Kamba Ramayanam yuththa kandam Part 5
கம்பராமாயணம் யுத்த காண்டம்
32. வேல் ஏற்ற படலம் 33. வானரர் களம் காண் படலம் 34. இராவணன் களம் காண் படலம் 35. இராவணன் தேர் ஏறு படலம் 36. இராமன் தேர் ஏறு படலம் 37. இராவணன் வதைப் படலம் 38. மண்டோதரி புலம்புறு படலம் 39. வீடணன் முடி சூட்டு படலம் 40. பிராட்டி திருவடி தொழுத படலம் 41. மீட்சிப் படலம் 42. திருமுடி சூட்டு படலம் யுத்த காண்டம்32. வேல் ஏற்ற படலம்
வானரத் தலைவர்களைத் தொடர்ந்து, குரக்குச் சேனை களத்திற்கு மீண்டு வருதல்பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர்; பெயர்ந்துபோய், நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை விலக்கற்பாலார்;
வரும் பழி துடைத்தும்; வானின் வைகுதும், யாமும் என்னா,
இருங் கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது, இப்பால். 1
சேனைகள் புடை சூழ, இராவணன் போர்க்களம் செல்லுதல்
சில்லி ஆயிரம், சில் உளைப் பரியொடும் சேர்ந்த,
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும்,
செல்லும் தேர்மிசைச் சென்றனன் - தேவரைத் தொலைத்த
வில்லும், வெங் கணைப் புட்டிலும், கொற்றமும், விளங்க. 2
நூறு கோடி தேர், நொறில் பரி நூற்று இரு கோடி,
ஆறு போல் மத மா கரி ஐ-இரு கோடி,
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி,
சீறு கோள் அரிஏறு அனானுடன் அன்று சென்ற. 3
மூன்று வைப்பினும், அப் புறத்து உலகினும், முனையின்
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்மின்! என்று இசைக்கும்
ஆன்ற பேரியும், அதிர் குரல் சங்கமும், அசனி
ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப. 4
இராவணனையும் அரக்கர் தானையையும் கண்ட வானரர் ஆரவாரித்தல்
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை, அவுணர்
வினைய வானவர் வெவ் வினைப் பயத்தினை, வீரர்
நினையும் நெஞ்சினைச் சுடுவது ஓர் நெருப்பினை, நிமிர்ந்து
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை, கண்டார். 5
கண்டு, கைகளோடு அணி வகுத்து, உரும் உறழ் கற்கள்
கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள் புடை கொட்டி,
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற, ஆர்த்தார்-
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார். 6
அரக்கன் சேனையும் குரக்குச் சேனையும் கைகலத்தல்
அரக்கன் சேனையும், ஆர் உயிர் வழங்குவான் அமைந்த
குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிர் எதிர் கோத்து,
நெருக்கி நேர்ந்தன; நெருப்பு, இடை பொடித்தன; நெருப்பின்
உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது உதிரம். 7
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து, அண்டத்து
ஒற்ற, வானகம் உதய மண்டிலம் என ஒளிர,
சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதி நீர் துளிப்ப,
முற்றும் வையகம் போர்க் களம் ஆம் என முயன்ற. 8
தூவி அம் பெடை அரி இனம் மறிதர, சூழி
தூவி, அம்பு எடை சோர்ந்தன, சொரி உடல் சுரிப்ப,
மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த,
மேவி அம் படைக் கடலிடை, குடரொடு மிதந்த. 9
கண் திறந்தனர் கணவர்தம் முகத்த அவர் முறுவல்
கண்டு இறந்தனர் மடந்தையர், உயிரொடும் கலந்தார்-
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக, பன்னி,
பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பனிப்ப. 10
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற, உடற்றும்
நூழில் வெஞ் சமம் நோக்கி, அவ் இராவணன் நுவன்றான் -
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை. 11
அனுமனும் இலக்குவனும் அரக்கர் படையைச் சிதைத்தல்
மரமும் கல்லுமே, வில்லொடு வாள், மழு, சூலம்,
அரமும், கல்லும், வேல், முதலிய அயில் படை அடக்கி,
சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது, அச் சேனை;
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு பால். 12
அழலும் கண் களிற்று அணியொடும், துணி படும்; ஆவி
சுழலும் பல் பரித் தேரொடு புரவியும், சுற்ற,
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும்-
குழலும் நூலும்போல் அனுமனும் தானும் அக் குமரன். 13
வில்லும் கூற்றுவற்கு உண்டு என, திரிகின்ற வீரன்
கொல்லும் கூற்று எனக் குறைக்கும், இந் நிறை பெருங் குழுவை;
ஒல்லும் கோள் அரி, உரும், அன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள். 14
இராவணன் கொதித்து, அம்பு தொடுக்க குரக்குச் சேனை நிலைகெடுதல்
கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் கழிப்பின்,
உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை;
மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென், கொற்றம் என்று இராவணன் கொதித்தான். 15
ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப்
பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப,
மாதிரங்களை அளப்பன, மாற்ற அருங் கூற்றின்
தூது போல்வன, சுடு கணை முறை முறை துரந்தான். 16
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது, அமர்க் களத்து அடைந்த
ஞாளி போன்று உள என்பது என்? நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கரந்த
பூளை போன்றது, அப் பொரு சினத்து அரிகள்தம் புணரி. 17
இலக்குவன் - இராவணன் பொருதல்
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி,
அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின் என்று அருள் வழங்கி,
திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்;
எரியும் வெஞ் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான். 18
ஏற்றுக் கோடலும், இராவணன் எரி முகப் பகழி
நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க,
காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க,
வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன் விசையால். 19
விலக்கினான் தடந் தோளினும் மார்பினும், விசிகம்
உலக்க உய்த்தனன், இராவணன்; ஐந்தொடு ஐந்து உருவக்
கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் கனன்றான்,
அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, அம்பால். 20
காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், நூழில்
ஆக்கும் வெஞ் சமத்து அரிது இவன்தனை வெல்வது; அம்மா!
நீக்கி, என் இனிச் செய்வது? என்று இராவணன் நினைந்தான். 21
இராவணன் மோகப் படையை விட, வீடணன் கூற இலக்குவன் ஆழிப்படையை விடல்
கடவுள் மாப் படை தொடுக்கின், மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லனேல், யாரையும் வெல்லும்;
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். 22
மோக மாப் படை ஒன்று உளது; அயன் முதல் வகுத்தது;
ஆகம் அற்றது; கொற்றமும் சிவன் தனை அழிப்பது;
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்வயின் ஏவி,
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின்- 23
என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி,
முன்பன்மேல் வரத் துரந்தனன்; அது கண்டு முடுகி,
அன்பின் வீடணன், ஆழியான் படையினின் அறுத்தி
என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து எய்தான். 24
வீடணன் உபாயத்தால் படை வலி அழிய, இராவணன் அவன் மேல் வேல் எறிதல்
வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான்,
மூடு வெஞ் சின மோகத்தை நீக்கலும், முனிந்தான்,
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த
கேடு நம்தமக்கு என்பது மனம்கொண்டு கிளர்ந்தான். 25
மயன் கொடுத்தது, மகளொடு; வயங்கு அனல் வேள்வி,
அயன் படைத்துளது; ஆழியும் குலிசமும் அனையது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது; உருமின்,
சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச் சமைந்தான். 26
விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்,
வட்ட வேல் அது வலம்கொடு வாங்கினன், வணங்கி,
எட்ட நிற்கலாத் தம்பிமேல் வல் விசைத்து எறிந்தான். 27
ஈது என் உயிர் அழிக்கும் என்று வீடணன் உரைக்க, இலக்குவன்
இதைப் போக்குவேன்; அஞ்சல் நீ எனல்
எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், ஐய! ஈது என் உயிர் அழிக்கும்;
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும், பெரியோன்,
அறிந்து போக்குவல்; அஞ்சல், நீ! என்று இடை அணைந்தான். 28
வேலைத் தானே மார்பில் ஏற்க, இலக்குவன் எதிர்தல்
எய்த வாளியும், ஏயின படைக்கலம் யாவும்,
செய்த மா தவத்து ஒருவனைச் சிறு தொழில் தீயோன்
வைத வைவினில் ஒழிந்தன; வீடணன் மாண்டான்;
உய்தல் இல்லை என்று, உம்பரும் பெரு மனம் உலைந்தார். 29
தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்; தருமமும் தொடரும்;
ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப்
பார்ப்பது என்? நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம்,-
எற்பென், என் தனி மார்பின் என்று, இலக்குவன் எதிர்ந்தான். 30
வேலை ஏற்க பலரும் முந்த, இலக்குவன் அவ் வேலைத் தன் மார்பில் ஏற்றல்
இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ? 31
முன் நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
நின்மின்; யான் இது விலக்குவென் என்று உரை நேரா,
மின்னும் வேலினை, விண்ணவர் கண் புடைத்து இரங்க,
பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக, 32
வீடணன் தண்டு கொண்டு இராவணனது தேர்க் குதிரையையும் சாரதியையும் அழித்தல்
எங்கு நீங்குதி நீ? என வீடணன் எழுந்தான்,
சிங்கஏறு அன்ன சீற்றத்தான், இராவணன் தேரில்
பொங்கு பாய் பரி சாரதியோடும் படப் புடைத்தான்,
சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால். 33
இராவணன் வீடணன்மேலும், அனுமன்மேலும் கணை தொடுக்க, அவனை வீடணன் வெகுண்டு, பின் தொடர்தல்
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று, இராவணன் சீறி,
பாய் கடுங் கணை பத்து அவன் உடல் புகப் பாய்ச்சி,
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி,
போயினன், செரு முடிந்தது என்று, இலங்கை ஊர் புகுவான். 34
தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே
வீடிப் போவென் என்று அரக்கன்மேல் வீடணன் வெகுண்டான். 35
வீடணனைக் கொல்லாது இராவணன் இலங்கைக்கு மீள்தல்
வென்றி என் வயம் ஆனது; வீடணப் பசுவைக்
கொன்று, இனிப் பயன் இல்லை என்று இராவணன் கொண்டான்;
நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் நீத்தான்;
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான். 36
வீடணன் துயரம் மிக்கவனாய், இலக்குவன் பாதத்தில் வீழ்ந்து,
இறக்க முயல, சாம்பன் தடுத்தல்
அரக்கன் ஏகினன்; வீடணன் வாய் திறந்து அரற்றி,
இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித் தலத்தில்,
கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார். 37
பொன் அரும்பு உறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற,
என் இருந்து நான்? இறப்பென, இக் கணத்து; எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக,
நில், நில் என்றனன், சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும்: 38
அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ?
நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம் நிமிர்வான்,
வினையின் நல் மருந்து அளிக்கின்றான்; உயிர்க்கின்றான், வீரன்;
தினையும் அல்லல் உற்று அழுங்கன் மின் என்று இடர் தீர்த்தான். 39
சாம்பன் உரைப்படி அனுமன் மருந்து கொண்டு வந்து, இலக்குவனை உயிர்ப்பித்தல்
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி,
இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்? என்னலும், அன்னான்
கருத்தை உன்னி, அம் மாருதி உலகு எலாம் கடந்தான். 40
உய்த்து ஒரு திசைமேல் ஓடி, உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
மெய்த் தகு மருந்துதன்னை, வெற்பொடும் கொணர்ந்த வீரன்,
பொய்த்தல் இல் குறி கெடாமே பொது அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில், வருத்தம் உண்டோ ? 41
தந்தனன், மருந்து தன்னை; தாக்குதல் முன்னே யோகம்
வந்தது, மாண்டார்க்கு எல்லாம்; உயிர் தரும் வலத்தது என்றால்,
நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? நொடிதல் முன்னே,
இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய வீரன். 42
இலக்குவன் அனுமனைத் தழுவி, வீடணனின் நலத்தை உசாவல்
எழுந்து நின்று, அனுமன் தன்னை இரு கையால் தழுவி, எந்தாய்!
விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்! என்று, விம்மித்
தொழும் துணையவனை நோக்கி, துணுக்கமும் துயரும் நீக்கி,
கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான். 43
வானரத் தலைவர்கள் இராமனிடம் சேர்ந்து வணங்க,
இராமன், விளைந்தது என்ன? என வினாவுதல்
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப் பொருள் தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால்,
அருமை என் இராமற்கு? அம்மா! அறம் வெல்லும், பாவம் தோற்கும்,
இருமையும் நோக்கின் என்னா, இராமன்பால் எழுந்து சென்றார். 44
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று
குன்றுகள் பலவும், சோரிக் குரை கடல் அனைத்தும், தாவிச்
சென்று அடைந்து, இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார்,
வென்றியின் தலைவர்; கண்ட இராமன், என் விளைந்தது? என்றான். 45
இராமன் அனுமனைத் தழுவி ஆசி கூறுதல்
உற்றது முழுதும் நோக்கி, ஒழிவு அற, உணர்வு உள் ஊற,
சொற்றனன் சாம்பன், வீரன் அனுமனைத் தொடரப் புல்லி,
பெற்றனன் உன்னை; என்னை பெறாதன? பெரியோய்! என்றும்
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக! என்றான். 46
இலக்குவனை இராமன் பாராட்டி உரைத்தல்
புயல் பொழி அருவிக் கண்ணன், பொருமலன் பொங்குகின்றான்,
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் தம்பி,
துயர் தமக்கு உதவி, மீளாத் துறக்கம் போய், வந்த தொல்லைத்
தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது சார்ந்தான். 47
இளவலைத் தழுவி, ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற
அளவினம்; அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் கொடுத்த வண்மைத்
துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் என்றால்,
அளவு இயல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே? 48
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற
பிற வினை உரைப்பது என்னே? பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் காண்கில் என்றான். 49
இராமன் இளைப்பாறுதல்
சாலிகை முதல ஆன போர்ப் பரம் தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி,
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக் கொடுத்து, கொண்டல்
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான். 50
மிகைப் பாடல்கள்
அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை, அமரில்
துரக்க, மானுடர்தம்மை என்று, ஒருபுடை துரந்து,
வெருக் கொள் வானரச் சேனைமேல் தான் செல்வான் விரும்பி,
இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான். 2-1
யுத்த காண்டம்
33. வானரர் களம் காண் படலம்
சுக்கிரீவனை மூலப் படையின் அழிவு காண இராமன் ஏவல்
ஆய பின், கவியின் வேந்தும், அளப்ப அருந் தானையோடும்,
மேயினன், இராமன் பாதம் விதி முறை வணங்கி; வீந்த
தீயவர் பெருமை நோக்கி, நடுக்கமும் திகைப்பும் உற்றார்,
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர், நாணம் உற்றார். 1
மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும்
நீண்டு உள அதனை, ஐய! எங்ஙனம் நிமிர்ந்தது? என்னத்
தூண் திரண்டனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல,
காண்டி நீ, அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை என்றான். 2
தொழுதனர் தலைவர் எல்லாம்; தோன்றிய காதல் தூண்ட,
எழுக என விரைவின் சென்றார், இராவணற்கு இளவலோடும்;
கழுகொடு பருந்தும், பாறும், பேய்களும், கணங்கள் மற்றும்,
குழுவிய களத்தைக் கண்ணின் நோக்கினர், துணுக்கம் கொண்டார். 3
களம் கண்ட வானரர்கள் அடைந்த நிலை
ஏங்கினார்; நடுக்கமுற்றார்; இரைத்து இரைத்து, உள்ளம் ஏற,
வீங்கினார்; வெருவலுற்றார்; விம்மினார்; உள்ளம் வெம்ப,
ஓங்கினார்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து, உவகை ஊன்ற,
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார்? 4
வானரர் வேண்ட, போர்க்களக் காட்சியை வீடணன் கூறுதல்
ஆயிரம் பருவம் கண்டும், காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால்;
மேயின துறைகள்தோறும் விம்மினார் நிற்பது அல்லால்,
பாய் திரைப் பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன,-
நீ இருந்து உரைத்தி என்றார்; வீடணன் நெறியின் சொல்வான்: 5
காகப் பந்தர்ச் செங் களம் எங்கும், செறி கால
ஓகத்து அம்பின் பொன்றின வேனும், உடல் ஒன்றி,
மேகச் சங்கம் தொக்கன, வீழும் வெளி இன்றி,
நாகக் குன்றின் நின்றன காண்மின் - நமரங்காள்! 6
வென்றிச் செங் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ,
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க,
பொன்றி, சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர். 7
அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளிக்
களியில் பட்டார் வாள் முகம், மின்னும் கரை இல்லாப்
புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த
நளினக் காடே ஒப்பன காண்மின் - நமரங்காள்! 8
ஒழுகிப் பாயும் மும் மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற;
பழகிற்கில்லாப் பல் திரை தூங்கும் படர் வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர்! 9
பூ வாய் வாளிச் செல் எறி காலைப் பரி பொன்ற,
கோ ஆர் விண்வாய் வெண் கொடி திண் பாயொடு கூட,
மா வாய் திண் தேர் மண்டுதலால், நீர் மறி வேலை
நாவாய் மானச் செல்வன காண்மின் - நமரங்காள்! 10
கடக் கார் என்னப் பொங்கு கவந்தத்தொடு கைகள்
தொடக்காநிற்கும் பேய், இலயத்தின் தொழில் பண்ணி,
மடக்கோ இல்லா வார் படிமக் கூத்து அமைவிப்பான்,
நடக் கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் - நமரங்காள்! 11
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர்
குழுவின் கொண்டார் நாடி துடிக்கப் பொறி கூடித்
தழுவிக் கொள்ள, கள்ள மனப் பேய் அவைதம்மை
நழுவித் தள்ளிப் போவன காண்மின் - நமரங்காள்! 12
பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றிப் புகர் வேழம்,
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற,
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர். 13
நாமத் திண் போர் முற்றிய கோப நகை நாறும்,
பாமத் தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள்,
தூமத்தோடும் வெங் கனல் இன்னும் சுடர்கின்ற
ஓமக் குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர். 14
மின்னும் ஓடை ஆடல் வயப் போர் மிடல் வேழக்
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர்;
மன்னும் மா நீர்த் தாமரை மானும் வதனத்த;
அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர். 15
ஒளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு,
ஆளின் முற்றாச் செம் புனல் வெள்ளத்தவை காணீர்;
கோளின் முற்றாச் செக்கரின் மேகக் குழுவின்கண்
நாளின் முற்றா வெண் பிறை போலும்-நமரங்காள்! 16
கொடியும் வில்லும், கோலொடு வேலும், குவி தேரும்,
துடியின் பாதக் குன்றின்மிசைத் தோல் விசியின் கட்டு
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல, உடன் வெந்த
தடி உண்டு ஆடிக் கூளி தடிக்கின்றன காணீர். 17
சகரம் முந்நீர்ச் செம்புனல் வெள்ளம் தடுமாறா,
மகரம் தம்மின் வந்தன காணா, மனம் உட்கி,
சிகரம் அன்ன! யானைகொல்? என்னச் சில நாணி,
நகரம் நோக்கிச் செல்வன காண்மின் - நமரங்காள்! 18
விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல, மேன் மேல்,
மண்ணில் செல்வார் மேனியின் வீழ, மடிவுற்றார்,
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லாக்
கண்ணில் தீயார், விம்மி உளைக்கும் படி காணீர். 19
அச்சின் திண் தேர், ஆனையின், மாமேல், அகல் வானில்
மொய்ச்சுச் சென்றார் மொய் குருதித் தாரைகள் முட்ட,
உச்சிச் சென்றான் ஆயினும், வெய்யோன், உதயத்தின்
குச்சிச் சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர். 20
கால் தோய் மேனிக் கண்டகர் கண்டப்படு காலை,
ஆறோ! என்ன, விண் படர் செஞ் சோரியது ஆகி,
வேறாய் நின்ற வெண் மதி செங் கேழ் நிறம் விம்மி,
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர். 21
வான் நனைய, மண் நனைய, வளர்ந்து எழுந்த பெருங் குருதி மகர வேலை-
தான் நனைய, உற்று எழுமாறு, அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி,
மீன் அனைய நறும் போதும், விரை அரும்பும், சிறை வண்டும், நிறம் வேறு எய்தி,
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்மின்! காண்மின்! 22
வரை பொருத மத யானைத் துணை மருப்பும், கிளர் முத்தும், மணியும், வாரி,
திரை பொருது புறம் குவிப்பத் திறம் கொள் பணை மரம் உருட்டி, சிறைப் புள் ஆர்ப்ப,
நுரைக் கொடியும் வெண் குடையும் சாமரையும் எனச் சுமந்து, பிணத்தின் நோன்மைக்
கரை பொருது கடல் மடுக்கும் கடுங் குருதிப் பேர் ஆறு காண்மின்! காண்மின்! 23
கைக் குன்றப் பெருங் கரைய, நிருதர் புயக் கல் செறிந்த, கதலிக் கானம்
மொய்க்கின்ற பரித் திரைய, முரண் கரிக் கைக் கோள் மாவ, முளரிக் கானின்
நெய்க்கின்ற வாள் முகத்த, விழும் குடரின் பாசடைய, நிணமேல் சேற்ற,
உய்க்கின்ற உதிர நிறக் களம் குளங்கள், உலப்பு இறந்த, உவையும் காண்மின்! 24
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின், உதிர நீர் நிறைந்த காப்பின்,
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின், இன மள்ளர் பரந்த கையில்,
படுங் கமல மலர் நாறும் முடி பரந்த பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை,
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின்! 25
வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும், வீரன் வில்லின்
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்ஏறு பல படவும், உலகம் கீண்டு
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு, இழிந்த பகழி வழி நதியின் ஓடி,
களிறு ஈர்த்துப் புக மண்டும் கடுங் குருதித் தடஞ் சுழிகள் காண்மின்! காண்மின்! 26
கைத்தலமும், காத்திரமும், கருங் கழுத்தும், நெடும் புயமும், உரமும், கண்டித்து
எய்த்தில போய், திசைகள்தொறும் இரு நிலத்தைக் கிழித்து இழிந்தது என்னின் அல்லால்,
மைத்த களிற்று இன மாவின், வாள் நிருதர் பெருங் கடலின், மற்று இவ் வாளி
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்மின்! 27
குமுதம் நாறும் மதத்தன, கூற்றன,
சமுதரோடு மடிந்தன, சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய, இத் திறம்
அமிர்தின் வந்தன, ஐ-இரு கோடியால். 28
ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன,
ஊறும் மாரியும், ஓங்கு அலை ஓதமும்,
மாறும் ஆயினும், மா மதமாய் வரும்
ஆறு மாறில, ஆறு-இரு கோடியால். 29
உயிர் வறந்தும், உதிரம் வறந்து தம்
மயர் வறந்தும், மதம் மறவாதன,
புயலவன் திசைப் போர் மத ஆனையின்
இயல் பரம்பரை ஏழ்-இரு கோடியால். 30
கொடாது நிற்றலின், கொற்ற நெடுந் திசை
எடாது நிற்பன, நாட்டம் இமைப்பு இல,
வடாது திக்கின் மதவரையின் வழிக்
கடாம் முகத்த, முளரிக் கணக்கவால். 31
வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும்,
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனை வர்க்கம் கணக்கு இல, இவ் எலாம். 32
பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள்,
ஆர்த்து எழுந்தன, ஆயிரம் ஆயிரம்
மால் கணப் பரி இங்கு இவை; மாறு இவை;
மேற்கின் வேலை வருணனை வென்றவால். 33
இரு நிதிக் கிழவன் இழந்து ஏகின
அரிய அப் பரி ஆயிரம் ஆயிரம்;
விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனைப்
பொருது பற்றிய, தாமரை போலுமால். 34
என்று, காணினும், காட்டினும், ஈது இறைக்
குன்று காணினும் கோள் இலது; ஆதலால்,
நின்று காணுதும்; நேமியினானுழைச்
சென்று காண்டும் என்று ஏகினர், செவ்வியோர். 35
ஆரியன் தொழுது, ஆங்கு அவன் பாங்கரும்,
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார்,
பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம். 36
மிகைப் பாடல்கள்
என்று உரைத்து, உயர் வான் பிறப்பு எய்திய
வென்றி வெஞ் சின வேழங்கள் தம்மொடும்
துன்று வாசித் தொகைகளும் கேண்ம் எனா,
நின்ற வீடணன் தானும் நிகழ்த்துவான். 25-1
யுத்த காண்டம்
34. இராவணன் களம் காண் படலம்
போர் விரர்க்கு விருந்து அளிக்க இராவணன் முற்படல்
பொருந்து பொன் பெருங் கோயிலுள், போர்த் தொழில்
வருந்தினர்க்கு, தம் அன்பினின் வந்தவர்க்கு,
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்,
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான். 1
வான நாட்டை வருக! என, வல் விரைந்து,
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்;
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர்; மற்று
ஊனம் நாட்டின், இழத்திர் உயிர் என்றான். 2
போகப் பொருள்களுடன் தேவ மகளிர் வருதல்
நறவும் ஊனும், நவை அற நல்லன
பிறவும், ஆடையும், சாந்தமும், பெய்ம் மலர்த்
திறமும், நானப் புனலொடு சேக்கையும்,
புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால். 3
நானம் நெய் நன்கு உரைத்து, நறும் புனல்
ஆன கோது அற ஆட்டி, அமுதொடும்
பானம் ஊட்டி, சயனம் பரப்புவான்,
வான நாடியர் யாவரும் வந்தனர். 4
அரக்க வீரர் போகம் நுகர்தல்
பாடுவார்கள்; பயில் நடம் பாவகத்து
ஆடுவார்கள்; அமளியில் இன்புறக்
கூடுவார்கள்; முதலும் குறைவு அறத்
தேடினார் என, பண்ணையின் சேர்ந்ததால். 5
அரைசர் ஆதி, அடியவர் அந்தமா,
வரை செய் மேனி இராக்கதர் வந்துளார்,
விரைவின் இந்திர போகம் விளைவுற,
கரை இலாத பெரு வளம் கண்ணினார். 6
இராவணனிடம் தூதுவர் வந்து, மூலபலப் படை அழிந்தமையைத் தெரிவித்தல்
இன்ன தன்மை அமைந்த இராக்கதர்
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்,
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம்
துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார்: 7
நடுங்குகின்ற உடலினர், நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர், உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர், ஏங்கினார்,
பிடுங்குகின்ற உணர்வினர், பேசுவார்: 8
இன்று யார் விருந்து இங்கு உண்பார்?- இகல் முகத்து இமையோர் தந்த
வென்றியாய்!-ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் சேனை
நின்றுளார் புறத்தது ஆக, இராமன் கை நிமிர்ந்த சாபம்
ஒன்றினால், நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார். 9
வலிக் கடன் வான் உளோரைக் கொண்டு, நீ வகுத்த போகம்,
கலிக் கடன் அளிப்பென் என்று நிருதர்க்குக் கருதினாயேல்,
பலிக் கடன் அளிக்கற்பாலை அல்லது, உன் குலத்தின் பாலோர்
ஒலிக் கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளரே உள்ளார். 10
இராவணன் திகைத்து தூதரின் பேச்சை ஐயுற்றுக் கூறுதல்
ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த மாற்றம்
கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி,
ஊட்டு அரக்கு அனைய செங் கண் நெருப்பு உக, உயிர்ப்பு வீங்க,
தீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த நெஞ்சன். 11
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்;
உன்னினும், உலப்பு இலாதார்; உவரியின் மணலின் மேலார்;
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன
இந் நிலை இதுவோ? பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான். 12
மாலியவான், தூதுவர் பொய் உரையார்; நீ பெரியோர் செய்கையை மேற்கொள் எனல்
கேட்டு அயல் இருந்த மாலி, ஈது ஒரு கிழமைத்து ஆமோ?
