MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

    (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)

    (குறிப்பு: எங்கெங்கு பதம் பிறிப்பதனால் பொருள் மாறுபடவில்லையோ அங்கெல்லாம் பதம் பிறிக்கப்பட்டுள்ளது.)

    பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
    பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
    நாதமும் நாதாந்த(1) முடிவும் நவைதீர்ந்த
    போதமும் காணாத(2) போதமாய் - ஆதிநடு .1
    (1) நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
    (2) போதமுங் காணாத

    அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
    பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
    குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
    செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு .2

    அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
    மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
    பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
    தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத . .3

    பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
    காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல்
    இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
    தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும் .4

    கருவின்றி நின்ற கருவாய் அருளே
    உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
    ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
    போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து . 5

    உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
    பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
    மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
    பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் .6

    தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
    பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
    ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
    கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் 7

    ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான்
    ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய
    கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
    சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய . .8

    சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
    நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
    தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே
    நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் . 9

    விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
    சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு
    சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து
    ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் . .10

    சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
    ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
    மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
    அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா .11

    தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
    நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
    கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
    குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் . .12

    ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
    ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் - பாழாக
    ஆணவமான படலம் கிழித்து அறிவில்
    காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் . .13

    அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
    கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
    தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும்
    நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் . .14

    வரவு நினைப்பு மறப்பும் பகலும்
    இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக்
    கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
    வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் . .15

    பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
    வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
    கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து (1)உள்நின்று
    ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு . .16
    (1) கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்

    முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி
    ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்
    யானெனதென்று அற்ற இடமே திருவடியா
    மோனபரா னந்த முடியாக - ஞானம் . .17

    திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
    அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
    சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
    பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் . .18

    தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
    வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
    துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
    புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட . .19

    பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
    அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
    பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
    குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் . .20

    புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
    சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
    வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
    தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் . .21

    ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
    வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
    வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
    முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
    பாச இருள்துரந்து (1) பல்கதிரில் சோதிவிடும் .22
    (1) பாச விருடுரந்து ப்ல்கதிரிற் சோதிவிடும்

    வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
    போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
    மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் .23

    வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
    தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
    வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
    பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் .24

    தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
    வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
    மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
    சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் .25

    வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
    உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
    சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
    கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் .26

    அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
    கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
    கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
    அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன் .27

    புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
    அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
    நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
    பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி . .28

    இளம்பருதி நுாறா யிரங்கொடி போல
    வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
    ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
    மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து .29

    ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
    நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
    மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
    தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் 30

    ஒத்த புவனத் துருவே உரோமமாத்
    தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
    கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
    நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி . 31

    அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
    கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
    ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
    ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ 32

    வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
    தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து
    அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
    புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் 33

    பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
    தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
    எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
    அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 34

    ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
    கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
    தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
    காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ . 35

    பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
    நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
    ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
    வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும் 36

    நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
    ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து
    வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
    பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் 37

    பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
    பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
    வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
    ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து 38

    திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
    ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
    எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
    பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் . 39

    எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
    கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
    பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
    சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று . 40

    அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
    சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
    அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
    நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் 41

    கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
    அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
    கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
    மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய . 42

    முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
    அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த
    வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
    உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி . 43

    மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
    துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
    விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
    மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து 44

    அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
    செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன்
    விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
    நடத்தி விளையாடும் நாதா - படைப்போன் 45

    அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
    உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
    சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
    குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் 46

    பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
    முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
    தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக
    வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த் 47

    தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை
    வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
    கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
    மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம் 48

    சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
    வீரனைத் துாதாக விடுத்தோனே - காரவுணன்
    வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
    தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு . 49

    பகைவன் முதலாய பாலருடன் சிங்க
    முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
    வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
    சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன் 50

    அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
    துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
    சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
    ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு . 51

    சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
    மேவத் தனித்துயர்த்த மோலோனே - மூவர்
    குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
    சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம் 52

    சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
    தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
    காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
    வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு . 53

    கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
    ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
    தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
    வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து . 54

    ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
    கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
    கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
    செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் . 55

    பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
    பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
    பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
    பூதமுந்தீீ நீரும் பொருபடையும் - தீது அகலா . 56

    வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
    எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்
    பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
    அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத் 57

    திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
    அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
    சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
    எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் . 58

    எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
    உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
    ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
    பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை 59

    எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
    பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
    இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
    மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து 60

    ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
    தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
    கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
    அடியேற்கு முன்னின்று அருள். 61

    திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று