ஏசுநாதரும்
    கழுத்தறுக்கும் கொடுமைகண்டு
    திருந்தவழி சொன்னதும் உண்டு
    காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க - ஆனா
    கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க (இரை)

    [ பதிபக்தி,1958 ]

    8.9 வெறும் பேச்சு!



    தர்மமென்பார் நீதியென்பார்
    தரமென்பார்
    சரித்திரத்துச் சான்று சொல்வார்
    தாயன்புப் பெட்டகத்தைச்
    சந்தியிலே எறிந்துவிட்டுச்
    ;தன்மான வீரரென்பார்
    மர்மமாய்ச் சதிபுரிவார்
    வாய்பேசா அபலைகளின்
    வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
    கர்மவினை யென்பார்
    பிரமனெழுத் தென்பார்
    கடவுள்மேல் குற்றமென்பார்

    இந்தத்-
    திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
    எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
    இல்லாத நன்னாளை உண்டாக்கணும் - இந்த (திண்ணை)

    பொதுநலம் பேசும் புண்யவான்களின்
    போக்கினில் அனேக வித்தியாசம் ;
    புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
    புவியை மயக்கும் வௌிவேஷம் - அந்தப்
    பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
    நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் - இந்த (திண்ணை)

    கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
    கவைக்குதவாத வெறும் பேச்சு
    கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
    கருதவேண்டியதை மறந்தாச்சு - பழங்
    கதைகளைப் பேசி காலம் வீணாச்சு ;
    கையாலே முன்னேற்றம் கண்டாகணும் - இந்த (திண்ணை)

    நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
    நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
    பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
    பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
    படிப்பவங்க வீடு புடிப்பவங்க
    பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க

    இன்னும்-
    பொம்பளைங்க ஆம்பளைங்க
    அத்தனை பேரையும் வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா
    நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
    வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
    உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் - இந்த (திண்ணை)

    [ பதிபக்தி,1958 ]

    8.10 துணிச்சல்



    ஒரு குறையும் செய்யாமே
    ஒலகத்திலே யாருமில்லே - அப்படி
    உத்தமனாய் வாழ்ந்தவனை - இந்த ஒலகம்
    ஒதைக்காம விட்டதில்லை..

    இருக்கும் பொழுதை ரசிக்கணும் - அட
    இன்பமாய் கழிக்கணும்
    எதிலும் துணிஞ்சு இறங்ணும் - நீ
    ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்)

    நாளை நாளை என்று பொன்னான
    நாளைக் கெடுப்பவன் குருடன்
    நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
    நலிஞ்சு போறவன் மடையன் - சுத்த மடையன்
    நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
    நெனத்ததைச் செய்யிறவன் மனுஷன் (இருக்)

    ஆடி ஓடி பொருளைத் தேடி...
    அவனும் திங்காம பதுக்கி வைப்பான்..
    அதிலே இதிலே பணத்தைச் சேத்து
    வௌியிடப் பயந்து மறச்சுவைப்பான் ;
    அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
    ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான் ;
    ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
    அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் - ஆமா
    பொதச்சு வைப்பான் (இருக்)

    நல்ல வழியிலே வாழ நெனச்சு
    நாயா அலையாதே - அது இந்த
    நாளிலே முடியாதே
    நரியைப் போலே எலியைப் போலே
    நடக்கத் தெரிஞ்சுக்கணும் - தம்பி
    உடம்பு அழுக்கு ; உடையும் அழுக்கு!
    உள்ளம் அழுக்குங்க - அதுலேதான்
    உலகம் கிடக்குங்க - இது
    உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
    ஒண்ணும் சுத்தமில்லை - உள்ளதைச்
    சொன்னா குத்தமில்லை (இருக்)

    [ கண் திறந்தது,1959 ]

    8.11 துன்பத்தை மிதி!



    விதியென்னும் குழந்தை கையில்
    உலகந்தன்னை
    விளையாடக் கொடுத்துவிட்டாள்
    இயற்கையன்னை - அது
    விட்டெறியும் உருட்டிவிடும்
    மனிதர் வாழ்வை
    மேல் கீழாய்ப் புரட்டிவிடும்
    வியந்திடாதே
    மதியுண்டு கற்புடைய
    மனைவியுண்டு
    வலிமையுண்டு வெற்றி தரும்
    வருந்திடாதே
    எதிர்த்து வரும் துன்பத்தை
    மிதிக்கும் தன்மை
    எய்திவிட்டால் காண்பதெல்லாம்
    இன்பமப்பா

    [ தங்கப் பதுமை,1959 ]

    8.12 பொறுமை பொங்கினால்!



    ஏனென்று கேட்கவே
    ஆளில்லை என்பதாலே
    தானென்ற அகங்காரம்
    தலைவிரித்து ஆடுதடா
    ஊனுருக ஏழைகளின்
    உள்ளமெல்லாம் புண்ணாக
    உயிரோடு கொல்பவனைக் - காலம்
    உயர்வாய் மதிக்குதடா!

    பொறுமை ஒருநாள்
    பொங்கி எழுந்தால்
    பூமி நடுங்குமடா
    கொடுமை புரியும் பாதகனை - அவன்
    குறைகள் விழுங்குமடா!
    காலையாகி மதியமாகி
    மாலையானது பலபொழுது,
    மாலையாகி பகலும் முடிந்து
    இருளும் போனது பல இரவு
    ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன்
    வாழ்வெல்லாம் ஒரு நாள் வாழ்வென்றதால்
    தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன்
    பேராசை நிலைதன்னை என்னவென்று சொல்வேன்! (பொறுமை)

    மானம் என்றே மங்கை அழுதால்
    இன்பமென்றே நகைப் பானே
    பால வயதில் செய்த வினையை
    வாழ்வு முடிவில் நினைப்பானே!
    தானாகச் சிரிப்பான் தானாக அழுவான்
    காணாத கனவும் காண்பானே - அவன்
    ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடித்
    கூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே! (பொறுமை)

    [ இரத்தினபுரி இளவரசி, 1959 ]

    8.13 கற்பின் விலை



    கல்லால் இதயம் வைத்து
    கடும் விஷத்தால் கண்ணமைத்து
    கணக்கில்லாப் பொய்களுக்குக்
    காரணமாய் நாக்கமைத்துக்
    கள்ள உருவமைத்துக்
    கன்னக்கோல் கையமைத்து
    நல்லவரென்றே சிலரை - உலகம்
    நடமாட விட்டதடா!