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் யாவும்
வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த எல்லாம்
மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்? என்றான். 13
அளப்ப அரும் உலகம் யாவும் அளித்துக் காத்து அழிக்கின்றான் தன்
உளப் பெருந் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம்
கிளப்பது கேட்டும் அன்றே? அரவின்மேல் கிடந்து, மேல் நாள்,
முளைத்த பேர் இராமன் என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ? 14
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத
நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கு நெருப்பும் காண்டும்,
குன்றொடு மரனும், புல்லும், பல் உயிர்க் குழுவும், கொல்லும்
வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ ? 15
பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம்; பற்று
விட்டது மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையம் இல்லை;
கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் எல்லாம்;
சிட்டது செய்தி என்றான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான். 16
மாலியவான் உரையால் சீற்றமுற்ற இராவணன், வெற்றி எனதே எனல்
இலக்குவன் தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்;
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர்; அதனைக் கண்டால்,
உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப் பொறை உகவான்; உற்ற
மலக்கம் உண்டாகின் ஆக; வாகை என் வயத்தது என்றான். 17
மாருதி கொணர்ந்த மருந்தால் இலக்குவன் உயிர் பெற்றான் எனத் தூதர் உரைத்தல்
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர், ஐய! மெய்யே
மீண்டது, அவ் அளவின் ஆவி, மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும்; தாழ்த்தது இல்லை; யாரும் அச் செங்கணானைப்
பூண்டனர் தழுவிப் புக்கார்; காணுதி போதி என்றார். 18
இராவணன் கோபுரத்தின் மீது ஏறி, களத்தைக் காணுதல்
தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற,
ஏறினன், கனகத்து ஆரைக் கோபுரத்து உம்பர் எய்தி,
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம்,
காறின உள்ளம் நோவ, கண்களால் தெரியக் கண்டான். 19
கொய் தலைப் பூசல் பட்டோ ர் குலத்தியர் குவளை தோற்று
நெய்தலை வென்ற வாள்-கண் குமுதத்தின் நீர்மை காட்ட,
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்காலை,
செய்தலை உற்ற ஓசைச் செயலதும் செவியின் கேட்டான். 20
எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி, யாணர்
மண்ணின் நீர் அளவும் கல்லி, நெடு மலை பறித்து, மண்டும்
புண்ணின் நீர் ஆறும், பல் பேய்ப் புதுப் புனல் ஆடும் பொம்மல்,
கண்ணின் நீர் ஆறும், மாறாக் கருங் கடல் மடுப்பக் கண்டான். 21
குமிழி நீரோடும், சோரிக் கனலொடும், கொழிக்கும் கண்ணான்,
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை வழங்கச் சாய்ந்தார்
அமிழ் பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி,
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான். 22
விண்களில் சென்ற வன் தோள் கணவரை, அலகை வெய்ய
புண்களில் கைகள் நீட்டி, புது நிணம் கவர்வ நோக்கி,
மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள் உகிரின் மானக்
கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான். 23
இராவணன் சோகமும் கோபமும் கொண்டு கோபுரத்திலிருந்து இறங்கி,
அரசிருக்கை மண்டபத்தை அடைதல்
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான்;
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்;
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்;
புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான். 24
நகை பிறக்கின்ற வாயன், நாக்கொடு கடை வாய் நக்கப்
புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற கண்ணன்,
மிகை பிறக்கின்ற நெஞ்சன், வெஞ் சினத் தீமேல் வீங்கி,
சிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை சேர்ந்தான். 25
மிகைப் பாடல்கள்
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட,
உலக்க வானர வீரரை ஓட்டி, அவ்
இலக்குவன் தனை வீட்டி, இராவணன்
துலக்கம் எய்தினன், தோம் இல் களிப்பினே.
(இந்த பாடல் படலத்தின் முதற் செய்யுளாக உள்ளது)
முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப, ஆவி
பெற்று, இயல் பெற்றி பெற்றாலென்ன, வாள் அரக்கர் யாக்கை,
சிற்றியல் குறுங் கால் ஓரிக் குரல் கொளை இசையா, பல் பேய்
கற்று இயல் பாணி கொட்ட, களி நடம் பயிலக் கண்டான். 21-1
யுத்த காண்டம்
35. இராவணன் தேர் ஏறு படலம்
எஞ்சிய சேனையைத் திரட்டுமாறு மகோதரனுக்கு இராவணன் கூறுதல்
பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக! என்று, ஆனை மணி முரசு எற்றுக! என்றான். 1
சேனைகள் திரளுதலும், இராவணன் பூசனை செய்து, தானம் முதலிய நல்குதலும்
எற்றின முரசினோடும் ஏழ்-இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித் திண் தேரும்,
சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் தொக்க,
வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று ஆக. 2
ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான். 3
இராவணன் போர்க்கோலம் பூணுதல்
அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான். 4
வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; 5
மறை விரித்தன்ன ஆடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6
மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி; 7
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய் வலம் சார்வுறச் சாத்தி; 8
நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்
ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்
கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; 9
கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க;
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 10
உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர;
புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ; 11
வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப் பலவாய்
ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 12
பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க; 13
ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஒக்கத்
தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 14
புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித் தலங்கள்
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி,
அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 15
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன் பணித்த
வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி;
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; 16
அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத் தன்
புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 17
வருக, தேர்! என, வந்தது-வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 18
ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன்
பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் காற்றின்
நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். 19
பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்த
நீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்த
போரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது; எவ் உலகினும் செல்வது, ஓர் இமைப்பின். 20
எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசுஇனம் குயிற்றியது, அடங்க. 21
முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்
எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா
வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 22
கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து
அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத்
திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் செய்கை
உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் உறையுள். 23
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,
இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெருங் கொடை அருங் கடன் நேர்ந்தான். 24
ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்;
வேறு தாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் புலனும்
ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 25
இராவணனின் சபதம்
மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின் என்றான். 26
இராவணன் தோள் புடைத்து ஆர்த்து, வில் நாணைத் தெறித்தல்
பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க,
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப,
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 27
விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப,
பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் பொன்
தசும்பின் நின்று இடை திரிந்திட, மதி தகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 28
நணித்து வெஞ் சமம் என்பது ஓர் உவகையின் நலத்தால்,
திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் தெறித்தான்;
மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர்
துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 29
போர்க்களத்தில் இராவணன் தோன்றுதல்
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய,
பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன்மீது என்பது ஓர் மெய்யான். 30
தோன்றினான் வந்து-சுரர்களோடு அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர, உதிரம்
கான்று, நாட்டங்கள் வட அனற்கு இரு மடி கனல. 31
உலகில் தோன்றிய நிலைகுலைவைச் சுக்கிரீவன் முதலியோர் கண்டு, துணுக்கமுற்று எழுதல்
உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும்,
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்,
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்,
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 32
பீறிற்றாம் அண்டம்! என்பது ஓர் ஆகுலம் பிறக்க,
வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,
மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ? என எழுந்தார். 33
இராவணன் வருகையை அவர்கள் உணர்தல்
கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும்,
திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண,
அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். 34
இராவணனது வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்
எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தியது உற்றது; கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர் என்றனன், வீடணன், விரைவான். 35
மிகைப் பாடல்கள்
ஏழ்-இரு நூறு கோடி எனும் படைத் தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன்,
வாள் அமர் முடிப்பென் இன்றே என மணித் தவிசு நீத்தான். 2-1
உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை கேள்வன்
அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு ஆழி
முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா
விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான். 4-1
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக்
கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின், 18-1
ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால்-ஐந்
தும், ஐந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய
இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன்
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான். 27-1
யுத்த காண்டம்
36. இராமன் தேர் ஏறு படலம்
இராமன் போர்க்கோலம் பூண்டு எழுதல்
தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர்
அழுந்து பணிமீது அமளி, அஞ்சல் என, அந் நாள்,
எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். 1
கடக் களிறு எனத் தகைய கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான்,
மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம்
இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று என இசைத்தான். 2
தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின்
பின்னக அசத்த பொருள் இல்லை; பெரியோனை
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ?
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால். 3
புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனலாய மலர் அங்கையின் அடக்கிக்
கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி
வட்டில், புறம் வைத்து, அயல் வயங்குற வரிந்தான். 4
இராமனுக்குத் தேர் அனுப்புமாறு, சிவபெருமான் தேவருக்கு கட்டளையிடல்
மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி
ஆண் தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர்
ஈண்ட விடுவீர், அமரில் என்று, அரன் இசைத்தான். 5
இந்திரன் கூற மாதலி தேரைக் கொணர்தல்
தேவர் அது கேட்டு, இது செயற்கு உரியது என்றார்;
ஏவல் புரி இந்திரனும், அற்று என இசைத்தான்;
மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக்
கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி என்றான். 6
மாதலி கொணர்ந்த தேரின் சிறப்பு
மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும்
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலந் தேர்;
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில். 7
குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும்,
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்,
கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின்
வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. 8
ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை என்று
மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை
நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின். 9
மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக்
கோது அற வகுத்தது; மழைக் குழுவை எல்லாம்
மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப்
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! 10
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து,
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை. 11
பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப்
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம்
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்,
அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின். 12
வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு
ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும்,
பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர்
மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும், 13
அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும்,
ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை பிணிக்கும்
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது, பொலந் தேர். 14
மாதலி இராமனிடம் தேர் கொணர்ந்து அதன் சிறப்பைச் செப்புதல்
வந்ததனை வானவர் வணங்கி, வலியோய்! நீ
எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி என நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி கடாவி, நன் சென்றான். 15
வினைப் பகை விசைக் கொடு விசும்பு உருவி, மான
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என, வானொடு
அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பிற்பட, நிமிர்ந்தது நெடுந் தேர். 16
தேரினை வியந்த இராமன், தேர் கொணர்ந்தது குறித்து மாதலியை வினாவுதல்
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா;
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ? 17
என்னை இது நம்மை இடை எய்தல்? என எண்ணா,
மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, வந்தாய்,
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல? என்றான்;
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்: 18
மாதலியின் மறுமொழி
முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள்,
அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரி நாளும் உலைவு இல்லா
இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது;-எந்தாய்! 19
அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக்
கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை கோளுற்று
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்;
புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால். 20
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்,
உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்;
விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே,
எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும்-எந்தாய்! 21
நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும்
பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின்
பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத்
தேரும் உளதே, இது அலால்?-உலகு செய்தோய்! 22
தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள்,
மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று
ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது என்றான்,
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். 23
இராமன் அரக்கர் மாயையோ என ஐயமுற, மாதலி தேரில்
பூட்டிய குதிரைகள் உண்மை என்பதை விளக்குதல்
ஐயன் இது கேட்டு, இகல் அரக்கர் அகல் மாயச்
செய்கைகொல்? எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்;
மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம். 24
இராமன் ஐயம் நீங்கி, சாரதியின் பெயரைக் கூறு என, மாதலி தன் பெயரை வெளியிடுதல்
இல்லை இனி, ஐயம் என எண்ணிய இராமன்,
நல்லவனை, நீ உனது நாமம் நவில்க! என்ன,
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர் எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். 25
மாருதியையும் இளவலையும் நோக்கி, உம் கருத்து யாது?
என, அவர்களும், இதில் ஐயம் இல்லை என்றல்
மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி,
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என, நின்றான்;
ஆரியனை வணங்கி, அவர், ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது என்றனர், தெளிந்தார். 26
மாதலி கொணர்ந்த தேரில் இராமன் ஏறுதல்
விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப,
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் - இராமன். 27
மிகைப் பாடல்கள்
இத் தகையன் ஆகி, இகல் செய்து, இவனை இன்னே
கொத்து முடி கொய்வென் என, நின்று எதிர் குறிப்ப,
தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில்,
சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார். 4-1
யுத்த காண்டம்
37. இராவணன் வதைப் படலம்
தேவர்கள் வாழ்த்த, இராமன் தேரில் செல்லுதல்
ஆழி அம் தடந் தேர், வீரன் ஏறலும், அலங்கல் சில்லி
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத,
ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்,
வாழிய அனுமன் தோளை ஏத்தினார், மலர்கள் தூவி. 1
எழுக, தேர்; சுமக்க, எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி
விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி
அழுக, பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி
முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 2
இராமன் எதிரே தேரை செலுத்துமாறு இராவணன் சாரதிக்குக் கூறுதல்
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும், அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர் என்று உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்;
பின், அது கிடக்க என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை,
மின் நகு வரி வில் செங் கை இராமன் மேல் விடுதி என்றான். 3
வானரர் போருக்கு ஆயத்தமாதல்
இரிந்த வான் கவிகள் எல்லாம், இமையவர் இரதம் ஈந்தார்;
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று, அஞ்சார்,
திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; திசையோடு அண்டம்
பிரிந்தனகொல்! என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 4
வார்ப் பொலி முரசின் ஓதை, வாய்ப்புடை வயவர் ஓதை,
போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை,
ஆர்த்தலின், யாரும் பார் வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல்
தேர்க் குரல் ஓதை பொங்க, செவி முற்றும் செவிடு செய்த. 5
இராமன் மாதலிக்கு தன் கருத்து கூற, அவன் அதற்கு இசைதல்
மாதலி வதனம் நோக்கி, மன்னர் தம் மன்னன் மைந்தன்,
காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என் தன்
சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை என்னச் சொன்னான். 6
வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார்தம்
உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதிதானும்,
கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில்,
தெள்ளிது என் விஞ்சை! என்றான்; அமலனும், சீரிது! என்றான். 7
வேறு இடத்துப் பொர மகோதரன் வேண்ட , இராவணன், நீ இலக்குவனோடு போர் செய் எனல்
தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர் மேல்;
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது; இடையே, யான் ஓர்
சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு என்றான் -
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 8
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம் என்றான்;
வெம்பு இகல் அரக்கன், அஃதே செய்வென் என்று, அவனின் மீண்டான். 9
இராமன் தேர் அணுக, அதன் எதிரே தேரை விடு எனச் சாரதிக்கு மகோதரன் பணித்தல்
மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்,
ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது; அணுகும் காலை,
மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, முட்டத்
தூண்டுதி தேரை என்றான்; சாரதி தொழுது சொல்லும்: 10
மகோதரன் இராமனுடன் பொருது, முடிதல்
எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும், இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்?
அண்ணல் தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம் என்றான். 11
என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடிந்து, அடா! எடுத்து நின்னைத்
தின்றனென் எனினும் உண்டாம் பழி என, சீற்றம் சிந்தும்
குன்று அன தோற்றத்தான் தன் கொடி நெடுந் தேரின் நேரே
சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது, திமிலத் திண் போர். 12
பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு உண் வாட் கைக்
கல் தடந் திண் தோள் ஆளும், நெருங்கிய கடல்கள் எல்லாம்
வற்றின, இராமன் வாளி வட அனல் பருக; வன் தாள்
ஒற்றை வன் தடந் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான். 13
அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல்,
குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 14
வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறலுடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் ஒன்றால், கழுத்து ஒன்றால், கடிதின் வாங்கி,
செல் ஒன்று கணைகள், ஐயன் சிந்தினான்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி. 15
மகோதரனது முடிவு கண்டு வருந்திய இராவணன், இராமன் எதிரே தேரைச் செலுத்தச் செய்தல்
மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான்,
சேதனை உண்ணக் கண்டான்; செல விடு, செல விடு! என்றான்;
சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரதத் திண் தேர். 16
இராவணன் சேனையை இராமன் கணத்தில் நீறாக்குதல்
பனிப் படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித்
தனிப்படான் ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை
நுனிப் படா நின்ற வீரன், அவன் ஒன்று நோக்காவண்ணம்
குனிப் படாநின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 17
இராவணனுக்குத் துன்னிமித்தம் தோன்றுதல்
அடல் வலி அரக்கற்கு அப் போழ்து, அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, வெற்றிக் கால் கிளர்ந்து உடற்றும்காலை,
வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப போன்று,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் -தோள். 18
உதிர மாரி சொரிந்தது, உலகு எலாம்;
அதிர வானம் இடித்தது; அரு வரை
பிதிர வீழ்ந்தது, அசனி; ஒளி பெறாக்
கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 19
வாவும் வாசிகள் தூங்கின; வாங்கள் இல்
ஏவும் வெஞ் சிலை நாண் இடை இற்றன;
நாவும் வாயும் உலர்ந்தன; நாள்மலர்ப்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 20
எழுது வீணை கொடு ஏந்து பதாகை மேல்
கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர்
ஒழுகுகின்றன, ஓடு இகல் ஆடல் மா;
தொழுவில் நின்றன போன்றன, சூழி மா. 21
துன்னிமித்தங்களை மதியாது, இராவணன் பொர நெருங்குதல்
இன்ன ஆகி, இமையவர்க்கு இன்பம் செய்
துன்னிமித்தங்கள் தோன்றின; தோன்றவும்,
அன்னது ஒன்றும் நினைந்திலன், ஆற்றுமோ,
என்னை வெல்ல, மனித்தன்? என்று எண்ணுவான். 22
வீங்கு தேர் செலும் வேகத்து, வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல்,
தாங்கல் ஆற்றகிலார், தடுமாறித் தாம்
நீங்கினார், இரு பாலும் நெருங்கினார். 23
இராம இராவணர் தோற்றம்
கருமமும் கடைக்கண் உறு ஞானமும்,
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும்,
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும், எனச் சென்று, எதிர் தாக்கினார். 24
சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்,
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்,
பொர உடன்றனர் போலப் பொருந்தினர்,
இரவும் நண்பகலும் எனல் ஆயினார். 25
வென்றி அம் திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர்;
அன்றியும், நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 26
துவனி வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள்,
எவன் அ(வ்) ஈசன்? என்பார் தொழ, ஏற்று, எதிர்
புவனம் மூன்றும் பொலங் கழலால் தொடும்
அவனும் அச் சிவனும் எனல் ஆயினார். 27
இராவணன் சங்கம் ஊத, திருமாலின் சங்கம் தானே முழங்குதல்
கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட,
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 28
சொன்ன சங்கினது ஓசை துளக்குற,
என்ன சங்கு? என்று இமையவர் ஏங்கிட,
அன்ன சங்கைப் பொறாமையினால், அரி-
தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். 29
திருமாலின் ஐம்படையும் அடிமை செய்ய வந்ததை இராமன் காணாதிருத்தல்
ஐயன் ஐம் படை தாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன; தேவரில்
மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள்
பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 30
மாதலி இந்திரனது சங்கை முழக்குதல்
ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடுந் தேவரும்
கூச அண்டம் குலுங்க, குலம் கொள் தார்
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 31
இராவணன்-இராமன் போர்
துமில வாளி அரக்கன் துரப்பன்
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே,
கமல வாள் முக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 32
சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெங் கண் குதிரை குதிப்பன,
ஒன்றை ஒன்று உற்று, எரி உக நோக்கின;
தின்று தீர்வன போலும் சினத்தன. 33
கொடியின்மேல் உறை வீணையும், கொற்ற மா
இடியின் ஏறும், முறையின் இடித்தன-
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால். 34
இருவருடைய வில்லின் ஒலி
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்,
வீழி வெங் கண் இராவணன் வில் ஒலி;
ஆழி நாதன் சிலை ஒலி, அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி, மா மழை ஒத்ததால். 35
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெஞ் சின வீரர் விழுந்தனர்-
ஏங்கி நின்றது அலால், ஒன்று இழைத்திலர்,
வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 36
தேவர்களின் திகைப்பும், பூமழையும்
ஆவது என்னை கொலாம்? என்று அறிகிலார்,
ஏவர் வெல்வர்? என்று எண்ணலர் ஏங்குவார்,
போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால்,
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 37
சேண அந்தரம் நோக்கலும் திண் சரம்,
பூண முந்தின, சிந்தின பூ மழை,
காண வந்த கடவுளர் கை எலாம்-
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ? 38
இருவரின் வில்லின் தகைமை
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில்
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன-
ஆண்ட வில்லிதன் வில்லும், அரக்கன் தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே. 39
இராவனது சினத்தின் எழுச்சி
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும், அப்
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்பபோல்,
குரைக்கும் வேலையும் மேகக் குழாங்களும்
இரைத்து இடிக்கின்ற, இன்றும் ஒர் ஈறு இலா. 40
மண்ணில் செல்வன செல்லினும், மாசு அற
எண்ணின் சூல் மழை இல்ல; இராவணன்
கண்ணின் சிந்திய தீக் கடு வேகத்த
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன. 41
மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்தொறும், நாவொடு
கால் கலங்குவர், தேவர்; கண மழைச்
சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 42
இக் கணத்தும் எறிப்ப தடித்து என,
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என,
பக்கம் வீசும் படைச் சுடர், பல் திசை
புக்குப் போக, பொடிப்பன போக்கு இல. 43
இராவணன் சின மொழி
கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலாச்
சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி, படியின்மேல்
எற்றுவேன் என்று உரைக்கும், இரைக்குமால். 44
தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற,
வடித்து வைத்தன்ன மானுடன் தோள் வலி
ஒடித்து, தேரை உதிர்த்து, ஒரு வில்லொடும்
பிடித்துக் கொள்வென், சிறை எனப் பேசுமால். 45
இராவணன் அம்பு மாரி பொழிதலும், இராமன் தடுத்தலும்
பதைக்கின்றது ஓர் மனமும், இடை படர்கின்றது ஒர் சினமும்,
விதைக்கின்றன பொறி பொங்கின விழியும், உடை வெய்யோன்,
குதிக்கின்றன நிமிர் வெஞ் சிலை குழைய, கொடுங் கடுங் கால்
உதைக்கின்றன சுடர் வெங் கணை, உரும் ஏறு என, எய்தான். 46
உரும் ஒப்பன, கனல் ஒப்பன, ஊற்றம் தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன; மழை ஒப்பன; வானோர்
நிருமித்தன, படை பற்று அற நிமிர்வுற்றன, அமிழ்தப்
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய. 47
துண்டப்பட நெடு மேருவைத் தொளைத்து, உள் உறை தங்காது
அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும், அயிர்த்தார்;
கண்டத் தெறு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச்
சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான். 48
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற,
இடையூறு உறச் சிதைந்தாங்கெனச் சரம் சிந்தின, விறலும்;
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து, அவை துரந்தான்-
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்தென, கடியான். 49
விண் போர்த்தன; திசை போர்த்தன; மலை போர்த்தன; விசை ஓர்
கண் போர்த்தன; கடல் போர்த்தன; படி போர்த்தன; கலையோர்
எண் போர்த்தன; எரி போர்த்தன; இருள் போர்த்தன; என்னே,
திண் போர்த் தொழில்! என்று, ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 50
அல்லா நெடும் பெருந் தேவரும் மறை வாணரும் அஞ்சி,
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர், இருந்தார்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அது கண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான். 51
செந் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன், சிறுவிலை நாள்,
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின, முதல்வன்
வந்து ஈந்தன வடி வெங் கணை; அனையான் வகுத்து அமைத்த
வெந் தீவினைப் பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 52
இராம இராவணப் பெரும் போர்
நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான்,
ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் அறுப்பான்;
கூறு ஆயின, கனல் சிந்துவ, குடிக்கப் புனல் குறுகி,
சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 53
வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம் போர்
வல்லான், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை,
தொல் ஆர் மிடல் வளை, சக்கரம், சூலம், இவை தொடக்கத்து
எல்லாம் நெடுங் கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான். 54
வேல் ஆயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக்
கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒரு கோல் படக் குறைவ-
கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய
சூல் ஆயின, மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க. 55
ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை,-உடனே
பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகில்போல்
தொத்துப் படு நெடுந் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான்-
குத்துக் கொடு நெடுங் கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான். 56
ஈசன் விடு சர மாரியும், எரி சிந்துறு தறுகண்
நீசன் விடு சர மாரியும், இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம் பூதமும் செருக் கண்டனர் நெருக்க,
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன; அனல் ஆயின கொடிய. 57
மந்தரக் கிரி என, மருந்து மாருதி
தந்த அப் பொருப்பு என, புரங்கள் தாம் என,
கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டென
அந்தரத்து எழுந்தது, அவ் அரக்கன் தேர் அரோ. 58
எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சர மழை உருவிப் போதலால்,
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன, ஒல்லெனக்
கழிந்தது, கவிக் குலம், இராமன் காணவே. 59
தேரை விசும்பில் எழவிடுமாறு இராமன் கூற, மாதலி அவ்வாறே செய்தல்
முழவு இடு தோளொடு முடியும் பல் தலை
விழ விடுவேன், இனி; விசும்பு சேமமோ?
