MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    11.3 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
    திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (896 - 925)
    896 தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
    வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
    சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
    கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
    வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு ..(5)

    ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
    பத்தி அடியவர் பச்சிலை இடினும்
    முத்தி கொடுத்து முன்னின் றருளித்
    திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து
    மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி ..(10)

    நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
    நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்
    மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
    சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
    பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் ..(15)

    திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
    நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
    தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து
    நச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்
    பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி ..(20)

    அரத்த ஆடை விரித்து மீதுறீஇ
    இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
    மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை
    செங்கண் அரவும் பைங்கண் ஆமையும்
    கேழற் கோடும் வீழ்திரன் அக்கும் ..(25)

    நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
    தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
    ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
    வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
    செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் ..(30)

    பொற்றா மரையின் முற்றா முகிழென
    உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
    முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
    அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
    மூவிலை வேலும் பூவாய் மழுவும் ..(35)

    தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
    சிறந்துள தொருபால் திருக்கரம் செறிந்த
    சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
    நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்
    தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் ..(40)

    இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
    ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்
    நவ்வி மானின் செவ்வித் தாகிப்
    பாலிற் கிடந்த நீலம் போன்று
    குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று ..(45)

    எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி
    உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
    நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
    கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்
    கங்கை யாறும் பைங்கண் தலையும் ..(50)

    அரவும் மதியமும் விரவித் தொடுத்த
    சூடா மாலை சூடிப் பீடுகெழு
    நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
    நான்முகம் கரந்த பால்நிற அன்னம்
    காணா வண்ணம் கருத்தையும் கடந்து ..(55)

    சேண்இகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய
    கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
    கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
    கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
    நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து ..(60)

    வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
    திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி
    இனையவண் ணத்து நினைவருங் காட்சி
    இருவயின் உருவும் ஒரு வயிற்றாகி
    வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க ..(65)

    வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
    வலப்பால திருக்கரம் இடப்பால் வனமுலை
    தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்கு
    உலகம் ஏழும் பன்முறை ஈன்று
    மருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின் ..(70)

    திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
    இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
    சிறைக்கருப் பாசயம் சேரா
    மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே. 1
    897 பொருளும் குலனும் புகழும் திறனும்
    அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர்
    கருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை
    மருதாஎன் பார்க்கு வரும். 2
    898 வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
    பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற்
    பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி
    இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே. 3
    899 ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி
    ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
    தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
    ஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக்
    குயிலென மொழியும் மயிலியற் சாயல் .(5)

    மான்மற விழிக்கும் மானார் செல்வத்து
    இடைமரு திடங்கொண் டிருந்த எந்தை
    சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
    ஆரணந் தொடராப் பூரண புராண
    நாரணன் அறியாக் காரணக் கடவுள் ..(10)

    சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
    ஏக நாயக யோக நாயக
    யானொன் றுணர்த்துவ துளதே யான்முன்
    நனந்தலை உலகத் தனந்த யோனியில்
    பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித் ..(15)

    தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து
    யாயுறு துயரமும் யானுறு துயரமும்
    இறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும்
    நீயல தறிகுநர் யாரே அதனால்
    யான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்று ...(20)

    உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
    பிறிதொரு நெறியின் இல்லைஅந் நெறிக்கு
    வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா
    உள்ளமொன் றுடைமை வேண்டும்அஃதன்றி
    ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று ...(25)

    தானல தொன்றைத் தானென நினையும்
    இதுஎன துள்ளம் ஆதலின் இதுகொடு
    நின்னை நினைப்ப தெங்கனம் முன்னம்
    கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
    எற்பிறர் உளரோ இறைவ கற்பம் ...(30)

    கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு
    நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
    நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி
    உரைஎயிற் றுரகம் பூண்ட
    கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே. ..(35) 4
    900 கண்ணெண்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
    எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - ஒண்ணை
    மருதஅப்பா என்றும் உனை வாழ்த்தாரேல் மற்றும்
    கருதஅப்பால் உண்டோ கதி. 5
    901 கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேவரத்தின்
    பொதியா வதுசுமந் தால்விழப் போமிது போனபின்னர்
    விதியாம் எனச்சிலர் நோவதல் லால்இதை வேண்டுநர்யார்
    மதியா வதுமரு தன்கழ லேசென்று வாழ்த்துவதே. 6
    902 வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது
    தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது
    உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
    அவியடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி
    ஆரா உண்டி அயின்றன ராகித் ..(5)

    தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
    விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
    தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
    கூஉய்முன் னின்றுதன்ஏவல் கேட்கும்
    சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் ...(10)

    பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்
    மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
    தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
    நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்
    சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் ...(15)

    மேவுழி மேவல் செல்லாது காவலொடு
    கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
    எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது
    பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்
    அருளில் மடந்தையர் ஆகந் தோய்ந்தும் .....(20)

    ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
    கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப்
    பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
    நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
    விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் ....(25)

    அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்து
    இனிது மொழிந்தாங் குதவுதல் இன்றி
    நாளும் நாளும் நாள்பல குறித்தவர்
    தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள்இகழந்து
    இகமும் பரமும் இல்லை என்று ....(30)

    பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
    மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்
    தன்னையும் ஒருவ ராக உன்னும்
    ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து
    யோசனை கமழும் உற்பல வாவியிற் .....(35)

    பாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம்
    பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
    போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்
    மருதமும் சூழ்ந்த மருத வாண
    சுருதியும் தொடராச் சுருதி நாயக .....(40)

    பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும்
    முத்தித் தாள மூவா முதல்வநின்
    திருவடி பிடித்து வெருவரல் விட்டு
    மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
    பொருளென நினையா துன்அரு ளினைநினைந்து ....(45)

    இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
    வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
    சின்னச் சீரை துன்னல் கோவணம்
    அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
    சிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங்கு ..(50)

    இடுவோர் உளரெனின் நிலையினின் றயின்று
    படுதரைப் பாயலிற் பள்ளி மேவி
    ஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ
    மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப்
    பார்க்கும்நின் ....(55)

    செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்
    பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்
    குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
    பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
    ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின் ...(60)

    நின்சீர் அடியார் தம்சீர் அடியார்க்கு
    அடிமை பூண்டு நெடுநாட் பழகி
    முடலை யாக்கையொடு புடைபட்டு ஒழுகிஅவர்
    காற்றலை ஏவல்என் நாய்த்தலை ஏற்றுக்
    கண்டது காணின் அல்லதொன் ....(65)
    றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே 7
    903 பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
    அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த
    பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
    மருதவட்டந் தன்னுளே வந்து. 8
    904 வந்தி கண்டாய்அடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே
    சிந்திகண் டாய்அரன் செம்பொற் கழல்திரு மாமருதைச்
    சந்திகண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய்
    உந்திகண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே. 9
    905 உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
    கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால்
    நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
    வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து
    அன்பென் பாத்தி கோலி முன்புற ...(5)

    மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில்
    பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
    ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
    தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
    பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று ...(10)

    சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
    ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
    கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
    காமக் குரோதக் களையறக் களைந்து
    சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி ..(15)

    மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்ந்திட் டம்மெனக்
    கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
    அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
    காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
    தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் ...(20)

    பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
    அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்
    காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்
    சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
    பையப் பையப் பழுத்துக் கைவர ..(25)

    எம்ம னோர்கள் இனிதின் அருந்திச்
    செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது
    மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்
    காமக் காடு மூடித் தீமைசெய்
    ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக ...(30)

    இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக்
    கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர
    இச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய
    நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்
    பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் ..(35)

    பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக்
    கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
    துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
    மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
    தமக்கும் பிறர்க்கும் உதவாது (40)
    இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே. 10
    906 உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்
    படமொடுங்கப் பையவே சென்றங் -கிடைமருதர்
    ஐயம் புகுவ தணியிழையார் மேல்அநங்கன்
    கையம் புகவேண்டிக் காண். 11
    907 காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
    பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப்
    பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர்
    வீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. 12
    908 மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
    பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
    புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
    ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்து
    இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை ...(5)

    முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து
    உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்று
    ஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
    வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
    கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள் ...(10)

