MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதற்றிருவந்தாதி

    தனியன்
    முதலியாண்டான் அருளிச்செய்தது
    கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
    பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
    அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
    படிவிளங்கச் செய்தான் பரிந்து

    2082:
    வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
    வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
    சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
    இடராழி நீங்குகவே என்று. (2) 1

    2083:
    என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
    ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
    தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
    படைத்திடந் துண்டுமிழ்ந்த பார். 2

    2084:
    பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
    நீரளவும் செல்ல நிமிர்ந்ததே - சூருருவில்
    பேயளவு கண்ட பெருமான். அறிகிலேன்,
    நீயளவு கண்ட நெறி. 3

    2085:
    நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
    பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்
    ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
    ஆலமமர் கண்டத் தரன். 4

    2086:
    அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,
    உரை_ல் மறையுறையும் கோயில், - வரைநீர்
    கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
    உருவமெரி கார்மேனி ஒன்று. 5

    2087:
    ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
    இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
    கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
    திருவரங்க மேயான் திசை. 6

    2088:
    திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்
    திசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க்
    கண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத
    வண்ணன் படைத்த மயக்கு. 7

    2089:
    மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்
    தியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள்
    தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,
    போராழிக் கையால் பொருது? 8

    2090:
    பொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
    ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
    சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
    மாவடிவின் நீயளந்த மண்? 9

    2091:
    மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
    விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
    அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
    வுலகளவு முண்டோ வுன் வாய்? 10

    2092:
    வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்
    தாயவனை யல்லது தாம்தொழா, - பேய்முலைநஞ்
    சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்,
    காணாகண் கேளா செவி. 11

    2093:
    செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும், செந்தீ
    புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும், - அவியாத
    ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே,
    ஏனமாய் நின்றாற் கியல்வு. 12

    2094:
    இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
    முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக
    நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
    ஆதியாய் நின்றார் அவர். 13

    2095:
    அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி,
    இவரிவ ரெம்பெருமா னென்று, - சுவர்மிசைச்
    சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த
    மூர்த்தி யுருவே முதல். 14

    2096:
    முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
    முதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய
    நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,
    பல்லார் அருளும் பழுது 15

    2097:
    பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி
    அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்,
    கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்
    அடலோத வண்ணர் அடி. 16

    2098:
    அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,
    முடியும் விசும்பளந்த தென்பர், - வடியுகிரால்
    ஈர்ந்தான் இரணியன தாகம், எருஞ்சிறைப்புள்
    ஊர்ந்தா னுலகளந்த நான்று 17

    2099:
    நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
    தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,
    பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
    மருதிடைபோய் மண்ணளந்த மால். 18

    2100:
    மாலுங் கருங்கடலே. என்நோற்றாய், வையகமுண்
    டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக்
    கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
    திருமேனி நீதீண்டப் பெற்று. 19

    2101:
    பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,
    செற்றார் படிகடந்த செங்கண்மால், - நற்றா
    மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,
    நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று. 20

    2102:
    நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,
    சென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும்
    படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,
    அடையாழி நெஞ்சே. அறி. 21

    2103:
    அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,
    பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும்
    காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,
    தாம்பேகொண் டார்த்த தழும்பு. 22

    2104:
    தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,
    தழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த
    பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,
    வீங்கோத வண்ணர் விரல். 23

    2105:
    விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி
    உரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா
    தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?,
    ஓங்கோத வண்ணா. உரை. 24

    2106:
    உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப் போதும்
    வரைமேல் மரகதமே போல, - திரைமேல்
    கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி
    இடந்தானை யேத்தி யெழும். 25

    2107:
    எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
    வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,
    வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
    மனச்சுடரைத் தூண்டும் மலை. 26

    2108:
    மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,
    சிலையால் மராமரமேழ் செற்று, - கொலையானைப்
    போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
    காக்கோடு பற்றியான் கை. 27

