MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    பெரியாழ்வார் திருமொழி

    முதற்பத்து
    முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
    (கண்ணன் திருவவதாரச் சிறப்பு)

    கலிவிருத்தம்

    13:
    வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
    கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
    எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
    கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1.

    14:
    ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
    நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
    பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
    ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2.

    15:
    பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்
    காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
    ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
    வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3.

    16:
    உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
    நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
    செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
    அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4.

    17:
    கொண்டதாளுறி கோலக்கொடுமழு
    தண்டினர் பறியோலைச்சயனத்தர்
    விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
    அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5.

    18:
    கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்
    பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
    ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
    வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6.

    19:
    வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
    ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
    பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
    மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7.

    20:
    பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
    எத்திசையும் சயமரம்கோடித்து
    மத்தமாமலை தாங்கியமைந்தனை
    உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8.

    21:
    கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
    எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
    ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
    மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9.

    22:
    செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
    மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
    மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்
    பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2) 10.

    இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
    (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)

    வெண்டளையால் வந்த கலித்தாழிசை

    23:
    சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
    கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
    பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
    பாதக்கமலங்கள் காணீரே
    பவளவாயீர். வந்துகாணீரே. (2) 1.

    24:
    முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
    தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
    பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
    ஒத்திட்டிருந்தவா காணீரே
    ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.

    25:
    பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
    அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
    இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
    கணைக்கால்இருந்தவாகாணீரே
    காரிகையீர். வந்துகாணீரே. 3.

    26:
    உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
    இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
    பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
    முழந்தாள்இருந்தவாகாணீரே
    முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4.

    27:
    பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
    உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
    மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
    குறங்குவளைவந்துகாணீரே
    குவிமுலையீர். வந்துகாணீரே. 5.

    28:
    மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
    சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
    அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
    முத்தமிருந்தவாகாணீரே
    முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.

    29:
    இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
    பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
    நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
    மருங்கும்இருந்தவாகாணீரே
    வாணுதலீர். வந்துகாணீரே. 7.

    30:
    வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
    தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
    நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
    உந்திஇருந்தவாகாணீரே
    ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.

    31:
    அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
    மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
    பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
    உதரம்இருந்தவா காணீரே
    ஒளிவளையீர். வந்துகாணீரே. 9.

    32:
    பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
    இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
    குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
    திருமார்புஇருந்தவாகாணீரே
    சேயிழையீர். வந்துகாணீரே. 10.

    33:
    நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
    தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
    வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
    தோள்கள்இருந்தவாகாணீரே
    சுரிகுழலீர். வந்துகாணீரே. 11.

    34:
    மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
    செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை
    நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
    கைத்தலங்கள்வந்துகாணீரே
    கனங்குழையீர். வந்துகாணீரே. 12.

    35:
    வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
    கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
    அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
    கண்டம்இருந்தவாகாணீரே
    காரிகையீர். வந்துகாணீரே. 13.

    36:
    எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
    அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
    தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
    செந்தொண்டைவாய்வந்துகாணீரே
    சேயிழையீர். வந்துகாணீரே. 14.

    37:
    நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
    நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
    வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
    மூக்கும்இருந்தவாகாணீரே
    மொய்குழலீர். வந்துகாணீரே. 15.

    38:
    விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
    மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
    திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
    கண்கள்இருந்தவாகாணீரே
    கனவளையீர். வந்துகாணீரே. 16.

    39:
    பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
    திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
    உருவுகரிய ஒளிமணிவண்ணன்
    புருவம்இருந்தவாகாணீரே
    பூண்முலையீர். வந்துகாணீரே. 17.

    40:
    மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
    உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
    வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
    திண்ணம்இருந்தவாகாணீரே
    சேயிழையீர். வந்துகாணீரே. 18.

    41:
    முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
    சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை
    பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
    நெற்றிஇருந்தவாகாணீரே
    நேரிழையீர். வந்துகாணீரே. 19.

    42:
    அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
    கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
    மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
    குழல்கள்இருந்தவாகாணீரே
    குவிமுலையீர். வந்துகாணீரே. 20.

    தரவு கொச்சகக்கலிப்பா

    43:
    சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
    திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்
    விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
    உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2) 21.

    மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
    (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)

    கலித்தாழிசை

    44:
    மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
    ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
    பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
    மாணிக்குறளனே. தாலேலோ
    வையமளந்தானே. தாலேலோ. (2) 1.

