MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    3.6. அரிவாட்டாய நாயனார் புராணம் (908-930)


    திருச்சிற்றம்பலம்

    908 வரும் புனற்பொன்னி நாட்டு ஒரு வாழ்பதி
    கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
    விரும்பு மென்கண் உடையவாய் விட்டு நீள்
    கரும்பு தேன் பொழியும் கணமங்கலம் 3.6.1
    909 செந்நெல்லார் வயல் காட்ட செந்தாமரை
    முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திடத்
    துன்னு மள்ளர் கைம் மேற் கொண்டு தோன்றுவார்
    மன்னு பங்கய மாநிதி போன்றுள்ளார் 3.6.2
    910 வளத்தில் நீடும் பதியதன் கண்வரி
    உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்
    களத்தின் மீதும் கயல்பாய் வயல் அயல்
    குளத்தும் நீளும் குழையுடை நீலங்கள் 3.6.3
    911 அக்குல பதி தன்னில் அறநெறித்
    தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்
    தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய
    மிக்க செல்வத்து வேளாண் தலைமையார் 3.6.4
    912 தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார்
    சேய காலந் தொடர்ந்துந் தெளிவிலா
    மாயனார் மண் கிளைத்து அறியாத அத்
    தூய நாண் மலர்ப் பாதம் தொடர்ந்துளார் 3.6.5
    913 மின்னும் செஞ்சடை வேதியர்க்காம் என்று
    செந் நெல் இன்னமுதோடு செங்கீரையும்
    மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்து
    அன்ன என்றும் அமுது செய்விப்பாரால் 3.6.6
    914 இந்த நன்னிலை இன்னல் வந்து எய்தினும்
    சிந்தை நீங்காச் செயலின் உவந்திட
    முந்தை வேத முதல்வர் அவர் வழி
    வந்த செல்வம் அறியாமை மாற்றினார் 3.6.7
    915 மேவு செல்வம் களிறு உண் விளங்கனி
    ஆவதாகி அழியவும் அன்பினால்
    பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத்
    தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார் 3.6.8
    916 அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்கு
    நெல் அறுத்து மெய்ந் நீடிய அன்பினால்
    நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்கு
    ஒல்லை இன்னமுதாக் கொண்டு ஒழுகுவார் 3.6.9
    917 சாலி தேடி அறுத்தவை தாம் பெறும்
    கூலி எல்லாம் திரு அமுதாக் கொண்டு
    நீல நெல்லரி கூலி கொண்டு உண்ணும் நாள்
    மால் அயற்கு அரியார் அது மாற்றுவார் 3.6.10
    918 நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும் முன்னம் காண
    வண்ணவார் கதிர்ச் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
    அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த
    புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் 3.6.11
    919 வைகலும் உணவு இலாமை மனைப் படப்பையினிற் புக்கு
    நைகரம் இல்லா அன்பின் நங்கை கைஅடகு கொய்து
    பெய்கலத்து அமைத்து வைக்கப் பெருந்தகை அருந்தித் தங்கள்
    செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யும் நாளில் 3.6.12
    920 மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே
    அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும்
    வினை செயல் முடித்துச் செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க
    முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன் 3.6.13
    921 முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும்
    அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை
    துன்புபோம் மனத்துத் தொண்டர் கூடையில் சுமந்து போகப்
    பின்புபோம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்திச் சென்றார் 3.6.14
    922 போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி
    மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடுகையால்
    காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடைச் சிந்தக் கண்டு
    பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று 3.6.15
    922 நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த
    அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு
    எல்லையில் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன் என்று
    ஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் 3.6.16
    924 ஆட் கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர் கொல் என்னாப்
    பூட்டிய அரிவாள் பற்றிப் புரையற விரவும் அன்பு
    காட்டிய நெறியின் உள்ளந் தண்டு அறக் கழுத்தினோடே
    ஊட்டியும் அரிய நின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார் 3.6.17
    925 மாசறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்
    ஆசில்வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்
    வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்
    ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே 3.6.18
    926 திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையைப் பிடித்த போது
    வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கிப்
    பெருக்கவே மகிழ்ச்சி நீடத் தம்பிரான் பேணித் தந்த
    அருட் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று 3.6.19
    927 அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டிப்
    படி மிசைக் கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி
    துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி
    பொடியணி பவள மேனிப் புரி சடைப் புராண போற்றி 3.6.20
    928 என்றவர் போற்றி செய்ய இடப வாகனராய்த் தோன்றி
    நன்று நீ புரிந்த செய்கை நன்னுதல் உடனே கூட
    என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண
    மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்துச் சென்றார் 3.6.21
    929 பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
    பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
    வரிவடு விடேலெனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
    அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம் 3.6.22
    930 முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செய்யச்
    செந்நெலின் அரிசி சிந்தச் செவியுற வடுவின் ஓசை
    அந் நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி
    மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல் உற்றேன் 3.6.23
    திருச்சிற்றம்பலம்


Goto Main book