    காதலுக்கு நாலுகண்கள்
    கள்வனுக்கு ரெண்டு கண்கள்
    காமுகரின் உருவத்திலே
    கண்ணுமில்லை காதுமில்லை (காதலுக்கு)

    நீதியின் எதிரிகளாய்
    நிலைமாறித் திரிபவர்கள்
    பாதையில் நடப்பதில்லை
    பரமனையும் மதிப்பதில்லை
    பாதகம் கொஞ்சமில்லை
    பண்புமில்லை முறையுமில்லை
    பேதைப்பெண்கள் இதைப்
    பெரும்பாலும் உணர்வதில்லை (காதலுக்கு)

    பேதம் இல்லை என்பார்
    வேதாந்தம் பேசிடுவார்
    பெற்றவளைப் பேயென்பார்
    மற்றவளைத் தாயென்பார்
    காதல் அறம் என்பார்
    கற்பின் விலை என்னவென்பார்
    கண்மூடி மாந்தர் இதை
    கடைசிவரை அறிவதில்லை (காதலுக்கு)

    [இரத்தினபுரி இளவரசி,1959 ]

    8.14 வெற்றி எங்கள் கையிலே



    இருவர் : ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
    ஆட்டத்திலே பல வகையுண்டு - அதில்
    கூட்டத்திலே சொல்லும்படி சிலதுமுண்டு (ஆட்ட)

    பெண் : சிறகை விரித்தால் மயிலாட்டம்
    சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
    ஆண் : சீறிப் பாய்ந்தால் புலியாட்டம்
    தரையில் மறைந்தால் நிழலாட்டம்
    பெண் : கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
    குழப்பம் வந்தால் போராட்டம்
    ஆண் : சேஷ்டைகள் மிகுந்தால் குரங்காட்டம்
    திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்
    இருவர் : ஆட்டத்திலே
    ஆண் : வெற்றி எங்கள் கையிலே
    வெள்ளிப்பணம் பையிலே
    வேடிக்கை தேவையில்லை ரெடியா
    பெண் : சக்தி எங்கள் கையிலே
    சகலமும் பையிலே தாமதம் தேவையில்லை ரெடியா

    குழு : சக்தி
    ஆண் : ஒன் டூ த்ரீ
    ஆண் : வெற்றி
    பெண் : சக்தி
    குழு : சக்தி
    ஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர் பைவ்

    [ பாகப்பிரிவினை,1959 ]

    8.15 சோம்பல் ஒழிக



    ஆண் : அண்ணாச்சி வந்தாச்சி
    அறிவு தௌிஞ்சாச்சு? - ஓ மீனாச்சி
    குப்பே கொறஞ்சாச்சி
    சுத்தம் பொறந்தாச்சடி (அண்ணா)

    பெண் : அண்ணாச்சி வந்தாலும்
    ஆயிரம் சொன்னாலும் - ஓ மாமா
    துன்பந்தான் போகாமே
    சுத்தந்தான் உண்டாகுமா? - எல்லாம்
    அண்ணாச்சி எண்ணம்போல் நடந்திடுமா? - அறிவு
    அவ்வளவு சீக்கிரம் தௌிஞ்சிடுமா? - ஒரு
    கருத்தும் புரியாமே படிப்பும் வளராமே
    திருந்து திருந்துண்ணா திருந்திடுமா?

    ஆண் : அடி-இருக்கும் பொருளே சுத்தமாவச்சிக்கே
    இங்கிலீசு படிக்க வேணுமா?
    அடிக்கடி குளிக்கவும் அழுக்கைத் தொலைக்கவும்
    அஞ்சாறு வருஷங்களாகுமா - நம்ப (அண்ணா)

    பெண் : பல-சேலையுள்ள சீமாட்டி
    தினம் ஒன்னாகக் கட்டிடலாம்
    ஏழையென்ன செய்யுறது மாமா?

    ஆண் : அடி-
    கந்தைத்துணி ஆனாலும்
    கசக்கித்தான் கட்டிக்கிட்டா
    பஞ்சைக்கொரு காலம் வரும் போடி

    பெண் : ஆகா-
    இந்நிலை மாறுமா மாமா - நீ
    என்மேலே பாயாதே கோவமா?

    ஆண் : ஆகா-
    சந்தேகம் வேணாண்டி மீனாச்சி - இது
    சரியாப் போகாட்டி நானாச்சி

    பெண் : ஆகா-மாமா அழகாய்ப் பேசுறே

    ஆண் : ஓகோ-மீனாச்சி நீயா சொல்லுறே

    இருவர் : நம்மை இறுக்கிப் பிடிச்சிருந்த மூடத்தனம்

    குழு : ஒழிக!

    இருவர் : ஏமாளி ஆக்கிவைச்ச கோழைத்தனம்

    குழு : ஒழிக!

    இருவர் : சுருண்டு படுத்திருந்த சோம்பல்

    குழு : ஒழிக!

    இருவர் : துணியில் படிஞ்சிருந்த சாம்பல்

    குழு : ஒழிக!

    இருவர் : போகாத பீடைகளும் பூச்ச்சிவரும்
    பாதைகளும் தீராத போதைகளும் சேர்ந்து (அண்ணா)

    குழு : ஒழிக!
    விடிஞ்செழுந்து வீடு மொழுகி
    விறுவிறுப்பா வேலை முடிச்சி
    எல்லோரும் புது உல்லாசமுடன்
    ஒன்னா நீந்திடுவோமே (விடிஞ்செழுந்து)

    ஒருத்தி : மாரியக்கா மாரியக்கா
    மஞ்சப் புடிச்சிருக்கா - எம் முகத்திலே
    மஞ்சப் புடிச்சிருக்கா?

    பெண் : மரிக்கொழுந்து மரிக்கொழுந்து - உன்
    மச்சானைக் கேட்டாத் தெரியுமடி - புது
    வடிவும் அழகும் வடியுமடி - அதில்
    புரியா விஷயமும் புரியும் (விடிஞ்செழுந்து)

    [ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, 1960 ]

    8.16 ஒற்றுமை



    பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

    ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்றுபட்டால்)

    இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
    ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்றுபட்டால்)

    பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
    தேதியில் தோன்றும் பொறுமை

    ஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
    தாரணியில் அது புதுமை

    இருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
    ஓடி மறைந்திடும் மடமை (ஒன்றுபட்டால்)

    பெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
    நேர்வழி வேண்டும் உறவில்

    ஆண் : பேசிடும் அன்பும் செயல் முறையானால்
    பேரின்பம் வேறெது உலகில்

    இருவர் : காணா வளமும் மாறாத நலமும்
    கண்டிடலாம் அன்பு நினைவில் (ஒன்றுபட்டால்)

    [ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, 1960 ]

    8.17 நிழலும் வெயிலும்



    நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
    வாழ்க்கை இதுதானோ? - எதிர்
    பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
    பாடம் இது தானோ? ( நீ கேட்ட )

    பேசிப் பேசிப் பலநாள் பேசி
    நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
    ஆசைக் கனியாய் ஆகும் போது
    அன்பை இழந்தால் லாபம் ஏது? ( நீ கேட்ட )

    துன்ப நரகில் சுழலும் உலகம்
    துண்டு துண்டாய் உடைந்து அதிலே
    இன்ப மென்றோர் உலகம் தோன்றி
    ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ? ( நீ கேட்ட )

    [ ஆளுக்கொரு வீடு,1960 ]

    8.18 ஆரம்பமும் முடிவும்!



