MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு

    பல்லவி

    பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
    கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
    பாபஞ்செய் யாதிரு மனமே.

    சரணங்கள்

    சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
    தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
    கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
    கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1

    சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
    சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
    நல்லபத்த திவிசு வாசம் - எந்த
    நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2

    நீர்மேற் குமிழியிக் காயம் - இது
    நில்லாது போய்விடும் நீயறிமாயம்
    பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
    பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

    நந்த வனத்திலோ ராண்டி - அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
    கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

    தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
    சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
    ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
    திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5

    நல்ல வழிதனை நாடு- எந்த
    நாளும் பரமனை நத்தியே தேடு
    வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
    வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6

    நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
    நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
    பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
    பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7

    வேத விதிப்படி நில்லு - நல்லோர்
    மேவும் வழியினை வேண்டியே செல்லு
    சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
    சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8

    பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
    பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
    இச்சைய துன்னையாளாதே - சிவன்
    இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

    மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
    வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
    அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
    அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

    மெய்குரு சொற்கட வாதே - நன்மை
    மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
    பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
    புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11

    கூடவருவ தொன்றில்லை - புழுக்
    கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
    தேடரு மோட்சம தெல்லை - அதைத்
    தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

    ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
    ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
    முந்தி வருந்திநீ தேடு - அந்த
    மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

    உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
    ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
    கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
    கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

    காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
    கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
    பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
    பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

    பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
    போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
    மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
    மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

    சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
    சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
    அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
    ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

    பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
    பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
    சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
    சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

    அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
    மானந்தத் தேவியின் அடியிணை மேவி
    இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
    ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

    ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
    கான வழியை யறிந்து நீகொண்டு
    சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
    சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

    ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
    தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
    வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
    வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

    எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
    எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
    வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
    வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

    இந்த வுலகமு முள்ளு - சற்றும்
    இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
    செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
    சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

    பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
    போதகர் சொற்புத்தி போத வாராதே!
    மையவிழி யாரைச் சாராதே - துன்
    மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

    வைதோரைக் கூடவை யாதே: - இந்த
    வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
    வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
    வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

    சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
    தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
    தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
    சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

    பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
    பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
    வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
    வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

    போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
    புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
    சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
    தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

    கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
    காட்டி மயங்கிய கட்குடி யாதே!
    அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
    அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

    பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
    பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
    சத்திய மென்றதை யீட்டி - நாளும்
    தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

    செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
    சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
    ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
    ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

    எவ்வகை யாகநன் னீதி - அவை
    எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
    ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
    ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

    கள்ள வேடம் புனையாதே - பல
    கங்கையி லேயுன் கடன் நனையாதே
    கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
    கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

    எங்கும் சுயபிர காசன் - அன்பர்
    இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
    துங்க அடியவர் தாசன் - தன்னைத்
    துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

    (முடிந்தது)