1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
1025 தோடொர் காதினன், பாடு மறையினன்
காடு பேணிநின், றாடு மருதனே. 1.95.1
1026 கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 1.95.2
1027 எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. 1.95.3
1028 விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. 1.95.4
1029 பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. 1.95.5
1030 கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. 1.95.6
1031 பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. 1.95.7
1032 எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே. 1.95.8
1033 இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. 1.95.9
1034 நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. 1.95.10
1035 கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே. 1.95.11
திருச்சிற்றம்பலம்