3.1 எறி பத்த நாயனார் புராணம் (551-607)
திருச்சிற்றம்பலம்
551 மல்லல் நீர் ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம் 3.1.1
552 பொன் மலைப் புலி வென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும்
அந் நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரமாகும்
தொன் நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர் 3.1.2
553 மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும்
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும்
தேமலர் அளகஞ் சூழும் சில மதி தெருவிற் சூழும்
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ 3.1.3
554 கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும்
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும்
படரொளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும்
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் 3.1.4
555 மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்கா
அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் 3.1.5
556 பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக் கோயில்
மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழி படும் தொழிலர் ஆகி
இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு
அருட் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் 3.1.6
557 மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது
முழையரி என்னத் தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும்
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார் 3.1.7
558 அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்குத்
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும்
புண்ணிய முனிவனார் தாம் பூப் பறித்து அலங்கல் சாத்தி
உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல் 3.1.8
559 வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி
மெய்ம் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலைத்
தெய்வ நாயகருக்குச் சாத்தும் திருப் பள்ளித் தாமம் கொய்து 3.1.9
560 கோலப் பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசம் கொண்டு மலர்க் கையில் தண்டும் கொண்டு அங்கு
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்துச் சாத்தும்
காலை வந்து உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார் 3.1.10
561 மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச் சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு
பெற்ற வெங் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் 3.1.11
562 மங்கல விழைவு கொண்டு வரு நதித் துறை நீராடிப்
பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார்
எங்கணும் இரியல் போக எதிர் பரிக் காரர் ஓடத்
துங்க மால் வரை போல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே 3.1.12
563 வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும் 1
சென்று ஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல
வன் தனித் தண்டில் தூங்கும் மலர் கொள் பூக் கூடை தன்னைப்
பின் தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்து முன் பறித்துச் சிந்த 3.1.13
564 மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்டக்
கால் கொண்டு போவார் போலக் கடிது கொண்டு அகலப் போக
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் 3.1.14
565 அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்று போக 1
மெய்ப் பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று
செப்பு அரும் துயரம் நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார் 3.1.15
566 களி யானையின் ஈர் உரியாய் சிவதா!
எளியார் வலியாம் இறைவா! சிவதா!
அளியார் அடியார் அறிவே! சிவதா!
தெளிவார் அமுதே! சிவதா! சிவதா! 3.1.16
567 ஆறும் மதியும் அணியும் சடை மேல்
ஏறும் மலரைக் கரி சிந்துவதே
வேறுள் நினைவார் புரம் வெந்து அவியச்
சீறும் சிலையாய்! சிவதா! சிவதா! 3.1.17
568 தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்
நெஞ்சேய் துயரம் கெட நேர் தொடரும்
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள்
செஞ் சேவடியாய்! சிவதா! சிவதா! 3.1.18
569 நெடியோன் அறியா நெறியார் அறியும்
படியால் அடிமைப் பணி செய்து ஒழுகும்
அடியார்களில் யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய 3.1.19
570 என்று அவர் உரைத்த மாற்றம் எறி பத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி
மன்றவர் அடியார்க்கு என்றும் வழிப் பகை களிறே அன்றோ
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் 3.1.20
571 வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு வணங்கி உம்மை
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல்
சிந்தி முன் பிழைத்துப் போகா நின்றது இத் தெருவே என்றார் 3.1.21
572 இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப்
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும்
செங்கண் வாள் அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார் 3.1.22
573. கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அக் களிறே போலும்
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசிக்
கொண்டு எழுந்து ஆர்த்துச் சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார் 3.1.23
574. பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேற் கதுவ அச்சம்
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் 3.1.24
575. கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
வெய்ய கோல் பாகர் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக
ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார் 3.1.25
576 வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி
பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் 3.1.26
577 மற்று அவர் மொழிந்த மாற்றம் மணிக் கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக் குரை கழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின் பொற் பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார் 3.1.27
578 வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற
கிளர் மணித் தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க
அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான்
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க 3.1.28
579 தந்திரத் தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டு
