இராமாவதாரம் (கம்பராமாயணம்)
1. Bala kandam Part 2, பால காண்டம்
11. கைக்கிளைப் படலம் 12. வரலாற்றுப் படலம் 13. கார்முகப் படலம் 14. எழுச்சிப் படலம் 15. சந்திரசயிலப் படலம் 16. வரைக்காட்சிப் படலம் 17. பூக் கொய் படலம் 18. நீர் விளையாட்டுப் படலம் 19. உண்டாட்டுப் படலம் 20. எதிர்கொள் படலம் 21. உலாவியற் படலம் 22. கோலம் காண் படலம் 23. கடிமணப் படலம் 24. பரசுராமப் படலம் பால காண்டம்11. கைக்கிளைப் படலம்
சனகன் எதிர்கொள்ள மூவரும் சென்று, ஓர் மாளிகையில் தங்குதல்
ஏகி, மன்னனைக் கண்டு, எதிர் கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட,
போக பூமியில் பொன்னகர் அன்னது ஓர்
மாக மாடத்து, அனைவரும் வைகினார். 1
சதானந்த முனிவர் அவ்விடம் வந்து முகமன் உரைத்தல்
வைகும் அவ் வழி, மா தவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தென, தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான். 2
வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும், சென்று எதிர்,
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து, கோசிகன் தன் மருங்கு எய்தினான். 3
கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன் தனை மா முகம் நோக்கி, இப்
போது நீ இவண் போத, இப் பூதலம்
ஏது செய்த தவம்? என்று இயம்பினான். 4
இடர் முடித்தான் இவ் இளவல் என விசுவாமித்திரன் மொழிதல்
பூந் தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி, நூல்
தோய்ந்த சிந்தைக் கௌசிகன் சொல்லுவான்: 5
வடித்த மாதவ! கேட்டி இவ் வள்ளல்தான்
இடித்த வெங் குரல் தாடகை யாக்கையும்,
அடுத்து என் வேள்வியும், நின் அன்னை சாபமும்,
முடித்து, என் நெஞ்சத்து இடர் முடித்தான் என்றான். 6
உன் அருள் இருக்கும் போது எய்த முடியாததும் உளதோ? என சதானந்த முனிவர் வினவுதல்
என்று கோசிகன் கூறிட, ஈறு இலா
வன் தபோதனன், மா தவ! நின் அருள்
இன்றுதான் உளதேல், அரிது யாது, இந்த
வென்றி வீரர்க்கு? எனவும் விளம்பி, மேல், 7
சதானந்தர் இராம இலக்குவருக்கு விசுவாமித்திரர் வரலாறு உரைத்தல்
எள் இல் பூவையும், இந்திர நீலமும்,
அள்ளல் வேலையும், அம்புத சாலமும்,
விள்ளும் வீயுடைப் பானலும், மேவும் மெய்
வள்ளல்தன்னை மதிமுகம் நோக்கியே, 8
நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென், கேள்: இவ் அருந் தவன்
இறை எனப் புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினின் புரந்தே அருள் முற்றினான். 9
அரசின் வைகி அறனின் அமைந்துழி,
விரசு கானிடைச் சென்றனன், வேட்டைமேல்;
உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனைப்
பரசுவான் அவன்பால் அணைந்தான் அரோ. 10
அருந்ததி கணவன் வேந்தற்கு அருங் கடன் முறையின் ஆற்றி,
இருந்தருள் தருதி என்ன, இருந்துழி, இனிது நிற்கு
விருந்து இனிது அமைப்பென் என்னா, சுரபியை விளித்து, நீயே
சுரந்தருள் அமிர்தம் என்ன, அருள்முறை சுரந்தது அன்றே. 11
அறு சுவைத்து ஆய உண்டி, அரச! நின் அனிகத்தோடும்
பெறுக! என அளித்து, வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை,
நறு மலர்த் தாரும் வாசக் கலவையும் நல்கலோடும்,
உறு துயர் தணிந்து, மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான்: 12
மாதவ! எழுந்திலாய், நீ; வயப்புடைப் படைகட்கு எல்லாம்
கோது அறும் அமுதம் இக்கோ உதவிய கொள்கைதன்னால்,
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர்,
மே தகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு என்கைதன்னால், 13
நிற்கு இது தருவது அன்றால், நீடு அருஞ் சுரபிதன்னை
எற்கு அருள் என்றலோடும், இயம்பலன் யாதும், பின்னர்,
வற்கலை உடையென் யானோ வழங்கலென்; வருவது ஆகின்,
கொற் கொள் வேல் உழவ! நீயே கொண்டு அகல்க! என்று கூற, 14
பணித்தது புரிவென் என்னா, பார்த்திபன் எழுந்து, பொங்கி,
பிணித்தனன் சுரபிதன்னை; பெயர்வுழி, பிணியை வீட்டி,
மணித் தடந் தோளினாற்குக் கொடுத்தியோ, மறைகள் யாவும்
கணித்த எம் பெரும்? என்ன, கலை மறை முனிவன் சொல்வான்: 15
கொடுத்திலென், யானே; மற்று இக் குடைகெழு வேந்தந்தானே
பிடித்து அகல்வுற்றது என்ன, பெருஞ் சினம் கதுவும் நெஞ்சோடு,
இடித்து எழு முரச வேந்தன் சேனையை யானே இன்று
முடிக்குவென், காண்டி என்னா, மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே. 16
பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும் கபிலைமாட்டு உதித்து, வேந்தன்
துப்புடைச் சேனை யாவும் தொலைவுறத் துணித்தலோடும்,
வெப்புடைக் கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார். 17
சுரபிதன் வலி இது அன்றால்; சுருதி நூல் உணர வல்ல
வர முனி வஞ்சம் என்னா, மற்று அவன் சிரத்தை இன்னே
அரிகுதும் என்னப் பொங்கி, அடர்த்தனர்; அடர, அன்னான்
எரி எழ விழித்தலோடும், இறந்தனர் குமரர் எல்லாம். 18
ஐ-இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா,
நெய் பொழி கனலின் பொங்கி, நெடுங் கொடித் தேர் கடாவி,
கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி,
எய்தனன்; முனியும், தன கைத் தண்டினை, எதிர்க என்றான். 19
கடவுளர் படைகள் ஈறாக் கற்றன படைகள் யாவும்
விட விட, முனிவன் தண்டம் விழுங்கி மேல் விளங்கல் காணா,
வடவரைவில்லி தன்னை வணங்கினன் வழுத்தலோடும்,
அடல் உறு படை ஒன்று ஈயா, அன்னவன் அகன்றான் அன்றே. 20
விட்டனன் படையை வேந்தன்; விண்ணுளோர், உலகை எல்லாம்
சுட்டனன் என்ன, அஞ்சித் துளங்கினர்; முனியும் தோன்றி,
கிட்டிய படையை உண்டு கிளர்ந்தனன், கிளரும் மேனி
முட்ட வெம் பொறிகள் சிந்த; பொரு படை முரணது இற்றே. 21
கண்டனன் அரசன்; காணா, கலை மறை முனிவர்க்கு அல்லால்,
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால்;
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா,
ஒண் தவம் புரிய எண்ணி, உம்பர்கோன் திசையை உற்றான். 22
மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி,
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்கோன் பொலியும் நீர்மை
காண்டலும், அமரர் வேந்தன் துணுக்குறு கருத்தினோடும்
தூண்டினன், அரம்பைமாருள் திலோத்தமை எனும் சொல் மானை. 23
அன்னவள் மேனி காணா, அனங்க வேள் சரங்கள் பாய,
தன் உணர்வு அழிந்து காதற் சலதியின் அழுந்தி, வேந்தன்,
பன்ன அரும் பகல் தீர்வுற்று, பரிணிதர் தெரித்த நூலின்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி, நஞ்சு எனக் கனன்று, நக்கான். 24
விண் முழுது ஆளி செய்த வினை என வெகுண்டு, நீ போய்,
மண்மகள் ஆதி என்று, மடவரல் தன்னை ஏவி,
கண் மலர் சிவப்ப, உள்ளம் கறுப்புறக் கடிதின் ஏகி,
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான். 25
தென் திசை அதனை நண்ணிச் செய் தவம் செய்யும் செவ்வி,
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான்
தன் துணைக் குருவை நண்ணி, தனுவொடும் துறக்கம் எய்த
இன்று எனக்கு அருளுக! என்ன, யான் அறிந்திலென் அது என்றான். 26
நினக்கு ஒலாது ஆகின், ஐய! நீள் நிலத்து யாவரேனும்
மனக்கு இனியாரை நாடி, வகுப்பல் யான், வேள்வி என்ன,
சினக் கொடுந் திறலோய்! முன்னர்த் தேசிகற் பிழைத்து, வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றாய்; நீசன் ஆய் விடுதி என்றான். 27
மலர் உளோன் மைந்தன்-மைந்த!- வழங்கிய சாபம் தன்னால்
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து, அரசர் கோமான்,
புலரி அம் கமலம்போலும் பொலிவு ஒரீஇ, வதனம், பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே. 28
காசொடு முடியும் பூணும் கரியதாம் கனகம் போன்றும்,
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம் போன்றும்,
மாசொடு கருகி, மேனி வனப்பு அழிந்திட, ஊர் வந்தான்;
சீசி என்று யாரும் எள்ள, திகைப்பொடு பழுவம் சேர்ந்தான். 29
கானிடைச் சிறிது வைகல் கழித்து, ஒர் நாள், கௌசிகப் பேர்க்
கோன் இனிது உறையும் சோலை குறுகினன்; குறுக, அன்னான்,
ஈனன் நீ யாவன்? என்னை நேர்ந்தது. இவ் இடையில்? என்ன,
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன், வணங்கி, வேந்தன். 30
இற்றதோ? என நக்கு, அன்னான், யான் இரு வேள்வி முற்றி,
மற்று உலகு அளிப்பென் என்னா, மா தவர்தம்மைக் கூவ,
சுற்றுறு முனிவர் யாரும் தொக்கனர்; வசிட்டன் மைந்தர்,
சுற்றிலம், அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு ஈவான். 31
என்று உரைத்து, யாங்கள் ஒல்லோம் என்றனர்; என்னப் பொங்கி,
புன் தொழில் கிராதர் ஆகிப் போக எனப் புகறலோடும்,
அன்று அவர் எயினர் ஆகி, அடவிகள் தோறும் சென்றார்;
நின்று வேள்வியையும் முற்றி, நிராசனர் வருக! என்றான். 32
அரைசன் இப் புலையற்கு என்னே அனல்துறை முற்றி, எம்மை
விரைசுக வல்லை என்பான்! விழுமிது! என்று இகழ்ந்து நக்கார்,
புரைசை மா களிற்று வேந்தை, போக நீ துறக்கம்; யானே
உரைசெய்தேன், தவத்தின் என்ன, ஓங்கினன் விமானத்து உம்பர். 33
ஆங்கு அவன் துறக்கம் எய்த, அமரர்கள் வெகுண்டு, நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே? இரு நிலத்து இழிக! என்ன,
தாங்கல் இல்லாது வீழ்வான், தாபதா! சரணம் என்ன,
ஓங்கினன், நில் நில்! என்ன உரைத்து, உரும் ஒக்க நக்கான். 34
பேணலாது இகழ்ந்த விண்ணோர் பெரும் பதம் முதலா மற்றைச்
சேண் முழுது அமைப்பல் என்னா, செழுங் கதிர், கோள், நாள், திங்கள்,
மாண் ஒளி கெடாது, தெற்கு வடக்கவாய் வருக! என்று,
தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென் என்னும் வேலை. 35
நறைத் தரு உடைய கோனும், நான்முகக் கடவுள் தானும்,
கறைத் தரு களனும், மற்றைக் கடவுளர் பிறரும், தொக்கு,
பொறுத்தருள், முனிவ! நின்னைப் புகல் புகுந்தவனைப் போற்றும்
அறத் திறன் நன்று; தாரா கணத்தொடும் அமைக, அன்னான். 36
அரச மா தவன் நீ ஆதி; ஐந்து நாள் தென்பால் வந்து, உன்
புரை விளங்கிடுக! என்னா, கடவுளர் போய பின்னர்,
நிரை தவன் விரைவின் ஏகி, நெடுங் கடற்கு இறைவன் வைகும்
உரவு இடம் அதனை நண்ணி, உறு தவம் உஞற்றும் காலை, 37
குதை வரி சிலை வாள் தானைக் கோமகன் அம்பரீடன்,
சுதை தரு மொழியன், வையத்து உயிர்க்கு உயிர் ஆய தோன்றல்,
வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தற் கொள்வான்,
சிதைவு இலன், கனகம் தேர் கொண்டு, அடவிகள் துருவிச் சென்றான். 38
நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி,
கொற்றவன் வினவலோடும், இசைந்தனர்; குமரர்தம்முள்
பெற்றவள், இளவல் எற்கே என்றனள்; பிதா, முன் என்றான்;
மற்றைய மைந்தன் நக்கு, மன்னவன் தன்னை நோக்கி, 39
கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று, ஒற்கம் ஆம் விழுமம் குன்ற,
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் - தொழுது வேந்தன்
தடுப்ப அருந் தேரின் ஏறி, தடை இலாப் படர் தலோடும்,
சுடர்க் கதிர்க் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான். 40
அவ் வயின் இழிந்து வேந்தன் அருங் கடன் முறையின் ஆற்ற,
செவ்விய குரிசில்தானும் சென்றனன், நியமம் செய்வான்;
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டுக் காணா,
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான். 41
விறப்பொடு வணக்கம் செய்த விடலையை இனிது நோக்கி,
சிறப்புடை முனிவன், என்னே தெருமரல்? செப்புக! என்ன,
அறப் பொருள் உணர்ந்தோய்! என் தன் அன்னையும் அத்தன் தானும்,
உறப் பொருள் கொண்டு, வேந்தற்கு உதவினர் என்றான், உற்றோன். 42
மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா,
தத்துறல் ஒழி நீ; யானே தடுப்பென், நின் உயிரை என்னா,
புத்திரர் தம்மை நோக்கி, போக வேந்தோடும் என்ன,
அத் தகு முனிவன் கூற, அவர் மறுத்து அகறல் காணா, 43
எழும் கதிரவனும் நாணச் சிவந்தனன் இரு கண்; நெஞ்சம்
புழுங்கினன்; வடவை தீய மயிர்ப்புறம் பொறியின் துள்ள,
அழுங்க இல் சிந்தையீர்! நீர் அடவிகள்தோறும் சென்றே,
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி, உறு துயர் உறுக! என்றான். 44
மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர்
தாம் உறு சவரர் ஆகச் சபித்து, எதிர், சலித்த சிந்தை
ஏமுறல் ஒழிக! இன்னே பெறுக! என இரண்டு விஞ்சை
கோ மருகனுக்கு நல்கி, பின்னரும் குணிக்கலுற்றான்: 45
அரசனோடு ஏகி யூபத்து அணைக்குபு இம் மறையை ஓதின்,
விரசுவர் விண்ணுளோரும் விரிஞ்சனும் விடைவலோனும்;
உரை செறி வேள்வி முற்றும்; உனது உயிர்க்கு ஈறு உண்டாகா;
பிரச மென் தாரோய்! என்ன, பழிச்சொடும் பெயர்ந்து போனான். 46
மறை முனி உரைத்த வண்ணம் மகத்து உறை மைந்தன் ஆய,
சிறை உறு கலுழன், அன்னம், சே, முதல் பிறவும் ஊரும்
இறைவர் தொக்கு அமரர் சூழ, இளவல் தன் உயிரும், வேந்தன்
முறை தரு மகமும், காத்தார்; வட திசை முனியும் சென்றான். 47
வடா திசை முனியும் நண்ணி, மலர்க் கரம் நாசி வைத்து, ஆங்கு,
இடாவு பிங்கலையால் நைய, இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி,
விடாது பல் பருவம் நிற்ப, மூல மா முகடு விண்டு,
தடாது இருள் படலை மூட, சலித்தது எத் தலமும், தாவி. 48
எயில் உரித்தவன் யானை உரித்த நாள்,
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என,
புயல் விரித்து எழுந்தாலென, பூதலம்
குயிலுறுத்தி, கொழும் புகை விம்மவே. 49
தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற,
நிமிர்ந்த வெங் கதிர்க் கற்றையும் நீங்குற,
கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்,
சுமந்த நாகமும், கண் சும்புளித்தவே. 50
திரிவ நிற்ப செக தலத்து யாவையும்,
வெருவலுற்றன; வெங் கதிர் மீண்டன;
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட, உம்பர் துளங்கினார். 51
புண்டரீகனும், புள் திருப் பாகனும்,
குண்டை ஊர்தி, குலிசியும், மற்று உள
அண்டர் தாமும், வந்து, அவ் வயின் எய்தி, வேறு,
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர். 52
பாதி மா மதி சூடியும், பைந் துழாய்ச்
சோதியோனும், அத் தூய் மலராளியும்,
வேத பாரகர், வேறு இலர், நீ அலால்;
மா தபோதன! என்ன வழங்கினர். 53
அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,
சென்னி தாழ்ந்து, இரு செங் கை மலர் குவித்து,
உன்னு நல் வினை உற்றது என்று ஓங்கினான்;
துன்னு தேவர்தம் சூழலுள் போயினார். 54
சதானந்தர் இராம இலக்குவரை வாழ்த்தி தம் இடம் பெயர்தல்
ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்;
யாது உமக்கு அரிது? என்றனன், ஈறு இலான். 55
என்று கோதமன் காதலன் கூறிட,
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா,
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை, ஏத்திப் பெய்ர்ந்தனன், தன் இடம். 56
இராமன் சீதை நினைவாய் இருத்தல்
முனியும் தம்பியும் போய், முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தியபின், இருட்
கனியும் போல்பவன், கங்குலும், திங்களும்,
தனியும், தானும், அத் தையலும், ஆயினான். 57
சீதையின் உருவெளிப்பாடு
விண்ணின் நீங்கிய மின் உரு, இம் முறை,
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?
எண்ணின், ஈது அலது என்று அறியேன்; இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால். 58
வள்ளல் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பாற்கடல்போல் மிளிர் கண்ணினாள்,
அள்ளல் பூமகள் ஆகும்கொலோ-எனது
உள்ளத் தாமரையுள் உறைகின்றதே? 59
அருள் இலாள் எனினும், மனத்து ஆசையால்,
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்கலால்,
தெருள் இலா உலகில், சென்று, நின்று, வாழ்
பொருள் எலாம், அவள் பொன் உரு ஆயவே! 60
பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவது ஒர் காலம் உண்டாம்கொலோ? 61
வண்ண மேகலைத் தேர் ஒன்று, வாள் நெடுங்
கண் இரண்டு, கதிர் முலைதாம் இரண்டு,
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ? 62
கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்,
பொன்னை முன்னிய பூங் கணை மாரியால்,
என்னை எய்து தொலைக்கும் என்றால், இனி,
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே? 63
கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா,
உள்ள உள்ள உயிரைத் துருவிட,
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ? 64
ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே! 65
திங்களின் மறைவும், நிலா ஒளி மழுங்கலும்
கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும், மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதற் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும், ஆழ்ந்தது-திங்களே. 66
வீசுகின்ற நிலாச் சுடர் வீந்ததால்-
ஈசன் ஆம் மதி ஏகலும், சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே. 67
சூரிய உதயமும், ஒளி பரவுதலும்
ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து, தளரும் ஏல்வை,
சிதையும் மனத்து இடருடைய செங்கமல முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவைப் போர்வை போர்த்த
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியேபோல், உதயம் செய்தான். 68
விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி
பசை ஆக, மறையவர் கைந் நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய,
அசையாத நெடு வரையின் முகடுதொறும் இளங் கதிர் சென்று அளைந்து, வெய்யோன்,
திசை ஆளும் மத கரியைச் சிந்தூரம் அப்பியபோல் சிவந்த மாதோ! 69
பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையின், பொருள் வயினின், பிரிந்து போன
வண்டு தொடர் நறுந் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணித் தேரோடும்,
கண்டு மனம் களி சிறப்ப, ஒளி சிறந்து, மெலிவு அகலும் கற்பினார்போல்,
புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து பொலிந்தன-பூம் பொய்கை எல்லாம். 70
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும், கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தாலென விரிந்த - கதிர்கள் எல்லாம். 71
இராமன் துயில் நீத்து எழுதல்
கொல் ஆழி நீத்து, அங்கு ஓர் குனி வயிரச் சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே. 72
மூவரும் சனகனது வேள்விச் சாலை சென்று சார்தல்
ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர, உறக்கம் நீத்த
குழி யானையின் எழுந்து, தொல் நியமத் துறை முடித்து, சுருதி அன்ன
வாழி மாதவற் பணிந்து, மனக்கு இனிய தம்பியொடும், வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித் தார்ச் சனகன் பெரு வேள்விச் சாலை சார்ந்தான். 73
மிகைப் பாடல்கள்
நின்றனன் அரசன் என்றான்; நீ எனைக் கொண்டு போகை
நன்று என மொழிந்து நின்றான், நல்கிய தாயை நோக்கி,
இன்று எனகி கொடுத்தியோ? என்று இறைஞ்சினன் கசிந்து நின்றான்;
தன் துணை மார்பில் சேர்த்துத் தழுவலும், அவனை நோக்கி. 39-1
என்று கூறி, இமையவர் தங்கள் முன்
வன் தபோத வதிட்டன் வந்து, என்னையே,
நின்ற அந்தணனே என நேர்ந்தவன்,
வென்றி வெந் திறல் தேவர் வியப்புற. 53-1
காதலால் ஒருத்தியை நினைப்ப, கண் துயில்
மாதராள் அவன் திறம் மறுப்ப, கங்குல் மான்,
ஏதிலான் தமியன் என்று, ஏகலேன் என,
ஆதலால் இருந்தனன்; அளியன் என் செய்வான்? 61-1
12. வரலாற்றுப் படலம்
முனிவர்கள் ஏனையோர் சூழ சனகன் வீற்றிருத்தல்
முடிச் சனகர் பெருமானும், முறையாலே பெரு வேள்வி முற்றி, சுற்றும்
இடிக் குரலின் முரச இயம்ப, இந்திரன் போல், சந்திரன் தோய், கோயில் எய்தி,
எடுத்த மணி மண்டபத்துள், எண்தவத்து முனிவரொடும்,இருந்தான்-பைந் தார்
வடித்த குனி வரி சிலைக் கைம் மைந்தனும்,தம்பியும்,மருங்கின் இருப்ப மாதோ.1
சனகன்இராமஇலக்குவரைப்பற்றி வினவ,முனிவர் அவ்விருவரைப்பற்றிக் கூறல்
இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி,
அருந் தவனை அடி வணங்கி, யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்! என்ன,
விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி காணிய வந்தார்; வில்லும் காண்பார்;
பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர் என, அவர் தகைமை பேசலுற்றான்: 2
இராம இலக்குவரின் குல மரபை முனிவன் முற்பட எடுத்துரைத்தல்
ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்?
