MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.1 திருப்பிரமபுரம்
    பண் - நட்டபாடை

    1 தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.1
    2 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
    வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
    கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
    பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.2
    3 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
    ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
    ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
    பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.3
    4 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
    உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
    மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
    பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.4
    5 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
    அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
    பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.5
    6 மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
    இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
    கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
    பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.6
    7 சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
    உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
    கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
    பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.7
    8 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
    உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
    துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
    பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.8
    9 தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
    நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
    வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
    பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.9
    10 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
    ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
    பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.10
    11 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
    பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
    ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
    திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே. 1.1.11

    திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
    திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

    திருச்சிற்றம்பலம்