MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.23 திருக்கோலக்கா
    பண் - தக்கராகம்

    239 மடையில் வாளை பாய மாதரார்
    குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
    சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
    உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1.23.1
    240 பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி
    கொண்டான் கோலக் காவு கோயிலாக்
    கண்டான் பாதங் கையாற் கூப்பவே
    உண்டான் நஞ்சை உலக முய்யவே. 1.23.2
    241 பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்
    கோணற் பிறையன் குழகன் கோலக்கா
    மாணப் பாடி மறைவல் லானையே
    பேணப் பறையும் பிணிக ளானவே. 1.23.3
    242 தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
    மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
    குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
    இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. 1.23.4
    243 மயிலார் சாயல் மாதோர் பாகமா
    எயிலார் சாய எரித்த எந்தைதன்
    குயிலார் சோலைக் கோலக் காவையே
    பயிலா நிற்கப் பறையும் பாவமே. 1.23.5
    244 வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
    கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
    கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
    அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. 1.23.6
    245 நிழலார் சோலை நீல வண்டினங்
    குழலார் பண்செய் கோலக் காவுளான்
    கழலால் மொய்த்த பாதங் கைகளாற்
    தொழலார் பக்கல் துயர மில்லையே. 1.23.7
    246 எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
    முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
    குறியார் பண்செய் கோலக் காவையே
    நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. 1.23.8
    247 நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
    ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
    கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
    ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. 1.23.9
    248 பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
    உற்ற துவர்தோ யுருவி லாளருங்
    குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
    பற்றிப் பரவப் பறையும் பாவமே. 1.23.10
    249 நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
    குலங்கொள் கோலக் காவு ளானையே
    வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
    உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. 1.23.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்