    ஈடற்ற பத்தினியின்
    இன்பத்தைக் கொன்றவன் நான் - அவள்
    இதயத்தில் கொந்தளித்த
    எண்ணத்தைக் கொன்றவன் நான்

    வாழத் தகுந்தவளை
    வாழாமல் வைத்து விட்டு
    பாழும் பரத்தையினால்
    பண்பதனைக் கொன்றவன் நான்

    அந்தக் கொள்கைக்கே
    ஆளாய் இருந்துவிட்டேன் - இனி
    எந்தக் கொலை செய்தாலும்
    என்னடி என் ஞானப்பெண்ணே

    மனிதன்-

    ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன்
    ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
    ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
    ஆத்திரங்கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே (ஆரம்ப)

    அன்பைக் கெடுத்து - நல்
    ஆசையைக் கொன்றவன்
    அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
    துன்பத்தைக் கட்டிச்
    சுமக்கத் துணிந்தவன்
    சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே? (ஆரம்ப)

    தவறுக்கும் தவறான
    தவறைப் புரிந்துவிட்டுத்
    தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
    பதறி பதறி நின்று
    கதறிப் புலம்பினாலும்
    பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே? (ஆரம்ப)

    கண்ணைக் கொடுத்தவனே
    பறித்துக்கொண்டாண்டி - மானே
    வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி (கண்ணை)

    பொருத்தமான துணையிருந்தும்
    பொங்கிவரும் அழகிருந்தும்
    போனபக்கம் போகவிட்டேன் பார்வையை - அவன்
    பொறுத்திருந்தே புரிந்துகொண்டேன் வேலையை (கண்ணை)

    அவன்-
    எதிரில் வந்து கெடுக்கவில்லை
    இதயமிடம் கொடுக்கவில்லை
    எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை - அது
    என்தலையில் போட்டதடி பழியை (கொடுத்த)

    சிங்காரம் கெட்டுச்
    சிறைப்பட்ட பாவிக்குச்
    சம்ஸாரம் ஏதுக்கடி - என்தங்கம்
    சம்ஸாரம் ஏதுக்கடி

    மனைவியைக் குழந்தையை
    மறந்து திரிந்தவனை
    வாழ்த்துவ தாகாதடி - என் தங்கம்
    மன்னிக்கக் கூடாதடி (சிங்காரம்)

    [ தங்கப் பதுமை,1959 ]

    8.19 ஒன்றிருந்தால் ஒன்றில்லை



    எல்லோரும் நம்பும்படி
    சொல்லும் திறனிருந்தால்
    சொல்லிலே உண்மை இல்லை
    உள்ளதை உள்ளபடி
    சொல்லும் மனிதனிடம்
    உணர்ந்திடும் திறமையில்லை
    உண்மையும் நம்பவைக்கும்
    திறனும் அமைந்திருந்தால்
    உலகம் அதை ஏற்பதில்லை
    அது இருந்தால் இது இல்லை
    இது இருந்தால் அது இல்லை
    அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
    அவனுக்கிங்கே இடமில்லை (அது-இரு)

    அங்கமதில் மங்கையர்க்கு
    அழகிருந்தால் அறிவில்லை
    ஆராய்ந்து முடிவு செய்யும்
    அறிவிருந்தால் அழகில்லை
    அழகும் அறிவும் அமைந்த பெண்கள்
    அதிசயமாய்ப் பிறந்தாலும்
    குறுகு மனம் கொண்டவர்கள்
    குலைக்காமல் விடுவதில்லை (அது-இரு)

    பள்ளி செல்லும் மாணவர்க்குப்
    படிப்பு வந்தால் பணமில்லை
    பணமிருந்தால் இளைஞருக்குப்
    படிப்பதிலே மனமில்லை;
    மனமிருந்து படிப்பு வந்து
    பரீட்சையிலும் தேறி விட்டால்
    பலபடிகள் ஏறி இறங்கிப்
    பார்த்தாலும் வேலையில்லை (அது-இரு)

    பொதுப்பணியில் செலவழிக்க
    நினைக்கும்போது பொருளில்லை
    பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
    பொதுப்பணியில் நினைவில்லை
    போதுமான பொருளும் வந்து
    பொதுப்பணியில் நினைவும் வந்தால்
    போட்ட திட்டம் நிறைவேறக்
    கூட்டாளிகள் சரியில்லை (அது-இரு)

    [ நல்ல தீர்ப்பு,1959 ]

    8.20 தேன் கலசம்



    கண்ணாடிப் பாத்திரத்தில்
    கல்லெறிபட்டது போல் - என்
    எண்ணமெனும் தேன்கலசம்
    உண்ணாமல் உடைந்திடுமோ - இன்பக்
    காவியம் பொய்தானோ? - கொண்ட
    காதலும் பொய்தானா? - என்
    ஆசைகள் வீண்தானா? - இனி
    அமைதியும் காண்பேனா? (இன்ப)

    இது
    காலத்தின் செயல்தானா? - சுகம்
    கானல் நீர் தானா?
    மன நம்பிக்கை வீண்தானா? - நான்
    வெம்பிய காய்தனா? (இன்ப)

    இருள் மூடிய வான்போலே
    கரை ஏறிய மீன்போலே
    துயர்மீறிடும் நிலையாலே
    படும்வேதனை தீராதோ? - ஒரு
    பாதையும் தோணாதோ? (இன்ப)

    [ புனர் ஜென்மம்,1961 ]

    8.21 எது வேண்டும்?



    உருண்டோடும் நாளில்
    கரைந்தோடும் வாழ்வில்
    ஒளி வேண்டுமா?
    இருள் வேண்டுமா? (உருண்டோடும்)

    திருந்தாத தேகம்
    இருந்தென்ன லாபம்
    இது போதுமா?
    இன்னும் வேண்டுமா?
    ஓய்..ஓய்..ஓய் (உருண்டோடும்)

    விரும்பாத போதும்
    விருந்தாக மேவும்
    குணம் வேண்டுமா?
    விஷம் வேண்டுமா? (உருண்டோடும்)

    [ புனர் ஜென்மம்,1961 ]

    8.22 நிலையில்லா உலகம்!


    பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து
    மஞ்சள் அழகும் மணமும் கொடுத்து
    வஞ்சம் தீர்க்கும் எதிரி போலே
    மனிதரை விதியும் வாட்டுதே

    கோடி கோடி உயிர்கள் வந்து
    ஓடி ஓடிப் போகுதே
    கொண்டிருந்த ஆசையெல்லாம்
    துண்டு துண்டாய் ஆகுதே..(கோடி கோடி)

    கண்ணைமூடி திறக்குமுன்னே
    காட்சி வேறாய் மாறுதே
    கணக்கில்லாத வேகத்தோடு
    காலரதமும் ஓடுதே.. (கோடி கோடி)

    ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால்
    உடனே இருளும் மூடுதே
    ஒளியினாலே விரிந்த மலர்கள்
    ஒளியால் உதிர்ந்து வாடுதே
    ஒளியால் உதிர்ந்து வாடுதே
    ஒளியால் உதிர்ந்து வாடுதே.. (கோடி கோடி)

    [ எல்லோரும் இந்நாட்டு மன்னர் ]


    9. தனிப் பாடல்கள்


    9.1 புதிய ஒளி வீசுது பார்!