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்;
எழ விடு, தேரை என்று இராமன் கூறினான். 60
அந்து செய்குவென் என அறிந்த மாதலி
உந்தினன், தேர் எனும் ஊழிக் காற்றினை;
இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம்
வந்தென, வந்தது, அம் மானத் தேர் அரோ. 61
இருவரது தேரும் சாரிகை திரிதல்
இரிந்தன மழைக் குலம், இழுகித் திக்கு எலாம்;
உரிந்தன உடுக் குலம், உதிர்ந்து சிந்தின;
நெரிந்தன நெடு வரைக் குடுமி; நேர் முறை
திரிந்தன சாரிகை, தேரும் தேருமே. 62
வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு
நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்,
அலம்வரு குல வரை அனைத்தும், அண்டமும்,
சலம் வரும், குயமகன் திகிரித் தன்மைபோல். 63
எழும் புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் இது என்று
உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன,
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர்,
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார். 64
உக்கிலா உடுக்களும், உருள்கள் தாக்கலின்,
நெக்கிலா மலைகளும், நெருப்புச் சிந்தலின்,
வக்கிலாத் திசைகளும், உதிரம் வாய் வழி
கக்கிலா உயிர்களும், இல்லை, காண்பன. 65
தேர்களின் வேகம்
இந்திரன் உலகத்தார் என்பர்; ஏன்றவர்,
சந்திரன் உலகத்தார் என்பர்; தாமரை
அந்தணன் உலகத்தார் என்பர்; அல்லரால்,
மந்தர மலையினார் என்பர்-வானவர். 66
பாற்கடல் நடுவணார் என்பர்; பல் வகை
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர்;
மேல் கடலார் என்பர்; கிழக்கு உளார் என்பர்;
ஆர்ப்பு இடை இது என்பர்-அறிந்த வானவர். 67
மீண்டனவோ? என்பர்; விசும்பு விண்டு உகக்
கீண்டனவோ? என்பர்; கீழவோ? என்பர்;
பூண்டன புரவியோ? புதிய காற்று! என்பர்;-
மாண்டன உலகம் என்று, உரைக்கும் வாயினார். 68
ஏழுடைக் கடலினும், தீவு ஓர் ஏழினும்,
ஏழுடை மலையினும், உலகு ஓர் ஏழினும்,
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா,
ஊழியில் காற்று எனத் திரிந்த, ஓவில. 69
அரக்கன் வீசிய படைக்கலங்களை இராமன் தடுத்தல்
உடைக் கடல் ஏழினும், உலகம் ஏழினும்,
இடைப் படு தீவினும், மலை ஒர் ஏழினும்,
அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய
படைக்கலம், மழை படு துளியின் பான்மைய. 70
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும், ஓட்டிடை
இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன்
செறுத்து ஒரு தொழிலிடைச் செய்தது இல்லையால். 71
தேர்கள் இலங்கையை அணுகுதல்
விலங்களும் வேலையும், மேலும் கீழரும்,
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்,
கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காற்றென,
இலங்கையை எய்திய, இமைப்பின் வந்த தேர். 72
தேர்ப் பரிகளின் திறமை
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது, கடலிடை மணலின் மும்மையால்;
வித்தகர் கடவிய விசயத் தேர் பரி,
எய்த்தில வியர்த்தில, இரண்டு பாலவும். 73
இராமன் தேர்க்கொடியை இராவணன் அறுத்தல்
இந்திரன் தேரின்மேல் உயர்ந்த, ஏந்து எழில்
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை,
சந்திரன் அனையது ஓர் சரத்தினால், தரைச்
சிந்தினன், இராவணன், எரியும் செங் கணான். 74
சாய்ந்த வல் உருமு போய், அரவத் தாழ் கடல்
பாய்ந்த வெங் கனல் என முழங்கிப் பாய்தலும்,
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுறத்
தோய்ந்த நீர் ஆம் எனச் சுருங்கிற்று, ஆழியே. 75
இராமனது தேர்க் குதிரைகள் மீதும், மாதலிமீதும் இராவணன் அம்பு எய்தல்
எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப் பரிக்
குழுக்களைக் கூர்ங் கணைக் குப்பை ஆக்கி, நேர்
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 76
மாதலி மார்பில் அம்பு தைத்தமை கண்டு, இராமன் வருந்துதல்
நீல் நிற நிருதர்கோன் எய்த, நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தன
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த, வீரற்கு. 77
இராவணன் அம்புகளால் இராமன் மறைபடுதல்
மண்டில வரி சிலை வானவில்லொடும்
துண்ட வெண் பிறை எனத் தோன்ற, தூவிய
உண்டை வெங் கடுங் கணை ஒருங்கு மூடலால்,
கண்டிலர் இராமனை, இமைப்பு இல் கண்ணினார். 78
தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால்
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்;
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழுமாய்க்
காற்று இயக்கு அற்றது; கலங்கிற்று அண்டமே. 79
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி
பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல,
வெங் கதிர் தண் கதிர், விலங்கி மீண்டன;
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால். 80
திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன் என, மேருவும் குலுக்கம் உற்றதே. 81
வானரத் தலைவனும், இளைய மைந்தனும்,
ஏனை, அத் தலைவனைக் காண்கிலேம் எனக்
கானகக் கரி எனக் கலங்கினார்; கடல்
மீன் எனக் கலங்கினார், வீரர் வேறு உளார். 82
இராவணன் தேர்க் கொடியை இராமன் வீழ்த்துதல்
எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக்
கொய்தனன் அகற்றி, வெங் கோலின் கோவையால்
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 83
தூணுடை நிரை புரை கரம் அவைதொறும் அக்
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய,
சேணுடை நிகர் கணை சிதறினன்-உணர்வொடு
ஊணுடை உயிர்தொறும் உறைவுறும் ஒருவன். 84
கயில் விரிவு அற வரு கவசமும் உருவிப்
பயில் விரி குருதிகள் பருகிட, வெயிலொடு
அயில் விரி சுடு கணை கடவினன்-அறிவின்
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன். 85
திசை உறு துகிலது, செறி மழை சிதறும்
விசை உறு மிகிழது, விரிதரு சிரனொடு
இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத்
தசை உறு கணைகொடு தரை உற விடலும். 86
படை உக, இமையவர் பருவரல் கெட, வந்து
இடை உறு திசை திசை இழுகுற, இறைவன்
அடையுறு கொடிமிசை அணுகினன்-அளவு இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 87
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக்
கண் அகன் உலகினை வலம் வரு கலுழன்
நண்ணலும், இமையவர், நமது உறு கருமம்
எண்ணலம், முனிவினின் இவறினன் எனவே. 88
இராவணன் தாமதம் என்னும் படையை விடுதலும், அப் படையின் செயல்களும்
ஆயது ஒர் அமைதியின், அறிவினின் அமைவான்
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்,
ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத்
தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன். 89
தீ முகம் உடையன சில; முகம் உதிரம்
தோய் முகம் உடையன; சுரர் முகம் உடைய;
பேய் முகம் உடையன; பிலமுகம் நுழையும்
வாய்முகம் வரி அரவு அனையன வருவ. 90
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்,
இரு திசை எயிறு உற வருவன; பெரிய;
கருதிய கருதிய புரிவன; கனலும்
பருதியை மதியொடு பருகுவ-பகழி. 91
இருள் ஒரு திசை, ஒரு திசை வெயில் விரியும்;
சுருள் ஒரு திசை, ஒரு திசை மழை தொடரும்;
உருள் ஒரு திசை, ஒரு திசை உரும் முரலும்;
மருள் ஒரு திசை, ஒரு திசை சிலை வருடம். 92
இராமன் சிவனது படையை விட்டு, தாமதப் படையைத் தொலைத்தல்
இனையன நிகழ்வுற, எழு வகை உலகும்
கனை இருள் கதுவிட, அமரர்கள் கதற,
வினை உறு தொழிலிடை விரவலும், விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின், 93
கண்ணுதல் ஒருவனது அடு படை கருதிப்
பண்ணவன் விடுதலும், அது நனி பருக;
எண்ணுறு கனவினொடு உணர்வு என, இமையில்,
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய 94
இராவணன் இராமன் மேல், ஆசுரப் படையை விடுதல்
விருந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த;
எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன்
தெரிந்த வெங் கணை, கங்க வெஞ் சிறை அன்ன, திறத்தான்,
அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 95
ஆர்த்து, வெஞ் சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர்
வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத்
தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து,
தீர்த்தன்மேல் வரத் துரந்தனன், உலகு எலாம் தெரிய. 96
ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின்
ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இறத் துரந்த வெங் கணையது, - விசையின்
பூசுரர்க்கு ஒரு கடவுள் மேல் சென்றது போலாம். 97
ஆசுரப் படையை அக்கினிப் படையால் இராமன் அறுத்தல்
நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடி வரை என்ன,
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப,
மங்குல் வல் உருமேற்றின்மேல் எரி மடுத்தென்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 98
தொடர்ந்து இராவணன் பல படை துரக்க, இராமன் அவற்றைப் பிறைமுக அம்புகளால் பிளத்தல்
கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 99
என்ன கைக் கடுப்போ! என்பர் சிலர்; சிலர், இவையும்
அன்ன மாயமோ; அம்பு அல என்பர்; அவ் அம்புக்கு
இன்னம் உண்டுகொல் இடம்! என்பர் சிலர்; சிலர், இகல் போர்
முன்னம் இத்தனை முயன்றிலனாம் என்பர்-முனிவர். 100
மறைமுதல் தனி நாயகன், வானினை மறைத்த
சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய,
பொறை சிகைப் பெருந் தலைநின்றும் புங்கத்தின் அளவும்
பிறை முகக் கடு வெஞ் சரம் அவை கொண்டு பிளந்தான். 101
இராவணன் விட்ட மயன் படையைக் கந்தருவக் கணையால் இராமன் போக்குதல்
அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந் தவம் ஆற்றி,
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி என விரைந்தான்;
மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 102
விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகைச்
சுட்டனன் எனத் துணுக்கமுற்று, அமரரும் சுருண்டார்;
கெட்டனம் என வானரத் தலைவரும் கிழிந்தார்;
சிட்டர் தம் தனித் தேவனும், அதன் நிலை தெரிந்தான். 103
பாந்தள் பல் தலைப் பரப்பு அகன் புவியிடைப் பயிலும்
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனைக்
காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான்-
ஏந்தல் பல் மணி எறுழ் வலித் திரள் புயத்து இராமன். 104
இராவணன் தண்டாயுதம் எறிய, அம்பினால் இராமன் அதைப் பொடியாக்கல்
பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத்
தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது,
உண்டு இங்கு என் வயின்; அது துரந்து உயிர் உண்பென் என்னா,
தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தொடு ஐந்துடைத் தலையான். 105
தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா
மேகு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது,
ஓர் உகம் தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச்
சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரத்தை. 106
பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது, பனிப்புற்று
அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம்
தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர,
விசும்பு பாழ்பட, வந்தது மந்தரம் வெருவ. 107
கண்டு, தாமரைக் கடவுள் மாப் படை எனக் கழறா,
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா,
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முகக் கணையால்
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான். 108
இராவணன் மாயையின் படையை விடல்
தேய நின்றவன், சிலை வலம் காட்டினான்; தீராப்
பேயை என் பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல்
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய
மாயையின் படை தொடுப்பென் என்று, இராவணன் மதித்தான். 109
பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும்
ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி,
ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா
வீசி மேற் செல, வில் விசைத் தொடை கொண்டு விட்டான். 110
மாயம் பொத்திய வயப் படை விடுதலும், வரம்பு இல்
காயம் எத்தனை உள, நெடுங் காயங்கள் கதுல,
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர்-அமரில்
தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார். 111
இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும்,
தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும்,
மந்திரச் சுற்றத்தவர்களும், வரம்பு இலர் பிறரும்,
அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 112
குடப் பெருஞ் செவிக் குன்றமும், மற்றுள குழுவும்,
ப்டைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட,
விடைத்து எழுந்தன-யானை, தேர், பரி, முதல் வெவ்வேறு
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அல் வழி அடைய. 113
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய் சினப் பெருங் கடற்படை களப் பட்ட எல்லாம்,
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன,
தேசம், முற்றவும் செறிந்தன, திசைகளும் திசைக்க. 114
சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த-
வென்றதும் எங்களைப்போலும்; யாம் விளிவதும் உளதோ?
இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின் என்னா,
கொன்ற கொற்றவர்தம் பெயர் குறித்து அறைகூவி. 115
மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல்
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய,
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய,
பேர் இடம் கதுவ அரிது, இனி விசும்பு என, பிறந்த,
பேர் இடங்கரின் கொடுங் குழை அணிந்தன பேய்கள். 116
மாயத்தினால் தோன்றியவர் பல வகைப் படைகளை ஏந்தி நிற்றல்
தாமசத்தினில் பிறந்தவர், அறம் தெறும் தகையர்,
தாம் அசத்தினில் செல்கிலாச் சதுமுகத்தவற்கும்
தாமசத்தினைத் தொடர்ந்தவர், பரிந்தன தாழ்ந்தார்-
தாம சத்திரம் சித்திரம் பொருந்திய, தயங்க. 117
தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர்,
தாம இந்துவின் பிளவு எனத் தயங்கு வாள் எயிற்றர்,
தாம் அவிஞ்சையர், கடல் பெருந் தகையினர், தரளத்
தாம விஞ்சையர் துவன்றினர், திசைதொறும் தருக்கி. 118
தாம் மடங்கலும், முடங்கு உளை யாளியும் தகுவார்,
தாம் அடங்கலும் நெடுந் திசை உலகொடும் தகைவார்,
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார்,
தாம் மடங்கலும் கொடுஞ் சுடர்ப் படைகளும் தரித்தார். 119
மாயப் படையின் விளைவு கண்டு, இராமன் மாதலியை வினவுதல்
இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன்,
வினையம் மற்று இது மாயமோ? விதியது விளைவோ?
வனையும் வன் கழல் அரக்கர்தம் வரத்தினோ? மற்றோ?
நினைதியாமெனின், பகர் என, மாதலி நிகழ்த்தும்: 120
இராமன் ஞானக் கணையால் அதனை ஒழித்தல்
இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி,
விருப்பின், கோடியால் விலைக்கு எனும் பதடியின், விட்டான்-
கருப்புக் கார் மழை வண்ண!-அக் கடுந் திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீள அரு மாயம். 121
வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின்,-
நோய்க்கும், நோய் தரு வினைக்கும், நின் பெரும் பெயர் நொடியின்,
நீக்குவாய்!-உனை நினைக்குவார் பிறப்பு என, நீங்கும். 122
வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர்
உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும், ஓடத்
துரத்தியால் என, ஞான மாக் கடுங் கணை துரந்தான்-
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன். 123
துறத்தல் ஆற்று உறு ஞான மாக் கடுங் கணை தொடர,
அறத்து அலாது செல்லாது, நல் அறிவு வந்து அணுக,
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது, அம் மாயை. 124
இராவணன் சூலம் வீசுதல்
நீலம் கொண்டு ஆர் கண்டனும், நேமிப் படையோனும்,
மூலம் கொண்டார், கண்டகர் ஆவி முடிவிப்பான்,
காலம் கொண்டார்; கண்டன முன்னே கழிவிப்பான்,
சூலம் கொண்டான், அண்டரை எல்லாம் தொழில் கொண்டான். 125
கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது, கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது, வீரர்-
கண் தா, குலம், முற்றும் சுடும் என்று அக் கழல் வெய்யோன்,
கண் தாகுதல் முன், செல்ல விசைத்துள்ளது கண்டான். 126
எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி,
திரியாநிற்கும் தேவர்கள் ஓட, திரள் ஓட,
இரியாநிற்கும் எவ் உலகும் தன் ஒளியே ஆய்,
விரியா நிற்கும்; நிற்கிலது, ஆர்க்கும் விழி செல்லா, 127
சூலத்தை வெல்ல தேவர்கள் இராமனை வேண்டுதல்
செல்வாய் என்னச் செல்ல விடுத்தான்; இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே; வேறு ஒருவர்க்கும் உடையாதால்;
வல் வாய் வெங் கண் சூலம் எனும் காலனை, வள்ளால்!
வெல்வாய், வெல்வாய்! என்றனர், வானோர், மெலிகின்றார். 128
சூலத்தின்மேல் எறிந்த படைகள் பயனிலவாக, இராமன் செய்வதறியான் போல் இருத்தல்
துனையும் வேகத்தால் உரும் ஏறும் துண்ணென்ன
வனையும் காலின் செல்வன,-தன்னை மறவாதே
நினையும் ஞானக் கண் உடையார்மேல் நினையாதார்
வினையம் போலச் சிந்தின-வீரன் சரம் வெய்ய. 129
எய்யும், எய்யும் தேவருடைத் திண் படை எல்லாம்;
பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவி தந்தான்
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான்,
ஐயன் நின்றான், செய் வகை ஒன்றும் அறிகில்லான். 130
இராமனை நெருங்கிய சூலம் அவனது உங்காரத்தால் பொடியாதல்
மறந்தான் செய்கை; மற்று எதிர் செய்யும் வகை எல்லாம்
துறந்தான் என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்;
அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே,
பிறந்தான் நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச. 131
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப, தழல் சிந்த,
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடிப் புகலோடும்,
வெங் காரத்தான் முற்றும் முனிந்தான்; வெகுளிப் பேர்
உங்காரத்தால் உக்கது, பல் நூறு உதிர் ஆகி. 132
வானோரின் பெரு மகிழ்ச்சி
ஆர்ப்பார் ஆனார்; அச்சமும் அற்றார்; அலர் மாரி
தூர்ப்பார் ஆனார்; துள்ளல் புரிந்தார்; தொழுகின்றார்,
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை
பேர்ப்பாய் போலாம்! என்றனர்-வானோர், உயிர் பெற்றார். 133
இராமனை வேத முதல்வனோ என இராவணன் கருதுதல்
வென்றான் என்றே, உள்ளம் வெயர்த்தான், விடு சூலம்
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான்;
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா
நின்றான், அந் நாள் வீடணனார் சொல் நினைவுற்றான். 134
சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்? என்றான். 135
இராவணன் நிருதியின் படையை விடுதல்
யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; பெயர்கில்லேன்;
நேரே செல்வென்கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி,
வேரே நிற்கும்; மீள்கிலென் என்னா, விடலுற்றான். 136
நிருதித் திக்கில் நின்றவன் வென்றிப் படை நெஞ்சில்
கருதி, தன்பால் வந்தது அவன் கைக்கொடு, காலன்
விருதைச் சிந்தும் வில்லின் வலித்து, செலவிட்டான்-
குருதிச் செங் கண் தீ உக, ஞாலம் குலைவு எய்த. 137
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச,
பெய்யும் கோடிப் பல் தலையோடும் அளவு இல்லா,
மெய்யும் வாயும் பெற்றன, மேருக் கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப, 138
வாய் வாய்தோறும் மா கடல் போலும் விட வாரி
போய் வாழ்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற
மீவாய் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற,
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற. 139
கடித்தே தீரும்; கண் அகன் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற,
முடித்தான் அன்றோ, வெங் கண் அரக்கன்? முழு முற்றும்
பொடித்தான் ஆகும், இப்பொழுது என்னப் புகைகின்ற. 140
நிருதிப் படையைப் போக்க, இராமன் கருடப் படையை விடுதல்
அவ்வாறு உற்ற ஆடு அரவன் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான்,
எல் வாய்தோறும் எய்தின என்னா, எதிர் எய்தான்,
தவ்வா உண்மைக் காருடம் என்னும் படைதன்னால். 141
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன,
பவணத்து அன்ன வெஞ் சிறை வேகத் தொழில் பம்ப,
சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெல் போர்
உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம். 142
அளக்க அரும் புள் இனம் அடைய ஆர் அழல்
துளக்க அரும் வாய்தொறும் எரியத் தொட்டன,
இளக்க அரும் இலங்கை தீ இடுதும், ஈண்டு என
விளக்கு இனம் எடுத்தன போன்ற, விண் எலாம். 143
குயின்றன சுடர் மணி, கனலின் குப்பையின்
பயின்றன, சுடர் தரப் பதும நாளங்கள்
வயின் தொறும் கவர்ந்தென, துண்ட வாள்களால்
அயின்றன, புள் இனம் உகிரின் அள்ளின. 144
ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன்,
தீயிடைப் பொடிந்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடு சரம் உருமின் தோற்றத்த. 145
அங்கு அ(வ்) வெங் கடுங் கணை அயிலின் வாய்தொறும்,
வெங் கணை படப் பட, விசையின் வீழ்ந்தன;
புங்கமே தலை எனப் புக்க போலுமால்;
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல! 146
இராவணன் விஞ்சைகள் தளர்தலும், இராமன் வீரமும் வலியும் மிகுதலும்
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில்,
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன, விஞ்சைகள், நிலையின் தீர்ந்தன;
மிக்கன, இராமற்கு வலியும் வீரமும். 147
பிறை முக அம்பினால் இராமன் இராவணன் தலையை அறுக்க, அது கடலில் போய் விழுதல்
வேதியர் வேதத்து மெய்யன, வெய்யவற்கு
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்,
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான்,
பாதியின் மதி முகப் பகழி ஒன்றினால். 148
மேருவின் கொடுமுடி, வீசு கால் எறி
போரிடை, ஒடிந்து போய், புணரி புக்கென
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை
நீரிடை விழுந்தது, நெருப்பொடு அன்று போய். 149
குதித்தனர் பாரிடை, குன்று கூறுற
மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினார்
துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினார்;
மதித்தனர், இராமனை-வானுளோர் எலாம். 150
இராவணனது அற்ற தலை மீண்டும் முளைத்து, இராமனை ஆரவாரத்துடன் வைது அதட்டுதல்
இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால்
பிறந்துளதாம் எனப் பெயர்த்தும், அத் தலை
மறந்திலது எழுந்தது, மடித்த வாயது;-
சிறந்தது தவம் அலால், செயல் உண்டாகுமோ! 151
கொய்தது, கொய்திலது என்னும் கொள்கையின்
எய்த வந்து, அக் கணத்து எழுந்தது ஓர் சிரம்,
செய்த வெஞ் சினத்துடன் சிறக்கும் செல்வனை
வைதது, தெழித்தது, மழையின் ஆர்ப்பினால். 152
கடலீல் வீழ்ந்த இராவணன் தலையும் ஆரவாரித்தல்
இடந்தது கிரிக் குவடு என்ன எங்கணும்
படர்ந்தது, குரை கடல் பருகும் பண்பது,
விடம் தரு விழியது, முடுகி, வேலையில்
கிடந்ததும், ஆர்த்தது, மழையின் கேழது. 153
இராவணனது கையை இராமன் அறுக்க, அதுவும் முன்போல் முளைத்தல்
விழுத்தினன் சிரம் எனும் வெகுளி மீக்கொள,
வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்த ஓர்
எழுத்தினன், தோள்களின் ஏழொடு ஏழு கோல்
அழுத்தினன்-அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 154
தலை அறின், தருவது ஓர் தவமும் உண்டு என,
நிலை உறு நேமியான் அறிந்து, நீசனைக்
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான். 155
கொற்ற வெஞ் சரம் பட, குறைந்து போன கை
பற்றிய கிடந்தது சிலையைப் பாங்குற
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது;
அற்ற கை, பிறந்த கை, யார் அது ஓர்குவார்? 156
அற்ற தன் கையை எடுத்து இராவணன் மாதலிமேல் வீசித் தாக்குதல்
பொன் கயிற்று ஊர்தியான் வலியைப் போக்குவான்
முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற,
மின் கையில் கொண்டென வில்லை விட்டிலா
வன் கையைத் தன் கையின் வலியின் வாங்கினான். 157
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய
தளம் கிளர் தடக் கை தன் மார்பில் தாக்கலும்,
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி
துளங்கினன், வாய் வழி உதிரம் தூவுவான். 158
மாதலிமேல் இராவணன் தோமரம் வீச, இராமன் அதனைத் துகளாக்குதல்
மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர்
தோமரத்தால் உயிர் தொலைப்பத் தூண்டினன்-
தாம் அரத்தால் பொராத் தகை கொள் வாட் படை,
காமரத்தால், சிவன் கரத்து வாங்கினான். 159
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என,
மூண்ட வெந் தழல் சிந்த முடுக்கலும்,
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெங் கணை
தூண்டினான்; துகளானது, தோமரம். 160
இராவணனது தலைகளை இராமன் தொடர்ந்து அறுக்க, அவை பல இடங்களிலும் சிதறி விழுதல்
ஓய்வு அகன்றது, ஒரு தலை நூறு உற,
போய் அகன்று புரள, பொரு கணை
ஆயிரம் தொடுத்தான்-அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை நடத்தியே. 161
நீர்த் தரங்கங்கள்தோறும், நிலம்தொறும்,
சீர்த்த மால் வரைதோறும், திசைதொறும்,
பார்த்த பார்த்த இடம்தொறும், பல் தலை
ஆர்த்து வீழ்ந்த-அசனிகள் வீழ்ந்தென. 162
தகர்ந்து மால் வரை சாய்வுறத் தாக்கின;
மிகுந்த வான்மிசை மீனம் மலைந்தன;
புகுந்த மா மகரக் குலம் போக்கு அற
முகந்த வாயின், புணரியை முற்றுற. 163
வீழ்ந்த இராவணனது தலைகளின் கண்களைப் பேய்கள் தோண்டுதல்
பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின்,
பழுது சொல்லும் அன்றே, மற்றைப் பண்பு எலாம்?-
தொழுது சூழ்வன முன், இன்று தோன்றியே,
கழுது சூன்ற, இராவணன் கண் எலாம். 164
இராவணன் வாள் முதலியன வீச, இராமன் அவனை வெல்லும் வகை குறித்துச் சிந்தித்தல்
வாளும், வேலும், உலக்கையும், வச்சிரக்
கோளும், தண்டும், மழு எனும் கூற்றமும்,
தோளின் பத்திகள்தோறும் சுமந்தன,
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான். 165
அனைய சிந்திட, ஆண் தகை வீரனும்
வினையம் என் இனி? யாதுகொல் வெல்லுமா?
நினைவென் என்ன, நிசாசரன் மேனியைப்
புனைவென், வாளியினால் எனப் பொங்கினான். 166
இராவணனது மேனியை முற்றும் அம்பினால் இராமன் மூடுதல்
மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,
நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும்,
வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். 167
வாய் நிறைந்தன, கண்கள் மறைந்தன,
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன,
தோய்வுறும் கணை, செம்புனல் தோய்ந்தில,
போய் நிறைந்தன, அண்டப் புறம் எலாம். 168
மயிரின் கால்தொறும் வார் கணை மாரி புக்கு,
உயிரும் தீர உருவின் ஓடலும்,
செயிரும் சீற்றமும் நிற்க, திறல் திரிந்து,
அயர்வு தோன்ற, துளங்கி அழுங்கினான். 169
தேரில் இராவணன் உணர்வு இழந்து கிடக்க, சாரதி தேரை விலக்கி
நிறுத்தலும், இராமன் அம்பு எய்தலைத் தவிர்த்தலும்
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர்
சோரி சோர, உணர்வு துளங்கினான்;
தேரின் மேல் இருந்தான்-பண்டு தேவர் தம்
ஊரின் மேலும் பவனி உலாவினான். 170
ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்;
வேர்த்துத் தீவினை வெம்பி விழுந்தது;
போர்த்துப் பொய்த்தனன் என்று, பொலம் கொள் தேர்
பேர்த்துச் சாரதி போயினன், பின்றுவான். 171
கை துறந்த படையினன், கண் அகல்
மெய் துறந்த உணர்வினன், வீழ்தலும்,
எய் திறம் தவிர்ந்தான்-இமையோர்களை
உய் திறம் துணிந்தான், அறம் உன்னுவான். 172
இப்பொழுதே இவனைக் கொல்வாய் என்ற மாதலிக்கு, இராமன், அது நீதி அன்று என மறுத்தல்
தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது;
ஊறுதான் உற்றபோதே உயிர்தனை
நூறுவாய் என, மாதலி நூக்கினான்;
ஏறு சேவகனும், இது இயம்பினான். 173
படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?
கடை துறந்தது போர், என் கருத்து என்றான். 174
உணர்வு பெற்ற இராவணன், தேரைத் திரும்பி நிறுத்தியதற்காகச் சாரதியைச் சினத்தல்
கூவிரம் செறி பொன் கொடித் தேரொடும்
போவர் அஞ்சினர், அன்னது ஓர் போழ்தினின்,
ஏவர் அஞ்சலையாதவர்? எண்ணுடைத்
தேவர் அஞ்ச, இராவணன் தேறினான். 175
உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என,
மறக் கண் வஞ்சன், இராமனை வான் திசைச்
சிறக்கும் தேரொடும் கண்டிலன்; சீற்றத் தீப்
பிறக்க நோக்கினன், பின்னுற நோக்கினான். 176
தேர் திரித்தனை, தேவரும் காணவே;
வீர விற்கை இராமற்கு வெண் நகை
பேர உய்த்தனையே; பிழைத்தாய் எனா,
சாரதிப் பெயரோனைச் சலிப்புறா. 177
தஞ்சம் நான் உனைத் தேற்ற, தரிக்கிலா
வஞ்ச! நீ பெருஞ் செல்வத்து வைகினை;
அஞ்சினேன் எனச் செய்தனை; ஆதலால்,
உஞ்சு போதிகொலாம்! என்று உருத்து எழா. 178
சாரதி தேரைத் திருப்பி நிறுத்திய காரணத்தைத் தெரிவித்தல்
வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன்
தாள் கடைக்கு அணியாத் தலை தாழ்வுறா,
மூள் கடைக் கடுந் தீயின் முனிவு ஒழி,
கோள் கடைக் கணித்து என்று அவன் கூறுவான்: 179
ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆண்டு இறை
ஈண்ட நின்றிடின், ஐயனே! நின் உயிர்
மாண்டது அக் கணம் என்று, இடர் மாற்றுவான்,
மீண்டது, இத் தொழில்; எம் வினை மெய்ம்மையால். 180
ஓய்வும் ஊற்றமும் நோக்கி, உயிர் பொறைச்
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்,
மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால்
காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால். 181
இராவணன் சாரதிமேல் இரக்கம் கொண்டு, தேரை மீட்கச் செய்து இராமன் எதிருறல்
என்று இறைஞ்சலும், எண்ணி இரங்கினான்,
வென்றி அம் தடந் தேரினை மீட்க! என,
சென்று எதிர்ந்தது, தேரும்; அத் தேர்மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா. 182
கூற்றின் வெங் கணை கோடியின் கோடிகள்
தூற்றினான், வலி மும் மடி தோற்றினான்;
வேற்று ஓர் வாள் அரக்கன் என, வெம்மையால்
ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார். 183
இராமன் இராவணனின் வில்லைத் துண்டித்தல்
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர்
சொல் உண்டாயதுபோல், இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா,
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான். 184
நாரணன் படை நாயகன் உய்ப்புறா,
பார் அணங்கினைத் தாங்குறும் பல் வகை
வாரணங்களை வென்றவன் வார் சிலை
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான். 185
அயன் படைத்த வில், ஆயிரம் பேரினான்
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும்,
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும்,
பயன் படைத்தனம், பல் கவத்தால் என்றார். 186
மாறி மாறி, வரிசிலை வாங்கினான்
நூறு நூறினொடு ஐ-இருநூறு அவை
வேறு வேறு திசை உற, வெங் கணை
நூறி நூறி, இராமன் நுறுக்கினான். 187
இருப்புலக்கை, வேல், தண்டு, கோல், ஈட்டி, வாள்,
நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம்,
திருப் புலக்க உய்த்தான்-திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். 188
அவை அனைத்தும் அறுத்து, அகன் வேலையில்
குவை அனைத்தும் எனக் குவித்தான், குறித்து,
இவை அனைத்தும் இவனை வெல்லா எனா,
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான். 189
கண்ணினுள் மணியூடு கழிந்தன,
எண்ணின் நுண் மணலின் பல வெங் கணை;
புண்ணினுள் நுழைந்து ஓடிய, புந்தியோர்
எண்ணின் நுண்ணிய; என் செயற்பாற்று எனா, 190
நாரணன் திரு உந்தியில் நான்முகன்
பார வெம் படை வாங்கி, இப் பாதகன்
மாரின் எய்வென் என்று எண்ணி, வலித்தனன்,
ஆரியன், அவன் ஆவி அகற்றுவான். 191
முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா,
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா,
மந்தரம் புரை தோள் உற வாங்கினான். 192
புரம் சுடப் பண்டு அமைந்தது, பொன் பணை
மரம் துளைத்தது, வாலியை மாய்த்துளது,
அரம் சுடச் சுடர் நெஞ்சன் அரக்கர் கோன்
உரம் சுட, சுடரோன் மகன் உந்தினான். 193
அயன்படை இராவணனது மார்பில் பாய, அவன் உயிர் இழத்தல்
காலும் வெங் கனலும் கடை காண்கிலா,
மாலும் கொண்ட வடிக் கணை, மா முகம்
நாலும் கொண்டு நடந்தது, நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 194
ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம்,
பாழி மாக் கடலும் வெளிப் பாய்ந்ததால்-
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற,
வாழி வெஞ் சுடர் பேர் இருள் வாரவே. 195
அக் கணத்தின் அயன் படை ஆண்தகை
சக்கரப் படையோடும் தழீஇச் சென்று,
புக்கது, அக் கொடியோன் உரம்; பூமியும்,
திக்கு அனைத்தும், விசும்பும்; திரிந்தவே. 196
முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
எக் கோடியாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று, இராகவன் தன் புனித வாளி. 197
இராவணனைக் கொன்ற அம்பு தூ நீராடி மீண்டு, இராமனது தூணியில் புகுதல்
ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும், ஆசி கூறித்
தூர்க்கின்ற மலர் மாரி தொடரப் போய், பாற்கடலில் தூய் நீர் ஆடி,
தேர்க் குன்ற இராவணன் தன் செழுங் குருதிப் பெரும் பரவைத் திரைமேல் சென்று,
கார்க்குன்றம் அனையான் தன் கடுங் கணைப் புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா. 198
தேரிலிருந்து இராவணன் தலைகீழாக நிலத்தில் விழுந்து, முகம் பொலிவுற்றுக் கிடத்தல்
கார் நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ என, திணி தோட் காட்டின் நின்றும்,
தார் நின்ற மலைநின்றும், பணிக் குலமும் மணிக் குலமும் தகர்ந்து சிந்த,
போர் நின்ற விழிநின்றும் பொறிநின்று புகையோடும் குருதி பொங்க,
தேர் நின்று நெடு நிலத்துச் சிரமுகம் கீழ்ப் பட விழுந்தான், சிகரம் போல்வான். 199
வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய,
தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா. 200
இராமன் இராவணனைப் பார்த்தல்
பூதலத்தது ஆக்குவாயாக, இனிப்பொலந் தேரை என்ற போதில்,
மாதலிப் பேரவன் கடவ, மண் தலத்தின் அப் பொழுதே வருதலோடும்,
மீது அலைத்த பெருந் தாரை விசும்பு அளப்பக் கிடந்தான் தன் மேனி முற்றும்
காதலித்த உரு ஆகி, அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரியக் கண்டான். 201
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியைச் செலுத்தி, பின்னர்,
பாரிடம்மீதினின் அணுகி, தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற,
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப் போர்விரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உரு முற்றும் திருவாளன் தெரியக் கண்டான். 202
புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற செல்வத்தின் பன்மைத் தன்மை
நிலை மேலும் இனி உண்டோ ? நீர்மேலைக் கோலம் எனும் நீர்மைத்து அன்றே
தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் படர்புறத்தும் தாவி ஏறி,
மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால் வானரங்கள், வரம்பு இலாத. 203
தோடு உழுத நறுந் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழியத் தொங்கல்
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப, பணைக் கை யானைக்
கோடு உழுத நெடுந் தழும்பின் குவை தழுவி, எழு மேகக் குழுவின் கோவைக்
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தனபோல் கிடக்கக் கண்டான்: 204
இராவணனின் புறப்புண் கண்ட இராமன் முறுவலித்தல்
தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும், தருக்கினோன் தன்
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புறக் கிளர்ந்து தோன்றும்
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும், மருவ நின்ற
முளரி அம் கண்ணன், மூரல் முறுவலன், மொழிவதானான்: 205
வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும்,
பொன்றினான் என்று தோளைப் பொது அற நோக்கும் பொற்புக்
குன்றி ஆசுற்றது அன்றே-இவன் எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா. 206
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்னக் கற்கும்
வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப்
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும் போலாம்
நேர்த்ததும் காணலுற்ற; ஈசனார் இருக்கை நிற்க! 207
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது,
ஊண் தொழில் உகந்து, தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண,
பூண் தொழில் உடைய மார்பா! போர்ப் புறங்கொடுத்தோர்ப் போன்ற
ஆண் தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான். 208
இராவணனது முதுகில் வடு உற்ற உண்மையை வீடணன் விளக்கி, அவனது உயர்வைப் புலப்படுத்துதல்
அவ் உரைக்கு இறுதி நோக்கி, வீடணன், அருவிக் கண்ணன்,
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன்,
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ! என்னா,
எவ் உயிர்ப் பொறையும் நீங்க இரங்கி நின்று, இனைய சொன்னான்: 209
ஆயிரம் தோளினானும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனியும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்? 210
நாடு உளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும் பெருந் திசை எல்லை யானைக்
கோடு உளதனையும் புக்குக் கொடும் புறத்து எழுந்த புண் கோள்
பாடு உளது அன்றி, தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும்? 211
அப் பணை அனைத்தும் மார்புக்கு அணி எனக் கிடந்த; வீரக்
கைப் பணை முழங்க, மேல்நாள், அமரிடைக் கிடைத்த காலன்
துப்பு அணை வயிர வாளி விசையினும், காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலும், வெரிநிடைப் போய அன்றே. 212
அவ் வடு அன்றி, இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன் வயின் செல்லின், தேவ!
