MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    சிந்து இலக்கியம்
    1. பழனியாண்டவன் காவடிச் சிந்து

    நூலாசிரியர்: முத்துக் கறுப்பணன்

    பழனிப்பதி வாழும் - வேலர்
    பாதம்தனை நாளும்
    உளமேதினம் துதிக்க - வினை
    ஒடுக்கும் கதிகொடுக்கும்
    வளமேவிய பரனே - சுத்த
    மடவாழு தந்திமுகனே
    அழகாகிய குருவாய் - எனக்
    கருள்வாய் முன்பு வருவாய்
    1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர் 1

    சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
    தினமும் குடி ஆழ்வோன்
    தவமேவிய குமரன் - புகழ்
    தானே அடியேனே
    நவமீறிய காவடிச் - சிந்து
    நாடத் தினம் பாட
    புவனச் சரசுவதியே - சிந்து
    புகல வருவாயே
    2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
    நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம் 2

    கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
    கானத் தினைப் புனத்தில்
    உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
    உருவாய்ப் பரண் ஏகி
    தெள்ளிய தினை மாவை - பொசித்
    திலகும் அண்டர் கோவை
    வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
    வருவாய் தோகை மயிலே
    3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும் 3

    துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
    சுத்தனைப் பரிசுத்தனை
    அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
    அடியாரைத் தினம்காப்போன்
    எண்டிசை பணி நேசன் - தவம்
    இலகும் கிரிவாசன்
    வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
    வருவாய் தோகைமயிலே
    4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
    துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
    அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன் 4

    செய்ய தாண்டவ ராயன் - அருள்
    சேயனைக் கார்த்தி கேயனை
    துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
    துலங்கும் கர துங்கனை
    உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
    உளத்தில் குடி இருப்போன்
    வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
    வருவாய் தோகை மயிலே
    5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
    சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
    குஞ்சரி - தெய்வயானை 5

    ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
    கழகாகிய கண்ணன்
    ஞானதே சிக போதன் - நவ
    வீரரும் பணி நீதன்
    தேனுலா விய கடப்ப - மலர்
    செறிவோன் அருள் புரிவோன்
    வானவர் பணி வேலனைக் - கொண்டு
    வருவாய் தோகை மயிலே
    6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
    நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
    நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன் 6

    திங்கள் சேர் நுதல் - மீனாள்
    தருதேனை முருகோனை
    எங்கள் நாயகப் பொருளை - பணிந்
    தேற்றார் மனத் திருளைத்
    துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
    தொழுதே நிதம் கும்பிட்டேன்
    மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
    வருவாய் தோகை மயிலே
    7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
    ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன் 7

    இச்செகம் தனில் அடியேன் - உனை
    ஏற்ற தினம் போற்ற
    மிச்சமாய்க் கலிவருத்த - நான்
    மெலிவேனோ அலைவேனோ
    அச்சமாய்த் துயர் ஓட - அருள்
    நாடகக் கவி பாட
    வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
    வருவாய் தோகை மயிலே
    8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
    வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல் 8

    பூசுரர் வெகுமானி - சிவப்
    பொருப்பில் வளர் ஞானி
    தேச மேழும் புகழ் - காவடிப்
    பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
    $.... ..... ..... ....
    .... ..... ..... ....
    வாசனை வடி வேலனைக் - கொண்டு
    வருவாய் தோகை மயிலே
    9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
    பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும் 9

    படியெழும் புகழ் இடும்பன் - தினம்
    பணியும் மலர்க் கடம்பன்
    அடியார் வினை பொடி - செய்திடும்
    மான புகழ் குமரன்
    துடிமீறு மும்முரசன் - தெய்வம்
    தொழுவாழ் கொலு வாசன்
    வடிவேல் முருகனையே - கொண்டு
    வருவாய் தோகை மயிலே
    10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
    பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
    துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
    மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு 10

    கர்த்தனாகிய முருகன் - அருள்
    கனியும் திரு மருகன்
    பத்தர்கள் மிக வாழி! - நிதம்
    படிப்போர் தினம் வாழி!
    சுத்தமா நகர் வாழும் - முத்துக்
    கறுப்பணன் சொல் நாளும்
    சித்தமேவிய பெரியோர் - தினம்
    செழித்து மிக வாழி!
    11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
    முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம் 11

    பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்