1.42 திருப்பேணுபெருந்துறை
பண் - தக்கராகம்
448 பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை
பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
அரிவையோர் பாக மமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
பேணு பெருந்துறை யாரே. 1.42.1
449 மூவரு மாகி இருவரு மாகி
முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி
பல்கணம் நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதில் மூன்று மெரித்த
தேவர்கள் தேவர் எம்பெரு மானார்
தீதில் பெருந்துறை யாரே. 1.42.2
450 செய்பூங் கொன்றை கூவிள மாலை
சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகங்
கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை
காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
பில்கு பெருந்துறை யாரே. 1.42.3
451 நிலனொடு வானும் நீரொடு தீயும்
வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி
நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும்
மல்கு பெருந்துறை யாரே. 1.42.4
452 பணிவா யுள்ள நன்கெழு நாவின்
பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ள மிலாத
சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர்
அரிசி லுரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
மல்கு பெருந்துறை யாரே. 1.42.5
453 எண்ணார் தங்கள் மும்மதில் வேவ
ஏவலங் காட்டிய எந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த
வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல றாத
பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
பேணு பெருந்துறை யாரே. 1.42.6
454 விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
தண்()அரி சில்புடை சூழ்ந்த
குழையார் சோலை மென்னடை யன்னங்
கூடு பெருந்துறை யாரே.
() அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்
அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது. 1.42.7
455 பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி
மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி
அணவு பெருந்துறை யாரே. 1.42.8
456 புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானும்
உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய் தாளில் தாமரை மொட்டின்
முகம்மல ரக்கயல் பாயக்
கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்
காமர் பெருந்துறை யாரே. 1.42.9
457 குண்டுந் தேருங் கூறை களைந்துங்
கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
மல்கு பெருந்துறை யாரே. 1.42.10
458 கடையார் மாடம் நன்கெழு வீதிக்
கழுமல வூரன் கலந்து
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமு மொன்றி
உலகினில் மன்னுவர் தாமே. 1.42.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.
திருச்சிற்றம்பலம்