வெவ் விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை
அவ் விட நாகம் எல்லாம் அணுகினும், அணுகல் ஆற்றா. 213
வென்றியாய்! பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம், ஆண்டு, ஓர்
பன்றியாய் எயிற்றுக் கொண்ட பரம்பரன் முதல பல்லோர்,
என்று யாம் இடுக்கண் தீர்வது? என்கின்றார்; இவன் இன்று உன்னால்
பொன்றினான் என்றபோதும், புலப்படார், பொய்கொல்? என்பர். 214
இராவணனுக்கு இறுதிக்கடன் செய்ய இராமன் வீடணனைப் பணித்தல்
அன்னதோ? என்னா, ஈசன் ஐயமும் நாணும் நீங்கி,
தன்ன தோள் இணையை நோக்கி, வீடணா! தக்கது அன்றால்;
என்னதோ, இறந்துளான் மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு, ஈண்டச்
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி என்றான். 215
மிகைப் பாடல்கள்
புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன், வென்றி
சுரந்தருள் அனுமன், நீலன், அங்கதன், சுக்கிரீவன்,
உரம் தரு வீரர் ஆதிக் கவிப் படைத் தலைவருள்ளார்,
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர், திரியலுற்றார். 5-1
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வயப் படைத் தலைவரோடு
நிரம்பிய வெள்ளச் சேனை நிரு தரும், களிறும், தேரும்,
மரம் படர் கானில் தீப்போல், வள்ளல் தன் பகழி மாரி
பொரும்படி உடல்கள் சிந்தி, பொன்றினர் எவரும் அம்மா. 17-1
பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக,
தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது; சமரபூமி
எங்கணும் கவந்தம் ஆட, எய்தி அங்கு அரக்கிமார்கள்,
தங்கள் தம் கணவர்ப் பற்றி, தம் உடல் தாங்கள் நீத்தார். 17-2
எழும் படை வெள்ளம் எல்லாம், இரண்டு ஒரு கடிகை தன்னில், ஆங்கு
களம் பட, கமலக்கண்ணன் கடுங் கனல் பகழி மாரி
வளம் படச் சிலையில் கோலி, பொழிந்து, அவை மடித்தான்; கண்டு,
உளம் கனல் கொளுந்த, தேரின் உருத்து, எதிர், அரக்கன் வந்தான். 17-3
மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல்
தாவினன் தேரொடும், அரக்கன்; தாவியே,
கூவினன்; அங்கு அறைகூவ, கொண்டலும்
மேவினன், அரக்கனை விடாது பற்றியே. 71-1
அண்டம் ஓராயிர கோடி எங்கணும்
மண்டினர், செருத் தொழில் மலைதல் விட்டிலர்;
அண்டர்கள் கலங்கினர்; அரக்கராயுளோர்
உண்டு, இனிக் கரு என ஓதற்கு இல்லையால். 71-2
உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது,
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது,
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது,
இமையவர் அடல் வலி பருகியது, எளிமையின். 89-1
மயன் படைக்கலம் அழிந்தது கண்டு, இகல் மறவோன்,
சயம் படைத்தது நன்று; இவன் செருக்கினைத் தடுக்க,
பயன் படைத்துள தண்ட மாப் படைகள் உண்டு; அதனால்,
நயம் படைப்பென் என்று, ஒரு கதை நாதன்மேல் எறிந்தான். 104-1
அன்ன மாக் கதை விசையொடு வருதலும், அமலன்
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான்;
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய,
சின்னமாக்கினன்; அது கண்டு, அங்கு அரக்கனும் சினந்தான். 106-1
ஆயது ஆக்கிய செய்கை கண்டு, அரக்கனும் சினந்தே,
தீயின் மாப் படை செலுத்த, அப் படையினின் செறுத்தான்;
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட, அரக்கன்
ஏய அப் படை ஏவி, அங்கு அமலனும் இறுத்தான். 108-1
இரவிதன் படை ஏவினன், அரக்கன்; மற்று அமலன்
சுருதி, அன்ன திண் படைகொடு காத்தனன்; மதியின்
விரவு வெம் படை வெய்யவன் விடுத்தலும், வீரன்,
உரவு திங்களின் படைகொண்டு, அங்கு அதனையும் ஒறுத்தான். 108-2
வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான்;
நேர் உதிக்க அப் படை கொண்டு நிமலனும் நீக்க,
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி,
பேருவிப்பென், மற்று இவன் உயிர் எனும் உளம் பிடித்தான். 108-3
முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள்
ஒக்க வாரி, அங்கு அரக்கனும், ஊழ் முறை துரப்ப,
புக்கி, அண்ணலை வலங்கொண்டு போனதும், பொடிபட்டு
உக்கி, ஓடினதும் அன்றி, ஒன்று செய்துளதோ? 108-4
இத் திறம்பட மாயையின் படை வகுத்து, எழுந்து, அங்கு
எத் திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி,
சித்திரம் பெற அடங்கிய கவிப் பெருஞ் சேனை
மொய்த்து மூடியது, அண்டங்கள் முழுவதும் மாய. 119-1
அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலையக்
கொண்ட காலம் ஈதோ! எனக் குலைகுலைந்து, அமரர்
துண்ட வான் பிறை சூடியைத் தொழ, அவன் துயரம்
கண்டு, இராகவன் கடிந்திடும்; கலங்கலீர் என்றான். 119-2
மாயையின் படை தொலைந்திட, வகுப்பொடும் எழுந்த
தீய வெவ் வினைச் செய்கைகள் யாவையும் சிதைந்தே
போயது; எங்கணும் இருள் அற ஒளித்தது; அப் பொழுதில்
காயும் வெஞ் சினத்து அரக்கனும் கண்டு, உளம் கறுத்தான். 124-1
நெற்றி விழியான்-அயன், நிறைந்த மறையாளர்,
மற்றை அமரர், புவியில் வானவர்கள், ஈர்-ஐந்து
உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம்
இற்று ஒழிய ஆன்று அழியுமோ? என-இசைத்தான். 131-1
வேதம் ஒரு நாலும், உள வேள்விகளும், வெவ்வேறு
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும்,
நீதியொடு கால்குலைய, நீசன் விடு சூலம்
ஈது அழியும் என்று இதயம் எண்ணினன், இராமன். 131-2
எவ் வகை உரகமும் இரியல் போயின,
நொவ்வியல் உற்றன; நொடிப்பது என் இனி?
அவ் வயின் அரன் அணி அடல் அராவுமே
கவ்வையின் உழந்தன, சிறையின் காற்றினே. 144-1
பிறைத் தலைப் பகழியால் பின்னும் ஓர் தலை
அறுத்தனன்; முளைத்தது, அங்கு அதுவும் ஆர்த்து; உடன்
மறுத்து இரு தலைதனை மாற்ற, வள்ளலும்
குறைத்திலன் எனும்படி முளைத்த, குன்றுபோல். 151-1
ஆயிரப் பதின் மடங்கு அரக்கன் மாத் தலை
தீமுகப் பகழியால் சினந்து, இராகவன்
ஓய்வு அறத் துணிக்கவும், உடன் முளைத்ததால்,
தீயவன் தவப் பெருஞ் செயலின் வன்மையால். 151-2
அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால்,
மண்ணொடு வானகம், மருவும் எண் திசை,
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை
நண்ணியது; அமரரும் நடுக்கம் எய்தினார். 152-1
இத் திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின்
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால்,
அத் திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன்-
முத் திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான், 153-1
தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட,
விடுத்த வீரன் அவ் வெய்யவன் மாத் தலை
அடுத்து மீளவும் நின்று அறுத்தான்; உயிர்
முடித்திலன் விளையாடலை முன்னியே. 160-1
ஆனபோது, அங்கு அரக்கன் அத் தேரொடும்
வான மீது எழ, மாதலி தூண்டிட,
ஞான நாயகன் தேரும் எழுந்துறப்
போனது; அண்டப்புறத்து அமர் கோலினார். 164-1
அஞ்சல் இன்றி, அமர்க் களத்து, ஆரியன்
வெஞ் சினத்தொடு வேல் அரக்கன் பொர,
எஞ்ச ஏழு திவசம் இராப் பகல்
விஞ்சு போர் செயும் வேலையில் வீரனும், 183-1
ஆய கண்டு, அங்கு அமலன் விடும் சரம்
சாயகங்களை நூறி, தலைத்தொகை
போய் அகன்றிடச் செய்தலும், போக்கிலாத்
தீயவன் சினந்து, இம் மொழி செப்புவான்: 183-2
துறக்கும் என்பதை எண்ணி, சிரத் தொகை
அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே,
மறுக்கும் என்று மனக் கொளல், மா நிலத்து
இறக்கும் மானுடர் போன்று, என் உயிரும், நீ. 183-3
ஈது அரக்கன் புகல, இராமனும்,
தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து,
ஓது உரைக்கு எதிருற்று, என் பகழி இப்
போது உரைக்கும் எனக் கொடு பொங்கினான். 183-4
மாறுபடத் தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய, அன்னான்
ஏறி வரு பொன் தடந் தேர் பாகனும் பொன்றிட, பண்டு அங்கு இமையா முக் கண்
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் ஏகியதால்-இடையே கூடித்
தேறுதல் செய்து உழல் போதில், தீவினை மாய்த்திடப் போம் நல் வினையேபோல. 200-1
யுத்த காண்டம்
38. மண்டோ தரி புலம்புறு படலம்
தன்னைக் காண வந்த தேவர் முதலியோரை இராமன் காணச் செல்லுதல்
அவ் வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எவ் வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக்
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண,
செவ்வையின் அவர் முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான். 1
வீடணன் பாசத்தால் தமையன்மேல் விழுந்து அரற்றுதல்
போழ்ந்தென அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்;
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக் கடன் வகுத்தி என்ன,
தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி
வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலை வீழ்ந்தென்ன. 2
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க,
தேவரும் முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் சேர,
தா அரும் பொறையினான் தன் அறிவினால் தகையத் தக்க
ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகு வாய் ஆர, 3
வீடணன் புலம்பல்
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்; நீயும் களப் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் எண்ணுதியோ? -எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே! 4
ஓராதே ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள்மேல் உற்ற காதல்
தீராத வசை என்றேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோ?-பெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்! 5
அன்று எரியில் விழு வேதவதி இவள்காண்; உலகுக்கு ஓர் அன்னை என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன் தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக் கண்டும், உறவு ஆகாதே
பொன்றினையே! இராகவனார் புய வலியை இன்று அறிந்து, போயினாயே! 6
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல்? 7
வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 8
கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று, அது குறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளோ?
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார், நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 9
போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தம் மோயை, தெய்வக் கறிப்ன்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து, பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்? 10
சாம்பன் தேற்ற, வீடணன் தேறுதல்
என்று ஏங்கி, அரற்றுவான் தனை எடுத்து, சாம்பவனும் எண்கின் வேந்தன்,
குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினர்போல், தேறாது வருந்துதியோ? என்ன, தேறி
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டள், மயன் பயந்த நெடுங் கண் பாவை. 11
இராவணன் இறந்த செய்தி கேட்டு, மண்டோ தரி அவன் வீழ்ந்து கிடக்கும் இடம் அடைதல்
அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, ஏகினாள் என்ப-
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 12
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால்-
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. 13
நூபுரம் புலம்பிட, சிலம்பு நொந்து அழ,
கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்;
ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம் எனா,
மா புரம் தவிர்ந்து, விண் வழிச் சென்றார் சிலர். 14
அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட,
குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட,
உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக,
மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். 15
அரக்கியர் இராவணன்மேல் விழுந்து அழுதல்
தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர்
முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து,
அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன்
மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 16
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்,
எழு உயர் புயங்களும், மார்பும், எங்கணும்,
குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு
அழுதிலர், உயிர்த்திலர், ஆவி நீத்திலார். 17
வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்,
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்கினார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். 18
இயக்கியர், அரக்கியர், உரகர் ஏழையர்,
மயக்கம் இல் சித்தியர், விஞ்சை மங்கையர்,-
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள்-தம்
துயக்கு இலா அன்பு மூண்டு, எவரும் சோரவே. 19
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர்
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை;
இறந்தனையோ? என இரங்கி, ஏங்கினார். 20
மண்டோதரி இராவணன் மார்பில் விழுந்து புலம்புதல்
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்தென
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள்,
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து,
இரங்கினள்-மயன் மகள்,-இனைய பன்னினாள்: 21
அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 22
வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி, மேலும் கீழும்,
எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் இடம் நாடி, இழைத்தவாறோ?
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி? 23
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று,
வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!
ஓர் அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ! 24
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்,
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார், பணிதன்னால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! 25
தேவர்க்கும், திசைக் கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங் கண் மாற்கும்,
ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம் இறுதி? என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின் பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற
காவற்கும், வலியான் ஓர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ? 26
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு, பேர் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;
திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்.27
ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்; கண் புக்க வேழ வில்லால்,
நார நாள், மலர்க் கணையால், நாள் எல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே! 28
இராவணன் உடலை மண்டோ தரி தழுவி, உயிர்விடல்
என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29
வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்
தான மங்கையரும், தவப் பாலவர்,
ஆன மங்கையரும், அருங் கற்புடை
மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30
இராவணனையும் மண்டோ தரியையும் முறைப்படி ஈமத்தில் ஏற்றி,
உரிய கடன்களை வீடணன் செய்தல்
பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை,
வன்னி கூவி, வரன்முறையால், மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து,
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31
கடன்கள் செய்து முடித்து, கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் -
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32
மற்றையோர்க்கும் உரிய கடன்களை வீடணன் இயற்றி, இராமனை வந்தடைதல்
மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து,
உற்ற தீக் கொடுத்து, உண் குறு நீர் உகுத்து,
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா,
வெற்றி வீரன் குரை கழல் மேவினான். 33
வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும்,
சிந்தை வெந் துயர் தீருதி, தெள்ளியோய்!
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா,
அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 34
மிகைப் பாடல்கள்
வான் கயிலை ஈசன், அயன், வானவர் கோன், முதல் அமரர் வாழ்த்தி ஏத்த,
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து, வைகிய நீ, தாய் சொல் தாங்கி,
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து, உன்
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட, உளம் நாணினையோ? உயிரும் உண்டோ ? 5-1
அரு வினை வந்து எய்தியபோது, ஆர் அரசே! உன் தன்
திருவினை நீ பெறுவதற்குத் திருநாமங்களைப் பரவ,
ஒருபது வாய் உள; வணங்க, ஒண் முடி பத்து உள; இறைஞ்ச,
இருபது கை உள; இலங்கை என்னாக வீந்தாயே! 7-1
அரு வினை வந்தெய்திய போழ்து ஆர் தடுப்பார்? ஆர் அதனை அறிவார்? வீட்டின்
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமைச் சிந்தித்து ஏத்த,
ஒருபது நா உள; வணங்க, ஒண் முடிகள் பத்து உளவே; இறைஞ்ச, மேரு
இருபது கை உள; இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே! 7-2
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று
உன்னி உரைத்தேன்; உரை கேளாது, உத்தமனே!
பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ? 28-1
ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்;
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனை;
பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? 28-2
இந்தனத்து அகில் சந்தனம் இட்டு, மேல்
அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து,
எந்த ஓசையும் கீழுற ஆர்த்து, இடை
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்கிட, 31-1
கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து,
உற்ற ஈம வீதியின் உடம்படீஇ,
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர,
மற்ற வீரன் விதியின் வழங்கினான். 31-2
இனைய வீரன் இளவலை நோக்கி, நீ
புனையும் நன் முடி சூட்டுதி, போய் எனா,
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே,
அனையனோடும் அனுமனைச் சார்க எனா. 34-1
யுத்த காண்டம்
39. வீடணன் முடி சூட்டு படலம்
வீடணனுக்கு இராமன் தேறுதல் கூறி, பின் வீடணனுக்கு முடி சூட்டுமாறு இலக்குவனை ஏவுதல்
வருந்தல், நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்! எனா,
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து,
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்: 1
சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய். 2
என்று கூறி, இளவலோடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில்,
நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்
சென்று, தம் தம செய்கை புரிந்தனர். 3
தேவர்கள் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தல்
சூழ் கடல் புனலும், பல் தோயமும்,
நீள் முடித் தொகையும், பிற நீர்மையும்,
பாழி துற்று அரி பற்றிய பீடமும்,
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். 4
வாச நாள் மலரோன் சொல, மான்முகன்
காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட,
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன். 5
இலக்குவன் வீடணனுக்கு முடி சூட்டுதல்
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட,
ஐயன் ஆணையினால், இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ. 6
வீடணன் அரியணையில் வீற்றிருத்தல்
கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே,
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. 7
தேவர் பூமழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரை மலர், வேறு இலா
மூவரோடு, முனிவர், மற்று யாவரும்,
நாவில் ஆசி நறை மலர், தூவினார். 8
முடி புனைந்த வீடணன் இலக்குவனை வணங்கி உபசரித்து, இராமபிரானை அடைந்து, தொழுதல்
முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை, ஆண்டை அந்
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து,
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினா: 9
விலங்கள் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ
கலங்கலா நெடுங் காவல் இயற்று எனா,
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான். 10
வணங்கிய வீடணனை இராமன் தழுவி, அவனுக்கு நீதி கூறல்
குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,
பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்
திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்: 11
உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம்
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது,
இருமையே அரசாளுதி, ஈறு இலாத்
தரும சீல! என்றான் - மறை தந்துளான். 12
பன்னும் நீதிகள் பல் பல கூறி, மற்று
உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்!
மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி,
தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான். 13
மிகைப் பாடல்கள்
மாருதிச் செல, மங்கலம் யாவையும்
மாருதிப் பெயர்கொண்டு உடன் வந்தனன்;
வீர விற் கை இளவல் அவ் வீடணன்
வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 4-1
செய்த மா மணி மண்டபத்தே செழுந்
துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து,
எய்து வானவ......................................கம்மி......
.................................................................... 5-1
மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி, ஓம விதிமுறை கொண்டிட,
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே, 5-2
பொய்யினுக்கு ஒரு வெ..........................
..............................................................
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலசப் புனல் ஆட்டினார். 5-3
வேத ஓசை விழா ஒலி மேலிட,
நாத துந்துமி எங்கும் நடித்திட,
வேத பாரகர் ஆசி விளம்பிட,
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட, 6-1
வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட,
ஆர மார்பொடு அழுந்திடப் புல்லினான்,
ஆரினானும் அறிவரும் ஆதியான். 10-1
ஆதி நாளில், அருள் முடி நின்னது என்று
ஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!
வேத பாரகம் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய். 11-1
வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,
பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,
நெஞ்சினில் துயர் நீக்கியது என்று, நீ
அஞ்சனைப் புதல்வா! அருள்வாய் என்றான். 13-1
யுத்த காண்டம்
40. பிராட்டி திருவடி தொழுத படலம்
சீதைக்குச் செய்தி சொல்லி வர, இராமன் அனுமனை அனுப்புதல்
இப் புறத்து, இன எய்துறு காலையில்,
அப் புறத்ததை உன்னி, அனுமனை,
துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால்
செப்புறு, இப்படிப் போய் எனச் செப்பினான். 1
அனுமன் சீதையைத் தொழுது, அவளுக்குச் செய்தி கூறுதல்
வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்;
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என,
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான்: 2
ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்!
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்! 3
பாடினான் திரு நாமங்கள்; பல் முறை
கூடு சாரியில் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். 4
தலை கிடந்தன, தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித் தோள் நிரை
அலை கிடந்தென ஆழி கிடந்தன;
நிலை கிடந்தது, உடல் நிலத்தே என்றான். 5
அண்ணல் ஆணையின், வீடணனும் மறக்
கண் இலாதவன் காதல் தொடர்தலால்,
பெண் அலாது, பிழைத்துளதாகும் என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான். 6
செய்தி கேட்டு மகிழ்ந்த சீதையின் நிலை
ஒரு கலைத் தனி ஒண் மதி நாளொடும்
வரு கலைக்குள் வளர்வது மானுறப்
பொரு கலைக் குலம் பூத்தது போன்றனள்-
பருகல் உற்ற அமுது பயந்த நாள். 7
ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட,
தேம்பும் நுண் இடை நோவ, திரள் முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள்-
பாம்பு கான்ற பனி மதிப் பான்மையாள். 8
புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ,
உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ,
சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ-
முந்தி ஓங்கின யாவை-முலைகொலோ? 9
குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மை வேர்
பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி
நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;-
கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ? 10
களிப்பு மிகுதியால் சீதை பேசாதிருக்க, அனுமன், ஒன்றும் பேசாத காரணத்தை வினவல்
அனையள் ஆகி, அனுமனை நோக்கினாள்,
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள்-நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள். 11
யாது இதற்கு ஒன்று இயம்புவல்? என்பது
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ? எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்: 12
சீதையின் மறுமொழி
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கமுற்று, ஒன்று இயம்புவது யாது? என
நோக்கி நோக்கி, அரிது என நொந்துளேன்;
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? 13
முன்னை, நீக்குவென் மொய் சிறை என்ற நீ
பின்னை நீக்கி, உவகையும், பேசினை;
என்ன பேற்றினை ஈகுவது? என்பதை
உன்னி நோக்கி, உரை மறந்து ஓவினேன். 14
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும்-தன்மையோய்! 15
ஆதலான், ஒன்று உதவுதல் ஆற்றலேன்;
யாது செய்வது? என்று எண்ணி இருந்தனென்;
வேத நல் மணி வேகடம் செய்தன்ன
தூத! என் இனிச் செய் திறம்? சொல் என்றாள். 16
அனுமன் தான் மேலே செய்யப் போவது குறித்துச் சீதையிடம் கூறி, அவளது அனுமதியை வேண்டுதல்
எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்
மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் -
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ?-
புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்! 17
என உரைத்து, திரிசடையாள், எம் மோய்!
மனவினில் சுடர் மா முக மாட்சியாள்-
தனை ஒழித்து, இல் அரக்கியர்தங்களை
வினையினில் சுட வேண்டுவென், யான் என்றான். 18
உரை அலா உரை உன்னை உரைத்து, உராய்
விரைய ஓடி, விழுங்குவம் என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து,
இரை செய்வேன், மறலிக்கு, இனி என்னுமால். 19
காவல் அரக்கியர் சீதையைச் சரணம் அடைதல்
குடல் குறைத்து, குருதி குடித்து, இவர்
உடல் முருக்கியிட்டு, உண்குவென் என்றலும்,
அடல் அரக்கியர், அன்னை! நின் பாதமே
விடலம்; மெய்ச் சரண் என்று விளம்பலும், 20
அரக்கியர்க்குத் துன்பம் செய்வது முறையன்று எனச் சீதை அனுமனுக்கு கூறல்
அன்னை, அஞ்சன்மின், அஞ்சன்மின்! நீர் எனா,
மன்னும் மாருதி மா முகம் நோக்கி, வேறு
என்ன தீமை இவர் இழைத்தார், அவன்
சொன்ன சொல்லினது அல்லது? -தூய்மையோய்! 21
யான் இழைத்த வினையினின் இவ் இடர்-
தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அலரே, இவர்!
போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்! 22
எனக்கு நீ அருள், இவ் வரம்; தீவினை-
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல்! என்றனள்-மா மதி-
தனக்கு மா மறுத் தந்த முகத்தினாள். 23
இராமன் வீடணனிடம் சீதையை அழைத்து வருமாறு கூறி அனுப்புதல்
என்ற போதின், இறைஞ்சினன், எம்பிரான்
தன் துணைப் பெருந் தேவி தயா எனா
நின்ற காலை, நெடியவன், வீடண!