    புதியஒளி வீசுதுபார்
    இமயம் தாண்டிப்
    புன்சிரிப்புக் காட்டுதுபார்
    இன்பம் அங்கே
    கதைபுனைந்து கூறவில்லை
    கண்ணில் தோன்றும்
    காட்சியிவை ரஷ்யாவில்
    மக்களாட்சி
    சதிமிகுந்த கொடுங்கோலன்
    ஜார்முன் மக்கள்
    கதிஉயரக் காணும்வழி
    ஏது மின்றி
    மிதியுண்டார் அராஜகத்தின்
    மீளாச் சேறில்
    வெம்பியழுதார் பசியால்
    வெந்தார் நைந்தார்
    கொதிக்கின்ற ஏழைமனம்
    குமுறிற்று ஆனால்
    கொக்கரிக்கும் ஜார்மன்னன்
    சிரித்து நின்றான்
    இதைக்கண்டார் லெனின்,ஸ்டாலின்
    இன்னும் கண்டார்
    எதைக்கொண்டு தீர்ப்பதென
    விரதம் பூண்டார்
    பதைக்கின்ற உயிர்களையும்
    பார்த்தார் அங்கும்
    பல்லிளிக்கும் பணக்கழுகின்
    நிலையும் பார்த்தார்

    சதைக்குன்முய் வாழுமந்தச்
    சுரண்டல் வர்க்கம்
    ஜாரினுக்குத் தக்கதுணை
    யாதல் கண்டார்

    விதிக்கின்ற சட்டம்
    ஜன உரிமை தன்னை
    வெடுக்கென்று பறிப்பதையும்
    எளியோர் வாழ்வைச்

    சிதைக்கின்ற தன்மையையும்
    செக்கி லிட்ட
    தேங்காய்போல் தொழிலாளர்
    துயரும் கண்டார்

    உதிர்த்தகண்ணீர் துடைத்தெழுந்தார்
    துணிந்தார் அன்றே
    உதித்ததுபார் புரட்சியெனும்
    உரிமைச் செம்போர்

    குதித்தார்கள் மக்களெல்லாம்
    குருதிப் போரில்
    கொழுந்துவிட்டுப் பற்றியது
    செந்தீ யெங்கும்.

    [ ஜனசக்தி,நவம்பர் புரட்சி மலர்,1954 ]

    9.2 நண்டு செய்த தொண்டு



    ஊரையடுத்த ஓடைக் கரையில்
    ஓட்டை நிறைந்த ஒருசிறு குடிசை
    நாற்புறம் வயல்கள் நல்ல விளைச்சல்
    நாகனும் வள்ளியும் வசிக்கும் இடமிது

    சொல்லச் சொல்ல சுவையேறு தமிழில்
    வள்ளியுரைக்கின்றாள் மச்சானிடத்தில்:
    மச்சான் மச்சான் கதையைக் கேட்டியா
    வாரக் குத்தகை தர்ரதாச் சொல்லி
    வாம்பலில் கொஞ்சம் நட்டுவச்சோமே

    ஆமா ஆமா அதுக்கென்ன இப்போ
    நேத்தைக்குத் தண்ணி நிறைய இருந்ததே
    பின்னாடி நட்டதால் பிஞ்சாயிருக்கும்
    இன்னும் பத்துநாள் எல்லாம் பழுத்திடும்

    அதுக்கில்லே மச்சான் நான் சொல்ல வந்தது
    அடுத்த வயல்லே நின்னாரு
    ஆத்து வாய்க்காலை அடைச்சுத் திருப்பணும்
    ஐம்பது காசுக்குத் தண்ணி பாய்ச்சணும்

    ஆருவந்தாலும் அடிப்பேன் உதைப்பேன்
    அப்படி இப்படீன்னு அலறிக் குதிச்சாரு
    இதுக்கும் நமக்கும் எட்டாதுன்னு
    இருட்டும் முன்னே வீட்டுக்கு வந்திட்டேன்

    பொழுது விடிஞ்சு போய்ப்பாத்தா
    பொங்கித் ததும்புது நம்ப வயலும்
    வாய்க்காலும் வெட்டலே மடையும் திறக்கலே
    வழியும் அளவுக்குத் தண்ணி யேது?

    நண்டு செஞ்ச தொண்டு மச்சான்
    நாட்டு நிலைமையை நல்லாப் பாத்தது
    ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில்
    போட்டது வளையைப் புரட்சி நண்டு,
    பாய்ந்தது தண்ணி பரவி எங்குமே
    காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின

    ஆகா ஆகா அருமை நண்டே
    உனக்கு இருக்கும் உயர்ந்த நோக்கம்
    உலக மனிதர்க்கு உண்டா நண்டே,
    பெரு நிலக்காரன் வரப்பைக் குடைந்து
    சிறுநிலங் காத்துச் சிறந்த நண்டே
    என்று நாகன் நன்றி செலுத்துகையில்
    எதிருள வயல்களை இருவரும் நோக்கினர்
    பச்சை மயில்போல் பயிர்கள் அசைந்தன,
    பழுத்த கதிர்கள் படுத்துக் கிடந்தன,

    படுத்திருந்த பசுந்தரை அடியில்
    வெடித்த கிளையிலும் விஷயமிருந்தது
    உழைப்பாளர் பலனை ஒட்ட உறிஞ்சு
    ஒதுக்கிப் பதுக்கும் உல்லாச மனிதரின்
    கள்ளத் துணிவையும் கருங்காலிச் செயலையும்
    கொல்லும் ஈட்டிபோல் குருத்துகள் நின்றன

    இந்த காட்சியில் இன்பம் கண்டனர்,
    இயற்கை ஆட்சியை இருவரும் வியந்தனர்
    மடைதாண்டி விழுந்த வாளை மீன்போல்
    வள்ளி துள்ளி வரப்பில் குந்தினாள்

    [ ஜனசக்தி,17-07-55 ]

    9.3 வெஞ்சிறை உடைந்தது



    கண்ணை இழுக்கும் அழகொன்று கண்டேன்
    காவியம் ஓவியம் யாவையும் கண்டேன்
    மின்னைநிகரிடைப் பெண்களும் ஆண்களும்
    வேலைசெய்யும் அந்தக் கோலத்துடன் கண்டேன்

    வண்ணக்கலையங்கு வாழ்ந்திடக் கண்டேன்
    மக்கள் உழைப்பின் உயர்வெனக் கண்டேன்
    பொன்னைப்பழிக்கும் கதிர்கள் ஒன்றைஒன்று
    பின்னிப்பின்னி அசைந்தாடிடக் கண்டேன்

    நாடுசெழிக்க உழைக்கும் எளியவர்
    நாதியின்றி உள்ளம் நைந்திடக் கண்டேன்
    நன்றியில்லாத முதலாளி ஆட்சியின்
    நயவஞ்சகத்தால் வந்த நலிவென்று ணர்ந்தேன்

    பொறுமை யிழந்தனர் மக்களெல்லாம் - மனம்
    பொங்கி எழுந்தனர் எரிமலைபோல்
    உரிமைபறித்த உலுத்தர் எதிர்த்தனர்
    ஒருமித்த ஜனசக்தி வென்றது வென்றது

    தோளோடுதோள் ஒட்டிச் சென்றனர்
    அறிவாளொடு மார்தட்டி நின்றனர்
    ஆளடிமைத் தளையறுந்து வீழ்ந்தது - நம்மை
    அடைத்துவைத்த வெஞ்சிறை உடைந்தொழிந்தது.

