MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    33. குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம்
    (திருப்பெருந்துறையில் அருளியது -
    அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

    குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
    காவாய் உடையாய் கொடுவினையேன்
    உழைத்தா லுறுதியுண்டோ தான்
    உமையாள் கணவா எனை ஆள்வாய்
    பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
    பிறைசேர் சடையாய் முறையோவென்
    றழைத்தால் அருளா தொழிவதே
    அம்மானே உன்னடியேற்கே. 496

    அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்
    கொடியே ரிடையான் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்
    செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா
    உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497

    ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை
    இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே
    குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்
    என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 498

    மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
    வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்
    ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து
    கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. 499

    கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ
    தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ
    வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
    தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500

    வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ
    வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
    வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
    வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 501

    அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்
    குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ
    இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
    நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. 502

    நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்
    மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி
    ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்
    காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503

    கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர
    எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால்
    மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
    அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. 504

    அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே
    திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
    புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே
    குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. 505

    திருச்சிற்றம்பலம்