5. இரணியவன்மச்சருக்கம் ( )
முற்காலத்திமையவர்கண்முன்பணீந்துதொழமுதல்வ
னற்காலத்துடன்வில்வானால்வகைமாயையுநடத்திச்
சொற்காரும்பொருளெவையுந்தொல்லூழியுறத்தொடுத்த
வற்காலநிலைவிடிவதாமளவாமமையத்து.
இ-ள். பிரமகற்பத்திற் பிரதமமான சிருஷ்டிகாலத்திலே தேவர்கள் எல்லாரும்
வந்து நமஸ்கரித்துச் சிருட்டி அவதாரியை அருளிச் செய்ய வேண்டுமென்று
பிரசன்னம் பண்ண முதல்வனாகிய பரமேசுரர் தனக்கு நல்ல துணைக் காரணமான
கால தத்துவத்தை அதிட்டித்து அருளிச் செய்வார் தனுகரண புவன போகமாகிய
நால்வகைப்பட்ட மாயைகளையும் நடத்திச்சொல்லின் கட்பொருந்தும் பொருளெவையுமாகிய
மந்திர பதவன்னபுவன தத்துவங்களும் தொன்மையையுடைய ஊழியில் முடியத்
தொடங்கிச் சங்கார காலத்து நிலை முடிவதாகிய எல்லையாம் பருவத்தில்--
எ-று. (5-1)
சத்திகளிற்கருத்திருத்தித்தாவிலருமாமாயை
யுய்த்ததனினாதாதியைவகையுமுதிப்பித்து
வைத்தெழுந்துமொழிமறைநூன்மந்திரமேமுதலாய
சுத்தவழிவிரித்தகத்ததத்துவங்கடொருமுதலில்.
இ-ள். சிருட்டிக்க வேண்டுமென்கிற இச்சையினாலே ஞானசத்திமுதலிய சத்திகளில்
கிருபையைபொருத்திக் குற்றமற்றநிஷ்களமான மாமாயையைச் சேர்ப்பித்து
அதனில் நாதம்- விந்து- சதாசிவம்- மகேசுரம்- சுத்தவித்தை என்னும் பஞ்சதத்து
வங்களையுமுண்டாக்கி ஒடுக்கின- வன்னம்- பதம்- வேதாகம சாத்திரங்கள்- மந்திரகலை-
சூக்குமாதிவாக்குகள்- புவனங்கள்- மற்றுமுண்டான சுத்தாத்துவாவைத்தோற்றிவித்து
அசுத்ததத்துவமாகிய பிரிதிவியாதி கலாந்தமாகவொடுங்கின அதோமாயையில்--
எ-று. (5-2)
கலைமுதலாநிலன்முடிவாக்கண்டுணர்வங்கதிற்கருதிப்
பலவுயிர்களிருவினையாற்பயனுலகம்பெறப்பயிற்சி
மலரயன்மால்வரநல்கிமற்றிவைநீர்பற்றிவிரித்
தலைகடலும்வடவரையுமாள்வீரென்றளித்தருளி.
இ-ள். கலாதத்துவ முதல் பிரிதிவி தத்துவம் ஈறாகச் சிருட்டித்து ஞானக்கிரியை
அந்தமான சுத்த வித்தியாதிகள் கலாதிகளுக்கு உணர்வாகவுங் கலாதி களந்தக்
கரணாதிகளுக்கு உணர்வாகவும் அந்தக் கரணங்கள் புறக் கரணங்களுக்கு
உணர்வாகவும் இந்த வகையிலே தம்முடையச் சத்திகள் நின்று பிரேரிக்கும்படி
கற்பித்துச் சர்வாத்துமாக்களும் புண்ணிய பாவத்துக்கு ஈடாகத் தத்துவங்களைக்
கூட்டுப் புசிப்பிக்கத் தக்கதாக அநுக்கிரக சக்தியையுங் கற்பித்து பிரமாண்ட
சிருஷ்டித்திதிகளுக்குக் காரணராக பிரம விஷ்ணுக்களை யுண்டாக்கி இந்தப்
பூலோகத்தில் சிருஷ்டி திதிகளுக்கு அதிகாரிகளாய்த் திருப்பாற் கடலும்
மனோவதியாகிய வடவரையும் ஆண்டுகொண்டிருங்கள் என்று திருவளம்
பற்றியருளி--எ-று. (5-3)
அந்தணர்களுளரானாராகுதிக்காமாதாக்க
டந்தனமந்திரமுன்னேசாற்றினமித்தன்மையினான்
முந்துமவிபெறத்திங்கண்மும்மாரியிமையவர்கள்
சிந்தவுணவுளவாகியகிலமெலாந்துயர்தீர.
இ-ள்: முன்பு பிராமணரைச் சிருட்டித்தோம் வேள்விக்காக பஞ்ச கோமாதாக்களைச்
சிருட்டித்தோம் மந்திரங்களை ஆதியிலே அருளிச் செய்தோம் இத்தன்மையால்
தேவர்கள் முந்தும் அவிர்ப்பாகம் பெறவும் மாதம் மும்மாரி பெய்யவும் அதனால்
பயிர்கள் விளையவும் உயிர்களுக்கெல்லாம் ஆகாரம் உண்டாகி பூலோகமெங்குந்
துயரந் தீரவும்--எ-று. (5-4)
சுருதிவழியொழுகினர்கள்சுவர்க்கத்தாராகமநூற்
சரியைகிரியாயோகர்சாலோகசாமீப
வுருவமமைவினராகவுதவுதுமெம்முடனாகும்
பெருகியஞானிகளெம்மைப்பெற்றார்போக்கற்றாரே.
இ-ள் இப்படி யுண்டான உலகத்திலே வேத விதிப்படி நின்றவர்கள் சுவர்க்க பதவியைப்
பெறுவார்கள் ஆகமத்திற் கூறிய சரியை கிரியா யோகத்தை அநுட்டித்தவர்கள் சாலோக
சாமீப சாரூப பதம்பெற அருள்வோம் எம்முடனே ஒருப்பட்ட பூரணஞானமே தங்களுக்கு
அறிவான ஞானிகள் எம்மைப் பெற்றவர்களும் எம்முட னீக்க மற்றவர்களுமாம்.--எ-று. (5-5)
மண்ணுலகின்முறைபுரியாமடவரைநால்வகைத்தண்டம்
பண்ணிநெறிநடத்திடவும்பலரறியாவகைபுரிந்த
வெண்ணில்வினைவிதிவழியேநுகர்விக்குமியல்பிற்குந்
திண்ணியராமிருதருமருடராகச்செய்துமென.
இ-ள் பூலோகத்திலே வேதாகம மார்க்கத்தில் நடவாத பேதையரை சாம பேத
தான தண்டம் பண்ணிச் சன்மார்க்கத்தில் நடப்பிக்கவும் அந்தக் கரணங்களினாலே
பலரறியாவகை குரூரமாகப் பண்ணின எண்ணிறந்த இருவினையின் விதிப்படியே
நரகங்களிலே புசிக்கும் இயல்பிற்கும் திட சித்தரான தன்ம சொரூபர்களாக விரண்டு
பேரைக்கற்பித்தோமென்று.--எ-று. (5-6)
வானவர்கோனுரைத்திரவிமைந்தர்களிலொருவனுக்கு
ஞானவிழிநல்கிநமனற்பதியுங்கொடுத்தகற்றி
யீனமிலாவொருவனுக்கங்கிலகுமணிமுடியளித்துத்
தேனகுதாரணிவித்துத்தேவர்கடங்கைக்கொடுத்தான்.
இ-ள். தேவதேவர் தேவர்களுக்கு அருளிச்செய்து ஆதித்தன் புத்திரர்களில்
ஒருவனுக்கு ஆத்ம கர்மார்ச் சிதந்தெரிய ஞானதிருட்டி கொடுத்துப் பின்பு
எமனுடைய பூமியதிகாரமுங் கொடுத்தனுப்பிச் சர்வலக்ஷணமுமுள்ள மற்றொருவனுக்குச்
சந்நிதியிலே விளங்கும் மணிமுடிசூட்டி வண்டு பொருந்தி மகிழும் ஆத்தி மாலையும்
அணிவித்து இவனைக் கொண்டு இராச்சியம் பண்ணிக் கொள்ளுங்களென்று
தேவர்கள் கையிலே காட்டிக்கொடுத்தார்-எ-று. (5-7)
மற்றவருங்கொடுபோந்துவடவரைப்பால்வருவிக்கும்
பெற்றியினாலணைந்துநாற்பெருங்கடலுட்படும்புவிக்குக்
கொற்றவனாய்மனுநாமங்கொண்டுநடத்தினனடைவே
முற்றிகழகவருமனுக்களொருநால்வர்முடிந்ததற்பின்.
இ-ள். அத்தேவர்களும் கைப்பிடித்துவந்து மகாமேரு பாரிசத்திலே சேர்த்த
முறைமையினாலே கௌட தேசத்திற் சென்று நாலு கடலுக்குட்பட்ட பெரிய
பூமிக்கு இராசாவாய் மனு என்கிற பேரைக்கொண்டு வேதாகம மார்க்கத்தில்
நீதி நடத்தினன். அந்த அடைவே அவனைப்போல முன்னடந்த மார்க்கத்திலும்
நன்றாக எழுபத்திரண்டு யுகத்துக்குமேல் வரப்பட்ட மனுக்கள் நாலு பேர்கள்
வந்து ஒவ்வொருவராக இராச்சியம் பண்ணி எழுபத்திரண்டு சதிரயுகமும்
முடிய ஒவ்வொருவராக முடிந்தளவில்-எ-று. (5-8)
அன்னவர்கள்பின்னவனுமனுவாகிவவனுக்கு
மன்னுமனைவியரிருவருளராகிமற்றவரின்
முன்னவள்பாலுடன்மடங்கன்முழுநிறமாமகவுதிப்பப்
பின்னவள்பாலெழிலினராயிருதநயர்பிறந்தார்கள்.
இ-ள். அப்படிப்பட்ட நாலு மனுக்களுக்குப்பின் கௌடேசனென்னு மனுவுமுளனாகி
நீதி செலுத்துங் காலத்தில் அவனுக்கு நிலைபெறு மனைவியர் இருவருண்டாகி
அந்த இரண்டு ஸ்ரீகளில் பிரதானமான ஸ்ரீயினிடத்தில் சரீர முழுதும் சிங்க
வாண்ணமாக ஒரு குமாரனுண்டாக அந்த இளைய ஸ்ரீயினிடத்தில் ராசலட்சணம்
பொருந்தின இரண்டு குமாரர் பிறந்தார்கள்-எ-று. (5-9)
விரவுசிங்கவருமன்பின்வேதவன்மன்சுமதியென
வருதநயர்மூவர்களுமறைமுறையின்மலிசடங்கு
பெருகியபின்படைபயின்றுபிறங்குமதகரிபரிதேர்
கருதியுகைத்திடுமாறுமொன்றாகக்கற்றார்கள்.
இ-ள். பொருந்தின சிங்கவர்மன் அவன்பின் வேதவர்மன் அவன்பின் சும்தி
யென முறையே தோன்றின மூன்று குமாரர்களும் வேதமார்க்கத்தில்
க்ஷத்திரியாங்கமான கிரியை பண்ணி முடிந்தபின் ஆயுத சிரமம்பண்ணி
முடித்துப் புகர் விளங்குமத் தகசம-குதிரை-தேர்-முதலானவை ஏறியோட்டு
முபாயங்களும் குறைவற முழுதுங் கற்றார்கள்-எ-று. (5-10)
கற்றதற்பின்முன்னவன் மெய்க்களங்கத்தாலரசாள்கை
குற்றமுளதினியுலகிற்குலமைந்தரிருவரினும்
பெற்றவர்கள்பெறுகின்றார்மனுவிசைவாற்பெருந்தவங்க
ளுற்றொடுங்குமிதுசாலவுறுதிநமக்கெனவுணர்ந்து.
இ-ள். பலகலையுங்கற்ற அதன்பின் முந்தின குமாரனானவன் தன்னுடைய
சரீரத்தின் குற்றத்தினாலே நமக்கு ராச்சியம் பண்ணுகைக்குத் தோஷமுண்டு
இந்தப் பூமியில் தம்பிமார் இருவரினும் மனுவின் இசைவு பெற்றவர்கள்
மனுவுக்குப்பின் நம்முடைய இராச்சியம் பண்ணப் பெறுகின்றார் மேலான
தபசுகளைப் பொருந்திச் சித்தத்தை யொடுக்குவதே மிகவு மாத்மலாபம்
நமக்கென்று திடமாக விசாரித்து-எ-று. (5-11)
மனுவின்மலரடிவணங்கிமன்னவனேயடியேனற்
புனிதமிகுதீர்த்தங்களெங்குளவும்புகுந்தாடிப்
பனிமதியம்வளர்சடையோன்பதிகளுநின்றிருமேனி
யினிதமரும்படிதொழுதிங்கெய்தவருளெனவிசைத்தான்.
இ-ள். மனுவின் பாதமலர்களை வணங்கி மகாராசனே அடியேன் அட்ட திக்கிலுமுள்ள
நல்ல புநிதமான தீர்த்தங்களிலெல்லாஞ் சென்று ஸ்நானம் பண்ணிக் குளிர்ந்த சந்திரன்
தவழ்ந்து வளருகின்ற சடையையுடைய பரமசிவத்தின் திருப்படை வீடுகளில்
வீற்றிருக்கும் சிவமே உன் திருமேனியாகப் பாவித்துத் தொழுது வரும்படி விடைதா
வென்று விண்ணப்பஞ் செய்தான். (5-12)
மன்னவனுமிகநொந்துமைந்தர்மழவிதுமுதிர்ந்த
வென்னுடையதளாவிதுநீயிசைந்தவமினியாமோ
பொன்மணியும்பொருகரியும்புரவிகளும்புணர்தேருங்
கொன்னவிலும்படையுநெடுங்குவலயமுங்கைக்கொண்டு.
இ-ள். இதைகேட்ட மனுவும் மிக விதனப்பட்டுப் பிள்ளைகளெனிலோ இளமை
யுடையவர்கள் நானுமோ முதிர்ந்த தளர்ச்சியை அடைந்தேன் நீ பொருந்தின
தபசுகளில் முயலுவது இராச நீதிக்குப் பொருந்தாது பொருந்தினது கேள் அபிடேகமுதலான
கனக இரத்தினாபரணங்களும் இரதகஜது ரகபதாதிகளும் பெரிய இராச்சியமும்
உன் வசப்படுத்திக் கொண்டு-எ-று. (5-13)
திருந்தநடத்திடுமதுகாண்டவமென்றுசெப்புதலும்
பரந்தபணாமணிப்பாந்தட்பாரந்தாரெனப்பரித்த
பெருந்தடந்தோளிவையின்னும்பேரூழிபொறுத்தற்கென்
னருந்தவமேதருமென்றானரசனவனதனானான்.
இ-ள். நீதி மார்க்கத்தினாலே நடத்துவது நமக்குத் தபசு என்று அருளிச்
செய்தலும், விரிந்த படமும் இரத்தினங்களும் பொருந்தின சேடனால்
சுமக்க ஒண்ணாத பூமியை ஆத்தி மாலையாகத் தரித்த உன்னுடைய
உயர்ந்த பெரிய தோள்கள் நீ இப்போ சொலப்பட்ட சதுரங்க முதலான
இராச்சியமும் இன்னமுங் கற்பாந்தமளவாகத் தாங்குதற்கு நான் பண்ணுகிற
தபசுதானே உண்டாக்கு மென்றான் கௌடதேசனும் அதைக்கேட்டு யாதொரு
பிரதி உத்தரவுஞ் சொல்லாமல் தலை கவிழ்ந்து பூமியைப் பார்த்திருந்தான்-
எ-று. (5-14)
வேறு.
அங்கதிசைவாகவிரவேதனியகன்று
கங்கைகடல்கூடுதுறைகாதலுடனாடிச்
சிங்கவருமாவருடிருந்தவருமாமுற்
றங்கிமிகுவங்கமுயர்சாவகமடைந்தான்.
இ-ள். இவ்வாறு மூர்ச்சிதனாய்ப் பிரதி யுத்தரஞ் சொல்லாமல் இருந்ததுவே அநுமதியாகக்
கைக்கொண்டு அன்றி ராத்திரியே தனியே புறப்பட்டு ஊரெல்லை நீங்கிப்போய்க்
கங்கை முகத்துவாரத்திலே விருப்பத்துடனே தீர்த்தமாடி சிங்க வருமாவானவன் அருள்
திருந்தவரும் வண்ணம் காசி க்ஷேத்திரத்திலே முந்தவசித்து மிகுந்த அங்கதேசம் பெரிய
சாவக நாடுவந்து பொருந்தினான் - எ-று. (5-15)
மற்றதுகடந்துவளரொட்டியவரைப்பிற்
பெற்றமிகுபீமமிகுநாதனடிபேணி
யெற்றுபுனலார்பதிகளெங்கணுமிறைஞ்சித்
தெற்றடவியூடுயர்தெலுங்கமதணைந்தான்.
இ-ள். அந்தச் சாவக நாடுநீங்கி யுயர்ந்த ஒட்டிய தேசத்திலே வசவ பூசிதமான
பீமேச்சுவரன் பாத சேவைபண்ணி அவ்விடத்து எங்குமுள்ள தீர்த்தந் திருப்படை
வீடெல்லாஞ் சேவித்து ஒன்றுக்கொன்று பின்னி நெருங்கும் பெருமரக்காடு சூழும்
தெலுங்க பூமியை யடைந்தான் -எ-று.
