MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.76 திருஅகத்தியான்பள்ளி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    822 வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்
    நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
    ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப்
    பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே. 01
    823 துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான்
    மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்
    அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை
    உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே. 02
    824 உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங்
    கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
    அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே. 03
    825 காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
    பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
    ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. 04
    826 போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை
    கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்
    கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே. 05
    827 தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
    எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
    அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே. 06
    828 ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்
    சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
    ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
    நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே. 07
    829 செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம்
    ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்
    அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. 08
    830 சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
    அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
    பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
    பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. 09
    831 செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி
    புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
    அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச்
    சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. 10
    832 ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
    ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்
    சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய
    மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அகத்தீசுவரர்,
    தேவியார் - மங்கைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்