2.84 திருநனிபள்ளி
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
908 காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை
படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும்
நனிபள்ளி போலு நமர்காள். 01
909 சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம்
வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை
யிறைவன்னி டங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து
மணநாறும் நீல மலரும்
நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை
நனிபள்ளி போலு நமர்காள். 02
910 பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடி லாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும்
நனிபள்ளி போலு நமர்காள். 03
911 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும்
நனிபள்ளி போலு நமர்காள். 04
912 தோடொரு காதனாகி யொருகா திலங்கு
சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடு மெந்தை
யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும்
நனிபள்ளி போலு நமர்காள். 05
913 மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை மணிபொன்
ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை
பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப
அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும்
நனிபள்ளி போலு நகர்காள். 06
914 தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்
கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்
பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை
நனிபள்ளி போலு நமர்காள். 07
பாலை நெய்தல் பாடியது - இந்த நான்காவது
சரணத்தால் விளங்குகின்றது. எவ்வாறெனில்,
முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா
லென்க. பாலை நெய்தல் பாடியதும் -பாம்பழியப்
பாடியதும் என்னுந் திருவெண்பாவானுமுணர்க.
915 வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று
மதியா அரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த
பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை
எனநின்ற நீதி யதனை
நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலு நமர்காள். 08
916 நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்
அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும்
நனிபள்ளி போலு நமர்காள். 09
917 அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்
இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்
விடையா னுகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலு நமர்காள். 10
918 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்
கமழ்காழி என்று கருத
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
னிசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
வினைகெடுதல் ஆணை நமதே. 11
திருச்சிற்றம்பலம்