எற்றுபுனல் – திரைமோதுந் தீர்த்தம், வசவபூசிதம் என்பது-நந்தியால்
பூசிக்கப்பட்டது. (5-16)
பருப்பதமிறைஞ்சிவிழிசோதிபயில்வித்துத்
திருத்தகுநதிப்பொருவீறீர்த்தமலையாடி
யருத்திமிகுகாளனுடனத்திபணிநித்தன்
பொருப்புறவுடன்றொழுதுபோதலுறுநாளில்
இ-ள். ஸ்ரீசைலத்தைக்கண்டு வணங்கி சோதிமயமான சிவலிங்கத்தை விழியில்நீங்காது
பொருந்துவித்து வைபவமிகுந்த புண்ணியநதி பலவும் ஸ்நாநஞ்செய்து மோட்சார்த்தத்தில்
விருப்பமுள்ள காளனென்னும் நாகமும், ஆனையும் பணியும் பரமசிவத்தையும் காளத்தி
மலையினையும் சாட்டாங்கமாகத் தொழுது தெற்கு நோக்கி வருநாளில்-எ-று. (5-17)
காடதனினூடுசிலையோடுதனியோடும்
வேடனையழைத்துநிழன்மேவியிருவெண்
கோடுமலிகானிலுயர்குன்றுகளின்வென்றிச்
சேடுளவியப்புநனிசெப்பெனவுரைத்தான்.
இ-ள் வழியில் காட்டின் நடுவே வில்லுங்கையுமாகத் தனியே யோடுகின்ற ஒரு
வேடனைக் கண்டு அழைத்து ஒருமர நிழலிலே தன் அருகே யிருக்கச் சொல்லி
இக்கொம்புகள் பின்னிமிகுந்த பெருமரக் காட்டில் உயர்ந்த மலைகளில் வெற்றியுடைத்தான
மேலான புதுமையுள்ளதாகக் கண்டவைகளைச் சொல்லென்று வினவினான்-எ-று (5-18)
வேடனும்வணங்கியடியேன்மிருகநேடுங்
காடிதுவளைந்துகருநாய்கொடொருகாளை
யோடுமிரவும்பகலுமுண்ணிலுயிருண்ணீர்
நீடுதடமுண்டமுதநீருமுளவெங்கும்.
இ-ள் வேடனும் வணங்கிக் கும்பிட்டு விண்ணப்பஞ்சிய்வான் அடியேன் மிருகம் ஏறுங்
காலிறங்கு கால் பார்க்கும் காடிது இந்தக் காட்டைச் சூழ்ந்து நாய் கத்தும்படி
ஒருபிள்ளை இரவும் பகலும் ஓடித்திரியும் குடித்தவர்கள் பிராணனை வாங்குகிற தண்ணீர்
மிகுந்த குளமுண்டு குடித்தவர்கள் ஒருகாலும் சாகாத் தண்ணீர்க் குளமம்
பலவிடத்துமுண்டு-எ-று (5-19)
------------------
ஒருபிள்ளை - பைரவர்
எண்டிசைமயக்குமொருதாரியெநினீழல்
விண்டகல்விலாததருமேவுமொருதாரி
கண்டவர்கரந்துரைகறங்குமொருதாரி
கொண்டநிழல்கண்டுவிழுகூவலொருதாரி.
இ-ள் ஒருவழி தன்னிடத்திற் சென்றவர்களை எட்டுத்திசையும் தெரியாத வண்ணம் மயக்கும்
விளங்கா நின்ற நிழல் காலையும் மாலையும் தன்னைவிட்டு கிழக்கு மேற்கு நீங்குத
லுண்டாகாத மரங்கள் பொருந்தும் ஒருவழி முதற் கண்டவரை பின் காணாமலிருக்க
அவர் வார்த்தை முழங்கா நிற்கும் ஒருவழி கிணற்றை யெட்டிப் பார்த்துத் தன்னிழலைக்
கண்ட மாத்திரத்திலே நிழலுடனே தாங்களும் வீழும் கிணறுமுள்ளது ஒருவழி.-எ-று (5-20)
ஓவிடலிலோசையொருபாலெழுநதிப்பான்
மாவடிவிடாதவொருதேவருளர்மாடே
கூவன்முழையால்வழிகுலாவியொருபச்சைப்
பாவையிருபோதும்விரிபோதுபயில்விக்கும்.
இ-ள் ஒழியாத ஓசைமிகுந்த ஒரு பாலாற்றங் கறையிலே மாவடி நீங்காமல் ஒரு தேவர்
இருப்பார், அவர்க்கு அருகாக ஒரு கிணற்றுக்குள்ளே ஒருகிளை வழியாக வந்து ஒரு
பச்சைப் பாவை இரண்டு போழ்தும் அந்தத் தெய்வத்தைப் பார்த்துக் கொண்டு
சென்று பல பூசையஞ் சொரியா நிற்கும்-எ-று (5-21)
நதியாவது திருக்கம்பையாறு. மாவடிவிடாத ஒருதேவர் ஏகாம்பரநாதர், கூவல்
முழையென்பது, ஒருபிலம். பச்சைப்பாவை, காமாட்சியெனக் கண்டு கொள்க.
துரங்கமிசைகொண்டுவளைசெண்டுகொடொர்கண்டன்
பரந்துலவும்வெள்ளமலிபன்னதிபுகுந்துட்
கரந்தவிடமுன்னரிதுகானமிதன்மேன்மை
யிருந்தபடிசொல்லிலவையெல்லையிலவென்றான்.
இ-ள் குதிரை ஏறிக்கொண்டு வளைசெண்டு கையிலே பிடித்துக்கொண்டு ஒரு
கிராதகன் நித்தம் பரவித்திரியும் அநேகம் ஆறு பெருகிவந்து இன்ன விடத்திலே
போனதென்று தெரிதற் கருமையாம், இந்தக் காட்டில் பருமை புதுமையுள்ளது
எல்லாம்சொல்லில் ஒருகாலமு முடியச் சொல்லப் போகாதுஎன்றான். (5-22)
----------
ஈண்டுக்கிராதன் என்பது - ஐயனாரை.
மற்றவரையிய்தவழிசெய்கவெனவேடன்
றுற்றசரியூடுகொடுபோகியிவர்சொன்ன
கொற்றவரெனக்குமரனுங்குறுகுனான்முற்
கற்றமறைசொற்றமறைகம்பர்திருமுன்பு.
இ-ள் நீ சொன்ன மாவடித் தேவரைக்காணத் தக்கதாக வழிவிடென்று சிங்கவன்மன்
சொல்ல வேடனானவன் சுவடு மறைந்த சரி வழிக்குள்ளாகச் கொண்டுபோய்
இவர்தாம் நான் சொன்ன தேவரென்று காட்டக் கவுடதேச குமாரனும் முன்னே
பிரமாதிகளாலே கற்கப்பட்ட வேதங்கள் ஈச்சுர வரயிக்கியம் விஞ்ஞாபிக்கும்
திருவேகம்பர் துருமுன்னே அணுகினான். -எ-று (5-23)
பேசரியவன் பொடுபணிந்துபெருவாழ்வுற்
றாசையுடன்முக்கணரையங்கணரெனக்கண்
டேசில்புகழ்கூறியிருபோதுமகலாமெய்ப்
பூசனைகள்செய்தருள்பொருந்திடவிருந்தான்.
இ-ள் பேசுதற்கு அரிய பத்தியுடனே நமஸ்கரித்துப் பெறாப் பேறு பெற்று
விருப்பத்துடனே திரிநேத்திரரை கிருபாகடாக்ஷ முள்ளவரென்று தரிசித்துப்
பொல்லாங்கு அற்ற சிவத்தியானம் பண்ணி அகோவிராத்திரி நீங்காமல்
சத்தியமான பூசை பண்ணி அருள்பொருந்த இருந்தான்-எ-று. (5-24)
அண்டர்பெருமானழகுகண்டகல்வதின்றிப்
பிண்டிகனிதேனுணவுபெற்றவையிடக்கொண்
டுண்டுறையுநாளிலொருநாடகுமரனுண்மைத்
திண்டிறலினான்வருகவென்றுமொழிசெய்தான்.
இ-ள் ஏகாம்பர நாதர் திருமேனி அழகைக்கண்டு விட்டு நீங்காமல் தினைமாமாம்
பழந்தேன் முதலான வுணவுகளை வேடன் கொண்டு வந்து கொடுக்கக் கொடுக்கக்
கைக்கொண்டு அருந்தியிருக்கு நாளிலே ஒருநாள் கௌடதேச குமாரனானவன்
வேடனைப் பார்த்துச் சத்தியமான திண்ணியவதி சூரனே வருவாயாகவென்று
சொன்னான். -எ-று (5-25)
தென்களலிடைப்பொருவிறேசமதுலாவிக்
கொன்கடறுடைக்குடகடற்கரைகடப்பா
னென்கடனெனைக்கடறியாவுமகல்விப்பா
னின்கடனெனக்குமரனெண்ணநிகழ்வித்தான்.
இ-ள் தெற்குச் சமுத்திரத்துக்குட்பட்ட ஒப்பற்ற தேசங்களில் சஞ்சரித்துப் பெருமையுள்ள
சுர வழியையுடைய மேல் கடற்கரை வழியாகப் பூமிப் பிரதக்ஷணம் பண்ணுவதே எனக்குச்
சங்கற்பமென்றும் என்னைக் கொண்டு வழியெல்லாங் கடப்பிக்க உனக்குக் கடனென்றும்
கௌடதேச குமாரன் தன்னுடைய அபிப்பிராயந் தெரியச் சொன்னான். -எ-று. (5-26)
அந்தவுரைகொண்டெயினனாகிலடியேனுற்
றிந்தவனமுங்கடறியாவையுமறிந்தே
வந்துகொடுபோவனிருமன்னவெனமுன்னே
வெந்திறலினானடிபணிந்துவிடைகொண்டான்.
இ-ள் கௌடதேசகுமாரன் அப்படிச்சொன்ன வார்த்தையைக் கேட்டு வேடன் அப்படியே
திருவுள்ளமாகில அடியேன் சின்று இப்படிப்பட்ட காடுகளுஞ் சுரவழிகளும் பார்த்தறிந்து
அழைத்துக் கொண்டு போவேன் இவ்விடத்திலே மகாராசனே இருப்பாயாக வென்று
குமாரன் முன்னே கொலைத் தொழிலில் சூரனாகிய கிரந்தகுமாரன் அவ்வரசனைப்
பணிந்து விடை கண்டான்-எ-று. (5-27)
காடுமலையுங்கடறுமாடுதடமாறுங்
கூடுமடுமீனமெனநீடுகுலவேட
னோடியலமந்துசிலநாள்களொழிவித்துத்
தேடிவழிகண்டபடிசிப்பவணைவுற்றான்.
இ-ள் காடுகள் மலைகள் சுரவழி ருஷிகள் வனசரர் முதலானோர் ஆடப்பட்ட கடற்கரையும்
புறச்சுனைப் பக்கங்களில் ஏறுகால் இறங்குகால் வழிகளும் நீங்காமல் மடுவில் வாழுமீன்
போலத் தடையறவோடி இளைத்து நெடுநாளாகத் தேடித் தான் வழி கண்டபடியை யிராச
குமாரனுக்குச் சொல்ல அணைந்தான்-எ-று. (5-28)
அங்கவனணைந்தரசன்மைந்தனடிபேணித்
துங்கவனமங்கணுழைதொல்சரியுமில்சீர்ச்
சங்கவனமுங்கவனமாறருவிதண்கா
னெங்கணுநெருங்கியுளதில்லைவழிசெல்ல.
இ-ள். அந்தக்கிராதன் இராசகுமாரன்அருகே வந்து நமஸ்கரித்துப் பெருவனம் கூரிய
கண்ணுக்கு நுழையத்தக்க பழைய சரி வழியுமில்லை ஓசை பொருந்தின சங்கமுகக்
கடலுந் திரைப் பாச்சலொழியும் $புகார் முகங்களுங் குளிர்ந்த இளங்காடுகளும்
எவ்விடத்திலுஞ் செறிந்திருக்கும் அப்பாற் செல்லவழியில்லை---- எ-று. (5-29)
-----------
சங்கமுகம் - என்பது- கடலில் நதி சேருமிடம்; $ புகார்முகம்-என்பது-முகத்துவாரம்
பின்னுமதன்மாடுசிலநாணடைபெருக்கிச்
சென்னெறியின்முன்னொர்நதிசேரவளர்தில்லைத்
துன்னடவியாயதுதுமுக்கெனமிகுத்தே
யென்னுளநடுங்கும்வகையெங்குமுளதங்கண்.
இ-ள். பின்னரும் அந்தப் பக்கத்திலே சிறிதுநாள் போவதும் வருவதுமாகச் செய்து
செல்லுகிற வழிக்குமுன் ஒரு ஆறுகுறுக்கிட நெருங்கி வளர்ந்த தில்லைக்காடு
செறிந்திருந்தது என்னுள்ளம் துணுக்கென நடுங்கும்படி காடுமுழுதும் கொடிய
தெய்வமாக இருந்தது அவ்விடத்திலே----எ-று. (5-30)
புண்டரிகம்விண்டமலர்பொன்மலிசுனைப்பா
லொண்டனியிருந்தோர்புலியன்பெரிதுறங்கக்
கண்டனனடுங்கினன்மடங்கினனெடுங்கான்
மம்டியிதுவந்தபடியென்றுரைவகுத்தான்.
இ-ள். மலர்ந்த பொற்றாமரைச் சுனைக்கரை அருகே துய்ய இடத்திலே தனியே ஒரு
புலியன் இருந்து உறங்கினன் அதைக்கண்டு நான் முன்னிலும் இரட்டிப்பாகப் பயப்பட்டுத்
திரும்பி ஓடிப்போந்தேன் அந்தப் பய மிகுதியினாலே நெடுந்தூரமான காடுங் கழிந்து
சடுதியிலே போந்தேனென்று சொன்னான். எ-று. (5-31)
கேட்டலுமகிழ்ந்துவிநையொத்தகிளர்வெய்தி
தேட்டமுறுவேட்கைமிகுசிங்கவருமாநீ
காட்டுபுலியன்றனையெனக்கடிதுபோவான்
மீட்டுமுயர்கம்பரைவணங்கிவிடைகொண்டான்.
இ-ள். கிராதன் வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலே இருதயகமல மலர்ந்து
கன்மயாமியமுமான இச்சையுடனே ஆசாரியரைத் தேடுகிற மந்தரதர சத்தினி
பாதம் பொருந்தின வேட்கை மிகுந்த சிங்கவன்மாவானவன் நீ புலியனைக் காட்டுவாயாக
வென்று் சொல்லிக் கடுகப் போம்படி விரைந்து செல்லும் சித்தத்தை மீளத் திருப்பிப்
பெரிய ஏகாம்பரநாதரை நமஸ்கரித்து விஞ்ஞாபனம் செய்து விடைகொண்டு
போந்தான்----எ-று. (5-32)
அத்தனுடனாருயிர்கள்கூடவணைவிக்குஞ்
சத்திதகுவேடனரசன்றநயனைக்கொண்
டெத்தகையகானமுமியாறுமகல்வித்துச்
சித்தமலிதில்லைவனவெல்லைசெறிவித்தான்.
இ-ள் பரசிவனோடு ஆன்மாக்களைச்சேரக் கூட்டுவிக்கும் அருட்சக்தியை யொக்கும்
வேடன் இராசகுமாரனைக் கைக்கொண்டு எந்தப் பெரியகாடுகளும், ஆறுகளும்,
கடந்து கடப்பித்துக் தரிசனமாத்திரத்திலே சித்தஞ் சிவமாக்குந் தில்லை வனத்தினெல்லையை
அணுகுவித்தான்.-எ-று. (5-33)
ஆவிகண்மலங்கழுவுமாசிலருள்போல்வாழ்
வாவிகமலங்கணயனங்கண்மலிவித்துற்
றேவடுகொடுஞ்சிலையன்முன்செல்பொழுதிற்கொண்
டோவியமெனும்பரிசிருந்தவனையுய்த்தான்.
இ-ள் சர்வாத்மாக்களையும் பாசச்சேதம் பண்ணுகிற சுத்தமான அருக்ஷத்தி போல்
பொருந்திய பொற்றாமரைத் தீர்த்தத்தையும் தாமரை மலர்களையும் கண்குளிரப்
பார்த்து நின்று அம்பினாற் கொல்லும் சிலையை யுடைய வேடன் அரசனைக்
கைப்பற்றிக் கொண்டு செல்லும்பொழுது எழுதிவைத்த சித்திரம்போலே இருந்து
உறங்கும் அவனைக் காட்டினான்.-எ-று. (5-34)வேறு
ஏராருங்குமரன் முனியிருந்தபடிகண்டஞ்சிக்
சேராதேயகலமனந்தெரியாதுதிருவுள்ளம்
பேராதநிலைகலக்கல்பிழையாகுமெனவுய்த்தா
னாராதபெருங்காதலருஞ்சாபம்புரியச்சம்.
இ-ள் அழகு பொருந்திய இராஜகுமாரன் வியாக்கிரபாதமுனிவர் நிஷ்டையிலிருக்கும்
பரிசைக்கண்டு பயப்பட்டு மனதினாலும் அணுகப் போகாமனின்று பெரியோர்கள்
திருவுள்ளமெப்படியாமோ அதுவும் அன்றி நீங்காத சிவானுபோக நீக்குதல் அபராதமாய்
முடியுமென்று நினைத்து ஒழியாத ஆசையையும் அரிய சாபமிடுவாரென்கிற அச்சத்தையும்
பொருந்தி-எ-று. (5-35)
அச்சமிகுமிவனிருப்புமுணர்வுமிகவணித்தாகை
நிச்சயம்வற்கலைபுலராநீர்மையதுபலாசிலையும்
பொச்சைதருகுசைப்புல்லும்பொலிசமித்தும்பூங்கலனும்
பச்சைபடமிசையுலராப்படர்சடையும்பரப்புதலால்.
இ-ள் நமக்குப் பயத்தை மிகவுண்டாக்கு மிவர் இருக்கும் சமாதியும் தியானவுணர்வும் சடுதியிலே
உண்டானது நிச்சயம் ஏனெனில் உடுத்த மரவுரி இன்ன முலராமையினாலும் பலாசிலையும் சிறு
செடியிலுள்ள குசைப் புல்லும் மிகுந்த சமித்துந் திருப்பூக்கூடையும் இவற்றின்மேல் பசுமை
வாடாமையினாலும் நீண்ட சடை விரித்திருக்கையாலும்-எ-று (5-36)
என்செய்வோமிருவினைகளினிவிடுமோதவமெவையு
முன்செய்யுமுனிவர்களுமுனிவர்களோமுனிவாகிற்
பன்செய்வதிவனருளாற்பெறுதுமெனக்குமரனவன்
றன்செய்யகழலிறைஞ்சிக்கைதொழுதுதனிநின்றான்.