வந்துறச் சேனை தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப
எந்திரத் தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி 3.1.29
580 வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க
வல்லெழும் உசலம் நேமி மழுக் கழுக் கடை முன் ஆன
பல் படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன் கண்
எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும் 3.1.30
581 சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 3.1.31
582 தூரியத் துவைப்பும் முட்டுஞ் சுடர்ப் படை ஒலியும் மாவின்
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும்
வீரர் தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும் கடல் எனக் கலித்த அன்றே 3.1.32
583 பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம்
மண்ணிடை இறு கால் மேல் மேல் வந்து எழுந்தது போல் தோன்ற
தண்ணளிக் கவிகை மன்னன் தானை பின் தொடரத் தானோர்
அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் 3.1.33
584 கடு விசை முடுகிப் போகிக் களிற் றொடும் பாகர் வீழ்ந்த
படு களம் குறுகச் சென்றான் பகை புலத்து அவரைக் காணான்
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தடக் கைத்தாய
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் 3.1.34
585 பொன் தவழ் அருவிக் குன்றம் எனப் புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான்
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான் 3.1.35
586 அரசன் ஆங்கு அருளிச் செய்ய அருகு சென்று அணைந்து பாகர்
விரை செய்தார் மாலையோய் நின் விறற் களிற்று எதிரே நிற்கும்
திரை செய் நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார்
பரசு முன் கொண்டு நின்ற இவர் எனப் பணிந்து சொன்னார் 3.1.36
587 குழையணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
பிழை படின் அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு
மழை மத யானைச் சேனை வரவினை மாற்றி மற்ற
உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் 3.1.37
588 மைத் தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரே இந்த
மெய்த்தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட
அத் தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர்
இத்தனை முனியக் கெட்டேன் என் கொலோ பிழை என்று அஞ்சி 3.1.38
589 செறிந்தவர் தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது
அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க
மறிந்த இக் களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள
எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார் 3.1.39
590 மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்
சென்னி இத் துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து
பன்னக ஆபரணர் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னை முன் பறித்துச் சிந்தத் தரை படத் துணித்து வீழ்த்தேன் 3.1.40
591 மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும்
மீதங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்
ஈதங்கு நிகழ்ந்தது என்றார் எறி பத்தர் என்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன் 3.1.41
592 அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ் அபராதத்துக்கு
இங்கு இது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று
செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார் 3.1.42
593 வெந்தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று
தந்த வாள் வாங்க மாட்டார் தன்னைத் தான் துறக்கும் என்று
சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் 3.1.43
594 வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர் பால் என்றே
ஆங்கு அவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி 3.1.44
595 வன் பெருங் களிறு பாகர் மடியவும் உடை வாளைத் தந்து
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும்
அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி 3.1.45
596 புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவாறு என்? கெட்டேன்? என்று எதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும் 3.1.46
597 வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற
அளவு இலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக்
கள மணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப 3.1.47
598 தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச்
செழுந் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்து அணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு
எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே 3.1.48
599 ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும்
போர் வடி வாளைப் போக எறிந்து அவர் கழல்கள் போற்றிப்
பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார் 3.1.49
600 இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற
அருமறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்று அத்
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் 3.1.50
601 மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து
முட்ட வெங்கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கிப் பொங்கும்
பட்ட வர்த்தனத்தைக் கொண்டு பாகரும் அணைய வந்தார் 3.1.51
602 ஆன சீர்த் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த
மான வெங் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்து அருளும் என்ன
மேன்மையப் பணி மேற் கொண்டு வணங்கி வெண் குடையின் நீழல்
யானை மேற் கொண்டு சென்றார் இவுளிமேற் கொண்டு வந்தார் 3.1.52
603 அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான் 3.1.53
604 தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமியாரும் சார
எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார் 3.1.54
605 மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல்
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும் நாளும்
நல்தவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் 3.1.55
606 ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி
நீளும் இத் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்? 3.1.56
607 தேனாரும் தண் பூங் கொன்றைச் செஞ்சடையவர் பொற்றாளில்
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி
வானாளும் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த திருத் தொழில் இயம்பலுற்றேன் 3.1.57
திருச்சிற்றம்பலம்