    2109:
    கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்
    தைய. மலர்மகள்நின் னாகத்தாள், - செய்ய
    மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
    இறையான்நின் ஆகத் திறை. 28

    2110:
    இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,
    அறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின்
    பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,
    செங்கண்மால் கண்டாய் தெளி. 29

    2111:
    தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்
    தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத்
    தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,
    போய்நாடிக் கொள்ளும் புரிந்து. 30

    2112:
    புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,
    அரியுருவும் ஆளுருவுமாகி, - எரியுருவ
    வண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால், மற்
    றெண்ண்த்தா னாமோ இமை? 31

    2113:
    இமையாத கண்ணால் இருளகல நோக்கி,
    அமையாப் பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல்,
    ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்
    நாகத் தணையான் நகர். 32

    2114:
    நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்
    பகர மறைபயந்த பண்பன், - பெயரினையே
    புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,
    அந்தியா லாம்பனங் கென்? 33

    2115:
    என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்
    முன்னொருவ னாய முகில்வண்ணா, - நின்னுருகிப்
    பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண்
    ஆய்த்தாய் முலைதந்த ஆறு? 34

    2116:
    ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,
    கூறிய குற்றமாக் கொள்ளல்நீ - தேறி,
    நெடியோய். அடியடைதற் கன்றே,ஈ ரைந்து
    முடியான் படைத்த முரண்? 35

    2117:
    முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்
    தரணி தனதாகத் தானே - இரணியனைப்
    புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ
    மண்ணிரந்து கொண்ட வகை? 36

    2118:
    வகையறு _ண்கேள்வி வாய்வார்கள், நாளும்
    புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, - திசைதிசையின்
    வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
    ஊதியவாய் மாலுகந்த வூர். 37

    2119:
    ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
    பேர எறிந்த பெருமணியை, - காருடைய
    மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
    என்னென்ற மால திடம். 38

    2120:
    இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
    கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும்
    நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
    பேரோத வண்ணர் பெரிது. 39

    2121:
    பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
    வெருவிப் புனம்துறந்த வேழம், - இருவிசும்பில்
    மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்
    கோன்வீழ கண்டுகந்தான் குன்று. 40

    2122:
    குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
    இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும்
    புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
    திறனுரையே சிந்தித் திரு 41

    2123:
    திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
    திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
    பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
    மாலோத வண்ணர் மனம்? 42

    2124:
    மனமாசு தீரு மறுவினையும் சார,
    தனமாய தானேகை கூடும், - புனமேய
    பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
    தாம்தொழா நிற்பார் தமர். 43

    2125:
    தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
    தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து
    எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
    அவ்வண்ணம் அழியா னாம். 44

    2126:
    ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,
    நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, - பூமேய
    மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,
    பாதமத்தா லேண்ணினான் பண்பு. 45

    2127:
    பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,
    வெண்புரி_ல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த
    ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்
    போகத்தால் பூமியாள் வார். 46

    2128:
    வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,
    சேரி திரியாமல் செந்நிறீஇ, - கூரிய
    மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்
    கைந்நாகம் காத்தான் கழல். 47

    2129:
    கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,
    சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்
    செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,
    மருவாழி நெஞ்சே. மகிழ். 48

    2130:
    மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,
    நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், - முகில்விரிந்த
    சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்
    ஆதிகாண் பார்க்கு மரிது. 49

    2131:
    அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்
    பரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய்
    மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்
    ஏற்றானைக் காண்ப தெளிது. 50

    2132:
    எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
    தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்
    பொருந்தா தவனைப் பொரலுற்று, அரியாய்
    இருந்தான் திருநாமம் எண். 51

    2133:
    எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,
    வண்ண மலரேந்தி வைகலும், - நண்ணி
    ஒரு மாலை யால்பரவி ஓவாது,எப் போதும்
    திருமாலைக் கைதொழுவர் சென்று. 52