    45:
    உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
    இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
    விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
    உடையாய். அழேல்அழேல்தாலேலோ
    உலகமளந்தானே. தாலேலோ. 2.

    46:
    என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
    சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
    இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
    தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
    தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3.

    47:
    சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
    அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
    அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
    செங்கண்கருமுகிலே. தாலேலோ
    தேவகிசிங்கமே. தாலேலோ. 4.

    48:
    எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
    அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
    வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
    தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
    தூமணிவண்ணனே. தாலேலோ. 5.

    49:
    ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
    சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
    மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
    சோதிச்சுடர்முடியாய். தாலேலோ
    சுந்தரத்தோளனே. தாலேலோ. 6.

    50:
    கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
    வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
    தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
    கோனே. அழேல்அழேல்தாலேலோ
    குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7.

    51:
    கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
    உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
    அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
    நச்சுமுலையுண்டாய். தாலேலோ
    நாராயணா. அழேல்தாலேலோ. 8.

    52:
    மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
    செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
    வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
    அய்யா. அழேல்அழேல்தாலேலோ
    அரங்கத்தணையானே. தாலேலோ. 9.

    தரவு கொச்சகக் கலிப்பா

    53:
    வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
    அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
    செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
    எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2) 10.

    நான்காம் திருமொழி - தன் முகத்து
    (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்)

    கலிநிலைத்துறை

    54:
    தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
    பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
    என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
    நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.

    55:
    என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
    தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
    அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
    மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2.

    56:
    சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
    எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
    வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
    கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3.

    57:
    சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
    ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
    தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே
    மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4.

    58:
    அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
    மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
    குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
    புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5.

    59:
    தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
    கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
    உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
    விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6.

    60:
    பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
    ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
    மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
    மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 7.

    61:
    சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
    சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
    சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
    நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8.

    62:
    தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
    பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
    ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
    வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

    63:
    மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
    ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
    வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
    எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.

    ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
    (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)

    எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

    64:
    உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.
    ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
    பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.
    பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.
    செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்
    செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
    ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
    ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. (2) 1.

    65:
    கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
    குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
    மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
    மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
    காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
    கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
    ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
    ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 2.

    66:
    நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.
    நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
    தம்மனையானவனே. தரணிதலமுழுதும்
    தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
    விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும்
    விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
    அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
    ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 3.

    67:
    வானவர்தாம்மகிழவன்சகடமுருள
    வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
    கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
    கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
    தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
    என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
    ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
    ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4.

    68:
    மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
    வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
    ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
    ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
    முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
    முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
    அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
    ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 5.

    69:
    காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.
    கானகமாமடுவில்காளியனுச்சியிலே
    தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
    துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
    ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
    அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
    ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
    ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 6.

    70:
    துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
    தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
    நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
    நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
    தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
    தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
    அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
    ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7.

    71:
    உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
    உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
    கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
    கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
    மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
    சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
    என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
    ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 8.

    72:
    பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
    பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
    கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
    கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
    நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
    நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
    ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை
    ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 9.

    73:
    செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
    சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
    தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
    பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
    மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
    மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
    எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை
    ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 10.

    74:
    அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
    ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
    என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
    ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
    அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
    ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
    இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
    எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2) 11.

    ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
    (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்)

    வெண்டளையால் வந்த கலித்தாழிசை

    75:
    மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
    ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
    பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
    காணிகொண்டகைகளால்சப்பாணி
    கருங்குழல்குட்டனே. சப்பாணி. (2) 1.

    76:
    பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
    தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட
    என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
    மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
    மாயவனே. கொட்டாய்சப்பாணி. 2.

    77:
    பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
    என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல்
    நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
    அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
    ஆழியங்கையனே. சப்பாணி. 3.

    78:
    தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
    வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று
    நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
    கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
    குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. 4.

    79:
    புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
    அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
    சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
    பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி
    பற்பநாபா. கொட்டாய்சப்பாணி. 5.

    80:
    தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
    போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
    பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
    தேருய்த்தகைகளால்சப்பாணி
    தேவகிசிங்கமே. சப்பானி. 6.

    81:
    பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
    இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
    கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
    சரந்தொட்டகைகளால்சப்பாணி
    சார்ங்கவிற்கையனே. சப்பாணி. 7.

