7.2 சிறப்புலி நாயனார் புராணம் (3654 - 3659)
திருச்சிற்றம்பலம்
3654 பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர் 7.2.1
3655 தூ மலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும்
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும்
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ
ஓம நல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும் 7.2.2
3656 ஆலை சூழ் பூக வேலி அத்திரு ஆக்கூர் தன்னில்
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான் மறைக் குலத்தில் உள்ளார்
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார் 7.2.3
3657 ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார் 7.2.4
3658 அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம்
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே 7.2.5
3659 அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப் பெரு வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்ந்த
வீரர் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன் 7.2.6