    2134:
    சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
    நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்
    புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
    அணையாம், திருமாற் கரவு. (2) 53

    2135:
    அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
    குரவை குடம்முலைமல் குன்றம், - கரவின்றி
    விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்
    டட்டெடுத்த செங்கண் அவன். 54

    2136:
    அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்
    அவன்தமரே யென்றொழிவ தல்லால், - நமன்தமரால்
    ஆராயப் பட்டறியார் கண்டீர், அரவணைமேல்
    பேராயற் காட்பட்டார் பேர். 55

    2137:
    பேரே வரப்பிதற்றல் அல்லாலெம் பெம்மானை,
    ஆரே அறிவார்? அதுநிற்க, - நேரே
    கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்
    அடிக்கமலந் தன்னை அயன். 56

    2138:
    அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,
    உயநின் திருவடியே சேர்வான், - நயநின்ற
    நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,
    சொன்மாலை கற்றேன் தொழுது. 57

    2139:
    தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,
    எழுதும் எழுவாழி நெஞ்சே, - பழுதின்றி
    மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,
    அந்தரமொன் றில்லை அடை. 58

    2140:
    அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,
    மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், - _டங்கிடையை
    முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்
    தன்வில் அங்கை வைத்தான் சரண். 59

    2141:
    சரணா மறைபயந்த தாமரையா னோடு,
    மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், - அரணாய
    பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,
    ஓராழி சூழ்ந்த வுலகு. 60

    2142:
    உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்
    விலகு கருங்கடலும் வெற்பும், - உலகினில்
    செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்
    புந்தியி லாய புணர்ப்பு. 61

    2143:
    புணர்மருதி னூடுபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து,
    மணமருவ மால் விடையேழ் செற்று, - கணம்வெருவ
    ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,
    சூழரவப் பொங்கணையான் தோள். 62

    2144:
    தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,
    கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், - நாநாளும்
    கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,
    நாணாமை நள்ளேன் நயம். 63

    2145:
    நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
    உயவேன் உயர்ந்தவரோ டல்லால், - வியவேன்
    திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
    வருமாறென் நம்மேல் வினை? 64

    2146:
    வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,
    தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், - நினைதற்
    கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்
    கரியானைக் கைதொழுதக் கால். 65

    2147:
    காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த
    மேலைத் தலைமறையோர் வேட்பனவும், - வேலைக்கண்
    ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,
    பேராழி கொண்டான் பெயர். 66

    2148:
    பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ
    உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்
    தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,
    ஒருவனையே நோக்கும் உணர்வு. 67

    2149:
    உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,
    உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்
    விண்ணகத்தாய். மண்ணகத்தாய். வேங்கடத்தாய் நால்வேதப்
    பண்ணகத்தாய். நீகிடந்த பால்? 68

    2150:
    பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்
    மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், - ஆலன்று
    வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ?
    சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. 69

    2151:
    சொல்லுந் தனையும் தொழுமின் விழுமுடம்பு,
    சொல்லுந் தனையும் திருமாலை, - நல்லிதழ்த்
    தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,
    நாமத்தால் ஏத்திதிரேல் நன்று. 70

    2152:
    நன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி,
    நின்று நிலமுழுதும் ஆண்டாலும், என்றும்
    விடலாழி நெஞ்சமே. வேண்டினேன் கண்டாய்,
    அடலாழி கொண்டான்மாட் டன்பு. 71

    2153:
    அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்
    பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி
    காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்
    பூணாரம் பூண்டான் புகழ். 72

    2154:
    புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,
    இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, - திகழ்நீர்க்
    கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,
    உடலும் உயிருமேற்றான். 73

    2155:
    ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
    நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றொருபால்
    மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்
    கங்கையான் நீள்கழலான் காப்பு. 74

    2156:
    காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,
    ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச்
    சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை
    வந்திப்பார் காண்பர் வழி. 75

    2157:
    வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா
    மொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும்
    வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த
    சீரான் திருவேங்கடம். 76