இ-ள் இனியென் செய்வோம் நாம் ஆர்ச்சித்தகன் மங்கள் நம்மை விட்டுப் போகாது
நெடுங்காலமாகத் தபசு பண்ணும் முனிவர்களுங் கோபிப்பார்களோ கோபமுண்டாகில்
அது நீங்க அநுக்கிரகம் பண்ணுவது இவரருளாற் பெறுதுமென்று அஞ்சாமல் கௌடதேச
குமாரன் வியாக்கிரபாதர் சீர்பாதத்தை நமஸ்கரித்து அஞ்சலியத்தனாய்
(வேடனை யனுப்பிவிட்டு) தனியே நின்றான்-எ-று. (5-37)
புந்தியினிற்பரபோகம்புணர்ந்தகன்றுபொதுஞானம்
வந்தணுகியதுகண்ணாமருவுமவன்றனைநோக்கிச்
சிந்தையினாலருமுனிவன்செல்காலமூன்றினையு
மந்தமிலாவுணர்வைவிரித்தாராய்வானாயினான்.
இ-ள் தனக்குப் பிராணனான மேலான சிவஞானத்தை நித்திய சமாதியிலே பொருநதி
நீங்கிப் பாசஞானத்தை வந்து கிட்டி அதுவிடையமாக யோகப் பிரத்தியக்ஷத்தினாலே
வந்து நமஸ்கரித்த கௌடதேச குமாரனைப் பார்த்துப் பெரிய வியாக்கிரபாத முனிவரானவர்
தன்னுடைய சித்தத்திலே நடக்கிற பூதாதி மூன்று காலத்தினையு முடிவில்லாத தன்னுடைய
ஞானத்தை விரித்து விசாரிப்பாராயினார்-எ-று (5-38)
பூதாதி மூன்றுகாலமாவன பூத பவுஷிய வர்த்தமானமாம்.
போனபலகாலத்தின்பொலிவுகளுமினிப்புணர
மேனிகழுங்காலத்தின்விரிவுகளுஞ்செல்கின்ற
தானமலிகாலத்தினளவுகளுமாராய்ந்து
பான்மைதருங்கற்பமிதுபாதம்மெனும்பரிசுணர்ந்து.
இ-ள் முன்னிருந்த மனுக்கள் செங்கோல் நடத்தின மகிமைகளும் பவுஷியகாலத்தில்
சுவேதவரா கற்பத்திலுண்டான ராசாக்கள் தெய்வப் பிராமணப் பிரிதிபத்தியும்
செங்கோன்மைத் தழைப்புகளும் வர்த்தமானமாகிற மிகுந்த காலத்தினளவையும்
விசாரித்துக் கௌடதேசமனுவின் முந்தின குமாரன் வந்தமையும் விசாரித்து இந்தக்
கற்பம் பரமாணுகற்ப மென்னும்படியு மறிந்து விசாரித்து இந்தப் பிரகாரத்திலே
அடைவே வருகிற இந்தக் கற்பம் பாதம கற்பமென்னும்படியுமறிந்து-எ-று (5-39)
அக்காலமணிகண்டனாடலருளியகால
மெக்காலமெனக்காலமெய்தியவிக்காலத்து
மிக்காலுந்திரைத்தரைக்குவேந்தாவான்வியன்கவுட
திக்கான்வெய்யவன்மரபிற்றிகழ்மனுவாமெனத்தெளிந்து.
இ-ள். அந்த இறந்த காலத்திலே தமக்கும் பதஞ்சலிக்கும் தம்பிரானார் தமது ஆநந்தநிருத்தந்
தரிசிப்பித்த கற்பமெந்தக் கற்பம் என்று தலை தெரியாமல் போம்படிக்கு வந்து தோன்றின
இந்தப் பரம கற்பத்தில் மிகுத்து முழங்குந் திரைக்கடல் சூழும் உலகுக்கு இராசாவாவான்
வியப்பத்தையுடைய கௌட தேசத்திலுள்ளவன் சூரிய வங்கிசத்தில் ஐந்தா மனுவென்ன
விளங்கவறிந்து ( 5-40)
மற்றவன்முப் புதல்வருள ரன்னவரின் முன்வந்த
வெற்றிமிகுங் குமரனிவ னெனவிளங்கி விழிகுளிரக்
கொற்றவன்சே யெதிர்நின்று குவித்தகரத் துடனடுங்கச்
செற்றமின்மா முனிமகிழ்ந்து சிங்கவன்ம னேயென்றான்
இ-ள். அந்தமனுவுக்கு மூன்று குமரர்களுண்டு அவர்களில் முந்தின குமாரனான
அதிவீரனானவன் இவனென்று அறிந்து கண்குளிரப் பார்த்துக் கௌட தேசகுமாரன்
சந்நிதியிலே கம்பிதனாய் அஞ்சலியுடன் நிற்கக் குரோதம் நீங்கிய மகாரிஷி அதிக
பிரியத்துடனே ஏன் சிங்கவன்மனே யென்றார் -எ-று. (5-41)
அடியனே னென்றஞ்சி யாராத காதலுட
னெடிதுவிழுந் திறைஞ்சிவிழி நீர்ததும்ப நின்றவனைச்
சடிலமுடித் திருமுனிவ னழைத்திருத்தித் தனிவனந்த
படிதெளியும் படியெமக்குப் பகர்வாயென் றருள்செய்தான்.
இ-ள். பயப்பட்டு அடியேனடியேன் என்று ஒழியாத ஆதரத்துடனே யேகாங்கமாக
நமஸ்கரித்துக் கண்ணீர் ததும்ப நின்றவனைச் சடா மகுடமுள்ள வியாக்கிரபாத
மகாவிருஷி முன்னே வந்திருக்கக் கற்பித்து நீ தனியே வந்த பிரகாரத்தை நமக்கறியும்படி
பகர்வாயென்றருளிச் செய்தார் -எ-று. (5-42)
அன்னவனுந் தொழுதடியே னாசில்கவு டேசமனு
வென்னுமவன் மைந்தனெனக் கெம்பியரு மிருவருளர்
நின்னுடைய திருவருளா னீள்பிறவிச் சிறைநீங்கப், பொன்னடி
சேர் தவமியற்றப் போந்தனன்யா னெனப்புகன்றான்.
இ-ள். அப்படி சொல்லக் கேட்கப்பட்டவனும் அஞ்சலி பண்ணி அடியேன்
குற்றமில்லாத கௌடதேச மனுவினுடைய பிள்ளை யெனக்குத் தம்பிமார்
இருவருளா உம்முடைய கடாக்ஷத்தினாலெ அநாதியே தொடங்கி நீட்டித்து
வருகிற பிறவிச் சிறை தீர திருவடியைச் சேரத்தக்கத் தவஞ் செய்தற்கு
வந்தே னென்றான்-எ-று (5-43)
மறைமுனிவனதுகேட்டுமன்னுமனுவழிசெலுத்து
முறையுனதாயவனுடலுமுதிர்ந்ததுமாயிருந்தமையாற்
பெறலரியவரசாளும்பேறு பெறலாயிருக்க
நிறைதவநீபுரிவனெனுநினைவுதகாதெனவுரைத்தான்.
இ-ள். பிரமரிஷியான வியாக்கிரபாதர் அதனைக்கேட்டு நிலைபெற்ற மனுவழியிற்
செங்கோல் செலுத்து முறைமை உன்னுடையதாகி அவனுக்கு விருத்த வயதுமா
யிருந்தபடியினாலே யாவருக்கும் பெறுதற்கரிதான அரசாளும் பேற்றைப்
பெறலாயிருக்க மிகுந்த தபசு நீ பண்ணுவேனென்கிற நினைவு உனக்குத்
தகாதென உரைத்தார்-எ-று. (5-44)
அரசாளுமுருவல்லவதிலாசையினியில்லை
விரைசாருந்தொடைமனுமேன்மேவினனேலெம்பியர்க
டரைசாலநடத்தியிடத்தகுவரடியேனுமொரு
கரைசாரும்படியழகார்கடைக்கணளித்தருளென்றான்.
இ-ள். என் வடிவு குற்றவடிவாதலால் அரசாளும் வடிவல்ல, ஆகையினாலே
அதிலாசை யினியில்லை மணம் பொருந்தின ஆத்தி மாலையையுடைய மனு
சுவர்க்கத்தனானால் என் தம்பிமார்கள் பூச் சக்கரமனுவிலும் செங்கோல்
நடத்தத் தக்கவர்களே அடியேனும் சமுசார சாகரத்தில் ஆழாமல் அருட்கரை
காணும்படி கடாக்ஷ திருட்டியான தெப்பமளித் தருளும் என்றான் -எ-று.
மனுவிலுந் தரைசால நடத்தி யிடத்தகுவரென்பது தர்ம விடவனும் பிரியவத்னுமாகிய
மனுக்களின் பின் அக்கினித்திக்கு முதலான சத்ததீவி லேழு மனுக்களும் சம்புத்தீவில்
மனுவின் குமாரர்களான ஒன்பது மனுக்களும் நவகண்டமும் ஆண்டதிலும் பரதன் பாரத
வருஷமான ஒன்பதாங்கண்டத்தை தானாண்டதினும் பரதன் குமாரர்கள் ஏழுபேரும்
சமுத்திராதோதமான ஏழுதீவு மாண்டதினும் மாகந் தீபமுதலாக எவ்வேழு மனுக்கள்
ஆண்டதிலும் நன்றா மகாமேருவிட்டு மகாகிரி நாலுகுலப் பருவதங்களெட்டும் குரு
வருஷமுதல் பாரத வருஷாந்தமான ஒன்பது வருஷ கண்டங்களிலுண்டான ஆன்மாக்களுக்கு
ஒன்றிலொன்று குறைவற நடத்திப் பரத கண்டத்திற் கயிலாய முதலான எண்ணிறந்த
திருப்பதிகளும் கோடி தீர்த்தங்களும் மிகவும் விளங்கப் பண்ணிப்பத்துத் திக்கிலுண்டான
புவனே சுராகளையுங் காலாக்கினி யுருத்திரர் கூரமாண்டர் மாஹ
பலர்-பிரமா-விஷ்ணு-உருத்திரர்-வீரபத்திரர்-பத்திரகாளி-இவர்களையும்
செபம்-ஓம பூசாதியானங்களினாலே பிரியப்படுத்தி நடத்தத் தக்கவர்
என்றமை கண்டுகொள்க. (5-45)
இன்பாரக்கேட்டிவன்றனெழிற்குறைதீர்வுறிலரசாம்
வன்பாரம்பொறுத்தற்குமனமுடையான்போன்றிருந்தான்
பொன்பாவும்பொதுமேவும்புனிதனருள்புரிந்தன்னே
லன்பாரும்பணிக்குநமக்காளாவானெனவுணர்ந்து.
இ-ள். சுகமாகக் கேட்டு இவனுடைய சரீரக் குற்றந் தீர்ந்தால் அரசு நிலையாம்
வலிய பூபாரம் பொறுதற்கு மனமுடையவன்போலே இரா நின்றான். ஆதலால்
பொன்னம்பலத்திலெழுந்தருளிய ஆநாதி சுத்தன்றிருவுளம் வாழ்ந்தானாகில்
அன்பு நிறைந்த திருப்பணி மகாபூசை நித்திய நைமித்தியங்கள் முதலானவை
திரவிய லோபமுற நடத்துதற்கு இவனே நமக்காளாவானென்று தீர அறிந்து----
எ-று. (5-46)
வருமளவுநில்லென்றுமற்றவனைக்கரைநிறுத்தித்
திருமலியும்பதஞ்சலிபாற்சென்றவனுக்கிவன்வரவு
பரிவினுடனுரைசெய்துபைம்பொனணிமணிமன்றிற்
கருணைநடந்தொழுதற்குக்காலமாயுள்புக்கார்.
இ-ள். யாம் வருமளவும் இந்தவாவிக் கரையிலே நில்லென்று சிங்கவன்மாவுக்குக்
தற்பித்து வைபவமிகுந்த பதஞ்சலிமகா இருஷியிடத்திற் சென்று அவருக்குச்
சிங்கவன்மா வந்தபடியைக் கிருபையுடனே சொல்லி இருவரும் கூடிவந்து
பொன்விளக்கு மணிமன்றத்து வாசலினின்று காருண்ணிய நிருத்தம் நமஸ்கரிக்கக்
காலமான தறிந்து வாயிலுள் புக்கார்----எ-று. (5-47)
பெருக்குவினைவலியார்கொலபிழைப்பார்முன்பிழைப்பான
கருக்குழிவெஞ்சிறைநீங்கக்கடைக்கணளித்தருளாதே
யிருக்குமொழிமுனியகன்றானினியெங்கேயெனநொந்து
திருக்குளத்தின்கரைநின்றான்சிங்கவருமன்றிகைத்து.
இ-ள். ஒரு கன்மம்புசிக்கையில் அனேககன்மமார்ச்சிக்கும் வினைவழியைத் தப்பிப்
பிழைப்பாரார்- முன்னே யார்ச்சித்த பிரார்த்த சரீரமான கருக்குழியாகிய கொடுஞ்
சிறை நீங்கக் கடைக்கண் பார்த்தருளாமல் பதவாக்கியப் பிரமாண ஞானவிருஷி
யெழுந்தருளினார். இனிப் பிழைப்பெங்கேயென்று மிக விதனப்பட்டுத் திருக்குளத்தின்
கரையிலே சிங்கவன்மன் திகைத்து நின்றான். (5-48)
நடந்தொழவந்துள்புகுந்தநன்முனிவரிறைவனுக்கு
மடங்கலெனநிகழ்மன்னன் மைந்தன்வரவுரைசெய்தா
லடங்கலருமருடருமோமுனிந்திடுமோவென்றஞ்சி
முடிந்தபடிமுடிகவெனத்துணிந்தனராய்முன்றொழுது.
இ-ள். ஆநந்தநிருத்தஞ் சேவிக்கக் காலம் பெற்று உள்புகுந்த சுத்தமுனிவர் தம்பிரானாற்குச்
சிங்கம்போல விளங்கும் இராசகுமாரன் வந்தமையை விண்ணப்பஞ் செய்தால் அடங்காத
பரிபூரணமான கடாக்ஷந்தருமோ கோபித்தருளுமோ என்று பயப்பட்டு முடிந்தவாறு
முடிகவென்று துணிந்தவர்களாய்ச் சந்நிதியிலே நமஸ்க்கரித்து----எ-று. (5-49)
காலமறிந்தருமுனிவர்கருணையனேகவுடேசன்
பாலனணைந்தனனுடலிற்பழுதகற்றிப்பரதஞ்செய்
கோலமவன்றனக்கருளியடிமைகொளவேண்டுமென
மேலவனையிடம்பார்த்துவிண்ணப்பஞ்செய்தார்கள்.
இ-ள். சமயமறிந்து பெரியமுனிவர் இருவருங் கருணாகரனே கவுடதேச இராஜகுமாரன்
இங்கே வந்தானவன் சரீரத்தில் பழுதுநீக்கி ஆநந்த நிருத்தம் அவனுக்கும் புலப்படுத்தி
அடிமை கொண்டருள வேண்டுமென்று எப்பொருட்கு மேலானவர்க்குக் காலமறிந்து
விண்ணப்பஞ் செய்தார்கள்-எ-று. (5-50)
தெண்டிரைசேர்சடையாருந்திருவுள்ளமகிழ்ந்தருளி
முண்டகவாவியிற்புக்குமூழ்கமொழிந்தவனைமுனீர்
கொண்டுவருகெனவருளுங்குலவுதிருவருளகேளா
வண்டர்தொழுங்கணநாதரருளிப்பாடென்றார்கள்.
இ-ள். தெள்ளியகங்கை யலைசேர்ந்த சடாமௌலியாருந் திருவுள்ள மகிழ்ந்தருளிப்
புண்டரீகப் பொய்கையிலே ஸ்நாநம் பண்ணச்சொல்லிக் கற்பித்து அவனை
நம்மெதிரில் கொண்டவாருங்களென்று அருளிச்செய்த திருவருள் கேட்டுத்
தேவர்கள் தொழுங் கணநாதர் அருளிப் பாடென்றார்கள்-எ-று. (5-51)
அங்கருளிப்பாடியரோடருமுனிவர்கடிதணைந்து
சிங்கவன்மாவுனக்கின்பத்திருந்துநடம்புரிந்தருள
வெங்கள்பிரானருள்செய்தானெய்துகவென்றவனையெழிற்
பங்கயப்பூந்தடமதனிற்படிகவெனவுரைசெய்தார்.
இ-ள். அவ்விடத்துப் பொருந்திய கணநாதர்களுடனே பெரியமுனிவர்களும்
சடுதியிலே பொருந்தி சிங்கவன்மனே உனக்காநந்த நிருத்தந் திருவுளம் பற்ற
எங்கள் தம்பிரானார் அருளிச் செய்தராவாவென்று அவனைப் பொற்றாமரைப்
பொய்கையிலே ஸ்நானம் பண்ணச் சொல்லிக் கற்பித்தார்கள்-எ-று. (5-52)
அருளதனாற்றடம்படியுமவன்கடன்மேலருக்கனென
விரவுபசுங்கானடைந்தமேருகிரியெனவிளங்கி
யிரணியமாமுருவாகியெழுந்ததுகண்டதிசயித்துப்
பரவியதுபெயராகயாவர்களும் பயில்வித்தார்.
