8.8 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் (4046- 4054 )
திருச்சிற்றம்பலம்
4046 வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச்
செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் 8.8.1
4047 திருமலியும் புகழ் விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துப்
தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் 8.8.2
4048 மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம்
பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழச்சி
நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் 8.8.3
4049 தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண்
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களான எலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் 8.8.4
4050 பெருத்தெழு காதலினால் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் 8.8.5
4051 அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி
இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச்
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார் 8.8.6
4052 இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி
பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ்
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்
கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார் 8.8.7
4053 பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக்
கையணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் 8.8.8
4054 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
உளத்தில் ஒரு துளக்கம் இலேம் உலகு உய்ய இருண்ட திருக்
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு
வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெரும் திருவாரூர்க்
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் 8.8.9
திருச்சிற்றம்பலம்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.