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்,
சோதித் தன்வரி சிலையால் நிலமடந்தை முலை சுரப்ப,
சாதித்த பெருந் தகையும், இவர் குலத்து ஓர் தராபதிகாண்! 3
பிணி அரங்க, வினை அகல, பெருங் காலம் தவம் பேணி, -
மணி அரங்கு நெடு முடியாய்!-மலர் அயனே வழிபட்டு,
பணி அரங்கப் பெரும் பாயற் பரஞ் சுடரை யாம் காண,
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்! 4
தான், தனக்கு வெலற்கு அரிய தானவரை, தலை துமித்து, என்
வான் தரக்கிற்றிகொல்? என்று குறை இரப்ப, வரம் கொடுத்து, ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய், இகல் புரிந்த இவர் குலத்து ஓர்
தோன்றலை, பண்டு, இந்திரன்காண், விடை ஏறாய்ச் சுமந்தானும். 5
அரைசன் அவன் பின்னோரை, என்னாலும் அளப்பு அரிதால்;
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்காண் -
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல்,
குரை கடலை நெடு வரையால் கடைந்து, அமுது கொடுத்தானும். 6
கருதல் அரும் பெருங் குணத்தோர், இவர் முதலோர் கணக்கு இறந்தோர்;
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர்;-
பொருது உறை சேர் வேலினாய்!-புலிப் போத்தும் புல்வாயும்
ஒரு துறையில் நீர் உண்ண, உலகு ஆண்டான் உளன் ஒருவன். 7
மறை மன்னும் மணிமுடியும் ஆரமும் வாளொடு மின்ன,
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள்;-
விறல் மன்னர் தொழு கழலாய்! - இவர் குலத்தோன், வில் பிடித்த
அறம் என்ன, ஒரு தனியே திரிந்து, அமராபதி கரத்தோன். 8
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும், புகழ்கிற்பாம்?-
மின் உயிர்க்கும் நெடு வேலாய்! - இவர் குலத்தோன், மென் புறவின்
மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால்! 9
இடறு ஓட்ட, இன நெடிய வரை உருட்டி, இவ் உலகம்
திடல், தோட்டம், எனக் கிடந்தது என இரங்கி,-தெவ் வேந்தர் -
உடல் தோட்ட நெடு வேலாய்!-இவர் குலத்தோர், உவரி நீர்க்
கடல் தோட்டார் எனின், வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ? 10
தூ நின்ற சுடர் வேலாய்! அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல்,
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ? ஏடு அவிழ் கொன்றைப்
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனற் கங்கை,
வான் நின்று கொணர்ந்தானும், இவர் குலத்து ஓர் மன்னவன்காண்! 11
கயற் கடல் சூழ் உலகு எல்லாம் கைந் நெல்லிக் கனி ஆக்கி,
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி,-
முயற் கறை இல் மதிக் குடையாய்! - இவர் குலத்தோன் முன் ஒருவன்,
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான். 12
சந்திரனை வென்றானும், உருத்திரனைச் சாய்த்தானும்,
துந்து எனும் தானவனைச் சுடு சரத்தால் துணித்தானும்,
வந்த குலத்திடை வந்த ரகு என்பான், வரி சிலையால்,
இந்திரனை வென்று, திசை இரு - நான்கும் செரு வென்றான். 13
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி,
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை,
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன, - அயன் என்பான் -
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே! 14
தயரதன் மகப்பேறு பெற்ற வரலாற்றை முனிவன் உரைத்தல்
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை; அவன்
பயந்த குலக் குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம்
நயந்து உரைத்துக் கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம்;-பல்
இயம் துவைத்த கடைத் தலையாய்!-யான் அறிந்தபடி கேளாய்: 15
துனி இன்றி உயிர் செல்ல, சுடர் ஆழிப் படை வெய்யோன்
பனி வென்றபடி என்ன, பகை வென்று படி காப்போன்,
தனு அன்றித் துணை இல்லான், தருமத்தின் கவசத்தான்,
மனு வென்ற நீதியான், மகவு இன்றி வருந்துவான்; 16
சிலைக் கோட்டு நுதல், குதலைச் செங் கனி வாய், கரு நெடுங் கண்,
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல், மின் நுடங்கும் இடையாரை,
முலைக் கோட்டு விலங்கு என்று, தொடர்ந்து அணுகி முன் நின்ற
கலைக் கோட்டுப் பெயர் முனியால், துயர் நீங்கக் கருதினான்; 17
தார் காத்த நறுங் குஞ்சித் தனயர்கள், என் தவம் இன்மை,
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால்,
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன்; என்னின் பின்,
பார் காத்தற்கு உரியாரைப் பணி, நீ என்று அடி பணிந்தான். 18
அவ் உரை கேட்டு, அம் முனியும், அருள் சுரந்த உவகையன் ஆய்,
இவ் உலகம் அன்றியே, எவ் உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளஞ் சிறுவர்களைத் தருகின்றேன்; இனித் தேவர்
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான். 19
காதலரைத் தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப,
மா தவரில் பெரியோனும், மற்றதனை முற்றுவித்தான்;
சோதி மணிப் பொற் கலத்துச் சுதை அனைய வெண் சோறு, ஓர்
பூத கணத்து அரசு ஏந்தி, அனல் நின்றும் போந்ததால். 20
பொன்னின் மணிப் பரிகலத்தில் புறப்பட்ட இன் அமுதை,
பன்னு மறைப் பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால்,
தன் அனைய நிறை குணத்துத் தசரதனும், வரன்முறையால்,
நல் நுதலார் மூவருக்கும், நாலு கூறிட்டு, அளித்தான். 21
விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும்,
அருங் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்,
இருங் கடகக் கரதலத்து இவ் எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க் கவுசலை என்பாள் பயந்தாள். 22
தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை, பரதன் எனும் பெயரானை,
எள்ள அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை, கேகயர்கோன் மகள் பயந்தாள். 23
அரு வலிய திறலினர் ஆய், அறம் கெடுக்கும் விறல் அரக்கர்
வெருவரு திண் திறலார்கள், வில் ஏந்திம் எனில் செம் பொன்
பரு வரையும், நெடு வெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்,
இருவரையும், இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள். 24
தசரத குமாரர்கள் வளர்ந்து, கல்வி கற்ற வரலாறு
தலை ஆய பேர் உணர்வின் கலைமகட்குத் தலைவர் ஆய்,
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரைப்போல் பணி செய்ய,
கலை ஆழிக் கதிர்த் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும்
அலை ஆழி என வளர்த்தார் - மறை நான்கும் அனையார்கள். 25
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!-உபநயன விதி முடித்து,
மறை ஓதுவித்து, இவரை வளர்த்தானும் வசிட்டன்காண். 26
இராம இலக்குவர் வேள்வி காத்த திறம் பற்றி முனிவன் கூறுதல்
ஈங்கு, இவரால், என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும்
தீங்குடைய கொடியோரைக் கொல்விக்கும் சிந்தையன் ஆய்
பூங் கழலார்க் கொண்டுபோய் வனம் புக்கேன், புகாமுன்னம்,
தாங்க அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள். 27
அலை உருவக் கடல் உருவத்து ஆண் தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை நீ உருவ நோக்கு ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண் தாடகைதன் உரம் உருவி,
மலை உருவி, மரம் உருவி, மண் உருவிற்று, ஒரு வாளி! 28
செக்கர் நிறத்து எரி குஞ்சிச் சிரக் குவைகள் பொருப்பு என்ன
உக்கனவோ முடிவு இல்லை; ஓர் அம்பினொடும், அரக்கி
மக்களில், அங்கு ஒருவன் போய் வான் புக்கான்; மற்றையவன்
புக்க இடம் அறிந்திலேன்; போந்தனென், என் வினை முடித்தே. 29
இராமனது வில்லாற்றலை பற்றி முனிவன் வியந்து பேசுதல்
ஆய்ந்து ஏற உணர்-ஐய!-அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவின், உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும் படைக் கலங்கள், செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க, இவற்கு ஏவல் செய்குனவால். 30
அகலிகைக்கு உரு அளித்த இராமனது பாத மகிமையைப் போற்றுதல்
கோதமன் தன் பன்னிக்கு முன்னை உருக் கொடுத்தது, இவன்,
போது வென்றது எனப் பொலிந்த, பொலங் கழற் கால் பொடி கண்டாய்;
காதல் என் தன் உயிர்மேலும் இக் கரியோன்பால் உண்டால்;
ஈது, இவன் தன் வரலாறும், புய வலியும் என உரைத்தான். 31
மிகைப் பாடல்கள்
அந்தரத்தில் உருள் சேர, அடு சனி வந்து உறும் அளவில்,
சிந்தை மகிழ் தசரதனும் சென்று அவன்மேல் சரங்கள் தொடுத்து,
இந்த வழி போகு அரிது என்று இயைந்தவனை எந்நாளும்
உந்தும் என உலகுதனக்கு உறுதுயர் தீர்ந்திடும் உரவோன். 15-1
கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடுஞ் சாபம் எனும்
ஓத அருங் கல் உருத் தவிர்த்து, முன்னை உருக் கொடுத்தது இவன்
பாதமிசைத் துவண்டு எழுந்த பசும் பொடி மற்று அது கண்டாய்;
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும் என உரைத்தான். 31-1
பால காண்டம்
13. கார்முகப் படலம்
மாய வில்லை இராமன் நாணேற்றினால் தான் தன் துயர் நீங்கும் எனச் சனகன் உரைத்தல்
மாற்றம் யாது உரைப்பது? மாய விற்கு நான்
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால்;
நோற்றனள் நங்கையும்; நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல், இடர்க் கடல் ஏற்றும் என்றனன். 1
சனகனது ஆணைப்படி ஏவலர் வில்லை மண்டபத்திற்குக் கொண்டுவருதல்
என்றனன், ஏன்று, தன் எதிர் நின்றாரை, அக்
குன்று உறழ் வரி சிலை கொணர்மின், ஈண்டு என,
நன்று என வணங்கினர், நால்வர் ஓடினர்;
பொன் திணி கார்முகச் சாலை புக்கனர். 2
உறு வலி யானையை ஒத்த மேனியர்,
செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்,
அறுபதினாயிரர், அளவு இல் ஆற்றலர்,
தறி மடுத்து, இடையிடை, தண்டில் தாங்கினர்; 3
நெடு நிலமகள் முதுகு ஆற்ற, நின்று உயர்
தட நிமிர் வடவரைதானும் நாண் உற,
இடம் இலை உலகு என வந்தது,-எங்கணும்
கடல் புரை திரு நகர் இரைத்துக் காணவே. 4
வில்லினைக் கண்டார் கூறிய மொழிகள்
சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அச்
சிங்க ஏறு அல்லனேல், இதனைத் தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன்? இன்று ஏற்றின், இச் சிலை,
மங்கைதன் திருமணம் வாழுமால் என்பார். 5
கைதவம், தனு எனல்; கனகக் குன்று என்பார்;
செய்தது, அத் திசைமுகன் தீண்டி அன்று; தன்
மொய் தவப் பெருமையின் முயற்சியால் என்பார்;
எய்தவன் யாவனோ, ஏற்றிப் பண்டு? என்பார். 6
திண் நெடு மேருவைத் திரட்டிற்றோ? என்பார்;
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார்;
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ? என்பார்;
விண் இடு நெடிய வில் வீழ்ந்ததோ? என்பார். 7
என், இது கொணர்க என, இயம்பினான்? என்பார்;
மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார்? என்பார்;
முன்னை ஊழ் வினையினால் முடிக்கில் ஆம் என்பார்;
கன்னியும் இச் சிலை காணுமோ? என்பார். 8
இச் சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது? என்பார்;
நச் சிலை நங்கைமேல் நாட்டும், வேந்து என்பார்;
நிச்சயம் எடுக்கும்கொல் நேமியான்! என்பார்;
சிற்சிலர், விதி செய்த தீமை ஆம் என்பார். 9
வில்லைக் கண்ட வேந்தர்கள் கைவிரித்தல்
மொய்த்தனர் இன்னணம் மொழிய, மன்னன் முன்
உய்த்தனர், நிலம் முதுகு உளுக்கிக் கீழ் உற,
வைத்தனர்; வாங்குநர் யாவரோ? எனா,
கைத்தலம் விதிர்த்தனர், கண்ட வேந்தரே. 10
சதானந்த முனிவன் கூறிய வில்லின் வரலாறு
போதகம் அனையவன் பொலிவை நோக்கி, அவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கி, தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல்மேயினான்: 11
இமைய வில் வாங்கிய ஈசன், பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய
கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா,
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே. 12
உக்கன பல்லொடு, கரங்கள் வீழ்ந்தன;
புக்கனர், வானவர் புகாத சூழல்கள்;
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின;
முக் கண் எண் தோளவன் முனிவும் மாறினான். 13
தாளுடை வரி சிலை, சம்பு, உம்பர்தம்
நாள் உடைமையின், அவர் நடுக்கம் நோக்கி, இக்
கோளுடை விடை அனான் குலத்துள் தோன்றிய
வாளுடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான். 14
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ?
வார் சடை அரன் நிகர் வரத! நீ அலால்,
யார் உளர் அறிபவர்? இவற்குத் தோன்றிய
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா, 15
இரும்பு அனைய கரு நெடுங் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து, அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணிப் பொன் - கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு
உரம் பொரு இல் நிலம், வேள்விக்கு, அலகு இல் பல சால் உழுதேம். 16
உழுகின்ற கொழு முகத்தின், உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற, புவி மடந்தை திரு வெளிப்பட்டென, புணரி
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும், இழிந்து ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப் பெண் அரசி தோன்றினாள். 17
குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சேர்ந்து, அவை உய்யப்
பிணங்குவன; அழகு, இவளைத் தவம் செய்து பெற்றதுகாண்;
கணங் குழையாள் எழுந்ததற்பின், கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழியப் பொலிவு இழந்த ஆறு ஒத்தார், வேறு உற்றார். 18
சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு-செய்வினையால்
வித்தகமும் விதி வசமும் வெவ்வேறே புறம் கிடப்ப,
அத் திருவை அமரர் குலம் ஆதரித்தார் என, அறிஞர்!
இத் திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார்! 19
கலித் தானைக் கடலோடும் கைத் தானக் களிற்று அரசர்
ஒலித்து ஆனை என வந்து, மணம் மொழிந்தார்க்கு எதிர், உருத்த
புலித் தானை, களிற்று உரிவைப் போர்வையான் வரி சிலையை
வலித்தானே மங்கை திருமணத்தான் என்று, யாம் வலித்தேம். 20
வல் வில்லுக்கு ஆற்றார்கள், மார வேள் வளை கருப்பின்
மெல் வில்லுக்கு ஆற்றாராய், தாம் எம்மை விளிகுற்றார்;
கல் வில்லோடு உலகு ஈந்த கனங் குழையைக் காதலித்து,-
சொல் வில்லால் உலகு அளிப்பாய்!-போர் செய்யத் தொடங்கினார். 21
எம் மன்னன் பெருஞ் சேனை ஈவதனை மேற்கொண்ட
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளேபோல் தேய்ந்ததால்;
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை, தமது ஆசைபோல் ஆயிற்றால். 22
மல் காக்கும் மணிப் புயத்து மன்னன் இவன், மழவிடையோன்
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி,
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என, வேந்தர்,
அல் காக்கை கூகையைக் கண்டு அஞ்சினவாம் என, அகன்றார். 23
அன்று முதல், இன்று அளவும், ஆரும் இந்தச் சிலை அருகு
சென்றும் இலர்; போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார்;
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம்; இவன் ஏற்றின்,
நன்று; மலர்க் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான். 24
இராமன் வில்லை நோக்கி எழுதல்
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி, அறிவனும் தன்,
புனைந்த சடைமுடி துளக்கி, போர் ஏற்றின் முகம் பார்த்தான்;
வனைந்தனைய திருமேனி வள்ளலும், அம் மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து, அந்த நெடுஞ் சிலையை நோக்கினான். 25
பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
அழிந்தது, வில் என, விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள், முப் பகை வென்றார். 26
மங்கையர் மன நிலையும், வாய் மொழியும்
தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்,
சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா,
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான். 27
காணும் நெடுஞ் சிலை கால் வலிது என்பார்;
நாணுடை நங்கை நலம் கிளர் செங் கேழ்ப்
பாணி, இவன் படர் செங் கை படாதேல்,
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார். 28
கரங்கள் குவித்து, இரு கண்கள் பனிப்ப,
இருங் களிறு இச் சிலை ஏற்றிலன் ஆயின்,
நரந்த நறைக் குழல் நங்கையும், நாமும்,
முருங்கு எரியில் புக மூழ்குதும் என்பார். 29
வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்,
கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால்,
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து, இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார். 30
ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார்;
கோன் இவனின் கொடியோன் இலை என்பார்;
மானவன் இச் சிலை கால் வளையானேல்,
பீன தனத்தவள் பேறு இலள் என்பார். 31
வில்லை நோக்கி இராமன் நடத்தல்
தோகையர் இன்னன சொல்லிட, நல்லோர்
ஓகை விளம்பிட, உம்பர் உவப்ப,
மாக மடங்கலும், மால் விடையும், பொன்
நாகமும், நாகமும், நாண நடந்தான். 32
இமைப் பொழுதில் வில்லை எடுத்து இராமன் நாண் ஏற்ற, அவ் வில் ஒடிதல்
ஆடக மால் வரை அன்னது தன்னை,
தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது என்ன, எடுத்தான். 33
தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். 34
வில் இற்ற பேரோசையால் மூவுலகிலும் தோன்றிய அச்சம்
ஆரிடைப் புகுதும் நாம்? என்று, அமரர்கள், கமலத்தோன் தன்
பேருடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி, நைந்தார்;
பாரிடை உற்ற தன்மை பகர்வது என்? பாரைத் தாங்கி,
வேரெனக் கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே! 35
வானவர் வாழ்த்த, மண்ணகத்தார் மகிழ்ந்தனர்
பூ மழை சொரிந்தார் விண்ணோர்; பொன் மழை பொழிந்த மேகம்;
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த;
கோ முனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி; - கொற்ற
நாம வேல் சனகற்கு, இன்று, நல்வினை பயந்தது என்னா. 36
மாலையும், இழையும், சாந்தும், சுண்ணமும், வாச நெய்யும்,
வேலை வெண் முத்தும், பொன்னும், காசும், நுண் துகிலும், வீசி;
பால் வளை, வயிர்கள், ஆர்ப்ப; பல் இயம் துவைப்ப; முந்நீர்
ஓல் கிளர்ந்து உவா உற்றென்ன, ஒலி நகர் கிளர்ந்தது அன்றே! 37
நல் இயல் மகர வீணைத் தேன் உக, நகையும் தோடும்
வில் இட, வாளும் வீச, வேல் கிடந்தனைய நாட்டத்து
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர், எழிலி தோன்றச்
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே! 38
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கருங் கண் மாதர்,
புண் உறு புலவி நீங்க, கொழுநரைப் புல்லிக் கொண்டார்;
வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமாபோல்,
மண் உறு வேந்தன் செல்வம், வறியவர் முகந்து கொண்டார். 39
வயிரியர் மதுர கீதம், மங்கையர் அமுத கீதம்,
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம்,
பயிர் கிளை வேயின் கீதம், என்று இவை பருகி, விண்ணோர்
உயிருடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார். 40
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய, அமரர் நாட்டுத்
தையலார் இழிந்து, பாரின் மகளிரைத் தழுவிக் கொண்டார்-
செய்கையின், வடிவின், ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார்,-
மை அரி நெடுங் கண் நோக்கம் இமைத்தலும், மயங்கி நின்றார். 41
மிதிலை நகர மக்களின் மகிழ்ச்சி
தயரதன் புதல்வன் என்பார்; தாமரைக் கண்ணன் என்பார்;
புயல் இவன் மேனி என்பார்; பூவையே பொருவும் என்பார்;
மயல் உடைத்து உலகம் என்பார்; மானிடன் அல்லன் என்பார்;
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார். 42
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்;
கொம்பினைக் காணும் தோறும், குரிசிற்கும் அன்னதே ஆம்!
தம்பியைக் காண்மின்! என்பார்; தவம் உடைத்து உலகம் என்பார்;
இம்பர், இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார். 43
காதல் நோய் மிக சீதை உள்ளம் நைந்து உருகுதல்
இற்று, இவண் இன்னது ஆக,-மதியொடும் எல்லி நீங்கப்
பெற்று, உயிர் பின்னும் காணும் ஆசையால், சிறிது பெற்ற,
சிற்றிடை, பெரிய கொங்கை, சேயரிக் கரிய வாள்-கண்,
பொன் - தொடி,-மடந்தைக்கு அப்பால் உற்றது புகலலுற்றாம்: 44
ஊசல் ஆடு உயிரினோடும், உருகு பூம் பள்ளி நீங்கி,
பாசிழை மகளிர் சூழ, போய், ஒரு பளிக்கு மாட,
காசு இல் தாமரையின் பொய்கை, சந்திர காந்தம் ஈன்ற
சீத நீர் தெளித்த மென் பூஞ் சேக்கையை அரிதின் சேர்ந்தாள். 45
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால், அருமையான
வண்ணமும் இலைகளாலே காட்டலால், வாட்டம் தீர்ந்தேன்;-
தண் நறுங் கமலங்காள்!-என் தளிர் நிறம் உண்ட கண்ணின்
உள் நிறம் காட்டினீர்; என் உயிர் தர உலோவினீரே! 46
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்,
தூண் உலாவு தோளும், வாளியூடு உலாவு தூணியும்,
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும், மீளவும்
காணல் ஆகும்? ஆகின், ஆவி காணல் ஆகுமேகொலாம். 47
விண்தலம் கலந்து இலங்கு திங்களோடு, மீது சூழ்
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும், வார் சிலைக்
கொண்டல் ஒன்று, இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு, என் ஆவியை
உண்டது உண்டு;என் நெஞ்சில் இன்னும்உண்டு;அது என்றும்உண்டு அரோ!48
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற, நீடு கொற்ற வில்
வெஞ் சரங்கள் நெஞ்சு அரங்க, வெய்ய காமன் எய்யவே,
சஞ்சலம் கலந்தபோது, தையலாரை, உய்ய வந்து,
அஞ்சல்! அஞ்சல்! என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே? 49
இளைக்கலாத கொங்கைகாள்! எழுந்து விம்மி என் செய்வீர்!
முளைக்கலா மதிக்கொழுந்து போலும் வாள் முகத்தினான்.
விளைக்கலாத விற் கையாளி, வள்ளல், மார்பின் உள்ளுறத்
திளைக்கல் ஆகும் ஆகில், ஆன செய் தவங்கள் செய்ம்மினே! 50
எங்கு நின்று எழுந்தது, இந்த இந்து? வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று, அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கைமேல் விடம் பொழிந்தது; என்னினும்,
கங்குல் வந்த திங்கள் அன்று; அகம் களங்கம் இல்லையே! 51
அடர்ந்த வந்து, அனங்கன், நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின்நின்று வெந்திடாது எழுந்து, வெங்
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து,
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என்? - உள்ளமே! 52
விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு, இம்
மண்ணுளே இழிந்தது என்ன, வந்து போன மைந்தனார்,
எண்ணுளே இருந்த போதும், யாவரென்று தேர்கிலென்;
கண்ணுளே இருந்த போதும், என்கொல் காண்கிலாதவே? 53
பெய் கடல் பிறந்து, அயல் பிறக்கொணா மருந்து பெற்று,
ஐய பொற் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர்போல்,
மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே,
கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்கொலோ? 54
ஒன்று கொண்டு, உள் நைந்து நைந்து, இரங்கி, விம்மி விம்மியே,
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்வாய்,
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு, குளிர் மனத்து
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரைசெய்வாம்: 55
நீலமாலை வில் முறிந்த செய்தியை சீதையிடம் செப்புதல்
வடங்களும் குழைகளும் வான வில்லிட,
தொடர்ந்த பூங் கலைகளும் குழலும் சோர்தர,
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்,
நெடுந் தடங் கிடந்த கண் நீலமாலையே. 56
வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தம் இல் உவகையள், ஆடிப் பாடினள்,
சிந்தையுள் மகிழ்ச்சியும், புகுந்த செய்தியும்,
சுந்தரி! சொல் என, தொழுது சொல்லுவாள்: 57
தய ரத துரக மாக் கடலன், கல்வியன்,
தயரதன் எனும் பெயர்த் தனிச் செல் நேமியான்,
புயல் பொழி தடக் கையான், புதல்வன்; பூங் கணை
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான்; 58
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான்;
அரா-அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான்;
இராமன் என்பது பெயர்; இளைய கோவொடும்,
பராவ அரு முனியொடும், பதி வந்து எய்தினான்; 59
பூண் இயல் மொய்ம்பினன், புனிதன் எய்த வில்
காணிய வந்தனன் என்ன, காவலன்
ஆணையின் அடைந்த வில் அதனை, ஆண்தகை,
நாண் இனிது ஏற்றினான்; நடுங்கிற்று உம்பரே! 60
மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன் பயில்
சூத்திரம் இது என, தோளின் வாங்கினான்;
ஏத்தினர் இமையவர்; இழிந்த, பூ மழை;
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே! 61
சீதை ஐயம் நீங்கி, அகத்துள் உறுதி பூணுதல்
கோமுனியுடன் வரு கொண்டல் என்ற பின்,
தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்,
ஆம்; அவனேகொல் என்று, ஐயம் நீங்கினாள்-
வாம மேகலையினுள் வளர்ந்தது, அல்குலே! 62
இல்லையே நுசுப்பு என்பார், உண்டு, உண்டு என்னவும்,
மெல்லியல், முலைகளும் விம்ம விம்முவாள்;
சொல்லிய குறியின், அத் தோன்றலே அவன்;
அல்லனேல், இறப்பென் என்று, அகத்துள் உன்னினாள். 63
சனகன் முனிவனிடம் திருமணம் குறித்து வினாவுதல்
ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள்;
பாசடைக் கமலத்தோன் படைத்த வில் இறும்
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி, அக்
கோசிகற்கு ஒரு மொழி, சனகன் கூறுவான்: 64
உரை செய்-எம் பெரும! உன் புதல்வன் வேள்விதான்,
விரைவின், இன்று, ஒரு பகல் முடித்தல் வேட்கையோ?
