MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    ஸ்ரீ:
    ஸ்ரீமதே ராமா_ஜாயா நம:
    திருமங்கைஆழ்வார் அருளிச்செய்த
    திருநெடுந்தாண்டகம்

    2052:
    மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
    விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
    பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
    பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
    பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
    புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
    தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
    தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே. (2) 1

    2053:
    பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப்
    பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
    ஏருருவில் மூவருமே யென்ன நின்ற,
    இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,
    ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
    ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,
    மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி
    முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே. 2

    2054:
    திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்
    திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
    பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்
    பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
    ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா
    ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,
    கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக்
    கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே? 3

    2055:
    இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை
    இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
    செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித்
    திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி,
    அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா
    அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
    மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும்
    வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே. 4

    2056:
    ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
    ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
    எண்மதியுங் கடந்தண்ட மீது போகி
    இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
    தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித்
    தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
    மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
    மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே. 5

    2057:
    அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்
    அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
    சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன்
    தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
    நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த
    நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
    புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப்
    பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 6

    2058:
    வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள
    வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,
    வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த
    வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,
    கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட
    கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,
    பொற்புடைய மலையரையன் பணிய நின்ற
    பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 7

    2059:
    நீரகத்தாய். நெடுவரையி னுச்சி மேலாய்.
    நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி
    ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய்.
    உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்
    காரகத்தாய். கார்வானத் துள்ளாய். கள்வா.
    காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
    பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய்.
    பெருமான்உன் திருவடியே பேணி னேனே. (2) 8

    2060:
    வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர்
    மல்லையாய். மதிள்கச்சி யூராய். பேராய்,
    கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
    குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
    பங்கத்தாய். பாற்கடலாய். பாரின் மேலாய்.
    பனிவரையி னுச்சியாய். பவள வண்ணா,
    எங்குற்றாய் எம்பெருமான். உன்னை நாடி
    ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே. 9

    2061:
    பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட
    புகழானாய். இகழ்வாய தொண்ட னேன்நான்,
    என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால்
    என்னறிவ னேழையேன், உலக மேத்தும்
    தென்னானாய் வடவானாய் குடபா லானாய்
    குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்
    முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி.
    திருமூழிக் களத்தானாய் முதலா னாயே. 10

    2062:
    பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்
    பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,
    எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள்
    எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
    மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்
    மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே
    கட்டுவிச்சி சொல் , என்னச் சொன்னாள் நங்காய்.
    கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே? 11

    2063:
    நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்
    நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
    நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ. என்னும்
    வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
    அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும்
    அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
    எஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்
    இருநிலத்துஓர் பழிபடைத்தேன் ஏபா வம்மே. 12

    2064:
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய். என்றும்
    காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,
    வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய். என்றும்
    வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும்,
    ,அல்லடர்த்து மல்லரையன் றட்டாய். என்றும்,
    மாகீண்ட கத்தலத்தென் மைந்தா. என்றும்,
    சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று
    துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. 13

    2065:
    முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா
    மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
    அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
    அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
    விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில்
    வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
    வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று
    மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே. 14

    2066:
    கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய
    களிறென்றும் கடல்கிடந்த கனியே. என்றும்,
    அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி
    அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,
    சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித்
    தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,
    மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே
    மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே. 15

    2067:
    கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும்,
    கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே. என்றும்,
    மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய். என்றும்,
    வடதிருவேங் கடம்மேய மைந்தா. என்றும்,
    வென்றசுரர் குலங்களைந்த வேந்தே. என்றும்,
    விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய். என்றும்,
    துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும்
    துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. (2) 16

    2068:
    பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப்
    பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
    செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்
    சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
    தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்
    தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,
    நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன
    நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே. 17

    2069:
    கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
    கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,
    பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர்
    பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
    ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள்
    எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
    நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
    இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே? 18

    2070:
    முற்றாரா வனமுலையாள் பாவை மாயன்
    மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
    அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள்
    அணியரங்க மாடுதுமோ தோழீ. என்னும்,
    பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள்
    பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
    பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள்
    பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே. 19

    2071:
    தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
    தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,
    பேராள னாயிரம் வாணன் மாளப்
    பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
    பாராளன், பாரிடந்து பாரை யுண்டு
    பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
    பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல்
    பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே? 20

    2072:
    மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
    மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
    எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
    இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
    கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
    கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
    அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.
    அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. (2) 21

    2073:
    நைவளமொன் றாராயா நம்மை நோக்கா
    நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,
    செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி
    எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்
    கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
    கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,
    எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்கு
    இதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே. 22

    2074:
    உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்
    ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,
    தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச்
    சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்
    கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக்
    கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,
    புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன்
    என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே? 23

    2075:
    இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம்.
    இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி யுண்ட,
    பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம்
    பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
    ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி
    உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்
    பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து
    புனலரங்க மூரென்று போயி நாரே. 24

    2076:
    மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
    கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
    தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே
    தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
    என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும்
    என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
    பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே
    புனலரங்க மூரென்று போயி னாரே. 25

    2077:
    தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத்
    தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
    பூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்த
    அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
    ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்
    அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
    நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது
    நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே. 26

    2078:
    செங்கால மடநாராய். இன்றே சென்று
    திருக்கண்ண புரம்புக்கென் செங்கண் மாலுக்கு,
    எங்காத லென்துணைவர்க் குரைத்தி யாகில்
    இதுவொப்ப தெமக்கின்ப மில்லை, நாளும்
    பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
    பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன், தந்தால்
    இங்கேவந் தினிதிருந்துன் பெடையும் நீயும்
    இருநிலத்தி லினிதின்ப மெய்த லாமே. (2) 27

    2079:
    தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச்
    சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
    மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
    வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
    பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு
    போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
    என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த
    எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. 28

    2080:
    அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை
    அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
    குன்றாத வலியரக்கர் கோனை மாளக்
    கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
    வென்றானை, குன்றெடுத்த தோளி னானை
    விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
    நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை
    நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. (2) 29

    2081:
    மின்னுமா மழைதவழும் மேக வண்ணா.
    விண்ணவர்தம் பெருமானே. அருளாய், என்று,
    அன்னமாய் முனிவரோ டமர ரேத்த
    அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
    மன்னுமா மணிமாட வேந்தன்
    மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
    பன்னிய_ல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப்
    பழவினையை முதலரிய வல்லார் தாமே. (2) 30

    திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.