MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.42 திருப்பேணுபெருந்துறை
    பண் - தக்கராகம்

    448 பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை
    பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
    செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
    செய்தொழில் பேணியோர் செல்வர்
    அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
    அரிவையோர் பாக மமர்ந்த
    பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
    பேணு பெருந்துறை யாரே. 1.42.1
    449 மூவரு மாகி இருவரு மாகி
    முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
    பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி
    பல்கணம் நின்று பணியச்
    சாவம தாகிய மால்வரை கொண்டு
    தண்மதில் மூன்று மெரித்த
    தேவர்கள் தேவர் எம்பெரு மானார்
    தீதில் பெருந்துறை யாரே. 1.42.2
    450 செய்பூங் கொன்றை கூவிள மாலை
    சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
    கொய்பூங் கோதை மாதுமை பாகங்
    கூடியோர் பீடுடை வேடர்
    கைபோ னான்ற கனிகுலை வாழை
    காய்குலை யிற்கமு கீனப்
    பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
    பில்கு பெருந்துறை யாரே. 1.42.3
    451 நிலனொடு வானும் நீரொடு தீயும்
    வாயுவு மாகியோ ரைந்து
    புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
    புண்ணியர் வெண்பொடிப் பூசி
    நலனொடு தீங்குந் தானல தின்றி
    நன்கெழு சிந்தைய ராகி
    மலனொடு மாசும் இல்லவர் வாழும்
    மல்கு பெருந்துறை யாரே. 1.42.4
    452 பணிவா யுள்ள நன்கெழு நாவின்
    பத்தர்கள் பத்திமை செய்யத்
    துணியார் தங்கள் உள்ள மிலாத
    சுமடர்கள் சோதிப் பரியார்
    அணியார் நீல மாகிய கண்டர்
    அரிசி லுரிஞ்சு கரைமேல்
    மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
    மல்கு பெருந்துறை யாரே. 1.42.5
    453 எண்ணார் தங்கள் மும்மதில் வேவ
    ஏவலங் காட்டிய எந்தை
    விண்ணோர் சாரத் தன்னருள் செய்த
    வித்தகர் வேத முதல்வர்
    பண்ணார் பாடல் ஆடல றாத
    பசுபதி ஈசனோர் பாகம்
    பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
    பேணு பெருந்துறை யாரே. 1.42.6
    454 விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
    வினைகெட வேதமா றங்கம்
    பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
    பெரியோ ரேத்தும் பெருமான்
    தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
    தண்()அரி சில்புடை சூழ்ந்த
    குழையார் சோலை மென்னடை யன்னங்
    கூடு பெருந்துறை யாரே.

    () அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்
    அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது. 1.42.7
    455 பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
    பொருகடல் வேலி இலங்கை
    மன்ன னொல்க மால்வரை யூன்றி
    மாமுரண் ஆகமுந் தோளும்
    முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
    மூவிலை வேலுடை மூர்த்தி
    அன்னங் கன்னிப் பேடையொ டாடி
    அணவு பெருந்துறை யாரே. 1.42.8
    456 புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
    பொருகடல் வண்ணனும் பூவின்
    உள்வா யல்லி மேலுறை வானும்
    உணர்வரி யான்உமை கேள்வன்
    முள்வாய் தாளில் தாமரை மொட்டின்
    முகம்மல ரக்கயல் பாயக்
    கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்
    காமர் பெருந்துறை யாரே. 1.42.9
    457 குண்டுந் தேருங் கூறை களைந்துங்
    கூப்பிலர் செப்பில ராகி
    மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
    மிண்டு செயாது விரும்பும்
    தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
    தாங்கிய தேவர் தலைவர்
    வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
    மல்கு பெருந்துறை யாரே. 1.42.10
    458 கடையார் மாடம் நன்கெழு வீதிக்
    கழுமல வூரன் கலந்து
    நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
    நல்ல பெருந்துறை மேய
    படையார் சூலம் வல்லவன் பாதம்
    பரவிய பத்திவை வல்லார்
    உடையா ராகி உள்ளமு மொன்றி
    உலகினில் மன்னுவர் தாமே. 1.42.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.

    திருச்சிற்றம்பலம்