10.4 புகழ்த்துணை நாயனார் புராணம் (4127 - 4133 )
திருச்சிற்றம்பலம்
4127 செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்
அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்துப் பரந்து ஓங்கிப்
பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் 10.4.1
4128 தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள்
பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்
எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும்
கொங்கார் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் 10.4.2
4129 மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் 10.4.3
4130 சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் 10.4.4
4131 பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து
முற்றுஉணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களி கூர்ந்தார் 10.4.5
4132 அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே
இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்
மின்னார் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து
பொன்னாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார் 10.4.6
4133 பந்தணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப் பாதம்
வந்தணையும் மனத் துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி
சந்தணியும் மணிப் புயத்துத் தனவீரராம் தலைவர்
கொந்தணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் 10.4.7
திருச்சிற்றம்பலம்