MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.77 திருஅறையணிநல்லூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    833 பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
    வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
    சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
    ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. 01
    834 இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ
    நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்
    அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
    தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே. 02
    835 என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
    பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
    முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்
    கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. 03
    836 விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
    உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்
    அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
    பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே. 04
    837 தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ
    ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்
    மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
    பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே. 05
    838 விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
    அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
    நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
    உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே. 06
    839 வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
    ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை
    ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
    வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே. 07
    840 தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை
    முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
    அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
    நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே. 08
    841 வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
    செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்
    ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச்
    சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே. 09
    842 வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
    சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
    ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்
    பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே. 10
    843 கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்
    பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்
    மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக்
    கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே. 11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர், தேவியார் - அருள்நாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்