    [ கண்ணின் மணிகள்,1955 ]

    9.4 பெண்



    சின்னயிடை துவள செங்கை வளை குலுங்கத்
    தென்றலொடு கூந்தல் சிலிர்த்து விளையாட
    மண்ணுக்கு மேனி வலியெடுக்கும் என்பதுபோல்
    அன்னநடை போட்டு அழகுவிழி அம்புவிட்டுத்

    தன்னையந்தாங்காத் தளிர்மேனி மீதிலொரு
    சன்னயிழை மெல்லுடையுதாங்கித் தனமிரண்டும்
    முன்னேவழிகாட்ட முகத்தில் ஒளிமிதக்க
    வண்ணக்கழுத்தில் மணிபுரளத் தோளசைய,

    மின்னலைப் பற்கள் வௌிக்காட்டி உளம் நிறைக்கக்
    கன்னிப்பருவம் களையாத பெண்ணொருத்தி
    தன்னந்தனியே தமிழ்நாட்டுச் சாலையிலே
    செந்நெற் கதிர்போல் சிரம் வணங்கி வந்தாளே!

    [ 22-03-57 ]

    9.5 மனித சக்தி



    சந்திரனை தொட்டதின்று
    மனிதசக்தி
    சரித்திரத்தை மீறியது
    மனித சக்தி
    இந்திரன்தான் விண்ணாட்டின்
    அரசனென்ற
    இலக்கணத்தை மாற்றியது
    மனித சக்தி
    இந்திரனும் முடியரசாய்
    இருக்கொணாது
    எனும்குறிப்பைக் காட்டியது
    மனித சக்தி
    மந்திரமா வெறுங்கதையா
    இல்லை: இல்லை
    மனித சக்தி; சோவியத்தின்
    மனித சக்தி

    [ 01-05-57 ]

    9.6 சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி..



    சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாள் இந்தியத் தாய்
    சொல்லவொண்ணா மகிழ்ச்சியிலே திளைப்பாள் என்று
    தூங்காமல் இரவுபகல் பாடுபட்ட
    தோழர்களே! தாய்மாரே! தந்தைமாரே!
    சிறைவாழ்க்கை வேற்றாரின் கொடிய சட்டம்
    சித்ரவதை குண்டடிகள் யாவுந் தாங்கித்
    தேகமெலாந் தியாகவடுப் பெற்று நின்ற
    சிங்கங்காள் செக்கிழுத்த சிதம்பரமே!

    உயிரிழந்தும் செங்குருதி மண்ணிற் பாய்ந்தும்
    உரிமைக்கொடி காத்திட்டக் குமரக் குன்றே
    வறுமையினைச் சுமந்துகொண்டு விடுதலைத்தாய்
    வருகைக்கு முழக்கமிட்ட பாரதியே!
    கொடுமையெலாம் விடுதலையின் குறிதான் என்று
    குறுநகைத்த தில்லையாடி வள்ளி யம்மா
    ஒருமையிலே சக்தி இல்லை பன்மை வேண்டும்
    ஒன்றுதிரள் வோமென்ற சுபாஷ் வீரா!

    உரிமைபெற்றும் கடமையெல்லாம் முடிப்பதற்குள் மத
    வெறியினால் பலியான பெரியோய் காந்தி!
    தான் மறைந்தும் புகழ்மறையாத் தொண்டுசெய்த
    தலைவர்களே! நீங்களெல்லாம் இன்றிருந்தால்
    தியாக வடுக்களை எல்லாம் கண்களாக்கித்
    தேசத்தை நனைத்திருப்பீர் கண்ணீராலே
    அங்குமிங்கும் வசைபெற்றுச் சுதந்திரத்தாய்
    அவதியுறும் நிலைகண்டா லுங்கள் நெஞ்சம்

    அனலில் மெழுகென உருகிப் போயிருக்கும்
    அடுத்தாண்டில் இனும்பலவும் கூறுகின்றேன்
    தலைக்கெல்லாம் தலையாய தலைமைத் தாயே
    சரித்திரத்தில் இடங்கொண்ட சுதந்திர நாளில்
    கொலை நடந்த விபரமெல்லாம் கூறுதற்குக்
    கூசுகின்றேன் மற்றுமுள்ள விபரம் சொல்வேன்;
    சுதந்திரத்தைப் பெற்ற முதல் ஓர்நாளேனும்
    துளியும் நீ மகிழ்ந்ததுண்டா? உன்றன் மக்கள்

    உகந்துமன ஒற்றுமையாய் வாழ்ந்த துண்டா?
    உன்னைத்தான் மதித்ததுண்டா? உயர்ந்ததுண்டா?
    எங்கோர் பகுதியில் ஒன்றுபட்டார்
    எனிலதனை ஆதரிக்கும் முறை தானுண்டா?
    பெரும்வெயிலால் வண்டல்நிலம் வெடிப்ப தைப்போல்
    பிளவுபட்டுப் பிளவுபட்டுச் சுயநலத்தால்
    வருமான வேட்கையிலே புகுவதன்றி
    மனதிலெதும் விசாலமுண்டா? பொதுநோக்குண்டா?

    இதுவரி நீ மகிழ்ந்திருப்பாய் என்ற எண்ணம்
    என் போன்றோர்க் கில்லை இனியேனும் அந்தப்
    புதுவாழ்வும் ஒற்றுமையும் புனிதத் தொண்டும்
    பொலிகவென வணங்குகின்றோம் அன்னையே நீ
    பூரிக்கும் அன்னாளை எதிர் பார்க்கின்றோம்

    [ ஜனசக்தி,15-08-1958 ]

    9.7 தாமரை என்றோர் ஏடு மலர்ந்தது



    தாமரை என்றொரு ஏடு மலர்ந்தது
    தமிழ் மணம் பரப்பச் - சுவைத்
    தேமதுரத் துளி சிந்தியிலக்கியச்
    சிந்தைகளை நிரப்ப - இன்று (தாமரை)

    தம்மவர் மற்றவ ரென்னும் குணமின்றித்
    தத்துநடை போட்டு - முகம்
    விம்மிச் சிரிக்கும் குழந்தையைப் புது
    வெற்றிவரங் கேட்டு - இன்று (தாமரை)

    பொய்மை படர்ந்து கிடக்கும் நிலத்தினில்
    உண்மைகளை விதைக்க - ஒளி
    பொங்கிவரும் கதிர்போல மக்கள் விழிப்
    பொய்கையிலே மிதக்க - இன்று (தாமரை)