சென்று தா, நம் தேவியை, சீரொடும். 24
வீடணன் சீதையைத் தொழுது, கோலம் புனைந்து இராமனிடத்திற்கு எழுந்தருளுமாறு வேண்டுதல்
என்னும் காலை, இருளும் வெயிலும் கால்
மின்னும் மோலி இயற்கைய வீடணன்,
உன்னும் காலைக் கொணர்வென் என்று ஓத, அப்
பொன்னின் கால் தளிர் சூடினன், போந்துளான். 25
வேண்டிற்று முடிந்தது அன்றே; வேதியர் தேவன் நின்னைக்
காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண வந்தார்;
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை, வருத்தம் போக்கி,
ஈண்டக் கொண்டு அணைதி என்றான்; எழுந்தருள், இறைவி! என்றான். 26
கோலம் புனையாது, இங்கு இருந்த தன்மையில் வருதலே தக்கது என சீதை கூறல்
யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், காண்டல், மாட்சி;
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று - வீர! 27
இராமனது குறிப்பு கோலம் புனைந்து வருதலே என்று வீடணன் உரைக்க, சீதை ஒருப்படுதல்
என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன், நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் குறிப்பு இது என்றான்;
நன்று என நங்கை நேர்ந்தாள், நாயகக் கோலம் கொள்ள;
சென்றனர், வான நாட்டுத் திலோத்தமை முதலோர், சேர. 28
தேவமாதர்கள் சீதைக்குக் கோலம் புனைதல்
மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி, வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும், மஞ்சனத்துக்கு ஏற்ற
நான நெய் ஊட்டப் பட்ட நவை இல கலவை தாங்கி,
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார். 29
காணியைப் பெண்மைக்கு எல்லாம், கற்பினுக்கு அணியை, பொற்பின்
ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை, அறத்தின் தாயை,
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன,
வேணியை, அரம்பை, மெல்ல, விரல் முறை சுகிர்ந்து விட்டாள். 30
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம் தீட்டி, மண் சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல், மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாடி, ஆட்டினர், உம்பர் மாதர். 31
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டதென்ன
மரு விளை கலவை ஊட்டி, குங்குமம் முலையின் ஆட்டி,
கரு விளை மலரின் காட்சிக் காசு அறு தூசு, காமன்
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவச் செய்தார். 32
சந்திரன் தேவிமாரின் தகை உறு தரளப் பைம் பூண்,
இந்திரன் தேவிக்கு ஏற்ப, இயைவன பூட்டி, யாணர்ச்
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தேம் பசும் பாகு தீற்றி,
மந்திரத்து அயினி நீரால் வலஞ்செய்து, காப்பும் இட்டார். 33
சீதையை இராமனிடத்திற்கு வீடணன் அழைத்து வருதல்
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட,
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளின் சென்றான். 34
இப் புறத்து இமையவர், முனிவர் ஏழையர்,
துப்பு உறச் சிவந்த வாய் விஞ்சைத் தோகையர்,
முப் புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர்,
ஒப்புறக் குவிந்தனர், ஓகை கூறுவார். 35
அருங் குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்,
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்,
நெருங்கினர்; நெருங்குழி, நிருதர் ஓச்சலால்,
கருங் கடல் முழக்கு எனப் பிறந்த, கம்பலை. 36
இராமன், வீடணனைச் சினந்து நோக்கி, கடிந்து கூறுதல்
அவ் வழி, இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்வி வாள் முகம்கொடு செயிர்த்து நோக்குறா,
இவ் ஒலி யாவது? என்று இயம்ப, இற்று எனா,
கவ்வை இல் முனிவரர் கழறினார் அரோ. 37
முனிவரர் வாசகம் கேட்புறாதமுன்,
நனி இதழ் துடித்திட நகைத்து, வீடணன்-
தனை எழ நோக்கி, நீ, தகாத செய்தியோ,
புனித நூல் கற்று உணர் புந்தியோய்? என்றான். 38
கடுந் திறல் அமர்க் களம் காணும் ஆசையால்,
நெடுந் திசைத் தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அடைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்?-கருது நூல் வலாய்! 39
பரசுடைக் கடவுள், நேமிப் பண்ணவன், பதுமத்து அண்ணல்,
அரசுடைத் தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ ?
கரை செயற்கு அரிய தேவர், ஏனையோர், கலந்து காண்பான்
விரசுறின், விலக்குவாரோ? வேறு உளார்க்கு என்கொல்?-வீர! 40
இராமன் சொல்லைக் கேட்டு, வீடணன் அஞ்சி நடுங்கி நிற்றல்
ஆதலான், அரக்கர் கோவே! அடுப்பது அன்று உனக்கும், இன்னே
சாதுகை மாந்தர் தம்மைத் தடுப்பது என்று அருளி, செங் கண்
வேதநாயகன் தான் நிற்ப, வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன், குணங்கள்தூயோன். 41
சீதை இராமன் கோலத்தைக் காண்பாளாய், அனுமனது உதவியைப் பாராட்டி உரைத்தல்
அருந்ததி அனைய நங்கை அமர்க் களம் அணுகி, ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசிப் பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி,
கருந் தடங் கண்ணும் நெஞ்சும் களித்திட, இனைய சொன்னாள்: 42
சீலமும் காட்டி, என் கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்
காலமும் காட்டும்கொல், என் தன் கற்பு? என்றான். 43
சீதை இராமனது திருமேனியைக் காணுதல்
எச்சில், என் உடல்; உயிர் ஏகிற்றே; இனி
நச்சு இலை என்பது ஓர் நவை இலாள் எதிர்,
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்
கைச் சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள். 44
சீதை இராமனைத் தொழுது, ஏக்கம் நீங்குதல்
மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்,
போன பேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
ஆனனம் காட்டுற, அவனி எய்தினாள். 45
பிறப்பினும் துணைவனை, பிறவிப் பேர் இடர்
துறப்பினும் துணைவனை, தொழுது, நான் இனி
மறப்பினும் நன்று; இனி மாறு வேறு வீழ்ந்து
இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கினாள். 46
இராமன் சீதையை அமைய நோக்குதல்
கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். 47
இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல்
கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு பாய்தர,
வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை,
பணம் கிளர் அரவு என எழுந்து, பார்ப்புறா, 48
ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? எனை விரும்பும் என்பதோ? 49
உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற,
பின்னை மீட்டு, உறு பகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான்பொருட்டு, இலங்கை எய்தினேன். 50
மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை-வெறுமை நீங்கினாய்! 51
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ. 52
பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். 53
அடைப்பர், ஐம் புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்
சடைப் பரம் புனைந்து, ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர்; வந்து இடை ஒரு பழி வந்தால், அது
துடைப்பர், தம் உயிரொடும்-குலத்தின் தோகைமார். 54
யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால் என்றனன்-புலவர் புந்தியான். 55
இராமனது உரை கேட்டு, முனிவர் முதலியோர் அரற்றுதல்
முனைவரும், அமரரும், மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும், நிருதர் என்று உளார்
எனைவரும், வானரத்து எவரும், வேறு உளார்
அனைவரும், வாய் திறந்து, அரற்றினார் அரோ. 56
இராமனின் கடுமொழி கேட்ட சீதையின் துயர நிலை
கண் இணை உதிரமும், புனலும் கான்று உக,
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்,
புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால்
உள் நினைப்பு ஓவி நின்று, உயிர்ப்பு வீங்கினாள். 57
பருந்து அடர் சுரத்திடை, பருகு நீர் நசை
வருந்து அருந் துயரினால் மாளலுற்ற மான்,
இருந் தடம் கண்டு, அதின் எய்துறாவகைப்
பெருந் தடை உற்றெனப் பேதுற்றாள் அரோ. 58
உற்று நின்று, உலகினை நோக்கி, ஓடு அரி
முற்றுறு நெடுங் கண் நீர் ஆலி மொய்த்து உக,
இற்றது போலும், யான் இருந்து பெற்ற பேறு;
உற்றதால் இன்று அவம்! என்று என்று ஓதுவாள்; 59
மாருதி வந்து, எனைக் கண்டு, வள்ளல் நீ
சாருதி ஈண்டு எனச் சமையச் சொல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ,
சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லனோ? 60
எத் தவம், எந் நலம், என்ன கற்பு, நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய், அறம் பிழைத்ததாம் அன்றே,
உத்தம! நீ மனத்து உணர்ந்திலாமையால். 61
பார்க்கு எலாம் பத்தினி; பதுமத்தானுக்கும்
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன், அன்று என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ? 62
பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும்,
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மன நிலை உணர வல்லரோ? 63
ஆதலின், புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே,
வேத! நின் பணி; அது விதியும் என்றனள். 64
சீதை இலக்குவனை தீ அமைக்குமாறு வேண்டல்
இளையவன் தனை அழைத்து, இடுதி, தீ என,
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான். 65
இலக்குவன் தீ அமைக்க, சீதை அதன் பக்கத்தில் செல்லுதல்
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்,
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்,
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள், பதுமப் போதினாள். 66
தீயிடை, அருகுறச் சென்று, தேவர்க்கும்
தாய் தனிக் குறுகலும், தரிக்கிலாமையால்,
வாய் திறந்து அரற்றின-மறைகள் நான்கொடும்,
ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும். 67
வலம் வரும் அளவையில் மறுகி, வான் முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன;
அலம் வரல் உற்றன; அலறி, ஐய! இச்
சலம் இது தக்கிலது என்னச் சாற்றின. 68
இந்திரன் தேவியர் முதல ஏழையர்,
அந்தர வானின்நின்று அரற்றுகின்றவர்,
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார். 69
நடுங்கினர், நான்முகன் முதல நாயகர்;
படம் குறைந்தது, படி சுமந்த பாம்பு வாய்
விடம் பரந்துளது என, வெதும்பிற்றால் உலகு;
இடம் திரிந்தன சுடர்; கடல்கள் ஏங்கின. 70
சீதை தீயில் குதித்தல்
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,
மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,
சினத்தினால் சுடுதியால், தீச் செல்வா! என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். 71
சீதையின் கற்புத் தீயினால், அக்கினி வெந்து தீய்தல்
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாவின் பஞ்சு எனத்
தீந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால். 72
அக்கினி சீதையைக் கையில் ஏந்தி, இராமபிரானைக் குறித்துக்
கதறிக் கொண்டு எழுதலும், சீதை எரியால் வாட்டமுறாது விளங்குதலும்
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து
எழுந்தனன்-அங்கி, வெந்து எரியும் மேனியான்,
தொழும் கரத் துணையினன், சுருதி ஞானத்தின்
கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான். 73
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடிய இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?
பாடிய வண்டொடும், பனித்த தேனொடும்,
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால். 74
திரிந்தன உலகமும் செவ்வன நின்றன;
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன;
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர், நாணமும் பொறையும் நீங்கினார். 75
அக்கினிதேவனது முறையீடும், இராமன் வினாவும்
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள்-தீயினால்,
நினைந்திலை, என் வலி நீக்கினாய் என,
அநிந்தனை அங்கி, நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் என முறையிட்டான் அரோ. 76
இன்னது ஓர் காலையில், இராமன், யாரை நீ?
என்னை நீ இயம்பியது, எரியுள் தோன்றி? இப்
புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்;
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால் என்றான். 77
அக்கினிதேவனின் மறுமொழி
அங்கி யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
பொங்கு வெந் தீச் சுடப் பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; எனது இயற்கை நோக்கியும்,
சங்கியாநிற்றியோ, எவர்க்கும் சான்றுளாய்? 78
வேட்பதும், மங்கையர் விலங்கினார் எனின்
கேட்பதும், பல் பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும், என்வயின் என்னும் மெய்ப்பொருள்-
வாள்-பெருந் தோளினாய்!-மறைகள் சொல்லுமால். 79
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇக்
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும், மீட்டியோ?-
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்! 80
தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும்,
மூவகை உலகமும், கண்கள் மோதி நின்று,
ஆ! எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டியோ? 81
பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வையுமேல், மலர்மிசை அயனும் மாயுமே. 82
சீதையை இராமன் ஏற்றுக்கொள்ளல்
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று,
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனிய அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான்: 83
அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, யாதும் ஓர்
பழிப்பு இலள் என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள் என்றனன்-கருணை உள்ளத்தான். 84
தேவர்கள் வேண்டியபடி, பிரமன் இராமனது உண்மை நிலையை உணர்த்துதல்
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று, காலம் வந்துளதால்,
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று, அவை உணரா
இணர்த் துழாய்த் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப,
தணப்பு இல் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைந்தான்: 85
மன்னர் தொல் குலத்து அவதரித்தனை; ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ; இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய்த் துணிவு
நின் அலாது இல்லை; நின்னின் வேறு உளது இலை-நெடியோய்! 86
பகுதி என்று உளது, யாதினும் பழையது, பயந்த
விகுதியால் வந்த விளைவு, மற்று அதற்குமேல் நின்ற
புகுதி, யாவர்க்கும் அரிய அப் புருடனும், நீ; இம்
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம். 87
முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமைத்
தன் பெருந் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள்,
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால், மற்று இங்கு யாரையும் அறையா. 88
எனக்கும், எண் வகை ஒருவற்கும், இமையவர்க்கு இறைவன்-
தனக்கும், பல் பெரு முனிவர்க்கும், உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம் என்பதை அறிந்தார்
வினைத் துவக்குடை வீட்ட அருந் தளை நின்று மீள்வார். 89
என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின், சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த. 90
ஐ-அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து, அவற்றின்
மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும்;
வையம் சான்று; இனி, சான்றுக்குச் சான்று இலை, வழக்கால். 91
அளவையால் அளந்து, ஆம், அன்று, என்று அறிவுறும் அமைதி
உளவை யாவையும் உனக்கு இல்லை; உபநிடத்து உனது
களவை ஆய்ந்து உறத் தெளிந்திலது ஆயினும், கண்ணால்,
துளவை ஆய் முடியாய்! உளை நீ எனத் துணியும். 92
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல்,
கரணம் அவ் அறிவைக் கடந்து அகல்வு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப; அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான். 93
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும்,
ஆற்றல் சால் முதல் பகுதி; மற்று அதனுள் ஆம், பண்பால்
காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால்,
வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய். 94
மின்னைக் காட்டுதல்போல் வந்து விளியும் இவ் உலகம்
தன்னைக் காட்டவும், தருமத்தை நாட்டவும், தனியே
என்னைக் காட்டுதி; இறுதியும் காட்டுதி; எனக்கும்
உன்னைக் காட்டலை; ஒளிக்கின்றும் இலை, மறை உரையால். 95
என் உருக் கொடு இல் உலகினை ஈனுதி; இடையே
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி; உமைகோன்-
தன் உருக்கொடு துடைத்தி; மற்று இது தனி அருக்கன்
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது-முதலாய்! 96
ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து, இரு வினை உகுப்போர்;
ஓங்காரப் பொருள் ஆம், அன்று என்று, ஊழி சென்றாலும்,
ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர். 97
இனையது ஆகலின், எம்மை மூன்று உலகையும் ஈன்று, இம்
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனையல் என்று அது முடித்தனன்-முந்து நீர் முளைத்த
சிலையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன். 98
சிவபெருமான் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்
என்னும் மாத்திரத்து, ஏறு அமர் கடவுளும் இசைத்தான்;
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால், உரவோய்!
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ; மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின் மார்பின் வந்து அமைந்தாள். 99
துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இறைவ! நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது என்றனன்-மழுவலான் வழுத்தி. 100
தயரதனுக்குச் சிவபெருமான் பணித்தல்
பின்னும் நோக்கினான், பெருந் தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவற் சென்று கண்டு, நின் மைந்தனைத் தெருட்டி,
முன்னை வன் துயர் நீக்குதி, மொய்ம்பினோய்! என்றான். 101
ஐயரதன் பூதலத்து வருதலும், இராமன் அவனை வணங்குதலும்
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்,
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும், பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள் மிசை விழுந்தான். 102
தயரதன் இராமனை எடுத்துத் தழுவி, மகிழ்வுடன் பேசுதல்
வீழ்ந்த மைந்தனை எடுத்து, தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, கண் அருவி நீராட்டி,
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற, மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்று-இவை புகன்றான்: 103
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்று காறும் என் இதயத்தினிடை நின்றது, என்னைக்
கொன்று நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன் குலப் பூண்
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க. 104
மைந்தரைப் பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்! என் துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன். 105
பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்,
கண்டு கண்டு எனைக் கைத்தலம் குவிக்கின்ற காட்சி;
புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை, அழக! 106
தயரதன் வணங்கிய சீதைக்குத் தேறுதல் மொழி கூறுல்
என்று, மைந்தனை எடுத்து எடுத்து, இறுகுறத் தழுவி,
குன்று போன்று உள தோளினான், சீதையைக் குறுக,
தன் துணைக் கழல் வணங்கலும், கருணையால் தழுவி
நின்று, மற்று இவை நிகழ்த்தினான், நிகழ்த்த அரும் புகழோன்: 107
நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட,
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் தேறுவது உண்டு; அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். 108
பொன்னைத் தீயிடைப் பெய்வது அப் பொன்னுடைத் தூய்மை-
தன்னைக் காட்டுதற்கு என்பது மனக் கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், கற்பினுக்கு அரசி என்று, உலகில்,
பின்னைக் காட்டுவது அரியது என்று எண்ணி, இப் பெரியோன். 109
பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங் கலம் ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ வான் நின்றும் வந்தாய்;
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால். 110
தயரதன் இலக்குவனைத் தழுவிப் பாராட்டுதல்
என்னச் சொல்லி, அவ் ஏந்திழை திரு மனத்து யாதும்
உன்னச் செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்;
பின்னைச் செம்மல் அவ் இளவலை, உள் அன்பு பிணிப்ப,
தனனைத் தான் எனத் தழுவினன், கண்கள் நீர் ததும்ப. 111
கண்ணின் நீர்ப் பெருந் தாரை மற்று அவன் சடைக் கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர, தழீஇ நின்று, மைந்த!
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை, தமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய். 112
புரந்தான் பெரும் பகைஞனைப் போர் வென்ற உன் தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது; நீ இந்த உலகின்
அரந்தை வெம் பகை துடைத்து, அறம் நிறுத்தினை-ஐய! 113
தயரதன் இராமனிடம் வரம் கேட்கக் கூற, இராமன் வரம் வேண்டுதல்
என்று, பின்னரும், இராமனை, யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி, உயர் குணத்தோய்! என, உனை யான்
சென்று வானிடைக் கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்;
இன்று காணப் பெற்றேன்; இனிப் பெறுவது என்? என்றான். 114
ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை என, அழகன்,
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக! எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர் எலாம், வழுத்தி. 115
தயரதன் மறுமொழி
வரத கேள்! எனத் தயரதன் உரை செய்வான்; மறு இல்
பரதன் அன்னது பெறுக! தான் முடியினைப் பறித்து, இவ்
விரத வேடம் மற்று உதவிய பாவிமேல் விளிவு
சரதம் நீங்கலதாம் என்றான், தழீஇய கை தளர. 116
கைகேயின் மேல் தணியாத தயரதன் சினமும் இராமன் உரையால் நீங்குதல்
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை
வான் பிழைக்கு இது முதல் எனாது, ஆள்வுற மதித்து,
யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம் பிராட்டி-
தான் பிழைத்தது உண்டோ ? என்றான்; அவன் சலம் தவிர்ந்தான். 117
எவ் வரங்களும் கடந்தவன் அப் பொருள் இசைப்ப,
தெவ் வரம்பு அறு கானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு என்றார், தேவரும் இரங்கி. 118
இராமன் விரும்பிய இரு வரத்தையும் அளித்து, தயரதன் விண் ஏகுதல்
வரம் இரண்டு அளித்து, அழகனை, இளவலை, மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை நிறுத்தி, விண்ணிடையே
உரவு மானம் மீது ஏகினன்-உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து, உறு புகழ் படைத்தோன். 119
தேவர்கள் வேண்டும் வரம் கேள் என, இராமன் வரம் வேண்டுதல்
கோட்டு வார் சிலைக் குரிசிலை அமரர் தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, வீர! நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால் என, அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக! என விளம்பி, 120
பின்னும் ஓர் வரம், வானரப் பெருங் கடல் பெயர்ந்து,
மன்னு பல் வனம், மால் வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என இயம்பிடுக என்றான். 121
தேவர்கள் வரம் அருள, மாண்ட குரங்குகள் உயிர் பெற்றெழுந்து இராமனை வணங்குதல்
வரம் தரும் முதல் மழுவலான், முனிவரர், வானோர்,
புரந்தராதி, மற்று ஏனையோர், தனித் தனிப் புகழ்ந்து ஆங்கு,
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக! நினது அருளால்
குரங்குஇனம் பெறுக! என்றனர், உள்ளமும் குளிர்ப்பார். 122
முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண் களிப்புற, செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின, மகிழ்ந்து. 123
கும்பகன்னனோடு இந்திரசித்து, வெங் குலப் போர்
வெம்பு வெஞ் சினத்து இராவணன், முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார்; 124
பதினான்கு ஆண்டுகள் முடிந்ததை தேவர்கள் இராமனுக்கு உணர்த்தி, நீங்குதல்
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர் தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு. 125
வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின் எனும் படி மடித்த
கஞ்ச நாள் மலர்க் கையினாய்! அன்னை சொல் கடவா,
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த;
பஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த. 126
இன்று சென்று, நீ பரதனை எய்திலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றி வீர! போதியால் என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். 127
மிகைப் பாடல்கள்
மங்கை, சோபனம்! மா மயில், சோபனம்!
பங்கயத்து உறை பாவையே, சோபனம்!
அங்கு அ(வ்) ஆவி அரக்கனை ஆரியச்
சிங்கம் இன்று சிதைத்தது, சோபனம். 3-1
வல்லி, சோபனம்! மாதரே, சோபனம்!
சொல்லின் நல்ல நல் தோகையே, சோபனம்!
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய
வல்லியங்கள் வதைத்தது, சோபனம்! 3-2
அன்னை, சோபனம்! ஆயிழை, சோபனம்!
மின்னின் நுண் இடை மெல்லியல், சோபனம்!
அன்ன ஆளி அரக்கனை ஆரிய
மன்னன் இன்று வதைத்தது, சோபனம்! 3-3
நாறு பூங் குழல் நாயகி, சோபனம்!
நாறு பூங் குழல் நாரியே, சோபனம்!
ஆறு வாளி அரக்கனை ஆரிய
ஏறும் இன்றும் எரித்தது, சோபனம்! 3-4
சொன்ன சோபனம் தோகை செவி புக,
அன்னம் உன்னி, அனுமனை நோக்கியே,
அன்ன போரில் அறிந்துளது, ஐய! நீ
இன்னம் இன்னம் இயம்புதியால் என்றாள். 3-5
சென்றவன் தன்னை நோக்கி, திருவினாள் எங்கே? என்ன,
மன்றல் அம் கோதையாளும் வந்தனள், மானம்தன்னில்
என்றனன்; என்னலோடும், ஈண்டு நீ கொணர்க! என்ன,
நன்று! என வணங்கிப் போந்து, நால்வரை, கொணர்க! என்றான். 33-1
காத்திரம் மிகுத்தோர், நால்வர், கஞ்சுகிப் போர்வையாளர்,
வேத்திரக் கையோர், ஈண்டீ, விரைவுடன் வெள்ளம் தன்னைப்
பாத்திட, பரந்த சேனை பாறிட, பரமன் சீறி,
ஆர்த்த பேர் ஒலி என்? என்ன, அரிகள் ஆர்ப்பவாம் என்றார். 33-2
என்ற போது இராமன், ஐய! வீடணா! என்ன கொள்கை!
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி,
துன்றிய குழலினார் தம் சுயம்வர வாஞ்சை, சூழும்
வென்றி சேர் களத்தும், வீர! விழுமியது அன்று, வேலோய்! 33-3
அற்புதன் இனைய கூற, ஐய வீடணனும் எய்தி,
செப்பு இள முலையாள் தன்பால் செப்பவும், திருவனாளும்,
அம்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த அண்ணல்
ஒப்பினைக் கண்ணின் கண்டே, உளம் நினைந்து, இனைய சொன்னாள். 33-4
அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்,
பழிபடும் என்பரால், பாருளோர் எலாம்;
விழுமியது அன்று, நீ மீண்டது; இவ் இடம்
கழிபடும் என்றனன், கமலக்கண்ணனே. 54-1
கண்ணுடை நாயகன், கழிப்பென் என்றபின்,
மண்ணிடைத் தோன்றிய மாது சொல்லுவாள்:
எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான்
விண்ணிடை அடைவதே விழுமிது என்றனள். 54-2
பொங்கிய சிந்தையல் பொருமி, விம்முவாள்,
சங்கையென் என்ற சொல் தரிக்கிலாமையால்,
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே,
அங்கியின் வீழலே அழகிதாம் அரோ. 54-3
அஞ்சினென், அஞ்சினென், ஐய! அஞ்சினென்;
பஞ்சு இவர் மெல்லடிப் பதுமத்தாள்தன்மேல்
விஞ்சிய கோபத்தால் விளையும் ஈது எலாம்;
தஞ்சமோ, மறை முதல் தலைவ! ஈது? என்றான். 73-1
கற்பு எனும் கனல் சுட, கலங்கி, பாவகன்
சொல் பொழி துதியினன், தொழுத கையினன்,
வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா!
