MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.55 திருத்தலைச்சங்காடு
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    590 நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ்
    சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்
    குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந்
    தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே. 01
    591 துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
    மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
    பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை
    அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 02
    பிணி - பிணித்தல்
    592 சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர்
    நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
    தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
    ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே. 03
    593 வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
    ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
    கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்
    மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 04
    594 சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
    நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்
    ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக்
    கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. 05
    595 நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து
    புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
    சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
    நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே. 06
    596 அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
    கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்
    பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
    கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 07
    597 திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
    வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்
    அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
    நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே. 08
    598 பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
    போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்
    தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
    சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 09
    599 அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
    தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
    தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை
    நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே. 10
    600 நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
    குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை
    ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
    மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர், தேவியார் - சௌந்தரியம்மை.
    திருச்சிற்றம்பலம்