MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.60 திருத்தோணிபுரம்
    பண் - பழந்தக்கராகம்

    645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
    ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
    துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
    பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. 1.60.1
    646 எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
    அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
    செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
    வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. 1.60.2
    647 பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
    கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
    செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
    பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. 1.60.3
    648 காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
    பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
    சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
    ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. 1.60.4
    649 பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
    காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
    தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
    நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. 1.60.5
    650 சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
    வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
    தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
    கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. 1.60.6
    651 முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
    அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
    தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
    கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. 1.60.7
    652 பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
    ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
    தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
    கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே. 1.60.8
    653 நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
    பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
    சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
    விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. 1.60.9
    654 சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
    முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
    துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
    பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. 1.60.10
    655 போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
    கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
    தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
    சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 1.60.11

    திருச்சிற்றம்பலம்