1.54 திருஓத்தூர்
பண் - பழந்தக்கராகம்
580 பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே. 1.54.1
581 இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே. 1.54.2
582 உள்வேர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. 1.54.3
583 தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே. 1.54.4
584 குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயருள் நல்குமே. 1.54.5
585 மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயருள் நல்குமே. 1.54.6
586 தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே. 1.54.7
587 என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே. 1.54.8
588 நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே. 1.54.9
589 கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே. 1.54.10
590 குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே. 1.54.11
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்