இ-ள். அருளாலே ஸ்நானம்பண்ணி எழுந்திருக்கும் வன்கடல் மேலுதிக்கும் ஆதித்தனைப்
போலவும் பசுமை பொருந்தின காடுசூழ்ந்த மகாமேருவைப் போலவும் பிரகாசித்துப்
பொற்சொரூபமா யெழுந்திருந்தமைகள் கண்டு ஆச்சரியப்பட்டு எல்லாரும் புகழ்ந்து
அந்த விரணியவன்னமே பேராக இரணியவன்மனென்று பொருந்தப் பேர் கற்பித்தார்கள்
-எ-று. (5-53)
மல்குபுலிக்கான்முனிவன்மற்றவன்றன்வலச்செவியி
னலகுதிருவெழுத்தஞ்சுநவின்றவனைக்கொடுபோந்து
பல்குபுகழ்த்திருச்சிற்றம்பலமுன்புபணிவித்தான்
செல்வனுமங்கவன்காணத்திருந்துநடந்தெரிவித்தான்.
இ-ள். நெருங்கிய புலிக்கால் முனிவன் அந்த இரணியவர்மன் வலச்செவியிலே
முத்தியளிக்கும் ஸ்ரீபஞ்சாக்கர வுபதேசம் பண்ணி அவனை அழைத்துக் கொண்டு
போந்து அநந்தமுகமாக வேதம் புகழும் சிதம்பரநாதர் சந்நிதியிலே நமஸ்கரிப்பித்தார்
சிதம்பர நாதராகிய ஆநந்தச்செல்வரும் அவ்விடத்திலே அந்த இரணியவர்மன் காண
ஆநந்தநிருத்தம் புலப்படுத்தினார்-எ-று. (5-54)
திருநடமுன்றெரிபொழுதிற்றிறலரசன்புளகமுட
னருவியிருவிழிபொழியவாநந்தபரவசனா
யுருகியுளமிகத்துளங்கியுரைகுழறிவிதிர்விதிர்த்துக்
கரகமலஞ்சிரமுகிழ்ப்பக்காசினியின்மிசைவீழ்ந்தான்.
இ-ள். ஆநந்தநிருத்த முன்னே கண்ணுக்குப் புலப்படத் தெரிந்தபொழுது அருள்
விரகனாகிய வீரராசா புலகிதத்துடனே இரண்டு கண்ணும் நீர்த்தாரை கொள்ள
ஒழியாத சுகமேலிட்டு இருதயம் உருகிநடுங்கி வாக்குத் தழுதழுத்து மயிர்சிலித்துக்
கைத்தாமரை சென்னியிற்குவித்துப் பூதலத்தில் வீழ்ந்தான். (5-55)
வேறு.
மாண்டகுமனங்கரைந்துமண்மிசைவீழ்ந்திறைஞ்சி
நீண்டசெஞ்சடையாய்போற்றிநின்மலர்போற்றிதுன்ப
மீண்டுகொண்டுயிருமாயாவுடலையும்வேதகஞ்செய்
தாண்டவங்கணனேபோற்றியண்ணலேபோற்றிபோற்றி.
இ-ள். இரும்பிலு வலியதாக எண்ணத் தக்கமனது நீராளமாயுருக பூதலத்திலே தாழ்ந்து
பணிந்துநின்று செக்கர் வானம் போன்ற நீண்ட சடையாய் போற்றி மலரகிதனே
போற்றி துன்பச் சிறையிலு மீட்டுக்கொண்டு வுயிரையு மாயா சரீரத்தையுந்
தரிசனத்தால் வேகம் பண்ணியருளாக்கி யாட்படுத்திக் கொண்ட அருட்கண்ணனே
போற்றி சர்வகர்த்தாவே போற்றி போற்றி-எ-று. (5-56)
அடவியிற்பிறந்துதுன்பாராக்கைகொண்டுழன்றுவீழக்
கடவியவென்னைமீட்டுன்கருணைவெள்ளத்தழுத்தித்
திடமிகுமறைகள்காணாத்திகழ்திருமன்றிலாடு
நடநிலைகாட்டியாண்டநாதனேபோற்றிபோற்றி.
இ-ள். வனத்திலே பிறந்து துக்கமிகுத்த சரீரத்தைக் கொண்டு பாவத்தைப்பண்ணி
யுழன்று திரிந்து அதோ கதியிலே வீழக் கடவதான வென்னை அதில் போக்காமல்
மீளவிட்டு உன் காருண்ணிய சமுத்திரத்திலே யழுத்தி அகம் பிரமமென்கிற திடமிகுத்த
வேதங்கள் காணாம லெப்பொழுதும் எல்லாப் பதார்த்தங்களிலும் விளங்கா நிற்கிற
ஞானமயமான மன்றின் முயலுமாநந்த நிருத்தத்தி னுண்மையைக் காட்டி ஆட்கொண்ட
வாத்ம நாயகனே போற்றி போற்றி-எ-று. (5-57)
முன்பருந்தவங்கள்செய்தேன்முயங்கியபுயங்கங்காணப்
பின்பருந்தவத்தோரொதேன்பிறங்கிடைக்கிடந்தகால
மென்பணிகொள்வாயென்னையினிப்பணிகொள்வாயீறி
லன்பருள்செய்வாயென்றென்டியிணைதொழுதுவீழ்ந்தான்.
இ-ள். நீ பொருந்தின நிருத்தங் காண்பதற்குப் பூதகாலத்து அரிய தவங்களைச்
செய்தேன் பின்னாகிய பவிஷய காலத்திற் பெரிய ரிஷிகளுக்கு ஒப்பானேன்,
விளங்கப்பட்ட நடுநின்ற வர்த்தமான காலத்தில் எலும்பாபரண மணிந்தவரே
என்னை ஊழியங் கொண்டருள்வீராக, முடிவிலாத அன்பு அளித்தருளு வீராகவென்று
விண்ணப்பஞ்செய்து ஸ்ரீபாதங்களிலே நமஸ்கரித்து வீழ்ந்தான்-எ-று. (5-58)
இவ்வகைபுகழவெந்தையிரணியவன்மவன்பின்
மெய்வகையுவந்தோமிந்தவியாக்கிரபாதனுக்கும்
பைவளர்பதஞ்சலிக்குமெமக்கும்வான்பணியவர்க்குஞ்
செய்கவென்றருளிச்செய்தான்றேவாகடேவதேவன்.
இ-ள். இந்தவடைவிலே தோத்திரஞ்செய்ய என்னுடைய தம்பிரானாரும் இரணீயவர்மனே
உன் அன்பின் வாய்மையையு வந்தோம் இந்த வியாக்கிர பாதனுக்கும் விரிந்த
படத்தையுடைய பதஞ்சலிக்கும் எமக்குந் தேவர்கள் பணியுந் தில்லைவாழ் அந்தணர்க்கும்
ஊழியஞ் செய்யென்று அருளிச் செய்தார் தேவர்கள் தேவன் - எ-று. (5-59)
ஆதிநாயகனளித்தவருடலைமேற்கொண்டாடித்
தீதிலாக்கோயில்காலஞ்சேவித்துத்திருமுன்போற்றிக்
காதலால்வணங்கியேத்திக்கருமூலகாரணன்பாற்
கோதிலாமுனிமகிழ்ந்துகுறுகினான்குமரனோடும்.
இ-ள். சர்வாதிபதியானவர் திருவுளம்பற்றின அருளைத்தலை மேற்கொண்டு கூத்தாடிக்
குற்றமில்லாத கோயிலின் காலமறிந்து சேவித்துச் சந்நிதியிலே தோத்திரஞ் செய்து
பத்தியினாலே வணங்கியேத்தி ஸ்ரீமூலத்தான முடைய தம்பிரானாரருகே குற்றமில்லாத
வியாக்கிரபாத மகாருஷியதி பிரியத்துடனே இரணியவன்மனுடனே வந்து குறுகினார்-எ-று. (5-60)
இரணியவன்மநாமுன்னிறைஞ்சியதிங்கையீங்காற்
றிருநடங்காணப்பெற்றோமென்றவன்றனக்குச்செப்பி
மருமலர்தூவுவித்துவளர்புலீச்சுரத்துமன்னு
மொருவனதிருதாள்போற்றியுறவுவிறைஞ்சுவித்தான்.
இ-ள். இரணியவன்மனே நாம்முன்னம் நமஸ்கரித்து வழிபட்டது இந்த வஸ்துவை யாக்கும்
இந்த முதலை வழிபட்டதினாலே திருநடங்காணப் பெற்றோம் என்று அவன் தனக்கு
அநுக்கிரகித்து மணம் இனிய புட்பாஞ்சலி செய்வித்துப் பெரிய வியாக்கிரேச்சுரத்திற்
பொருந்தின ஒப்பில்லாதவனுடைய ஸ்ரீபாத பங்கயத்தைத் தோத்திரஞ்செய்து உறவுபொருந்த நமஸ்கரிப்பித்தான்-எ-று. (5-61)
ஆதியைப்பதஞ்சலிக்காமண்ணலையர்ச்சித்தற்குப்
போதுகவென்றுகொண்டுபோய்ப்பணிவித்துப்போந்து
காதலினிற்புகுந்துகருதுபமன்னியன்பின்
பேதைநீபெறாதுபெற்றபிள்ளைகைக்கொள்கவென்றான்.
இ-ள். ஆதிவஸ்துவானவரைப் பதஞ்சலிக்குத் தேவனான சுவாமியை அர்ச்சனை செய்தற்கு
வருகவென்று அழைத்துக் கொண்டு போய்ப் பணிவித்து மீண்டு காதலுடனே பன்னசாலை
புகுந்து திரிகாலமும் கருதப்படும் உபமன்னியனுக்குப் பின்பு நீபெறாமற் பெற்ற பிள்ளையை
யிரட்சித்துக் கொள் பெண்ணே என்று தம்பத்தினியை நோக்கிச் சொன்னார்-எ-று. (5-62)
என்றவனருளக்கேட்டவிரணியவன்மனென்னும்
வென்றிகொள்குமரனன்னைவியன்மலர்ப்பாதமேத்தப்
பின்றிகழ்சடையானாமம்பேசுநாட்பிறந்தநாளா
மன்றுளாரெமக்களித்தமணியெனமகவைக்கொண்டாள்.
இ-ள். என்று அந்த வியாக்கிரபாதர் அருளிச் செய்யக்கேட்ட இரணியவன்மனென்னும்
வெற்றிப்பாடுடைய குமாரன் மாதாவினுடைய மணம் பொருந்தின செங்கமலம் போலும்
பாதங்களை வணங்கிப் போற்றப் பின்தாழ்ந்து விளங்கின சடையானுடைய ஸ்ரீபஞ்சாக்கார
முபதேசம் பண்ணின நாளே பிறந்த நாளாகக் கொண்டு மன்றுணீங்காதார் நமக்களித்த
பிள்ளையென்று வளர்த்துக் கொண்டாள்-எ-று. (5-63)
அந்தமிலின்பமெய்தியரசிளங்குமரனன்பான்
மைந்தனாய்வாழுநாளின்மறைமுனிகருணையாலே
புந்தியால்லுவந்திருந்துபுதல்வனையழைத்திருத்திச்
சிந்தையாருபதேசங்களருளினாற்செப்பலுற்றான்.
இ-ள். முடிவில்லாத இன்பம் பொருந்தி இராசகுமாரன் மாதாவும் பிதாவுந் தன்பேரிலே வைத்த
அன்பினாலே தானே பிள்ளையாகி வாழுநாளில் வேதமுனி கிருபையினாலே மனங்
களிகூர்ந்திருந்து பிள்ளையை அழைத்து முன்னே வைத்துக்கொண்டு சித்தபாக மிகவுண்டாக்கும்
அருளுபதேசம் பண்ணத் தொடங்கினார்-எ-று. (5-64)
வாக்கொடுமனமிறந்தமன்னவனெங்குமாகி
நீக்கறநிறைந்தானேனுநிகழ்தராததனான்முத்தி
போக்கெளிதல்லவென்றப்புனிதனேபுந்திசெய்தெம்
பாக்கியவகையாலெண்ணில்பதிமிகும்பாரில்வைத்தான்.
இ-ள். வாக்குமனாதீதராகிய இறைவர் பரிபூரணமாய்ச் சடசித்துக்களில் நீங்காமனிறைந்தாரே
யாகிலும் ஒருவர்க்கு விளங்கத்தோன்றாது, ஆகையால் முத்தியிலே போக்குவது எளிதல்லவென்று
ஆநாதி சுத்தராகிய அவரே திருவுள்ளத்தடைந்து நாம் முன்செய்த புண்ணிய மிகுதியினாலே
எண்ணிறந்த திருப்படைவீடு - நீண்டபூமியிலே கற்பித்தார்-எ-று. (5-65)
திருப்படைவீடு என்பது-கோயில்
பதிகளெண்ணிலவுண்டென்றுபகர்தருமவற்றுளண்ணல்
கதிதரவறுபத்தெட்டாங்கற்பிதமானதானத்
திதமலிதொகையிலோராறேற்றமாமற்றவற்று
ளதிகமாமாரூர்காசியம்பலமென்றாரன்றே.
இ-ள். எண்ணிறந்த திருப்படைவீடு உண்டென்று வேதாகமஞ் சொல்லும் அவற்றுள் முத்திக்ஷேத்திரமாகத்
தம்பிரானார் கற்பிக்கப்பட்ட அறுபத்தெட்டுத் தானங்களில் திருவுள்ளத்து மிகவும் பொருந்தினது இந்தத்
தொகையில் ஆறு திருப்படைவீடு மேன்மையுள்ளதாக இருக்கும் ஆறாகிய அவற்றிற்குள்ளே
மேலான திருவாரூர் திருக்காசி திருஅம்பலமென்று வேதாகமங்களின் வழி போனவர்கள்
அநாதியே சொன்னார்கள்-எ-று. (5-66)
மெய்ம்மைநற்சரியைபத்திவிளங்கியஞானமேவா
வெம்மையொப்பவர்க்குமுத்தியிறையிலியாகவிட்ட
மும்மைநற்பதிகடம்மின்முளைத்தவர் முடிந்தோர்மூவாச்
செம்மலர்க்கழல்கண்டோர்கள்சிவத்தினைச்சேர்வரன்றே.
இ-ள். சத்தியமானசரியாபதம் கிரியாபதம்யோகபதம் பத்திஞான வயிராக்கியம் பொருந்தாத எம்மை
ஒப்பவாக்கு அத்துவித முத்தியை யிறையிலியாகக் கொடுத்த நல்ல மூன்று திருப்படைவீடு தன்னில்
திருவாரூரிற் பிறந்தவர்கள் காசியிலிறந்தவர்கள் சிதம்பரத்தில் மூப்பு இளமையில்லாத செந்தாமரை
மலர்பொன்ற ஸ்ரீபாதம் சேவித்தோர்கள் அப்பொழுதே சிவசாயுச்சியம் பெறுவார்கள் -எ-று. (5-67)
பிறந்திலமாரூர் தன்னிற்பேசியகாசிமேவி
யிறந்திலமிரண்டுமுத்தியின்பமும்பின்பதாநா
முறைந்திடுந்தில்லைஞானயோகமார்தானமாமாற்
செறிந்தடிகாணச்சீவன்முத்தராய்த்திரியலாமே.
---------------
இறையிலி என்பது சர்வமானியம்.
இ-ள். திருவாரூரிற் பிறக்க பெற்றோமில்லை மரணமுத்தியென்று சொல்லிய காசியிலே போய் மரிக்கப்
பெற்றோமில்லை இரண்டு திருப்படை வீட்டிற் சனனமரண முத்திகளும் இப்போது சாதிக்கவென்னில்
நெடுங்காலத்துக்குப்பின் கை கூடுமாதலால் முதற்றரமாகாது நாம் வந்து பொருந்தும் தில்லைவனம்
ஞானங் கூடி நிறைந்த தலமாதலால் அதிற்பொருந்தின ஸ்ரீபாதந் தரிசனம் பண்ணில் அப்பொழுதே
சீவன் முத்தராய் எங்கும் சீராட்டித்திரியலாம்.- எ-று. (5-68)
அரிவையூரழிவிலூரென்றலகினூல்பரவமேருத்
திருவிலூரிரதத்தேந்துஞ்செம்மையானம்மையாளும்
பரிவிலூர்புலிபோனல்கிப்பருமைசெய்பெருமையாலே
பிரிவிலூர்தனியூரெம்மூர்பெரும்பற்றப்புலியூராகும்.
இ-ள். சிவசத்திவூரென்றும் அழிவிலாதவூர் என்றும் எண்ணிறந்த வேதாக மங்களால் புகழப்பட்ட
மகாமேருவென்னுந் திருக்கை வில்லைத் தாமூருந் தேரிலே நின்று தாங்கும் செம்பவளக்குன்றொப்பானவா
எம்மையாண்டு கொண்டருளும் பரிவினாலே பெரியபுலி போலத் திருவுளம்பற்றி வியாக்கிரபாத னென்று
ஒருபெயராக்கின திருவருளின் பெருமையாலே அக்கினியும் உட்டணமும் போலத் தமக்கு நீங்காத
ஞானசொரூபமாகிய ஒப்பில்லாதவூர் எம்மூருமாகி யெம்முடைய பேராலே பெரும்பற்றப் புலியூரென்றும்
பேரானது-எ-று.
பெரும்பற்றப் புலியூரென்பதற்கு முன்னுரைத்தபொருளை யுரைத்துக் கொள்க. (5-69)
தன்றனிமன்றமென்றுஞ்சச்சிதாநந்தமாகு
மென்றருமறைகணான்குமீரிருதிசையும்பற்றி
நின்றருள்பரவநாதனேரிழைகாணவேணி
பின்றிகழ்தரநின்றாடும்பெற்றிநீபெற்றியன்றே.
இ-ள். தனது ஒப்பில்லாதசபை சத்திய ஞாநாநந்தமாகுமென்று எப்போதும் அருமறைகள் நான்கும்
நாலுதிக்கும் பொருந்தி விடாமனின்று திருவருளைத் தோத்திரம் பண்ணச் சிதம்பர நாதரானவர்
கிரியாசத்திகாண விரிந்த சடைபின் விளங்க அசையாமல் நின்றாடும் ஆநந்தத்தை நீ பெற்றாயன்றோ-
எ-று. (5-70)
பாவகமிறந்தநாதன்பரதமுன்பணிக்கவந்தான்
றேவர்கடேவனென்னுந்திகழ்திருச்சின்னவோசை
மேவியபோதிலன்புமென்புமையுணர்வுமெய்யு
மாவியுமுருகநம்மையாண்டவாகாண்டியன்றே.