அற்புதனே! உனக்கு அபயம் யான் என்றான். 75-1
இன்னும், என் ஐய! கேள்: இசைப்பென் மெய், உனக்கு;
அன்னவை மனக் கொளக் கருதும் ஆகையால்,
முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள். 82-1
யான் புரி மாயையின், சனகி என்று உணர்ந்-
தான் கவர் அரக்கன்; அம் மாயை என் சுடர்க்
கான் புகக் கரந்தது; இக் கமல நாயகி
தான் புரி தவத்து உனைத் தழுவ உற்றுளாள். 82-2
ஐயன் அம் மொழியினை அருளும் வேலையில்,
மை அறு மன்னுயிர்த் தொகைகள் வாய் திறந்து,
ஒய்யென ஒலித்ததால்; உவகை மீக்கொள,
துய்ய வானவர் துதித்து, இனைய சொல்லுவார்: 84-1
மிகுத்த மூன்றரைக் கோடியில் மெய் அரைக் கோடி
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள எம்
அகத்தின் நோய் அறுத்து, அருந் துயர் களைந்து, எமக்கு அழியாச்
சுகத்தை நல்கிய சுருதி நாயக! எனத் தொழுதார். 84-2
திருக் குவால் மலி செல்வத்துச் செருக்குவேம் திறத்துத்
தருக்கு மாய்வுற, தானவர் அரக்கர் வெஞ் சமரில்
இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல் யாம் புக, இயையாக்
கருக்குளாய் வந்து தோற்றுதி! ஈங்கு இது கடனோ? 96-1
என்ற வாசகம் எறுழ் வலித் தோளினான் இயம்ப,
மன்றல் தாங்கிய மலரவன், வாசவற் கூவி,
துன்று தாரினோன் சுரருடன் துருவினை துடரச்
சென்று, மற்று அவன்-தருக என வணங்கினன், சென்றான். 101-1
எனக்கும், எண்வகை முனிவர்க்கும், இமையவர் உலகம்-
தனக்கும், மற்று இவள் தாய் என மனக் கொளத் தகுதி;
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் மலராள்;
புனந் துழாய் முடிப் புரவலன் நீ; நிறை புகழோய்! 110-1
யுத்த காண்டம்
41. மீட்சிப் படலம்
வீடணன் புட்பக விமானம் கொணர்தல்
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் அயின்,
மாண்டதாம் இனி என் குலம், பரதனே மாயின்;
ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ ? என, இன்றே
தூண்டு மானம் உண்டு என்று, அடல் வீடணன் தொழுதான். 1
இயக்கர் வேந்தனுக்கு அரு மறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனம் எனத் தூயது, சுரர்கள்,
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே
மயக்கு இலான் சொல, கொணருதி வல்லையின் என்றான். 2
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் மழை எனக் கலிப்ப,
கொண்டு அணைந்தனன் நொடியினின், அரக்கர் தம் கோமான், 3
இராமன் புட்பக விமானத்தில் ஏற, தேவர்கள் மலர்மாரி பொழிந்து வாழ்த்துதல்
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, இனி நம்
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. 4
சீதையும் இலக்குவனும் விமானத்தில் ஏறுதல்
வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி என்று, ஐயன்மாட்டு அணைந்தாள்;
மணம் கொள் வேல் இளங் கோளரி மானம் மீப் படர்ந்தான். 5
விமானத்தில் நின்ற இராமன் வீடணன் முதலிய துணைவர்க்கு விடை தரல்
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனும் தகைத்தாய்,
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குனித்தான்: 6
வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது; உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால். 7
நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள், இனி நீ
போதியால் எனப் புகன்றனன்-நான் மறை புகன்றான். 8
சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம் தொகு
அக்கிரீவனைத் தடிந்து, வெம் படையினால் அசைந்த
மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு, ஊர்
புக்கு, வாழ்க! எனப் புகன்றனன்-ஈறு இலாப் புகழோன். 9
வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று அம் மொழி புகன்றான். 10
ஐயன் அம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாள் இணை முடி உறச் சேர்த்தி,
உய்கிலேம், நினை நீங்கின் என்று இனையன உரைத்தார். 11
அயோத்தியில் ஐயன் திருமுடிசூடுதலைக் காண விரும்பி உரைத்தல்
பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம் பொன்
ஆர மா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள் என்றனர்-உள் அன்பு பிணிப்பார். 12
இராமன் உடன்பட்டுக் கூற, யாவரும் மகிழ்தல்
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும், நோக்கி, நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்திருந்தது அப் பரிசு; நும் முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன்-பெரியோன். 13
ஐயன் வாசகம் கேட்டலும், அரி குலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும், முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச் சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 14
யாவரும் புட்பகத்தின்மேல் ஏறுதல்
அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம் என்று, இராகவன் இசைத்தான். 15
சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பகமிசை ஒரு சூழல். 16
பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும், வெற்றிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே! 17
புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி
எழுபது வெள்ளத்தாரும், இரவி கான்முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும், சூழ
தழுவு சீர் இளைய கோவும், சனகன் மா மயிலும், போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர். 18
அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ. 19
இராமன் சீதைக்கு வழியிலுள்ள காட்சிகளைக் காட்டிச் செல்லுதல்
குட திசை மறைந்து, பின்னர்க் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப, மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி, தாவி வான் படரும் வேலை,
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான்: 20
சேதுவைக் காட்டி, அதன் தூய்மையைப் புகழ்தல்
இந்திரற்கு அஞ்சி, மேல் நாள், இருங் கடல் புக்கு, நீங்கால்
சுந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி, இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது என்றான். 21
கங்கையோடு, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி,
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே. 22
நெற்றியின் அழலும் செங் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும், சேது ஆகப்
பெற்றிலம் என்று கொண்டே, பெருந்தவம் புரிகின்றாளால்;
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது?-மலர்க்கண் வந்தாய்! 23
வருணன் சரணம் அடைந்த இடத்தைக் காட்டுதல்
தெவ் அடும் சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்,
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ் வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்றுழி, வருணன் நோனாது
இவ் இடை வந்து கண்டாய், சரண் என இயம்பிற்று என்றான். 24
பொதிய மலை முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம்; முன் தோன்று
அது வளர் மணிமால் ஓங்கல்; உப் புறத்து, உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர, அனுமன் தோன்றிற்று
எது? என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான்: 25
அனுமனைச் சந்தித்த இடம், கிட்கிந்தை ஆகியவற்றைக் காட்டுதல்
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகர நீர் சூழ்
வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்-
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான். 26
வானர மகளிரையும் உடன் அழைத்துச் செல்ல, சீதை விரும்பி மொழிதல்
கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால்: எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ, ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள். 27
இராமன் ஆணைப்படி சுக்கிரீவன் அனுமனை அனுப்பி, மகளிர்களை அழைத்து வரச் செய்தல்
அம் மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர அனுமன் தன்னை நோக்கி, நீ விரைவின், வீர!
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன், சென்று மன்னோ. 28
வானர மகளிர் மங்கலப் பொருள்களுடன் வந்து முறைப்படி வணங்குதல்
வரிசையின் வழாமை நோக்கி, மாருதி மாதர் வெள்ளம்
கரைசெயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரைசெறி குழலினார் தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது, நின்றார். 29
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து, பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ,
நங்கையும் உவந்து, வேறு ஓர் நவை இலை, இனி மற்று என்றாள்;
பொங்கிய விமானம் தானும், மனம் என, எழுந்து போன. 30
கோதாவரி, தண்டகாரணியம், முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத் தோகையை நோக்கி, முன் தோன்று சூழல்
கோதாவரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை,
பேதாய்! பிரிவுத் துயர் பீழை பிணித்தது என்றான். 31
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள்: இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர், தண்டகம்; அதுதான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம்;
பரத்துவாசவன் உறைவிடம் இது எனப் பகர்ந்தான். 32
மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை,
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா,
துன்னு மா தவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான். 33
பரத்துவாசன் ஆச்சிரமத்தில் இறங்குதல்
ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப் பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். 34
எண் பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்,
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். 35
இராமன் முதலியோர் முனிவனைத் தொழ, முனிவனும் இராமனை உபசரித்தல்
உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தெனப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மா மறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். 36
அடியின் வீழ்தலும் எடுத்து, நல் ஆசியோடு அணைத்து,
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன். 37
கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே,
அருகு சார்தர, அருந் தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். 38
வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன் மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே. 39
பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்த பின், சூரியன் மருமான்-
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஒர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன்: 40
முனிவர் வானவர் மூவுலகத்துளோர் யாரும்
துனி உழந்திடத் துயர் தரு கொடு மனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்? 41
விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவ அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய்-ஐய! 42
இராமன் அனுமனைப் பரதனிடம் அனுப்பல்
இன்று நாம் பதி போகலம்; மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன், நெடியோன்;
நன்று எனா, அவன், மோதிரம் கைக் கொடு நடந்தான். 43
தந்தை வேகமும், தனது நாயகன் தனிச் சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம், கூறி, மேல் வான் வழிப் போனான். 44
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசைக் கருமச் செயல் செப்பினாம்,
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்: 45
நந்தியம் பதியில் பரதன் இருந்த நிலை
நந்தியம்பதியின் தலை, நாள்தொறும்
சந்தி இன்றி நிரந்தரம், தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா,
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. 46
துன்பு உருக்கவும், சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்,
முன்பு உருக் கொண்டு ஒரு வழி முற்றுறா
அன்பு உருக் கொண்டது ஆம் எனல் ஆகுவான்; 47
நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும், அக்
கனைந்த மூலமும் காயும் கனியும், அவ்
வனைந்த அல்ல அருந்தல் இல் வாழ்க்கையான்; 48
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று, ஏக்குற்று, இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும் என்று, உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்; 49
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திரு முடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி,
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான். 50
இராமன் வரவேண்டிய நாள் குறித்து சோதிடரை அழைத்துப் பரதன் வினவுதல்
அனையன் ஆய பரதன், அலங்கலின்
புனையும், தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை, நினைத்தனனாம் அரோ,
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள். 51
யாண்டு வந்து இங்கு இறுக்கும்? என்று எண்ணினான்,
மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த் தருக என்ன, வந்து எய்தினார்,
ஆண் தகைக்கு இன்று அவதி என்றார் அரோ. 52
இராமன் வாராமையால் பரதன் அவலமுற்றுப் பலவாறு சிந்தித்தல்
என்ற போதத்து, இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை, செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்,
கொன்ற போதத்த உயிர்ப்புக் குறைந்துளான். 53
மீட்டு எழுந்து, விரிந்த செந் தாமரைக்
காட்டை வென்று எழு கண் கலுழிப் புனல்
ஓட்ட, உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும், அவலத்து அழிந்தான் அரோ. 54
எனக்கு இயம்பிய நாளும், என் இன்னலும்,
தனைப் பயந்தவள் துன்பமும், தாங்கி, அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும் பகை உண்டு என விம்மினான். 55
மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்,
பூவகத்தில், விசும்பில், புறத்தினில்,
ஏவர் கிற்பர் எதிர் நிற்க, என்னுடைச்
சேவகற்கு? என ஐயமும் தேறினான். 56
என்னை, இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின், அவன் அது கொள்க என்று
உன்னினான்கொல், உறுவது நோக்கினான்?
இன்னதே நலன் என்று இருந்தான் அரோ. 57
உயிர் துறக்கக் கருதிய பரதன், தூதரை அனுப்பி, சத்துருக்கனை அழைத்தல்
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க; இவ் வையம் புகுதுக;
நினைத்து இருந்து நெடுந் துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன். 58
என்னப் பன்னி, இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர் என்னலும், தூதர் போய்,
உன்னைக் கூயினன், உம்முன் எனா முனம்,
முன்னர்ச் சென்றனன், மூவர்க்கும் பின் உளான். 59
தொழுது நின்ற தம்பியிடம் பரதன் வரம் வேண்டல்
தொழுது நின்ற தன் தம்பியை, தோய் கணீர்
எழுது மார்பத்து இறுகத் தழுவினான்,
அழுது, வேண்டுவது உண்டு, ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று என்றான். 60
என்னது ஆகும்கொல், அவ் வரம்? என்றியேல்,
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது என்றான். 61
சத்துருக்கன் வருந்தி உரைத்தல்
கேட்ட தோன்றல், கிளர் தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி, துணுக்குறா,
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான். 62
விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்! என்று அரற்றினான்-
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். 63
கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா! 64
மன்னின் பின், வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல் நிற்கும் என்று அஞ்சி, புறத்து இருந்தும், அருந் தவமே தொடங்கினாயே!
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்,
உன்னின் பின் இருந்ததுவும், ஒரு குடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான். 65
சத்துருக்கனுக்குப் பரதன் சமாதானம் கூறி, எரி அமைக்குமாறு பணித்தல்
முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன்பின், இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு; எரி போய் அமைக்க என்றான். 66
செய்தி அறிந்து கோசலை விரைந்து ஓடி வருதல்
அப்பொழுதின், அவ் உரை சென்று, அயோத்தியினின் இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து, அலமந்து ஏங்கி,
இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து ஒழிந்தால், மகனே! என்னா,
வெப்பு எழுதினாலனைய மெலிவுடையாள் கடிது ஓடி, விலக்க வந்தாள். 67
மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர், மற்றும் சுற்ற,
சுந்தரியர் எனப் பலரும் கை தலையில் பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை வந்து அடைந்தாள் அன்றே. 68
கோசலை பரதனைத் தீயில் விழாதபடி பற்றிக் கொண்டு, தடுத்துக் கூறுதல்
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஓசிய, மேனி தள்ள,
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான், அவள் புகுந்து, பற்றிக்கொண்டாள்.69
மன் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்,
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும், எண்ணில், அப் பெற்றியால்;
என் இழைத்தனை, என் மகனே? என்றாள். 70
நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி
பாயும்; மன்னரும் சேனையும் பாய்வரால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் வீழும்; உலகும் திரியுமால். 71
தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம், கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை, ஊழி திரியினும், பேருமோ? 72
எண் இல் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? 73
இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள். 74
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு, ஊழி வாழ்
பெரு நிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ?-கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! 75
இறக்கையும், சிலர் ஏகலும், மோகத்தால்
பிறக்கையும், கடன் என்று, பின் பாசத்தை
மறக்கைகாண், மகனே! வலி ஆவது; என்,
துறக்கைதானும்? என்றாள்-மனம் தூய்மையாள். 76
கோசலையின் உரையைப் பரதன் மறுத்து உரைத்தல்
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல்;
எந்தை மெய்ம்மையும், இக் குலச் செய்கையும்,
நைந்து போக, உயிர் நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பெனால். 77
யானும், மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்,
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ? 78
தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன், இது காட்டுவென், மாண்டு என்றான். 79
அனுமன் தோன்றுதல்
என்று தீயினை எய்தி, இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு,
குன்று போல் நெடு மாருதி கூடினான். 80
இராமனது வருகையை உரைத்து, அனுமன் எரியை அவித்தல்
ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்? என்று உரைத்து, உள் புகா,
கையினால் எரியைக் கரி ஆக்கினான். 81
ஆக்கி, மற்று அவன் ஆய் மலர்த் தாள்களைத்
தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கி, கை
வாக்கின் கூடப் புதைத்து, ஒரு மாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும் எனச் சொல்லினான். 82
இன்னம் நாழிகை எண்-ஐந்து உள, ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லைஎனின், அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து, இவ் எரியில் முடிவெனால். 83
ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்,
நின்று தாழ்த்தருள், நேமிச் சுடர் நெடுங்
குன்று தாழ்வளவும்; இது குன்றுமேல்,
பொன்றும், நீயும், உலகமும்-பொய் இலாய்! 84
எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்,
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்,
அங்கு வைகினன் அல்லது, தாழ்க்குமோ?
இங்கண், நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்: 85
அனுமன் இராமனது மோதிரத்தை அடையாளம் காட்ட,
அங்குள்ளார் அனைவரும் மகிழ்தல்
அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஓர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோது அறு சிந்தையாய்!
கண்டு கொண்டருள்வாய் எனக் காட்டினான். 86
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்,
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம் அரோ,
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும், 87
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. 88
மோதிரம் பெற்ற பரதனது பெரு மகிழ்ச்சி
மோதிரம் வாங்கி, தன் முகத்தின்மேல் அணைத்து,
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ? எனா
ஓதினர் நாண் உற, ஓங்கினான்-தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். 89
ஆதி வெந் துயர் அலால், அருந்தல் இன்மையால்,
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்,
ஏதிலன் ஒருவன்கொல் என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன, வயிரத் தோள்களே. 90
அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும், வெங் களி துளக்கலால்;
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக் கை கொட்டுமால். 91
ஆடுமின், ஆடுமின்! என்னும்; ஐயன்பால்
ஓடுமின், ஓடுமின்! என்னும்; ஓங்கு இசை
பாடுமின், பாடுமின்! என்னும்; பாவிகாள்!
சூடுமின், சூடுமின், தூதன் தாள்! எனும். 92
வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர், இனி எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற,
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும், பாடுமால். 93
வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;-
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! 94
பரதன் அனுமனைப் பாராட்டி, நீ யார்? எனல்
அத் திறத்து ஆண்தகை, அனுமன் தன்னை, நீ
எத் திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன்; மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான். 95
மறையவர் வடிவு கொண்டு, அணுக வந்தனை;
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்;
துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்! என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான்: 96
அனுமன் தன் வரலாற்றை உரைத்து, பெரு வடிவையும் காட்டுதல்
காற்றினுக்கு அரசன் பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து, நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாளனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். 97
அடித் தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித் தடந் தாமரைக் கண்ணின் நோக்கு எனா,
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்,
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான். 98
வடிவு கண்டோர் அஞ்ச, பெரு வடிவைச் சுருக்குமாறு பரதன் வேண்டுதல்
வெஞ் சிலை இருவரும், விரிஞ்சன் மைந்தனும்,
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும், சேனை துண்ணென
அஞ்சினது, அஞ்சனை சிறுவன் ஆக்கையால். 99
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின், உலப்பு இல் யாக்கையை
வாங்குதி, விரைந்து என, மன்னன் வேண்டினான். 100
அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்
சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன்,
பொருக்கென நிதியமும், புனை பொன் பூண்களின்
வருக்கமும், வரம்பு இல நனி வழங்கினான். 101
கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,
மாவொடு கரித் திரள், வாவு தேர் இனம்,
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்,
எவரும் சிலை வலான், யாவும் நல்கினான். 102
அனுமன் விமானத்திலுள்ளாரைப் பரதனுக்குச் சுட்டிக் காட்டுதல்
அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். 103
அண்ணலே! காண்டியால்-அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வாரைக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. 104
ஏழ்-இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான் என்று கொண்டு, உணர்த்தும் காலையே. 105
இராமனைக் கண்டவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல்
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். 106
இராமனைப் பரதன் காணுதல்
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். 107
ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். 108
இராமனும் தம்பியைக் கண்டு மகிழ்தல்
தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு எனா, 109
காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். 110
புட்பக விமானம் நிலத்தைச் சார்தல்
ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். 111
இராமனது வருகையால் தாயர் முதலியோர் உற்ற நிலை
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான். 112
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். 113
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார். 114
சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. 115
அடியில் வீழ்ந்து வணங்கிய பரதனை இராமன் அன்புறத் தழுவுதல்
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். 116
தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான். 117
இலக்குவன் பரதனது பாதங்களில் விழுந்து வணங்குதல்
அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன்-படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான். 118
சத்துருக்கனையும் இராமன் தழுவி, பரத சத்துருக்கனர்களைத் துணைவர்களுக்கு அறிமுகப்படுத்தல்
பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். 119
மிகைப் பாடல்கள்
வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது; அதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில் என்றான். 1-1
வாங்கினான் இரு நிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் ஏழு பஃது ஏறினும், ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின், நீ இனிது
பூங் குலா நகர் புகுதி, இஞ் ஞான்று எனப் புகன்றான். 1-2
மங்கலா நிதி வட திசை வானவன் மானம்;
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்,
எங்கு உளார்? எனும் இடம் உளது; இதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில் என்றான். 1-3
வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்;
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்!
ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில் என்றான். 1-4
வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்;
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும்,
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில் என்றான். 1-5
என்று, தேரினை வீடணன் எய்தியது என்றான்;
நன்றுதான் என நாயகன் ஏறினன், அவரோடு
அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என இரு திசை இருந்தும் ஒக்கும். 1-6
ஏறினன் விமானம் தன்னில் இராமனும், இளைய கோவும்,
மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை வேந்தும்,
கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து ஏற;
மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில் உள்ளார். 1-7
[இது முதல் 1-19 வரையில் இமயப் படலம் என்றும்,
வசந்தன் உயிர்வரு படலம் என்றும், சில பிரதிகளில் உள்ளன.]
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி,
ஏறும் நீர் தேரில் என்ன, கருணன் வந்து எதிர்த்தபோது,
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி,
நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில் என்னச் சொன்னார். 1-8
என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி,
நின்ற போதினில் இராகவன் தேரின்நின்று இழிந்தான்;
பொன்றுமா வரக் காரணம் என்? எனப் புழுங்கா
துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி எனச் சொன்னான். 1-9
வரிசிலை இராமன், ஓலை மறம் புரி மறலி, காண்க!
எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து போந்த
குரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க; அன்றேல்,
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான். 1-10
அக் கணத்து அருகு நின்ற அனுமன் கைத் திருமுகத்தைத்
தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி,
இக்கணம் வருவென்; வாழி! இராம! என்று, இரு தோள் கொட்டி,
மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப் பாய்ந்தான். 1-11
மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில்
தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர்தம்மைக்
கண்டு, மாருதி கண் புதைத்து, அரி! அரி என்ன,
மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம். 1-12
துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா
வளம் கொள் மாருதி, வசந்தனைக் காட்டு என, அவனும்
உளம் கலங்கி, உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள்;
விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து என்றான். 1-13
சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத் துவக்கி,
பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப் புகலும்,
முன்னை வந்து கண்டு, இந்திரன், முனிவு எனோ? என்ன,
மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி என்றான். 1-14
வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!
இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி என்று இசைப்ப,
சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத் துவக்கி,
பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப் பாய்ந்தான். 1-15
சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்,
வந்த காரியம் எது? என, வயந்தனைப் பார்த்துச்
சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன் தான்
உந்தன் நீள் பதத்துளான் எனின், காட்டு என உணர்த்தும்: 1-16
என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை-
தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்; விறலோய்!
அன்னவன் தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து என்றான். 1-17
என்ற நான்முகன் தன்னையும், இந்திரன் யமனோடு
ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு குதிகொண்டான்;
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில்
சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன் பதியில். 1-18
மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,
குலவு வாசவன் யமனை விட்டு, இரு நிலம் குறுகி,
இலகு இல் வீரன் தன் அடி, இணை அவனொடும் வணங்கி,
சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன், தேர்மேல். 1-19
[வேறு சில பிரதிகளில் 1-6 பாடலுக்குப்பின் 1-20 முதல் 1-27 வரையில்
உள்ள பாடல்களுடன் வசந்தன் வரலாறு பற்றி,
(1-7 முதல் 1-19) முன் வந்த பாடல்களின் சிலவற்றையும் இடையில் கொண்டு,
இவ் வரலாறு வேறு வகையில் அமைந்துள்ளது.]
ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர் மாதினோடும்;
ஏறினான் இளைய கோவும், இராக்கதர் வேந்தனோடும்;
ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர் ஏற,
மாறினார் நிலத்து நின்றார், வசந்த கோத்திரத்திலுள்ளார். 1-20
ஏறினன், இளைய கோவும்; இரவி சேய், சாம்பன், நீலன்,
ஏறினன், வாலி மைந்தன் என்றனர்; பலரும் ஏற,
சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,
மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல். 1-21
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்,
கண்டு கைதொழ வானரக் கடலும், மற்று யாரும்
எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை
அண்டர் நாதனும், வானமும், அமரரும், ஆமால். 1-22
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை; அவர்தம்மை,
வாரும் தேரின்மேல் என, கும்பகர்ணன் வந்து ஏன்ற
போரில் எம் படைத் தலைவனோ பொன்றினன்; அவனை
நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில் என்றார். 1-23
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை இராமன்
சூழ நோக்கினன்; சுக்கிரீவன் தனைப் பாரா,
வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ? என்றான். 1-24
இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை இறைஞ்சி,
சுருதியாய்! ஒரு பேர் அரு சொல்லுவ; தொடர்ந்து
வருவதான இச் சேனையில் வசந்தன் என்று உரைக்கும்
ஒருவன் வந்திலன்; கண்டருளுதி என உரைத்தான். 1-25
கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன் தனை எடுத்துத்
தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத் தெரியாமல்,
பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு அணிந்தே. 1-26
இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல் தன்னில்
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது அம்மா!
வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ? வாராகினாகில்,
நமன் குலம் களைவென் என்றான் -நாளை வா என்ற வீரன். 1-27
[இதன் பின் 1-10, 11, 12, 13 என்ற பாடல்கள் உள்ளன.]
செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக் கையால்
அல் எனும் அரக்கர் தம்மை வம்மின்! என்று அழைத்து, மெள்ள
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக் கண்டால்,
செல்லவே போமின் என்று விடுக்குவென், செவியில், செப்பி. 1-32
[இதன்பின் 1-14, 15, 16,17, 18, 19 என்ற பாடல்கள் உள்ளன.]
மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!
செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி
கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,
பொய் இலா மனத் திரிசடை, விடை எனப் போனாள். 5-1
என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;
சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,
வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார். 16-3
[சில பிரதிகளில், சொன்ன வாசகம் பிற்பட (16) என்ற பாடலுக்குப்
பின் வசந்தன் உயிர் வரு படலம் தொடங்குகிறது.
16-3 என்னும் இந்த பாடலுக்கு முன் இதன் முன்னர் தந்துள்ள
1-21, 1-23 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன.
இதன் பின் 1-24 என்ற பாடல் உள்ளது.]
என்னும் காலை (யில்), இராமனும் யமபடர் யாரும்
மன்னும் தொல் புரம் நோக்கியே, மணி நகை முறுவல்
உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து என்னா,
பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன், பொரவே. 16-5
எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற, அழியாப்
புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்
தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில் நாண் எறிந்தான். 16-6
பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,
வாகை கொண்ட வெஞ் சிலையின் வளைவுற வாங்கி,
மேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-7
வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க,
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக,
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த,
தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-8
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க,
மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத்
தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச் சரங்கள்
தென் புலன் தனை நிறைத்தது; செறிந்தன, சேணில். 16-9
தருமராசனும், காலனும், யமபடர் தாமும்,
உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து,
மரும தாரையில் பட்டது ஓர் வடிக் கணை வாங்கி
நிருமியா, இது இராகவன் சரம் என நினைந்தார். 16-10
கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து எய்தி,
பட்டனம்; இனிப் பிழைப்பு இலம் என்பது ஓர் பயத்தால்,
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப,
சிட்டர் தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார். 16-11
சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது இலார்மேல்
புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்! நின்னை
மறந்திருந்து உய்வது உண்டோ ? மலர்மிசை அயனைத் தந்த,
அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம் என்றார். 16-12
ஐயனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே!
மெய்யனே! என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்;
பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்! என, போர் மூண்டு
எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன். 16-13
வந்து அடைந்து, உனக்கு அபயம் என்று, அடியினில் வணங்கி,
எம் தனிப் பிழை பொறுத்தி என்று, இயம்பினிர்; இதனால்
உம்தம்மேல் சலம் தவிர்ந்தனென்; யூக நாயகன் தான்
தந்த சேனையில் வசந்தன் வந்திலன்; தருக என்றான். 16-14
தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்:
என் தனிப் பிழை பொறுத்தி என்று இயம்பினை; அதனால்
உன் தன் மேல் சலம் தவிர்ந்தனம்; யூகநாயகன் தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக என்றான். 16-15
அண்ணல் ஆரியன், தருதி என்று அருளலும், அவர் போய்,
விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில்
கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது இருந்தார்;
திண்ணன் யாக்கை எங்கே? என, சாம்புவன் செப்பும்: 16-16
[இதன்பின் 1-25, 1-10, 1-11 என்னும் பாடல்கள் உள்ளன.]
அன்னதே என, அவன் உயிர்க்கு அமரர்தம் பதிக்கே
முன்னது ஓர் உடல் கொண்டு, இவண் தருக! என மொழிய,
சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப் பாரா,
பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை எனப் போனான். 16-20
[இதன்பின் 1-12, 13, 27, 1-14, 15, 16, 17, 18,
என்னும் பாடல்கள் வர வசந்தன் உயிர் வரு படலம் முடிவு பெறுகிறது]
அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை, ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்
சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,
பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும் போனான். 16-29
அன்ன காலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,
முன் இராகவன், சானகி, இலக்குவன் முதலா,
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற. 16-30
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;
நன்றுதான் என நாயகன் ஏறினன் திருவோடு;
அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும். 17-1
ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்; அனுமன் தன்பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க, நெடியவன் சரணம் சூடி,
மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்
போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம் அம்மா! 17-2
தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வென்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந் தலைவர்தாமும்,
மானுட வடிவம் கொண்டார்; வள்ளல் தன் வாய்மைதன்னால். 19-1
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்,
ஒன்றும் நல் சீதையோடும், உம்பரும் பிறரும் காண,
வென்று உயர் சேனையொடும், இராமனும் விரைவின் எய்தி,
தென் திசை இலங்கை ஆதி, தேவிக்குத் தெரியக் காட்டும். 20-1
வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து எழுந்து, விண்மேல்
சென்றது விமானம்; செல்ல, திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது தேறி,
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத் தெரிக்கலுற்றான்: 20-2
மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின் ஆங்குத்
துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி, வானோர்
பொன்னகர் ஒக்கும் என்று புகழ்தலின், புலவராலும்
பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே! பாராய். 20-3
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக் கனி வாய் வல்லி!
எதிர் பொர வந்த விண்ணோர்-இறைவனைச் சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல,
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய். 20-4
வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும் இகலி, வெய்ய
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய்;
கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்
கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய். 20-5
மறத்திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன் தன்னைச்
செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை வாயில் நோக்காய்;
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி
வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய். 20-6
கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்;
மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி!
