MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.85 கோளாறு திருப்பதிகம்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    919 வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
    சனிபாம்பி ரண்டு முடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 01
    920 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
    எருதேறி யேழை யுடனே
    பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
    உடனாய நாள்க ளவைதாம்
    அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 02
    இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத
    12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது.
    விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்.
    ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது
    நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய
    நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது
    மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம்.
    12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம்,
    கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம்,
    ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.
    921 உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
    உமையோடும் வெள்ளை விடைமேன்
    முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
    திசை தெய்வ மானபலவும்
    அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 03
    922 மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
    மறையோது மெங்கள் பரமன்
    நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
    கொடுநோய்க ளான பலவும்
    அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 04
    923 நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
    விடையேறும் நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
    மிகையான பூத மவையும்
    அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 05
    924 வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
    மடவாள் தனோடு முடனாய்
    நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
    கொடுநாக மோடு கரடி
    ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 06
    925 செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
    விடையேறு செல்வ னடைவார்
    ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
    வினையான வந்து நலியா
    அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 07
    926 வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
    மடவாள் தனோடும் உடனாய்
    வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
    இடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 08
    927 பலபல வேடமாகும் பரனாரி பாகன்
    பசுவேறும் எங்கள் பரமன்
    சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
    வருகால மான பலவும்
    அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 09
    928 கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
    குணமாய வேட விகிர்தன்
    மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
    திருநீறு செம்மை திடமே
    அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே. 10
    929 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
    வளர்செம்பொன் எங்கும் நிகழ
    நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
    மறைஞான ஞான முனிவன்
    தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரைசெய்
    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே. 11
    இப்பதிகம் பாண்டிநாட்டுக் கெழுந்தருளியபோது அருளிச்செய்தது.

    திருச்சிற்றம்பலம்