    அன்றைப் புலவர்கள் ஆக்கங்களுக்குத் தன்
    நன்றிதனைக் கூற - மன
    வண்டை யழைத்து விருந்துவைக்கப் புகழ்
    மன்றத்தினி லேற - இன்று (தாமரை)

    கண்ணுக் கினிய கலைஞருக்கும் தமிழ்
    பண்ணுக்குரிய வர்க்கும் - கலைப்
    பெண்ணுக் கினிய சகலருக்கும் தனிப்
    பேறுதனை வளர்க்கும் - வண்ணத் (தாமரை)

    [ தாமரை ]

    9.8 பாரதி



    பாரதிக்கு நிகர் பாரதியே - மண்ணில்
    யாரெதிர்த்தாலும் மக்கள்
    சீருயர்த்தும் பணியில் (பாரதி)

    ஆறோ டிரண்டு திக்கும்
    அதிரப் பறை முழக்கும்
    அச்சமில்லாத் தமிழில்
    அறிவில் நிறைந்திருக்கும் (பாரதி)

    வீரமும் நெஞ்சந் தன்னில்
    ஈரமும் வேண்டும் என்றான்
    வேற்றாரைக் கண்டஞ்சுவார்
    வீணரென்றே புகன்றான்

    சோர்வகற்றி யாவரும்
    ஓர் முகமாய் எழுந்தால்
    சூழும் அடிமையிருள்
    சொல்லாமல் ஓடும் என்றான் (பாரதி)

    பாதகம் செய்பவரைப்
    பாட்டாலே உமிழ்ந்தான்
    பஞ்சைகளின் நிலையைப்
    பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்

    பேதங்கள் வளர்ப்பவரைப்
    பித்தர் என்றே இகழ்ந்தான்
    பெண்மையைச் சக்தியை
    உண்மையைப் புகழ்ந்தான் (பாரதி)

    [ தோழர் ஜீவாவின் கட்டுரையிலிருந்து எடுத்த பாடல் ]

    9.9 என் விருப்பம்



    தாண்டித் தாண்டிச் சதிகளைத் தாண்டி
    சமுதாயத்தைத் தாழ்த்திப் போடும்
    தடைகளைத் தாண்டிச் சோம்பி அஞ்சிக்

    சோர்ந்து கிடந்த மனங்களைத் தூண்டிட
    தூக்கம் விடுப்பீர் ஆக்கப் பணிக்கெனப்
    பகைமை தீர்க்கும் புதிய நோக்கமே
    பாண்டித்தேவன் படத்தின் நோக்கம்

    பாண்டித்தேவன் படத்தில் பயனும்
    பங்கு கொண்டான் பணிபுரிந்ததின்
    ஆக்க முயற்சி அன்பின் புரட்சி
    ஊக்கம் தளரா உழைப்புப் பயிற்சி

    இப்பெரும் படத்தில் இத்தனைப் பணிகளில்
    என்பணி செப்பிடில் மழையில் ஒருதுளி
    வளனுள்ள மலைகளும் வளமுள்ள சோலையும்
    தேனிகர்ச் சுனைகளும் சிரித்திடும் மான்களும்

    படத்தில் அடைந்தும்,நான் பார்த்தும் ரசித்தேன்
    உள்ளத்தில் நினைத்ததை உரைக்க விரும்பினேன்
    இப் படத்தலைவர் சுப்பிர மணியம்
    ஒப்பிலாக் கலைஞர் உலகமே அறியும்

    திரைப்படக் கலைத்தாய்
    குறிப்பிடத் தக்கவர் தாயிக்குத் தலைமகன்
    சிந்தனை,சொல்,செயல் யாவுமே பொதுவாய்,
    செம்மையும் புதுமையும் செறிந்ததா யிருக்கும்

    இன்றைய உலகிற் கென்னென்ன தேவை
    இவைவரும் காலத்திற்கெவை அவை நலஞ்செயும்
    இவைகளே இவரின் தயைமிகு நினைவுகள்
    இவர்தம் படத்தைக் கலைக்கென்றே எடுத்தார்

    கலையினை மக்கள் கலையாக்கிக் கொடுத்தார்
    ஏழைகள் துயரை ஏங்கிடும் நிலையைத்
    தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்து கிடக்கும்

    பசிக்குறி முகங்களைப் பாட்டாளி வர்க்கத்தை
    நசுக்கிப் பிழிந்திடும் அராஜகச் செயலை
    மாற்றிடும் கருத்தை தமிழ்ப்பட உலகம்
    வன்மையாய் உரைக்க அஞ்சும் நடுங்கிடும்

    சிக்கல் நிறைந்த வர்க்கங்கள் திருந்த
    மக்கள் கலைதான் மலர்ந்திட வேண்டும்
    என்னும் பொருள்கள் பாண்டித் தேவனில்
    பின்னிக்கிடப்பதைப் பார்ப்போர் அறிவர்

    நாட்டை உயர்த்தும் நற்படம் இதுபோல்
    நாளும் வளர்த்தல் வேண்டும்; பணத்தின்
    வேட்டையை குறிப்பாய் படம் எடுப்போர்
    பாட்டையே பாடாமல் காலத்தை நோக்குக

    பாண்டித் தேவனைப் பார்த்துத் தௌிக, என்
    சொந்த விருப்பமிது மக்கள்தம் விருப்பமும்
    இவ்விருப்பத்தோடிணைய மறுக்காது
    என்று நினைக்கறேன், நன்றி வணக்கம்

    9.10 கொதிக்கும் தார்



    உறுப்பு அறுந்து போனாலும்

    உள்ளம் கலங்கேன்;

    செருப்பறுந்து போனதற்கோ

    சிந்திப்பான்!

    நெருப்பினில் வீழ்ந்து

    எதிர் நீச்சல் அடிக்கத்

    துணிந்தான்;

    கொதிக்கும் தார் குளிர் நீர்!

    9.11 ஏற்றத்தாழ்வு மாற்றும் கொடி!



    ரோட்டில் பள்ளம் மேடு எங்கும் பாருங்கள் கோடை

    ஆற்று மணல் காட்சி அங்குப் பாருங்கள்

    போக்குவரவை எச்சரிக்கும் செங்கொடி - அங்கே

    ரோட்டின் ஓரத்தில் காற்றிலாடப் பாருங்கள்!

    பழுது பார்க்கும் தொழிலாளரைப் பாருங்கள்!

    ஏற்றத் தாழ்வு இருக்குமிடம் எங்குமே

    மாற்றம் காணவே பறக்கும் செங்கொடி!

    9.12 நடுவில் இருக்கும் சாமி



    நல்லாருக்கும் பொல்லாருக்கும்
    நடுவில் இருக்கும் சாமி - நீ
    கல்லாய்ப் போன காரணத்தை
    எல்லாருக்கும் காமி!

