1.106 திருஊறல்
பண் - வியாழக்குறிஞ்சி
1143 மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே. 1.106.1
1144 மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே. 1.106.2
1145 ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே. 1.106.3
1146 நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே. 1.106.4
1147 எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே. 1.106.5
1148 () இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 1.106.6
1149 கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே. 1.106.7
1150 நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே. 1.106.8
1151 பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே. 1.106.9
1152 கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே. 1.106.10
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
சுவாமிபெயர் - உமாபதீசுவரர், தேவியார் - உமையம்மை.
திருச்சிற்றம்பலம்