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அவ்
அரசையும், இவ் வழி அழைத்தல் வேட்கையோ? 65
முனிவன் மொழிப்படி, சனகன் தயரதனுக்குத் தூது விடுத்தல்
மல் வலான் அவ் உரை பகர, மா தவன்,
ஒல்லையில் அவனும் வந்துறுதல், நன்று என,
எல்லை இல் உவகையான், இயைந்தவாறு எலாம்
சொல்லுக என்று, ஓலையும் தூதும் போக்கினான். 66
மிகைப் பாடல்கள்
புக்கனர்; சனகர் கோன், பொரு இல் நீங்கள்தாம்
ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து,
இக் கணத்து எய்துவீர் என்றனன்; என,
மிக்கவர் அவ் உரை விளம்பினார் அரோ. 2-1
புக்கனர், அவர்களைப் பொருந்த நோக்கி, இம்
முக்கணன் வில்லினை மொய்ம்பின் ஆற்றலோடு
இக் கணத்து அளித்திர் என்று, எம்மை ஆளுடை
மிக்குறு சனகனும் விளம்பினான் என்றார். 2-2
என்று சாலவே வெதும்பி இன்ன இன்னவாறெலாம்
ஒன்றலாது பன்னி ஆவி ஊசலாட வாடுவாள்
மன்றல் நாறு மாலை மீளி மான யானை போல முன்
சென்ற வீதியூடு பார்வை செல்லநிற்கும் எல்லையே. 54-1
என்று மாதராள் நினைத்து, இவ் இடரின் மூழ்கு போதினில்,
குன்றுபோல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள்,
வென்றி வீரன் இங்கு வந்து வில் இறுத்த மேன்மையைச்
சென்று கூறுவோம் எனத் தெளிந்து சிந்தை முந்துவாள். 55-1
பால காண்டம்
14. எழுச்சிப் படலம்
சனகன் தூதர் தயரதனை அடுத்து, செய்தி தெரிவித்தல்
கடுகிய தூதரும், காலில் காலின் சென்று,
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்;
அடி இணை தொழ இடம் இன்றி, மன்னவர்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார். 1
முகந்தனர் திருவருள், முறையின் எய்தினார்;
திகழந்து ஒளிர் கழல் இணை தொழுது, செல்வனைப்
புகழ்ந்தனர்; அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது என, நெடிது கூறினார். 2
தயரதன் உவகையுற்று மொழிதல்
கூறிய தூதரும், கொணர்ந்த ஓலையை,
ஈறு இல் வண் புகழினாய்! இது அது என்றனர்;
வேறு ஒரு புலமகன் விரும்பி வாங்கினான்;
மாறு அதிர் கழலினான், வாசி என்றனன். 3
இலை முகப் படத்து அவன் எழுதிக் காட்டிய
தலை மகன் சிலைத் தொழில் செவியில் சார்தலும்,
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட,
மலை என வளர்ந்தன, வயிரத் தோள்களே. 4
வெற்றிவேல் மன்னவன், தக்கன் வேள்வியில்,
கற்றை வார் சடை முடிக் கணிச்சி வானவன்,
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொலாம் இடித்தது, ஈங்கு? என்றான். 5
தூதுவர்க்கு பரிசு வழங்குதல்
என்று உரைத்து எதிர் எதிர், இடைவிடாது, நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க! எனா,
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் -
குன்று என உயரிய குவவுத் தோளினான். 6
சேனையும் அரசரும் மிதிலைக்கு முந்துக! என தயரதன் ஆணைப்படி, வள்ளுவன் மணமுரசு அறைதல்
வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த அம் மிதிலை நோக்கி, நம்
சேனையும் அரசரும் செல்க, முந்து! எனா,
ஆனைமேல் மணமுரசு அறைக! என்று ஏவினான். 7
வாம் பரி விரி திரைக் கடலை, வள்ளுவன்,-
தேம் பொழி துழாய் முடிச் செங் கண் மாலவன்,
ஆம் பரிசு, உலகு எலாம் அளந்துகொண்ட நாள்,
சாம்புவன் திரிந்தென,-திரிந்து சாற்றினான். 8
நால்வகை சேனையின் எழுச்சி
விடை பொரு நடையினான் சேனை வெள்ளம், ஓர்
இடை இலை, உலகினில் என்ன, ஈண்டிய;
கடையுக முடிவினில், எவையும் கால் பட,
புடை பெயர் கடல் என, எழுந்து போயதே. 9
சில் இடம் உலகு எனச் செறிந்த தேர்கள்தாம்
புல்லிடு சுடர் எனப் பொலிந்த, வேந்தரால்;
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால்,
வில் இடும் முகில் எனப் பொலிந்த, வேழமே. 10
கால் விரிந்து எழு குடை, கணக்கு இல் ஓதிமம்,
பால் விரிந்து, இடை இடை பறப்ப போன்றன;
மேல் விரிந்து எழு கொடிப் படலை, விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால்! 11
நுடங்கிய துகிற் கொடி நூழைக் கைம் மலைக்
கடம் கலுழ் சேனையை, கடல் இது ஆம் என,
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில்,
தடம் புனல் பருகிடத் தாழ்வ போன்றவே. 12
இழையிடை இள வெயில் எறிக்கும்; அவ் வெயில்,
தழையிடை நிழல் கெடத் தவழும்; அத் தழை,
மழையிடை எழில் கெட மலரும்; அம் மழை,
குழைவுற முழங்கிடும், குழாம் கொள் பேரியே. 13
மன் மணிப் புரவிகள் மகளிர் ஊர்வன,
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன;
பொன் அணி புணர் முலைப் புரி மென் கூந்தலார்
மின் என, மடப் பிடி மேகம் போன்றவே. 14
சேனைகள் சென்ற பெரு வழி
இணை எடுத்து இடை இடை நெருக்க, ஏழையர்
துணை முலைக் குங்குமச் சுவடும், ஆடவர்
மணி வரைப் புயந்து மென்சாந்தும், மாழ்கி, மெல்
அணை எனப் பொலிந்தது - அக் கடல் செல் ஆறுஅரோ. 15
மகளிர் ஆடவர் திரள்
முத்தினால், முழு நிலா எறிக்கும்; மொய்ம் மணிப்
பத்தியால், இள வெயில் பரப்பும்;-பாகினும்
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே. 16
வில்லினர்; வாளினர்; வெறித்த குஞ்சியர்;
கல்லினைப் பழித்து உயர் கனகத் தோளினர்;
வல்லியின் மருங்கினர் மருங்கு, மாப் பிடி
புல்லிய களிறு என, மைந்தர் போயினார். 17
மன்றல் அம் புது மலர் மழையில் சூழ்ந்தெனத்
துன்று இருங் கூந்தலார் முகங்கள் தோன்றலால்,
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம்போல்,
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே. 18
யானைகளும் குதிரைகளும் சென்ற காட்சி
மொய் திரைக் கடல் என முழங்கு மூக்குடைக்
கைகளின், திசை நிலைக் களிற்றை ஆய்வன, -
மையல் உற்று, இழி மத மழை அறாமையால்,
தொய்யலைக் கடந்தில, சூழி யானையே. 19
சூருடை நிலை என, தோய்ந்தும் தோய்கிலா
வாருடை வனமுலை மகளிர் சிந்தைபோல்,
தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும்,
பாரிடை மிதிக்கில - பரியின் பந்தியே. 20
மகளிரின் ஊடல்
ஊடிய மனத்தினர், உறாத நோக்கினர்,
நீடிய உயிர்ப்பினர், நெரிந்த நெற்றியர்;
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்;
ஆடவர் உயிர் என அருகு போயினார். 21
தறுகண் யானையின் செலவு
மாறு எனத் தடங்களைப் பொருது, மா மரம்
ஊறு பட்டு இடையிடை ஒடித்து, சாய்த்து, உராய்,
ஆறு எனச் சென்றன-அருவி பாய் கவுள்,
தாறு எனக் கனல் உமிழ் தறுகண் யானையே. 22
தயரதனது படைப் பெருக்கம்
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே! 23
மூடு வண்டியில் இருந்த மகளிரின் முகமும் நோக்கமும்
கண்டவர் மனங்கள் கைகோப்பக் காதலின்,
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால்,
பண் திகழ் பண்டிகள் பரிசின் செல்வன,
புண்டரிகத் தடம் போவ போன்றவே. 24
பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும்
ஈண்டிய அன்பினோடு ஏகுவான், இடைக்
காண்டலும், நோக்கிய கடைக்கண் அஞ்சனம்,
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே! 25
மனைவியைப் பிரிந்து சேனையோடு செல்லும் ஓர் ஆடவனின் நிலை
பிள்ளை மான் நோக்கியைப் பிரிந்து போகின்றான்,
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில், அன்னம் ஆம்
புள்ளும் மென் தாமரைப் பூவும் நோக்கினான்,
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான். 26
தானை சென்ற காட்சி
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து, அவர்
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால்,
கங்கை யாறு கடுத்தது - கார் எனச்
சங்கு, பேரி, முழங்கிய தானையே. 27
அமரர் அம் சொல் அணங்கு அனையார் உயிர்
கவரும் கூர் நுதிக் கண் எனும் காலவேல்,
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்,
சமர பூமியும் ஒத்தது - தானையே. 28
தோள் மிடைந்தன, தூணம் மிடைந்தென;
வாள் மிடைந்தன, வான்மின் மிடைந்தென;
தாள் மிடைந்தன, தம்மி மிடைந்தென;
ஆள் மிடைந்தன, ஆளி மிடைந்தென. 29
இளைஞர்களின் காதல் நாடகம்
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான், நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை முட்டினான். 30
சுழி கொள் வாம் பரி துள்ள, ஒர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை, ஒர் வள்ளல் தான்,
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்;
தழுவி நின்று ஒழியான்; தரை மேல் வையான். 31
துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து, அடர்
கணைக் கருங் கணினாளை ஓர் காளைதான்,
பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை
அணைக்க, நங்கைக்கு, அகல் இடம் இல் என்றான். 32
சுழியும் குஞ்சிமிசைச் சுரும்பு ஆர்த்திட,
பொழியும் மா மத யானையின் போகின்றான்,
கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி, தன் வேலையும் நோக்கினான். 33
தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங் கண் வாள் உடையாளை, ஒர் காளைதான்,
நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்? என்றான். 34
கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி,
மாற்றம் பேசுகிலாளை, ஒர் மைந்தன் தான்,
ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை, யாவர் கொலோ? என்றான். 35
ஒட்டகங்கள் சென்ற வகை
தள்ள அரும் பரம் தாங்கிய ஒட்டகம்,
தெள்ளு தேம் குழை யாவையும் தின்கில;
உள்ளம் என்னத் தம் வாயும் உலர்ந்தன,
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே. 36
பப்பரர் பாரம் சுமந்து செல்லுதல்
அரத்த நோக்கினர், அல் திரள் மேனியர்,
பரிந்த காவினர், பப்பரர் ஏகினார்-
திருந்து கூடத்தைத் திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே. 37
பிடியின் மேல் செல்லும் மகளிர்
பித்த யானை பிணங்கி, பிடியில் கை
வைத்த; மேல் இருந்து அஞ்சிய மங்கைமார்,
எய்த்து இடுக்கண் உற்றார், புதைத்தார்க்க்கு இரு
கைத்தலங்களில் கண் அடங்காமையே. 38
சித்தர் தம் மடவாரோடு பிடியில் சென்றவகை
வாம மேகலையாரிடை, வாலதி
பூமி தோய் பிடி, சிந்தரும் போயினார்-
காமர் தாமரை நாள்மலர்க் கானத்துள்,
ஆமைமேல் வரும் தேரையின் ஆங்கு அரோ. 39
ஒருத்தியை தன் முதுகில் கொண்டு ஓடும் குதிரையின் தோற்றம்
இம்பர் நாட்டின் தரம் அல்லள், ஈங்கு இவள்;
உம்பர் கோமகற்கு என்கின்றது ஒக்குமால்-
கம்ப மா வர, கால்கள் வளைத்து, ஒரு
கொம்பு அனாளைக் கொண்டு ஓடும் குதிரையே! 40
மகளிர் மனம் களித்து ஓடுதல்
தந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்,
சிந்து மேகலை சிந்தையும் செய்கலார்,
எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை
மைந்தர் பேச, மனம் களித்து ஓடுவார். 41
அந்தணர் முற்பட்டுச் செல்லுதல்
குடையர், குண்டிகை தூக்கினர், குந்திய
நடையர், நாசி புதைத்த கை நாற்றலர்,-
கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய, அந்தணர்-முந்தினார். 42
நங்கையர் திரண்டு செல்லுதல்
நாறு பூங் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட,
மாறு கொண்டனை வந்தனை ஆகில், வந்து
ஏறு தேர் எனக் கைகள் இழிச்சுவார். 43
குரைத்த தேரும், களிறும் குதிரையும்,
நிரைத்த வார் முரசும், நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால், இடை, யாவரும்
உரைத்த உணர்ந்திலர்; ஊமரின் ஏகினார். 44
நுண் சிலம்பி வலந்தன நுண் துகில்,
கள் சிலம்பு கருங் குழலார் குழ
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்,
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே. 45
மகளிர் கண்களைக் கண்ட ஆடவர்களின் மகிழ்ச்சி
தெண் திரைப் பரவைத் திரு அன்னவர்,
நுண் திரைப் புரை நோக்கிய நோக்கினை,
கண்டு இரைப்பன, ஆடவர் கண்; களி
வண்டு இரைப்பன, ஆனை மதங்களே. 46
உழை கலித்தன என்ன, உயிர்த் துணை
நுழை கலிக் கருங் கண்ணியர் நூபுர
இழை கலித்தன; இன் இயமா, எழும்
மழை கலித்தென, வாசி கலித்தவே. 47
மண் களிப்ப நடப்பவர் வாள் முக
உண் களிக் கமலங்களின் உள் உறை
திண் களிச் சிறு தும்பி என, சிலர்
கண் களித்தன, காமன் களிக்கவே. 48
சுண்ணமும் தூளியும் நிறைய, யாவரும் செல்லுதலால் புழுதி கிளம்புதல்
எண்ண மாத்திரமும் அரிதாம் இடை,
வண்ண மாத்துவர் வாய், கனி வாய்ச்சியர்,
திண்ணம் மாத்து ஒளிர் செவ் இளநீர், இழி
சுண்ணம் ஆத்தன; தூளியும் ஆத்தவே. 49
சித்திரத் தடந் தேர் மைந்தர் மங்கையர்,
உய்த்து உரைப்ப, நினைப்ப, உலப்பிலர்,
இத் திறத்தினர் எத்தனையோ பலர்,
மொய்த்து இரைத்து வழிக்கொண்டு முன்னினார். 50
குசை உறு பரியும், தேரும், வீரரும், குழுமி, எங்கும்
விசையொடு கடுகப் பொங்கி வீங்கிய தூளி விம்மி,
பசை உறு துளியின் தாரைப் பசுந் தொளை அடைத்த, மேகம்;
திசைதொறும் நின்ற யானை மதத் தொளை செம்மிற்று அன்றே. 51
மங்கையரை ஆடவர் அழைத்துச் சென்ற வகை
கேட்கத் தடக் கையாலே, கிளர் ஒளி வாளும் பற்றி,
சூடகத் தளிர்க் கை, மற்றைச் சுடர் மணித் தடக் கை பற்றி,
ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் - ஆற்றில்,
பாடகக் காலினாரை, பயப் பயக் கொண்டு போனார். 52
மலர் பறித்துத் தருமாறு மகளிர் கணவரை வேண்டுதல்
செய்களின் மடுவில், நல் நீர்ச் சிறைகளில், நிறையப் பூத்த
நெய்தலும், குமுதப் பூவும், நெகிழ்ந்த செங் கமலப் போதும்,
கைகளும், முகமும், வாயும், கண்களும், காட்ட, கண்டு,
கொய்து, அவை தருதிர் என்று, கொழுநரைத் தொழுகின்றாரால். 53
யானை வருதல் அறிந்து மகளிர் ஓடுதல்
பந்தி அம் புரவிநின்றும் பாரிடை இழிந்தோர், வாசக்
குந்தள பாரம் சோர, குலமணிக் கலன்கள் சிந்த,
சந்த நுண் துகிலும் வீழ, தளிர்க் கையால் அணைத்து, சார
வந்தது வேழம் என்ன, மயில் என இரியல் போவார். 54
குடை, கொடியின் நெருக்கம்
குடையொடு பிச்சம், தொங்கல் குழாங்களும், கொடியின் காடும்,
இடை இடை மயங்கி, எங்கும் வெளி சுரந்து இருளைச் செய்ய,
படைகளும், முடியும், பூணும், படர் வெயில் பரப்பிச் செல்ல-
இடை ஒரு கணத்தினுள்ளே, இரவு உண்டு, பகலும் உண்டே! 55
மகளிர்க்கு செல்ல ஆடவர் வழி விட்டு விலகுதல்
முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும்
திருக் கிளர் கமலப் போதில் தீட்டின கிடந்த கூர் வாள்,
நெருக்கு இடை அறுக்கும்; நீவிர் நீங்குமின் நீங்கும் என்று என்று,
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகலப் போவார். 56
நந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்குண்டு அற்று,
காந்தின மணியும் முத்தும் சிந்தின, கலாபம் சூழ்ந்த
பாந்தளின் அல்குலார்தம் பரிபுரம் புலம்பு பாதப்
பூந் தளிர் உறைப்ப, மாழ்கி, போக்கு அரிது என்ன நிற்பார். 57
இசை கேட்டு எருதுகள் மிரண்டு ஓடுதல்
கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப, பண்டிப்
பெற்ற ஏறு, அன்னப் புள்ளின் பேதையர் வெருவி நீங்க,
முற்று உறு பரங்கள் எல்லாம், முறை முறை, பாசத்தோடும்
பற்று அற வீசி ஏகி, யோகியின் பரிவு தீர்ந்த. 58
நீர்நிலைகளில் படிந்த யானைகள்
கால் செறி வேகப் பாகர் கார்முக உண்டை பாரா,
வார்ச் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காணப்
பால் செறி கடலில் தோன்றும் பனைக் கை மால் யானை என்ன,
நீர்ச் சிறை பற்றி, ஏறா நின்ற - குன்று அனைய வேழம். 59
பாணரும் விறலியரும் இசையுடன் பாடல்
அறல் இயல் கூந்தல், கண் வாள், அமுது உகு குமுதச் செவ் வாய்,
விறலியரோடு, நல் யாழ்ச் செயிரியர், புரவி மேலார்,
நறை செவிப் பெய்வது என்ன, நைவள அமுதப் பாடல்
முறை முறை பகர்ந்து போனார், கின்னர மிதுனம் ஒப்பார். 60
மத யானைகளின் போக்கு
அருவி பெய் வரையின் பொங்கி, அங்குசம் நிமிர, எங்கும்
இரியலின் சனங்கள் சிந்த, இளங் களிச் சிறு கண் யானை,
விரி சிறைத் தும்பி, வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து, மாதர்
சுரி குழல் படிய, வேற்றுப் பிடியொடும் தொடர்ந்து செல்ப. 61
தயரனது நேய மங்கையரின் எழுச்சி
நிறை மதித் தோற்றம் கண்ட நீல் நெடுங் கடலிற்று ஆகி,
அறை பறை துவைப்ப, தேரும், ஆனையும், ஆடல் மாவும்,
கறை கெழு வேல் கணாரும், மைந்தரும், கவினி, ஒல்லை
நெறியிடைப் படர, வேந்தன் நேய மங்கையர் செல்வார். 62
அரசியர் மூவரும் செல்லுதல்
பொய்கை அம் கமலக் கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன,
கைகயர் வேந்தன் பாவை, கணிகையர் ஈட்டம் பொங்கி
ஐ - இருநூறு சூழ, ஆய் மணிச் சிவிகைதன்மேல்,
தெய்வ மங்கையரும் நாண, தேன் இசை முரல, போனாள். 63
விரி மணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர்த் தடங் கண் நல்லார் ஆயிரத்து இரட்டி சூழ,
குரு மணிச் சிவிகைதன் மேல், கொண்டலின் மின் இது என்ன,
இருவரைப் பயந்த நங்கை, யாழ் இசை முரல, போனாள். 64
வெள் எயிற்று இலவச் செவ் வாய் முகத்தை வெண் மதியம் என்று,
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி,
தெள் அரிப் பாண்டிற் பாணிச் செயிரியர் இசைத் தேன் சிந்த,
வள்ளலைப் பயந்த நங்கை, வானவர் வணங்க, போனாள். 65
செங் கையில், மஞ்ஞை, அன்னம், சிறு கிளி, பூவை, பாவை,
சங்கு உறை கழித்த அன்ன சாமரை, முதல தாங்கி,
இங்கு அலது, எண்ணுங்கால், இவ் எழு திரை வளாகம் தன்னில்
மங்கையர் இல்லை என்ன, மடந்தையர், மருங்கு போனார். 66
ஏவல்மாந்தர் சுற்றிலும் காவல் புரிந்து செல்லுதல்
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார்,
வீர வேத்திரத்தார், தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார்,
தார் அணி புரவி மேலார், தலத்து உளார், கதித்த சொல்லார்,
ஆர் அணங்கு அனைய மாதர், அடி முறை காத்துப் போனார். 67
கூனொடு குறளும், சிந்தும், சிலதியர் குழாமும், கொண்ட
பால் நிறப் புரவி அன்னப் புள் எனப் பாரில் செல்ல,
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்லப்
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார். 68
துப்பினின், மணியின், பொன்னின், சுடர் மரகதத்தின், முத்தின்,
ஒப்பு அற அமைத்த வையம், ஓவியம் புகழ ஏறி,
முப்பதிற்று - இரட்டி கொண்ட ஆயிரம், முகிழ் மென் கொங்கைச்
செப்ப அருந் திருவின் நல்லார், தெரிவையர் சூழப் போனார். 69
வசிட்டன் சிவிகையில் செல்லுதல்
செவி வயின் அமுதக் கேள்வி தெவிட்டினார், தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார், ஆயிரத்து இரட்டி சூழ,
கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி கணவன், வெள்ளைச்
சிவிகையில், அன்னம் ஊரும் திசைமுகன் என்ன, சென்றான். 70
பரத சத்துருக்கனர் வசிட்டன் பின் செல்லுதல்
பொரு களிறு, இவுளி, பொன் தேர், பொலங் கழல் குமரர், முந்நீர்
அரு வரை சூழ்ந்தது என்ன, அருகு முன் பின்னும் செல்ல,
திரு வளர் மார்பர், தெய்வச் சிலையினர், தேரர், வீரர்,
இருவரும், முனி பின் போன இருவரும் என்ன, போனார். 71
தயரதன் போதல்
நித்திய நியமம் முற்றி, நேமியான் பாதம் சென்னி
வைத்த பின், மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும்,
பத்தி ஆன் நிரையும், பாரும், பரிவுடன் நல்கி, போனான் -
முத்து அணி வயிரப் பூணான், மங்கல முகிழ்ந்த நல் நாள். 72
அரசர் குழாம் தயரதனைச் சூழ்ந்து செல்லுதல்
இரு பிறப்பாளர் எண்ணாயிரர், மணிக் கலசம் ஏந்தி,
அரு மறை வருக்கம் ஓதி, அறுகு நீர் தெளித்து வாழ்த்தி;
வரன் முறை வந்தார், கோடி மங்கல மழலைச் செவ்வாய்ப்
பரு மணிக் கலாபத்தார், பல்லாண்டு இசை பரவிப் போனார். 73
கண்டிலன் என்னை என்பார்; கண்டனன் என்னை என்பார்;
குண்டலம் வீழ்ந்தது என்பார்; குறுக அரிது, இனிச் சென்று என்பார்;
உண்டு கொல், எழுச்சி? என்பார்; ஒலித்தது சங்கம் என்பார்;
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர், மருங்கு மாதோ. 74
பொற்றொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார்ப் புரவி வெள்ளம்,
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல,
கொற்ற வேல் மன்னர் செங் கைப் பங்கயப் குழாங்கள் கூம்ப,
மற்று ஒரு கதிரோன் என்ன, மணி நெடுந் தேரில் போனான். 75
ஆர்த்தது, விசும்பை முட்டி; மீண்டு, அகன் திசைகள் எங்கும்
போர்த்தது; அங்கு, ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமைத்
தீர்த்தது; செறிந்தது ஓடி, திரை நெடுங் கடலை எல்லாம்
தூர்த்தது, சகரரோடு பகைத்தென, - தூளி வெள்ளம். 76
சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட,
தொங்கலும் குடையும் தோகைப் பிச்சமும் சுடரை ஓட்ட,
திங்கள் வெண்குடை கண்டு ஓட, தேவரும் மருள, - சென்றான். 77
மந்திர கீத ஓதை, வலம்புரி முழங்கும் ஓதை,
அந்தணர் ஆசி ஓதை, ஆர்த்து எழு முரசின் ஓதை,
கந்து கொல் களிற்றின் ஓதை, கடிகையர் கவியின் ஓதை,-
இந்திர திருவன் செல்ல-எழுந்தன, திசைகள் எல்லாம். 78
நோக்கிய திசைகள் தோறும் தன்னையே நோக்கிச் செல்ல,
வீக்கிய கழற் கால், வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப,
தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி, விண்ணும் மண்ணுலகு ஆக்க,-போனான். 79
வீரரும், களிறும், தேரும், புரவியும் மிடைந்த சேனை,
பேர்வு இடம் இல்லை; மற்று ஓர் உலகு இல்லை, பெயர்க்கலாகா;
நீருடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால்,
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எப் பரிசு மன்னோ? 80
சந்திரசயிலத்தின் சாரலில் தயரதன் தங்குதல்
இன்னணம் ஏகி, மன்னன் யோசனை இரண்டு சென்றான்;
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான்;
மன்மதக் களிறும், மாதர் கொங்கையும், மாரன் அம்பும்,
தென்வரைச் சாந்தும், நாறச் சேனை சென்று, இறுத்தது அன்றே. 81
மிகைப் பாடல்கள்
ஓது நீதியின் கோசிக மா முனி ஓலை
தாது சேர் தொடைத் தயரதன் காண்க! தற் பிரிந்து
போது கானிடைத் தாடகை பொருப்பு எனப் புகுந்து,
வாது செய்து நின்று, இராகவன் வாளியால் மாண்டாள். 3-1
சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென்; அது தனைச் சிதைக்க,
இறந்த தாடகை புதல்வர் ஆம் இருவர் வந்து எதிர்த்தார்;
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி
குறைந்து போயினன்; ஒருவன் போய்க் குரை கடல் குளித்தான். 3-2
கூட மேவு போர் அரக்கரை இளையவன் கொன்று,
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி,
பாடல் மா மறைக் கோதமன் பன்னி சாபத்தை,
ஆடல் மா மலர்ச் சோலையில், இராகவன் அகற்றி, 3-3
பொரு இல் மா மதில் மிதிலையில் புகுந்து, போர் இராமன்
மருவு வார் சிலை முறித்தலின், சனகன் தன் மகளை,
தருவென் யான் என இசைந்தனன்; தான் இங்கு விரைவின்
வருக என்பதாம் வாசகம் கேட்டு, உளம் மகிழ்ந்தான். 3-4
பன்னும் நான் மறை வசிட்டனும் பராவ அரு முனிக்கும்,
அன்னைமார்க்கும், தன் அமைச்சர்க்கும், சோபனம் அறிவித்து,
இன்ன வாசக ஓலை அங்கு இட்ட தூதர்க்குச்
சொன்னம் ஆயிரம் கோடியும் தூசுடன் கொடுத்தான். 3-5
மாண்ட பின்னரும் மந்திர வேள்வியும் இயற்றித்
தூண்டு அரும் பெரும் .......... .............. ..............
............. .............. .............. .............. ...............