    9.13 நாலு முழ வேட்டி



    ஒரம் கிழிஞ்சாலும்
    ஒட்டுப்போட்டு கட்டிக்கலாம் - இது
    நடுவே கிழிஞ்சுதடி
    நாகரத்தினமே - அதுவும்
    நாலுமுழ வேட்டியடி
    கனகரத்தினமே

    9.14 படத் தொழில் வளர



    பாடுமிடம் தெரிந்து
    பாடவேண்டும் - ஆடுவோர்
    பாட்டின் பொருள் உணர்ந்து
    ஆட வேண்டும் - கவிஞன் (பாடும்)

    பாடும் படக் கலைக்கும்
    பாடுபட்டோர் தமக்கும்
    பலருக்கும் பலனளிக்கும்
    பக்குவ மிருக்கும்படி (பாடும்)

    கலைஞர்களைக் குழுவாய்க்
    கூட்ட வேண்டும் - முதலில்
    கதையமைப்பை விளக்கிக்
    காட்டவேண்டும் - அந்தக்
    கருத்தோ டிணைந்து
    கவிதீட்ட வேண்டும் - அதில்
    காலத்திற் கேற்ற
    சுவையூட்ட வேண்டும் - கவிஞன் (பாடும்)
    ஆடற்கலைக் கழகு
    உடலமைப்பு-இன்னும்
    அகத்தின் நிலை
    விளக்கும் முகக்குறிப்பு
    பாடற்கலைக் கழகு
    இசையமைப்பு - கலை
    பலருழைப்பால் வளரும்
    பொதுப்படைப்பு-என்பதால் (பாடும்)

    ரசிக்கத் தெரிந்தவரே
    நடிக்கத் துணிய வேண்டும்
    நம்பிக்கை கொண்டோர்
    படம் எடுக்கத் துணிய வேண்டும்
    படிக்கத் தெரியாதாரும்
    பார்த்துத் தௌிய வேண்டும்
    படத் தொழில் வளம் சிறக்க
    பண்பட்ட திறன் வேண்டும் (பாடும்)

    [ பேசும்படம்,1984]

    9.15 அகராதியைக் கிழிக்கும்



    அன்னையை அடிக்கும்

    அகராதியைக் கிழிக்கும்

    தன்னையே வீழ்த்தும்

    தடுமாறி நிற்கும்

    இந்த மது

    [ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 55வது பிறந்த நாள் விழா மலர் ]

    9.16 நீ யார்



    தாயால் பிறந்தேன்

    தமிழால் வளர்ந்தேன்

    நாயே நேற்றுன்னை

    நடுவீதியில் சந்தித்தேன்

    நீ யார் என்னை

    நில்லென்று சொல்வதற்கு

    9.17 சாதி மயக்கம்



    வேலய்யா - வடி
    வேலய்யா - உன்னை
    வேண்டி வந்தேன் - ஒரு
    வேலையா(ய்)

    கோலத் தினைப்புனத்தில்
    ஆலோலம் பாடிய
    கோதை வள்ளிக் காதலா,
    சாதித் தடை கடந்த.. (வேலய்யா)

    ஆறுமுகத் தோடும்,
    ஈராறு கரத்தோடும்,
    ஆடும் மயிலோடும்,
    அணிவெல்லும் வேலோடும்,

    மாறாதுணை வந்து
    வணங்கும் மனிதர் - சொந்த
    வாழ்வில் மட்டும் சாதி மயக்கம்
    வந்த தேனையா? (வேலய்யா)

    [ 30-12-80ல் திருச்சி வானொலி நிலைய ஒலிபரப்பில் இசைமணி சீர்காழி கோவிந்தராசன் பாடியது ]

    9.18 அடிமை விலங்கு ஒடிந்தது



    ஒடித்தார்கள் அடிமையெனும் விலங்கைச் சென்று
    உடைத்தார்கள் அதிகாரக் கோட்டை தன்னை
    எதிர்த்துநின்ற தனித்தாளும் முதலாளித்துவம்
    எடுத்த முழு முயற்சியெல்லாம் மண்ணாய்ப் போச்சு
    குடிக்கின்ற தண்ணீரும் செந்நீராச்சு
    கோஷமிட்டுக் கிளம்பியது ஏழைக் கூட்டம்
    துடிக்கின்ற இதயத்துப் பெண்கள் நாட்டின்
    துயர் கொல்லக் குதித்துவிட்டார் போராட்டத்தில்

    இடித்தார்கள் எதேச்சாதிக்காரர் தன்னை
    இருகூறாய்ப் பிளந்துவைத்தார் இரங்கா நெஞ்சை
    வடித்தார்கள் இரத்த வெள்ளம் வாழ்வுக்காக
    மடிந்த உயிர் கணக்கற்றோர் எனினும் மக்கள்
    வெடித்த குண்டில் கிளம்புகின்ற பொறிகள் போல்
    கூறிட்டுக் கிளம்பி நின்று முழக்கமிட்டார்
    கொடுஞ்சிறையும் கொலைவாளும் மலிந்தது,ஆனால்
    கொந்தளிக்கும் மக்கற்படை சளைக்கவில்லை
    தடதடவென்று ஆடிற்று ரஷ்யா அன்று

    தலைக்கொழுத்துத் திரிந்த மன்னன் ஜாரும் வீழ்ந்தான்
    விடுதலையும் பிறந்ததங்கு மக்களாட்சி
    மேவிற்று இன்பமெல்லாம் விளைந்ததங்கே
    அடக்குமுறைக் கஞ்சாத லெனின் ஸ்டாலின்
    ஆரம்பித்த புரட்சியிலே அமைதி கண்டார்
    நடத்து என்றார் சோவியத்தை மக்கள் அன்னார்
    நட்டு வைத்த செம்பயிரும் நட்பும் வாழ்க

    [ தாமரை,1960 ]

    9.19 வாழவிடு



    வாழப் பிறந்தவரை
    வாழவிடு முருகா வாழவிடு
    வாழ் வேண்டுமென்றால் நீயும்
    நீதிகொடு முருகா நீதிகொடு!
    இருப்பவங்க இல்லை என்றால்
    விட்டுவிடு முருகா விட்டுவிடு
    ஏழைகளின் கண்ணீரைத்
    துடைத்துவிடு முருகா துடைத்துவிடு!
    உழைத்துப் பிழைப்பவர்க்கே
    வாழ்வு இல்லை முருகா வாழ்வு இல்லை!
    இங்கே ஏய்த்துப் பிழைப்பவர்க்கு
    வாழ்விருக்கு முருகா வாழ்விருக்கு
    இருப்பவர்கள் இல்லை என்றால்
    விட்டுவிடு முருகா விட்டுவிடு!
    இங்கே உழைத்துப் பிழைப்பவர்க்கு
    என்ன இருக்கு முருகா என்ன இருக்கு!

