1.61 திருச்செங்காட்டங்குடி
பண் - பழந்தக்கராகம்
656 நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.1
657 வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 1.61.2
658 வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3
659 தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே. 1.61.4
660 பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.5
661 நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. 1.61.6
662 மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. 1.61.7
663 தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. 1.61.8
664 ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.9
665 செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. 1.61.10
666 கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. 1.61.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்