இருங் கட முகத்த யானை இவுளி, தேர், காலாள், துஞ்சி,
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய். 20-7
கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த் தோன்ற,
அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத் தாக்கி,
சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை வெம் போர்ப்
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப் பாராய். 20-8
பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா நின்றேன்;
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து
நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும் நோக்காய். 20-9
இலங்கையை வலஞ் செய்து ஏக என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர, பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண் என, நமன் தன் வாயில்
கலந்திட, ஈங்குக் கண்டாய், சுபாரிசற் சுட்டது என்றான். 20-10
குட திசை வாயில் ஏக, குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது என் முன்,
வட திசை வாயில் மேவ, இராவணன் மவுலி பத்தும்,
உடலமும் இழந்தது இங்கு என்று உணர்த்தி, வேறு உரைக்கலுற்றான்: 20-11
நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட
பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது, இச் சேது கண்டாய். 20-12
மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன் தனக்கும் எட்டா;
பொன் தொடித் தெரிவை! யான் என் புகழுகேன்! கேட்டி, அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார். 20-13
ஆவினை, குரவரோடும் அருமறை முனிவர்தம்மை,
பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து தம் இல்
மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும் சுரர்கள் ஆவார். 22-1
மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே. 22-2
ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, கமலம் அன்ன
பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என் பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு என, இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை பகரலுற்றான்: 23-1
அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு இடுக்கண் செய்தோர்,
செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர், தம்பால்
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர், பெற்ற
தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச் செற்றோர், 23-2
குருக்களை இகழ்வோர், கொண்ட குலமகள் ஒழியத் தங்கள்
செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர் கொல் தீம்பர்,
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள் தின்று
பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை செய்வோர். 23-3
வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,
மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்,
கை உள முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்,
துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச் சுளித்துக் கொல்வோர், 23-4
ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே சென்று
நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர், சான்றோர்
தாரமது அணைவோர், மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர். 23-5
கண்டிலாது ஒன்று கண்டோ ம் என்று கைக்கூலி கொள்வோர்,
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்,
மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால் ஒருவன் சோற்றை
உண்டிருந்து, அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர், 23-6
பின்னை வா, தருவென் என்று பேசித் தட்டுவிக்கும் பேதை,
கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளுண் மாந்தர்,
துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து இகழ்வோர், சுற்றம்
இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல் செய்வோர். 23-7
ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்,
நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை வஞ்சிப்போர், நன்மை
வேண்டிடாது, இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை நீப்போர்,
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர். 23-8
கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர், தங்கள்
வயிற்றிடக் கருவைத் தாமே வதைப்பவர், மாற்றார்தம்மைச்
செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர்,
மயிர்க் குருள் ஒழியப் பெற்றம் வெளவு வோர், வாய்மை இல்லோர், 23-9
கொண்டவன் தன்னைப் பேணாக் குலமகள், கோயிலுள்ளே
பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை,
உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள் உலோபர், ஊரைத்
தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர், 23-10
தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள் வௌவும்
பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள், வந்து
கா எனா, அபயம் என்று, கழல் அடைந்தோரை விட்டோர்,
பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று போவோர். 23-11
முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத் தீயோர்,
மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்,
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில் வாழும்
பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும் பாவர். 23-12
கார்க் கன வரை சேர் கானில் கடுங் குழி கல்லும் கட்டர்,
நீர்க் கரை அதனில் ஒட்டி நெடுங் கலை முயல் மான் கொல்வோர்,
ஊர்க் கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப் பசு எடாது போவோர்,
வார்க் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள். 23-13
வழி அடித்து உண்போர், கேட்டால் வழி சொல்லாதவர்கள், வைப்பைப்
பொழி இருள் களவு காண்போர், பொய் சொல்லிப் பண்டம் விற்போர்,
அழிவு இலா வாய்மை கொன்றோர், அடைந்தது .....................
............................தெரிசிக்கத் தீர்க என்றான். 23-14
ஆதியர் மூவர்க்கு அந் நாள், அரு மறை அறைந்த அந்த
நீதியாம் புராணம் தன்னை இகழ்பவர், நிறையக் கேளார்,
பாதியில் விட்டு வைப்போர், படித்தவர்ப் பிரியப்படுத்தார்,
போதம் இலாதார், மற்றச் சமயம் பொல்லாதது என்பார். 23-15
என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம்
ஒன்றிலர், நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்,
துன்றிய வினைகள் எல்லாம், சுடர் கண்ட இருளே போல,
தென் திசை வந்து, சேது தரிசிக்க, தீரும் என்றான். 23-16
ஆங்கது கேட்டு, அருந்ததியே அனையாளும், அவதியுடன்
தீங்கு அணுகும் செய்ந் நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள்
தாங்க அரும் பாவங்களையும் எனக்காகத் தவிர்க்க என,
நீங்கிடுக அதுவும் என்றான்-நிலமடந்தை பொறை தீர்த்தான். 23-17
பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்,
சீர் எழுவு திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க என,
கார் எழுவு திரு மேனிக் கண்ணன் நினைப்பின் படியே,
ஈர்-எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால். 23-18
பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும்
சீர் மேவும் திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க எனா,
கார் மேவும் திரு மேனிக் காகுத்தன் கட்டுரைத்து,
வார் மேவும் முலைச் சனகி மாதோடும் வழிக்கொண்டான். 23-19
என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி,
தன் பெருஞ் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும்
பொன் பொரு விமானம் தன் மேல் போகின்றபோது, மிக்க
இன்புடை இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து, என் செய்வான். 23-20
முன் பெல அரக்கன் தன்னை முனி கொலை தொடரக் கண்டு, ஆங்கு,
அன்பினால் அரி பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி,
துன்பமே தொடரும் பொல்லாச் சூழ் கொலை தொலையாது என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து நின்றான். 23-21
திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின்,
அருகு அணை திருமகட்கு, ஆங்கு மற்று உள
தரு அணை திரள் புயச் சனக வல்லிக்கு, ஆம்
கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான். 23-22
கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்,
அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு இருத்தி,
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,
ஒப்பு அரியாள் தன்னுடனே, உயர் சேனைக் கடலுடனே. 23-23
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே,
வாய்ந்த சாய்கையும் வந்தது; வானவர் வணங்க,
ஏந்து தோள் புயத்து இராமனும், இலக்குவன் தானும்,
வாய்ந்த சீதையும், மானமும், வானர வேந்தும், 23-24
பாய்ந்த வேலையின் கரையிடைப் பரமன் அங்கு உறவே,
சாய்ந்த சாய்கையும் வந்து, அணுகாது அயல் கிடக்க,
ஏந்து திண் புயத்து இராமனும், இளையவன் தானும்,
வாய்ந்த சீதையும், சேனையும், மற்றுள பேரும், 23-25
நின்ற போதினில், நிகர் இலா அகத்தியன் முதலோர்
குன்றுபோல் புயத்து இராகவன் தனை வந்து குறுக,
நன்று நின் வரவு என்னவே, நாதனும் வணங்கி,
வென்றி வேந்தனும் வேதியர் தம்மொடு வியந்து, 23-26
சேதுவின் கரை சேர்ந்த அத் திறல் புனை இராமன்,
ஏது இத் தலம்? எனக் குறு முனிவனைக் கேட்ப,
வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த
போது, தந்தது, இப் பொன் நகர் என்று அவன் புகன்றான். 23-27
புகன்றவன் தனைப் பூங் கழல் இராகவன் சாய்கை
அகன்ற காரணம் குறு முனி உரைசெய, அவனும்,
பகர்ந்த தேவரும், பாற்கடல் பள்ளியான், பரமன்,
புகுந்தது இவ் வழி; பூவில் வந்தவனும், மற்று யாரும், 23-28
இருப்பது இத் தலம்; ஆகையால், இராவணன் சாய்கை,
அருத்தி இன்றியே, அகன்றது என்று அருள் முனி அறைய,
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி,
கருத்து மற்று இனி உரை என, குறுமுனி கழறும்: 23-29
இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து,
உன் தன் மா நகர் எய்தினால், சாய்கை போம், உரவோய்!
அந்த நீதியே செய்தும் என்று, அனுமனை அழைத்திட்டு,
எம் தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான். 23-30
அந்த வேலை, முனிவன் அளி தெருள்
இந்த மா நிலத்து யாவரும் இன்புற,
கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை
தந்து காண் என, மாருதி தாவினான். 23-31
போதி என்று, அவற் போக்கிய இராமனும், இந்த
மாது சீதையும், மைந்தனாம் இலக்குவன் தானும்,
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி,
ஆதி நாதனும் இருந்தனன், அமரர்கள் வியப்ப, 23-32
ஆன போதினில், ஐயன் மனத்துளே
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்?
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்
மோனமாகி இருந்தனன், மூவரான். 23-33
காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே,
ஆலம் உண்ட தே இவர் ஆம் என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே. 23-34
முகுத்தம் ஆனதே என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண் மணல் கூப்பி,
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி,
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும். 23-35
ஒத்த பூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி,
சித்தம் வாழ்தர நின்றனன், தேவர்கள் துதிப்ப. 23-36
நின்ற போதினில், நிறங்களும் படலமும் கொண்டு,
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து,
நன்று செய்தனை! என்னப் போய் நாதனைப் பிடுங்கி,
வென்றி வால் அற்று, மேதினி வீழ்ந்தனன், வீரன். 23-37
[இந்தப் பாடல் காணும் இடத்தில், இதற்குப் பிரதியாக, பின்வரும் ஐந்து பாடல்கள் ஒரு பிரதியில் உள்ளன]
ஆய வேலையில், கங்கையின் அருஞ் சிலை வாங்கி,
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான்; தோன்றா,
சீயமாய் மலி அண்ணல் முன் திருச் சிலை வைத்து,
நேயமோடு இரு தாள் பணிந்து, அங்கு அவன் நின்றான். 23-37(அ)
நின்ற காலையில், அமலன் அங்கு அனுமனை நோக்கி,
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து, நம் பூசை
சென்றது ஆதலின், திருச் சிலை தாழ்த்தது; இப் புளினக்
குன்றினால் சிவன் தன்னுருக் குறித்தனென், கோடி. 23-37(ஆ)
என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட, இறைஞ்சி,
முன்னி மாருதி மொழிந்தனன்; மூவுலகு உடையோய்!
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடைப் பிழையாது
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை எனவே. 23-37(இ)
ஈர்த்தனன் வாலினாலே, இராகவன் பூசை கொள்ளும்
கூந்தனை; அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி
வார்த்த பேர் உருவம் கொள்ள, வால் விசைத்து, அனுமன் அந்த
மூர்த்தி என்று உணரான், நெஞ்சம் மூச்சு அற, தளர்ந்து வீழ்ந்தான். 23-37(ஈ)
மனுபரன் அனுமன் தன்னை வரவழைத்து, ஈசன் வன்மை-
தனை உரைத்து, இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி,
முனம் அதை ஏத்தி, பின் இம் மூர்த்தியை ஏத்தும் என்ன,
அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி நின்றார். 23-37(உ)
விழுந்தவன்தனை வெந் திறல் இராகவன் நோக்கி,
அழுந்து சிந்தையாய்! அறிவு இலாது அதனை என் செய்தாய்?
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி என்று உரைப்ப,
எழுந்து போய், அவன், இறைவனை அருச்சனை செய்தான். 23-38
அவ் இடத்து, அனுமன் தந்த, கங்கைமேல்
வவ்விடப்படும் வந்திடுமான் சிலை
இவ் இடத்தினில் யாவரும் ஏத்து எனா,
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான். 23-39
எம்தன் நாதன் இவன் என்று இறைமகன்
தந்த நாமம் சராசரம் சார்ந்த போது,
இந்திரன், பிரமா, முதல் எய்தினார்;
வந்து, வானவர் யாவரும் வாழ்த்தினார். 23-40
இத் தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்,
நத்து உலாய கை நாரணன், நான்முகன்,
பித்தன், மூவரும் ஏத்தப் பெறுக எனா. 23-41
என்று, இராகவன் ஈசன் பெருமையின்
நன்றிதன்னை நவில, அடங்குமோ?
சென்று சென்று, செய செய! போற்றி! என்று,
அன்று இராச குமாரன் அறைகுவான்: 23-42
பூசனைத் தொழில் முடிந்தபின், பூங் கழல் இராமன்
தேவத் தச்சனை அழைத்து, நீள் திரைக் கடல் கிடந்த
காவல் மா மலை கொணர்ந்து, நீ கண்ணுதல் கோயில்
பூவில் வந்தவன் சொல்வழிச் சமை எனப் புகன்றான். 23-43
நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே,
இந்த மா மலை இரும் என, யாவையும் நல்கி,
விந்தை தங்கிய தோளினீர்! வேந்தனைப் பூசித்து,
இந்த மா நகர் இரும் என, இராமனும் அகன்றான். 23-44
போன காலையில், பூங் கழல் இராகவன் பின்னே
சேனை தான் வர, தேவர்கள் யாவரும் வணங்கி,
மேல் நிலத்தவர் சென்றிட, விடை கொடுத்தருளி,
தானும், சீதையும், தம்பியும், சேதுவைச் சார்ந்தார். 23-45
தேர் ஏறி, மா நாகம் சென்னிமிசைச் சென்று ஏற,
கார் ஏறு கண்ணபிரான், காவலன் கமழ் துளபத்
தார் ஏறு தடந் தோளான், தனி வயிரக் குனி சிலைக் கைப்
போர் ஏறு, பொலிவுடனே வட திசையில் போயினனால். 23-46
சேர்ந்து, சேதுவின் தென் கரை கடந்து, வந்து எய்தி,
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகிப்
போந்து, வானரப் புதுமையும் சனகிக்குப் புகன்று,
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன், திறலோன். 23-47
வரையலுற்றான், மலர்க் கரத்து இருந்த வன் சிலையால்,
திரையில் உற்றிட மரக்கலத் தொகுதிகள் செல்ல,
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே;
உரை செய்து உற்றனன், சனகிக்குப் பின்னும் அங்கு உரவோன்: 23-48
நின்னை மீட்பதே நினைந்து, சில் நெறி எலாம் நீந்தி,
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப,
சொன்ன வேற் படை அரக்கரைக் குறைத்த இச் சேனை
மன்னனால் பெற்ற வலி இது; வென்றியும் அதனால். 23-49
தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்!
வாய்ந்த வானர வாரணம், மாருதி,
ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால். 24-1
மாருதி, நின்னை நாடி வருபவன், ஏறிப் பாயப்
பாரிடைக் குளித்து நின்ற பவள மால் வரையைப் பாராய்;
போரிடைப் பொலன் கொள் பொன் தார்ப் புரவிகள் போக்கு இற்று என்ன,
நீரிடைத் தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய்! 24-2
ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய
வேரி அம் கமலை செப்பும்: விரிந்த கிட்கிந்தை உள்ளார்,
சீரிய அயோத்தி சேரத் திருவுளம் செய்தி என்ன,
கார் நிற அண்ணல், மானம் காசினி குறுக என்றான். 26-1
என்றவன் சேயை நோக்கி, இசைந்து, கிட்கிந்தை உள்ளார்,
நன்று நம் பதியைக் காண, நாயக! அழைத்தி என்ன,
சென்று அவன் சாம்பன் தன்னை, திசை எட்டும் திரியச் சாற்றி,
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு என்றான். 27-1
என்றபோது, எழுந்து சாம்பன், இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான்; ஓதக் கேட்டே,
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்றென்ன,
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர், மகிழ்ச்சி கூட, 27-2
சந்திர மானம் தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன,
இந்திரன் மகனார் தாரத் தாரையும், ருமையும், கூடி
வந்தனர்; வந்து மொய்த்தார், வானர மடந்தைமார்கள்;
இந்திரை கொழுநன் தன்னை ஏத்தினர், இறைஞ்சி நின்றார். 29-1
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழக் கடைந்தபோது, அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே,
தன்னுடன் பிறந்த முத்து மாலையை, தரையில் தோன்றி
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள், விரைவில் தாரை. 29-2
தாரையைச் சீதை புல்கி, தாமரைக் கன்ணன் அம்பால்
பாரை விட்டு அகன்றான் வாலி; பார் உளோர்க்கு அவதி உண்டோ?
சீரிது மலரோன் செய்கை; தெரியுமோ? தெரியாது அன்றே?
ஆர் இது தெரியகிற்பார், காலத்தின் அளவை அம்மா? 29-3
என்றிட, தாரை நிற்க; எரி கதிர்க் கடகம் ஒன்று,
மின் திரிந்தனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது,
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது, அன்று
சென்று அடி இணையில் இட்டே, இறைஞ்சியே, ருமையும் நின்றாள். 29-4
நின்றவள் தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று,
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்குச் சூழ,
தன் திருக் கைகளாலே தழுவினள் என்னக் கண்ணால்
ஒன்று அல பலவும் கூற, உணர்ந்து உளம் உவகை உற்றே. 29-5
கடி கமழ் குழலினாளே! கார்காலம் யாங்கள் வைகும்
வடிவுடைச் சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்;
அடு திறல் பரிதி மைந்தன் நகர் அதன் அழகு பாராய்;
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய். 30-1
கனி வளர் பவளச் செவ் வாய்க் கனங் குழை! நின்னைக் காணாத்
துனி வளர் துன்பம் நீங்க, தோழமை நாங்கள் கொண்ட
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும்
நனி வளர் நட்புக் கொண்ட நலம் தரு நாகம் நோக்காய். 30-2
மாழை ஒண் கண்ணாய்! உன்னைப் பிரிந்து யான் வருந்தும் நாளில்,
தாழ்வு இலாத் துயரம் நீங்க, தாமரை உந்தியான் கை
ஆழி அம் ஆற்றலானை, அனுமனை, அரக்கர் அஞ்சும்
பாழியான் தன்னை, கண்ட பம்பையாறு அதனைப் பாராய். 30-3
பொய் வித்தி, வஞ்சம் காத்து, புலை விளைத்து, அறத்தைத் தின்றோன்
கை வித்தும் சாத்தினான் அக் கடல் பெரும் படையை எல்லாம்
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து, நம்மை
உய்வித்த வீரன் தன்னைக் கண்ட இடம் உது கண்டாயே. 30-4
சவரியது இருக்கைதானும், கவந்தனைத் தடிந்த கானும்,
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும்,
சவையுறு சுருட்டன் மைந்தன், சரவங்கள், முதலோர் காதல்
கவை அறு முனிவர் தங்கள் இடங்களும் கருதி நோக்காய். 30-5
விரை கமழ் ஓதி மாதே! விராதன் வந்து எதிர்ந்து போர் செய்
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை நோக்காய்;
சரதம் நான் அரசு வேண்டேன்; தட முடி சூடுக என்று
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனைப் பாராய். 30-6
வளை பயில் தளிர்க் கை மாதே! வரு புனல் பெருகக் கண்டு,
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி, யான் துயரம் இன்றி
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப, வெல் போர்
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனைப் பாராய். 30-7
பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய்;
கயல் பொரு கங்கை யாறும், குகன் உறை நகரும், காணாய்;
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல் ஆதிமூலம்
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியைத் தொழுது நோக்காய். 30-8
என்று உரைத்து, இளவலோடு சனகியும், இரவிசேயும்,
வென்றி வீடணனும், சேனை வெள்ளமும் விளங்கித் தோன்ற,
பொன் திகழ் புட்பகத் தேர் பூதலத்து இழிய ஏவி,
இன் துணைப் பரத்துவாசன் இட வகை இழிந்தான் அன்றே. 30-9
என்று, மன்னவன் பற்பல புதுமையும் யாவும்
மன்றல் அம் குழல் சனகிக்குக் காட்டினன், மகிழ்ந்து,
குன்று துன்றிய நெறி பயில் குட திசைச் செவ்வே
சென்று, கங்கையின் திரு நதித் தென் கரை சேர்ந்தான். 35-1
ஆர்த்து விண்ணவர் ஆடினர்; ஆடகத் தேரும்
பேர்த்த போகினில் நிலமிசை அணுகுற, பெரியோர்க்கு
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து,
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான். 35-2
மான மானம் மீப்போனது, வட திசை வருவது
ஆன காலையில், அறிவனும் ஆயிழை அறிய,
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப,
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார். 35-3
பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல்
மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி,
தாகம் நீங்கினர்; அவ் இடைத் தேவரும் சார்ந்தார். 35-4
இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி,
வெறித் துழாய் முடி வேத மெய்ப் பொருளினை வியவா,
புறத்ததாம் உயிர் பெற்றனம் என அகம் பொங்க,
திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான். 35-5
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன், அவர்கள்,
எந்தை! நீ இன்று இங்கு இருந்து, உள வருத்தமும் நீக்கி,
செந்து, நாளை அத் திருநகர் அடைக எனச் செப்பி,
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார். 39-1
தகும் அருந் தவங்கள் ஈட்டி, தசமுகத்து அரக்கன் பெற்ற
யுகம் அரைக் கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர்
சுகம் உற, சிலை கைக் கொண்ட தொல் மறை அமல! யார்க்கும்
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ ? 41-1
இந்த வாசகம் இயம்பினன், பின்னரும் இசைப்பான்,
எந்தை! நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி,
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க! என்று
அந்தம் இல் பரத்துவன் சொல, அவ் இடத்து அடைந்தான். 42-1
அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து,
மிடைந்த சேனை அம் பெருங் கடல் சூழ் தர, மேல் நாள்,
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள்
படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான். 42-2
இருந்த போது, இராமன் தன்னை இருடியும் இயம்பும்: எந்தாய்!
பெருந் திறல் இலங்கை தன்னை எங்ஙனம், பெரியோய்! நீயே
வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன் தன்னைத்
திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக! என்றான். 42-3
இராகவன் அவனை நோக்கி, இறந்த வாள் அரக்கர் எல்லாம்
அராவின் மாருதியும், மேன்மை வீடணன் தானும், ஆங்கே
குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம் கொண்டு
விராவியே மீண்டது என்று, மீளவும் பகரலுற்றான்: 42-4
தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல்
அந்தரம் உற்றபோது, அங்கு அரு மருந்து அனுமன் தந்தான்;
மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில்
இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது அன்றே. 42-5
கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும் காணா,
மறம் புகா, நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே;
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும் காலை,
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும், ஐயா! 42-6
மறக் கண், வெஞ் சினத்தின் வன்கண், வஞ்சக அரக்கர் யாரும்
இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின், எந்தாய்!
பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின், பேராத்
துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி நூலோய்! 42-7
என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன்
தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, நீ தக்கோய்!
வென்று மீண்டிலை ஆயின, அவ் விண்ணவர் முனிவர்
பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ? 42-8
மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு, மறையோன்
பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா,
ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல் வெகுண்டு
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார். 42-9
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்; அது அத்
துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால்
வென்றி கொண்டனம், யாங்கள்; மேல் விளம்புவது எவனோ?
என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும், இயைந்தே. 42-10
அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும்
புனித மாதவன் தனைத் தொழா, புண்ணியப் பொருளாம்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன் தனயன்
எனும் அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ என்றான். 42-11
அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான்: அருணப்
பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி,
சங்கரன் அயன் தன்னையும் தரணி ஈர்-ஏழும்
தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை நிகழ்த்தும்: 42-12
இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ் செல்வத்
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும், தந்து, என்
பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்;
புராதனர்க்கு அரசே! என மாருதி புகன்றான். 42-13
அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும்,
என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்? என்று,
ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர,
அன்னை வாசவன் திருவினைத் தந்தது என்று அறைந்தான். 42-14
பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா,
கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து,
மண்குலாம் புகழ் வீடணன், நீலனே முதலாம்
எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை என்றான். 42-15
என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா தவனும், இந்த
வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மேவிக்
குன்று என வருக! என்று கூறலும், இமையோர் நாட்டில்
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து, ஆங்கு வந்தார். 42-16
பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்;
ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த,
ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான்: 42-17
முனிவன் வாள் முகம் நோக்கி, மெய் முழுது உணர் முனியே!
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால்
நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப்
புனித! உண்டி எம்முடன் எனப் புரவலன் புகன்றான். 42-18
என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும்,
நன்று, நாயகன் கருணை! என்று உவகையின் நவில,
துன்று தாரவன் பாதுகம் தொழுது, அருந் தொல்லோய்!
ஒன்று கேள் என, உவகையின் மாருதி உரைக்கும்: 42-19
செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு சிறந்து
பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண்
ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு அமையும்;
உய்யுமாறு இதின் வேறு உளதோ? என்று மொழிந்தான். 42-20
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய, ஆண்டு
இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன் நினைந்தான்;
பொருந்த மா முடி புனைக! எனப் பொருந்துறான், போத
வருந்து தம்பிக்கு, வருவென் யான் என்பதோர் வாக்கை. 42-21
சித்திரகூடம் தீர்ந்து, தென் திசைத் தீமை தீர்த்திட்டு
இத் திசை அடைந்து, எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக,
வித்தக! மறந்திலேன் யான்; விருந்தினையாகி, எம்மோடு
இத் திறம் இருத்தி என்றான், மறைகளின் இறுதி கண்டான். 42-22
சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து, உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங் கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென்; கேட்டி என்றான். 42-23
வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்;
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான். 42-24
இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான்; பழம் பதி புகாது,
நந்தியம்பதி இருந்தனன், பரதன் - நின் நாமம்
அந்தியும், பகல் அதனினும், மறப்பிலன் ஆகி. 42-25
முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப் பெருமான் -
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும்
மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு அமலன்
நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன நிகழ்த்தும்: 42-26
என்று உரைத்து, அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குல வரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும், இறுத்த வீர!
நின் தனைப் பிரிந்தது உண்டே, யான் என நிகழ்த்தினானால். 42-27
மின்னை ஏய் உமையினானும், விரை மலர்த் தவிசினானும்,
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி, உன் தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை என்றான். 42-28
அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன்; கேட்டி, வேண்டிற்று
எவ் வரம் எனினும்; தந்தேன்; இயம்புதி எனலும், ஐயன்,
கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க. 42-29
அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று, கிழங்கொடு கனி காய் துன்றி,
விரி புனல் செழுந் தேன் மிக்கு, விளங்குக! என்று இயம்புக என்றான்;
புரியும் மா தவனும், அஃதே ஆக! எனப் புகன்றிட்டானால். 42-30
அருந்தவன், ஐய! நின்னோடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென் என்னா, விளங்கும் முத் தீயின் நாப்பண்,
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து, புறப்படும் அளவில், போகம்
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே. 42-31
அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மாதவனும், இந்த
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மற்றும்
குன்றினில் அருளும் என்று கூறலும், வான நாட்டுள்
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு வந்தார். 42-32
அரைசரே ஆதியாக, அடியவர் அந்தமாக,
கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி, அறு சுவை அமைக்கும் வேலை,
விரை செறி கமலக் கண்ணன் அனுமனை விளித்துச் சொன்னான்: 42-33
மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன் பாதம்
ஆர் அருளோடு நீட வணங்கினான்; அவனும் ஆசி
சீரிது கூறி, சேறி என்றலும், மானம் சேர்ந்து,
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து போனான். 44-1
மான் நேர் விழியாளுடனே வனம் முன்
போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ?
தேனே! அமுதே! தெளிவே! தெளிவின்
ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்! 44-2
அம் பவளச் செவ்வாய், அணி கடகச் சேவகன்,
வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல்,
எம் பெருமான், என்னை, இழி குணத்து நாயேனை,
தம்பி என உரைத்த தாசரதி தோன்றானோ! 44-3
வாழி மலைத் திண் தோள் சனகன் தன் மா மயிலை,
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை,
தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன் கொழுந்தி; நீ
தோழன் என உரைத்த தோன்றலார் தோன்றாரோ! 44-4
துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள்,
இங்கு வந்திலர்; யான் இறப்பேன் எனா,
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்
அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான். 44-5
வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும்,
ஏது செய்யினும், என் உயிர் முடிப்பென் என்று எண்ணி,
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து, உயிர் விடுவான்,
காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான். 44-6
கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை
வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே,
எண்ணும் காலையிலே, எழில் மாருதி,
அண்ணல் வந்தனன் என்று உரையாடினான். 44-7
உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன்
வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும்
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான். 44-8
ஓங்கு வாலினை ஓட்டி, அவ் ஓடங்கள்
தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர்
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால். 44-9
கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக் காதலுடைத் தோழ-
மை ஆர், சிருங்கவேபுரம் உடையாய்! மிகு கோசலை களிறு,
மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி அவளுடனே;
ஐயா! வந்தான் தம்பியொடும்; அடியேம் உய்ய, வந்தானே. 44-10
ஆர்? உனை உரை என, அனுமன் கூறுவான்:
சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்!
குருடை இராமற்குத் தூதன் என்று எனது
ஏருடைத் தலையின் மேல் எழுதப்பட்டுளேன். 44-11
பரதனைத் தீயையும் விலக்கி, பாருடை
வரதனை, இராமனை, மாறிக் காண்பது
சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது என,
கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான். 44-12
பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும்
கரத்துணை குவித்தனன், இளைய காளையோடு,
எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட,
விருப்பொடும் இடவகை இனிது மேயினான். 84-1
நின்றவன், இவ் வயின் நெடியவன் தனைச்
சென்று இறைப் பொழுதினில் கொணர்வென், சென்று எனா,
பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான்,
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான். 102-1
ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன்
தூய காவின் உறைவு இடம் துன்னினான்;
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா,
தீயின் ஆகுதி செங் கையின் ஓக்கினான். 102-2
பான நெய்யொடு, நானமும், சாந்தமும், பலவும்,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம்,
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன், பால்,
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார். 102-3
கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும், காரிகைக்கும்,
துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும்,
தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன் கலந்தால்
அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க நிறைத்தனரால். 102-4
வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக் கறியும்,
தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும்,
எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம்
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால். 102-5
நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி பண்ணி,
கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும்,
தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப் பெருமானும்,
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர், பொலிவால். 102-6
அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செவ்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்;
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். 102-7
உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின, உலகம் யாவையும், 102-8
தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்!
நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்தனை;
ஆயினும், அன்பினால் யாம் செய் மா தவம் 102-9
என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்;
ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்? என்றனன் -
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். 102-10
இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி
அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு
தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது அல்லால். 102-11
[இதன்பின் 42-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன].
கொற்றவன் உடன் உண்ணுமோ?-கோது இல் மாதவனே!
வெற்றி வீரனே! என அஞ்சி நின்றனன்; விமலன்
மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப்
பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான். 102-12
பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள் தோறும்
இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு,
உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி
வரிசையால் உண்ண, மா முனி விருந்தும் உண்டனரால். 102-13
பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள் தோறும்
இரவி புத்திரற்கு, இலங்கையர் வேந்துக்கும் உதவி,
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும்
வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும் உண்டனனால். 102-13(அ)
அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே
முன்னம் போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால்;
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா
மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம் மகிழ்ந்தனனால். 102-14
பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும்,
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப,
தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான். 102-15
அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர்-
வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப் பெய்து,
உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும்,
மண்ணும், நாகரும் யாவரும், அருந்துயர் மறந்தார். 102-16
மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி,
ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும்
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து, 102-17
ஆர் இருள் அகலும் காலை, அமலனும், மறையோன் பாதம்,
ஆர்வமோடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும் ஆசி
சீரிது கூறி, சேறி என்றலும், தேர்மேல் கொண்டு,
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான். 102-18
விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு, தேர்மேல்
அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும் அமைந்தான்;
வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ,
பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான். 102-19
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான் அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-20
இளவலை, அண்ணலுக்கு எதிர் கொண்ம் என்று, நம்
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை,
கிளையொடும் ஏகு எனக் கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் என்றான். 102-21
தோரணம் நட்டு, மேல் துகில் பொதிந்து, நல்
பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீர் அணி அணிக! எனச் செப்புவாய் என்றான். 102-22
பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள்
சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,
வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான்
புரத்தையும் புதுக்குமா புகறி, போய் என்றான். 102-23
என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்
தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். 102-24
அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான்,
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்,
வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று, அறை பறை எற்றுக! என்றிட, 102-25
வானையும் திசையும் கடந்த வான் புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த்
தானையும் அரசரும் எழுகதான் எனா,
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார். 102-26
முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர்
அரசரும் மாந்தரும் அந்தணாளரும்,
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர,
திரை செறி கடல் என, எழுந்து சென்றவால். 102-27
அனகனை எதிர்கொள்க என்று அறைந்த பேரி நல்
கனகம் நல் கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனை கடிப் பேரியும், ஒத்த ஆம் அரோ. 102-28
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும்
செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும்,
உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார். 102-29
அன்னையர் மூவரும், அமரர் போற்றிட,
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்,
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர,
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. 102-30
திருவடி இரண்டுமே செம் பொன் மௌவியா,
இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல்
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ,
பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான். 102-31
எல்லவன் மறைந்தனன் - என்னை ஆளுடை
வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான்,
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. 102-32
அவ் வழி மாருதி அம் கை பற்றிய
செவ் வழி உள்ளத்தான், திருவின் நாயகன்,
எவ் வழி உறைந்தது? அச் செயல் எலாம் விரித்து,
இவ் வழி எமக்கு நீ இயம்புவாய் என்றான். 102-33
என்றலும், மாருதி வணங்கி, எம்பிரான்,
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர்
நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ? 102-34
சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த பண்பு எலாம்,
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, போர்
வித்தகத் தூதனும் விரிக்கும் சிந்தையான். 102-35
குன்று உறழ் வரி சிலைக் குரிசில், எம்பிரான்
தென் திசைச் சித்திரகூடம் தீர்ந்தபின்,
வன் திறல் விராதனை மடித்து, மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். 102-36
ஆங்கு உறை தபோதனர், அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத்துறை, நீதியோய்! என,
நீங்கு செய்பவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத் துயர், வாய்மையால் என்றான். 102-37
ஆறு நால் ஆண்டு அவண் வைகி, அப் புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை நண்ணினான்,
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. 102-38
குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடங் கணான் தனை எதிர் தழுவி, சாபமும்,
கடுங் கணைப் புட்டிலும், கவசம் தானும், அத்
திடம் படு சுரிகையும், சேர ஈந்தனன். 102-39
அப் புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா,
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன்
மெய்ப் புகழ்த் தம்பியும் வீரன்தானும் போய்,
மைப் பொழில் உறு பஞ்சவடியின் வைகினார். 102-40
பல் பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள். 102-41
கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ் சேனையோடும்
விரவினர்; ஐயன் செங் கை வில்லினை நோக்கும் முன்பு, ஓர்
எரி தவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும், இலங்கை புக்காள். 102-42
இருபது தடக் கையான் மாட்டு இசைத்தலும், எழுந்து பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு,
திருவினை நிலத்தொடு ஏந்தி, தென் திசை இலங்கை புக்கான். 102-43
போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறை அதனில் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன்-கொன்று, இளவலோடு,
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். 102-44
அன்னவன் தனக்கு வேண்டும் அருங் கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல் தன்னைத் தேடித் தென் திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான். 102-45
ஆங்கு அவள் தனது சொல்லால், அருக்கன் மா மகனை அண்மி,
பாங்குற நட்டு, வாலி பருவரல் கெடுப்பல் என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன் தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான். 102-46
கால மா மாரி நீங்க, கயவனோடு இடபன், காந்து
நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மா மைந்தன், என்று இவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ, அடைந்தனன், எங்கள் கோமான். 102-47
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி,
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்,
தழுவிய திசைகள் தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன், திருவை நாடி. 102-48
தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும், வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு, திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும் படை இறுத்தது அன்றே. 102-49
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறி புயந்து அரக்கன் தம்பி, திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றன, நின் வாணாள் என அவன் உரைப்ப, சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான். 102-50
ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு, முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட, பதைப்பு இலாது
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனஞ் சேப்ப,
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே. 102-51
மற்று அவன் அவயம் என்ன, மலர்ச் சரண் அடைந்த வேலை,
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார். 102-52
மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒரு பத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ,
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான். 102-53
இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற் குறை ஆடல் கண்டார். 102-54
தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகுளோரும், முறை முறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, மாண்டோ ர்க்கு இயற்றுதி கடன்கள் என்றான். 102-55
ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம்
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு இன்னே
சூடுக மௌலி என்ன, சுந்தர இராமன் தம்பி
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான். 102-56
நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்,
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற,
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறி,
தேன் முகம் மலரும் தாரான், அரி சொல, சீற்றம் தீர்ந்தான். 102-57
மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்தை எய்த,
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கையினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க் கலசம் ஆட்டி,
செய்யவட்கு அருள்க என்றான்; திருவின் நாயகனும் கொண்டான். 102-58
என்னை நன் கருணைதன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக என, அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வாழ்வு கூர,
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கிப் போனார். 102-59
வெள்ளம் ஓர் ஏழு பத்தும், விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல் தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் -
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன், இலங்கை வேந்தன். 102-60
ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும், தொல்லைத் துணைவரும், இலங்கை வேந்தும்,
பேர் இயல் படையும், சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறி, பரத்துவன் இருக்கை சேர்ந்தான். 102-61
அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி, ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி என்று துரந்தனன், தோன்றல் என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் - முது நீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன். 102-62
காலின் மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்,
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழ் உடைத்து, அடிமை மன்னோ. 102-63
என்று அவன் இரங்கி ஏங்கி, இரு கணும் அருவி சோர,
வன் திறல் அனுமன் செங் கை வலக் கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளினூடு, செறி புனல் கங்கை சேர்ந்தான்,
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர். 102-64
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவின் தையலும், மகிழ சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-65
காலை வந்து இறுத்த பின்னர், கடன் முறை கமலக் கண்ணன்
கோல நீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி,
சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ ? 102-66
எழுபது வெள்ளம் சேனை வானரர், இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ?
விழுமிது, எம்பிரான் வந்தான் என்று உரைத்தது, வீர! என்றான். 102-67
ஓசனை இரண்டு உண்டு அன்றே, பரத்துவன் உறையும் சோலை;
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம் கோன் எங்கு உளன், பெரும! என்றான். 102-68
பரதன் அஃது உரைத்தலோடும், பணிந்து மாருதியும், சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய்! விண்ணவர் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது, தானை எல்லாம். 102-69
வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக் குலம் அவற்றை மாந்தி,
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்; நீ துயரல், எந்தாய்! 102-70
இனி ஒரு கணத்தின், எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான்; இப்பால்,
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன், வண்ணக்
குனி சிலைக் குரிசில், செய்தது இற்று எனக் குணிக்கலுற்றாம்: 102-71
அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந் தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின், வேலை போலும்
பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன் பெயர்ந்து வந்தான். 102-72
தொழுதனன்; மனமும் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
வழு இலா வலியர் அன்றோ, மக்களும் மனையும்? என்றான். 102-73
அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ? 102-74
ஆயன பிறவும் பன்னி, அழுங்குவான் தன்னை, ஐய!
நீ இவை உரைப்பது என்னே; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி என்ன, புளிஞர் கோன் இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரை மலர்த் தாளின் வீழ்ந்தான். 102-75
தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழ்து உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்பான். 102-76
அண்ணல் அஃது உரைத்தலோடும், அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உறத் தழுவி, நட்டார்;
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல,
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன், இரவி என்பான். 102-77
அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போலும்
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான். 102-78
கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து, இளவலோடும்
அதிர் பொலன் கழலினான் அவ் அருந் தவன் தன்னை ஏத்தி,
விதி தரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர் தரு துணைவரோடும், முனி மனம் தொடரப் போனான். 102-79
தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவ்வி
ஓவியம் உயிர் பெற்றென்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே. 102-80
பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன் மதிக் கிழவர்தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சி நின்றார். 102-81
தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன்,
ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு
மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்
சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான். 103-1
கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம்
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன், மானவன்-தொழுதல் உன்னியே,
விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். 107-1
[இதன் பின் சில பிரதிகளில் 102-7, 8, 9, 10 பாடல்கள் உள்ளன]
அப்பொழுது அவ் வயின் அடந்துளோர்களைத்
தப்பு அறக் காண்பென் என்று ஐயன் தன் மனத்து
ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து
இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும். 111-1
அவ் வயின், அயோத்தி வைகும் சனமொடும், அக்குரோணி
தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும்,
இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென் என்று இராமன் உன்ன,
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது, விமானம் தானும். 110-2
எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும்
அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் 110-3
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் வேலை-
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன் தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனை கழல் குரிசில் முந்தி, மாதவன் தாளில் வீழ்ந்தான். 115-1
எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் ஏந்தி, வாழ்த்தினான், ஆசி கூறி. 115-2
கைகான் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங் கண்
ஐயனை, அவர்கள் தாமும் அன்புறத் தழுவி, தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். 115-3
அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள்
பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் புல்லி,
மன்னவற்கு இளவல் நீயே; வாழி! என்று ஆசி சொன்னார். 115-4
நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின் மலன்
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர,
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்;
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினான். 118-1
ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிதறி ஓட,
தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் -தனிமை நீங்கி,
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு மறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது? என்று உலகம் நைய. 118-2
மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்லி,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து வீழ்ந்தான். 118-3
ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன் அடியில் வீழ,
நாயகன் உவந்து புல்லி, நண்ணி, என் பின்பு வந்த
தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ? என்று
வாயிடை மொழிந்தான்,-மற்றை மறைகளும் காணா அண்ணல். 119-1
குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, சாம்பன் தன்னை,
செருக்கிளர் நீலன் தன்னை, மற்றும் அத் திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி,
மருக் கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன் நின்றான். 119-2
மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால். 119-3
அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர் செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான்,
வழு இனி உளது அன்று, இந்த மா நிலக் கிழத்திக்கு என்றான். 119-4
வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி
கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம்,
ஊறிய உவகை தூண்ட, தொழுதனர்; உவந்த பின்பு
தேறிய கமலக் கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான். 119-5
ஏறுக சேனை எல்லாம் விமான மீது என்று, தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே. 119-6
உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரை செறி அலங்கள் மாலைப் புட்பக விமானம் என்று என்று,
உரை செய்து, வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார். 119-7
அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து ஆர்த்ததென்ன,
விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் சங்கும்,
இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த. 119-8
நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி,
வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென் என்று விம்மும்
கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர் பொன் பாதம்
தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ. 119-9
மூன்று என நின்ற தன்மைக் குணங்களின் உயிர்கட்கு எல்லாம்
சான்று என நின்ற மானச் சிறுவனைத் தலைப்பட்டாட்குத்
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ?
ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த தன்மை! 119-10
இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை ஏந்தி,
பணை முலைப் பாலும், கண்ணீர்த் தாரையும் பாய, நின்றாள்;
பிணை எனத் தகைய நோக்கின் சீதையை, பேடை அன்னத்
துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித் துறையை, கண்டாள். 119-11
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி, விம்மி,
பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை,
கால் முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார்,
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம். 119-12
அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும்;
இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே. 119-13
வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள் நான்கும்,
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து, உயர் வெளிப் பாழ் மேலாய்,
விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார். 119-14
விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற,
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட,
களங்கணி அனைய அக் கண்ணன் மாதொடும்
விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே. 119-15
புகுந்தனர் நகரிடை-பொங்கும் ஓசையின்
மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு
மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும்,
அகம் தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே. 119-16
நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மாதோடு
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார். 119-17
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்
மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற மண்ணில் தாழும்
செயிர் அறு கடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து நீக்கி,
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார். 119-18
யுத்த காண்டம்
42. திருமுடி சூட்டு படலம்
இராமன் தம்பியரோடு நந்தியம் பதியை அடைந்து, சடை நீக்கி, நீராடி கோலம்கொள்ளுதல்
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 1
தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல்
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான். 2
தேவரும் முனிவரும் மலர் மழை பொழிதல்
தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்,
பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே. 3
சேனைகள் முதலியவற்றின் மகிழ்ச்சி
கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முகப் பரும யானை,
காடு உறை அண்ணல் எய்த, கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததேபோல். 4
துருவத் தார்ப் புரவி எல்லாம், மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன, ஆலித்த; மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிறப் பசலை பூத்த. 5
தாய் மார் முதலியோரை வணங்கி, இராமன் அரண்மனையை அடைதல்
ஆயது ஓர் அளவில், செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் களி நடம் செய்யக் கண்டான். 6
நகர மாந்தரின் மகிழ்ச்சிப் பெருக்கு
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர், கரத்தின் பல்கால்
தாங்கினர் என்ற போதும், மைந்தரும் தையலாரும்,
வீங்கிய உவகை மேனி சிறக்கவும், மேன் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்தும், உடை இலாதாரை ஒத்தார். 7
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற, வெற்றிப்
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்துச் சுற்ற,
வாசம், மென் கலவைச் சாந்து, என்று இனையன, மயக்கம்தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துளோரும். 8
இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ்-இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக் கொழுந்து அனைய நெற்றிப் பெய் வளை மகளிர், மெய்யை
மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற. 9
விண் உறைவோர்தம் தெய்வ வெறியோடும், வேறுளோர்தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்,
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே. 10
இராமன் திருமுடி சூடும் நாள் குறித்து எங்கும் செய்தி அனுப்புதல்
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்-
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி. 11
மூவுலகத்தாரும் அயோத்தியில் வந்து குழுமுதல்
அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து இறுத்தார் என்றால்,
தொடுக்குறு கவியால் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான் முகத்து ஒருவற்கு உண்டோ ? 12
பிரமன் ஏவலால், மயன் முடி சூட்டு மண்டபம் அமைத்தல்
நான்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று ஓதும்
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், வணங்கு நெஞ்சன்,
கோல் முகத்து அளந்து, குற்றம் செற்று, உலகு எல்லாம் கொள்ளும்
மான் முகத்து ஒருவன், நல் நாள் மண்டபம் வயங்கக் கண்டான். 13
அனுமன் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வருதல்
சூழ் கடல் நான்கின் தோயம், எழு வகை ஆகச் சொன்ன
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன, ஆம் என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான், இடர் கெட மருந்து தந்தான். 14
இராமன் நீராடுதல்
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய,
ஐயம் இல் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்ட,
எய்தின இயன்ற பல் வேறு, இந்திரற்கு இயன்ற என்ன, 15
வசிட்டன் இராமனுக்குத் திருமுடி புனைதல்
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி. 16
வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின களிப்ப, மோலி சூடினான்-கடலின் வந்த
தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான். 17
மூவுலகத்தாரும் மகிழ்தல்
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும், மேன்மை
ஒத்த மூஉலகத் தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்,
தம் தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது, அத் தாம மோலி. 18
பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப் பெற்று, இடைப் பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க் கை நீட்டி,
நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை ஆர. 19
பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதல்
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ. 20
உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
எம் பெருமான்! என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான்-
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல். 21
மிகைப் பாடல்கள்
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி,
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ,
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் தேரின் ஆனான். 1-1
வீடணக் குரிசில், மற்றை வெங்க் கதிர்ச் சிறுவன், வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு செல்ல,
தோடு அணை மவுலிச் செங்கண் வாலிசேய் தூசி செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான். 2-1
அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 2-2
எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம் பொன் தேரர்,
வட்ட வெண்குடையர், வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ் சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார். 2-3
எழு வகை முனிவரோடும், எண் திசைத் திசைகாப்பாளர்
குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு களித்துக் கூடி,
தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில் துன்னி,
வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச் சார்ந்தார். 2-4
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து,
ஊனம் இல் பிடியும் ஒண் தார்ப் புரவியும் பிறவும் ஊர்ந்து,
மீன் இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற,
பூ நிற விமானம் தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள். 2-5
ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக் கண்டான். 3-1
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன் தானே
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்,
தம்பியர் தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும்,
அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான் அம்மா. 3-2
இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஏற்ற
திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர்
உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண் குடையர், பச்சை
மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 6-1
ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை அருளின் நோக்கி,
தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும், பிறர்க்கும், நம் தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான். 10-1
என்றலும், இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் தெய்வப்
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான். 10-2
வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம், முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ் சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட,
மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி நின்றார். 10-3
விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர் அவர்க்கு, காதல்
புண்டரீகத்துள் வைகும் புராதன, கன்னல் தோளான்,
கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து, முன் கொடுத்தது என்றான். 10-4
பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை
இங்கு இது மலராள் வைகும் மாடம் என்று இசைத்த போதில்,
எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ என்று கூறி,
செங் கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார். 10-5
இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி,
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி, தூயோய்!
கருந்தடம் கண்ணினாற்குக் காப்பு நாண் அணியும் நல் நாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ? என்றலும், அண்ணல் செப்பும்: 10-6
ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் தோன்றல். 10-7
கோமுனியோடு மற்றை மறையவர்க் கொணர்க! என்னா
ஏவினன்; தேர் வலான் சென்று இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப் புனித மா தவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி, இணை அடி தொழுது நின்றார். 10-8
அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, பெரு நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உவந்து, இனிது ஊழிக் காலம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான். 10-9
கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து மொய்த்தார்,
குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள் தன்னைக் கொள்ளும்
இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த. 12-1
வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக் குலங்கள் ஆதி
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண,
தேரு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து, ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே. 12-2
அவ் வயின் முனிவனோடும் பரதனும், அரியின் சேயும்,
செவ்வியின் நிருதர்கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று, ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார். 12-3
நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக! என்று,
வேளையே பொடியதாக விழிக்கும்நீள் நுதலின் வெண் பூம்
பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் போனான். 12-4
தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி
யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின் ஓசை
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார். 13-1
எரி மணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரி மதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரை மணிக் காளம் ஆர்ப்ப, பல்லியம் துவைப்ப, பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார், சங்கு இனம் முரல மன்னோ. 14-1
மாணிக்கப் பலகை தைத்து, வயிரத் திண் கால்கள் சேர்த்தி,
ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ. 14-2
அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி நாட்டுச்
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர்,
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண
வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள். 14-3
மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச்
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய, விண்ணோர்,
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் செய்தார். 14-4
மா தவர், மறைவலாளர், மந்திரக் கிழவர், மற்றும்
மூதறிவாளர், உள்ள சான்றவர் முதல் நீராட்ட,
சோதியான் மகனும், மற்றைத் துணைவரும், அனுமன் தானும்,
தீது இலா இலங்கை வேந்தும், பின் அபிடேகம் செய்தார். 14-5
அம் கண் வான், உலகம், தாய அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் ஒருவன்; இந் நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர்
எங்கண் ஏற்று அன்னோன் வாழும்? என்றனர், புலவர் எல்லாம். 14-6
மரகதச் சயிலம் செந் தாமரை மலர்க் காடு பூத்து,
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து, செய்ய
இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார். 14-7
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும்
தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி,
தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ
வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து வாழ்த்த. 15-1
இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும்,
செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும் நாளில்,
கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன், காதல்
வைப்புடை வளாகம் தன்னில், மன்னுயிர் வாழ்த்த, வந்தான். 19-1
மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல்
முறை செயும் அரசர், திங்கள் மும் மழை, வாழி! மெய்ம்மை
இறையவன் இராமன் வாழி! இக் கதை கேட்போர் வாழி!
அறை புகழ்ச் சடையன் வாழி! அரும் புகழ் அனுமன் வாழி! 20-1
[இது முதற்கொண்டு விடை கொடுத்த படலம் என்று சில பிரதிகளில் காண்கிறது]
பூமகட்கு அணி அது என்னப் பொலி பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான். 20-2
விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,
எரி கதிர்க் கடவுள்தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப,
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர்க் காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன், அயோத்தி வேந்தன். 20-3
மரகதச் சயிலமீது வாள் நிலாப் பாய்வது என்ன,
இரு குழை இடறும் வேற் கண், இளமுலை, இழை நலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த, 20-4
உலகம் ஈர்-ஏழும் தன்ன ஒளி நிலாப் பரப்ப, வானில்
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து, எளிதின் தேய,
கலக வாள் நிருதர் கோனைக் கட்டழித்திட்ட கீர்த்தி
இலகி மேல் நிவந்தது என்ன, எழு தனிக்குடை நின்று ஏய. 20-5
மங்கல கீதம் பாட, மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பொரு கயல் கருங் கண், செவ் வாய்,
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ. 20-6
திரை கடல் கதிரும் நாணச் செழு மணி மகுட கோடி
கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. 20-7
மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தெரிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்தகாலை. 20-8
கெவனொடு கெவாக்கன், தூம்பன், கேசரி, கெந்தமாதன்,
தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி, நீலன்,
நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சமீரன், நண்பாம்
இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன் என்பான். 20-9
விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்
கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன், கயந்தன்,
அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு, அரம்பன், ஆண்மை
தெரிவரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க பாதன், 20-10
மயிந்தன், மா துமிந்தன், கும்பன் அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன், சதவலி, குமுதன், தண் தார்
நயம் தெரி ததிமுகன், கோசமுகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும். 20-11
ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில், செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச் சூழ்ந்தான். 20-12
வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வெவ் வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல் மடங்கல் அன்னான்,
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான். 20-13
வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை ஒளி முகக் கமலம் காட்டி,
அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
எள்ளல் இலாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது இருத்திர் என்றான். 20-14
நல் நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல் நெறி அறிவு நீரார், தோம் அறு புலமைச் செல்வர்,
பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் சுற்றமன்னோ. 20-15
தேம் படு படப்பை மூதூர்த் திருவொடும் அயோத்தி சேர்ந்த
பாம்பு-அணை அமலன் தன்னைப் பழிச்சொடும் வணக்கம் பேணி,
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இரு மதி இறந்தது அன்றே. 20-16
நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங் கடற் கிடை நின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி, மற்று அவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட
திருக் கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம். 20-17
மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும், சுரபியும், நிறைந்து, மேல் மேல்,
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறை கழல் அரசர் தம்மை வருக என அருள, வந்தார். 20-18
[ஒரு சில பிரதிகளில் இதுமுதல் விடை கொடுத்த படலம் தொடங்குகிறது]
ஐயனும் அவர்கள் தம்மை அகம் மகிழ்ந்து, அருளின் நோக்கி,
வையகம், சிவிகை, தொங்கல், மா மணி மகுடம், பொன் பூண்,
கொய் உளைப் புரவி, திண் தேர், குஞ்சரம், ஆடை இன்ன
மெய் உறக் கொடுத்த பின்னர், கொடுத்தனன் விடையும் மன்னோ. 20-19
சம்பரன் தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து
உம்பர் தம் பெருமான் ஈந்த ஒளி மணிக் கடகத்தோடும்,
கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும், தூசும்,-
அம்பரம் தன்னை நீத்தான்-அலரி காதலனுக்கு ஈந்தான். 20-20
அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான்;
அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்? 20-21
பின்னரும், அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும்
மன்னும் நுண் தூசும், மாவும் மதமலைக் அரசும்; ஈயா
உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக, கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி என்றான். 20-22
மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக! என்றான். 20-23
என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி,
பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும்,
வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான். 20-24
பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே. 20-25
சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை வென்ற,
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தொடு
கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்
உந்தினன், எண்கின் வேந்தற்கு-உலகம் முந்து உதவினானே. 20-26
நவ மணிக் காழும், முத்தும், மாலையும், நலம் கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும், ஒண் தார்க்
கவன வெப் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான். 20-27
பத வலிச் சதங்கைப் பைந் தார்ப் பாய் பரி, பணைத் திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன் பூண், மா மணிக்கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்
சதவலிதனக்குத் தந்தான்-சதுமுகத் தவனைத் தந்தான். 20-28
பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை; இதனுக்கு ஈதுக்
கோ, சரி இலது என்று எண்ணும் ஒளி மணிப் பூணும், தூசும்,
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மதக் களிறும், மாவும்,
கேசரிதனக்குத் தந்தான்-கிளர் மணி முழவுத் தோளான். 20-29
வளன் அணி கலனும் தூசும், மா மதக் களிரும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான்-
களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. 20-30
அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ் வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன், கடைக் கண் நோக்கம். 20-31
மின்னை ஏர் மௌலிச் செங் கண் வீடணப் புலவர் கோமான்-
தன்னையே இனிது நோக்கி, சராசரம் சூழ்ந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்; ஐய!
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான். 20-32
என்று உரைத்து, அமரர் ஈந்த எரி மணிக் கடகத்தொடு
வன் திறல் களிறும், தேரும், வாசியும், மணிப் பொன் பூணும்,
பொன் திணி தூசும், வாசக் கலவையும், புது மென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்-நாகணைத் துயிலைத் தீர்ந்தான். 20-33
சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி,
மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு? என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. 20-34
அனுமனை, வாவி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனை கழல் காலினானை, கருணை அம் கடலும் நோக்கி,
நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது; அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும் என்றான். 20-35
இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி,
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்தருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நலன் உறும் நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ஏவல் செய்தல் கடன் எனக் கருதிச் சூழ்ந்தார். 20-36
பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி, வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். 20-37
குகனைத் தன் பதியின் உய்த்து, குன்றினை வலம் செய் தேரோன்
மகனைத் தன் புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே ஏகி, கனை கடல் இலங்கை புக்கான்,-
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே. 20-38
ஐயனும் அவரை நீக்கி, அருள் செறி துணைவரோடும்
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நையுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 20-39
வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக; நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க;
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, எங்கும். 21-1
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி. 21-2
வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 21-3
இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 21-4