............. .............. சனகனும் மகட்கொடை நேர்ந்தான். 3-6
மன்னன் அங்கு அவர் பெருமகம் காணிய வருவான்
அன்ன வசிட்டன் அந்தணர் அரசர் ஆபாலர்
இன்னர் இன்றியே வருக என எழுதினன்; இச் சொல்
சொன்ன வாசகம் சொல்தொறும் அமுது எனச் சொரிந்த. 3-7
சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்,
கோல் தொடி மகளிரும், கோல மைந்தரும்,
வேல் தரு குமரரும், வென்றி வேந்தரும்,
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினர். 8-1
எதிர் கொண்டு ஏந்தி ஓர் ஏந்திழை கொங்கை பூண்
அதிர, மார்பம் அழுந்தத் தழுவினான்,
முதிரும் தோள் மலையோ, முலைக் குன்றமோ
அதிகம் என்பது அறிக வந்தேன் என்றான். 37-1
பால காண்டம்
15. சந்திரசயிலப் படலம்
யானைகளை மரத்தில் பிணித்தலும், அவற்றின் செயல்களும்
கோவை ஆர் வடக் கொழுங் குவடு ஒடிதர நிவந்த,
ஆவி வேட்டன, வரிசிலை அனங்கன் மேல் கொண்ட,
பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட,
தேவதாரத்தும், சந்தினும், பூட்டின - சில மா. 1
நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும்
சோர்வு இடம் பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல,
காரொடும் தொடர் கவட்டு எழில், மராமரக் குவட்டை
வேரொடும் கொடு, கிரி என நடந்தது - ஓர் வேழம். 2
திரண்ட தாள் நெடுஞ் செறி பணை மருது இடை ஒடியப்
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல,
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும், ஒருங்கே
இரண்டு மா மரம் இடை இற நடந்தது - ஓர் யானை. 3
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான், இனியன கழறி,
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன்; பல் நூல்
விதங்களால், அவன், மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது - ஓர் யானை. 4
மாறு காண்கிலதாய் நின்று, மழை என முழங்கும்
தாறு பாய் கரி, வன கரி தண்டத்தைத் தடவி,
பாறு பின் செல, கால் எனச் செல்வது, பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே. 5
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற,
காத்த அங்குசம் நிமிர்ந்திட, கால் பிடித்து ஓடி,
பூத்த ஏழிலைப் பாலையைப் பொடிப் பொடி ஆக,
காத்திரங்களால், தலத்தொடும் தேய்ந்தது - ஓர் களிறு. 6
அலகு இல் ஆனைகள் அநேகமும், அவற்றோடு மிடைந்த
திலக வாள் நுதல் பிடிகளும், குருளையும், செறிந்த
உலவை நீள் வனத்து, ஊதமே ஒத்த; அவ் ஊதத்
தலைவனே ஒத்துப் பொலிந்தது, சந்திரசயிலம். 7
கருங்கல்லைப் பொன்னாக்கிச் சென்ற தேர்கள்
தெருண்ட மேலவர், சிறியவர்ச் சேரினும், அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே:
உருண்ட வாய்தொறும், பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி,
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய - இரதம். 8
மலையில் இறங்கிய மகளிர், மர நிழல் மற்றும் பளிக்குப் பாறையில் இளைப்பாறி, துயில் கொள்ளுதல்
கொவ்வை நோக்கிய வாய்களை, இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் - காட்டு இன மயில்கள்,
நவ்வி நோக்கியர், நலம் கொள் மேகலை, பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன போல்வன, திரிந்த? 9
உய்க்கும் வாசிகள் இழிந்து, இள அன்னத்தின் ஒதுங்கி,
மெய்க் கலாபமும், குழைகளும், இழைகளும் விளங்க,
தொக்க மென் மர நிழல் படத் துவன்றிய சூழல்
புக்க மங்கையர், பூத்த கொம்பு ஆம் எனப் பொலிந்தார். 10
தளம் கொள் தாமரை என, தளிர் அடியினும், முகத்தும்,
வளம் கொள் மாலை வண்டு அலமர, வழி வருந்தினர் ஆய்,
விளங்கு தம் உருப் பளிங்கிடை வெளிப்பட, வேறு ஓர்
துளங்கு பாறையில், தோழியர் அயிர்த்திடத் துயின்றார். 11
பிடி புக்கு ஆயிடை, மின்னொடும் பிறங்கிய மேகம்
படி புக்காலெனப் படிதர, பரிபுரம் புலம்ப,
துடி புக்கா இடைத் திருமகள் தாமரை துறந்து
குடி புக்காலென, குடில் புக்கார் - கொடி அன்ன மடவார். 12
வரிசையாகக் கட்டி வைத்த குதிரைகள்
உண் அமுதம் ஊட்டி, இளையோர் நகர் கொணர்ந்த,
துண்ணெனும் முழக்கின, துருக்கர் தர வந்த,
மண்மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன,
பண் இயல் வயப் பரிகள், பந்தியில் நிரைத்தார். 13
பணியாளர்கள் தங்குவதற்கு வசதி செய்தல்
நீர் திரை நிரைத்த என, நீள் திரை நிரைத்தார்;
ஆர்கலி நிரைத்த என, ஆவணம் நிரைத்தார்;
கார் நிரை என, களிறு காவிடை நிரைத்தார்;
மாருதம் நிரைத்த என, வாசிகள் நிரைத்தார். 14
மங்கையரும் மைந்தரும் மயங்கித் திரிதல்
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்,
வடிக்கும் அயில் வீரரும், மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின், எங்கும் முரல் சங்கின்,
கொடிக்களின் உணர்ந்து, அரசர் கோ நகர் அடைந்தார். 15
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை,
சுதைக் கண் நுரையைப் பொருவு தூசு கொடு, தூய்தா
உதிர்த்தனர், இளங் குமரர், ஓவியரின்; ஓவம்
புதுக்கினர் என, தருண மங்கையர் பொலிந்தார். 16
யானைகளிலிருந்து இறங்கி, அரச குமாரர் பட மாடங்களில் புகுதல்
தாள் உயர் தடக் கிரி இழிந்து தரை சேரும்
கோள் அரி என, கரிகள் கொற்றவர் இழிந்தார்;
பாளை விரி ஒத்து உலவு சாமரை படப் போய்,
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார். 17
தூசின் நெடு வெண் பட முடைக் குடிலகள்தோறும்,
வாச நகை மங்கையர் முகம் பொலிவ, வானில்,
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும்,
வீசு திரை வெண் புனல், விளங்கியன போலும். 18
புழுதி படிய வரும் யானை
மண் உற விழுந்து, நெடு வான் உற எழுந்து, -
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் - கார்
உண் நிற நறும் பொடியை வீசி, ஒரு பாகம்
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம். 19
குதிரைகள் அடங்கி வருதல்
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்,
ஆயவரை, அந் நிலை, அறிந்தனர், துறந்தாங்கு,
ஏய அரு நுண் பொடி படிந்து, உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து உதறி நின்றன, பரந்தே. 20
மும்மை புரி வன் கயிறு கொய்து, செயல் மொய்ம்பால்
தம்மையும் உணர்ந்து, தரை கண்டு, விரைகின்ற,
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும்
செம்மையவர் என்ன, நனி சென்றன - துரங்கம். 21
திரைக் குடிலில் கழங்கு ஆடும் மங்கையர்
விழுந்த பனி அன்ன, திரை வீசு புரைதோறும்,
கழங்கு பயில் மங்கையர் கருங் கண் மிளிர்கின்ற -
தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து,
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழுங் கயல்கள் என்ன. 22
ஆறு உதவும் ஊற்றுப்பெருக்கு
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்,
கிள்ள எழுகின்ற புனல், கேளிரின் விரும்பி, -
தெள்ளு புனல் ஆறு - சிறிதே உதவுகின்ற;
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த. 23
படமாடத்தில் நுழைகின்ற வீரர்கள்
துன்றி நெறி பங்கிகள் துளங்க, அழலோடும்
மின் திரிவ என்ன, மணி ஆரம் மிளிர் மார்பர்,
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார்,
குன்றின் முழைதோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார். 24
நீரில் விழுந்து உழக்கி நிற்கும் யானைகள்
நெருங்கு அயில் எயிற்றனைய செம் மயிரின் நெற்றிப்
பொருங் குலிகம் அப்பியன, போர் மணிகள் ஆர்ப்ப,-
பெருங் களிறு - அலைப் புனல் கலக்குவன; பெட்கும்
கருங் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த. 25
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா,
பக்கம் இனம் ஒத்து, அயல் அலைக்க, நனி பாரா,-
மைக் கரி, மதத்த - விலை மாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன, புனல் சிறைகள் ஏறா. 26
அட்டிலில் எழும் புகை
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி,
பகல் இடைய, அட்டிலில் மடுத்து, எரி பரப்பும்
அகில் இடு கொழும் புகை அழுங்கலின், முழங்கா
முகில் படு நெடுங் கடலை ஒத்து உளது, அம் மூதூர். 27
பொலிவுற்ற சேனை வெள்ளம்
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார்,
தமரையும் அறியார் நின்று திகைப்புறு தகைமை சான்ற
குமரரும் மங்கைமாரும் குழுமலால், வழுவி விண் நின்று
அமரர் நாடு இழிந்தது என்னப் பொலிந்தது, அவ் அனீக வெள்ளம். 28
மகளிரும் மைந்தரும் மகிழ்வுடன் திரிதல்
வெயில் நிறம் குறையச் சோதி மின் நிழல் பரப்ப, முன்னம்
துயில் உணர் செவ்வியோரும், துனி உறு முனிவினோரும்,
குயிலொடும் இனிது பேசி, சிலம்பொடும் இனிது கூவி,
மயிலினம் திரிவ என்ன, திரிந்தனர் - மகளிர் எல்லாம். 29
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப, தார் இடை அளிகள் ஆர்ப்ப,
வாள் புடை இலங்க, செங் கேழ் மணி அணி வலையம் மின்ன,
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி,
வாள் அரி திரிவ என்ன, திரிந்தனர் - மைந்தர் எல்லாம். 30
பால காண்டம்
16. வரைக் காட்சிப் படலம்
சந்திரசயில மலையின் மாட்சி
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக் குன்றைப்
பற்றிய வளைந்தவென்ன, பரந்து வந்து இறுத்த சேனை;
கொற்றவர், தேவிமார்கள், மைந்தர்கள், கொம்பனார், வந்து
உற்றவர், காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே! 1
பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட,
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும்
கொம்புகள், பனைக் கை நீட்டி, குழையொடும் ஒடித்து, கோட்டுத்
தும்பிகள், உயிரே அன்ன துணை மடப் பிடிக்கு நல்கும். 2
பண் மலர் பவளச் செவ் வாய்ப் பனி மலர்க் குவளை அன்ன
கண் மலர்க் கொடிச்சிமார்க்குக் கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி, புதிய தேன் உதவும் நாகத்
தண் மலர் என்று, வானத் தாரகை தாவும் அன்றே! 3
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டிக் குத்திட, குமுறிப் பாயும்
தேன் உகு மடையை மாற்றி, செந் தினைக் குறவர், முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி, ஐவனம் வளர்ப்பர் மாதோ! 4
குப்புறற்கு அருமையான குல வரைச் சாரல் வைகி,
ஒப்புறத் துளங்குகின்ற உடுபதி ஆடியின்கண்,
இப் புறத்தேயும் காண்பார், குறத்தியர், இயைந்த கோலம்;
அப் புறத்தேயும் காண்பார், அரம்பையர், அழகு மாதோ! 5
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும், வாயின்
அதி விட நீரும், நெய்யும், உண்கிலாது, ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு,
மதியினை வாங்கி, ஒப்புக் காண்குவர், குறவர் மன்னோ! 6
பேணுதற்கு அரிய கோலக் குருளை, அம் பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழக் கன்றொடு களிக்கும் முன்றில்,
கோணுதற்கு உரிய திங்கட் குழவியும், குறவர் தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு, தவழும் மாதோ! 7
அஞ்சனக் கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற
வெஞ் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு, - விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும், நீலக் குல மணித் தலத்தும், - மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த பசுஞ் சுவடு உடைத்து மன்னோ. 8
செங் கயல் அனைய நாட்டம் செவி உறா, முறுவல் தோன்றா,
பொங்கு இருங் கூந்தல் சோரா, புருவங்கள் நெரியா, பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி, நரம்பு அளைந்து, அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டு, கின்னரம் மயங்கும் மாதோ! 9
கள் அவிழ் கோதை மாதர், காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாட் கண்ணினார்தம் குங்குமக் குழம்பு தங்கும்
தெள்ளிய பளிக்குப் பாறைத் தெளி சுனை, மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன, வரம்பு இல பொலியும் மன்னோ! 10
ஆடவர் ஆவி சோர, அஞ்சன வாரி சோர,
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர் தம் அரம்பை மாதர்,
தோடு அவிழ் கோதை நின்றும் துறந்த மந்தார மாலை,
வாடல, நறவு அறாத, வயின் வயின் வயங்கும் மாதோ. 11
மாந் தளிர் அனைய மேனிக் குறத்தியர் மாலை சூட்டி,
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்புக் காண்பார்;
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணிக் கடகம் வாங்கி,
காந்தள் அம் போதில் பெய்து, கைகளோடு ஒப்புக் காண்பார். 12
சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா,
நரம்பினோடு இனிது பாடி, நாடக மயிலோடு ஆடி,
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணிக் கோவை ஆரம்,
மரம் பயில கடுவன் பூண, மந்தி கண்டு உவக்கும் மாதோ. 13
சாந்து உயர் தடங்கள் தோறும் தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும்;
காந்து இன மணியின் சோதிக் கதிரொடும் கலந்து வீசச்
சேந்து, வானகம், எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே. 14
நிலமகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி,
மலைமகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான,
அலகு இல் பொன் அலம்பி ஓடி, சார்ந்து வீழ் அருவி மாலை,
உலகு அளந்தவன் தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த. 15
மாந்தர் கண்ட மலை நிகழ்ச்சிகள்
கோடு உலாம் நாகப் போதோடு இலவங்க மலரும் கூட்டிச்
சூடுவார், களி வண்டு ஓச்சித் தூ நறுந் தேறல் உண்பார்,
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார். 16
பெருங் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணைக் கொங்கை அன்ன, பொரு இல், கோங்கு அரும்பின் மாடே,
மருங்கு எனக் குழையும் கொம்பின் மடப் பெடை வண்டும், தங்கள்
கருங் குழல் களிக்கும் வண்டும், கடிமணம் புணர்தல் கண்டார். 17
படிகத்தின் தலம் என்று எண்ணி, படர் சுனை முடுகிப் புக்க
சுடிகைப் பூங் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்தம்
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப, நோக்கி,
கடகக் கை எறிந்து, தம்மில் கருங் கழல் வீரர் நக்கார். 18
பூ அணை பலவும் கண்டார்; பொன்னரிமாலை கண்டார்,
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலைத் தம்பல் கண்டார்;
ஆவியின் இனிய கொண்கர்ப் பிரிந்து, அறிவு அழிந்த விஞ்சைப்
பாவையர் வைக, தீய்ந்த பல்லவ சயனம் கண்டார். 19
பானல் அம் கண்கள் ஆட, பவள வாய் முறுவல் ஆட,
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட,
தேன் முரன்று அளகத்து ஆட, திரு மணிக் குழைகள் ஆட,
வானவர் மகளிர் ஆடும், வாசம் நாறு ஊசல் கண்டார். 20
சுந்தர வதன மாதர் துவர் இதழ்ப் பவள வாயும்,
அந்தம் இல் கரும்பும், தேனும், மிஞிறும் உண்டு - அல்குல் விற்கும்
பைந் தொடி மகளிர், கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட
மைந்தரின் - நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார். 21
அல் பகல் ஆக்கும் சோதிப் பளிக்கு அறை அமளிப் பாங்கர்,
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த, கோல,
வில் பகை நுதலினார், தம் கலவியில் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்பக் கண்டார். 22
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி,
பை அரவு இது என்று அஞ்சி, படைக் கண்கள் புதைக்கின்றாரும்;
நெய் தவழ் வயிரப் பாறை நிழலிடைத் தோன்றும் போதை,
கொய்து இவை தருதிர் என்று, கொழுநரைத் தொழுகின்றாரும்; 23
பின்னங்கள் உகிரின் செய்து, பிண்டி அம் தளிர்க் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி, தே மலர் கொய்கின்றாரும்;
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன, அகன் சுனை குடைகின்றாரும். 24
மலைக் காட்சிகள்
ஈனும் மாழை இளந் தளிர் ஏய் ஒளி
ஈனும், மாழை இளந் தளிரே - இடை,
மானும், வேழமும், நாகமும், மாதர் தோள்
மானும் வேழமும், நாகமும் - மாடு எலாம். 25
திமிர மா உடல் குங்குமச் சேதகம்
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால்;
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர, மா தரை ஒத்தது, அவ் வானமே. 26
பேர் அவாவொடு மாசுணம் பேர, வே
பேர, ஆவொடு மா சுணம் பேரவே!
ஆர, ஆரத்தினோடும் மருவியே,
ஆரவாரத்தின் ஓடும் அருவியே! 27
புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம்,
புகலும் வாள் அரிக் கண்ணியர் பூண் முலை,
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே!
அகிலும், ஆரமும் மாரவம் கோங்குமே. 28
துன் அரம்பை நிரம்பிய, தொல் வரை,
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்;
கின்னரம் பயில் கீதங்கள் என்ன, ஆங்கு,
இன் நரம்பு அயில்கின்றனர், ஏழைமார். 29
ஊறு, மா கடம் மா, உற ஊங்கு எலாம்,
ஊறுமா கட மா மதம் ஓடுமே;
ஆறு சேர் வனம் ஆ, வரை, ஆடுமே;
ஆறு சேர்வன, மா, வரையாடுமே. 30
கல் இயங்கு கருங் குற மங்கையர்,
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா,
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம்,
வல் இயங்கள் நெருங்கி மயங்குமே. 31
கோள் இபம் கயம் மூழ்க, குளிர் கயக்
கோளி, பங்கயம், ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய்,
ஆளி பொங்கும், அரம்பையர் ஓதியே. 32
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி-
வாக மால் ஐயன் நின்றெனல் ஆகுமால் -
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக, மாலை கிடந்தது, கீழ் எலாம். 33
மலைமேல் மாதர் மைந்தர் விளையாடுதல்
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என,
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி, அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி, நீங்கலர், தாம் இனிது ஆடுவார். 34
இறக்கம் என்பதை எண்ணிலர், எண்ணுங்கால்,
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால்,
துறக்கம் எய்திய தூயவரே என,
மறக்ககிற்றிலர், அன்னதன் மாண்பு எலாம். 35
அந்திப் பொழுதில் அம் மலையின் அழகு
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெஞ் சாயையுடைக் கதிர், அங்கு, அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய, ஏறு
செஞ் சோரி எனப் பொலிவுற்றது, செக்கர் வானம். 36
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய,
தணியாத நறுந் தளிர் தந்தன போன்று தாழ,
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின், அங்கம் எங்கும்,
மணியால் இயன்ற மலை ஒத்தது - அம் மை இல் குன்றம். 37
கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும்,
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும்,
வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோந்தனை ஒத்தது - அவ் ஆசு இல் குன்றம். 38
மகளிரும் மைந்தரும் மலையிலிருந்து இறங்குதல்
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்,
தேனும், மிஞிறும், சிறு தும்பியும், பம்பி ஆர்ப்ப,
ஆனை இனமும் பிடியும், இகல் ஆளி ஏறும்,
மானும் கலையும், என, மால் வரை வந்து இழிந்தார். 39
இருள் பரவ, எங்கும் தீபம் ஏற்றுதல்
கால் வானகத் தேருடை வெய்யவன், காய் கடுங் கண்
கோல் மாய் கதிர்ப் புல் உளைக் கொல் சினக் கோள் அரிம்மா,
மேல்பால் மலையில் புக, வீங்கு இருள், வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என, வந்து பரந்தது அன்றே. 40
மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன் தன் அனீக வெள்ளம்,
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்தென, தீபம் எடுத்தது அன்றே. 41
மதியம் தோன்ற, முக மலர்ச்சி பெறும் மகளிர்
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி,
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது, மீன்கள் சூழ -
வண்ணக் கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று, ஒளிர் வால் வளை, ஊர்வது ஒத்தே. 42
மீன் நாறு வேலை ஒரு வெண் மதி ஈனும் வேலை,
நோனாது அதனை, நுவலற்கு அருங் கோடி வெள்ளம்
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது, அனீக வேலை. 43
கூத்தரின் ஆடலும், மகளிர் கோலம் கொள்ளுதலும்
மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை,
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் முடை வேய் இசை, - கண்ணுளர் ஆடல்தோறும் -
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே. 44
மணியின் அணி நீக்கி, வயங்கு ஒளி முத்தம் வாங்கி,
அணியும் முலையார், அகில் ஆவி புலர்த்தும் நல்லார்,
தணியும் மது மல்லிகைத் தாமம் வெறுத்து, வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை சேர்த்துவாரும். 45
பல வகை ஒலிகள்
புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை,
கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை. 46
இரவுப் பொழுதை கழித்த வகை
உண்ணா அமுது அன்ன கலைப் பொருள் உள்ளது உண்டும்,
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும்,
பண் ஆன பாடல் செவி மாந்திப் பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும், கங்குல் கழிந்தது அன்றே. 47
பால காண்டம்
17. பூக் கொய் படலம்
காலையில் தயரதன் சோணை ஆற்றை அடைதல்
மீனுடை எயிற்றுக் கங்குல்-கனகனை வெகுண்டு, வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி,
தானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள் நின்று,
மானுட மடங்கல் என்ன, தோன்றினன், - வயங்கு வெய்யோன். 1
முறை எலாம் முடித்த, மன்னர் மன்னனும், மூரித் தேர்மேல்
இறை எலாம் வணங்கப் போனான்; எழுந்து, உடன், சேனை வெள்ளம்,
குறை எலாம் சோலை ஆகி, குழி எலாம் கழுநீர் ஆகி,
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே. 2
உச்சி வேளையில் சோலையைச் சார்தல்
அடைந்து, அவண் இறுத்த பின்னர், அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான்;
மடந்தையர் குழாங்களோடு, மன்னரும், மைந்தர் தாமும்,
குடைந்து வண்டு உறையும் மென் பூக் கொய்து நீராட, மை தீர்
தடங்களும், மடுவும் சூழ்ந்த, தண் நறுஞ் சோலை சார்ந்தார். 3
மாதரைக் கண்ட மயில் முதலியவற்றின் செய்கை
திண் சிலை புருவம் ஆக, சேயரிக் கருங் கண் அம்பால்,
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற, மஞ்ஞை;
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப, நாணினால் பறந்த, கிள்ளை;
ஒண் சிலம்பு அரற்ற, மாதர் ஒதுங்குதோறு, ஒதுங்கும் அன்னம். 4
மாதர் தோழியரோடு ஆடக் கண்ட ஆடவர் மயங்கி நிற்றல்
செம் பொன் செய் சுருளும் தெய்வக் குழைகளும் சேர்ந்து மின்ன,
பம்பு தேன் அலம்ப ஒல்கி, பண்ணையின் ஆடல் நோக்கி,
கொம்பொடும், கொடி அனாரைக் குறித்து அறிந்து உணர்தல் தேற்றார்,
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும், மயங்கி நின்றார். 5
குயில்களின் நாணி ஒதுங்குதல்
பாசிழைப் பரவை அல்குல், பண் தரு கிளவி, தண் தேன்
மூசிய கூந்தல், மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு,
கூசின அல்ல; பேச நாணின, குயில்கள் எல்லாம்-
வாசகம் வல்லார் முன் நின்று, யாவர் வாய் திறக்க வல்லார்? 6
மாதர் பூங் கொம்பைத் தீண்டலும், மலர் சொரிந்து கொம்பு தாழ்தலும்
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி,
செஞ்செவே கமலக் கையால் தீண்டலும், நீண்ட கொம்பும்,
தம் சிலம்பு அடியில் மென் பூச் சொரிந்து உடன் தாழ்ந்த என்றால்,
வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார்? 7
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர்க் கைகள் தீண்ட,
வம்பு இயல் அலங்கல் பங்கி, வாள் அரி மருளும் கோளார் -
தம் புய வரைகள் வந்து தாழ்வன; தளிர்த்த மென் பூங்
கொம்புகள் தாழும் என்றல், கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ! 8
மகளிரின் மேல் வண்டுகள் மொய்த்தல்
நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு
மதி நுதல் வல்லி பூப்ப, நோக்கிய மழலைத் தும்பி
அதிசயம் எய்தி, புக்கு வீழ்ந்தன; அலைக்கப் போகா -
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்? 9
மலர் கொய்துநின்ற மகளிரின் செயல்கள்
உலம் தரு வயிரத் திண் தோள் ஒழுகி, வார் ஒளி கொள் மேனி
மலர்ந்த பூந் தொடையல் மாலை மைந்தர் பால், மயிலின் அன்னார்
கலந்தவர் போல, ஒல்கி ஒசிந்தன, சில; கை வாராப்
புலந்தவர் போல நின்று, வளைகில, பூத்த கொம்பர். 10
பூ எலாம் கொய்து கொள்ள, பொலிவு இல துவள நோக்கி,
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு? அழகு இல இவை என்று எண்ணி,
கோவையும், வடமும், நாணும், குழைகளும், குழையப் பூட்டி,
பாவையர், பனி மென் கொம்பை நோக்கினர், பரிந்து நிற்பார். 11
மகளிரின் வெறுங் கூந்தலை வண்டுகள் மொய்த்த காட்சி
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம்,
நறுங் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார்
வெறுங் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல வேண்டு போதும்;-
உறும் போகம் எல்லாம், நலன் உள் வழி, உண்பர் அன்றே! 12
மங்கையர் கண் பனி சோர நின்ற காட்சி
மெய்ப் போதின் நங்கைக்கு அணி அன்னவள், வெண் பளிங்கில்
பொய்ப் போது தாங்கிப் பொலிகின்ற தன் மேனி நோக்கி
இப் பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி,
கைப் போதினோடு நெடுங் கண் பனி சோர நின்றாள். 13
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு, ஒர் மன்னன்,
தோள் உண்ட மாலை ஒரு தோகையைச் சூட்ட நோக்கி,