    பிரியா தொறுக்கும் பிணியோ தெரியாது
    இன்னது யானென் றறியேன் என்னை
    ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன் முன்னம்
    வரைத்தனி வில்லாற் புரத்தை அழல் ஊட்டிக்
    கண்படை யாகக் காமனை ஒருநாள் ....(15)

    நுண்பொடி யாக நோக்கி அண்டத்து
    வீயா அமரர் வீயவந் தெழுந்த
    தீவாய் நஞ்சைத் திருவழு தாக்கி
    இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
    பாலனுக் காகக் காலனைக் காய்ந்து ...(20)

    சந்தன சரள சண்பக வகுள
    நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
    நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
    எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
    புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த ..(25)

    திருவிடை மருத பொருவிடைப் பாக
    மங்கை பங்க கங்கை நாயகநின்
    தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
    மாயப் படலம் கீறித் தூய
    ஞான நாட்டம் பெற்றபின் யானும் ....(30)

    நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்
    என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
    நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
    நின்னைக் காணா மாந்தர்
    தன்னையும் காணாத் தன்மை யோரே. 13
    909 ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
    நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ
    எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம்
    நண்ணுவாம் என்னுமது நாம். 14
    910 நாமே இடையுள்ள வாறறி வாம்இனி நாங்கள்சொல்ல
    லாமே மருதன் மருத வனத்தன்னம் அன்னவரைப்
    பூமேல் அணிந்து பிழைக்கச் செய் தார்ஒரு பொட்டுமிட்டார்
    தாமே தளர்பவ ரைப்பாரம் ஏற்றுதல் தக்கதன்றே. 15
    911 அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
    குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து
    நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ
    கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்
    பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் ...(5)

    பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக
    சிமையச் செங்கோட் டிமையச் செல்வன்
    மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்
    வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
    குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை ..(10)

    கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன
    மதரரி நெடுங்கண் மானின் கன்று
    வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி
    வையம் ஏழும் பன்முறை ஈன்ற
    ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி ..(15)

    மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி
    எமையா ளுடைய உமையாள் நங்கை
    கடவுட் கற்பின் மடவரல் கொழுந
    பவள மால்வரைப் பணைக்கைபோந் தனைய
    தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை ..(20)

    பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
    மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்
    அமரர்த் தாங்கும் குமரன் தாதை
    பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்
    மருதிடங் கொண்ட மருத வாண ..(25)

    நின்னது குற்றம் உளதோ நின்னினைந்து
    எண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து
    கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
    இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
    தேவர் ஆவின் கன்றெனத் திரியாப் ..(30)

    பாவிகள் தமதே பாவம் யாதெனின்
    முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
    அறுசுவை அடிசில் அட்டினி திருப்பப்
    புசியா தொருவன் பசியால் வருந்துதல்
    அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்து ..(35)

    ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
    மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
    தெண்ணீர்க் குற்றம் அன்று கண்ணகன்று
    தேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
    வாலுகங் கிடந்த சோலை கிடப்ப ..(40)

    வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
    அடிபெயர்த் திடுவான் ஒருவன்
    நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே. 16
    912 அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
    ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் - என்றும்
    ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்
    மருதனையே நோக்கி வரும். 17
    913 நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலாற்
    தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள்
    ஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண் டோடச் சலந்தரனைப்
    போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியமே. 18
    914 புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
    கண்ணி வேய்ந்த கைலை நாயக
    காள கண்ட கந்தனைப் பயந்த
    வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
    பூத நாத பொருவிடைப் பாக ...(5)

    வேத கீத விண்ணோர் தலைவ
    முத்தி நாயக மூவா முதல்வ
    பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
    நொச்சி யாயினும் கரந்தை யாயினும்
    பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர் ..(10)

    கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும்
    திருவிடை மருத திரிபு ராந்தக
    மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
    மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
    மனையும் பிறவுந் துறந்து நினைவரும் ..(15)

    காடும் மலையும் புக்குக் கோடையிற்
    கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
    ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
    மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
    நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் ..(20)

    சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்
    உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
    காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்
    வாயுவும் நீரும் வந்தன அருந்தியும்
    களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் ...(25)

    தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர்
    அம்மை முத்தி அடைவதற் காகத்
    தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
    ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்
    பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும் ..(30)

    செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்தும்
    தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்
    தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
    பூவிரி தரங்க வாரிக் கரையிலும்
    மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் ..(35)

    வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட
    மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
    விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
    ஐவகை அமளி அணைமேல் பொங்கத்
    தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் ..(40)

    பட்டினுள் பெய்த பதநுண் பஞ்சின்
    நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
    பாயல் மீமிசை பரிபுரம் மிழற்றச்
    சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்
    பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென ..(45)

    அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
    கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
    இரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப
    ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு
    வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப ..(50)

    அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
    மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர
    மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
    வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட
    உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர ..(55)

    வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
    பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்கு
    ஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
    காலன் வேலும் காம பாணமும்
    ஆல காலமும் அனைத்துமிட் டமைத்த ..(60)

    இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
    மதியென மாசறு வதனம் விளங்கப்
    புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
    அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்
    சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் ..(65)

    அறுசுவை அடிசில் வறிதினி தருந்தாது
    ஆடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
    வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
    பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
    தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும் ....(70)

    ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்
    மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து
    இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
    மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது
    சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த ..(75)

    முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
    நின்னது பெருமை அன்றோ என்னெனின்
    வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
    மாட்டா ஒருவன் வாளா எறியினும்
    நிலத்தின் வழாஅக் கல்லேபோல் ..(80)

    நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே. 19
    915 நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
    காமம் நவிற்றிக் கழிந்தொழியல் - ஆமோ
    பொருதவனத் தானைஉரி போர்த்தருளும் எங்கள்
    மருதவனத் தானை வளைந்து. 20
    916 வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன்அம்புக்
    கிளையார் தனங்கண் டிரங்கிநில் லார்இப் பிறப்பினில்வந்
    தளையார் நரகினுக் கென்கட வார்பொன் அலர்ந்தகொன்றைத்
    தளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே. 21
    917 அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
    நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வம்
    மூலமும் நடுவும் முடிவும் இகந்து
    காலம் மூன்றையும் கடந்த கடவுள்
    உளக்கணுக் கல்லா தூன்கணுக் கொளித்துத் ..(5)

    துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
    எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது
    உறுப்பினின் றெழுதரும் உள்ளத் தோசை
    வைத்த நாவின் வழிமறுத் தகத்தே
    தித்தித் தூறும் தெய்வத் தேறல் ....(10)

    துண்டத் துளையிற் பண்டை வழியன்றி
    அறிவில் நாறும் நறிய நாற்றம்
    ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும்
    தானே யாகி நின்ற தத்துவ
    தோற்றவ தெல்லாம் தன்னிடைத் தோற்றி ...(15)

    தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை
    விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்
    இருள்விரி கண்டத் தேக நாயக
    சுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர
    மருதிடம் கொண்ட மருதமா ணிக்க ...(20)

    உமையாள் கொழுந ஒருமூன் றாகிய
    இமையா நாட்டத் தென்தனி நாயக
    அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி
    நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு
    நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக் ..(25)

    கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்
    குடரென் சங்கிலி பூண்டு தொடர்பட்டுக்
    கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத் தழுந்தி
    உடனே வருந்தி நெடுநாட் கிடந்து
    பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்தும் .(30)

    தண்ட லாளர் மிண்டிவந் தலைப்ப
    உதர நெருப்பிற் பதைபதை பதைத்தும்
    வாதமத் திகையின் மோதமொத் துண்டும்
    கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லாது
    இடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் ..(35)

    பாவப் பகுதியில் இட்டுக் காவற்
    கொடியோர் ஐவரை ஏவி நெடிய
    ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
    பாசப் படுத்திப் பையென விட்டபின்
    யானும் போந்து தீதினுக் குழன்று ..(40)

    பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும்
    பரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும்
    வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
    பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்
    ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி ..(45)

    ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி
    இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
    இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
    வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்
    நின்னை அடைந்த அடியார் அடியார்க்கு ..(50)

