2.28 திருக்கருவூரானிலை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
295 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயும் அன்பரே. 01
296 நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்தம் அன்பரே. 02
297 விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 03
298 முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியு ளார்கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே. 04
299 பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யர்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 05
300 தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 06
301 பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளும் நாதரே. 07
302 கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 08
303 உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே. 09
304 புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே. 10
305 கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே. 11
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - கிருபாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்