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண், ஆவி,
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என, வார நின்றாள். 14
கணவன் மறைந்து நிற்க மறுகும் மனைவி
மயில் போல் வருவாள் மனம் காணிய, காதல் மன்னன்,
செயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச் சூழல் சேர,
பயில்வாள், இறை பண்டு பிரிந்து அறியாள், பதைத்தாள்;
உயிர் நாடி ஒல்கும் உடல்போல் அலமந்து உழந்தாள். 15
புலந்து நின்ற ஒருத்தி குயிலை மலர் பறித்துத் தர வேண்டல்
மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற,
நெய் தாவும் வேலானொடு, நெஞ்சு புலந்து நின்றாள்,
எய்தாது நின்றம் மலர் நோக்கி, எனக்கு இது ஈண்டக்
கொய்து ஈதி என்று, ஓர் குயிலை, கரம் கூப்புகின்றாள். 16
புலவிக் காட்சிகள்
செம்மாந்த தெங்கின் இளநீரை, ஓர் செம்மல் நோக்கி,
அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன,
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன? என்று, ஒர் ஏழை,
விம்மா, வெதும்பா, வெயரா, முகம் வெய்துயிர்த்தாள். 17
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங் கொள் திண் தோள்
மாரன் அனையான், மலர் கொய்து இருந்தானை, வந்து ஒர்
கார் அன்ன கூந்தல், குயில் அன்னவள், கண் புதைப்ப,
ஆர்? என்னலோடும், அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள். 18
மன்னனின் செயல்
ஊற்று ஆர் நறை நாள்மலர், மாதர், ஒருங்கு வாசச்
சேற்றால் விளையாத செந்தாமரைக் கைகள் நீட்டி,
ஏற்றாரை நோக்கான், இடை ஏந்தினன், நின்று ஒழிந்தான் -
மாற்றான், உதவான், கடு வச்சையன்போல் - ஒர் மன்னன். 19
மாற்றவள் பேரைக் கணவன் கூறக் கேட்ட பெண்ணின் துயரம்
தைக்கின்ற வேல் நோக்கினாள், தன் உயிர் அன்ன மன்னன்,
மைக் கொண்ட கண்ணாள் எதிர், மாற்றவள் பேர் விளம்ப,
மெய்க் கொண்ட நாணம் தலைக்கொண்டிட விம்மி, மென் பூக்
கைக் கொண்டு மோந்தாள்; உயிர்ப்புண்டு கரிந்தது அன்றே! 20
தன் தேவிமாருடன் திரிந்த மன்னனின் தோற்றம்
திண் தேர் அரசன் ஒருவன், குலத் தேவிமார் தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிக்கத் திரிவான், மதம் கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்கத் திரி மா மத யானை ஒத்தான். 21
தலைவன்மேல் அவனது மனைவியர் இருவர் சினந்து புலத்தல்
சந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள் தனக்கும்,
வந்திக்கல் ஆகும் மடவாட்கும், வகுத்து நல்கி,
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப, மென் பூச்
சிந்தி, கலாப மயிலின், கண் சிவந்து, போனார். 22
மகளிர் ஆடவர் செயல்கள்
வந்து, எங்கும், தம் மன் உயிரேயோ, பிறிது ஒன்றோ? -
கந்தம் துன்றும் சோர் குழல் காணார்; கலை பேணார்;
அந்தம் தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார்; -
சிந்தும் சந்தத் தே மலர் நாடித் திரிவாரும்; 23
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்,
தாழத் தாழாள்; தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்;
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்
சூழற்கே, தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்; 24
அம் தார் ஆகத்து ஐங் கணை நூறாயிரம் ஆகச்
சிந்தா நின்ற சிந்தையினான், செய்குவது ஓரான்,
மந்தாரம் கொண்டு ஈகுதியோ, மாதவி? என்று, ஓர்
சந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால் தளர்வானும்; 25
நாடிக் கொண்டாள், குற்றம் நயந்தாள்; முனிவு ஆற்றாள்;
ஊடிக் காணக் காட்டும் நலத்தாள் உடன் நில்லாள்;
தேடித் தேடிச் சேர்த்த நறும் பூஞ் செழு மாலை
சூடிச் சூடி, கண்ணடி நோக்கித் துவள்வாளும்; 26
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான், இடையே வந்து
உற, இக் கோலம் பெற்றிலென் என்றால், உடன் வாழ்வு இப்
பிறவிக்கு ஒல்லேன்; என் செய்வது, இப் பேர் அணி? என்று, ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து, இழை எல்லாம் விடுவாளும்; 27
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக்கின்ற நுண் இடை நோவ, கசிவாளும்;
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி, பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க, குழைவாளும்; 28
தன்னைக் கண்டாள்; மென் நடை கண்டாள்; தமரைப்போல்
துன்னக் கண்டாள்; தோழமை கொண்டாள்; துணை என்றாள்;
உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது; உடு நீ என்று,
அன்னக் கன்னிக்கு, ஆடை அளிப்பான் அமைவாளும்; 29
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி, கொம்பின் ஒதுங்கி, துணர் ஈன்ற
சாகைத் தம் கை, கண்கள் புதைத்தே தளர்வாளும்; 30
பொன்னே, தேனே, பூமகளே, காண், எனை என்னா,
தன் நேர் இல்லாள், அங்கு, ஒரு கொய்யல் தழை மூழ்கி,
இன்னே என்னைக் காணுதி நீ என்று, இகலி, தன்
நல் நீலக் கண் கையின் மறைத்து, நகுவாளும்; 31
வில்லில் கோதை நாண் உற மிக்கோன், இகல் அங்கம்
புல்லிக் கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி,
அல்லின் கோதை மாதர் முகப் பேர் அரவிந்தச்
செல்வக் கானில், செங்கதிர் என்னத் திரிவாரும்; 32
செய்யில் கொள்ளும் தெள் அமுதச் செஞ் சிலை ஒன்று
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார், தம்
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலைச் சொல்,
தெய்வப் பாடல் சொல் கலை என்ன, தெரிவாரும்; 33
சோலைத் தும்பி மென் குழல் ஆக, தொடை மேவும்
கோலைக் கொண்ட மன்மத ஆயன், குறி உய்ப்ப,
நீலத்து உண்கண் மங்கையர் சூழ, நிரை ஆவின்,
மாலைப் போதில் மால் விடை என்ன வருவாரும். 34
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது, காமன் கை வில் எனும்
வாக்கு மாத்திரம்; அல்லது, வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே! 35
நாறு பூங் குழல் நன்னுதல், புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று, ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்,
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ! 36
சினையின்மேல் இருந்தான், உருத் தேவரால்
வனையவும் அரியாள் வனப்பின் தலை,
நினைவும், நோக்கமும், நீக்கலன்; கைகளால்,
நனையும் நாள் முறியும் கொய்து, நல்கினான். 37
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி, -ஓர்
தண்டு போல் புயத்தான் தடுமாறினான்,
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து; - அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே. 38
பூக் கொய்தலை வெறுத்து, யாவரும் புனலாடப் புகுதல்
ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்,
தூய தண் நிழல் சோலை, துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர்; வெண் திரை
பாயும் தீம் புனல் - பண்ணை சென்று எய்தினார். 39
பால காண்டம்
18. நீர் விளையாட்டுப் படலம்
மகளிரும் ஆடவரும் புனலாடச் சென்ற காட்சி
புனை மலர்த் தடங்கள் நோக்கி, பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க,
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண,
அனகரும், அணங்கனாரும், அம் மலர்ச் சோலை நின்று,
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார். 1
அங்கு, அவர், பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம்,
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல, மேல்நாள்,
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம்,
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே. 2
மைந்தரும் மாதரும் புனலிடை விளையாடியமை
மை அவாம் குவளை எல்லாம், மாதர் கண்மலர்கள் பூத்த;
கை அவாம் உருவத்தார் தம் கண்மலர், குவளை பூத்த;
செய்ய தாமரைகள் எல்லாம், தெரிவையர் முகங்கள் பூத்த;
தையலார் முகங்கள், செய்ய தாமரை பூத்த அன்றே. 3
தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உறத் தழுவுவாரும்,
தோளையே பற்றி வெற்றித் திரு எனத் தோன்றுவாரும்,
பாளை வீ விரிந்தது என்ன, பரந்து நீர் உந்துவாரும்,
வாளைமீன் உகள, அஞ்சி, மைந்தரைத் தழுவுவாரும்; 4
வண்டு உணக் கமழும் சுண்ணம், வாச நெய் நானத்தோடும்
கொண்டு, எதிர் வீசுவாரும், கோதை கொண்டு ஓச்சுவாரும்,
தொண்டை வாய்ப் பெய்து, தூநீர், கொழுநர் மேல் தூகின்றாரும்,
புண்டரீகக் கை கூப்பி, புனல் முகந்து இறைக்கின்றாரும். 5
மின் ஒத்த இடையினாரும், வேய் ஒத்த தோளினாரும்,
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி,
அன்னத்தை, வருதி, என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும்;
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற, உளைகின்றாரும்; 6
பண் உளர் பவளத் தொண்டை, பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய், குவளை வாட்கண், மருங்கு இலாக் கரும்பின் அன்னார்,
உள் நிறை கயலை நோக்கி, ஓடு நீர்த் தடங்கட்கு எல்லாம்
கண் உள ஆம்கொல்? என்று, கணவரை வினவுவாரும்; 7
தேன் உகு நறவ மாலைச் செறி குழல் தெய்வம் அனனாள்,
தானுடைக் கோல மேனி தடத்திடைத் தோன்ற, நோக்கி,
நான் நக நகுகின்றாள் இந் நல் நுதல்; தோழி ஆம் என்று,
ஊனம் இல் விலையின் ஆரம், உளம் குளிர்ந்து உதவுவாரும்; 8
குண்டலம் திரு வில் வீச, குல மணி ஆரம் மின்ன,
விண் தொடர் வரையின் வைகும் மென் மயிற் கணங்கள் போல,
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்தம் வயிரத் திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசைப் புனற் கரை சார்கின்றாரும்; 9
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம்;
செங் கயல் அனைய நாட்டம் சிவப்பு உறச் சீறிப் போன
மங்கை, ஓர் கமலச் சூழல் மறைந்தனள்; மறைய, மைந்தன்,
பங்கயம், முகம், என்று ஓராது, ஐயுற்றுப் பார்க்கின்றானும்; 10
பொன் - தொடி தளிர்க் கைச் சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப,
எற்று நீர் குடையும்தோறும், ஏந்து பேர் அல்குல்நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி, சீறடி கவ்வ, காலில்
சுற்றிய நாகம் என்று, துணுக்கத்தால் துடிக்கின்றாரும். 11
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடைசூழ் ஆழித்
தடம் புயம் பொலிய, ஆண்டு, ஒர் தார் கெழு வேந்தன் நின்றான் -
கடைந்த நாள், அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும்
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல மாதோ. 12
தொடி உலாம் கமலச் செங் கை, தூ நகை, துவர்த்த செவ் வாய்க்
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து, ஒரு குரிசில் நின்றான், -
கடி உலாம் கமல வேலிக் கண் அகன் கான யாற்று,
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான். 13
கான மா மயில்கள் எல்லாம் களி கெடக் களிக்கும் சாயல்
சோனை வார் குழலினார்தம் குழாத்து, ஒரு தோன்றல் நின்றான் -
வான யாறு அதனை நண்ணி, வயின் வயின் வயங்கித் தோன்றும்
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர்த் திங்கள் ஒத்தான். 14
மேவலாம் தகைமைத்து அல்லால், வேழ வில் தடக் கை வீரற்கு
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடுங் கண் ஒர் ஏழை,
பாவைமார் பரந்த கோலப் பண்ணையில் பொலிவாள், வண்ணப்
பூ எலாம் மலர்ந்த பொய்கைத் தாமரை பொலிவது ஒத்தாள். 15
மிடலுடைக் கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன,
சுடர் முகத்து உலவு கண்ணாள், தோகையர் சூழ நின்றாள்;
மடலுடைப் போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ,
கடலிடைத் தோன்றும் மென் பூங் கற்பக வல்லி ஒத்தாள். 16
தேரிடைக் கொண்ட அல்குல், தெங்கிடைக் கொண்ட கொங்கை,
ஆரிடைச் சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்,
வாரிடைத் தனம் மீது ஆட மூழ்கினாள்; வதனம், மை தீர்
நீரிடைத் தோன்றும் திங்கள் நிழல் என, பொலிந்தது அன்றே! 17
நீராடிய பொய்கையும், பூம்புனலும்
மலை கடந்த புயங்கள், மடந்தைமார்,
கலை கடந்து அகல் அல்குல், கடம் படு
முலைகள், தம்தமின் முந்தி நெருங்கலால்,
நிலை கடந்து பரந்தது, நீத்தமே. 18
செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,
மெய் அராகம் அழிய, துகில் நெக,
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே! 19
ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்று அரோ! -
தேனும், நாவியும், தேக்கு, அகில் ஆவியும்,
மீனும், நாறின; வேறு இனி வேண்டுமோ? 20
மிக்க வேந்தர்தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்,
ஒக்க, நீல முகில் தலை ஓடிய
செக்கர் வானகம் ஒத்தது அம் தீம் புனல். 21
காக துண்ட நறுங் கலவைக் களி,
ஆகம் உண்டது, அடங்கலும் நீங்கலால்,
பாகு அடர்ந்த பனிக் கனி வாய்ச்சியர்,
வேகடம் செய் மணி என, மின்னினார். 22
பாய் அரித் திறலான் பசுஞ் சாந்தினால்
தூய பொன் - புயத்துப் பொதி தூக் குறி
மீ அரித்து விளர்க்க ஓர் மெல்லியல்
சேயரிக் கருங் கண்கள் சிவந்தவே. 23
கதம்ப நாள் விரை, கள் அவிழ் தாதொடும்
ததும்பு; பூந் திரைத் தண் புனல் சுட்டதால் -
நிதம்ப பாரத்து ஒர் நேரிழை, காமத்தால்
வெதும்புவாள் உடல், வெப்பம் வெதுப்பவே! 24
தையலாளை ஒர் தார் அணி தோளினான்,
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் -
செய்ய தாமரைச் செல்வியை, தீம் புனல்,
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே! 25
சுளியும் மென் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என,
விளிவு தோன்ற, மிதிப்பன போன்றன -
நளினம் ஏறிய நாகு இள அன்னமே. 26
ஆடவரின் அடங்கா வேட்கை
எரிந்த சிந்தையர், எத்தனை என்கெனோ?
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்,
தெரிந்த கொங்கைகள், செவ்விய நூல் புடை
வரிந்த பொற் கலசங்களை மானவே! 27
தாழ நின்ற ததை மலர்க் கையினால்,
ஆழி மன் ஒருவன் உரைத்தான்; அது,
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்,
தோழி கண்ணில், கடைக்கணிற் சொல்லினாள். 28
தள்ளி ஓடி அலை தடுமாறலால்,
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது,
உள்ளம் நாணி, ஒளிப்பன போன்றவே. 29
நீராடிக் கரையேறி ஆடை ஆபரணங்கள் அணிதல்
இனைய எய்தி இரும் புனல் ஆடிய,
வனை கருங் கழல் மைந்தரும், மாதரும்,
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே,
புனை நறுந் துகில், பூணொடும் தாங்கினார். 30
மேவினார் பிரிந்தார்; அந்த வீங்கு நீர்,
தாவு தண் மதிதன்னொடும் தாரகை
ஓவு வானமும், உள் நிறை தாமரைப்
பூ எலாம் குடி போனதும், போன்றதே. 31
சூரியனின் மறைவும், சந்திரனின் தோற்றமும்
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான்;
தானும், அன்னது காதலித்தான் என,
மீன வேலையை, வெய்யவன் எய்தினான். 32
ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும், தம்
வேற்று மன்னர் தம்மேல் வரும் வேந்தர் போல்,
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன், மீளவும் தோற்றினான். 33
பால காண்டம்
19. உண்டாட்டுப் படலம்
நிலா எங்கும் பரந்து தோற்றுதல்
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்,
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்,
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்,
தண் நிறை நெடு நிலாத் தழைத்தது, எங்குமே. 1
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய், பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது, நெடு நிலா - மதனன் வேண்டவே. 2
ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்,
கூறு பாற்கடலையே ஒத்த; குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த; என் இனி
வேறு நாம் புகல்வது, நிலவின் வீக்கமே? 3
எள்ள அருந் திசைகளோடு யாரும், யாவையும்,
கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால்,
வள் உறை வயிர வாள் மகர கேதனன்
வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே. 4
முத்துப் பந்தரில் தங்கி மகளிர் மதுப் பருகுதல்
தயங்கு தாரகை புரை தரள நீழலும்,
இயங்கு கார் மிடைந்த கா எழினிச் சூழலும்,
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்,
வயங்கு பூம் பந்தரும், மகளிர் எய்தினார். 5
பூக் கமழ் ஓதியர், போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்,
ஆக்கிய அமிழ்து என, அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா, மாந்தல் மேயினார். 6
மீனுடை விசும்பினார், விஞ்சை நாட்டவர்,
ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்,
மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார் -
தேனுடை மலரிடைத் தேன் பெய்தென்னவே. 7
உக்க பால்புரை நறா உண்ட வள்ளமும்,
கைக் கொள் வாள் ஒளிபடச் சிவந்து காட்ட, தன்
மைக் கணும் சிவந்தது; ஓர் மடந்தை வாய்வழிப்
புக்க தேன் அமிழ்தமாய்ப் பொலிந்த போன்றவே. 8
கள் காமத்தை தூண்டுதல்
காமமும் நானமும் ததைந்த, தண் அகில்
தூமம் உண், குழலியர் உண்ட தூ நறை,
ஓம வெங் குழி உகு நெய்யின், உள் உறை
காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே. 9
கள் உண்ட மயக்கத்தால் நிகழ்ந்த தடுமாற்றங்கள்
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோ ? - வாள் நுதல் ஒருத்தி காண,
தடன் ஒக்கும் நிழலை, பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி, தோழி! என்றாள். 10
அச்ச நுண் மருங்குலாள், ஓர் அணங்கு அனாள், அளகபந்தி
நச்சுவேல் கருங் கண் செவ் வாய் நளிர்முகம், மதுவுள் தோன்ற,
பிச்சி நீ என் செய்தாய்? இப் பெரு நறவு இருக்க, வாளா,
எச்சிலை நுகர்தியோ? என்று, எயிற்று அரும்பு இலங்க நக்காள். 11
அறம் எலாம் நகைசெய்து ஏசப் பொரு அரு மேனி வேறு ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள், மணியின் வள்ளத்து, வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய, நிறைந்தது போன்று தோன்ற,
நறவு என, அதனை, வாயின் வைத்தனள்; நாண் உட்கொண்டாள். 12
யாழ்க்கும், இன் குழற்கும், இன்பம் அளித்தன இவை ஆம் என்ன,
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்,
தாள் கருங் குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள், தன்
வாள் கணின் நிழலைக் கண்டாள்; வண்டு என ஓச்சுகின்றாள். 13
களித்த கண் மதர்ப்ப, ஆங்கு ஓர் கனங் குழை, கள்ளின் உள்ளே
வெளிப்படுகின்ற காட்சி வெண் மதி நிழலை நோக்கி,
அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை; அஞ்சல்! என்று, ஆங்கு இனியன உணர்த்துகின்றாள். 14
அழிகின்ற அறிவினாலோ, பேதமையாலோ, ஆற்றில்
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந் தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரைத்துக் கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை, நறவு என, வள்ளத்து ஏற்றாள். 15
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி, வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல், இடை தடுமாறி என்ன,
வன்ன மேகலையை நீக்கி, மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்;
பொன்னரிமாலை கொண்டு, புரி குழல் புனையலுற்றாள். 16
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி,
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி,
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள், வெம்மை நீங்கி,
தண் மதி ஆகின், யானும் தருவென், இந் நறவை என்றாள். 17
எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி, முன்கை
தள்ள, தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும், தேறாள்,
உள்ளத்தின் மயக்கம் தன்னால், உப் புறத்து உண்டு என்று எண்ணி
வள்ளத்தை, மறித்து வாங்கி, மணி நிற இதழின் வைத்தாள். 18
வான் தனைப் பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப,
தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர நாணி,
ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால், ஒருத்தி, உண்டாள். 19
புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஓட,
வள் உறை கழித்த வாள்போல் வசி உற வயங்கு கண்ணாள்,
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள்,
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி, நறவை உண்ணாள். 20
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப, கூன் நுதல்
ஏற்றி, வாள் எயிறுகள் அதுக்கி, இன் தளிர்
மாற்ற அருங் கரதலம் மறிக்கும் - மாது, ஒரு
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே. 21
துடித்த வான் துவர் இதழ்த் தொண்டை, தூ நிலாக்
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி, கண்களால்
வடித்த வெங் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர், புறத்து உகு நறவம் போன்றவே! 22
கனித் திரள் இதழ் பொதி செம்மை கண் புக,
நினைப்பது ஒன்று, உரைப்பது ஒன்று, ஆம் ஒர் நேரிழை,
தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும்
குனித்தது; பனித்தது, குழவித் திங்களே. 23
இலவு இதழ் துவர் விட, எயிறு தேன் உக,
முலைமிசை, கச்சொடு கலையும் மூட்டு அற,
அலை குழல் சோர்தர, அசதி ஆடலால்,
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே. 24
கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை,
அனகனுக்கு அறிவி என்று, அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள், தோழி! நீயும் என்
மனம் எனத் தாழ்தியோ? வருதியோ? என்றாள். 25
மான் அமர் நோக்கி, ஓர் மதுகை வேந்தன்பால்,
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்,
போனவர் போனவர் தொடரப் போக்கினாள்;
தானும், அங்கு, அவர்கள்பின் தமியள் ஏகினாள். 26
விரை செய் பூஞ் சேக்கையின் அடுத்த மீமிசை,
கரை செயா ஆசை ஆம் கடல் உளான், ஒரு
பிரைச மென் குதலையாள், கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள். 27
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து, ஒர் வாணுதல்,
தன் துணைக் கிள்ளையைத் தழீஇ, என் ஆவியை
இன்று போய்க் கொணர்கிலை; என் செய்வாய்? எனக்கு
அன்றிலோடு ஒத்தி என்று அழுது, சீறினாள். 28
வளை பயில் முன்கை ஓர் மயில் அனாள்தனக்கு
இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும்,
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது கயற் கண் ஆலியே. 29
செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல், வெம்மையால்
பற்றலும், அல்குலில் பரந்த மேகலை
அற்று உகு முத்தின் முன்பு, அவனி சேர்ந்தன,
பொன் - தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே. 30
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி, தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகு நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ? எனப் பலவும் பன்னினாள். 31
மாடகம் பற்றினள்; மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் - ஒருத்தி, தன் பாங்கிமார்களோடு
ஊடினது உரைசெயாள்,-உள்ளத்து உள்ளதே. 32
குழைத்த பூங் கொம்பு அனாள் ஒருத்தி, கூடலை
இழைத்தனள்; அது, அவள் இட்ட போது எலாம்
பிழைத்தலும், அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும்
உழைத்தனள்; உயிர்த்தனள், உயிர் உண்டு என்னவே. 33
பந்து அணி விரலினாள் ஒருத்தி, பையுளாள்,
சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள்;
வந்தனன் என, கடை அடைத்து மாற்றினாள்;
சிந்தனை தெரிந்திலம்; சிவந்த, நாட்டமே. 34
உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு, ஒருத்திக்கு; அது, அன்பன் தேர்கிலான்;
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்,
எத்தனை இறந்தன கடிகை, ஈண்டு? என்றாள். 35
விதைத்த மென் காதலின் வித்து, வெஞ் சிறை
இதைப் புனல் நனைத்திட முளைத்ததே என -
பதைத்தனள் ஒருத்தன்மேல், ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும், - பொடித்தன, உரோம ராசியே. 36
பொலிந்த வாள் முகத்தினான், பொங்கி, தன்னையும்
மலிந்த பேர் உவகையால், - மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன், ஓர் நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கி, - தன் புயங்கள் வீங்கினான். 37
ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான்,
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெங் கணை
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம்
தீய்ந்தன நோக்கினன், திசைக்கும் சிந்தையான். 38
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால், -
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர்,
ஆட்டு நீர்க் கலசமே என்னல் ஆன - ஓர்
வாள் தொழில் மைந்தற்கு, ஓர் மங்கை கொங்கையே. 39
பயிர் உறு கிண்கிணி, பரந்த மேகலை,
வயிர வான் பூண் அணி, வாங்கி நீக்கினான்;
உயிர் உறு தலைவன்பால் போக உன்னினாள்;
செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள். 40
ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும் -
ஆலை மென் கரும்பு அனான் ஒருவற்கு, ஆங்கு, ஒரு
சோலை மென் குயில் அனாள் சுற்றி வீக்கிய
மாலையை நிமிர்ந்தில, வயிரத் தோள்களே? 41
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்,
மாரனை நோக்கி, ஓர் மாதை நோக்கினாள்;
காரிகை இவள், அவள் கருத்தை நோக்கி, ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள். 42
சினம் கெழு வாட் கை ஓர் செம்மல்பால், ஒரு
கனங் குழை மயில் அனாள் கடிது போயினாள்;
மனம் குழை நறவமோ? மாலைதான் கொலோ?