இ-ள். மனோபாவங்கடந்த பரமசிவம் முன் ஆநந்த நிருத்தத்தைக் கட்புலனாக அளிக்க
வந்தார் தேவர்கள் தேவனென்று விளங்கின திருச்சின்னவோசை கேட்ட மாத்திரத்திலே
தன்னளவிற் சினேகமும் எம்முடைய சரீரத்திலே யென்பும் பஞ்சேந்திரிய விஷையங்களிற்
சுட்டறிவுஞ் சரீரமும் இவற்றிற்குப் பிராணனாய் நின்ற நாமும் வகுப்பற்றுப் பொறியிற்
கலந்து உருகியா நந்தவெள்ளமாக நம்மை யாண்டு கொண்டவகை நீகாணப்பெற்றாய்-
எ-று. (5-71)
தேசமார் மன்ற கன்று சிவகதி தேடி யுற்றாற்
காசியி லில்லை தில்லை கதிதரு மென்ற ணைந்தாற்
பாசம தகல முத்தி பணித்திடு மென்றா ரென்றா
லீசன தருளி ரக்கத் தெல்லையார் சொல்லு வாரே.
இ-ள் தக்ஷண தேசத்திலுள்ளார் நிறைந்த ஞாநமாகிய சபையை அணுகாமல் நீங்கிக் காசி
மான்மியங்கேட்டு முத்திபெறச் சென்றால் காசியென்கிற அவிமுத்தத்தில் அவர்களுக்கு
முத்தியில்லை காசி க்ஷேத்திரத்திலுள்ளவர்கள் சிதம்பர மான்மியத்தைக்கேட்டு அடைந்து
சீர்பாத தரிசனம் பண்ணின மாத்திரத்திலே பஞ்ச பாசமகலச் சிவசாயுச்சியத்தைக்
கற்பித்திடுமென்று வேதாகம வழிச் சென்றோர்கள் சொன்னாரென்றால் சர்வேசுரனுடைய
அருளின் காருண்ணியத்தை யாரளவு படுத்திச் சொல்லுவார்கள்-எ-று. (5-72)
கன்றம ரன்பா லான்பால் கவர்தருங் கால மேனும்
வென்றிகொ ளம்பு வீழும் வேலையா யினுமி மைப்பிற்
சென்றுறு மமைய மேனுந் திருவடி தெளிய நோக்கி
நின்றவர் காண நின்றார் நீள்பவ நீங்கி னாரே.
இ-ள் கன்று வாய்வைத்த மாத்திரத்திலே யிரங்கிச்சுரந்த பசுவின்பால் கறக்கிறகால
மாத்திரமாகிலும் வெற்றிகொள்ளவெய்த அம்பு ஆறிவிழுங் காலமாகிலும்
ஒருநிமிஷஞ்சென்று பொருந்தினமாத்திரத்திலே யாகிலும் சீர்பாதம் விளங்கக்கண்டு
பாதத்திலே ஒருகால் கூடிநின்றவர்கள் எதிர்ப்பட்டு நின்று ஆர்த்த பிறவித்துயரால்
நீட்டிப்பு நீங்கினார்கள்-எ-று (5-73)
ஆரண வுருவார் தில்லை யம்பல மெய்தப் பெற்றோ
ரோருணர் வாவ ரென்று மொன்றல ரொன்றா ரல்லர்
காரண ராகா ரொத்த கருத்திலர் நிருத்த வின்பப்
பூரண வர்கள் வாழும் புவனமும் பொதுவா மன்றே.
இ-ள் வேத சொரூபமாயுள்ள தம்பிரானாருடைய தில்லையம்பலத்தைத் தரிசிக்கப்
பெற்றவர்கள் பூரணஞானமாவார்கள் எக்காலும் வேதாந்தஞ் சொல்லும்
சாயுச்சியம்போல வொன்றாயிரார்கள். இரண்டறுத் திருக்கையாகிய சாயுச்சியம்
பொருந்தியிருப்பார்கள், பஞ்ச கிருத்திய கர்த்தாக்களாகார் அதேதென்னில்
கிருத்தியம் பண்ணுவதற்கு இச்சை இல்லாதவராதலால் நிருத்தாநந்த பூரணாநுபவர்
எப்படிப்பட்ட அடியார் எந்தப் பூமியிலே திருவுளம் வாழ்ந்து எழுந்தருளினு
மவ்விடமெங்குஞ் சுத்தஞான மயமாம்-எ-று (5-74)
கண்ணுத லாடல் வெற்பிற் காரிகை காணு மிந்தப்
புண்ணிய மன்றெ வர்க்கும் பொதுவெனு மதனாற் சூதன்
றண்ணளி வியாதன் மைந்தன் சவுனகன் றநய னென்றென்
றெண்ணரு முனிவர் தில்லை யெல்லையி னெய்தி னார்கள்.
இ-ள் பரமேசுரனுடைய நிருத்தத்தை மலையரையன் புத்திரியாகிய பரமேசுவரிகாணு
மிந்தஞா நமயமாகியமன்று இயாவர்க்கும் பொது வென்பதனால் - சூதமகரிஷி
காருண்ணியவானாகிய வியாசர் அவர்புத்திரர் சுகர் அவர் புத்திரர் சவுனகரென்று
பின்னும் எண்ணிறந்த முனிவர் தில்லையெல்லை நமஸ்கரித்து மத்தரானார்-எ-று (
5-75)
மார்கழியாதிரைத்தாய்வருவிழாவெழுதல்போற்றிச்
சீர்மலிகமலவாசந்திகழ்சிவகங்கையாடிப்
பார்திகழ்பாதமேத்திப்பணிந்தருளணைந்துசிந்தை
யார்தருமன்புநீடியவருநற்றவர்களானார்.
இ-ள் மார்கழிமாதம் திருவாதிரை நாளையுடைத்;தாய்வரும் திருவிழாவில்
சிவபெருமான் எழுந்தருளுதலைப் போற்றிச் சேவித்து இலக்குமிகரமான
பொறாறாமரை மணங்கமழுஞ் சிவகங்கையில் ஸ்நாநம் பண்ணிச் சர்வ
லோகங்களும் விளங்கின ஸ்ரீபாதத்தைப் பரவி நமஸ்கரித்து அருள்பொருந்திச்
சித்த நிறைந்த அன்புபெருகி அந்த ஆத்மாக்களும் எண்ணிறந்த
முத்தரானாதர்கள்- (5-76)
நற்றவமைந்தவெந்தைநயந்தபேரருளானாமு
முற்றதிங்கலர்கள்கொய்வானோங்குகோங்காதியேற
வெற்றிகொளவரத்தாலிந்தவியாக்கிரபாதமேன்மை
பெற்றனமிதனாலெல்லாப்பெருமையும்பெற்றாமன்றே.
இ-ள் நல்லதவத்தையுடைய மைந்தனே என்னுடைய தம்பிரானார் விரும்பிய
திருவளினாலே நாமும் பொருந்தின திவ்விடத்துத் திருப்பள்ளித் தாமம்
எடுப்பதற்குவுயர்ந்த கோங்கு சண்பக முதலான விருஷங்களில் ஏறமேலான
வரத்தினாலே இந்த வியாக்கிரபாதனென்கிற மேன்மை பெற்றனம் இதனாலே
விதிப்படி மலர்எடுத்து அர்ச்சித்து எல்லை இல்லாத எல்லாப் பெருமையும்
பெற்றோம்-எ-று (5-77)
உன்னருமுனக்குமுன்னாமோங்குபமனியனென்னு
மன்னுநம்புதல்வன்முந்தமாதுலன்மனைப்பாலுண்டு
பின்னையிங்கெய்திநம்பாற்பெறாதுபாலபெருமானோடு
பன்னருமன்புநீடிப்பாற்கடலருளாற்பெற்று.
இ-ள் மனோவாக்குக் கெட்டாத அருட்புதல்வனான உனக்கு முன்பாகச் சனித்த
விசிட்டமான உபமன்னியனென்கிற பேர் நிலைபெற்ற நம்முடைய பிள்ளை -
முன்னர் மாமனாராகிய வசிட்டர் ஆச்சிரமத்திலே சுரபியின் பால் குடித்து வளர்ந்து
பின்னர் இங்கே வந்து நம்முடைய விடத்திற் பால்பெறாமற் றம்பிரானாரிடத்து
மிகுந்த அன்பினாலே யழுது அவர் திருவருளினாலே திருப்பாற் கடல் பெற்றுண்டு
தெவிட்டி -எ-று (5-78)
ஆண்டிடுசாபங்கொள்ளுமவரையுந்துவரையும்போயக்
காண்டுமென்றாண்டணைந்தக்கரியவன்முடிமேற்பாத
நீண்டவன்புடனேவைத்துநீலகண்டரையுநல்கி
யீண்டுவந்தகன்றானின்னுமெய்துவனின்றுநாளை.
இ-ள் பிருகுமகாரிஷி யாச்சிரமாகிய அவ்விடத்தே இட்ட சாபத்தைக்கைக்
கொண்ட மகாவிஷ்ணுவின் நவாவதாரமான கிருட்டினனையும் துவாரகாபுரியிலே
சென்று சித்த பாகமறிவோமென்று அவ்விடத்திலே பொருந்தி அந்தக் கிருட்டினன்
சிரசின்மேல் மிகுந்த காருண்யத்தினாலே திருவடி வைத்து விசேட தீக்ஷை பண்ணி
நித்தியார்ச்சனைக்கு நீலகண்டரென்கிற சிவலிங்கப் பெருமானையும் எழுந்தருளப்
பண்ணிக் கொடுத்து இவ்விடத்திலே வந்து பின்னையும் போனானின்னமும் இன்று
நாளைக்குள்ளே வருவனென்றார்-எ-று (5-79)
பங்கமில்புகழநந்தன்பதஞ்சலியாகியன்பா
லிங்கணைந்தெம்மோடாகியிருந்தபின்னிறையெமக்கு
மங்கலநடமுந்தெய்வமன்றமும்வழங்கிவானோர்
தங்களையெங்களோடுந்தகும்பணிதந்துகொண்டான்.
இ-ள் குற்றமற்ற புகழையுடைய சேடன் பதன்சலி வேடமாய் அன்பாலிங்குவந்து
எம்முடனே கூடியிருந்தபின் இறைவனே எங்களுக்குச் சிரேஷ்டமான ஆநந்த
நிருத்தமுந் திவ்வியமான ஞாநாம்பரமும் புலப்படுத்தித் தேவர்களையு மெங்களுடனே
கூட வூழியம் பண்ணத்தக்கதாக மேன்மை தந்து அடிமை கொண்டார்-எ-று (5-80)
சயமலிசாமவேதத்தலைவரிலொருவனான
செயிமினிமுனிவனண்ணித்திருநடந்தொழுதுவாழ்ந்து
வியன்மலர்ப்பாதமன்பால்வேதபாதத்தவத்தா
னயமிகப்பரவியின்பநண்ணினானெண்ணமார.
இ-ள் சிவப்பிரீதி மிகுந்த சாமவேதியர்களில் ஒப்பில்லாத சயமினி மகாரிஷியானவர்
வந்து சிதம்பர நிருத்தந்தொழுது பெருவாழ்வு பெற்று மேன்மையாகிய செங்கமலப்
பொற்பாதங்களை பத்தி சுரபுரமாக வேதபாதத் தவத்தினாலே இனிமை மிகத்
துதித்துப் பரமா நத்தத்தைப் பொருந்தினான் நினைவின் படியேமிக-எ-று (5-81)
துற்கடனென்றோர்பாவிதுணிதருவணிகனென்போன்
கற்கடமனையசிந்தைக்காதகன்மாகமாதத்
திற்கடனாகுநாளுற்றிறைதகு துறசையிற்றில்லை
நற்கடற்படியமுத்திநண்ணினாரெண்ணிலார்கள்.
இ-ள் கொலைக்குத் துணிந்துள்ள மகாபாதகனான துர்க்கட வணிகனென்கிற
பெஇரையுடைய கள்ளச்சம்பாகாரன் மலை மருங்கிற் சிரவழியொத்த
சித்தத்தையுடைய கொடுந் தொழிலாளன் மாசி மாதத்தில் நக்ஷத்திரமாகிய
மகத்திற் பொருந்தித் தம்பிரானார் தீர்த்தஞ் செய்தருளுகிற பாசமறுத்தான்
துறையிலொரு நாள் சிதம்பர க்ஷேத்திர சமீபமான நற்கடலிலே ஸ்நாநஞ் செய்ய
எண்ணிறந்த பேரவனுடனே முழுகி முத்தி பெற்றார்கள்-எ-று. (5-82)
மாசிலா வுலகிற் றீர்த்தம் வானவ ரனைய தில்லை
யாசிலா வேத கஞ்செ யகிலவா விகளெ வர்க்குந்
தேசமா ரயன்மால் போல்வ திகழ்திருக் குளமெ வர்க்கு
மீசனா மென்ன மேலா யெளிதுமா யிருக்கு மன்றே.
இ-ள் குற்றமற்ற உலகங்களில் கங்கைகாளிந்தி காவேரிமுதலான தீர்த்தங்கள்
இந்திரன் முதலான தேவர்களுக்கொக்கும் சிதம்பர தீர்த்தத்திற் குற்றமற்ற பரிசவேதியை
யெவர்க்கும் பண்ணுகிற நவதீர்த்த முதலான எல்லாவாவியும் பிரகாசமிகுந்த
பிரம விஷ்ணுக்கள் இருடிகளை ஒக்கும் அருள் விளங்கும் புண்டரீகப் பொய்கை
தேவர்கள் விஷ்ணுக்கள் பிர்ம ரிஷியாவார்க்கும் சர்வேஸ்வரனைப் போலக் கங்கை
முதலான தீர்த்தங்களுக்கும் சிதம்பரதல நவ தீர்த்தங்களுக்கும் தான் கர்த்தாவுமாயருட்
டண்ணளியே வடிவாதலால் தன்னையடைந்தோர் யாவர்க்கும் எளிதாயிருக்கும்-எ-று (5-83)
கங்கைகா ளிந்தி பொன்னி கன்னியா திகள்வ ணங்கும்
பங்கய வாவி தானே பழுதுக ளகற்ற வற்றா
லிங்குநின் னவைக ழித்த விலஞ்சியிக் கனக மேனி
மங்கல மன்று ளாடு மன்னவ னருளா மன்றே.
இ-ள் கங்கைகாளிந்தி - காவேரி- கன்னி-சரசுவதி- நர்மதை -யமுனை முதலான
சர்வ தீர்த்தங்களும், தங்களிடத்திலுண்டான பாவங்களும் போக வணங்கும்
புண்டரீக புட்கரணிதானே சர்வாத்துமாக்களிடத்திலுமுள்ள பாசசேதம் பண்ண
வல்லதாதலால் இவ்விடத்து உன்னுடைய தேக குற்றத்தை நீக்கி இந்தப்
பொற்றாமறை தீர்த்தம் பொன்வடிவைத் தந்தது மன்றில் நிருத்தஞ் செய்தருளும்
சர்வேசுவரனுடைய அருளாகும்-எ-று. (5-84)
மன்னவ னெமக்க ளித்த வாழ்வுகேள் வழாத மைந்த
கன்னலுஞ் சுவையும் போன்மெய்க் காட்சியுங் கருத்தி லின்பு
மன்னிய மின்மை காட்டி யகம்பற மென்றி ரண்டு
பின்னமி லருளுந் தந்த பெற்றியார் பெற்று ளாரே.
இ-ள் தேவராசன் நமக்குத் திருவுளம் பற்றின பெருவாழ்வை ஒழுக்க நீங்காத
மைந்தனே கேட்பாயாக சருக்கரையுஞ் சுவையும் போலக் கொண்ட திருமேனியும்
ஈசுவரத்தியானாநுபவமான ஆநந்தக் களிப்பும் அந்நியமின்மையைப் புலப்படுத்தி
உள்ளென்றும் புறம்பென்றும் இரண்டறச் சுட்டி உண்டாக்கி யறிகிற ஆத்ம
ஞானத்தை நீக்கி ஒரு நீர்மையாக்கும் அருளே நமக்கு வடிவாகத் தந்த பேற்றை
நீ பெற்றதே யல்லது மற்றியாவர் பெற்றுள்ளவர்-எ-று (5-85)
இன்றெமக் கிறைவன் முத்தி யிகபரத் தெளிதி னல்கு
மன்றிது வென்று தொல்லை மறைமுனி யுபதே சங்க
ளன்றருள் செய்ய மைந்த னருவிகண் சொரிய நைந்து
சென்றுமுன் பணிந்து தந்தை சேவடி சென்னி வைத்தான்.
இ-ள் இப்பொழுது நம்முடைய சுவாமியானவர் முத்தியைப் பரத்திலும் இகத்திலும்
எளிதாகத் திருவுளம் பற்றும் சபை யிதுவென்று பழைய மறைமுனிவன் சாத்திரவித
சம்பிரதாயவித அநுபவவிதமான உபதேசங்களை அப்போது அருளிச் செய்ய
இரணியவன்மன் விழிநீர்த் தாரைகள்ள நெக்குருகியெதிர் சென்று அட்டாங்கமாக
நமஸ்கரித்துப் பிதாவாகிய வியாக்கிரபாதர் சேவடிகளைத் தன்னுடைய சிரசிலே
வைத்துக் கொண்டான்-எ-று (5-86)
சென்னிசேர்பாதங்கண்ணுஞ்சிந்தையுந்திகழவைத்து
முன்னுறவணங்கியேத்திமுகமிகமலர்ந்துஞான
மென்னையும்பொருளாநல்கிற்றிவைவநின்கருணையென்று
பன்னருமன்புநீங்காப்பரிவுளம்பெருகுவித்தான்.
