1.39 திருவேட்களம்
பண் - தக்கராகம்
415 அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்
ஆரழ லங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப
மலைமகள் காண நின்றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை
தண்மதியம் மயலே ததும்ப
வெந்தவெண் ணீறு மெய்பூசும்
வேட்கள நன்னக ராரே. 1.39.1
415 சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்
சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ் சூழப்
போதரு மாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவண ஆடை
உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார்
வேட்கள நன்னக ராரே. 1.39.2
416 பூதமும் பல்கண மும்புடை சூழப்
பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும் வெம்மையு மாகிச்
சீரொடு நின்றவெஞ் செல்வர்
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
உள்ளங் கலந்திசை யாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
வேட்கள நன்னக ராரே. 1.39.3
418 அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
அமையவெண் கோவணத் தோடசைத்து
வரைபுல்கு மார்பி லோராமை
வாங்கி யணிந் தவர்தாந்
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்
தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
வேட்கள நன்னக ராரே. 1.39.4
419 பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார்
மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்
கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல்
வேட்கள நன்னக ராரே. 1.39.5
420 கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
கண்கவ ரைங்கணை யோனுடலம்
பொறிவளர் ஆரழ லுண்ணப்
பொங்கிய பூத புராணர்
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
வெறிவளர் கொன்றையந் தாரார்
வேட்கள நன்னக ராரே. 1.39.6
421 மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை
மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி
நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்
காலனைக் காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர்திரு மார்பர்
வேட்கள நன்னக ராரே. 1.39.7
422 ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
அமுத மமரர்க் கருளி
சூழ்தரு பாம்பரை யார்த்துச்
சூலமோ டொண்மழு வேந்தித்
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்
தண்மதி யம்மய லேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்
வேட்கள நன்னக ராரே. 1.39.8
423 திருவொளி காணிய பேதுறு கின்ற
திசைமுக னுந்திசை மேலளந்த
கருவரை யேந்திய மாலுங்
கைதொழ நின்றது மல்லால்
அருவரை யொல்க எடுத்த வரக்கன்
ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
வெருவுற வூன்றிய பெம்மான்
வேட்கள நன்னக ராரே. 1.39.9
424 அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்
யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவ தல்லால்
புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர்
வேட்கள நன்னக ராரே. 1.39.10
425 விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள்
பழியொடு பாவமி லாரே. 1.39.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்