அனங்கனோ? யார் கொலோ, அழைத்த தூதரே? 43
தொகுதரு காதற்குத் தோற்ற சீற்றத்து ஓர்
வகிர் மதி நெற்றியாள் மழைக் கண் ஆலி வந்து
உகுதலும், உற்றது என்? என்று, கொற்றவன்
நகுதலும், நக்கனள், நாணும் நீங்கினாள். 44
பொய்த் தலை மருங்குலாள் ஒருத்தி, புல்லிய
கைத்தலம் நீக்கினள், கருத்தின் நீக்கலள்;
சித்திரம் போன்ற அச் செயல், ஒர் தோன்றற்குச்
சத்திரம் மார்பிடைத் தைத்தது ஒத்ததே. 45
மெல்லியல் ஒருத்தி, தான் விரும்பும் சேடியை,
புல்லிய கையினள், போதி தூது எனச்
சொல்லுவான் உறும்; உற, நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து, விம்மினாள். 46
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி, தன் உயிர்
மாறு இலாக் காதலன் செயலை, மற்று ஒரு
நாறு பூங் கோதைபால் நவில நாணுவாள்;
வேறு வேறு உற, சில மொழி விளம்பினாள். 47
கருத்து ஒரு தன்மையது; உயிரும் ஒன்று; தம்
அருத்தியும் அத் துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று எனப்
பொருத்துவர் ஆம் எனப் புல்லினார் அரோ. 48
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி, வேந்தன் வந்து
எதிர்தலும், தன் மனம் எழுந்து முன் செல,
மதிமுகம் கதுமென வணங்கினாள்; அது,
புதுமை ஆதலின், அவற்கு அச்சம் பூத்ததே. 49
துனி வரு நலத்தொடு, சோர்கின்றாள், ஒரு
குனி வரு நுதலிக்கு, கொழுநன் இன்றியே
தனி வரு தோழியும், தாயை ஒத்தனள் -
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே. 50
ஆக்கிய காதலாள் ஒருத்தி, அந்தியில்
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்,
நோக்கினள், நின்றனள்; நுவன்றது ஓர்கிலள்;
போக்கின தூதினோடு, உணர்வும் போக்கினாள். 51
மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள்,
பிறப்பினொடு இறப்பு எனப் பெயரும் சிந்தையாள், -
துறப்ப அரு முகிலிடைத் தோன்றும் மின் என,
புறப்படும்; புகும்; - ஒரு பூத்த கொம்பு அனாள். 52
எழுத அருங் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு
உழுத வெம் புண்களில், வளைக் கை ஒற்றினாள்;
அழுதனள்; சிரித்தனள்; அற்றம் சொல்லினாள்;
தொழுதனள் ஒருத்தியை, தூது வேண்டுவாள்! 53
ஆர்த்தியும், உற்றதும், அறிஞர்க்கு, அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ? என
வேர்த்தனள்; வெதும்பினள்; மெலிந்து சோர்ந்தனள்;
பார்த்தனள், ஒருத்தி தன் பாங்கு அனாளையே. 54
தனங்களின் இளையவர் தம்மின், மும் மடி,
கனம் கனம் இடை இடைக் களிக்கும் கள்வன் ஆய்,
மனங்களில் நுழைந்து, அவர் மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே. 55
மது உண்ட மகளிர் ஆடவர் இடையே நிகழ்ந்த ஊடலும் கூடலும்
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறுங் குஞ்சி மைந்தர்,
துறை அறி கலவிச் செவ்வித் தோகையர் தூசு வீசி,
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் -
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோ தான்? 56
பொன் அருங் கலனும், தூசும், புறத்து உள துறத்தல் வம்போ?
நல் நுதல் ஒருத்தி, தன்பால் அகத்து உள நாணும், நீத்தாள்;-
உன்ன அருந் துறவு பூண்ட உணர்வுடை ஒருவனே போல்,
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே. 57
பொரு அரு மதனன் போல்வான் ஒருவனும், பூவின்மேல் அத்
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும், சேக்கைப் போரில்,
ஒருவருக்கு ஒருவர் தோலார், ஒத்தனர்;- உயிரும் ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார்? 58
கொள்ளைப் போர் வாட்கணாள் அங்கு ஒருத்தி, ஓர் குமரன் அன்னான்
வள்ளத் தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி,
உள்ளத்து, ஆர் உயிர் அன்னாள் மேல் உதைபடும் என்று, நீர் நும்
கள்ளத்தால் புதைத்தி என்னா, முன்னையின் கனன்று மிக்காள். 59
பால் உள பவளச் செவ் வாய், பல் வளை, பணைத்த வேய்த் தோள்,
வேல் உள நோக்கினாள், ஓர் மெல்லியல், வேலை அன்ன
மால் உள சிந்தையான், ஓர் மழை உள தடக் கையாற்கு,
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை, ஈந்தாள். 60
புனத்து உள மயில் அனாள், கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள், ஒருத்தி, நீடிய
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை,
மனத்து உறை காதலே வாகை கொண்டதே. 61
கொலை உரு அமைந்தெனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள், கணவற் புல்குவாள்,
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என, முதுகை நோக்கினாள். 62
குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
சங்குஇனம் ஆர்த்தன; கலையும் சாறின;
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன; -
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே. 63
துனி உறு புலவியைக் காதல், சூழ் சுடர்
பனி என, துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள்,
புனை இழை ஒரு மயில், பொய் உறங்குவாள்,
கனவு எனும் நலத்தினால், கணவற் புல்லினாள். 64
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும், மன்னனும்,
கிட்டிய போது, உடல் கிடைக்கப் புல்லினார்; -
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்; -
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால். 65
அருங் களி மால் கயிறு அனைய வீரர்க்கும்
கருங் குழல் மகளிர்க்கும், கலவிப் பூசலால்,
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது - அம் மாலைக் கங்குலே. 66
சந்திரன் மறைவும், சூரியன் தோற்றமும்
கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என, இந்து நந்தினான்,
படர் திரைக் கருங் கடல் பரமன் மார்பிடைச்
சுடர் மணி அரசு என, இரவி தோன்றினான். 67
மிகைப் பாடல்கள்
அரம்பையரினும், இவர் ஆடல் நன்று எனப்
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி, வான்
நிரம்பிய கண்களை முகிழ்த்து, நீள் நகர்
கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே. 66-1
பால காண்டம்
20. எதிர்கொள் படலம்
தயரதன் பரிவாரங்களுடன் கங்கையைக் கடந்து மிதிலையை சார்தல்
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செங்கோல் வெண்குடை வேந்தர்வேந்தன்,
படா முக மலையில் தோன்றிப் பருவம் ஒத்து அருவி பல்கும்
கடா நிறை ஆறு பாயும் கடலொடும், கங்கை சேர்ந்தான். 1
கப்புடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற,
துப்புடை மணலிற்று ஆகி, கங்கை நீர் சுருங்கிக் காட்ட,
அப்புடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த,
உப்புடைக் கடலும், தெண் நீர் உண் நசை உற்றது அன்றே. 2
ஆண்டு நின்று எழுந்து போகி, அகன் பணை மிதிலை என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நிலக் கிழவன் எய்த,
தாண்டு மா புரவித் தானைத் தண்ணளிச் சனகன் என்னும்
தூண் தரு வயிரத் தோளான் செய்தது சொல்லலுற்றாம்: 3
தயரதனை எதிர்கொள்ள சனகன் சேனை புடை சூழ வரல்
வந்தனன் அரசன் என்ன, மனத்து எழும் உவகை பொங்க,
கந்து அடு களிறும், தேரும், கலின மாக் கடலும், சூழ,
சந்திரன் இரவிதன்னைச் சார்வது ஓர் தன்மை தோன்ற,
இந்திரதிருவன் தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான். 4
கங்கை நீர் நாடன் சேனை, மற்று உள கடல்கள் எல்லாம்
சங்குஇனம் ஆர்ப்ப வந்து சார்வன போல, சார,
பங்கயத்து அணங்கைத் தந்த பாற்கடல் எதிர்வதேபோல்,
மங்கையைப் பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே. 5
தயரதனின் தானைச் சிறப்பு
இலை குலாவு அயிலினான் அனிகம், ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்,
அலகு இல் மா களிறு, தேர், புரவி, ஆள், என விராய்,
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே. 6
தொங்கல், வெண்குடை, தொகைப் பிச்சம், உட்பட விராய்,
எங்கும் விண் புதைதரப் பகல் மறைந்து, இருள் எழ,
பங்கயம், செய்யவும், வெளியவும், பல படத்
தங்கு தாமரையுடைத் தானமே போலுமே. 7
கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்
படி உளாளோ? கடற் படை உளாளோ? பகர்
மடி இலா அரசினான் மார்பு உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம் - முளரியாள். 8
வார்முகம் கெழுவு கொங்கையர் கருங் குழலின் வண்டு
ஏர் முழங்கு அரவம் - ஏழ் இசை முழங்கு அரவமே!
தேர் முழங்கு அரவம் - வெண் திரை முழங்கு அரவமே!
கார் முழங்கு அரவம் - வெங் கரி முழங்கு அரவமே! 9
சூழு மா கடல்களும் திடர் பட, துகள் தவழ்ந்து,
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது அரோ-
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அப்
பூழையூடே பொடித்து, அப்புறம் போயதே! 10
மன் நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறைதர,
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது அரோ-
பொன் இடும், புவி இடும், புனை மணிக் கலன் எலாம்
மின் இடும்; வில் இடும்; வெயில் இடும்; நிலவு இடும்! 11
சனக மன்னன் வருகின்ற வழிக் காட்சிகள்
தா இல் மன்னவர்பிரான் வர, முரண் சனகனும்
ஏ வரும் சிலையினான், எதிர் வரும் நெறி எலாம்,
தூவு தண் சுண்ணமும், கனக நுண் தூளியும்,
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடி எலாம். 12
நறு விரைத் தேனும், நானமும், நறுங் குங்குமச்
செறி அகில் தேய்வையும், மான் மதத்து எக்கரும்,
வெறியுடைக் கலவையும், விரவு செஞ் சாந்தமும்,
செறி மதக் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம். 13
மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும்,
சென்று வந்து உலவும் அச் சிதைவு இலா நிழலின் நேர்,
வென்ற திண் கொடியொடும், நெடு விதானமும் விராய்,
நின்ற வெண்குடைகளின் நிழலுமே - நிழல் எலாம். 14
இரு மன்னர் சேனையும் ஒன்றுடன் ஒன்று கலந்த காட்சி
மாறு இலா மதுகையான் வரு பெருந் தானைமேல்,
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்றபோது,
ஈறு இல் ஓதையினொடும், எறி திரைப் பரவைமேல்
ஆறு பாய்கின்றது ஓர் அமலைபோல் ஆனதே. 15
தயரதன் சனகனைத் தழுவுதல்
கந்தையே பொரு கரிச் சனகனும், காதலொடு
உந்த, ஓத அரியது ஓர் தன்மையோடு, உலகு உளோர்
தந்தையே அனைய அத் தகவினான் முன்பு, தன்
சிந்தையே பொரு, நெடுந் தேரின் வந்து எய்தினான். 16
எய்த, அத் திரு நெடுந் தேர் இழிந்து, இனிய தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க, முன் சேறலும்,
கையின் வந்து, ஏறு என, கடிதின் வந்து ஏறினான்;
ஐயனும், முகம் மலர்ந்து, அகம் உறத் தழுவினான். 17
சனகனோடு தயரதன் மிதிலை நகர் சேர்தல்
தழுவி நின்று, அவன் இருங் கிளையையும், தமரையும்,
வழு இல் சிந்தனையினான், வரிசையின் அளவளாய்,
எழுக முந்துற எனா, இனிது வந்து எய்தினான், -
உழுவை முந்து அரி அனான், எவரினும் உயரினான். 18
இராமனின் வருகை
இன்னவாறு, இருவரும், இனியவாறு ஏக, அத்
துன்னு மா நகரின் நின்று எதிர்வரத் துன்னினான் -
தன்னையே அனையவன், தழலையே அனையவன்,
பொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து அருளினான். 19
தம்பியும், தானும், அத் தானை மன்னவன் நகர்ப்
பம்பு திண் புரவியும், படைஞரும், புடை வர,
செம் பொனின், பசு மணித் தேரின் வந்து எய்தினான் -
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான். 20
யானையோ, பிடிகளோ, இரதமோ, இவுளியோ,
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் -
தானை ஏர் சனகன் ஏவலின், நெடுந் தாதை முன்
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே? 21
இராம இலக்குவரைத் தயரதன் தழுவுதல்
காவியும், குவளையும், கடி கொள் காயாவும் ஒத்து,
ஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உருவொடே,
தேவரும் தொழு கழல் சிறுவன், முன் பிரிவது ஓர்
ஆவி வந்தென்ன வந்து, அரசன் மாடு அணுகினான். 22
அனிகம் வந்து அடி தொழ, கடிது சென்று, அரசர்கோன்
இனிய பைங் கழல் பணிந்து எழுதலும், தழுவினான்;
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன, மலைத்
தனி நெடுஞ் சிலை இறத் தவழ் தடங் கிரிகளே. 23
இளைய பைங் குரிசில் வந்து, அடி பணிந்து எழுதலும்,
தளை வரும் தொடையல் மார்பு உற உறத் தழுவினான்,
களைவு அருந் துயர் அறக் ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான், எவரினும் மிகுதியான். 24
அன்னையர் அடி வணங்குதல்
கற்றை வார் சடையினான் கைக் கொளும் தனு இற,
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அக் குரிசில், பின்
பெற்ற தாயரையும், அப் பெற்றியின் தொழுது, எழுந்து
உற்றபோது, அவர் மனத்து உவகை யார் உரை செய்வார். 25
தன்னை வணங்கிய பரதனை இராமன் தழுவுதல்
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து, ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தர, தொழுது எழும் பரதனை,
பொன்னின் மார்பு உற அணைத்து, உயிர் உறப் புல்லினான் -
தன்னை அத் தாதை முன் தழுவினான் என்னவே. 26
இராமனை இலக்குவனும், பரதனைச் சத்துருக்கனும், வணங்கிப் போற்றுதல்
கரியவன் பின்பு சென்றவன், அருங் காதலின்
பெரியவன் தம்பி, என்று இனையது ஓர் பெருமை அப்
பொரு அருங் குமரர், தம் புனை நறுங் குஞ்சியால்,
இருவர் பைங் கழலும், வந்து, இருவரும் வருடினார். 27
குமரர்கள் நால்வரும் விளங்கிய காட்சி
கோல் வரும் செம்மையும், குடை வரும் தன்மையும்,
சால் வரும் செல்வம் என்று உணர் பெருந் தாதைபோல்,
மேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள், தாம் -
நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார். 28
சேனையுடன் முன் செல்ல இராமனுக்குத் தயரதன் பணித்தல்
சான்று எனத் தகைய செங்கோலினான், உயிர்கள்தாம்
ஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்,
ஆன்ற இச் செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற
தோன்றலை, கொண்டு முன் செல்க! எனச் சொல்லினான். 29
சேனையின் மகிழ்ச்சி
காதலோ! அறிகிலம், கரிகளைப் பொருவினார்;
தீது இலா உவகையும், சிறிதுஅரோ? பெரிதுஅரோ?
கோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்,
தாதையோடு ஒத்தது, அத் தானையின் தன்மையே! 30
தம்பியருடன் இராமன் தேர் மீது சென்ற காட்சி
தொழுது இரண்டு அருகும், அன்புடைய தம்பியர் தொடர்ந்து,
அழிவு இல் சிந்தையின் உவந்து, ஆடல் மாமிசை வர,
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட, எழுந்து,
எழுத அருந் தகையது ஓர் தேரின்மேல் ஏகினான். 31
இராமன் மிதிலை நகர வீதி வந்து சேர்தல்
பஞ்சி சூழ் மெல் அடிப் பாவைமார் பண்ணைசூழ்,
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து, இடை விராய்,
நஞ்சு சூழ் விழிகள் பூ மழையின் மேல் விழ நடந்து,
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான். 32
சூடகம் துயல் வர, கோதை சோர்தர, மலர்ப்
பாடகம் - பரத நூல் பசுர, வெங் கட கரிக்
கோடு அரங்கிட எழும் குவி தடங் கொங்கையார்,
ஆடு அரங்கு அல்லவே - அணி அரங்கு அயல் எலாம். 33
பேதைமார் முதல் கடைப் பேரிளம்பெண்கள்தாம்,
ஏதி ஆர் மாரவேள் ஏவ, வந்து எய்தினார்,
ஆதி வானவர் பிரான் அணுகலால், அணி கொள் கார்
ஓதியார் வீதிவாய் உற்றவாறு உரைசெய்வாம்: 34
பால காண்டம்
21. உலாவியற் படலம்
இராமனைக் காண வந்த மகளிரின் இயல்புகள்
மான் இனம் வருவ போன்றும், மயில் இனம் திரிவ போன்றும்
மீன் இனம் மிளிர வானில் மின் இனம் மிடைவ போன்றும்,
தேன் இனம் சிலம்பி ஆர்ப்ப, சிலம்பு இனம் புலம்பி ஏங்க,-
பூ நனை கூந்தல் மாதர் - பொம்மெனப் புகுந்து, மொய்த்தார். 1
விரிந்து வீழ் கூந்தல் பாரார்; மேகலை அற்ற நோக்கார்;
சரிந்த பூந் துகில்கள் தாங்கார்; இடை தடுமாறத் தாழார்;
நெருங்கினர்; நெருங்கிப் புக்கு, நீங்குமின், நீங்குமின் என்று, -
அருங் கலம் அனைய மாதர் - தேன் நுகர் அளியின் மொய்த்தார். 2
பள்ளத்துப் பாயும் நல் நீர் அனையவர், பானல் பூத்த
வெள்ளத்துப் பெரிய கண்ணார், மென் சிலம்பு அலம்ப, மென் பூத்
தள்ள, தம் இடைகள் நோவ, தமை வலித்து, அவன்பால் செல்லும்
உள்ளத்தைப் பிடித்தும் நாம் என்று, ஓடுகின்றாரும் ஒத்தார். 3
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம்; இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார்;
மண்ணின் நீர் உலந்து, வானம் மழை அற வறந்த காலத்து,
உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும் ஒத்தார். 4
அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும்,
விரைக் கருங் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடந் தோளும், காண, மறுகினில் வீழும் மாதர்,
இரைத்து வந்து, அமிழ்தின் மொய்க்கும் ஈஇனம் என்னல் ஆனார். 5
இராமன் விளைத்த மையல்
வீதிவாய்ச் செல்கின்றான்போல், விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களூடே வாவும் மான் தேரில் செல்வான்,
யாதினும் உயர்ந்தோர், தன்னை, யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத் தானே உறு பொருள் உணர்த்திவிட்டான். 6
எண் கடந்து, அலகு இலாது, இன்று, ஏகுறும் இவன் தேர் என்று,
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை,
மண் கடந்து, அமரர் வைகும் வான் கடந்தானை, தான் தன்
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண்! 7
பயிர் ஒன்று கலையும், சங்கும், பழிப்ப அரு நலனும், பண்பும்,
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும், சிந்தையும், உணர்வும் தேசும்,
வயிரம் செய் பூணும், நாணும், மடனும், தன் நிறையும், மற்றும்
உயிர் ஒன்றும், ஒழிய எல்லாம் உகுத்து, ஒரு தெரிவை நின்றாள். 8
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த,
தழை உறாக் கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறாப் புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து,
மழை உறா மின்னின் அன்ன மருங்குல்போல் நுடங்கி, நின்றாள். 9
பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள் எல்லாம்,
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோ தாம்?
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம், மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போர்க்க, இருண்டதோ? அறிகிலேமால். 10
மாந் தளிர் மேனியாள் ஓர் வாணுதல், மதனன், எங்கும்
பூந் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி,
வேந்தர் கோன் ஆணை நோக்கான்; வீரன் வில் ஆண்மை பாரான்;
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன்? என்றாள். 11
சொல் நலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி,
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் -
பொன்னையும் பொருவு நீராள், புனைந்தன எல்லாம் போக,
தன்னையும் தாங்கலாதாள், துகில் ஒன்றும் தாங்கி நின்றாள். 12
வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர, பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப, உள்ளம் சோர, ஓர் தோகை நின்றாள்,
கொற்றம் செய் கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள் -
மற்று ஒன்றும் காண்கிலாதாள், தமியனோ வள்ளல்? என்றாள். 13
பைக் கருங் கூந்தல், செவ் வாய், வாள் நுதல், ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள், நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன்; போகாவண்ணம், கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன்; தோழி! சேருதும் அமளி என்றாள். 14
தாக்கு அணங்கு அனைய மேனி, தைத்த வேள் சரங்கள் பாராள்;
வீக்கிய கலனும் தூசும் வேறு வேறு ஆனது ஓராள்; -
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி - ஆண்டு, அமலன் மேனி
நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள். 15
களிப்பன, மதர்ப்ப, நீண்டு கதுப்பினை அளப்ப, கள்ளம்
ஒளிப்பன, வெளிப்பட்டு ஓடப் பார்ப்பன, சிவப்பு உள் ஊறி
வெளுப்பன, கறுப்ப, ஆன வேல்கணாள் ஒருத்தி, உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள், வெதுப்பொடு கோயில் புக்காள். 16
கருங் குழல் பாரம், வார் கொள் கன முலை, கலை சூழ் அல்குல்,
நெருங்கின மறைப்ப, ஆண்டு ஓர் நீக்கிடம் பெறாது விம்மும்
பெருந் தடங் கண்ணி, காணும் பேர் எழில் ஆசை தூண்ட,
மருங்குலின் வெளிகளூடே, வள்ளலை நோக்குகின்றாள். 17
இராமன் உலாவந்த வீதிகளின் நிலை
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப, மாதர்
எரிந்த பூண் இனமும், கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும்,
சரிந்த மேகலையும், முத்தும், சங்கமும், தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூந் தொடையும், அன்றி வெள்ளிடை அரிது - அவ் வீதி. 18
இராமனின் மேனி அழகு
தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார். 19
இராமனைக் கண்ட பற்பல மகளிரின் நிலைகள்
அலம்பு பாரக் குழலி ஒர் ஆயிழை,
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட,
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்,
புலம்பு சேடியர் கைமிசைப் போயினாள். 20
அருப்பு மென் முலையாள், அங்கு, ஓர் ஆயிழை,
இருப்பு நெஞ்சினையேனும், ஓர் ஏழைக்கா,
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள். 21
மை தவழ்ந்த கருங் கண் ஒர் வாணுதல்,
செய் தவன் தனித் தேர்மிசைச் சேறல் விட்டு,
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம்கொல்? கனவுகொலோ? என்றாள். 22
மாது ஒருத்தி, மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள், இன் உயிர் சோர்கின்றாள்,
போது அரிக் கண் பொலன் குழைப் பூண் முலைச்
சீதை எத் தவம் செய்தனளோ? என்றாள். 23
பழுது இலா ஒரு பாவை அன்னாள், பதைத்து,
அழுது, வெய்துயிர்த்து, அன்புடைத் தோழியைத்
தொழுது, சோர்ந்து அயர்வாள், இந்தத் தோன்றலை
எழுதலாம்கொல், இம் மன்மதனால்? என்றாள். 24
வண்ண வாய் ஒரு வாணுதல், மானிடற்கு,
எண்ணுங்கால், இவ் இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ? ஒன்று உணர்த்துகின்றேன், இவன்
கண்ணனே! இது கண்டிடும், பின் என்றாள். 25
கனக நூபுரம் கை வளையோடு உக,
மனம் நெகும்படி வாடி, ஓர் வாணுதல்,
அனகன் இந் நகர் எய்தியது, ஆதியில்,
சனகன் செய்த தவப் பயனால் என்றாள். 26
நனி வருந்தி, நலம் குடிபோயிட,
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள்,
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற,
தனி வரும்கொல் கனவின் தலை? என்றாள். 27
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி,
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்;
அனங்கவேள், அது அறிந்தனன்; - அற்றம் தான்,
மனங்கள் போல, முகமும் மறைக்குமே? 28
இணை நெடுங் கண் ஓர் இந்து முகத்தி பூ-
அணை அடைந்து, இடியுண்ட அரா என,
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட,
உணர்வு அழுங்க, உயிர்த்தனள் ஆவியே. 29
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ் வாய்ச்சியர்,
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்,
தேம்பு சிற்றிடைச் சீதையைப்போல், சிறிது
ஏம்பல் பெற்றிலர்; எங்ஙனம் உய்வரே? 30
வேர்த்து, மேனி தளர்ந்து, உயிர் விம்மலோடு
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்,
தீர்த்தன், இத்தனை, சிந்தையின், செங் கணின்,
பார்த்திலான்; உள் பரிவு இலனோ? என்றாள். 31
வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்,
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்,
எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்?
கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான். 32
நான வார் குழல் நாரியரோடு அலால்,
வேனில் வேளொடு, மேல் உறைவார்களோடு,
ஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே. 33
மருள் மயங்கு மடந்தையர்மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே; இவன்
கருணை என்பது கண்டு அறியான்; பெரும்
பருணிதன்கொல்? படு கொலையான்! என்றாள். 34
தொய்யில் வெய்ய முலை, துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல், ஓர் நங்கைதான்,
கையும் மெய்யும் அறிந்திலள்; கண்டவர்,
உய்யும், உய்யும்! எனத் தளர்ந்து ஓய்வுற்றாள். 35
பூக ஊசல் புரிபவர்போல், ஒரு
பாகின் மென்மொழி, தன் மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தர, சேவகன் தேரின்பின்,
ஏகும், மீளும்; இது என் செய்தவாறு அரோ? 36
பெருத்த காதலின் பேதுறு மாதரின்
ஒருத்தி, மற்று அங்கு ஒருத்தியை நோக்கி, என்
கருத்தும் அவ் வழிக் கண்டது உண்டோ ? என்றாள் -
அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ? 37
நங்கை, அங்கு ஒரு பொன், நயந்தார் உய்ய,
தங்கள் இன் உயிரும் கொடுத்தார், தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா
வெங்கண், எங்கண் விளைந்தது, இவற்கு? என்றாள். 38
நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல்,
சேமத்து ஆர் வில் இறுத்தது, தேருங்கால்,
தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைபால்
காமத்தால் அன்று, கல்வியினால் என்றாள். 39
ஆரமும், துகிலும், கலன் யாவையும்,
சோர, இன் உயிர் சோரும் ஒர் சோர்குழல்,
கோர வில்லிமுன்னே எனைக் கொல்கின்ற
மாரவேளின் வலியவர் யார்? என்றாள். 40
வசிட்டனும் கோசிகனும் இருந்த மண்டபத்தை இராமன் சேர்தல்
மாதர் இன்னணம் எய்த்திட, வள்ளல் போய்,
கோது இல் சிந்தை வசிட்டனும், கோசிக
வேத பாரனும் மேவிய மண்டபம்,
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான். 41
முனிவரை வணங்கி இராமன் ஆசனத்து அமர்தல்
திருவின் நாயகன், மின் திரிந்தாலெனத்
துருவு மா மணி ஆரம் துயல்வர,
பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து,
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான். 42
இறைஞ்ச, அன்னவர் ஏத்தினர்; ஏவ, ஓர்
நிறைஞ்ச பூந் தவிசு ஏறி, நிழல்கள்போல்,
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான் அரோ -
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான். 43
தயரதனும் மண்டபம் வந்து அமர்தல்
ஆன மா மணி மண்டபம் அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் -
மீன் எலாம் தன் பின் வர, வெண்மதி,
வான் நிலா உற வந்தது மானவே. 44
வந்து, மா தவர் பாதம் வணங்கி, மேல்
சிந்து தே மலர் மாரி சிறந்திட,
அந்தணாளர்கள் ஆசியொடு, ஆதனம்,
இந்திரன் முகம் நாணுற, ஏறினான். 45
கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்கள்,
சிங்களாதிபர், சேரலர், தென்னவர்,
அங்க ராசர், குலிந்தர், அவந்திகர்,
வங்கர், மாளவர், சோளர் மராடரே, 46
மான மாகதர், மச்சர், மிலேச்சர்கள்,
ஏனை வீர இலாடர், விதர்ப்பர்கள்,
சீனர், தெங்கணர், செஞ் சகர், சோமகர்,
சோனகேசர், துருக்கர், குருக்களே, 47
ஏதி யாதவர், ஏழ் திறல் கொங்கணர்,
சேதி ராசர், தெலுங்கர், கருநடர்,
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார். 48
மங்கையர் சாமரை வீசுதலும், பல்லாண்டு கூறுதலும்
தீங் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
தாங்கு சாமரை, மாடு தயங்குவ:
ஓங்கி ஓங்கி வளர்ந்து, உயர் கீர்த்தியின்
பூங் கொழுந்து பொலிவன போன்றவே. 49
சுழலும் வண்டும், மிஞிறும், சுரும்பும், சூழ்ந்து
உழலும் வாச மது மலர் ஓதியர்,
குழலினோடு உற, கூறு பல்லாண்டு ஒலி,
மழலை யாழ் இசையோடு மலிந்தவே. 50
வெண்குடை விளங்கிய காட்சி
வெங் கண் ஆனையினான் தனி வெண்குடை,
திங்கள், தங்கள் குலக் கொடிச் சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து, அருள்
பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றதே. 51
தயரதன் படைப் பெருக்கம்
ஊடு பேர்விடம் இன்றி, ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால்,
ஆடல் மா மத ஆனைச் சனகர் கோன்
நாடு எலாம், ஒரு நல் நகர் ஆயதே. 52
சனகனின் உபசரிப்பு
ஒழிந்த என் இனி? ஒண்ணுதல் தாதைதன்
பொழிந்த காதல் தொடர, பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின், அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே. 53
மிகைப் பாடல்கள்
தையல், சிற்றிடையாள், ஒரு தாழ்குழல்,
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் -
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே? 19-1
பால காண்டம்
22. கோலம் காண் படலம்
சீதையை அழைத்துவருமாறு வசிட்டன் கூறுதல்
தேவியர் மருங்கு சூழ, இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்றென்ன உவந்த , அரசு இருந்தகாலை,
தா இல் வெண் கவிகைச் செங்கோல் சனகனை இனிது நோக்கி,
மா இயல் நோக்கினாளைக் கொணர்க! என, வசிட்டன் சொன்னான். 1
சனகன் ஏவிய மாதர் சென்று, சீதையின் தாதியர்க்குச் செய்தி அறிவித்தல்
உரை செய, தொழுத கையன், உவந்த உள்ளத்தன், பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு என்று, ஆயிழையவரை ஏவ,
கரை செயற்கு அரிய காதல் கடாவிட, கடிது சென்றார்,
பிரைசம் ஒத்து இனிய சொல்லார், பேதை தாதியரில் சொன்னார். 2
தாதியர் சீதைக்கு அழகு செய்தல்
அமிழ் இமைத் துணைகள், கண்ணுக்கு அணி என அமைக்குமாபோல்,
உமிழ் சுடர்க் கலன்கள், நங்கை உருவினை மறைப்பது ஓரார்,
அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார் -
இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ! 3
கண்ணன் தன் நிறம், தன் உள்ளக் கருத்தினை நிறைத்து, மீதிட்டு,
உள்நின்றும் கொடிகள் ஓடி, உலகு எங்கும் பரந்ததன்ன
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து, மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின், மென் பூஞ் சிகழிகைக் கோதை வேய்ந்தார். 4
விதியது வகையால் வான மீன் இனம் பிறையை வந்து
கதுவுறுகின்றதென்னக் கொழுந்து ஒளி கஞலத் தூக்கி,
மதியினைத் தந்த மேகம் மருங்கு நா வளைப்பதென்ன,
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார். 5
வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர, தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக் கொண்டு அகன்ற காளை அல்லன்கொல்? ஆம்கொல்? என்பாள்
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார். 6
கோன் அணி சங்கம் வந்து குடியிருந்தனைய கண்டத்து,
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார்;
மான் அணி நோக்கினார் தம் மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது, தனக்கு அணி யாது மாதோ? 7
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?
பூண் நிலாம் முலைமேல் ஆர முத்தை - யான் புகல்வது என்னோ? 8
மொய் கொள் சீறடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள,
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த; - என்றால்,
செய்யவர்ச் சேர்ந்துளாரும் செய்யராய்த் திகழ்வர் அன்றே? 9
கொமை உற வீங்குகின்ற குலிகச் செப்பு அனைய கொங்கைச்
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு,
இமை உற இமைக்கும் செங் கேழ் இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின், ஒப்பு ஆகும் அன்றே. 10
தலை அவிழ் கோதை ஓதிச் சானகி தளிர்க்கை என்னும்
முளரிகள், இராமன் செங் கைமுறைமையின் தீண்ட நோற்ற;
அளியன; கங்குல் போதும் குவியல ஆகும் என்று, ஆங்கு,
இள வெயில் சுற்றியன்ன எரி மணிக் கடகம் இட்டார். 11
சில் இயல் ஓதி கொங்கைத் திரள் மணிக் கனகச் செப்பில்,
வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தின் தீட்டி,
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன, யார்க்கும்,
இல்லை, உண்டு, என்ன நின்ற இடையினுக்கு இடுக்கன் செய்தார். 12
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல்-
புறம் செய் மேகலையின் தாழத் தாரகைச் சும்மை பூட்டி,
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சேயொளியின் சேந்து
கறங்குபு திரிய, தாமும் கண் வழுக்குற்று நின்றார். 13
ஐய ஆம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய, ஆடல்
பை அரவு அல்குலாள்தன் பஞ்சு இன்றிப் பழுத்த பாதம்;
செய்ய பூங் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு, சால
நொய்யவே; நொய்ய என்றோ, பலபட நுவல்வது? அம்மா! 14
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன,
செஞ்செவே நீண்டு, மீண்டு, சேயரி சிதறி, தீய
வஞ்சமும் களவும் இன்றி, மழை என மதர்த்த கண்கள்,
அஞ்சன நிறமோ? அண்ணல் வண்ணமோ? அறிதல் தேற்றாம். 15
மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த, முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல், அனையது ஏய்ப்ப,
வையக மடந்தைமார்க்கும், நாகர் கோதையர்க்கும், வானத்
தெய்வ மங்கையர்க்கும், எல்லாம், திலகத்தைத் திலகம் செய்தார். 16
சின்னப் பூ, செருகும் மென் பூ, சேகரப் போது, கோது இல்
கன்னப் பூ,கஞல, மீது, கற்பகக் கொழுந்து மான
மின்ன, பூஞ் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப,
புன்னைப் பூந் தாது மானும் பொற் பொடி அப்பிவிட்டார் 17
தோழியர் சீதைக்கு அயினி சுற்றி காப்பு இடுதல்
நெய் வளர் விளக்கம் ஆட்டி, நீரொடு பூவும் தூவி
தெய்வமும் பராவி, வேத பாரகர்க்கு ஈந்து, செம் பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி, ஆய் நிற அயினி சுற்றி
கை வளர் மயில் அனாளை வலம் செய்து, காப்பும் இட்டார். 18
மங்கையர் சீதையின் அழகைக் கண்டு மயங்கி நிற்றல்
கஞ்சத்துக் களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல,
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி,
தம் சொற்கள் குழறி, தம் தம் தகை தடுமாறி நின்றார் -
மஞ்சர்க்கும், மாதரார்க்கும், மனம் என்பது ஒன்றே அன்றோ? 19
இழை குலாம் முலையினாளை, இடை உவா மதியின் நோக்கி,
மழை குலாவு ஓதி நல்லார், களி மயக்குற்று நின்றார் -
உழை குலாம் நயனத்தார் மாட்டு, ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால், யாவரே ஆற்றவல்லார்? 20
சங்கம் கை உடைமையாலும், தாமரைக் கோயிலாலும்,
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்றென்ன,
அங்கு அங்கே தோன்றலாலும், அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்; நாம் இனிப் புகல்வது என்னோ? 21
சீதை மண்டபம் அடைதல்
பரந்த மேகலையும், கோத்த பாத சாலகமும், நாகச்
சிரம் செய் நூபுரமும், வண்டும், சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப,
புரந்தரன் கோற்கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்தென்ன,
வரம்பு அறு சும்மைத் தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார். 22
சிந்தொடு, குறளும், கூனும், சிலதியர் குழாமும், தெற்றி
வந்து, அடி வணங்கிச் சுற்ற, மணி அணி விதான நீழல்,
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன,
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள். 23
வல்லியை உயிர்த்த நிலமங்கை, இவள் பாதம்
மெல்லிய, உறைக்கும் என அஞ்சி, வெளி எங்கும்,
பல்லவ மலர்த் தொகை பரப்பினள் என, தன்
நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட, நடந்தாள். 24
தொழும் தகைய மென் நடை தொலைந்து, களி அன்னம்,
எழுந்து, இடைவிழுந்து, அயர்வது என்ன, அயல் எங்கும்
கொழுந்துடைய சாமரை குலாவ, ஓர் கலாபம்
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என, வந்தாள். 25
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம்,
கண் மணி எனத் தகைய கன்னி எழில் காண,
அண்ணல் மரபின் சுடர், அருத்தியொடு தான் அவ்
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள். 26
கற்றை விரி பொற் சுடர் பயிற்றுறு கலாபம்,
சுற்றும் மணி புக்க இழை மிக்கு, இடை துவன்றி,
வில் தழை, வாள் நிமிர, மெய் அணிகள் மின்ன,
சிற்றிடை நுடங்க, ஒளிர் சீறடி பெயர்த்தாள். 27
பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள். 28
அனைவரும் சீதையின் அழகை ஒருங்கே பார்த்தல்
சமைத்தவரை இன்மை மறைதானும் எனலாம், அச்
சமைத் திரள், முலைத் தெரிவை தூய் வடிவு கண்டார்,
அமைத் திரள் கொள் தோளியரும், ஆடவரும் எல்லாம்,
இமைத்திலர், உயிர்த்திலர்கள், சித்திரம் எனத் தாம். 29
சீதையைக் கண்ட இராமனது நிலை
அன்னவளை, அல்லள் என, ஆம் என, அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து, ஆண்டு,
இன் அமிழ்து எழ, களி கொள் இந்திரனை ஒத்தான். 30
நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்குற்று,
அறத்தின் விளைவு ஒத்து, முகடு உந்தி, அருகு உய்க்கும்,
நிறத் துவர் இதழ்க் குயில் நினைப்பினிடை அல்லால்,
புறத்தும் உளதோ? என மனத்தொடு புகன்றான். 31
வசிட்ட முனிவனின் மகிழ்ச்சி
எங்கள் செய் தவத்தினில், இராமன் என வந்தோன்,
சங்கினொடு சக்கரமுடைத் தனி முதற் பேர்
அம் கண் அரசு; ஆதலின், அவ் அல்லி மலர் புல்லும்
மங்கை இவள் ஆம் என, வசிட்டன் மகிழ்வுற்றான். 32
துன்று புரி கோதை எழில் கண்டு, உலகு சூழ்வந்து
ஒன்று புரி கோலொடு தனித் திகிரி உய்ப்பான்,
என்றும், உலகு ஏழும், அரசு எய்தி உளனேனும்,
இன்று திரு எய்தியது; இது என்ன வயம்! என்றான். 33
சீதையைத் தெய்வம் என நல்லோர் கைகூப்புதல்
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்,
வையம் நுகர் கொற்றவனும், மா தவரும், அல்லார்
கைகள் தலைபுக்கன; கருத்துளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற; உடல் சிந்தை வசம் அன்றோ? 34
வணங்கற்கு உரியாரை முறைப்படி வணங்கி, சீதை தந்தையின் அருகில் இருத்தல்
மா தவரை முற்கொள வணங்கி, நெடு மன்னன்
பாத மலரைத் தொழுது, கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட தவிசில், தனி இருந்தாள் -
போதினை வெறுத்து, அரசர் பொன் மனை புகுந்தாள். 35
விசுவாமித்திரனின் வியப்பு
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்;
பச்சை மலை ஒத்த படிவத்து, அடல் இராமன்,
நச்சுடை வடிக் கண் மலர் நங்கை இவள் என்றால்,
இச் சிலை கிடக்க; மலை ஏழையும் இறானோ? 36
சீதை இராமனைக் கடைக்கண்ணால் கண்டு களித்தல்
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்,
மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
ஐயனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
கை வளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள். 37
கருங் கடை நெடுங் கண் ஒளி யாறு நிறை கண்ணப்
பெருங் கடலின் மண்ட, உயிர் பெற்று இனிது உயிர்க்கும்,
அருங் கலன் அணங்கு - அரசி, ஆர் அமிழ்து அனைத்தும்,
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து, உடல் தடித்தாள். 38
கணங் குழை, கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்,
வணங்கு வில் இறுத்தவன் எனத் துயர் மறந்தாள்;
அணங்குறும் அவிச்சை கெட, விச்சையின் அகம்பாடு
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள். 39
தயரதன் கோசிகனிடம் மண நாள் குறித்து வினாவுதல்
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை, மேலோய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம்,
எல்லையில் நலத்த, பகல் என்று? உரைசெய்க! என்றான். 40
நாளை திருமண நாள் என கோசிக முனிவன் கூறல்
வாளை உகள, கயல்கள் வாவி படி மேதி
மூளை முதுகைக் கதுவ, மூரிய வரால் மீன்
பாளை விரியக் குதி கொள் பண்ணை வள நாடா!
நாளை என, உற்ற பகல் நல் தவன் உரைத்தான். 41
தயரதன் முதலிய யாவரும் தத்தம் இருப்பிடம் செல்ல, சூரியனும் மறைதல்
சொற்ற பொழுதத்து, அரசர் கைதொழுது எழ, தன்
ஒற்றை வயிரச் சுரி கொள் சங்கின் ஒலி பொங்க,
பொன் - தட முடிப் புது வெயில் பொழிதர, போய்,
நல் தவர் அனுச்சை கொடு, நல் மனை புகுந்தான். 42
அன்னம் அரிதின் பிரிய, அண்ணலும் அகன்று, ஓர்
பொன்னின் நெடு மாட வரை புக்கனன்; மணிப் பூண்
மன்னவர் பிரிந்தனர்கள்; மா தவர்கள் போனார்;
மின்னு சுடர் ஆதவனும், மேருவில் மறைந்தான். 43
பால காண்டம்
23. கடிமணப் படலம்
சனகனது உபசரிப்பில் யாவரும் மகிழ்ந்திருத்தல்
இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண,
கடம் படு களிற்று அரசர் ஆதி, இடை கண்டோர்,
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள் காறும்,
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார். 1
இரவில் காம வேதனை கொண்ட சீதையின் சிந்தையும், சொல்லும்
தேட அரு நலத்த புனல் ஆசை தெறலுற்றார்,
மாடு ஓர் தடம் உற்று, அதனை எய்தும் வகை காணார்,
ஈடு அழிவுற, தளர்வொடு ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும், அந் நிலையள் ஆனாள். 2
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா,
சுரவே புரிவார் உளரோ? கதிரோன்
வரவே, எனை ஆள் உடையான் வருமே! -
இரவே! - கொடியாய், விடியாய் எனுமால், 3
கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ? 4
கனை ஏழ் கடல்போல், கரு நாழிகைதான்,
வினையேன் வினையால் விடியாவிடின், நீ
தனியே பறவாய்; தகவு ஏதும் இலாய் -
பனைமேல் உறைவாய்!-பழி பூணுதியோ? 5
அயில் வேல் அனல் கால்வன ஆம்; நிழல் ஆய்,
வெயிலே என நீ விரிவாய்; - நிலவே!
செயிர் ஏதும் இலார், உடல் தேய்வு உறுவார்,
உயிர் கோள் உறுவார், உளரோ? உரையாய்! 6
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்,
மின் தொத்து, நிலா நகை, வீழ் மலயக்
குன்றில், குல மா முழையில், குடிவாழ்
தென்றற் புலியே! இரை தேடுதியோ? 7
தெருவே திரிவார், ஒரு சேவகனார்,
இரு போதும் விடார்; இது என்னை கொலாம்?
கரு மா முகில் போல்பவர், கன்னியர்பால்
வருவார் உளரோ, குல மன்னவரே? 8
தெருளா வினை தீயவர் சேர் நரகோ?
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ?
கருள் ஆர் கடலோ? கரை காண்பு அரிதால்! -
இருளானதுதான் - எனை ஊழிகொலாம்? 9
பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே? 10
இடையே வளை சோர, எழுந்து, விழுந்து,
அடல் ஏய் மகனன் சரம் அஞ்சினையோ?
உடல் ஓய்வுற, நாளும், உறங்கலையால்! -
கடலே! - உரை! நீயும், ஓர் கன்னிகொலாம்? 11
இரவில் இராமனது நிலை
என, இன்னன பன்னி, இருந்து உளைவாள்,
துனி உன்னி, நலம் கொடு சோர்வுறுகால்,
மனைதன்னில், வயங்குறும் வைகு இருள்வாய்,
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்: 12
முன் கண்டு, முடிப்ப அரு வேட்கையினால்,
என் கண் துணைகொண்டு, இதயத்து எழுதி,
பின் கண்டும், ஓர் பெண் கரை கண்டிலெனால்; -
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே? 13
திருவே அனையாள் முகமே! தெரியின்,
கருவே, கனியே விளை காம விதைக்கு
எருவே! மதியே! இது என் செய்தவா?
ஒருவேனொடு நீ உறவாகலையோ? 14
கழியா உயிர் உந்திய காரிகைதன்
விழி போல வளர்ந்தது; வீகில தால்;
அழி போர் இறைவன் பட, அஞ்சியவன்
பழி போல, வளர்ந்தது - பாய் இருளே! 15
நினையாய் ஒரு கால்; நெடிதோ நெறி தான்?
வினவாதவர் பால், விடை கொண்டிலையோ? -
புன மான் அனையாரொடு போயின என்
மனனே! - எனை நீயும் மறந்தனையோ? 16
தன் நோக்கு எரி கால், தகை, வாள், அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம்;
என் நோக்கினும், நெஞ்சினும், என்றும் உளார்
மென் நோக்கினதே - கடு வல் விடமே! 17
கல், ஆர் மலர் சூழ் கழி, வார் பொழிலோடு,
எல்லாம் உள ஆயினும், என் மனமோ -
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே! 18
மண முரசு அறையச் சனகன் கட்டளையிடுதல்
மானவர் பெருமானும், மண நினைவினன் ஆக,
தேன் அமர் குழலாள்தன் திருமணவினை, நாளை;
பூ நகு மணி வாசம், புனை நகர் அணிவீர்! என்று
ஆனையின்மிசை, யாணர், அணி, முரசு அறைக! என்றான். 19
நகர மாந்தர் மகிழ்ந்து நகரை அணி செய்தற்கு விரைதல்
முரசு அறைதலும், மான முதியவரும், இளையோரும்,
விரை செறி குழலாரும், விரவினர் விரைகின்றார்;
உரை செறி கிளையோடும், உவகையின் உயர்கின்றார்;
கரை தெரிவு அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார். 20
சூரியன் ஒளி வீசி விளங்குதல்
அஞ்சன ஒளியானும், அலர்மிசை உறைவாளும்,
எஞ்சல் இல் மனம், நாளைப் புணர்குவர் எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறி, தினகரன், ஒரு தேர்மேல்,
மஞ்சனை அணி கோலம் காணிய என, வந்தான். 21
நகர மாந்தர் அணிசெய்த வகை
தோரணம் நடுவாரும், தூண் உறை பொதிவாரும்,
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும்,
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்,
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும், 22
அன்ன மென் நடையாரும், மழ விடை அனையாரும்,
கன்னி நல் நகர், வாழை கமுகொடு நடுவாரும்,
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்,
பொன் அணி அணிவாரும், மணி அணி புனைவாரும், 23
சந்தனம், அகில், நாறும் சாந்தொடு, தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும், செழு மலர் சொரிவாரும்,
இந்திரதனு நாண, எரி மணி நிரை மாடத்து,
அந்தம் இல் விலை ஆரக் கோவைகள் அணிவாரும், 24
தளம் கிளர் மணி கால, தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளங் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம், எங்கும்,
விளிம்பு பொன் ஒளி நாற, வெயிலொடு நிலவு ஈனும்,
பளிங்குடை உயர் திண்ணைப் பத்தியின் வைப்பாரும், 25
மந்தர மணி மாட முன்றிலின் வயின் எங்கும்,
அந்தம் இல் ஒளி முத்தின், அகல் நிரை ஒளி நாறி,
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன,
பந்தரின் நிழல் வீச, படர் வெயில் கடிவாகும், 26
வயிரம் மின் ஒளி ஈனும், மரகத மணி வேதி,
செயிர் அற ஒளிர் தீபம் சில தியர் கொணர்வாரும்,
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி, மதி தோயும்
எயிலினில் நடுவாரும், எரி அகில் இடுவாரும், 27
பண்டியில் நிறை வாசப் பனிமலர் கொணர்வாரும்,
தண்டலை இலையோடு, கனி பல தருவாரும்,
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்,
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும், 28
கலவைகள் புனைவாரும், கலை நல தெரிவாரும்,
மலர் குழல் மலைவாரும், மதிமுகம் மணி ஆடித்
திலகம் முன் இடுவாரும், சிகழிகை அணிவாரும்,
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும், 29
தப்பின மணி காசும், சங்கமும், மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும், ஊடலின் உகு போதும்,
துப்பு உறழ் இள வாசச் சுண்ணமும், உதிர் தாதும்,
குப்பைகள் என, வாரிக்கொண்டு அயல் களைவாரும், 30
மன்னவர் வருவாரும், மறையவர் நிறைவாரும்,
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்,
சென்னியர் திரிவாரும், விறலியர் செறிவாரும்,
கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும். 31
கணிகையர் தொகுவாரும், கலை பல பயில்வாரும்,
பணி அணி இன முத்தம், பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று அறைதலின், உகும் அம் பொன்
மணி மலை தொகுமன்னன், வாயிலின் மிடைவாரும், 32
கேடகம் வெயில் வீச, கிளர் அயில் நிலவு ஈன,
கோடு உயர் நெடு விஞ்சைக் குஞ்சரம் அது போல,
ஆடவர் திரிவாரும், அரிவையர் களி கூர,
நாடகம் நவில்வாரும், நகை உயிர் கவர்வாரும், 33
கதிர் மணி ஒளி கால, கவர் பொருள் தெரியாவாறு,
எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின், இளையோரும்,
மது விரி குழலாரும், மதிலுடை நெடு மாடம்
அது, இது, என ஓராது, அலமரல் உறுவாரும், 34
தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும், 35
முத்து அணி அணிவாரும், மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம் பொற் பல கலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்,
சித்திர நிரை தோயும் செந் துகில் புனைவாரும், 36
விடம் நிகர் விழியாரும், அமுது எனும் மொழியாரும்,
கிடை புரை இதழாரும், கிளர் நகை வெளியாரும்,
தட முலை பெரியாரும், தனி இடை சிறியாரும்,
பெடை அன நடையாரும், பிடி என வருவாரும், - 37
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும், கருதுதல் அரிது அம்மா!
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது - அம் மண நாளே. 38
மண மண்டபத்திற்குத் தயரதன் வருதல்
கரை தெரிவு அரியது, கனகம் வேய்ந்தது,
வரை என உயர்ந்தது, மணியின் செய்தது,
நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்,
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான். 39
வெண்குடை இள நிலா விரிக்க, மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட,
பண் குடை வண்டினம் பாட, ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப, - ஏகினான். 40
மங்கல முரசுஇனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை, பேரிகை,
பொங்கின; மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே. 41
பரந்த தேர், களிறு, பாய் புரவி, பண்ணையில்
தரம் தரம் நடந்தன; தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்,
புரந்தரன் புடை வரும், அமரர் போன்றனர். 42
தயரதன், சனகன், முதலியோர் ஆசனத்து அமர்தல்
அனையவன், மண்டபம் அணுகி, அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்;
முனிவரும், மன்னரும், முறையின் ஏறினார்;
சனகனும், தன் கிளை தழுவ, ஏறினான். 43
திருமண மண்டபத்தின் தோற்றம்
மன்னரும், முனிவரும், வானுளோர்களும்,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே. 44
புயல் உள, மின் உள, பொரு இல் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள;
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்,
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே. 45
எண் தவ முனிவரும், இறைவர் யாவரும்,
அண்டரும், பிறரும், புக்கு அடங்கிற்று; ஆதலால்,
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே. 46
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற,
விராவின, குவிந்தன, விளம்ப வேண்டுமோ?
