4. 16 திருப்புகலூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
156 செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.1
157 மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப்
பாக மதிநுத லாளையோர் பாகத்தர்
நாக வளையினர் நாக வுடையினர்
போகர் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.2
158 பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.3
159 அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்
நக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துன்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.4
160 ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக்
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.5
161 தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்
சேம நெறியினர் சீரை யுடையவர்
பூமன் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.6
162 உதைத்தார் மறலி உருளவோர் காலாற்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.7
163 கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றுந்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.8
164 ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.9
165 கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே. 4.16.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
தேவியார் - கருந்தார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
Goto Main book