இ-ள் சிரசினிடத்துப் பொருந்திய சீர்பாதத்தைக் கண்களிலு மிருதயத்திலும்
விளங்கவைத்து மீளவும் சந்நிதியில் நமஸ்கரித்துத் தோத்திரம் பண்ணி முககமலம்
மிகவுமலர்ந்து (ஆதியந்த சூனியமாயிருக்கிற) ஞானத்தைப் பொருளால்லாத
வென்னையும் பொருட்படுத்தித் திருவுளம் பற்றினது தேவரீர் காருண்ணுயசத்
திழியேய வேறில்லையென்று தன்னிடத்திலுண்டான வுரையிறந்த அன்பினாலே
ஒழியாமற் பிதாவினுஙகளிகூரப் பண்ணினான்-எ-று. (5-87)
ஆயபோருளால்வாழுமரசிளங்குமரனாளுந்
தூயநீர்த்தடம்படிந்துதுணைவனைத்தொழுதுதந்தை
சாயைபோலமர்ந்தன்றாள்களும்பணிந்தவர்காங்
கேயுமாறேவலுஞ்செய்திளங்கதிர்போலிருந்தான்.
இ-ள் இப்படிக்குண்டாகிய பேரருளினாலே பெரிய வாழ்வு பெற்று வாழும்
வாலீபனான இராசகுமாரன் நாள்தோறும் அருள்நீர்ப் பொய்கையிற் படிந்து
ஆத்ம சகாயனைத் தொழுது பிதாவுக்கு நிழல் போற்பொருந்திப் பதஞ்சலி
மகாரிஷி சீர்பாத சேவையும் பண்ணியவர்களிருவருக்கும் பொருந்தின
பணிவிடையுஞ் செய்து பால சூரியனைப்போலப் பிரகாசித்திருந்தான்-
எ-று (5-88)
வேறு
இங்கிவன்றிகழ்வெய்துநாண்மநுவென்னுமன்னன்வசிட்டனைச்
சிங்கவன்மனையென்னைநீதிசெலுத்துமாறுசெலுத்துகென்
றங்கவன்றன்மனந்திருந்தியருத்தியோடுபரித்துமெய்ச்
சங்கமங்கழிவித்தரும்புகழ்தாவிலாவுடலாயினான்.
இ-ள் இவ்விடத்து இந்த இரணியவன்மன் அருள்விளக்கம் பொருந்தின நாளிலே
கௌடபூமியில் மநுவிந்திர இராசா வசிட்ட மகரிஷியைப் பார்த்து என்னைக்
கொண்டு மநுநீதி சோராமல் நடத்தினாற்போல சிங்கவன்மனைக் கொண்டு
செங்கோல் நடத்து வீராகவென்று அவ்விடத்தில் அந்தரிஷி அநுமதி கொண்டு
மிகுந்த ஆதரத்துடனே எடுத்திக் கொண்டிருந்த போகசரீரத்தைக் கழிவித்துக்
குற்றமற்ற பெரிய புகழுடம்பை யதிட்டித்திருந்தான்-எ-று. (5-89)
இன்னுயிர்க்குலமானொடண்ணலெடுத்துவிட்டதுறக்கநேர்
மன்னுயிர்ப்படைபின்றொடர்ந்துமயநனவாழ்வுமுடித்துநற்
பொன்னிலக்கமில்கூறையாதிபொழிந்தழிந்துவசிட்டனீ
டுன்னமைச்சர்கண்மன்னர்மைந்தருடன்கடன்செய்திருந்துழி
இ-ள் இனியவுயிரொத்த குலஸ்திரீயுடனே இராசாவும் உடலெடுத்து விட்ட
நீக்கத்துக்கு நேராகநிலைபெற்ற அகத்தடிமை புறத்தடிமை முதலாயினார்
பின்னேதொடர்ந்துபோய் மயானத் தொழில் முடித்து நல்ல கனகதானம்
இலக்க மில்லாத வத்திரதானம் பூதானங் கோதானம் கன்னிகாதான
முதலானவையும் கொடுத்துக்கையேற்பு முதலானவையுங் கொடுத்து
வசிட்ட மகாரிஷி நெடுங்காலத்திலுள்ள மந்திரிகள் குறுநில இராசாக்கள்
இராச குமாரரிருவருடன் கூடித் தாம் செய்யவேண்டிய கடமைகளைச்
செய்திருக்குங்காலத்தில் (5-90)
யாதுசெய்குவமென்னமைந்தர்களெந்தைமுந்தவிசைந்ததே
மேதகும்படிசிய்கவின்னவிசிட்டனானவசிட்டன்யா
னீதிதங்கியசிங்கவன்மனைநேடியிங்கணைவிப்பனீர்
தீதகன்றிடவென்றிசெய்திருமென்றுதென்றிசைசெல்குவான்.
இ-ள் இனிமேற்செய்யுங்காரிய மேதென்று யாவரும்வினவ குமாரர் இருவரும்
எம்முடைய பிதாவுக்கு முந்தப் பொருத்தமானதே பெருமை தரும்படி
செய்தருளுவீராகவென்ன வசிட்ட மகாரிஷி நாம்போய்த் தேடி மநுநீதி
பொருந்திய சிங்கவன்மனை அழைத்துக் கொண்டிங்கே வருவோம் நாம்
வருமளவும் நீங்கள் குற்றம் நீங்கப் பகை தீர்ந்து இருங்களென்று தென்றிசை
நோக்கிச் செல்லுவார்-எ-று (5-91)
அங்கவங்கமடைந்துகங்கைபடிந்ததன்கரையானடந்
தெங்குநாடிவளங்கொள்காசியிறைஞ்சிவிந்தமகன்றெழி
றங்குமாளவகுச்சராதிதகுந்தெலுங்குகடந்துநற்
சிங்கவன்மனிருந்தவெல்லையறிந்துதில்லைசெறிந்தனன்.
இ-ள் அங்கவங்க தேசங்களைப் பொருந்திக் கங்காஸ்நானஞ் செய்து அதன்
கரைவழியாகச் சென்று எவ்விடமுந்தேடி மரணமுத்தி க்ஷேத்திரமாகிய
வளமை குடிகொண்ட காசியை நமஸ்கரித்து விந்தகிரியைக் கடந்து அழகு
பொருந்திய தகுதியுள்ள மாளவகுச்சராதி தெலுங்கு தேசங்களையுங் கடந்து
நல்ல சிங்கவன்மாவிருந்த விடம் விசாரித்தறிந்து தில்லைவனத்தைப்
பொருந்தினார்-எ-று (5-92)
மன்னுமாறயாவெம்மையாறவசிட்டன்வண்களவார்நிழற்
றன்னினணாதனையெய்துமாறுணர்தண்புலிச்சரணத்தனீ
முன்னமேவுகயானுமிந்தமுயங்குபூசைமுடித்துவந்
துன்னொடாகுவனென்னமைந்தனுவந்துசென்றுபணிந்தனன்.
இ-ள் வசிட்டமகாரிஷி நிலைபெற்று வழிநடந்த விடாய் நீங்கும்படி நல்ல
திருக்காள நீழலிற்பொருந்தின தம்பிரதானாரை நமஸ்கரித்து இருக்குமதனை
யறிந்த குளிர்ந்த காருண்யத்தையுடைய வியாக்கிரபாதர் நீ முன்னேபோ
யானுமிந்தப் பூசையை முடித்துக் கடுக வந்துன்னோடே கூடுவனென்று
அநுக்கிரகிக்க இரணியவன்ம குமாரனும் மனப்பிரியத்துடனே சென்று
வசிட்ட மகாரிஷியை நமஸ்கரித்தான். எ-று (5-93)
தொழுதல்கண்டவனென்றறிந்துமொர் தொன்மைநன்மைகளின்மையால்
வழுவிலாமகனார்தடம்புயம்வாழியேயெனமாமுனி
மொழிகளுந்தருகின்மையாயழுமுன்புதுன்புகுவிப்பதொத்
திழவறிந்திடுமாகவிழ்ந்திடரேறுமாதரைகீறினான்.
இ-ள் நமஸ்கரித்ததைக்கண்டு சிங்கவன்மன் அருளினாலே இரணியவன்மனானதை
அறிந்திருக்கையிலும் முன்புபோல ஓர் ஆசீர்வாதம் பண்ணாமையால்
குற்றமில்லாத உம்முடைய மகனாகிய மநுவின் வெற்றிப்புயங்கள்
வாழ்ந்தனவோவென்று இரணியவன்மன் கேட்க வசிட்டமகாரிஷி பிரதி
யுத்தரம் சொல்லாமல் கிலேசிப்பதற்கு முன்னாகத் துன்பங்களைக்கூட்டுவ
தொத்துப் பிதாவின் கிலேசம் இரணியவன்மனறியும் வண்ணந்
தலையிறக்கிட்டுத் துக்கம் அவனை ஆபாதமத்தகமளவாக
ஏறும்படி தரையைக்கீறினார் எ-று (5-94)
துன்பமெய்தியவாறுணர்ந்தணைதொல்புலிச்சரணத்தனீள்
வன்பணீசனொடெய்திநீதிவசிட்டனேர்வரவந்துதா
முன்புசெய்வகையாலுஞானமுதிர்ச்சியாலுமுயங்கினோ
ரன்புநீடியதத்தமிற்றிகழாதரங்கள்பெருக்கினார்.
இ-ள் இரணியவன்மனுக்குத் துக்கம்வந்தபடியை அறிந்துவந்த பழைய
வியாக்கிரபாதமுனிவர் இனிய வலியபணீந்திரனாகிய பதஞ்சலியுடனேகிட்டி
நீதிவழுவாதவ சிட்டருந் தாங்களு மொருவர்க்கொருவர் எதிரேவந்து தா
முன்புசெய்யும் பிரகாரத்தினாலும் ஞானாதிசயத்தினாலும் கூடினமூவருந்
தந்தம்முடைய சிநேகாதிசயங்களினாலே தங்களிற் றாங்கள் விளங்கச்செய்யு
மங்கீகாரங்கள் வந்திப்பித்தார்-எ-று (5-95)
மன்னுநற்றவர்தம்மிலுய்த்தபின்மைந்தன்வந்துவணங்கநா
மென்னுரைத்துமுடிந்தவாறிதுவென்றுதந்தையெடுத்துமேன்
மின்னிலைத்துளதண்கணிர்மொக்குளுமவேறிதற்குவமித்திடிற்
றன்னையொத்துளதின்னிலாருடறஞ்சமாநினைநெஞ்சரே.
------------------
ஆபாதமத்தகம் என்பது - பாதமுதல்சிரசளவுமெனக்கண்டுகொள்க
நீர் என்பது - நீர் எனக்குறுகிற்று.
இ-ள் நிலைபெற்ற நல்லரிஷிகள் தம்மிற்கூடி யிருந்தபின்பு இரணியவனமாவந்து
நமஸ்கரிக்க நாமென்ன சொல்லுவோ முடிந்தவாறிந்தப் பிரகாரமாயிருந்தது என்று
சொல்லிவிய நாக்கிரபாதா மார்பார விடுத்தணைத்து ஆகாசத்தில் தோன்றியழியும்
மின்னலையும் நிலைபெற்ற தண்ணீரில் தோன்றியழியும் நீர்க்குமிழியையும்
சரீரத்துக்கு திருஷ்டாந்தமாகச் சொல்லில் திருஷ்டாந்தமாகாமல் தன்னையே
தானொத்திருப்பதால் இவ்வுடல் நிலையாயிருந்கத் தக்கதென்று நினைக்கத்
தக்கவர்கள் யார் -எ-று. (5-96)
பிரமரேமுதலானதந்திபிறங்கெறும்பிடைபேணுசி
ருருவினோர்களில்யாருளோர்சருகோடுவாடையொதுக்கவுற்
றிரியநூறியசூறைமாருதமென்னவல்வினைநல்குமா
லருளிலோரெனநோதகாதெனவாறுமாமுனிகூறினான்.
இ-ள் பிரமதேவர்கள் முதலாய யானையெறும் பினிடைப்பட்ட வாழ்வு பெறும்
சரீரத்தையுடையவர்களில் யாவர் நசியாதவர்கள் வீசுங்காற்றுப் பலசருகையும்
ஓரிடத்திலே ஒதுக்க அதனைச் சூறைக் காற்றானது பறக்கடிப்பதுபோல
ஒருவினையால் இவ்வுடல் புத்திரமித்திர களத்திராதிகளுடனே கூடியிருக்க
மேலொருவினை நேரிட்டு அந்தப் பாசக்கூட்டத்தை நீக்குமாதலால்
அருளில்லாதவரைப் போல விதனப்படாதேயென்று கிலேச நீங்கும்படி
வியாக்கிரபாதமுனி அருளிச்செய்தார் -எ-று. (5-97)
மருவரும்புகழ்வாய்மைநீடுவசிட்டன்மாதவமன்னிநீ
ரிருவரும்பெறுநன்மைபொன்னுருவெய்துமைந்தனும்யாமுமிப்
பொருவரும்புவியொருமேலமர்போகரும்பரியாவருங்
கருவரம்புகடக்கநல்கினிரென்றுநன்றிகதித்தனன்.
இ-ள் அண்டவொண்ணாத தவமும் சத்திய வாசகமும் என்றும் நீங்காத வசிட்ட
மகாமுனி மகத்தானத பசுகளைப்பண்ணி நீங்கள் இரண்டுபேரும் பெற்ற பெரு
வாழ்வை பொன்னுருவடைந்த இராசகுமாரனும் யாமும் இந்த ஒப்பில்லாத
பூமியிலுள்ளவர்களும் சுவர்க்கத்திலுண்டாகிய தேவர்களும் ஒருகாலும் நீங்காத
கருக்குழிச் சிறை வரம்புகடந்து நீங்கத் தக்கதாக அநுக்கிரகம் பண்ணினீர்களென்று
நல்ல வார்த்தை சொன்னார்.-எ-று (5-98)
தில்லையெல்லைபுகுந்திவன்பெறுசீர்கொண்டருள்கூறிலோ
ரெல்லையி்ல்லைவசிட்டநீயுமிறைஞ்சவெய்துகவென்றுநற்
றொல்லைமல்லலிலஞ்சிமேவுதொழுந்தகைப்புனலாடுவித்
தொல்லைமல்கியமன்ற வாய்மையுணர்த்திமுன்பணிவித்தனன்.
--------
இதில் இவன் என்றது இரணியவன்மாலை வாய்மையென்றது ஞானதீக்ஷை
பண்ணின முறைமைஎன்பது கண்டுகொள்க.
இ-ள் இந்தச் சிதம்பரக்ஷேத்திரத்திலே வந்து புகுந்து இவன்பெற்ற சீர் சிறந்தபேரருளை
வகுத்துச் சொல்ல முடியாது வசிட்டரே நீருந் தம்பிரானாரை நமஸ்கரிக்க வாருமென்று
நல்ல பழைய வளப்பத்தையுடைய தடம் பொருந்தின அருள்வடிவான தீர்த்தச்
சில்வத்தில் ஸ்நானஞ்சிய்வித்தும் உடனே பரிபூரணமான சிதம்பரத்தினுடைய
ரகசியத்தின் உண்மையை விளங்க உபதேசித்துந் தம்பிரானார் சந்நிதியிலே
நமஸ்கரிப்பித்தார் - எ-று (5-99)
கரவிலாடல்வணங்கிவண் கருமூலகாரணனாகணப்
பொருவில்பாதமிறைஞ்சிநீடுபுலீச்சுரந்தொழுதெங்கணும்
பரவிநீடுவசிட்டமாமுனிபாய்புலிச்சரணத்தன்வாழ்
விரவுமாச்சிரமத்தின்மேவிவிருந்தருந்தியிருந்தனன்.
இ-ள் திரோதானமில்லாத ஆநந்த நிருத்தத்தை நமஸ்கரித்து வளவிய கருமூல
காரணனென்று திருநாமம் பொருந்திய ஸ்ரீமூலத்தானமுடைய தம்பிரானாரது
வேதச் சிலம்பணிந்த ஒப்பிலாத சீர்பாதங்களை நமஸ்கரித்தும் பழைய
திருப்புலீச்சுர-முடையாரை நமஸ்கரித்தும் அந்தத்திரு எல்லையில் எங்குமுண்டான
சிவலிங்க மூர்த்திகளை யெல்லாந் தரிசித்துவணங்கியும் தபசுநீங்காத வசிட்ட
மகாமுனிவர் பாயுந் தொழிலையுடைய புலிக்கால்போன்ற பாதத்தையுடைய
வியாக்கிரபாத மகாரிஷி வாழ்வு பொருந்தின ஆச்சிரமத்திலே சென்று விருந்து
அருந்தி இருந்தனர்-எ-று (5-100)
அந்திவந்தனைதந்;தனந்தனதாசிலாச்சிரமத்திலுற்
றெந்தைபாதமிறைஞ்சிவந்திருளெல்லிசெல்லவெழுந்துநற்
சந்திசேர்பணிராசனுந்தகுசைவராசனுமெய்தவே
வந்தவைதிகராசனானவசிட்டன்மன்னியிருந்தனன்.
இ-ள் சந்தியாகாலத்தில்அநுட்டானம்பண்ணிப் பதஞ்சலி மகாரிஷியினுடைய
குற்றமில்லாத பன்னசாலைக்குப்போய்த் திருவனந்தேசுரமுடைய தம்பிரானாரது
திருவடிதொழுதுமீள வியாக்கிரபாதர் பன்;னசாலையிலே வந்து இருண்டராத்திரிபோன
வைகறையி லெழுந்திருந்து பிராதகாலத்தின் அநுட்டானம் பொருந்தின பதஞ்சலியும்
அப்படிப்பட்ட சைவ சிரேஷ்டரான வியாக்கிரபாதரும் வந்து பொருந்த வைதிக
சிரேஷ்டரான வசிட்ட மகாரிஷி அநுட்டான முடித்திருந்தார்-எ-று. (5-101)
தீதிலாதவிராசராசனும்வந்துவந்தனைசெய்துநா
மேதிலாரெனநோதகோமருளெந்தைமாரிவர்மைந்தனா
மாதலாலுயர்வீடுமெய்துதுமென்றுமுன்னரமர்ந்தபின்
கோதிலாதவசிட்டன்வந்தமைகூறுவானிடராறுவான்.