அரா-அணை துறந்து போந்து, அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம் அரோ: 47
இராமன் நீராடி மணக்கோலம் புனைதல்
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்,
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்,
கங்கையே முதலவும், கலந்த நீரினால்,
மங்கல, மஞ்சனம் மரபின் ஆடியே, 48
கோது அறு தவத்துத் தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் -
காது இயல், கயல் விழிக் கன்னிமார்களை,
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே. 49
அழி வரு தவத்தினோடு, அறத்தை ஆக்குவான்,
ஒழிவு அருங் கருணை ஓர் உருவு கொண்டென,
எழுத அரு வடிவு கொண்டு, இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு என, கலவை சாத்தியே; 50
மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை,
பொங்கு இருங் கருங் கடல் பூத்தது ஆம் என,
செங்கிடைச் சிகழிகை, செம் பொன் மாலையும்,
தொங்கலும், துயல்வர, சுழியம் சூடியே; 51
ஏதாம் இல் இரு குழை, இரவு, தன் பகல்,
காதல் கண்டு உண்ர்ந்தன, கதிரும் திங்களும்,
சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற,
தூது சென்று, உரைப்பன போன்று தோன்றவே; 52
கார் விடக் கறையுடை, கணிச்சி, வானவன்
வார் சடைப் புடையின், ஓர் மதி மிலைச்ச, தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என,
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே; 53
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி,
மொய்க் கருங் குழலினாள், முறுவல் உள்ளுறப்
புக்கன நிறைந்து, மேல் பொடிப்ப போன்றவே. 54
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி அழலின் தோன்றலால்,
சுந்தரத் தோள் அணி வலயம், தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே. 55
கோவையின் பெரு வட முத்தம் கோத்தன,
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ,
மூவகை உலகிற்கும் முதல்வன் ஆம் என,
ஏ வரும் பெருங் குறி இட்ட போன்றவே. 56
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து, எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி, கற்பகம்
ஈண்டு, தன் கொம்பிடை ஈன்றது ஆம் என,
காண் தகு தடக் கையில், கடகம் மின்னவே; 57
தேனுடை மலர்மகள் திளைக்கும் மார்பினில்,
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்,
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து,
வான் இடு வில் என, வயங்கிக் காட்டவே; 58
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என, ஒளி திகழ் உத்தரீயம்தான்,
தணிவு அருங் கருணையான் கழுத்தில் சாத்திய,
மணி உமிழ் கதிர் என, மார்பில் தோன்றவே; 59
மேவ அருஞ் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்,
ஏவரும் - தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு என,
தேவரும், முனிவரும், தெரிக்கலா முதல்
மூவரும், தான் என, முடித்தது ஒத்ததே. 60
சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க, மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்,
மற்றும் ஓர் அண்டமும், அயனும், வந்து எழ,
பொன் தடந் தாமரை பூத்த போன்றதே. 61
மண்ணுறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண்ணுறு கருங் கடல் அதனை, கை வளர்
தண் நிறப் பாற்கடல் தழீஇயது ஆம் என,
வெண் நிறப் பட்டு, ஒளி விளங்கச் சாத்தியே; 62
சலம் வரு தரளமும், தயங்கு நீலமும்,
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்,
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என, வாளும் வீக்கியே; 63
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச் சுடரும் சுற்றிட,
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் என, தொங்கல் நாற்றியே; 64
காசொடு கண் நிழல் கஞல, கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின், மகரவாய் விளங்கும் வாள் முகம்,
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே; 65
இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு? என,
தனித்தனி தடுப்பன போலும் சால்பின;
நுனிப்ப அரு நுண் வினைச் சிலம்பு நோன் கழல்,
பனிப் பருந் தாமரைப் பாதம் பற்றவே; 66
இன்னணம் ஒளிர்தர, இமையவர்க்கு எலாம்,
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் -
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான். 67
முப் பரம் பொருளிற்குள் முதலை, மூலத்தை,
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை,
அப்பனை, அப்பினுள் அமிழ்தை, தன்னையே
ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ? 68
இராமன் தேரில் ஏறி வரும் காட்சி
பல் பதினாயிரம் பசுவும், பைம் பொனும்,
எல்லை இல் நிலனொடு, மணிகள் யாவையும்,
நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான் மறைச்
செல்வர்கள் வழுத்துற, தேர் வந்து ஏறினான். 69
பொன் திரள் அச்சது; வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது; வயிரத்தின் உற்ற தட்டது;
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது;
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒப்பதே. 70
நூல் வரும் தகையன, நுனிக்கும் நோன்மைய,
சால் பெருஞ் செவ்விய, தருமம் ஆதிய
நாலையும் அனையன, புரவி நான்கு, ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே. 71
அனையது ஓர் தேரினில், அருணன் நின்றெனப்
பனி வரு மலர்க்கண் நீர்ப் பரதன் கோல் கொள,
குனி சிலைத் தம்பிபின் கூட, ஏனையன்
இனிய பொற் கவரி கால் இயக்க, ஏகினான். 72
மண்ணவரும் விண்ணவரும் மகிழ்தல்
அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக -
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே! 73
வரம்பு அறும் உலகினை வலிந்து, மாய்வு இன்றி,
திரம் பயில் அரக்கர்தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது எனக் கொடு, நிறைந்த தேவரும்,
அரம்பையர் குழாத்தொடும், ஆடல் மேயினார். 74
சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்;
விரிந்து ஒளிர் காசு, பொன் தூசு, வீசினர்;
பரிந்தனர்; அழகினைப் பருகினார் கொலோ?
தெரிந்திலம், திருநகர் மகளிர் செய்கையே! 75
வள்ளலை நோக்கிய மகளிர், மேனியின்
எள்ள அரும் பூண் எலாம் இரிய, நிற்கின்றார் -
உள்ளன யாவையும் உதவி, பூண்டவும்
கொள்ளையிற் கொள்க! எனக் கொடுக்கின்றாரினே. 76
மண்டபம் சேர்ந்து இராமன் முனிவரையும் தந்தையையும் தொழுது அமர்தல்
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்,
வெஞ் சினத் தனுவலானும், மேரு மால் வரையில் சேரும்
செஞ் சுடர்க் கடவுள் என்ன, தேரிடைச் சென்று சேர்ந்தான். 77
இரதம் ஆண்டு இழிந்த பின்னர், இரு மருங்கு, இரண்டு கையும்,
பரதனும் இளைய கோவும், பரிந்தனர் ஏந்த, பைந் தார்
வரதனும் எய்தி, மை தீர் மா தவர்த் தொழுது, நீதி
விரத மெய்த் தாதை பாதம் வணங்கி, மாடு இருந்த வேலை, 78
சீதை மண்டபத்துள் வந்த காட்சி
சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர் செம் பொன் கொம்பர்,
முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி, மீள
மலையிடை உதிக்கின்றாள்போல், மண்டபம் அதனில் வந்தாள். 79
திருமண மாட்சி காண, வானவர் எல்லாம் வானத்து வருதல்
நன்றி வானவர் எலாம், இருந்த நம்பியை,
துன்று இருங் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும், இன்று உடைத்து அழகு என்றார் அரோ. 80
ஒலி கடல் உலகினில், உம்பர், நாகரில்,
பொலிவது மற்று இவள் பொற்பு; என்றால், இவள்
மலிதரு மணம் படு திருவை, வாயினால்,
மெலிதரும் உணர்வினேன், என் விளம்புகேன்? 81
இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ்
சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன்; மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன்; - அழகு காணவே. 82
வசிட்டன் திருமணச் சடங்கைத் துவங்குதல்
நீந்த அருங் கடல் என, நிறைந்த வேதியர்,
தோய்ந்த நூல் மார்பினர், சுற்ற, தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு, வசிட்டன், மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான். 83
தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். 84
சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். 85
இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்
கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86
வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்
அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87
வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88
இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்
வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான். 89
இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். 90
அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்
வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். 91
இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்
மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான். 92
பல் வகை மங்கல ஆரவாரம்
ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை. 93
இராமனும் சீதையும் தாயர் மூவரையும் வணங்குதல்
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்,
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி,
ஆய தன் அன்னை அடித் துணை சூடி,
தூய சுமித்திரை தாள் தொழலோடும், 94
மாமியர் மகிழ்ந்து சீதைக்குப் பொன் முதலியன அளித்தல்
அன்னமும், அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தாள்; சிந்தை உவந்தார்,
கன்னி, அருந்ததி, காரிகை, காணா,
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார். 95
சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்,
அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனிப் பிறர் யார் உளர்? என்றார்;
கண்கள் களிப்ப, மனங்கள் களிப்பார். 96
எண் இல கோடி பொன், எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம், மங்கையர் வெள்ளம்,
கண் அகல் நாடு, உயர் காசொடு தூசும்,
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக! என்றார். 97
இராமன் சீதையொடு பள்ளி சேர்தல்
நூற் கடல் அன்னவர் சொற் கடன் நோக்கி,
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்,
கார்க் கடல் போல் கருணைக் கடல், பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான். 98
வசிட்டன் மங்கல அங்கி வளர்த்தல்
பங்குனி உத்தரம் ஆன பகற்போது,
அங்க இருக்கினில், ஆயிர நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்,
மங்கல அங்கி, வசிட்டன் வகுத்தான். 99
பரதன் முதலிய மூவருக்கும் திருமணம் நிகழ்தல்
வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன், எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும் எனத் தமரோடு குறித்தான். 100
கொய்ந் நிறை தாரன், குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன், மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர், வான் உறை நீரார்,
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார். 101
தயரதன் மிதிலையில் சில நாள் தங்கியிருத்தல்
வேட்டு அவர் வேட்டபின், வேந்தனும், மேல்நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்,
ஈட்டிய மெய்ப் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டளவு ஈந்தான். 102
ஈந்து, அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே,
ஆய்ந்து உணர் கேள்வி அருந் தவரோடும்,
வேந்தனும், அந் நகர் வைகினன்; மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்: 103
மிகைப் பாடல்கள்
எரிகால் சுடர் ஏக, எழுந்த நிலா
வரும் ஈரமும், மா மயில் சானகிதன்
திருமேனியின் மீது சினந்து சுட,
தரியாது, உளம் நொந்து, தனித்து உறைவாள். 2-1
என்று, ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க, அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம். 18-1
கதிரவன் எழலோடும், கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல் போலும், மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு, கோலம் புனைதலை முயல்வுற்றார். 21-1
என்றும், நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. 48-1
பால காண்டம்
24. பரசுராமப் படலம்
விசுவாமித்திரன் ஆசி கூறி, வட மலைக்குச் செல்லுதல்
தான் ஆவது ஓர் வகையே நனி சனகன் தரு தயலும்,
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அந் நாள்வாய்,
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி,
போனான் வட திசைவாய், உயர் பொன் மால் வரை புக்கான். 1
தயரதன் சேனைச் சுற்றமுடன் அயோத்திக்குப் பயணமாதல்
அப் போதினில் முடி மன்னவன், அணி மா நகர் செலவே,
இப்போது, நம் அனிகம்தனை எழுக! என்று இனிது இசையா,
கைப் போதகம் நிகர் காவலர் குழு வந்து, அடி கதுவ,
ஒப்பு ஓத அரு தேர்மீதினில், இனிது ஏறினன், உரவோன். 2
தன் மக்களும், மருமக்களும், நனி தன் கழல் தழுவ,
மன் மக்களும், அயல் மக்களும், வயின் மொய்த்திட, மிதிலைத்
தொல் மக்கள் தம் மனம் உக்கு, உயிர் பிரிவு என்பது ஒர் துயரின்,
வன்மைக் கடல் புக, உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன். 3
இராமன் தம்பியரோடு சென்ற காட்சி
முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல, மிதிலை
நன் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல, நடுவே,
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவிச் செல, மழைவாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன். 4
பறவைகள் அபசகுனமாய்ச் செல்வது கண்டு, தயரதன் தயங்கி நிற்றல்
ஏகும் அளவையின் வந்தன, வலமும் மயில், இடமும்
காகம் முதலிய, முந்திய தடை செய்வன; கண்டான்;
நாகம் அனன், இடை இங்கு உளது இடையூறு என, நடவான்;
மாகம் மணி அணி தேரொடு நின்றான், நெறி வந்தான். 5
மன்னன் நிமித்திகனை வினாவ, அவன், இடையூறு இன்றே வந்து, நன்றாய்விடும் எனல்
நின்றே, நெறி உணர்வான், ஒரு நினைவாளனை அழையா,
நன்றோ? பழுது உளதோ? நடு உரை நீ, நயம் என்ன,
குன்றே புரை தோளான் எதிர், புள்ளின் குறி தேர்வான்,
இன்றே வரும் இடையூறு; அது நன்றாய்விடும் என்றான். 6
பரசுராமனது வருகையும், அது கண்டு தயரதன் சோர்தலும்
என்னும் அளவினில், வானகம் இருள் கீறிட, ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய சடையான்; மழு உடையான்;
பொன்னின் மலை வருகின்றது போல்வான்; அனல் கால்வான்;
உன்னும் சுழல் விழியான்; உரும் அதிர்கின்றது ஒர் மொழியான்; 7
கம்பித்து, அலை எறி நீர் உறு கலம் ஒத்து, உலகு உலைய,
தம்பித்து, உயர் திசை யானைகள் தளர, கடல் சலியா
வெம்பித் திரிதர, வானவர் வெருவுற்று இரிதர, ஓர்
செம் பொன் சிலை தெறியா, அயில் முக வாளிகள் தெரிவான்; 8
விண் கீழுற என்றோ? படி மேல்கீழ் உற என்றோ?
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ?-
புண் கீறிய குருதிப் புனல் பொழிகின்றன புரையக்
கண் கீறிய கனலான் முனிவு - யாது? என்று அயல் கருத; 9
போரின்மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய,
தேரின்மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய,
நீரின்மிசை வடவைக் கனல் நெடு வான் உற முடுகி,
பாரின்மிசை வருகின்றது ஓர் படி வெஞ் சுடர் படர, 10
பாழிப் புயம் உயர் திக்கிடை அடையப் புடை படர,
சூழிச் சடைமுடி விண் தொட, அயல் வெண் மதி தோற்ற,
ஆழிப் புனல், எரி, கால், நிலம், ஆகாயமும், அழியும்
ஊழிக் கடை முடிவில், தனி உமை கேள்வனை ஒப்பான்; 11
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய, தனி படரும்
செயிர் சுற்றிய படையான், அடல் மற மன்னவர் திலகன்,
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என, ஓர் ஆயிரம் உயர்தோள்
வயிரப் பணை துணிய, தொடு வடி வாய் மழு உடையான்; 12
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட, நில மன்னவர் குலமும்
கரு அற்றிட, மழுவாள் கொடு களை கட்டு, உயிர் கவரா,
இருபத்தொரு படிகால், இமிழ் கடல் ஒத்து அலை எறியும்
குருதிப் புனல் அதனில், புக முழுகித் தனி குடைவான்; 13
கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,
சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,
சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்; 14
சையம் புக நிமிர் அக் கடல் தழுவும்படி சமைவான்;
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான்.
ஐயன்தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்,
வெய்யன் வர நிபம் என்னைகொல்? என வெய்துறும் வேலை. 15
எதிரே வந்த பரசுராமனை, யார்? என இராமன் வினாவுதல்
பொங்கும் படை இரிய, கிளர் புருவம் கடை நெரிய,
வெங் கண் பொறி சிதற, கடிது உரும் ஏறு என விடையா,
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர், சென்றான்,
அம் கண் அரசன் மைந்தனும், ஆரோ? எனும் அளவில், 16
தயரதன் இடை வந்து வணங்க, சினம் தணியாது, பரசுராமன் பேசுதல்
அரைசன், அவனிடை வந்து, இனிது ஆராதனை புரிவான்,
விரை செய் முடி படிமேல் உற அடி மேல் உற விழவும்,
கரை சென்றிலன் அனையான், நெடு முடிவின் கனல் கால்வான்;
முரைசின் குரல் பட, வீரனது எதிர் நின்று, இவை மொழிவான்: 17
உன் தோள் வலி அறிய இங்கு வந்தேன் என இராமனை நோக்கி பரசுராமன் மொழிதல்
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்; இனி, யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன்;
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன்;
மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது என் வரவு என்றனன், உரவோன். 18
தயரதன் பரசுராமனிடம் அபயம் வேண்டுதல்
அவன் அன்னது பகரும் அளவையின், மன்னவன் அயர்வான்,
புவனம் முழுவதும் வென்று, ஒரு முனிவற்கு அருள்புரிவாய்!
சிவனும், அயன், அரியும் அலர்; சிறு மானிடர் பொருளோ?
இவனும், எனது உயிரும், உனது அபயம், இனி என்றான். 19
விளிவார் விளிவது, தீவினை விழைவாருழை அன்றோ?
களியால், இவன் அயர்கின்றன உளவோ? - கனல் உமிழும்
ஒளி வாய் மழு உடையாய்! - பொர உரியாரிடை அல்லால்,
எளியாரிடை, வலியார் வலி என் ஆகுவது? என்றான். 20
நனி மாதவம் உடையாய்! இது பிடி நீ என நல்கும்
தனி நாயகம், உலகு ஏழையும் உடையாய்! இது தவிராய்;
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா,
முனிவு ஆறினை; முனிகின்றது முறையோ? என மொழிவான். 21
அறன் நின்றவர் இகழும்படி, நடுவின் தலை புணராத்
திறன் நின்று, உயர் வலி என்? அது ஓர் அறிவின் தகு செயலோ?
அறன் நின்றதன் நிலை நின்று, உயர் புகழ் ஒன்றுவது அன்றோ,
மறன் என்பது? மறவோய்! இது வலி என்பது வலியோ! 22
சலத்தோடு இயைவு இலன், என் மகன்; அனையான் உயிர் தபுமேல்,
உலத்தோடு எதிர் தோளாய்! எனது உறவோடு, உயிர் உகுவேன்;
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய்! உனது அடியேன்;
குலத்தோடு அற முடியேல்; இது குறை கொண்டனென் என்றான். 23
பரசுராமன் இராமன் எதிர் செல்லக் கண்டு, தயரதன் துன்பத்தில் ஆழ்தல்
என்னா அடி விழுவானையும் இகழா, எரி விழியா,
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா,
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா, உயிர் தளரா,
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என, வெந் துயர் உற்றான். 24
பரசுராமன் தன் கை வில்லின் பெருமை கூறி, நீ வல்லையேல், என் வில்லை வளை என்று வீரம் பேசுதல்
மானம் மணி முடி மன்னவன், நிலை சோர்வுறல் மதியான்,
தான் அந் நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்;
ஆன(ம்)முடை உமை அண்ணலை அந் நாள் உறு சிலைதான்
ஊனம் உளது; அதன் மெய்ந்நெறி கேள்! என்று உரைபுரிவான்: 25
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன, உலையா
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன, வையம்
அருகா வினை புரிவான் உளன்; அவனால் அமைவனதாம்
இரு கார்முகம் உள; யாவையும் ஏலாதன, மேல்நாள்: 26
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன்; மற்றை ஒன்றை
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான்;
என்று இது உணர்ந்த விண்ணோர், இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது? என்று விரிஞ்சனை வினவ, அந் நாள், 27
சீரிது தேவர்தங்கள் சிந்தனை என்பது உன்னி,
வேரி அம் கமலத்தோனும், இயைவது ஓர் வினயம்தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை,
மூரி வெஞ் சிலை மேல் இட்டு, மொய் அமர் மூட்டி விட்டான்; 28
இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்; உலகம் ஏழும்
வெருவர, திசைகள் பேர, வெங் கனல் பொங்க, மேன்மேல்,
செரு மலைகின்ற போழ்தில், திரிபுரம் எரித்த தேவன்,
வரி சிலை இற்றது ஆக, மற்றவன் முனிந்து மன்னோ, 29
மீட்டும் போர் தொடங்கும் வேலை, விண்ணவர் விலக்க, வல் வில்
நீட்டினன் தேவர்கோன் கை, நெற்றியில் கண்ணன்; வெற்றி
காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில்,
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்; 30
இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த
வரிசிலை இது, நீ நொய்தின் வாங்குதி ஆயின், மைந்த!
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை; யான் குறித்த போரும்
புரிகிலென், நின்னொடு; இன்னம் புகல்வது கேட்டி என்றான். 31
ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்;
மானவ! மற்றும் கேளாய்: வழிப் பகை உடையன் நும்பால்;
ஈனம் இல் எந்தை, சீற்றம் நீக்கினான் என்ன, முன் ஓர்
தானவன் அனைய மன்னன் கொல்ல, யான் சலித்து மன்னோ, 32
மூ-எழு முறைமை, பாரில் முடியுடை வேந்தை எல்லாம்,
வேவு எழு மழுவின் வாயால், வேர் அறக் களைகட்டு, அன்னார்
தூ எழு குருதி வெள்ளத் துறையிடை, முறையின், எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன்; அருஞ் சினம் அடக்கி நின்றேன். 33
உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன், உறு பகை ஒடுக்கிப் போந்தேன்,
அலகு இல் மா தவங்கள் செய்து, ஓர் அரு வரை இருந்தேன்; ஆண்டை,
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற, சீறி வந்தேன்;
மலைகுவென்; வல்லைஆகின், வாங்குதி, தனுவை! என்றான். 34
வில்லை வாங்கி வளைத்து, இதற்கு இலக்கு யாது? என இராமன் பரசுராமனிடம் கேட்டல்
என்றனன் என்ன, நின்ற இராமனும் முறுவல் எய்தி,
நன்று ஒளிர் முகத்தன் ஆகி, நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக! என்ன, கொடுத்தனன்; வீரன் கொண்டு, அத்
துன்று இருஞ் சடையோன் அஞ்ச, தோளுற வாங்கி, சொல்லும்: 35
பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்! என்றான். 36
பரசுராமன் இராமனைப் புகழ்ந்து, தன் தவத்தை அம்புக்கு இலக்கு ஆக்குதல்
நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!
வேதியா இறுவதே அன்றி, வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ? 37
பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்!
மின்னுடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்;
என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும், உன் உரத்துக்கு ஈடு அன்றால், 38
எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே! என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே. 39
பரசுராமன் வாழ்த்தி, விடை பெற்றுச் செல்லுதல்
எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை எனத் தொழுது போயினான். 40
இராமன் தந்தையைத் தொழுது, அவரது துயரைப் போக்குதல்
அழிந்து, அவன் போனபின், அமலன், ஐ - உணர்வு
ஒழிந்து, தன் உயிர் உலைந்து, உருகு தாதையை,
பொழிந்த பேர் அன்பினால், தொழுது, முன்பு புக்கு,
இழிந்த வான் துயர்க் கடல் கரை நின்று ஏற்றினான். 41
தயரதன் மகிழ்ந்து, இராமனை உச்சி மோந்து, பாராட்டுதல்
வெளிப்படும் உணர்வினன், விழுமம் நீங்கிட,
தளிர்ப்பு உறு மத கரித் தானையான், இடை
குளிப்ப அருந் துயர்க் கடற் கோடு கண்டவன்,
களிப்பு எனும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன். 42
பரிவு அறு சிந்தை, அப் பரசுராமன் கை
வரி சிலை வாங்கி, ஓர் வசையை நல்கிய
ஒருவனைத் தழுவிநின்று, உச்சி மோந்து, தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான். 43
பொய்ம்மை இல், சிறுமையில் புரிந்த, ஆண் தொழில்,
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ?
மெய்ம்மை இச் சிறுவனே, வினை செய்தோர்களுக்கு,
இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன். 44
தேவர்கள் மலர் மழை பொழிய இராமன் வருணனிடம், சேமித்து வை என்று, பரசுராமனின் வில்லைக் கொடுத்து, அயோத்தி சேர்தல்
பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்
வாம வேல் வருணனை, மான வெஞ் சிலை
சேமி என்று உதவி, தன் சேனை ஆர்த்து எழ,
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான். 45
தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல்
நண்ணினர், இன்பத்து வைகும் நாளிடை,
மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான்,
அண்ணல், அப் பரதனை நோக்கி, ஆண்தகை,
எண்ண அருந் தகையது ஓர் பொருள் இயம்புவான்: 46
ஆணையின் நினது மூதாதை, ஐய! நிற்
காணிய விழைவது ஓர் கருத்தன்; ஆதலால்,
கேணியில் வளை முரல் கேகயம் புக,
பூண் இயல் மொய்ம்பினாய்! போதி என்றனன். 47
இராமனை வணங்கிப் பரதன் கேகய நாட்டிற்குப் புறப்படுதல்
ஏவலும், இறைஞ்சிப் போய், இராமன் சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து, போயினான் -
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான்,
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்றென்னவே. 48
சத்துருக்கனோடு பரதன் ஏழு நாளில் கேகய நாடு சென்று சேர்தல்
உளை விரி புரவித் தேர் உதயசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்,
இளையவன் தன்னொடும், ஏழு நாளிடை,
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான். 49
ஆனவன் போனபின், அரசர் கோமகன்
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை,
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்,
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம் அரோ. 50
மிகைப் பாடல்கள்
கயிலைக் கிரிதனை மூடிய அன்றிற்கிரி கந்தன்
அயிலைப் புக விடர்விட்டது போல் ஏழ் வழியாகச்
சயிலத் துளைபட எய்தனை, அயில் தெற்றிய அதனால்
முயலுற்றவர் நிருபக்குலம் மூ-ஏழ் முறை முடித்தான். 14-1