4.17 திருவாரூர் - அரநெறி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
166 எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தார் அரநெறி யாரே. 4.17.1
167 வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர்
தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
வாரமும் பூண்பர் அரநெறி யாரே. 4.17.2
168 தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர்
வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடுந்
துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்
அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே. 4.17.3
169 விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே. 4.17.4
170 துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந்
தற்றவர் தம்வினை யானவெல் லாமற
அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே. 4.17.5
171 கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன் மாலை யிடையிருள்
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித்
தாடர வத்தர் அரநெறி யாரே. 4.17.6
172 கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
நாடவல் லார்வினை வீடவல் லாரே. 4.17.7
173 பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு மாவன சேவடி
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே. 4.17.8
174 முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே. 4.17.9
175 பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறி யாரே. 4.17.10
176 பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்ட
மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட
அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே. 4.17.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
Goto Main book