இ-ள் குற்றமில்லாத ராசராசனாகிய இரணியவனமனும் இருஷிகள் முன்னேவந்து
நமஸ்கரித்து யாம் காமிகளைப்போலே விதனப்படோம் அருட்பிதாக்களிவர்கள்
இவர்களுக்குக் குமாரன்நாம் ஆனதினாலே உயர்ந்த மோக்ஷத்தைப் பொருந்து
வோமென்று சொல்லித் தமக்குமுன் விதன நீங்கியமர்ந்திருந்தபின் குற்றமற்ற
வசிட்ட மகாரிஷிதா மெண்ணி வந்த காரியத்தைச் சொல்லுவார் வியாகுலம்
ஆற - எ-று (5-102)
---------------------
இதில் கருமூலகாரணனென்பது பாதமூலமாயோபாதானத்தைப் பிரேரேபிக்கும்
நிமித்தகாரணனென்றறிக.
அருந்ததிக்கிறையோனெமக்கிவனுக்குஞாலமளித்துநீ
திருந்தவுய்த்துநடத்துகென்றுரைசெய்துமன்னுயிர்சின்றபின்
றருந்தமன்னுயிர்போனமேனிதகக்கிடந்ததுதம்பிமா
ரிரந்துகொண்டனர்கொண்டுபோதரவிங்குவந்தனனென்றனன்.
இ-ள் கௌடதேசன் சிங்கவன்மனானஎன்மகனுக்கு நம்முடைய இராச்சியத்தைக்
கொடுத்து நீர்நன்றாக நடத்திக்கொண்டு போமென்று எமக்குச் சொல்லி உயிர்
நீங்கினவளவில் அவருனக்குத் தந்த அவருடைய இராச்சியமானது உயிர்போன
சரீரம்போல் வாழ்வற்றுக் கிடந்தது தம்பிமார் வேண்டிக் கொண்டார்கள் ஆகையால்
உன்னைச் சிங்காசனத்திலே வைக்க அழைத்துக்கொண்டு போம்படிக்கு இங்கே
வந்தோமென்று அருந்ததி கணவராகிய வசிட்டர் கூறினார்.-எ-று (5-103)
வன்புலிச்சரணத்தனீடுவசிட்டன்வந்தமைசிந்தைசெய்
தென்செயத்தகுமென்றுமைந்தனையெய்தவாள்விழிசெய்யமுன்
றன்கருத்தறிவித்தலான்மொழிதந்திடானதறிந்துமே
னின்செயற்கிசையத்தகுந்திறநீபகர்ந்திடுகென்றலும்.
இ-ள் ஞானவீரராகிய வியாக்கிரபாதர் பழைய வசிட்டமகாரிஷி வந்த
காரியத்தை ஞானத்தாலறிந்து இதற்கு என்செய்யத்தகுமென்று
இரணியவன்மனைக் குறித்துக் கிருபையாகிய ஒளிபொருந்திய
விழியினாலே பார்தருள முற்பட எந்தைமார் நீங்களிருவர்களென்றும்
உங்களா லுயர்விடெய்துவேனென்று முன்னே தன் கருத்துத் தோன்றச்
சொன்னபடியினாலே அப்போது உத்தரங்கொடாது நின்றான். அதைத்
திருவுளத்திலே அறிந்து இனிமேல் செய்வதற்குப் பொருந்தத்தக்க
அபிப்பிராயமெதுவோ அதை நீ சொல்லுகென்றளவில்-எ-று (5-104)
வேறு.
அந்தமிலரசுஞ்சித்தியனைத்துநீடமரர்வாழ்வு
மிந்திரசாலநீர்மேலெழுத்துமின்கொப்புளிப்பொய்
சிந்தனைவேண்டேனாண்டஸதிருமுனிதிருமுனிந்த
வந்தனைவழுவாவாழ்வுவழங்குவாயாகவென்றான்.
இ-ள் எழுபது சதிரயுகம் வரைக்கும் செங்கோல் நடத்துகிற முடிவில்லாத இராச்சியபாரம்
பொறுத்தலும் அணிமாதிகளாக இருக்கிற சித்திகளும் ஒழியாத தேவர்கள் பதமும்
கபடநாடகமான இந்திரசாலம் நீர்மேலெழதிய வெழுத்துத்தோன்றி யழியும் மின்னல்
நீர்க்குமிழி என்னுமிவைகள்போல நிலையில்லாதவைகளாம் ஆதலால் இந்தப்பொய்வாழ்வை
நினைக்கவும் வேண்டேன் என்னை ஆண்டருளிய திருமுனியே உமது சந்நிதியில் இப்போது
யான செய்துவருகிற பணிவிடை நீங்காத மார்க்கத்தைத் தந்தருளுவீராகவின்று
விண்ணப்பஞ் செய்தான்-எ-று. (5-105)
ஆகினீமுனிவனொடுமாண்டணைந்தரசமௌலி
நாகமாவிரதந்தானைநவமணிநிதியுளிட்ட
போகமார்பொருளமைச்சர்பேதையர்பொருந்தக்கண்டு
வேகமாய்வருவாயென்றவியாக்கிரபாதன்கூறி.
இ-ள் மாயாபோகம் வேண்டாமென்பையாகில் வசிட்ட மகாரிஷியுடனே உன்னுடைய
தேசத்துக்குப்போய் இராசவாஞ்சிதமான மணிமுடி – யானை – குதிரை – தேர் –
பதாதி -நவரத்திநங்கள் முதலான நிக்ஷேபங்களை இராசபோகத்துக்குப் பொருந்தின
கனகமிரசித முதலானவையுந் திவ்வியமான பட்டாடைகளுங் கஸ்தூரி முதலான
சுகந்தங்களும் மந்திரிகள் ஊழியப்பெண்கள் இன்னம் வரப்பொருந்தின பேர்களைக்
கொண்டு கடுக வருவாயாகவென்று வியாக்கிரபாத ரநுக்கிரகித்து-எ-று (5-106)
மன்றமாநடமுன்போற்றியெம்முடன்மருவினோரின்
முன்றிகழ்முனிவாமூவாயிரவரைமுதுவேள்விக்கென்
றன்றயன்வேண்டிக்கொண்டானவர்களையந்தாவேதி
சின்றுடன்கொணர்வாயென்றுதிருமுனியருளிச்செய்தான்.
இ-ள் சிதம்பரத்தில் அநவரத தாண்டவம் நெடுங்காலத்துக்கு முன்னே எம்முடனே
தரிசித்திருந்தவர்களில் முன்னெண்ணப்பட்ட மூவாயிரம் பிரமரிஷிகளையும் பழைய
யாகத்துக்காக அந்நாளிலே பிரமா நம்மைக் கேட்டழைத்துக் கொண்டு போனார்
ஆதலால் நீ அந்தாவேதிக்குப்போ யவர்களை உன்னுடனே கூட்டிக்கொண்டு
வருவாயாகவென்று வியாக்கிரபாதர் அருளிச் செய்தார்-எ-று (5-107)
திருவுளமானதொன்றுசெய்தவமென்றுசெப்பப்
பொருபுலிமுனிமகிழ்ந்துபொதுநடமுடனேபோற்றி
யருள்புரிபெருமானிந்தவடிகளேம்பணிநடத்த
விரைவொடுவருவானேகவேண்டும்விண்ணப்பமென்ன
இ-ள் தேவரீர்க்குப் பொருந்தின காரியஞ் செய்யுமதே அடியேனுக்குப் பெருந்தவமென்று
இரணியவன்மர் விண்ணப்பஞ்செய்ய ஆணவமலத்தை வின்ற வியாக்கிரபாதமுனி
பிரியப்பட்டு இவனுடனேபோய்ச் சிதம்பர நிருத்தந் தரிசித்துத் தம்பிரானே திருவுளம்
வாழ்ந்தருளித் தேவரீருடைய இங்குண்டான எங்கள்பணிவிடை குறைவற நடத்தச்
சடுதியிலே வரும்படிக்குப் போகத்தக்கதாக அருளவேண்டும் இது எங்கள்
விண்ணப்பமென்றார். -எ-று (5-108)
கண்ணுதலோனுமெண்ணில்கரிணையுமருளுநல்க
விண்ணருமின்பமெய்தியெந்தைதாள்சிந்தைசெய்து
விண்ணவனிசைவான்மைந்தன்விடைகொண்டுமீண்ணுபந்தான்,
மண்ணுறவண்ணலபாதம்வசிட்டனும்வணங்கிவந்தான்.
இ-ள் நெற்றிக் கண்களையுடைய சிதம்பதமூர்த்தியும் எண்ணிலாத கிருபையும்
அநுக்கைரகமும் திருவுளம்பற்ற எண்ணரிய வரநந்தம் பொருந்தித் தம்பிரானார்
திருவுளப் பொருத்தத்தினாலே இரணியவன்மாவென்கிற குமாரன் விடைகொண்டு
தம்பிரானார் சீர்பாதத்தையும் நமஸ்கரித்துக்கொண்டு வியாக்கிரபாதர் பன்னசாலைக்கு
மீளவந்தான். மண்ணுறச் சர்வேசுவரன் சீர்பாதங்களை வசிட்ட மகரிஷியும்
அட்டாங்கமாக நமஸ்கரித்து விடைகொண்டு உடனே வந்தார்.-எ-று (5-109)
அன்னைநீறளிப்பப்போற்றியாருயிரவர்பாலாகப்
பன்னகவுரவோன்றாளும்பணிந்துபோய்ப்பரமர்தில்லைப்
பொன்னமரெல்லைபோற்றிப்போதுவான்புகழ்புலிக்கான்
மன்னவன்றன்னையாண்டவகைமொழிவழியாச்சென்றான்.
இ-ள் வியாக்கிரபாத முனிவர் பத்தினியாகிய தாயானவள் தன்னெற்றியில்
விபூதியிடத் துதித்து வணங்கித் தன்னுடைய உயிரை மாதா பிதாக்களிடத்திலிருக்க
வைத்துப்பதஞ்சலி மகாரிஷியென்னும் ஞானவீரரது சீர்பாதம் நமஸ்கரித்து வடக்கு
நோக்கிப்போய்ப் பரமேசுரருடைய தில்லை வனஞ்சூழும் பொன்னம்பலத்தி னெல்லையைப்
புகழ்ந்து வணங்கிச் செல்லுகின்றவன் கீர்த்தியையுடைய வியாக்கிரபாதராகிய சுவாமி
தன்னை தீக்ஷைபண்ணி இரக்ஷித் தாண்டுகொண்ட முறைமை வகைப்பட வழிமுடியுமளவு
மதிலே பொருப்பட்டுச் சிதம்பரமுதல் தன்னுடைய தேசமட்டும் இராப்பகல் அநவரத
காலமும் புலிமுனியாகிய பிதாவினுடைய காருண்யத்தை வசிட்டருக்குச் சொல்லிக்
கொண்டு பொனான் -எ-று (5-110)
விற்கழியம்புந்தந்துமேவியவிகங்கமும்போற்
கற்கடங்கடிதகன்றுகவுடதீயத்துத்தங்க
ணற்கடகத்துக்கோயினண்ணதுமெண்ணின்மாதர்
வர்க்கமுந்தம்பிமாருமால்கடற்கிளர்ச்சிகொண்டார்.
இ-ள் வில்லில் நின்றும் நீங்கிக்குறி பிழையாது சில்லும் அம்பும் கயிறு கட்டிவிட்ட
காற்றாடியும் போலக் கல்வழியை விரைவிலே கடந்து கௌடதேசத்திலிருக்கும்
மதில் சூழ்ந்த தங்கள் நல்ல பட்டணத்தின் மாளிகையொப பொருந்திப் புகுந்தவளவில்
எண்ணிறந்த மாதர்கூட்டங்களுஞ் சிறியதாயுந் தம்பிமாரும் பெருங்கடல் ஒலித்தாற்போல
அதிசயத்தடனேயழுதார்கள்-எ-று (5-111)
அழுந்தியதுயரநீங்கியநுசரையாற்றியாவு
மிழந்தன்னாகாவண்ணமிவரிருந்தனரேயின்றச்
சழிந்தமெய்த்தாயருள்ளத்தளர்வுகளாற்றிமற்றை
யொழிந்தநற்சுற்றத்தார்களியாரையுந்துயரொழித்தான்.
இ-ள் தானடைந்த விதனத்தை நீங்கித் தம்பிமாரையாறப் பண்ணித்தான் தாயினையிழந்தவனாகா
வண்ணம் இவர்கள் இருந்தார்களேயென்று இலக்குமிநீங்க வடிவமாறின தாயாருடைய
மனக்கிலேசங்களை நீக்கி மற்றுள்ளவர் தமபந்துக்கள் யாரையும் வருத்த நீக்கினான்.-
எ-று (5-112)
எண்டகுதுறைகொண்மாக்களியாரையுமினிதழைத்துக்
கண்டுதன்கனகமேனிக்கவினவர்காணநல்கி
யண்டர்தம்பெருமானாடுமம்பலத்துழனியுன்னி
யொண்டிறற்குமரனாளோரூழியாமெனவொழித்து.
இ-ள் எண்ணிக்கைப்பட்ட துறைதோறுந் தகுதியான மனிதரைப் பிரியத்துடனே அழைப்பித்து
அவர்கள் யாவரும் வரக்கண்டு தனது பொன்மயமான சரீரத்தை யவர்கள் காணும்படியாகக்
காட்டித் தேவதேவன் ஆநந்த நிருத்தஞ் செய்யுஞ் சிதம்பரத்தில் அடியார்கள் துதித்தலாலெழும்
ஓசையைச் சுரதித்துக்கொண்டு அருள்வீரனான இராசகுமாரன் ஒருநாளைப்பொழுது
ஓரூழிப்பொழுதா மென்னத் தக்கதாக நீக்கி-எ-று (5-113)
பன்னுமந்திரிகடம்மைப்பார்த்தினியிங்குப்பன்னாண்
மன்னிநான்வைகலேனென்னவழுவுடற்பழுதகற்றிப்
பொன்னுருவாகச்செய்தபுலிமுனிசரணம்போற்றற்
கென்னுடன்போதுவீரேலெயதுமென்றவர்ககிசைத்தான்.
இ-ள் பிரதானமாகச் சொல்லப்பட்ட மந்திரிகளைப் பார்த்து இனிமே லிவ்விடத்துப்
பலநாள் பொருந்தி இருப்பேனென்கிற எண்ணமுடையனல்லேன் ஆதலால் என்னுடைய
குற்றமிகுத்த சரீரத்தின் சிங்க நிறத்தைப் போக்கிக்கனக வடிவாக்கின வியாக்கிரபாத
மகாரிஷியினுடைய சீர்பாதசேவை பண்ணுதற்கு என்னுடனே கூட வருவீர்களாகில்
வாருங்களென்று இரணியவன்மன் அவர்களுக்குச் சொன்னான். -எ-று (5-114)
போதுவீராகின்மாயாபோகமேயன்றுமன்றில்
வேதநான்முகன்மால்காணாவிண்ணவன்வெளியேநண்ணி
மாதொருபாகமாகமகிழ்ந்துநின்றாடும்வாழ்வு
மேதிலீர்பெறுவீரென்றங்கிரணியவன்மன்சொன்னான்
இ-ள் என்னுடன் வருவீராகில் இந்தமயாபோக வாழ்க்கை மாத்திரமன்று வேதம் பிரம
விஷ்ணிக்கள் காணாத கனகசபையில் சிதம்பரமூர்த்தி ஆநந்த சொரூபியாய்
யாவாங்குந்திருட்டி கோசரமாக நின்று கிரியாசத்திகாண நடிக்கிற சத்தியமான
வாழ்வையும் ஒன்றுக்கு முறுப்பற்ற நீங்களும் பெற்று வாழ்வீர்களென்று
இரணியவன்மன் சொன்னான்.-எ-று (5-115)
மொழியதுகேட்டமைச்சர்முகமகமிகமலர்ந்து
வழுவிலாவெம்மையாளுமன்னநீசொன்னதொன்று
தொழுதியாமுயல்வோமென்றுசொல்லித்தென்றில்லைநோக்கி
யெழுகவான்பயணமென்றங்கெழுமுரசியம்புவித்தார்.
இ-ள். இரணியவன்மன் சொன்ன வார்த்தையைக்கேட்ட மாத்திரத்திலே மந்திரிகளெல்லா
முககமலமும் இருதய கமலமும் மிகவுமலர்ச்சிகொண்டு எம்மை யாளாகவுடைய குற்றமில்லாத
இராசாவே நீர் கற்பித்தது யாதொன்றோ அதனை ஒத்துக்கொண்டு யாங்களப்படியே
செய்வோமென்று சொல்லித் தக்ஷிணதிக்குத் தில்லையை நோக்கிப் பயணமியாவரும்
புறப்படுஙகளென்று எழுச்சி முரசுநகரி சூழ அறைவித்தார். (5-116)
அந்தமில்கனகவெற்புமருநவமணிப்பொருப்பு
மெந்திரத்தேரினிட்டமொட்டகமிவுளியானை
தந்திரம்பண்டிவண்டிபரித்தெழத்தயங்குநாட்டு
மைந்தர்கண்மகளிர்சைவர்வைதிகர்மகிழ்ந்தெழுந்தார்.
இ-ள். கனகச்செய் குன்றுகளைப்போலவும், நவரத்தினச்செய் குன்றுகளைப் போலவும்
விளங்காநின்ற சூத்திரம் பொருந்தின அநந்தத் தேரணிகளும், எண்ணிறந்த வொட்டகங்களும்,
குதிரைகளும், யானைகளும், உருளைபூட்டிய வண்டில்களும் பதாதிகளும் சுமந்து செல்லச்
செல்வமிகுந்த கௌட தேசத்திலுள்ள புருஷர்களும், பெண்டுகளும், சைவர்களும்,
வைதிகர்களும், பயணப் பட்டார்கள். (5-117)
அன்னையரநுசர்மைந்தரரிவையர்கணிகைமார்க
ளுன்னுமெய்க்காவலாளராரியருமையோர்க
ளின்னுமெண்ணிலர்களோடுமிரணியவன்மனேகி
மன்னுசீரந்தர்வேதியமாதவர்தம்மைச்சார்ந்தான்.
