2.72 திருநணா
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
776 பந்தார் விரல்மடவாள் பாகமா
நாகம்பூண் டேற தேறி
அந்தார் அரவணிந்த அம்மா
னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட
வார்பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளியொளிரத் தேமாக்
கனியுதிர்க்குந் திருந ணாவே. 01
777 நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்
மற்றொருகை வீணை யேந்தி
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா
னிடம்போலு மிலைசூழ் கானில்
ஓட்டந் தருமருவி வீழும்
விசைகாட்ட முந்தூ ழோசைச்
சேட்டார் மணிகள் அணியுந்
திரைசேர்க்குந் திருந ணாவே. 02
778 நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
பாகமாய் ஞால மேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்
கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகள் மோத
மயிலாலுஞ் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி
அடிபணியுந் திருந ணாவே. 03
779 கையில் மழுவேந்திக் காலிற்
சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்
கிடம்போலு மிடைந்து வானோர்
ஐய ரவரெம் பெருமா
னருளென்றென் றாத ரிக்கச்
செய்ய கமலம் பொழிதே
னளித்தியலுந் திருந ணாவே. 04
780 முத்தேர் நகையா ளிடமாகத்
தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா
ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியா
லிசைமுரல ஆலத் தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார்
வினைகெடுக்குந் திருந ணாவே. 05
781 வில்லார் வரையாக மாநாகம்
நாணாக வேடங் கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க்
கிடம்போலும் புலியு மானும்
அல்லாத சாதிகளு மங்கழல்மேற்
கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல
அருள்புரியுந் திருந ணாவே. 06
782 கானார் களிற்றுரிவை மேல்மூடி
ஆடரவொன் றரைமேற் சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான்
றானுகந்த கோயி லெங்கும்
நானா விதத்தால் விரதிகள்நன்
னாமமே யேத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண் டடியார்
அடிவணங்குந் திருந ணாவே. 07
783 மன்னீ ரிலங்கையர்தங் கோமான்
வலிதொலைய விரலா லூன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க்
கிடம்போலும் முநனைசேர் சீயம்
அன்னீர் மைகுன்றி அழலால்
விழிகுறைய வழியு முன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்து
கரியொளிக்குந் திருந ணாவே. 08
784 மையார் மணிமிடறன் மங்கையோர்
பங்குடையான் மனைக டோ றும்
கையார் பலியேற்ற கள்வன்
இடம்போலுங் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி
யளந்தானும் போற்ற மன்னிச்
செய்யார் எரியாம் உருவ
முறவணங்குந் திருந ணாவே. 09
785 ஆடை யொழித்தங் கமணே
திரிந்துண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார்
உரையகற்றும் மூர்த்தி கோயில்
ஓடு நதிசேரும் நித்திலமும்
மொய்த்தகிலுங் கரையில் சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி
யொளிபெருகுந் திருந ணாவே. 10
786 கல்வித் தகத்தால் திரைசூழ்
கடற்காழிக் கவுணி சீரார்
நல்வித் தகத்தால் இனிதுணரும்
ஞானசம் பந்தன் எண்ணுஞ்
சொல்வித் தகத்தால் இறைவன்
திருநணா ஏத்து பாடல்
வல்வித் தகத்தான் மொழிவார்
பழியிலரிம் மண்ணின் மேலே. 11
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி
காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப்
பெயர் வழங்கப்படுகின்றது.
சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர்,
தேவியார் - வேதமங்கையம்மை.
திருச்சிற்றம்பலம்