MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.32 திருவிடைமருதூர்
    பண் - தக்கராகம்

    338 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
    காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
    வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்
    தீடாவுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.1
    339 தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
    குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
    படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
    இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.2
    340 வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
    அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
    பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
    எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ. 1.32.3
    341 அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
    கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
    வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
    எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.4
    342 வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
    தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
    பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
    ஈசனுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.5
    343 வன்புற்றிள நாகம் அசைத் தழகாக
    என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
    அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
    இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.6
    344 தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
    போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
    ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
    ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.7
    345 பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
    ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த
    ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த
    ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ. 1.32.8
    346 முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
    நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
    பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
    எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.9
    347 சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
    நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
    வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
    எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. 1.32.10
    348 கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
    எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
    பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
    விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே. 1.32.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்