1.50 திருவலிவலம்
பண் - பழந்தக்கராகம்
537 ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே. 1.50.1
538 இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.2
539 பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே. 1.50.3
540 மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.4
541 துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. 1.50.5
542 புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.6
543 தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. 1.50.7
544 நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே. 1.50.8
545 ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.9
546 பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.
()பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று. 1.50.10
547 வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே. 1.50.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - வாளையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்