இ-ள். சிறியதாயர்கள் தம்பியரிருவர் மற்றுமுள்ள குமாரர்கள் குமாரத்தியர்கள் உள்ளும்
புறம்பிலுள்ள ஊழியமாதர்கள் மெய்க் காவற்காரர்கள், அகத்தடியார் பின்னு மெண்ணிறந்த
$ஐவகைக்குழு @ஐவகைச்சுற்றம் முதலானோர் சூழ இரணியவன்மன்மா வானவன் சென்று
நிலைபெற்ற ஐசுவரியம் பொருந்தின பிரமாவின் யாகத்தலமான அந்தர் வேதியிலிருந்த
மூவாயிரம் பிரமரிஷிகளையும் வந்து பொருந்தினான்----எ-று. (5- 118)
----------
$ ஐவகைக்குழுவாவன- மந்திரியர்-புரோகிதர்-சேனாபதியர்-தூதர்- சாரணர்.
@ ஐவகைச்சுற்றமாவன -நட்பாளர் -அந்தணாளர் - மடைத்தொழிலர்- மருத்துவக் கலைஞர் -
நிமித்தகப்புலவர்.
மும்மையாயிரவர்நீங்கண்முதுபதிப்பொதுவிலாடு
நம்மையாளுடையான்பாதநாடொறுநயந்துபோற்றற்
கெம்மைநீர்பிரியாதெய்தற்கெழின்முனியிசைத்தானென்று
செம்மையாரிரவிபோலத்தேர்பலசேரவுய்த்தான்.
இ-ள் நீங்கள் மூவாயிரம் பிரமரிஷிகளும் பழையதலமான சிதம்பரத்தில் அநவரத
நிருத்தஞ்செய்யும் எம்முடைய தம்பிரான் சீர்பாதங்களை அநவரதமுஞ் சேவை
பண்ணுதற்கு உங்களை நீங்காமல் எம்மை வரத்தக்கதாகப் பெரிய வியரக்கிரபாதர்
எனக்கு அருளிச் செய்தாரெனச் சொல்லிச் சிவ்வொளி நிறைந்த மலைகள் போன்ற
மூவாயிரமாணிக்கத் தேரை முன்னே அணியாக நிறுத்தினான். (5-119)
அங்கவர்தங்கடுங்கவங்கிகளாதரித்து
மங்கையர்மகளிர்மைந்தர்வான்கலையரணிமற்று
மெங்கணுநிறையவேற்றியிரதமுற்புரவிபூட்டிப்
பொங்கியவோமதேனுப்போதுவதொடர்ந்துபோத.
இ-ள் அவ்விடத்துஅந்தரிஷிகள் நித்தியாக்கினிகளையும் ஆதாரத்துடனே
யெடுத்துகொண்டேறி பத்தினிகள் புத்திரிகள் பிள்ளைகள் கிருஷ்ணாசனம் அரணி
சமித்து நெய் பொரி தருப்பை பாத்திரங்கள் முதலானவைகளை ஏற்றித் தேருக்கு
முன்னாகக் குதிரைகளைப் பூட்டிச் சுரந்த முலைகளையுடைய ஒமார்த்தமான பசுக்கள்
மற்றும் வேண்டியவைகள் கூடிவர - எறு- (5-120)
அந்தமில்பரிசனஞ்சூழரவமுமரசர்போற்றும்
வந்தனைத்துவைப்புந்தெய்வமறையவர்மலிதேரார்ப்புந்
தந்திரச்செருக்கும்வேழத்தமரிப்புஞ்சைந்தவங்கண்
முந்தியவொலியு முந்நீரேழினுமிகமுழங்க.
இ-ள் முடிவில்லாத பரிசனங்கள் சேவித்துவரும் ஓசையும் இராசாக்கள் தோத்திரம்
பண்ணி வணங்கும் ஓசையும் திவ்வியமான பிரமரிஷிகள் ஏறின மூவாயிரந்
தேர்க்கூட்டத்தின் ஓசையும் சேனையின் ஓசையும் யானை பிளிறுதலான
ஓசையும் குதிரைகளனுமானிக்கும் ஓசையும் எழுகடலின் ஓசையினுமதிகமாக
முழங்கும்படி-எ-று (5-121)
விழிநுழையாதகானும்வியன்சரியாகுஞ்சாயுங்
கழிவுறமடியுமானைக்காலுறுந்தேர்க்காலோட
வழிபடுமவர்காற்றூளிவானமும்புனிதமாக்கப்
பொழிலபெருவழியாமாறுபுரவலனெடிதுபோந்தான்.
------------------
முந்நீரென்பது சமுத்திரத்திற்குள்ள காரணப்பெயர்களிலொன்று அதன் விவரம்
ஆற்றுநீர், வேற்றுநீர், ஊற்றுநீர், என்னுமூவகை நீரையுடையதென்றும் , ஆக்கலளித்த-
லழித்தலென்றும், மூன்று செய்கையையுடையதென உரையாசிரியர்கள்
கூறியிருக்கின்றனர்
# அரணி- தீக்கடைகோல்
இ-ள் முன்னே கொடிப்படை செல்லுதலால் கண்ணுக்கு நுழைய வொண்ணாத செறிந்த
பெரியகாடும் பெரியசரிவழியாகும் குதிரைகள்தாண்டிச் செல்லுதலால் மரமுள்ளது
சாய்ந்துவிழும் கழிந்தொடிந்து யானைக் காலாலே மிக்க நருக்குண்டுபோம் தேர்க்கால்
செல்லப் பெருவழியாம் பின்னே வருமனர்களுடைய சீர்பாதம் பட்டுத் தூளியாய் அத்துளி
தேவலோகமும் சுத்தமாகக் காடெல்லாம் பெரிய வழியாகும்படி கெவுடராசனாகிய
இரணியவன்மன் நெடுந்தூரம் வந்தான் - எ-று (5-122)
மன்னவர்தத்தமெல்லைவழிவிடவடவிவாழுங்
கொன்னவில்விலங்குந்தந்தங்கொடுவழிவிடப்போந்துள்ள
வின்னநல்வளனெனாமலெடுத்துவந்தெங்குமீண்டிப்
பன்னதிவெள்ளமலகும்பரவைபோல்விரவியோங்க.
இ-ள் அங்கவங்கமுதலிய தேசங்களிலுள்ள இராசாக்களுந் தம்முடைய எல்லையளவாகச்
சேவித்துவர வனத்தில் வாழுங்கொலைத் தொழிலுக்கு மிகுத்துச் சொல்லப்பட்ட
சிங்கம்புலிமுதலான மிருகங்களுந் தந்தம்முடைய கொடுந்தொழிலான வழியைவிட்டு
நீங்க அந்தந்த தேசத்திலுள்ள அபூர்வ பதார்த்தத்தில் வேறு நல்ல பதார்த்தங்கள்
இன்னமும் இருக்கின்றதென்று சொல்லுதற்கில்லாமல் கொண்டுவந்து எவ்விடத்தும்
பொருந்திப் பலஆறுகள் பெருகிக் கூடுஞ் சமுத்திரம் போலச் சேனைகள் பொருந்தி
ஓங்க-எ-று (5-123)
எண்டகுநாடுங்காடுமலைகளும்யாறுநீங்கிக்
கண்டதுவழியாமண்டிக்கடிதுவந்தலர்ந்தகண்டல்
வெண்டருமடலுநீறும்விரைதருசோறுநல்கித்
தெண்டிரைப்புலவுமாற்றுந்தில்லையினெல்லைசேர்ந்தான்.
இ-ள் எண்ணத்தக்க நாடுகளும்-காடுகளும், மலைகளும் ஆறுகளும், கடந்து தனக்கு
நேரிட்டதே வழியாக விரைந்துவந்து பூந்தாழையானது வெண்மையைத்தரும் மடலும்
நீறும் மணம் பொருந்தியசறும் சொரிந்து கடலின் புலால் நாற்றத்தை நீக்குந் தில்லை
வனத்தின் எல்லையை அணுகினான்- (5-124)
புரவியைவிரைந்துபோந்துபுதல்வன்முன்பணிந்துபோற்றி
வருபெருஞ்செல்வங்கூறமாமுனிமகிழ்ந்துவாழ்த்தித்
திருவுடையந்தணாளரெழுந்தருள்சீர்மைகாண்பா
னிருவருமெதிரேசென்றாரியாவருந்தேரிழிந்தார்.
இ-ள் மனோவேகத்துக்கொத்தகுதிரையை மேற்கொண்டு துரிதமாக வந்து புதல்வனாகிய
இரணியவன்மன் வியாக்கிரபாதர் சந்நிதியிலே நமஸ்கரித்துத் துதித்து வருகிற சேனை
ஐசுவரியத்தின் மிகுதியும் ரிஷிகள் வரத்தும் விண்ணப்பஞ்செய்ய வியாக்கிரபாதருஞ்
சந்தோஷத்துடனே ஆசீர்வாதம்பண்ணித் திருவுடையந்தணரென்று திருநாமத்தையுடைய
ரிஷிகளெழுந்தருளுகிற பெருமைகாணும்படி பதஞ்சலி மகாரிஷியுந் தாமும் ரிஷிகளுக்கு
எதிரேவர மூவாயிர ரிஷிகளுந் தேரில் நின்றுமிழிந்தார்கள்-எ-று. (5-125)
அங்கவரணைந்துவாழ்த்தியணைப்பவாழ்ந்தமலவுன்றன்
மங்கலவருளான்மீண்டுவருநெறிபெற்றோமின்னம்
பங்கயன்வரினுமண்ணல்பாதபங்கயங்கணீங்கா
திங்கெமைமுனிவபோகவினிவிடாதொழிகவென்றார்.
இ-ள் அவ்விடத்திருஷிகள் எல்லாரும் வியாக்கிரபாதரை வாழ்த்தி ஒருவர்க்கொருவராலிங்கனம்
பண்ணிக்கொண்டு கிருதார்த்தராய் சுத்தனேயுனது மங்களமான அருளினாலே இவ்விடத்துக்கு
மீளவும் வரும்வழி பெற்றோம் இன்னம் பிரமா வந்தாலும் அண்ணலுடைய சீர்பாத பங்கயங்களைப்
பிரியாமலிருக்க எங்களைப் போகவிடாதே முனிவனே என்று சொன்னார்கள்-எ-று (5-126)
மாமணித்தேர்கண்மன்றின்வடகுடபானிறுத்தித்
தாமணைந்தருமுனிக்குத்தம்பிரானருளினாலே
தூமலிவகையாற்காட்டத்தொகையிலோர்முனிவரங்குத்
தேமலியலங்கன்மார்பன்கண்டிலன்றிகைத்துநின்றான்
இ-ள் பெரியமாணிக்கத்தேர்களைச் சிதம்பரத்துக்கு வடமேன்மூலையிலே நிறுத்தித்
தாங்களிப்பால்வந்து பொருந்தித் தம்பிரானார் அருளிலே வியாக்கிரபாதர்க்குச்
சுத்தமிகுந்திருக்கிற தங்களை யெண்ணிக்காட்டும்போது மூவாயிரவரில் ஒருரிஷியை
அவ்விடத்துக் காணாமல் மணம் பொருந்தின ஆத்திமாலை மார்பனான இரணியவன்மன்
திகைத்து நின்றான்-எ-று (5-127)
செம்மைமெய்ப்பெரியோர்போலத்தேடநிதென்றுமைந்தன்
மெய்மையிற்றியரநோக்கிவிமலன்விண்ணவருங்கேட்ப
வெம்மையொப்பவர்கள்யாரும்யாமவர்க்கொப்போமென்றே
யம்மையப்பனுமாவானாமவர்களிலொருவனென்றான்.
இ-ள் செம்மைபொருந்தின சத்தியசொரூபிகளான இந்தப் பெரியோரைப்போல
இனியொருவரையுந் தேடக்கிடையாதென்று இரணியவன்மனானவன் திரிவித
கரணத்தினாலு முண்மையாகப்படும் வருத்தத்தைக் கண்டு விமலன் விண்ணவரும்
கேட்கத்தக்கதாக அந்த ரிஷிகளெல்லாரும் எமக்கொப்பானவர்கள் யாமந்த
ரிஷிகளுக்கு ஒப்பாவோம் ஆதலால் நாமவர்களுக்குள்ளே யொருவனாகக்
கைக்கொள்ளென்று சிகத்துக்கு மாதாவும் பிதாவுமாகிய சிதம்பரநாதர் அருளிச்
செய்தார்-எ-று (5-128)
என்றருள்செய்தவாய்மையாவருங்கேட்டுத்தில்லை
மன்றினின்றாடுகின்றமறையவன்மறையோர்தம்மி
லொன்றெனலாகுமேன்மையடையரென்றுளந்துளங்கிச்
சென்றடிபணிந்தான்மைந்தன்றேவர்பூமாரிபெய்தார்
இ-ள் இப்படியருளிச் செய்த சத்தியவாசகத்தை யெல்லாருங் கேட்டுத் தில்லைமன்றி லாநந்த
நிருத்தம் சிய்கிற வீதகர்த்தாவானர் வேசுவரனிந்தப் பிரமரிஷிகளில் நாமுமொருத்தனென்று
சொல்லத்தக்க பெருமை யுடையார்களென்று சித்த நடுக்கத்துடனே சென்று இரணியவன்மன்
நமஸ்கரித்தான் தேவர்கள் புட்பவருஷம் வருஷித்தார்கள்-எ-று. (5-129)
அண்டர்நாயகனளித்தவருளினாற்றம்மையஞ்சி
மண்டனில்வீழ்ந்தெழுந்துவாழ்ந்துதாழ்ந்தயர்ந்துவாழ்த்தி
யெண்டிகழ்முனிவரெம்மையெழுமையுமடிமையாகக்
கொண்டருளென்றுகொண்டைக்கோலொடுகுணலையிட்டார்.
இ-ள். அண்டத்துக்கு நிமித்த காரணனாயுள்ளவன் கடாக்ஷித்த அருளினாலே தம்மைத்தாமே
யறிந்து பயப்பட்டுப் பூதலத்திலே தண்டாகாரமாக வீழ்ந்து மீளவெழுந்திருந்து பெருவாழ்வு
பெற்று உன்மத்தராய் நமஸ்கரித்து மோகிதராய் வெகுவிதமாகத் துதித்து மூவாயிரரிஷிகளும்
எங்களை யெழு பிறப்பிலும்
அகத்தடிமையாகக் கொண்டருளுவாயாகவென்று கொண்டைக்கோலுடனே குணலைக்
கூத்தாடினார்கள்-எ-று. (5-130)
மன்மகன்றொழுதுநின்றிம்மறையவர்க்கேவல்செய்தற்
கென்னமாதவம்புரிந்தேன்யானெனவிறைஞ்சியேத்தப்
பன்னருமிருடிமைந்தன்பான்மையைப்பாவமன்றிற்
பொன்னடி பணிந்துவாழ்த்தியாவரும்புகழ்ந்துபோந்தார்.
இ-ள். இராசகுமாரன் நமஸ்கரித்துநின்று இந்தப் பிரமரிஷிகளுக்குப் பணிவிடைசெய்ய
யானெந்தப்பெரியதபசு பண்ணினேனென்று சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துப் புகழ்
வாக்குக்கெட்டாத பெருமையையுடைய ரிஷிகளும் இரணியவன்மன் சுபாவத்தைத்
துதித்துச் சிதம்பரத்தில் தம்பிரானார் சீர்பாதத்தை நமஸ்கரித்து வியாக்கிரபாதர்
பதஞ்சலி முதலானயாவரும் இரணியவன்மனை யாசீர்வாதம் பண்ணி நல்ல வார்த்தைகள்
சொல்லி யாச்சிரமங்களிலே வந்தார்கள்-எ-று. (5-131)
நடநிலைபிரியாதானோர்ஞானவானிருந்தாற்பாச
மிடையிருளகன்றுகோடிவிற்கிடைவெளியாமென்றாற்
றிடமிகுதவரநேகர்செறிதலாற்றிகழுந்தில்லை
யடவியுமிருணீங்கிற்றென்றலதிசயமாகாதன்றே.
இ-ள். ஆநந்த நிருத்தத்துக்கு அதிட்டானமான ஞானத்தைநீங்காத சைதன்னியத்தை
யுடையவராகிய ஒருஞாதாவானவர் யாதோரிடத்திலே இருக்கிறாரோ அவ்விடஞ்
சூழ்ந்த பாசநெருங்கின அந்தகார நீங்கிக் கோடிவிற்கிடை நீளம் சிவப்பிரகாசமாமென்று
வேதாகமஞ் சொல்லுதலால் அத்திடசித்தரான பெரியரிஷிகள் அநேகம்பேர்
நெருங்கியிருக்கையினாலே தில்லைச் சிற்றம்பலமென்ற பழம்பதியிற் காடுகளியாவும்
பாச நீங்கிற்றென்னுமது அதிசயமாகாதே - எ-று. (5-132)
-----------
ஞாதா - ஞானவான்.
அருந்தவரடங்கத்தில்லையம்பலஞ்சூழவைகத்
திருந்தியகுமரன்மன்றந்திகழ்குணதிசையிற்சேரப்
பொருந்தியதானைமல்கப்புகழ்படைவீடுசெய்தங்
கிருந்தனன்பின்புசெய்தவியல்புகளியம்பலுற்றாம்.
இ-ள். மூவாயிரம் பிரமரிஷிகள் முதலான பெரியோரிவாவரும் தில்லை
அம்பலத்தைச் சூழ்ந்திருப்பக் குற்ற நீங்கின இரணியவன் மனானவன்
சிதம்பரத்துக்குக் கிழக்காகப் பொருந்தித் தன்னைச் சேவித்துவந்த சதுரங்க
பலத்துக்கும் இடமுண்டாகக் கொற்றவன் குடியிருப்பென்று சொல்லப்பட்ட
படைவீடு கற்பித்து அவ்விடத்துக்கட்டின மாளிகையிலிர்ந்தான் பின்பு நிகழ்ந்த
காரியங்களைச் சொல்லப் புகுகின்றோம்-எ-று. (5-133)
இரணியவன்மச்சருக்கம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 362.
----------