MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.52 திருநெடுங்களம்
    பண் - பழந்தக்கராகம்

    559 மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
    குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
    நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.1
    560 கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
    தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
    மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
    நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.2
    561 நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
    என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
    பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
    நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.3
    562 மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
    அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
    தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.4
    563 பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
    தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
    தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.5
    564 விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
    கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
    அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
    நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.6
    565 கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
    மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
    ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
    நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.7
    566 குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
    அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
    என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
    நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.8
    567 வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
    சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
    கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
    நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.9
    568 வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
    தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
    நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.10
    569 நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
    சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
    நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. 1.52.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்