    82:
    குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
    நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
    அரக்கர்அவிய அடுகணையாலே
    நெருக்கியகைகளால்சப்பாணி
    நேமியங்கையனே. சப்பாணி. 8.

    83:
    அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே
    வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
    உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
    பிளந்திட்டகைகளால்சப்பாணி
    பேய்முலையுண்டானே. சப்பாணி. 9.

    84:
    அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
    மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
    வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
    கடைந்திட்டகைகளால்சப்பாணி
    கார்முகில்வண்ணனே. சப்பாணி. 10.

    தரவு கொச்சகக்கலிப்பா

    85:
    ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
    நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
    வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
    வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2) 11.

    ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
    (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்)

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

    86:
    தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
    படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
    உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
    தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. (2) 1.

    87:
    செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
    நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
    அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
    தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 2.

    88:
    மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
    பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
    மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும்
    தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. 3.

    89:
    கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து
    முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
    தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
    தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. 4.

    90:
    முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
    பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
    பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்
    தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. 5.

    91:
    ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
    இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
    பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
    கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 6.

    92:
    படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல்
    இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
    கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
    தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 7.

    93:
    பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
    அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
    மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
    தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 8.

    94:
    வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
    தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
    ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
    தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. 9.

    95:
    திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
    திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
    பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
    தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. 10.

    96:
    ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
    தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை
    வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
    மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. 11.

    எட்டாம் திருமொழி -- பொன்னியல்
    (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)

    கலித்தாழிசை

    97:
    பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
    தன்னியலோசை சலஞ்சலனென்றிட
    மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
    என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
    எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. (2) 1.

    98:
    செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
    பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
    சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
    அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
    ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 2.

    99:
    பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
    நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
    அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
    அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ
    ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. 3.

    100:
    நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
    தேறிஅவளும் திருவுடம்பில்பூச
    ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
    ஏறவுருவினாய். அச்சோவச்சோ
    எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 4.

    101:
    கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி
    எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
    சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை
    அழலவிழித்தானே. அச்சோவச்சோ
    ஆழியங்கையனே. அச்சோவச்சோ. 5.

    102:
    போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
    தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய்
    காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே.
    ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
    ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ. 6.

    103:
    மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
    தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
    சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய
    சக்கரக்கையனே. அச்சோவச்சோ
    சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. 7.

    104:
    என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன்
    முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன
    மன்னுநமுசியை வானில்சுழற்றிய
    மின்னுமுடியனே. அச்சோவச்சோ
    வேங்கடவாணனே. அச்சோவச்சோ. 8.

    105:
    கண்டகடலும் மலையும்உலகேழும்
    முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று
    இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
    மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ
    மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. 9.

    106:
    துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
    மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
    பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
    அன்னமதானானே. அச்சோவச்சோ
    அருமறைதந்தானே. அச்சோவச்சோ. 10.

    தரவு கொச்சகக்கலிப்பா

    107:
    நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை
    அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
    மச்சணிமாடப் புதுவைகோன்பட்டன்சொல்
    நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2) 11.

    ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
    (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

    வெண்டளையால்வந்த கலித்தாழிசை

    108:
    வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
    மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
    சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்
    குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
    கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2) 1.

    109:
    கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில்
    கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி
    தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
    என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
    எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 2.

    110:
    கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்
    ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
    கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
    அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
    ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 3.

    111:
    நாந்தகமேந்திய நம்பிசரணென்று
    தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
    வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
    ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
    உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 4.

    112:
    வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
    கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
    பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு
    மண்பலகொண்டான்புறம்புல்குவான்
    வாமனன்என்னைப்புறம்புல்குவான். 5.

    113:
    சத்திரமேந்தித் தனியொருமாணியாய்
    உத்தரவேதியில் நின்றஒருவனை
    கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட
    பத்திராகாரன்புறம்புல்குவான்
    பாரளந்தான்என்புறம்புல்குவான். 6.

    114:
    பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
    தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
    மெத்தத்திருவயிறார விழுங்கிய
    அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
    ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7.

    115:
    மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
    கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி
    வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
    ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
    எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 8.

    116:
    கற்பகக்காவு கருதியகாதலிக்கு
    இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்
    நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
    உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
    உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 9.

    தரவு கொச்சகக்கலிப்பா

    117:
    ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
    வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
    ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
    வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 10.