    2158:
    வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
    பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்
    நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
    என்றால் கெடுமாம் இடர். 77

    2159:
    இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்
    தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை
    பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,
    கொய்ந்நாகப் பூம்போது கொண்டு. 78

    2160:
    கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,
    மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை
    நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்
    ஆரங்கை தோய அடுத்து? 79

    2161:
    அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,
    படுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை,
    வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,
    அல்லாதும் ஆவரோ ஆள்? 80

    2162:
    ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,
    வாளமர் வேண்டி வரைநட்டு, - நீளரவைச்
    சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்
    பற்றிக் கடத்தும் படை? 81

    2163:
    படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்
    தொடையலோ டேந்திய தூபம், - இடையிடையின்
    மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்
    மான்மாய எய்தான் வரை. 82

    2164:
    வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்
    நிரைவிடையேழ் செற்றவா றென்னே, - உரவுடைய
    நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,
    பேராழி கொண்ட பிரான்? 83

    2165:
    பிரான். உன் பெருமை பிறரா ரறிவார்?,
    உராஅ யுலகளந்த ஞான்று, - வராகத்
    தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை
    அடிக்களவு போந்த படி? 84

    2166:
    படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்
    கொடிகண் டறிதியே?கூறாய், - வடிவில்
    பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,
    நெறிநின்ற நெஞ்சமே. நீ. 85

    2167:
    நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்
    பாயும் பனிமறைத்த பண்பாளா, - வாயில்
    கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
    இடைகழியே பற்றி யினி. 86

    2168:
    இனியார் புகுவா ரெழுநரக வாசல்?
    முனியாது மூரித்தாள் கோமின், - கனிசாயக்
    கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,
    நன்கறிந்த நாவலம்சூழ் நாடு. 87

    2169:
    நாடிலும் நின்னடியே நாடுவன, நாடோ றும்
    பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும்
    பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,
    என்னாகி லென்னே எனக்கு? 88

    2170:
    எனக்காவா ராரொருவரே, எம்பெருமான்
    தனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயாம்
    பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,
    மாமேனி காட்டும் வரம். 89

    2171:
    வரத்தால் வலிநினைந்து மாதவ.நின் பாதம்,
    சிரத்தால் வணங்கானா மென்றே, - உரத்தினால்
    ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,
    ஓரரியாய் நீயிடந்த தூன்? 90

    2172:
    ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,
    ஞானச் சுடர்கொளீஇ நாடோ றும், - ஏனத்
    துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,
    மருவாதார்க் குண்டாமோ வான்? 91

    2173:
    வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
    தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி
    வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்
    மண்ணை உமிழ்ந்த வயிறு? 92

    2174:
    வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
    எயிறிலக வாய்மடுத்த தென்நீ, - பொறியுகிரால்
    பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்
    சேவடிமே லீடழியச் செற்று? 93

    2175:
    செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,
    மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்
    மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,
    இறையேனும் ஏத்தாதென் நா. 94

    2176:
    நாவாயி லுண்டே நமோநார ணா என்று,
    ஓவா துரைக்கு முரையுண்டே, - மூவாத
    மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்
    தீக்கதிக்கட் செல்லும் திறம்? 95

    2177:
    திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,
    அறம்பாவ மென்றிரண்டு மாவான், புறந்தானிம்
    மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,
    கண்டாய் கடைக்கட் பிடி. 96

    2178:
    பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்
    அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, - பொடிசேர்
    அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
    புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்? 97

    2179:
    பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
    நின்றுலகம் தாய நெடுமாலும், - என்றும்
    இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
    ஒருவனங்கத் தென்று முளன். 98

    2180:
    உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
    உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் - துளன்கண்டாய்,
    வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
    உள்ளத்தி னுள்ளனென் றோர். 99

    2181:
    ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
    ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில்
    தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
    மாயவனை யேமனத்து வை. (2) 100

    பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்