MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.15 திருநெய்த்தானம்
    பண் - நட்டபாடை

    152 மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
    கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
    செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
    நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 1.15.1
    152 பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
    பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்
    அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
    நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே. 1.15.2
    154 பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
    வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
    தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
    நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 1.15.3
    155 சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி
    நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
    கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
    நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே. 1.15.4
    156 நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
    பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
    நிகரான்மண லிடுதன்கரை() நிகழ்வாயநெய்த் தான
    நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
    () தண்கரை என்றும் பாடம். 1.15.5
    157 விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
    உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய
    புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்() தானம்
    அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.
    () சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம். 1.15.6
    158 நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
    தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
    கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
    தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே. 1.15.7
    159 அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
    இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
    நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்
    கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே. 1.15.8
    160 கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
    சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
    காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
    ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே. 1.15.9
    161 மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
    புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
    நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
    சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே. 1.15.10
    162 தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
    நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
    பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
    சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே. 1.15.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்,
    தேவியார் - வாலாம்பிகையம்மை.