MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.15 திருக்காறாயில்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    154 நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
    தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
    சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே. 01
    155 மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
    விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
    நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
    பதியானே யென்பவர் பாவமி லாதாரே. 02
    156 விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
    மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்
    கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
    எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே. 03
    157 தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
    ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
    சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
    மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே. 04
    158 கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
    மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
    சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
    நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 05
    159 ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
    வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
    போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
    நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 06
    160 சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
    ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
    காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
    ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 07
    161 கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
    எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
    கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
    அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 08
    162 பிறையானே பேணிய பாடலோ டின்னிசை
    மறையானே மாலொடு நான்முகன் காணாத
    இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
    உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே. 09
    163 செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
    படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
    கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
    குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே. 10
    164 ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
    ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
    பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
    வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்