12.2 மங்கையர்க்கரசியார் புராணம் (4189 - 4191 )
திருச்சிற்றம்பலம்
4189 மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம்
வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே
இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார்
கழல் எம்மால் போற்றலாமே 12.2.1
4190 பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர்
போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது
யாம் என் அறிந்து தென்னர் கோமான்
மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய்
நெடும் காலம் மன்னிப் பின்னை
ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல்
அமர்ந்திருக்க அருளும் பெற்றார் 12.2.2
4191 வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி
வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள்
திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர்
விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார்
நேசர் திறம் பேசல் உற்றாம் 12.2.3
திருச்சிற்றம்பலம்