11.6 முழுநீறு பூசிய முனிவர் புராணம் (4163 - 4168)
திருச்சிற்றம்பலம்
4163 ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன்
எம் பெருமான் நீர் அணிந்த வேணிக்
காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த
கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம்
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி
ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம்
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது
நம் இரு வினைகள் கழிவதாக 11.6.1
4164 அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து
ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று
அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த
சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா
எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு
இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் 11.6.2
4165 ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு
அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம்
உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச்
சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம்
அநு கற்பம் தில்லை மன்றுள்
வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக்
கூத்தர் மொழி வாய்மை யாலே 11.6.3
4166 அடவி படும் அங்கியினில் வெந்த நீறும்
ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி
கைகள் சுட்ட எரி பட்ட நீறும்
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை
திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி
மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி
தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் 11.6.4
4167 இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே
இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர்
அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை
அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும்
மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர்
அடியார் அணிவர் நன்மையாலே 11.6.5
4168 சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின்
நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில்
பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி
அதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர்
முழுவதும் மெய் அணிவர் அன்றே 11.6.6
திருச்சிற்றம்பலம்