    என்னையும் அடிமை யாகக் கொண்டே
    இட்டபச் சிலைகொண் டொட்டி அறிவித்து
    இச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல்
    காத்தருள் செய்ய வேண்டும்
    தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே. ..(55) 22
    918 சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
    புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச்
    சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப
    தெங்கே இருக்க இவள். 23
    919 இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும்
    நெருக்கும் நெருக்கத்தும் நீளகத் துச்சென்று மீளவெட்டாத்
    திருக்கும் அறுத்தைவர் தீமையும் தீர்த்துச் செவ் வேமனத்தை
    ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே. 24
    920 சுடர்விடு சூலப் படையினை என்றும்
    விடைஉகந் தேறிய விமல என்றும்
    உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
    கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
    திரிபுரம் எரித்த சேவக என்றும் ..(5)

    கரியுரி போர்த்த கடவுள் என்றும்
    உரகம் பூண்ட உரவோய் என்றும்
    சிரகஞ் செந்தழல் ஏந்தினை என்றும்
    வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
    சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் ..(10)

    அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
    வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
    தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
    உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
    ஏனமும் அன்னமும் எட்டா தலமர ...(15)

    வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
    செழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும்
    அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்
    இனையன இனையன எண்ணில் கோடி
    நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல் ...(20)

    துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
    அளப்பரும் பெருமைநின் அளவில தாயினும்
    என்றன் வாயிற் புன்மொழி கொண்டு
    நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
    இடுக்கண் களையா அல்லற் படுத்தாது ...(25)

    எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
    அடித்துத் தட்டி எழுப்பவ போல
    நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
    துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
    திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் ....(30)

    அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த
    கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
    நின்நினைந் தெறிந்த அதனால்
    அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே. 25
    921 இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய
    புன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
    வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
    ஆளுடையான் செம்பொன் அடி. 26
    922 அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர்
    முடியா யிரம்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்த
    தொடியா யிரங்கொண்ட தோள்இரண் டாயிரம் என்றுநெஞ்சே
    படியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே. 27
    923 கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள்
    செவ்வான் உருவிற் பையர வார்த்துச்
    சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை
    மூவா முதல்வ முக்கட் செல்வ
    தேவ தேவ திருவிடை மருத ...(5)

    மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
    பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
    அயிரா வணத்துறை ஆடும் அப்ப
    கைலாய வாண கௌரி நாயக
    நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து ....(10)

    பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்
    இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்
    மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
    அமரர்த் தாங்கும் குமர வேளும்
    சுரிசங் கேந்திய திருநெடு மாலும் ....(15)

    வான்முறை படைத்த நான்முகத் தொருவனும்
    தாருகற் செற்ற வீரக் கன்னியும்
    நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்
    பீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்
    ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் ....(20)

    செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்
    வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்
    சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்
    நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்
    வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் ...(25)

    எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
    மூன்று கோடி ஆன்ற முனிவரும்
    வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
    தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்
    வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் ...(30)

    திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்
    அத்தகு செல்வத் தவமதித் தருளிய
    சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
    வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
    கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ...(35)

    ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப்
    பாடின என்று படாம்பல அளித்தும்
    குவளைப் புனலில் தவளை அரற்ற
    ஈசன் தன்னை ஏத்தின என்று
    காசும் பொன்னும் கலந்து தூவியும் ...(40)

    வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
    செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு
    பிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன
    இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
    மருத வட்டத் தொருதனிக் கிடந்த ...(45)

    தலையைக் கண்டு தலையுற வணங்கி
    உம்மைப் போல எம்இத் தலையும்
    கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும்
    கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
    வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் ....(50)

    காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு
    வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்
    விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
    புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
    பெரிய அன்பின் வரகுண தேவரும் ....(55)

    இனைய தன்மையர் எண்ணிறந் தோரே
    அனையவர் நிற்க யானும் ஒருவன்
    பத்தி என்பதோர் பாடும் இன்றிச்
    சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை
    இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் ...(60)

    வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
    கருதி யிருப்பன் கண்டாய் பெரும
    நின்னுல கனைத்தும் நன்மை தீமை
    ஆனவை நின்செயல் ஆதலின்
    நானே அமையும் நலமில் வழிக்கே. ....(65) 27
    924 வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
    பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ்
    மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா
    கருதிடத்தாம் நில்லா கரந்து. 29
    925 கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல
    வரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றும் இல்லேன்
    சிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும்
    தரத்தினு மாயது நின்னடி யாம்தெய்வத் தாமரையே. 30

    திருச்சிற்றம்பலம்