4.70 திருநனிபள்ளி - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
679 முற்றுணை யாயி னானை
மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை ஆயி னானைச்
சோதியை ஆத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி
உள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும்
நனிபள்ளி அடிக ளாரே. 4.70.1
680 புலர்ந்தகால் பூவும் நீருங்
கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால்
வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச்
சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே. 4.70.2
681 எண்பதும் பத்தும் ஆறு
மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக்
கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை
செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே. 4.70.3
682 பண்ணினார் பாட லாகிப்
பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக்
கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி
ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
நனிபள்ளி அடிக ளாரே. 4.70.4
683 துஞ்சிருள் காலை மாலை
தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும்
அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி
வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார்
நனிபள்ளி அடிக ளாரே. 4.70.5
684 செம்மலர்க் கமலத் தோனுந்
திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பான்
ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும்
நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும்
நனிபள்ளி அடிக ளாரே. 4.70.6
685 அரவத்தால் வரையைச் சுற்றி
அமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும்
ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி
வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார்
நனிபள்ளி அடிக ளாரே. 4.70.7
686 மண்ணுளே திரியும் போது
வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன்
புழுப்பொதி பொள்ள லாக்கை
----- ----- ----- -----
இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின்
பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும்
மறைந்து போயின. 4.70.8-9
687 பத்துமோர் இரட்டி தோளான்
பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள்
படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப்
பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும்
நனிபள்ளிப் பரம னாரே. 4.70.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.
திருச்சிற்றம்பலம்
Goto Main book