MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.59 திருத்தூங்கானைமாடம்
    பண் - பழந்தக்கராகம்

    634 ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
    யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
    அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம்
    அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
    கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்
    கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
    தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.1
    635 பிணிநீர சாதல் பிறத்தலிவை
    பிரியப் பிரியாத பேரின்பத்தோ
    டணிநீர மேலுலகம் எய்தலுறில்
    அறிமின் குறைவில்லை ஆனேறுடை
    மணிநீல கண்ட முடையபிரான்
    மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்
    துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.2
    636 சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
    சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
    ஆமா றறியா தலமந்துநீர்
    அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
    பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
    புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
    தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.3
    637 ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
    உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
    மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
    மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
    மூன்று மதிலெய்த மூவாச்சிலை
    முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
    தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.4
    638 மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை
    மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
    வியல்தீர மேலுக மெய்தலுறின்
    மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
    உயர்தீர வோங்கிய நாமங்களா
    லோவாது நாளும் அடிபரவல்செய்
    துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.5
    639 பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா
    படர்நோக் கின்கண் பவளந்நிற
    நன்னீர்மை குன்றித் திரைதோலொடு
    நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
    பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்
    புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
    தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.6
    640 இறையூண் துகளோ டிடுக்கணெய்தி
    யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
    நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
    நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்
    பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப்
    பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
    துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.7
    641 பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்
    பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
    இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்
    இறையே பிரியா தெழுந்துபோதுங்
    கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
    காதலியுந் தானுங் கருதிவாழுந்
    தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.8
    642 நோயும் பிணியும் அருந்துயரமும்
    நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
    வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
    மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
    தாய அடியளந்தான் காணமாட்டாத்
    தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
    டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.9
    643 பகடூர் பசிநலிய நோய்வருதலாற்
    பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
    முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
    மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
    திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
    திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்
    துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
    தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.10
    644 மண்ணார் முழவதிரும் மாடவீதி
    வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
    பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
    பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
    கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்
    கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
    விண்ணோ ருலகத்து மேவிவாழும்
    விதியது வேயாகும் வினைமாயுமே. 1.59.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர், தேவியார் - கடந்தைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்