    ( ஒரு நாடகத்திற்காக எழுதிய பாடல் )

    [ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 55வது பிறந்தநாள் விழா மலர் ]

    9.20 பின்னாலே கண்ணு



    புதுமையான ரோட்டுதான்
    போய்ச் சேர லேட்டுதான்
    அதிகமான ஹைட்டுதான்
    அசந்தால் ஆளு அவுட்டுதான்! (புதுமையான)

    இஞ்சினீயர் சாரு
    ஏறி இயங்கும் காரு
    இரவும் பகலும் டூரு
    நின்னுகிட்டா தேரு! (புதுமையான)

    பகட்டாய் சிலர்வந்து ஜம்முன்னு
    ரசிப்பார் நடுரோட்டிலே நின்னு
    பக்கத்திலே வண்டி வந்ததுன்னு
    பார்த்திடலாம் டான்சு ஒன்னு!

    சட்டம் தெரிஞ்ச மனிதருக்கு
    சமயத்திலே பின்னாலே கண்ணு
    தானா வந்து மோதிக்கிட்டு
    சாதிப்பாங்க டிரைவர் தப்புன்னு!

    என்றுமுள்ள சம்பளந்தான்
    எங்கும் இந்த சங்கடந்தான்
    இரண்டு மூன்று மெம்பர்களானால்
    ஏகாதசி விரதந்தான்!

    [ தனிப்பாடல் ]

    9.21 இருள் வர அஞ்சும்



    மின்னும் இயற்கையெல்லாம்
    உன்னழகைக் காட்டுதடி
    எண்ணமெனும் தேன்கூட்டில்
    இன்பக் கனல் மூட்டுதடி!
    வான நிலாப்பெண்ணை
    வட்டமிட்டு மேகமொன்று
    மோன முகத்தினிலே
    முத்தமிட்டுப் போகுதடி!
    துள்ளிவிழும் நீரலையில்
    வெள்ளிமலர் பூத்ததடி!
    வள்ளியுனை எதிர்பார்த்த
    மெல்லுடலும் வேர்த்ததடி!
    இல்லத்தில் நீயிருந்தால்
    இருள்வர அஞ்சுதடி
    மெல்லத் தமிழ் உனது
    சொல்லில் வந்து கொஞ்சுதடி (மின்னும்)

    [ 22-03-1957 ]

    9.22 காலத்திலே செல்லு



    காலம் கடந்து விட்டது
    பொழுது ஓய்வாகப் போகிறது
    காலத்தோடு வீடு செல்லு
    காலிப் பயல் சுத்துமுன்
    ஞாலத்திலே நம்ம மனம் தமிழ்
    இனத்தின் குலத்தைக் காக்க வேண்டும்
    காலத்திலே செல்லு மகளே!

    9.23 உன்னை நீ!



    சீவி முடித்துத் திருமணக்கும்
    பொட்டு வைத்துக்
    கோவிலைச் சுற்றி வரும்
    குலமகளே-பாவியரின்
    கண்ணிலகப் பட்டுக் களங்கம்
    வரா வண்ணம்
    உன்னை நீ காப்பாற்றிக்கொள்!

    [ பேசும்படத்தில் வௌியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில கவிதை வரிகள் ]

    9.24 இறைவனுக்கு நன்றி



    செல்லக் கிளியே, அல்லிக் குளமே,
    சொல்லத் தெரியாமல் துள்ளி மகிழ்ந்தாடும்
    பிள்ளைச் செல்வமே!
    தாலேலோ தாலேலோ தாலேலோ

    சந்திரனைக் கொஞ்சம் கிள்ளி எடுத்தே
    சாதிப் பழத்தில் சேர்த்து வைத்தே
    உன்றனைச் செய்தே உலகினுக் கீந்த
    அந்த இறைவனின் அன்பினுக்கு என் நன்றியடா!
    தாலேலோ தாலேலோ தாலேலோ

    [ மல்லிகை,ஏப்ரல் 1960 ]

    9.25 நல்லவரைப் போற்றுவோம்


    நாடுயரப் பாடுபடுவோம்
    நல்லவரைப் பாடியாடுவோம்
    சுரண்டலின் பாதை தன்னை மூடுவோம்
    தொழிலாலே வாழுவோம்
    தூங்காமல் ஒன்றாய்க் கூடுவோம்
    இதைக் கேளுங்கோ..
    இவ்வுலக நாடு இனி
    எங்கள் சொந்த வீடு - இல்லை

    என்போர் கண்கள் குருடு.
    செந்நெல் வளம் மேவிட வேர்வை
    சிந்திடும் கூட்டம் நாமானால்
    சீக்கிரம் காண்போம் இன்பமே

    9.26 ஜீவா



    புவியினிலே சுவர்க்கத்தைச் சமைப்பதற்கு
    போராடும் வர்க்கத்தின்
    தலைவன் ஜீவா
    தன்னலமே சிறிது மிலா
    இயக்கம் தந்த

    தமிழ்க் கலையின் முழுவடிவம்
    கலைஞன் ஜீவா.

    [ ஜீவாவைப் பற்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய
    இந்தப் பாடல் ஜீவாவின் மறைவுக்குப்
    பின் தாமரை இதழில் இடம் பெற்றுள்ளது ]

    9.27 கவிஞரின் முதல் கவிதை


    ஓடிப்போ ஓடிப்போ
    கெண்டைக் குஞ்சே - கரை
    ஓரத்தில் மேயாதே
    கெண்டைக் குஞ்சே
    தூண்டில் காரன் வரும்
    நேரமாச்சு - ரொம்பத்
    துள்ளிக் குதிக்காதே
    கெண்டைக் குஞ்சே

    [ பட்டுக்கோட்டைக் கவிஞர் 15 வயதில் எழுதிய முதல் பாடல் ]

    9.28 கவிஞரின் இறுதிக் கவிதை



    செக்கச் சிவந்த செழுங்கதி ரோனும்
    கிழக்கினில் வந்துவிட்டான் - புற
    மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
    வானில் உதித்து விட்டான்.

    கொக்கரக்கோ வெனக் கோழியும் கூவுது
    கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
    சக்கரம் போலவே ஜகம் சுழன்றாடுது
    தொக்கி நின்ற இருள் சொல்லாமல் ஓடுது
    பத்துத் திசையிலும் ஜன சக்தி முழங்கிடுதே (செக்க)

    தெற்கில் ஒரு குரல் தென்பாங்கு பாடுது
    தீய செயல்களைச் செங்கைகள் சாடுது
    பக்குவம் கொண்ட படைபல கூடுது
    சிக்கல் அறுத்து பொது நடை போடுது
    சொத்தை மனம் திருந்தப் புதுச் சத்தம் பிறந்திடுதே (செக்க)

    கத்தும் பறவை கனிகரத்தில் வந்து
    ஒற்றுமை காட்டிடுதே தலைப்
    பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி
    பேதம் வளர்த்திடுதே
    ரத்த வேர்வைகள் சொட்ட உழைத்தவன்
    நெற்றி சுருங்கிடுதே - ஏழை
    உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
    கொட்டம் அடங்கிடுதே - மக்கள்
    வெற்றி நெருங்கிடுதே (செக்க)

    [ 15-08-1959 ஜனசக்தியில் புது ஞாயிறு என்ற தலைப்பில்
    வௌிவந்த இந்த கவிதைதான்
    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய இறுதிக் கவிதை ]