MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.43 திருக்கற்குடி
    பண் - தக்கராகம்

    459 வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
    தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
    இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
    கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. 1.43.1
    460 அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்
    பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
    சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்
    கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே. 1.43.2
    461 நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
    தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
    போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
    காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே. 1.43.3
    462 ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்
    டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர்
    மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்
    கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.4
    463 போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப்
    பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்
    ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்
    கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.5
    464 உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி
    விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
    நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
    கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. 1.43.6
    465 மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்
    ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்
    தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக்
    கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.7
    466 வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த்
    தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
    தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
    காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே. 1.43.8
    467 தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து
    கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர்
    வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
    கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே. 1.43.9
    468 மூத்துவ ராடையி னாரும் ()மூசு கருப்பொடி யாரும்
    நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார்
    ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங்
    காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே.

    () மூசு கடுப்பொடி என்றும் பாடம். 1.43.10
    469 காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை
    நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
    பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
    பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே. 1.43.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - முத்தீசர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்